இன்றைய இந்தியா

பிரசாந்த் பூஷணின் நீதிமன்ற அறிக்கையை அடியொற்றி

இதுவரை எவரும் இப்படிப் பேசியதில்லை என்னும்படி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்து உண்மை பேசிய பிரசாந்த் பூஷணின் வாக்குமூலம் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. காலத்தால் அழியாத வாக்குமூலம் இது. ஒரே ஒரு வருத்தம், பிரசாந்த் பூஷணுக்கு நாடே ஆதரவாக நின்றது. நீதிபதி கர்ணனுக்கும் யாராவது ஆதரவாக நின்றிருக்கலாம்.

“சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட எனது (பிரசாந்தின்) கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமைக்கு உட்பட்டது. நீதிபதியின் மீதான தனிப்பட்ட அவதூறு வேறு, நீதிமன்ற அவமதிப்பு வேறு. நல்லெண்ணம் கொண்டு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது. விமர்சனங்களை ஒடுக்குவதன் மூலம் நீதித்துறையை மதிப்பார்கள் என்பது தவறான எண்ணம்” என்றார் பூஷண். அவரது அறிக்கை இங்கே, சுருக்கமாக.

பாரதிய ஜனதா மற்றும் தொடர்புடைய சிறுசிறு காவி குழுக்களால் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப் பட்டனர். காவல்துறை மிக அரிதாகவே நடவடிக்கை எடுத்தது.

பொய்த் தகவல்களும் போலிச் செய்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்டு அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக்கப் பட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் மதத்தின் அடிப்படை யில் அரசு பாகுபாடு காட்டுவதைக் காட்டுகிறது. சிறுபான்மை யினருக்கு எதிராகச் செயல்படுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஜாமியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அத்தாக்குதலை காவல்துறையினரே முன்னின்று நடத்தினர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் காவல்துறையினரின் பார்வையின் கீழ் அனுமதிக்கப் பட்டனர். அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை பாதுகாத்து பத்திரமாக¸ இரகசியமாக வெளியே அனுப்பினர். காணொளிக் காட்சிகள் மூலம் மாணவர்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நிகழ்ந்தது அம்பலமானது.

ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் மூன்றாக பிளக்கப்பட்டு¸ குடியாட்சியின் சிறு சிறு உரிமைகளைக் கூடப் பெறாமல் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டன. கோவிட்-19 காலகட்டத்தில் 10 கோடிக்கு மேலானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம்¸ தலைமைக் கணக்காயர்¸ சி.பி.ஐ¸ நடுவண் விழிப்பு ணர்வு ஆணையம்¸ போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப் பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக பிரதமருக்கும்¸ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டனர். அதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமும் மிகப்பெரிய கேள்விக்குறி ஆயிற்று. விதிகளைப் பிற்போக்குத்தனமாக மாற்றியதன் மூலம் ஜனநாயகம் பணநாயகமாக மாற்றப்பட்டது. முன்னர் 7.5 விழுக்காடு உச்ச வரம்பு பெருநிறுவன நன்கொடைகள் வழங்கும் நிலை மாறி எவ்விதக் கட்டுப்பாடுமற்ற இரகசிய அரசியல் நன்கொடையை ஊக்குவிக்கும் வழிகளையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக்கும் திட்டத்தையும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தியது. இந்தியாவில் தேர்தல் நன்கொடை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடந்த மூன்று வருடத்தில் பெற்றது. கட்சிகளுக்கான மொத்த நன்கொடைகளில் 90 விழுக்காட்டைப் பெற்றது.

இத்தகைய சட்ட திருத்தங்கள் மறைமுகமாகப் பண மசோதா என்ற வடிவில் கொண்டு வரப்பட்டன. பாரதிய ஜனதாவுக்குப் பெரும் பான்மை இல்லாத மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி சட்டப் புறம்பான வழியில் நிறைவேற்றப்பட்டன.

ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பு தலைமை கணக்காயர் அறிக்கைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அரசால் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது. பாராளுமன்றக் குழுவிற்கு முழு விபரங்களையும் தராமல் அரைகுறை அறிக்கை யைக் கொடுத்தது. தலைமைக் கணக்காயர் அலுவலகம் அரசுக்கு பணிந்தது.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் லோக்பால் பொறுப்பிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. லோக்பால் அமைப்பும் ஒரு வழக்கைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. லஞ்ச ஊழலை கண்டுபிடிப்பவரின் பாதுகாப்பிற் காகக் கொண்டு வரப்பட்ட விசில் புளோயர் சட்டம் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப் படவேயில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் அலுவலக ரகசியங்களைப் பாதுகாக்கும் காலனியக் காலச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஃபேல் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்பட்டனர்.

சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம் தரம் தாழ்ந்து போனது¸ சிபிஐ இயக்குனர் ஒருவர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரே நாளில் 40 பேரை அரசுக்கு ஆதரவாக இட மாற்றம் செய்தார்.

மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைமையிலிருந்து தலைமை அதிகாரி பல வருடங்களாக நடத்திய சோதனைகளில் சஹாரா மற்றும் பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் கணக்கில் வராத பணத்தை பெருமளவில் பெற்றதைக் காட்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டன.

தேசியப் புலனாய்வுக் குழு, இந்நாட்டின் மிக நேர்மையான மனித உரிமைப் போராளிகள் மீதும்¸ அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் கருவியாக மாறியது. எவ்விதக் கட்டுப்பாடுமற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளைச் சூறையாடியுள்ளனர். இவர்கள் லண்டன், ஆண்டிகுவா அல்லது பெர்முடா போன்ற வரி ஏய்ப்புச் சரணாலய நாடுகளில் குடி புகுந்தனர். அரசு அவர்களை இந்நாட்டிற்கு பிடித்து வருவதாக வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அழிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நீக்கப்பட்டார். அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேலும் வெளியேற்றப்பட்டார். ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும்¸ உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை அரசுக்குத் தர மறுத்ததாலும் வெளியேற்றப்பட்டனர்.

90 விழுக்காடு வெகுஜன ஊடகங்கள் அரசின் பிரச்சார நிறுவனங்களாக மாற்றப்பட்டன. நியாயப்படுத்த முடியாத அரசின் நடவடிக்கைகள் மூடத்தனமாக நியாயப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு முதல் கோவிட்-19 முழுஅடைப்பு வரை அரசாங்க நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு ஊடகங்களால் விசிறி விடப்பட்டது. நூற்றுக் கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப் பட்டன. மறுக்கும் ஊடகங்கள் மிரட்டப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டன. பேஸ்புக்¸ டுவிட்டர்¸ இன்ஸ்டாகிராம் போன்றவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன.

கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் காலகட்டத்தில் மக்களு டைய உரிமைகள் நசுக்கப்பட்டன. அரசின் ஒடுக்குமுறைப் போக்கை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்தத் தவறியது. கொலிஜியம் என்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமை கொண்ட முதுநிலை நீதிபதிகள் குழு செயலிழந்தது. கொலிஜியத்தால் பரிந்துரைக்கப் பட்ட 43 பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. நீதிபதி இர்ஷாத் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் படுவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி அகில்குரேஷி முதலில் பம்பாய்க்கும் பின்னர் மத்தியப் பிரதேசத் தலைமை நீதிபதியாகவும் மாற்றப்பட்டார். அதன் பின்னர் அவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

காஷ்மீரில் இன்டர்நெட் வசதிகள் தடுக்கப்பட்ட வழக்கு¸ ஆட்கொணர்வு நீதிப்பேராணை தொடர்பாகவும்¸ ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமித்ஷாவின் கொலைச் சதி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மான முறையில் இறந்துபோனார். ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது மூடி முத்திரை இடப்பட்ட உறையில் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு மட்டும் கொடுத்து எதிர்த் தரப்பிற்கு அவ்வழக்கு ஆவணங்கள் தரப்படாமலேயே அவ்வழக்குகள் முடிக்கப்பட்டன.

2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சஹாரா பிர்லா புலனாய்வு தொடர்புடைய வழக்கின் போது முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் சஹாரா குழுமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் ஒன்றில் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்தற்கான குறிப்பு ஒன்று கிடைத்தது. அந்த ஆவணங்களைப் பெற்ற வருமான வரித்துறை, சி.பி.ஐ-க்கு அவற்றினை கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. மன்மோகன்சிங் தலைமையிலான அரசு இவ்வழக்கைச் சரிவரத் தொடராதது ஆச்சரியம் அல்ல. அதில் தொடர்புடைய அனைவரும் அவரது ஆட்சிக்கால அதிகாரிகள். ஆனால் அடுத்து வந்த அரசும்¸ அவற்றைக் கிடப்பில் போட்டது. தற்போதைய பிரதமர் தனது தேர்தல் கூட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு ஜெயந்தி வரி கொடுக்க வேண்டும் என்று பேசினார். எனவே பிர்லா குழுமம் டைரி குறிப்புகள் பற்றி அவர் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லும் டைரிக் குறிப்பே தற்போதைய அரசு அவ்வழக்கின் விசாரணையை தொடராமல் இருப்பதற்கு காரணம்.

இது தவிர நவம்பர் 2014ஆம் ஆண்டு திரு. மோடி அரசாங்கம் அமைந்த போது வருமான வரித்துறை சஹாரா குழுமத்தைச் சோதனையிட்டது. பணமாக மட்டும் 137 கோடி கைப்பற்றப்பட்டது. 113 கோடி ரூபாய்ப் பணம், என்று,யாரால்¸ எவ்வாறு¸ எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளைக் கொண்ட தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குஜராத் முதல்வர் திரு. மோடிக்கு 40 கோடி ரூபாய் 9 தடவைகளாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகளில் கண்டிருந்தன. காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்¸ மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் போன்றவர்களும் பயன்பெற்ற தைக் காட்டும் குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த ஆவணங்கள் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படவில்லை. மேற்சொன்ன ஆவணங்கள் லஞ்சம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நடந்ததைத் தெளிவாகக் காட்டின. வழக்கில் இவ்வாறான டைரிக்குறிப்புகள் குற்றவியல் புலன் விசாரணைக்கு போதுமானவை என உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகள் உள்ளன. ஆனால் பிர்லா, சஹாரா தாள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவே யில்லை. அந்த விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த கே.வி.சவுத்ரி என்ற வருமானவரி உறுப்பினர் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர், அருண் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அவ்வழக்கு நீதிபதிகள் கேகர் அமர்வில் இருந்து மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பு தவறானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்தவே கட்டுரைஎழுதினார்.

நீதிபதி அருண்மிஸ்ரா தனது மருமகன் திருமணத்தை டெல்லி அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலும்¸ குவாலியரிலும் நடத்திய போது மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அத்திருமண வரவேற்பு நிகழ்வில் குவாலியரில் கலந்து கொண்டார். சஹாரா வழக்குத் தீர்ப்பில் அவர் பயன்பெற்றவர்.

உச்சநீதிமன்றம் தனது நடத்தை விதிகளை வகுத்துள்ளது. அதன்படி அரசியல் வாதிகளுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறான நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது விதிகளுக்கு மாறாக தனது வீட்டுத் திருமணத்தில் பங்கு பெற்ற ஒருவரது வழக்கைக் கையாண்டது சரியல்ல.

09.08.2016 அன்று அருணாசலப் பிரதேச முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நீதிபதி கேகர் மற்றும் தீபக் மிஸ்ரா இருவரும் அவரை பதவி நீக்கம் செய்யும் முக்கிய தீர்ப்பை வழங்கி இருந்தனர். கலிக்கோபுல் தனது தற்கொலைக் கடிதத்தில், நீதிபதியின் கேகரின் மகன் 49 கோடி ரூபாய் கொடுத்தால் சாதகமான தீர்ப்பு எழுத முடியுமென அவரிடம் கூறியதாகவும் நீதிபதி தீபக் மிஸ்ரா 37 கோடிகள் கேட்டதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வரை அது தொடர்பான புலனாய்வோ விசாரணையோ நடக்கவில்லை.

28.08.2017லிருந்து 01.10.2018 வரையிலான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் பலமுரண்கள் கொண்டது.

நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலத்தில் 01.08.2017 அன்று பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

24.08.2017அன்று தீபக் மிஸ்ரா, பிரசாத் கல்வி அறக்கட்டளை தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத் தை அணுகுமாறு உத்தரவிட்டார். இந்திய மருத்துவக் குழுவின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் வழக்கில் ஒரு வழக்கை மட்டும் தனியாகப் பிரித்து அனுப்பியது வழக்கத்திற்கு மாறானது.

மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கும்படி பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்திய மருத்துவக் குழு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் மறுபடியும் பிரசாத் கல்வி அறக் கட்டளைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகும்வாய்ப்பு தரப்பட்டது. பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் சி.பி.ஐ. பதிவு செய்த நீதிபதிகள் லஞ்சம் வழங்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், திரு.யாதவ் என்ற ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, குதுசி¸ பவனா பாண்டே என்பவர்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மீரட்டிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சுதுர்கிரி என்பவர் மூலமாக இது தொடர்பான சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

19.09.2017 ஆம் ஆண்டு குற்றச்சதி மூலம் லக்னோவின் பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தொடர்பு பற்றி விசாரிக்க திரு காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ராவே விசாரித்து தள்ளுபடி செய்தார். இது சட்ட நீதிக்கும்¸ நியாயத்திற்கும் புறம்பானது. சி.பி.ஐ பதிவு செய்த உரையாடல் களில் பிரசாத் அறக்கட்டளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையி லான ஐந்து நீதிபதிகளின் அமர்வில் அமர்ந்த நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்சப் பணத்தைப் பற்றி உரையாடல் நடந்தது. பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் அலகாபாத் நீதிபதி சுக்லா என்பவர் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப் பணம் பெற்றது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பிறகும் அவர் மீது வழக்குப் பதிய உச்சநீதிமன்ற உள்ளரங்க நடவடிக்கை மூலம் மறுத்துவிட்டார் தீபக் மிஸ்ரா. நீதிபதி சுக்லாவை பாராளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. 17.07.2020வில் நீதிபதி சுக்லா ஒய்வு பெற்றார்.

ஜனவரி 2018ல் நான்கு முதுநிலை நீதிபதிகள் செல்லமேஸ்வர்¸ குரியன் ஜோசப்¸ மதன் லோகூர்¸ ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதி தீபக் மிஸ்ராவின் சர்வதிகாரப் போக்கை கண்டித்தும்¸ மிக முக்கிய வழக்குகளை அவரே கையாளுவதைப் பற்றியும்¸ குறிப்பிட்ட சில அமர்வு நீதிபதிகளின் அமர்வில் மட்டுமே அவற்றை ஒப்படைப்பது குறித்தும்¸ மருத்துவ ஊழல்¸ நீதிபதி லோயா இறப்பிற்கான புலன் விசாரணை வழக்கு¸ ஆதார் வழக்கு¸ நீதிபதிகள் நியமன தொடர்பான வழக்கு போன்ற வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது பீமா கொரேகாவ்ன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக போராளிகள் மீது புனே காவல்துறையால் புனையப்பட்ட வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம். மகாராஷ்ராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தவுடன் தானாகவே முன்வந்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சமூகப் போராளிகளும்¸ அறவழியில் நம்பிக்கைடையவர்களுக்கும் பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலத்தில் அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வழக்கு¸ ரபேல் வழக்கு¸ சி.பி.ஐ இயக்குநர் வழக்கு போன்றவற்றை அவர் கையாண்ட விதம் சரியில்லை. அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடுகள் தொடர்பாக நீதிபதி கோகாய் கையாண்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதப் பரிகாரமும் பெற முடியாத சூழல் ஏற்படும் விதத்தில் நீதிமன்றமே குடியுரிமைப் பதிவேட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் பெற்றதன் அடிப்படையில் அவ்வழக்கை கையாண்ட முறையும் கவலையாக உள்ளது. தேர்தல் பத்திர நடைமுறைக்கு மத்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தும்¸ விதிகள் வளைக்கப் பட்டு 95 விழுக்காடு தேர்தல் பத்திரங்களை ஆளுங்கட்சி மட்டுமே பெற்றது.

காஷ்மீரில் ஒரு வருடம் முழு அடைப்பு நிகழ்ந்தது. உறுப்பு 370 நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீர் மூன்றாகத் துண்டாப்பட்டது. அதன்மூலம் அமைதி திரும்பும் என்பது அரசின் வாதம். ஆனால் காஷ்மீரில் 4ஜி அலைக்கற்றையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வழக்கில் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்று அரசு முரண்பாடாக வாதம் செய்தது.

காஷ்மீர் தொடர்பான ஆட்கொணர்வு நீதிப்போராணைகளில் மெத்தன போக்கை உச்சநீதிமன்றம் கடைபிடித்ததையும்¸ கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கில் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகமி தாமதமாக விடுதலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாபர் மசூதியை இடித்தமை சட்ட விரோதம் என தங்கள் 09.11.2019ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்டனர். பாபர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக அவ்வழக்கை விசாரித்து¸ நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அளித்த தீர்ப்பின் மூலம் சட்ட விரோத மசூதி இடிப்பை நியாயப்படுத்தினார். அது சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு ஆகியது.

பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பெயர் குறிப்பிடப் படவில்லை. சட்ட விரோதமான பின்னிணைப்பு ஒன்று 116 பக்கங்களுக்கு வழங்கப்பட்டது. இவை கேள்விக்குரியவை. ஒருமித்த ஆனால் ஒளிந்து கொள்ளும் தீர்ப்பு unanimous but anonymous என நீதிபதி ஏ.பி.ஷா எழுதிய கட்டுரை இதில் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கோகாய் மீது நீதிமன்ற இளநிலை உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு புரிந்தாக குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டிய பெண்மணி மூன்று முறை பணிமாற்றம் செய்யப்பட்டு இடைக் காலப் பணிநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த அப்பெண்மணியின் கணவரும்¸ மைத்துனரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்பெண்மணியின்
இன்னோரு மைத்துனர், ஒரு மாற்றுதிறனாளி, நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்பெண்மணி தாக்கல் செய்த உறுதிமொழித் தாள் குறித்த வழக்கில் நீதிபதி கோகாய் தன் மீதான வழக்கைத் தானே அமர்ந்து முடிவு செய்தது அடிப்படை சட்டக்கருத்தான ‘தனது வழக்கில் தானே தீர்ப்பளிக்கக் கூடாது’ என்ற சட்ட மீறல் ஆகியது. பாலியல் தொந்தரவு வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் நீதிபதிகள் அரவிந்த போப்டே¸ இந்து மல்ஹோத்ரா¸ மற்றும் இந்திராபானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்கறிஞர் முன்னிலையாக அனுமதிக்காததால் புகார் கொடுத்த பெண்மணி அக்குழுவின் முன் முன்னிலையாக விரும்பவில்லை. நீதிபதி கோகாய் மீதான குற்றச்சாட்டு மூன்று நீதிபதிகள் குழுவினால் முடித்துவைக்கப்பட்டாலும் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை. அப்பெண்மணி மறுபடியும் பணி அமர்த்தப்பட்டார். அவரது மைத்துனர்களுக்குப் பணி வழங்கப்பட்டன. ஆனால் கோகாய் விவகாரம் திரை மூடிய மர்மமாகவே இன்றும் இருக்கிறது.

நீதிபதி கோகாய் தலைமையிலான கொலிஜியம் என்ற முதுநிலை நீதிபதிகள் குழுவின் பரிந்துரையால், குஜராத் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அகில் குரேஷி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற நான்கு மாதங்களில் நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றார். இதனால் சாமானிய மனிதர்களுக்கு நீதித்துறை அமைப்பின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போயிற்று. ‘உதவிக்குப் பதவி’ என்ற அடிப்படையில் நீதிபதியும்¸ அரசும் கைகோர்த்துக் கொண்டனர்.

நீதிபதி போப்டே, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளில் மக்களைக் காப்பாற்றத் தவறினார். டெல்லி கலவரத்தில் டெல்லி எரிந்த போது நீதிபதி முரளிதரன் 26.02.2020 முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டதனால் நள்ளிரவே அவர் மாற்றம் செய்யப்பட்டார். இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு¸ காஷ்மீர் வழக்கு 4ஜி அலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதியின் போப்டேயின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை.

[இவை தவிர ஏராளமான தரவுகளைத் தான் தர முடியும் என்றார் பூஷண். மேற்சொன்ன நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டதையும் அதில் நான்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பங்கு குறித்தும் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு கூற அரசியலமைப்பு சட்டம் 19(1)(ஏ)யின் படி தனக்கு கருத்துரிமை யுள்ளது எனவும்¸ 02-08-2020 அன்று தனது வாக்குமூலத்தை அளித்தார். மேற்சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.]

சமூகம்