இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 7

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 7

இந்தியாவில் உயர் கல்வி

உயர்கல்விதான் தனியார்மயமாக்கலுக்கான புதிய பிரதேசம் ஆகும். இன்று 1956இன் கம்பெனிச் சட்டத்தின்கீழ்ப் பதிவுபெற்ற எந்தச் சங்கமும், பொது அறக்கட்டளையும் அல்லது கூட்டுக்குழுமமும் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்து, பிறகு அதைப் பல்கலைக்கழகமாக அறிவிக்க அரசை ஒரு சட்டமியற்ற வைக்கலாம்;
அல்லது அரசின் அதிகாரஅமைப்பு (பல்கலைக்கழக மானியக்குழு-யுஜீசி) அதற்குப் பல்கலைக்கழக ‘அந்தஸ்து’ தரவைக்கலாம்.

பல்கலைக்கழகம் என்ற பேராசைமிக்க அந்தஸ்தை அடைந்துவிட்டால், பிறகு தனக்கே உரிய விதிகளின்படி மாணவர் சேர்க்கையையும், கட்டணத்தையும் நிர்ணயிக்கலாம், படிப்புத்துறைகளின் உள்ளடக்கத்தை வகுக்கலாம், பாடம்நடத்தும் முறைகளையும் தானே நிச்சயித்துக்கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டால், ஒரு ‘பாடம்நடத்தும் கடை’யாக இருப்பது, பட்டமளிக்கும் தகுதியையும், கட்டணங்கள், ‘நன்கொடைகள்’ வாயிலாகப் பணம் சேர்க்கும் தகுதியையும் பெற்றுவிடுகிறது.

கோட்பாட்டளவில், யுஜிசி வகுத்துள்ள சில குறைந்தபட்சத் தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாலும், அது ஒரு மிகப் பெரிய தடையல்ல. குறிப்பாகக் கல்வித்திட்டத்தில் மதத்தைப் புகுத்தும்நிலை வரும்போது. முந்தைய பிஜேபி நிர்வாகத்திலேயே, வேத சோதிடம் போன்ற துறைகளில் பி.ஏ., எம்.ஏ., பாடங்களுக்கு மட்டுமல்ல, பிஎச்.டி ஆய்வுக்கும் ஒப்புதல் தரப்பட்டது. அது மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரம், கர்மகாண்டம் போன்ற விஷயங்களைப் புகுத்துவதையும் யுஜிசி ஏற்றுக்கொண்டுவிட்டது.
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கல்வியைக் காவிநீக்கம் செய்வதாக வாக்களித்திருந்தாலும், அறிவு பெருகுவதற்கும் பரவுவதற்கும் எதிரான இந்தப் பாடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதற்கு ஒரு பகுதிக் காரணம், 2004இல் உச்சநீதிமன்றம் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் சோதிடத்தைப் பாடமாக நடத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இருக்கலாம்.)

தனியார்மயமாக்கம் என்பது உயர்கல்வியைப் பெரு வணிகமாக மாற்றுகின்ற ஒன்று மட்டுமல்ல, அது கடவுளையும் சாமியார்களையும் வணிகத்தில் புகுத்தும் முயற்சியும் ஆகும் என்று காட்டுவதற்குச் சான்றுகள் பல உள்ளன.(உடனடி உதாரணம், இப்போது பத்திரிகைகளில் அடிபடுகின்ற பாபா ராம்தேவ்.) தனியாருக்குரிய, இலாபநோக்கிலான ‘கல்விபோதனைக்கடை’களுக்கு அனுமதிதரும் ஒழுங்கு முறை மாற்றங்கள், மத அறக்கட்டளைகளும், அசிரமங்களும், குருஜிக்களும் பூசாரிக் கல்வி, சோதிடம் ஆகியவற்றில் பட்டங்கள் தரும் வணிகத்தில் புகவும், நவீன நிறுவனங்கள் பாரம்பரிய நோக்கில் நிறுவப்படவும் வழிசெய்துள்ளன.

ஃ 2000இல் முழுமையாகத் தனியாரால் நிர்வகிக்கப்பட்ட (அதாவது அரசின் உதவிபெறாத), இலாபநோக்கற்ற, பல்கலைக்கழக ‘அந்தஸ்து பெற்ற’ நிறுவனங்கள் 21 மட்டுமே இந்தியாவில் இருந்தன. 2005இல் இந்த எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது, 2007இல் 117 ஆயிற்று. 1998க்குப் பிறகு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை. அவற்றில் பல, பொதுநல அறக்கட்ட ளைகளாகப் பதிவுசெய்துகொண்டு, தங்கள் ‘இலாபநோக்கற்ற’ சேவைக்காக வரி விலக்கும் பெறுகின்றன.

என்றாலும், உண்மையில், அவற்றில் புகுவதற்கு, குறிப்பாகப் பொறியியல், மருத்துவ, வணிக நிறுவனங்களில் சேருவதற்கு, ‘நன்கொடைகள்’ என்ற வேஷத்தில் வரம்புகடந்த அளவிலான பணத்தைப் பெறுகின்ற அவை, மெய்யாகவே ‘கல்விபோதனைக் கடைகள்’ என்பதற்குமேல் ஒன்றுமில்லை. [அண்மையில் தமிழகத்தில் ஒரு கல்வி ‘வேந்தர்’ தன் பல்கலைக்கழகத்திற்குப் பொதுநிலங்களை அபகரித்தது, மாணவர்க ளிடம் மருத்துவப் படிப்பிற்குப் பலநு£று கோடி ரூபாய்கள் வசூலித்தது போன்ற விவரங்கள் சந்திசிரித்தன என்றாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. கல்வி என்ற பெயரால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் என்ற பரந்த மனப்பான்மை! அல்லது மத்தியில் ஆளும் கட்சி சேர்ந்தவர் என்ற பயம் – ஏதோ ஒரு காரணம்!]

ஃ தொழிற்கல்லு£ரிகளான மருத்துவ, பொறியியல் கல்லு£ரிகள் உட்படத் தனியார் கல்லு£ரிகளின் எண்ணிக்கை 1990இல் 5748. இது 2003இல் 16865ஆக உயர்ந்தது. ஏறத்தாழப் பத்தாண்டுகளில், 11,117 கல்லூரிகள் புதிதாகத் தோன்றிவிட்டன.

ஃ 2003இல் 86.4 சதவீதப் பொறியியலாளர்கள் தனியார் கல்லூரிகளில் படித்து வெளிவந்தவர்கள். இந்த எண்ணிக்கை 1960இல் 15 சதவீதமாக இருந்தது. இதேபோல, 1960இல் தனியார் மருத்துவக் கல்லு£ரிகளில் படித்து வெளிவந்தோர் 6.8 சதவீதம். இது 2003இல் 40.9 சதவீதம் ஆயிற்று.

ஃ அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தனித்தோ, நாட்டில் ஏற்கெனவே பெயர் பெற்றுள்ள கல்விநிறுவனங்களுடன் கூட்டாகவோ பட்டங்களை வழங்க அனுமதிக்க ஒரு திட்டம் இருக்கிறது. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை நம் நாட்டில் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா, 2007இல் வரைவுபெற்றது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், குறைந்தது 130 அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலும் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் சேர்ந்தவை, உள்நாட்டைச் சேர்ந்த, பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத, தனியார் நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்துள்ளன. இவை, இரவோடிரவாகப் பறந்து போகும் செயல்பாடுகள் கொண்டவை; இவற்றின் பட்டங்கள் அவற்றின் சொந்த நாட்டிலேயே அங்கீகரிக்கப்படாதவை.

கொள்கையளவில், தனியார் அமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க அனுமதி தருவதில் தவறொன்றுமில்லை. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு, யேல், ஸ்டான்ஃபோர்டு, எம்ஐடி, சிகாகோ போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களே. நாட்டில் தெளிவாகவே நிலவும் பெரும்அளவு உயர் கல்வித் தேவைக்காகத் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று ஒருவர் வாதிடவும் செய்யலாம்.

உலகத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் இந்தியா பெற்றிருந்தாலும், கல்லூரி வயது மாணவர்களில் 10 சதவீதத்தினருக்கே இவை இடமளிக்கின்றன. (மாறாக, சீனா கல்லூரி வயது இளைஞர்களில் 20 சதவீதத்தினருக்கேனும் இடமளிக்கிறது. அமெரிக்கா வில் 80 சதவீதத்தினர் கல்லூரிக்குச் செல்கின்றனர்.)

இந்தத் தர்க்கம், இந்தியாவின் அடித்தள யதார்த்தங்களைப் புறக்கணிக்கிறது என்பதுதான் பிரச்சினை. தனியார்மயத்திற்கு ஆதரவாக வாதிடுவோர், அரசாங்கம் தொடக்கநிலை, இடை நிலைக் கல்வியில் கவனம் செலுத்துவது சமநிலையை உயர்த்தும்; கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியைத் தனியாரிடம் விடவேண்டும் என்ற உலக வங்கியின் பழமைக் கொள்கையை ஏற்கிறார்கள்.
1997இல் இந்திய அரசாங்கம் இந்தத் தர்க்கத்தை ஏற்றுக்கொண்டது. தொடக்கநிலைக் கல்விக்கு அப்பாலுள்ள கல்வி, அரசு தலையிடத் தகுதிபெறாத சேவை என அறிவித்தது. உயர்கல்விக்கு வழங்கப்படும் மானியம் அநியாயமானது என்றும், கல்லூரியில் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து படிக்க வேண்டிய பணக்காரர்களுக்கு ஆதர வானது என்றும் வாதிட்டது.

ஆனால் உயர்கல்விக்கு அளிக்கப்படும் மானியங்கள் மிகச் சிறிதளவாக இருந்தபோதும், பணக்காரர்களை மட்டுமே சேர்கின்றன என்று சொல்வது சரியல்ல. அரசாங்க மானியம் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர்களில் இன்று நாம் காண்கின்ற முதல் தலைமுறைக் கல்லூரிக் கல்வி பெற்றோர் தோன்றவே வாய்ப்பிருந்திருக்காது.

தேவேஷ் கபூர், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் சுட்டிக்காட்டுமாறு:
“அரசு மானியங்கள் காரணமாக விளிம்புநிலை மக்கள் கல்விபெற அதிக வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. 1950களில் உயர்கல்வி பயில்வோரில் ஆண்-பெண் விகிதம் 8.29:1 என்ற விகிதமாக இருந்தது. இது 1980களின் பிற்பகுதியில் 1.5:1 எனக் குறைந்து, இன்னும் குறைந்து வருகிறது….பெற்றோர் (மகள்களைவிட) மகன்க ளுக்கே தனியார் கல்விக் கெனச் செலவுசெய்யத் தயாராக உள்ளனர்….கல்வி மானியங்கள் வசதிபடைத்தவர்களுக்கே செல்கின்றன என்ற வாதத்திற்கு மற்றுமொரு எதிரான சான்று இது: பட்டியல்சாதியினர் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) ஆகிய இந்தியாவின் மிக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், (மருத்துவ, பொறியியல்) தொழிற்கல்வி பெறுவது ஐம்பதுகளின் பிற்பகுதியில் 12:1 என இருந்தது, எண்பதுகளின் பிற்பகுதியில் 8:1 எனக் குறைந்துள்ளது.”

யதார்த்த நிலை இவ்வாறிருக்கும்போதும், உயர்கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு ஆதரவு பெருகியே வந்திருக்கிறது. பிஜேபி வழி நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், நடைமுறையில் உயர்கல்வி, வெள்ளித்தட்டில் வைத்துக் கூட்டுக்குழுமத் தொழிலதிபர்களுக்குப் படைக்கப்பட்டது. இந்திய முன்னணி வணிகக் குடும்பங்களின் முக்கியஸ்தர்களான முகேஷ் அம்பானியையும், குமாரமங்கலம் பிர்லாவையும் இந்திய அரசாங்கம் கல்விக் கொள்கையில் அறிவுரை கூற அழைத்தது.

கடந்த ஆண்டுகளில் உற்பத்தியான தொழிற்சாலைப் பணியா ளர்களைப் போலன்றி, இருபத்தோராம் நூற்றாண்டுக்குத் தேவையான அறிவுப் பணியாளர்களை உற்பத்திசெய்யும் பரந்த நோக்குடன் இவர்கள், மானிடக்கல்வித் துறைகள், நுண்கலைகள், நிகழ்த்துகலைகள் ஆகிய துறைகளில் தவிர அனைத்துக் கல்வியையும் கட்டுப்பாட்டு நீக்கத்திற்கும், தனியார் மயமாக்கத்திற்கும் பரிந்துரைசெய்தனர்.

மாணவர்கள் தங்கள் பட்டங்களுக்கான விலையைத் தருவதற்காக ‘கல்விக்கடன் தொழில்துறையை’ உருவாக்குவதோடு அரசாங்கத்தின் பங்கு குறைந்துபோனது. [அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரும் கூட்டுக்குழும நிறுவனங்களுக்கு இலட்சம் இலட்சமான கோடிகள் கடனளித்து, அவற்றை வசூலிக்கத் திராணியற்ற இந்த வங்கிக் கல்விக் ‘கடன் தொழிலகங்கள்’ (அவை வாராக் கடனாம்!), மாணவர்களிடமும் ஏதுமற்ற விவசாயிகளிடமும் அடியாட்களை வைத்துக் கடன் தொகையைப் பறிமுதல்செய்கின்றன!]

கல்வியை வணிகமயமாக்குவதற்குச் சட்டரீதியான ஆதரவும் உள்ளது. டி.எம்.ஏ. பாய் நிறுவனத்திற்கும் கர்நாடக அரசுக்கு மான வழக்கில், 2002இல் உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை வழங்கியபோது, இலாபநோக்குத் தனியார் கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்கள் கல்விநிறுவனங்களைத் தங்கள் விதிகள், மதிப்புகளுடன், அரசின் நிதிக்கொடை மறுக்கப்படாமல் நிறுவிக் கொள்ளலாம் என்று அரசியல் சட்ட உரிமை (பிரிவு 30) கூறுகிறது.

இதற்குப் புதிய விளக்கமளித்த உச்சநீதிமன்றம், இதே உரிமைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என முடிவு செய்தது. மேலும் இலாபம் என்பதற்கு “நியாயமான உபரி” என்று மறுவரையறை செய்து, தனியார் கல்லூரிகள் தங்கள் கட்டணத் தையும் சேர்க்கைவிதிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்ள லாம் என்றும் நீதிமன்றம் அனுமதித்தது.

தனியார் மயமாக்கல், காவிமயமாக்கலுக்கு முடிவு என்றும் அர்த்தமல்ல. இந்துப் பாரம்பரியங்களை நவீனத் தோற்ற மளிக்கும் பாடத்திட்டத்தில் புகுத்துதல், தீங்கற்றதாக முழுமையாகத் தோற்றமளிக்கின்ற ‘மதிப்புக் கல்வி’ என்பதை அளிக்கும் நோக்கத்தின்மூலம் செயல்படுகிறது. மதிப்புக் கல்வியை மூன்றாம் நிலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடத் தனியார் துறை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால், மேற்கத்திய அறிவில் சிறப்பானவற்றை பாரதீய (அதாவது இந்து) மதிப்புகளுடன் கலப்பது அவர்களின் வியாபார உத்தியின் ஒரு பகுதி.

தீங்கற்றதாகத் தோன்றினாலும், எல்லா அரசியல் கட்சிகளின் பாரம்பரியவாதிகளுக்கும் பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தியாவின் இந்து, முஸ்லீம், கிறித்துவ மரபினை விமரிசனமின்றிப் பாராட்டுவதைப் புகுத்துவதற்கு மதிப்புக் கல்விதான் உகந்த கருவியாக இருக்கிறது. பிஜேபி வழிநடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2000இல் கல்வித்திட்டத்தை மாற்றியபோது, ‘பள்ளிக் கல்வியை அது காவிமயமாக்கியது’ என்று சரியாகவே விமரிசனம் செய்யப்பட்டது. ஆனால் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் 2005இல் புதிய தேசியக் கல்வித்திட்டச் சட்டகத்தை உருவமைத்தபோது, மாணவர்கள் தங்களுடன் வகுப்பறைக்குள் கொண்டுவரும் ‘உள்ளூர் அறிவு’, ‘உள்ளார்ந்த விவேகம்’ என்பவற்றை மதிக்கும் போர்வையில் எல்லாவிதமான அறிவுக்கெதிரான செய்திகளையும் அறிமுகப்படுத்துவதற்குத் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது.
(இதன் தொடர்ச்சியாகவே இப்போது புதிய கல்விக்கொள்கை மீண்டும் புகுத்தப்படுகிறது.)

“ஒரே உண்மை என்பது இல்லை, அறிவுக்குப் பலவேறு விதமான தோற்றங்களே உள்ளன என்ற பின்நவீனத்துவ வாதத்தைப் பயன்படுத்தி, உள்ளூர் அறிவையும், அறிவியல் கொள்கைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால், இரண்டு வித ஒழுங்கமைவுகளிலிருந்தும் மாணவர்கள் தாங்களாகவே சொந்தமாக அர்த்தத்தை உருவாக்கிக்கொள்வார்கள் என்று புதிய கல்வித்திட்டம் ஆசிரியர்களுக்கு அறிவுரைக்கிறது. அறிவின் பல்வேறு சாத்தியமான வடிவங்களுக்குள் ஆன்மிக அல்லது மதஅறிவை இணைப்பதற்குத் தடை எதுவமில்லை ஆதலின் மதத்தைப் பள்ளிக்கல்விக்குள் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்துவிட முடிகிறது. அரசியல் பொருளாதாரத்தில் தனியார்மயமாக்கலும், சிந்தனைக் களத்தில் சார்புநிலையும் மிக நன்றாக ஒத்துப் போவதுபோலத் தோன்றுகிறது.

சமூகம்