வணங்குதல்

வணங்குதல் பற்றி உங்கள் கருத்தென்ன?

1. கடவுளை வணங்குபவர்கள் எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். உதாரணமாகக் கிறித்தவர்கள், ஒவ்வொரு உணவின்போதும் “இன்றைய உணவை எங்களுக்கு அளித்த பிதாவே உங்களுக்கு நன்றி” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இதையே முஸ்லிம்களும், நிறைய இந்துக்களும் செய்வதை-அதாவது இறைவனுக்கு நன்றி பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

நாம் இளமையில் நம் அப்பாவின் ஊதியத்தில்தான் சாப்பிட்டு, உடைகள், பிற வசதிகள் போன்றவற்றைப் பெற்று, கல்வியும் பெற்றோம். ஒவ்வொருமுறை வீட்டிலும் சாப்பிடும்போதும், “நீங்கள் சம்பாதித்த பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், உங்களுக்கு நன்றி” என்று கூறுவோமா? கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும்? அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும்? நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம்? அதுபோல ஏன் கடவுளுக்கும் நினைக்கலாகாது?

2. வணங்குதல் என்றால் ‘பணிவாக இருத்தல்’,’ கீழ்ப்படிந்து நடத்தல்’ (ஒபீடியன்ஸ்) என்றுதான் நேரான அர்த்தம். Pray என்ற அர்த்தம் இல்லை. கிராமத்தில் கடையில் பையனைப் போட்டால், சில நாட்கள் கழித்து, “பையன் வணங்கி நடந்து கொள்கிறானா, வணக்கமாக இருக்கிறானா” என்று கேட்பார்கள். அதாவது கீழ்ப்படிந்து, அடக்கமாக என்று பொருள். கடவுளுக்கும் நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தம். உண்மையில் கடவுளை நம்புபவர்கள் யாரும் கடவுளின் போதனையாகச் சொல்லப்படும், வேதநூல்களில் கூறப்படும் எந்தக் கருத்தையும் ஏற்று நடப்பதில்லை. உதாரணமாக “ஒட்டகத்தின் காதில் ஊசி நுழைந்தாலும் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கிறித்துவம் கூறுகிறது. ஆனால் உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கிறித்துவர்கள்தானே? “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்? சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் திருடுகிறோம், நமக்குத் தேவை என்று நினைத்தால் பொய் சொல்கிறோம். அப்படிச் செய்யாதவர்களுக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பெயரும் சூட்டுகிறோம்.

கேள்வி பதில்