இன்றைய செய்தி

இன்று வையவன் என்ற எழுத்தாளர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். என்னை விட வயதில் பத்தாண்டுகள் மூத்தவர். அடையாறு வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நூலை வெளியிட்டது பற்றியும் அவர் அனுப்பிய பிடிஎஃப் கோப்பில் தகவல்கள் இருந்தன. பேச்சிலேயே பிராமணர் என்பது தெரிந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் (பள்ளிகொண்டாவில் பணி செய்தவர்). அவர் சொன்னதில் என்னை உறுத்திய விஷயம் ஒன்றே ஒன்று. தான் உறுதியான மாறாத சலனமற்ற மனநிலையை அடைந்து விட்டதாகக் கூறினார். அதில் வெளியான “நான்” என்பது என்னை உறுத்தியது. நான் என்ற விஷயத்தைத் தகர்க்காமல் எதை அடைய முடியும்? உறுதி என்பது மரணம்தான். அதுவரை மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத்தான் க்ஷணபங்க நியாயம் என்பதன் வாயிலாக புத்தர் கூறினார்.
முதலில் அவர் தமது அமைப்பில் என்னை அழைத்துப் பாராட்டுவதாகக் கூறினார். பேச்சின் போக்கில் நான் கடவுளை நம்பாதவன் என்று தெரிவித்தேன், ஆனால் அவரோ பகவத்கீதையை மொழிபெயர்த்தவர், ஆழ்ந்த பக்திமான் என்பதற்குமேல் இந்து என்பதில் பெருமை கொண்டவர். அவர் கருத்துகளுக்கு உடன்படாதவன் நான் என்றதும் தனது பேச்சை மாற்றிக் கொண்டார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடினேன். ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பார்ப்பனியத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது என்பதும் புரிந்தது.
பேசிய பிறகு அவருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான். சலனமின்றி இருப்பது, தியானம், ஏன் முக்தியடைதல் எல்லாம் ஒருவருடைய நன்மைக்கு உதவலாம். சமுதாயத்திற்கு அதனால் என்ன பயன்? ஆதிகாலத்திலிருந்து அதைத்தானே இந்தியாவில் வலியுறுத்தினார்கள்? அதனால் சமூக அவலங்கள் ஏதேனும் தீர்ந்ததா? “சமூகத்திற்கு நம்மாலான பணியைச் செய்தால் அது போதும் எனக்கு” என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை உரையாடல் இறுதியில் கசப்புதான் மிஞ்சியது. பார்ப்பனர்கள் யாரோடு கருத்தியல் ரீதியாகப் பேசினாலும் ஏற்படுவது அதுதான். (இதற்கு ஒரே விதிவிலக்காக நான் கண்டவர் ஈழத்து பத்மநாப ஐயர்.)

நிகழ்வுகள்