இயல் 2 – தமிழ்ப்பொழில் – ஓர் அறிமுகம்

இயல் 2
தமிழ்ப்பொழில் – ஓர் அறிமுகம்

முன்னுரை

இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சமூக மறுமலர்ச்சி பிறந்தது. இந்த மறுமலர்ச்சி மூன்றுவித நிகழ்வுகளால் ஏற்பட்டது என்பர்.1
அ. சமய ஆன்மிகத் துறையில் விழிப்புணர்ச்சி
ஆ. மரபுக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் எதிரான புரட்சி மனப் பான்மை
இ. அறிவுத் துறைகளில் புதிய விழிப்புணர்ச்சி.
இந்த விழிப்புணர்ச்சிகள் யாவும் மொழி இலக்கிய மறுமலர்ச்சிக் கும் உதவின. இவ்வித மறுமலர்ச்சி முதன்முதலில் வங்கத்தில் தான் தோன்றியது என்பது ஏற்கப்பட்ட செய்தி. இதற்குச் சான்றாக பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ணர் இயக்கம் போன்ற சமயச் சார்பான இயக்கங்களையும், பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் போன்ற புத்திலக்கியப் படைப்பாளர்களால் வங்கமொழியில் ஏற்பட்ட இலக் கிய வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுவர்.2 முதன்முதல் இதழ்களின் தோற்றமும் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.3 வங்கத்தில் தோன்றிய இந்த மறுமலர்ச்சி பிறகு நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது என்பர்.

தமிழகத்தில் மறுமலர்ச்சி
வங்காளத்தை ஒட்டி, தமிழகத்திலும் அறிவுத்துறை விழிப்பு ணர்ச்சி ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக மொழி மறுமலர்ச்சி இயக்கமும் தோன்றியது. இதன் செயல்பாடுகள் பலவிதமானவை.4 மொழி இயக்கங்களின் வெளிப்பாடுகள், மொழி நிறுவனங்கள் என்ற முறையில் தமிழ்ச் சங்கங்களும் மொழி மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில் போன்று இலக்கிய ஆய்விதழ்கள் தோன்றியமையும் மறுமலர்ச்சியின் ஒரு வெளிப்பாடே.

மதுரைத் தமிழ்ச்சங்கம்
நிறுவன அமைப்பு என்று நோக்கும்போது, தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றத்துடன் ஒன்று படுகிறது என்பர்.6 இத்தமிழ்ச் சங்கம், நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற உணர்வோடு பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினான்காம் நாள் தோற்று விக்கப்பட்டது.7 இச்சங்கத்திலிருந்து அடுத்த ஆண்டு முதலாகச் (குரோதி ஆண்டு, 1902 நவம்பர்) செந்தமிழ் என்னும் ஆராய்ச்சித் திங்களிதழ் தோன்றியது. இந்நிகழ்ச்சியுடன் தமிழ் மறுமலர்ச்சி பிறந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர்.8 செநத்மிழ் இதழ், தமிழில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிக்கெனத் தோன்றிய முதல் இதழ்.9

கரந்தைத் தமிழ்ச் சங்கம்
மதுரைத் தமிழ்ச் சங்கம் தோன்றியதன் ஓர் உடன் விளைவே கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனலாம்.10 இதன் தொடக்க விழா, 14-05-1911 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார் தலைமையில் நிகழ்ந்தது. மூனற்£ண்டுகள் கழித்து, 01-05-1914 அன்று இச்சங்கம் பதிவு செய்யப்பட்டது.11
இச்சங்கத்தின் முதன்மை உறுப்பினர்களாக, வி. சாமிநாதப் பிள்ளை, எல். உலகநாதப் பிள்ளை, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தசாமிப் பிள்ளை, த. வே. உமாமகேசுவரம் பிள்ளை ஆகியோர் இருந்தனர். இதன் புரவலர் களாகப் பெத்தாச்சி செட்டியார், கோபாலசாமி இரகுநாத இராஜாளியார், சர். ஏ. டி. பன்னீர் செல்வம் ஆகியோர் இருந்தனர்.

சங்கத்தின் குறிக்கோள்கள்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் குறிக்கோள் தொடராக ‘தொண்டு-தமிழ்-முன்னேற்றம்’ என்பது அமைக்கப்பெற்றது. சங்க இலச்சினையில் இது இடம்பெற்றது. சங்கத்தின் குறிக்கோளாக, “உலக மக்களி டையே தமிழனின் பெருமையைப் பரப்புவது” என்பதைத் த. வே. உமாமகேசுவரன் ஏற்றார்.

“இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தாலும், ஆங்கிலேயர் ஆட்சியாலும் பெருமை குன்றி நின்றது. உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தமக்குத் தமிழ் தெரியாது என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட காலம் அது. தூய தமிழைப் பேசவோ எழுதவோ தெரியாத நிலையில் பெரும் பான்மைத் தமிழர் இருந்தனர். இந்நிலையில்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்க்கத் தோன்றியது”
என்பது தமிழவேள் த. வே. உமாமகேசுவரன் இச்சங்கத்தின் தோற் றத்திற்குச் சொல்லும் காரணம்.13

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் குறிக்கோள்களை ச் சங்கத் தலை வராக இருந்த செ. தனக்கோடி என்பவர், பின்வருமாறு எடுத்துரைக்கிறார்.14
1. வேற்றுமொழி விரவாத தூய தமிழில் மக்கள் பிழையின்றிப் பேசுமாறும் எழுதுமாறும் செய்தல்;
2. தமிழ்ப் பெரும்புலவர்களை ஒன்றுகூடச் செய்தலும், வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தலும்;
3. தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல்;
4. தமிழின் இசை-நாடகப் பகுதிகளைத் தக்காங்கு வளர்த்தல்;
5. தமிழ் மொழி பயில்வேர்ர்க்கு ஊக்கமளித்து, மக்களிடையே தமிழ்ப் பற்றை வளர்த்தல்.

சங்கத்தின் பணிகள்
1. தொடக்க முதலாகவே கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புலவர் திருநாள்களையும், கலைமகள் விழாவையும் சிறப்புறக் கொண்டாடி வருகிறது. கரந்தைப் புலவர் கல்லூரி தோன்றிய பின்னர், அக்கல்லூரியின் இளங்கோவடிகள் தமிழ்க்கழகம் சார்பாக, அதன் ஆண்டுவிழாவும், இளங்கோவடிகள் விழாவும் சிறப்புறத் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

சங்க ஆண்டுவிழா, சங்கம் தொடங்கி ஏறத்தாழ இருபத்தைந் தாண்டுகள் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா, பெரும் புலவர்கள் கூடி மகிழும் இடமாக விளங்கியது. பேரறிஞர்கள் இவ் விழாக்களுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்தனர். கா. நமச்சி வாயர், தி. செல்வக் கேசவராயர், ச. சோமசுந்தர பாரதியார், பா. வே. மாணிக்க நாயக்கர், கா. சுப்பிரமணியப் பிள்ளை, இரா. இராக வையங்கார், மு. இராகவையங்கார், உ. வே. சாமிநாதையர், மு. கதிரேசஞ் செட்டியார், மறைமலையடிகள், விபுலாநந்தர், ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஆகிய அறிஞர்கள் ஆண்டுவிழாக்களின் தலைவர்களாக அமர்ந்து சிறப்பித்துள்ளனர். இவர்களது ஆண்டு விழாத் தலைமையுரைகள், தமிழுணர்ச்சியை வளர்க்குமாறும், தமிழ் ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் நிலையிலும் விளங்கின.

2. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ வேண்டும் என்பதற்காகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் 1925இல் பெருமுயற்சி செய்தது.15

3. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இழிவுற்றிருந்த தமிழாசிரியர்கள் நிலையை உயர்த்தப் போராடியது. பிற துறை ஆசிரியர்களுக்குச் சமமாகத் தமிழாசிரியர்கள் மதிப்புப் பெறுவதற்கும் பெருமுயற்சி செய்தது.16

4. இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குத் துணையாக இருந்தது. 1938ஆம் ஆண்டு தஞ்சையிலிருந்து சென்னை சென்ற இந்தி எதிர்ப்புப் பேரணிக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த ஐ. குமாரசாமிப் பிள்ளை தலைமை தாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.17

5. தமிழிசை இயக்கத்திற்குத் துணை செய்தது. தமிழிசை ஆராய்ச்சியை வளர்த்தது. சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூல் முதலியன கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகவே வெளிவந்தன.18

6.கலைச்சொல்லாக்கப் பணிகளுக்குத் தூண்டுகோல் அளித்தது. தமிழ்ப்பொழில் இதழ் வாயிலாக நல்ல கலைச்சொற்களை வெளியிட்டது. கலைச்சொல்லாக்கக் குழுக்கள் சரிவர இயங்காத போதும், வடமொழிச் சொற்கள் வரம்பின்றித் தமிழ்ச் சொற்களாகப் புகுத்தப்பட்டபோதும் எதிர்த்தது.19

7. தமிழகம், தமிழினம், தமிழ்மொழி சார்பான எந்தச் சிக்கல் நேரிடினும் அவற்றைப் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கிவந்தது.20 யாவற்றுக்கும் மேலாக, இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள, தமிழ்ப்பொழில் என்னும் ஆராய்ச்சித் திங்களிதழை 1925ஆம் ஆண்டு தொடங்கி நடத்தியது. இவ்விதழ் வாயிலாக, இலக்கிய இலக்கண வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டும் தமிழ்நேயக் கட்டுரைகளை வெளியிட்டும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகிறது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பணிகள் பன்முகப்பட்டவை. எனினும் இச்சங்கத்தின் மிகச் சீரிய தொண்டு தமிழ்ப்பொழில் இதழ் வெளியீடே என்பது துணிபு.21

தமிழ்ப்பொழில் இதழ்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய சமயத்திலேயே, அதன் தலைவர் த. வே. உமாமகேசுவரன், சங்கத்தின் சார்பாகத் தனி இதழ் ஒன்றை வெளியிட விரும்பினார். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்பொருட்டு, இராதாகிருஷ்ணப் பிள்ளை, ஐ. குமார சாமிப் பிள்ளை, பெரியசாமிப் பிள்ளை, நா. சீதாராமப் பிள்ளை, சோமநாதராவ் என்னும் ஐவர் குழுவையும் அமைத்தார்.22 எனினும் இந்நோக்கம் உடனே நிறைவேற வில்லை. இச்செய்தியைத் தமிழ்ப் பொழில முதல் இதழில் அதன் ஆசிரியர் ஆர். வேங்கடாசலம் குறிப்பாகத் தெரிவிக்கிறார்.23

“நமது தமிழ்ப் பொழிலின் நறுமண நுகர்வினை நமது சங்க அன்பர்கள் பலர் பன்னெடு நாட்களாக அவாவி வந்தனர். எனினும், ‘அடுத்து முயன்றாலும ஆகுநாளன்றி ஆகா’ ஆகலின், திருவருட் பேற்றிற்கு இலக்கான இந்நாளே இப்பொழிற் றிறப்பு விழாவினைக் கூட்டி அன்பர்கட்குப் பொழில்மண நுகர்ச்சியை இயலுவேமாயினம்”.

தமிழ்ப்பொழில முதல் இதழ் குரோதன ஆண்டு சித்திரைத் திங்கள் முதல்நாள் (1925 ஏப்ரல்) வெளிவந்தது.

இதழின் தோற்றத்துக்குக் காரணங்கள்
அக்காலத்தில் செநத்மிழ் இதழ் தமிழாராய்ச்சி இதழ்களுக்கென ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. மதுரைத் தமிழ்ச்சங்கம் போன்ற ஓர் அமைப்பைத் தஞ்சையில் தோற்றுவிக்க எண்ணிக் கரந்தைத் தமிழச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கெனச் செந்தமிழ் இதழ் இருப்பதுபோலக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் ஓர் இதழ் இருக்கவேண்டும் எனச் சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள் விரும்பினர்.24

1923இல் திருநெல்வேலிச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடாகச், செந்தமிழ்ச் செல்வி என்ற இதழ் தோன்றியது. இந்நிகழ்ச்சி, 1914 முதலாகவே இதழ் ஒன்றைத் தொடங்க எண்ணியிருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு ஓர் உந்துசக்தியை அளித்திருக்கவேண்டும். மேலும், 1925 அளவில், கரந்தைத் தமிழ்ச் சங்கம், ஓரளவு பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று, தொடக்கப் பள்ளி ஒன்றையும் நடத்தத் தொடங்கியிருந்தது. இப்பின்னணியை மனத்திற்கொண்டு, தமிழ்ப் பொழில் இதழின் தோற்றத்துக்கான காரணங்களாக,
1. தமிழ் மறுமலர்ச்சி இயக்கமும், அவ்வியக்கத்தின் விளைவான மொழியுணர்ச்சியும்,
2. செந்தமிழ் இதழின் பணிகள் புகழ்பெற்ற நிலை,
3. கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பு,
4. த. வே. உமாமகேசுவரன் போன்ற ஆர்வமிக்கவர்களின் ஈடுபாடு,
5. உடனடிக் காரணமாக, செந்தமிழ்ச் செல்வி இதழின் தோற்றம்
ஆகியவற்றைக் கூறலாம்.

பெயர்க் காரணம்
இந்த இதழுக்குத் தமிழ்ப்பொழில் (பொழில் என்பது பூங்காவைக் குறிக்கும் சொல்) என்று பெயரிட்ட காரணத்தைத் தொடக்க ஆசிரியர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.25
“தனது பசுநிறத்தால், வண்டொலியால், தீங்கனியால், மலர் மணத்தால், பைம்புற்றரையால், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் பேரன்பினைத் தன்பால் எய்தும் எத்திறத்தோர்க்கும் எஞ்ஞான்றும் தரவல்லது பொழில் ஒன்றே அன்றோ! எனவே இங்ஙனம் ஒப்பும் உயர்வுமில்லாத சிறப்பினதாகிய பொழிலின் பொற்பினையுணர்ந்தே இந்தத் திங்களிதழிற்குத் தமிழ்ப்பொழில் எனப் பெயரிட்டனம்.”

பத்திரிகைக்குத் தமிழ்ப்பொழில் எனப் பெயரிட்டதற்கேற்ப, தனி யிதழ் மலர் எனவும், பன்னிரு மலர்கள் கொண்ட ஓராண்டுத் தொகுப்பு துணர் (பூங்கொத்து) எனவும் வழங்கப்பட்டன.

இதழின் நோக்கங்கள்
வெளிப்படையாகவே இதன் நோக்கங்கள் இரண்டுதான்.
1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாய்க்கருவியாக இருத்தல், 2. தமிழியல் ஆய்வில் ஈடுபடுதல்.26

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் வளர்ச்சி நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு தோன்றியது ஆதலின், அதன் வாய்க்கருவியாக இயங்குதல் என்பது அக்காலத்தில் தமிழ்நேயக் கருத்துகளைப் பரப்புவது என்ற பொருளையே தரும். தமிழியல் ஆய்வுக்கெனத் தமிழ்ப்பொழிலில் இடம்பெறும் தகுதியுடைய கட்டுரைகள் எந்தெந்த பொருள்கள் பற்றி இருக்க வேண்டும் என்பது பற்றி, முதல் துணர், முதல் மலரில் விளக்கம் தரப்பட்டுள்ளது.27

“இவ்விதழ் ஓர் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடு என்னும் தகுதிக்கேற்ப, தமிழ் வளர்ச்சியும் தமிழர் மேம்பாடும் பற்றிய அருமைக் கட்டுரைகளையே தன்னகத்துக் கொண்டுவரும். தமிழ்மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்ச் சொல்லாக்கம், தமிழ் நூல் ஆராய்ச்சி, பழந்தமிழ் நூல் வெளியீடு அரிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ்த் தனிச் செய்யுட்கள் வெளியீடு, தமிழ் நூல் மதிப்புரை, தமிழ்ச் சங்கச் செய்திகள் முதலிய பல் வகையான் அமையும் சிறந்த கட்டுரைகள், ஆங்கிலம், ஆரியம் தமிழ்மொழி களில் வல்லார் பலரால், கற்றாரேயன்றிக் கற்போர்க்கும் பயனுறத் தக்க நெறியில் தெள்ளிய (இனிய) தீநத்மிழ் நடையில் எழுதப் பெறும்”.

நடைவரம்பு
மேற்கு நாடுகளில் இதழ்களுக்கு நடைவரம்பு நூல்கள் (Stylesheets) உண்டு. தமிழிலும் தினத்தந்தி நாளிதழும் புலமை என்னும் ஆய்விதழும் நடைவரம்பு ஏடுகளை வெளியிட்டுள்ளன. ஆங்கிலத்தில், இலக்கிய இலக்கண ஆய்விதழ்களுக்கென வெளிவந்துள்ள நடைவரம்பு ஏடுகளுள், அமெரிக்க நவீன மொழிக் கழகம் வெளியிட்டுள்ள நடைவரம்பு ஏடு தரமானதும் பெருமளவு பின்பற்றப்படுவது மாகும்.28 இக்கையேடு, ஆய்வுக் கட்டுரைகள், எளிதில் படிக்கவியலும் தன்மை (ரீடபிலிடி) கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

“ஆர்வமூட்டும் தன்மை, எளிதில் படிக்கவியலும் தன்மை ஆகிய பண்புகளுடன், நுட்ப மிகுதி, சான்றுகள் தருதல் எனும் பண்புகளை இணைத்தல் மிகக் கடினமான செயலாகும். புலமை சார்ந்த எழுத் தென்பது இக்கடினமான பணியை நிறைவேற்றுவ தாகும்”
என்று அவ்வேடு ஆய்வுக் கட்டுரைகளின் நடை பற்றிக் குறிப்பிடுகிறது.29

தமிழ்ப்பொழிலுக்கென நடைவரம்பு ஏடு எதுவுமில்லை. எனினும் மேற்குறிப்பிட்டது போன்றதொரு கருத்தை அவ்வப்போது தமிழ்ப் பொழில் குறிப்பிட்டு வந்துள்ளது. தெள்ளிய இனிய தீந்தமிழ் நடையில் எழுதவேண்டும் என்று முதல் மலரில் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. வேங்கடாசலம் பிள்ளையும், உமாமகேசுவர னும் பொழிலாசிரியர்களாக இருந்த காலத்தில் பின் வரும் விண்ணப்பத்தைத் தமிழ்ப் பொழிலின் பின்உள் அட்டையிலோ, இறுதிப்பக்கத்திலோ அடிக்கடி வெளியிட்டு வந்தனர்.30

முதல் ஐம்பது துணர்கள் வரன்முறை
ஓர் இதழ் நன்கு நடைபெற வேண்டுமாயின், அதற்குப் பொருள் அடிப்படை, குறிக்கோள் அடிப்படை என்ற இரண்டும் செம்மையாக அமையவேண்டும். தமிழ்ப் பொழிலைப் பொறுத்தவரை, இவ் விரண்டு அடிப்படைகளும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, தொடர்ந்து வெளிவர முடிந்தது. எனினும் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இல்லை. அவற்றையும் கடந்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருவது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆர்வத்தைப் புலப்படுத்துவதாகும்.

தொடக்க முதல், முதல் நாற்பத்தொரு துணர்கள் வரை, அதாவது முதல் நாற்பத்தொரு ஆண்டுகள் (1925 ஏப்ரல் முதல், 1966 ஏப்ரல் வரை) தமிழ்ப்பொழில் தொடர்ந்து நடந்துவந்தது. பராபவ, பிலவங்க (1966 முதல் 1968 வரை) ஆகிய ஆண்டுக ளில் சங்க நிர்வாகச் சிக்கல்களின் விளைவாகத் தமிழ்ப்பொழில் வெளிவரவில்லை. இரண்டாண்டுகள் கழித்து, கீலக ஆண்டு ஐப்பசி (1968 நவம்பர்) முதல் நாற்பத்தி இரண்டாம் துணர் வெளிவந்தது. அது ஆறு மலர்கள் மட்டுமே வெளிவந்தது (நவம்பர் முதல் அடுத்த ஏப்ரல் வரை ஆண்டை நிறைவு செய்வதற்காக). நாற்பத்து மூன்றாம் துணர் முதல் (1969 மே முதல்) நமது கால எல்லையான ஐம்பதாம் துணர்வரை தமிழ்ப்பொழில் இடையீடின்றி நடந்து வந்துள்ளது. ஐம்பதாம் துணர், நள ஆண்டு பங்குனித் திங்களுடன் (1977 ஏப்ரல்) நிறைவு பெற்றது.

ஒரு துணருக்குப் பன்னிரண்டு என்ற வீதத்தில் தமிழ்ப்பொழில் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் பல துணர்களில், இரண்டு-மூன்று மலர்கள் ஒன்றாக இணைத்து வெளியிட்ப் பட்டுள்ளன. முப்பதாம் துணரில், மிக விதிவிலக்காக, ஏழு மலர்கள் (6 முதல் 12 வரை) இணைக்கப்பட்டு ஒன்றாக வெளிவந்துள்ளது.
அடிக்கடி இவ்வாறு நிகழக் காரணங்கள்:31
1. போதிய பொருள்வசதி யின்மை;
2. தக்க நேரத்தில் அறிஞர்களின் கட்டுரைகள் கையிருப்பின்மை;
3. அச்சகக் கால நீட்டிப்பு;
4. சங்க உறுப்பினர்களிடையே காணப்பட்ட நிர்வாகப் பூசல்.
இவ்வாறு மலர்கள் ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டதால், ஐம்பது துணர்களுக்கு 600 மலர்களுக்கு பதிலாக 525 மலர்களே வெளிவந்துள்ளன.32 மேலும் இரணடு மூன்று மலர்கள் இணைக் கப்படும்போது பெரும்பாலும் பக்க அளவு கூட்டப்படுவதும் இல்லை. மாறாகப் பல சமயங்களில் குறைந்துள்ளது.

பொழில் ஆசிரியர்கள்
முன்பே கூறியவாறு, தமிழ்ப் பொழில் ஆசிரியரைப் பொழிற்றொண்டர் எனக்கூறும் மரபு வெகுகாலம் இருந்தது. இதுவரை பணியாற்றிய பொழிற்றொண்டர்கள் பின்வருவோர்:33
துணர் 1 – எல். உலகநாத பிள்ளை & ஆர். வேங்கடாசலம் பிள்ளை
துணர் 2 – ஆர். வேங்கடாசலம் பிள்ளை & நீ. கந்தசாமிப் பிள்ளை
துணர் 3 முதல் 9 வரை – எல். உலகநாத பிள்ளை & ஆர். வேங்கடாசலம் பிள்ளை
துணர் 10 முதல் துணர் 17இன் முதற்பகுதிவரை – த. வே. உமாமகேசுவரம் பிள்ளை
துணர் 17இன் பிற்பகுதி – ஐ. குமாரசாமிப் பிள்ளை
துணர் 18 – ஆர். வேங்கடாசலம் பிள்ளை
துணர் 19 – ஆர். வேங்கடாசலம் பிள்ளை & கோ. சி. பெரியசாமிப் புலவர்
துணர் 20-21 – கோ. சி. பெரியசாமிப் புலவர்
துணர் 22 – கோ. சி. பெரியசாமிப் புலவர் & அ. கணபதிப் பிள்ளை
துணர் 23 முதல் 28 வரை – அ. கணபதிப் பிள்ளை
துணர் 29 முதல் 41 வரை – ச. சுயம்பிரகாசம்
துணர் 42 முதல் 46 வரை – செ. தனக்கோடி
துணர் 47 முதல் 50 வரை – அரங்க. வே. சுப்பிரமணியன்
49ஆம் துணர் வரை பொழிற்றொண்டர் பெயர் மட்டுமே இடம்பெற்று வந்தது.34 ஐம்பதாம் துணர் முதல் பதிப்பாசிரியர் குழு ஒன்று அமைக்கப்பெற்றது.35

முடிவுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய நாட்டில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக அறிவுத்துறை விழிப்புணர்ச்சி நிகழ்ந்தது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் அந்தந்த மொழிகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவ்வாறே தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதன் ஒரு வெளிப்பாடு, மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் வெளியீடான செந்தமிழ் இதழும். மதுரைத் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டதன் விளைவாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தோன்றியது. இச்சங்கத்தின் வெளியீடாகிய தமிழ்ப்பொழில் செந்தமிழின் அமைப்பையே பின்பற்றியது. இந்த இயலில், தமிழ்ப்பொழில் இதழின் தோற்றம், வரலாறு குறித்த சில இன்றியமையாச் செய்திகள் இடம் பெற்றன.

அடிக்குறிப்பு
1.K. Nambi Arooran, Tamil Renaissance and Dravidian Nationalism, p. 22.
2.S. K. Chatterjee (ed), The Cultural Heritage of India, Volume V, Langauages and Literatures, p.12.
3.Ibid, p.13
4.தமிழ் மறுமலர்ச்சியினால், அதன் நீண்ட பழைய மரபு நன்கு உணரப்பட்டு, ஓர் உத்வேகத்தை அளித்தது. பழைய இலக்கிய இலக்கண ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஒப்புநோக்கிப் பதிப்புச்செய்து வெளியிடத் தொடங்கியமை இந்த உற்சாகத்தின் ஒரு வெளிப்பாடு. முதன்முதலாகத் திருக்குறள் பதிப்புப் பெற்றது. அதே போலப் புதிய இலக்கியங்களும் தோன்றலாயின. மனோன்மணீயம், பிரதாப முதலியார் சரித்திரம் போன்றவை புத்திலக்கிய வகைகளாகத் தோன்றின. உ. வே. சாமிநாதையர் போன்றவர்கள் பழஞ்சுவடிக்ளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிட, பாரதியார் போன்றவர்கள் கவிதையில் புதிய பாணியைத் தொடங்கிவைத்தனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலாகவே தமிழின் மறுமலர்ச்சி உறுதியான தடத்தில் கால்பதிக்கத் தொடங்கியது. இவ்வாறே தமிழ்ச் சங்கங்களும், அவற்றின் வெளியீடுகளான இதழ்களும் தமிழ் மறுமலர்ச்சியின் மற்றொருவகை வெளிப்பாடாக நோக்கத் தக்கது.
5.P. R. Subramanian, Annotated Index tg Centamil, Part B, p.xiii
6.K. Nambi Arooran, op.cit., p.31
7. க. வெள்ளைவாரணன், ‘பாண்டித்துரைசாமித் தேவர்’, தமிழ்ப் பொழில், துணர் 22, ப.285
8. P. R. Subramanian, op.cit., p.xii
9. ibid.
10. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டுவிழா, 1909இல் தஞ்சையில் நடைபெற்றது. அப்போது தூண்டுதல் பெற்ற தஞ்சை மக்களுள் சிலர், தஞ்சைத் தமிழ்ச் சங்கம் என்னும் ஓர் அமைப்பினைத் தோற்றுவித்தனர். ஆனால் இது அடுத்த ஆண்டு, வித்யா நிகேதன் என ஆயிற்று. இதுவும் ஓராண்டிலேயே நலிவெய்தியது. இந்த அமைப்பிலிருந்த இளைஞர்கள், 1911இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். இந்த இளைஞர்களுக்குத் தலைவராகத் த. வே. இராதாகிருஷ்ணப் பிள்ளை மதிக்கப்பட்டார். இதனால் இவரைச் ‘சங்கம் நிறுவிய துங்கன்’ என்று அழைத்தனர். (துங்கன் என்றால் வலிமை பெற்றவன் என்று பொருள்). ஆனால் தொடக்கமுதலாகவே, சங்கத்தின் பொறுப்பை கவனித்துவந்தவர் அவருடைய தம்பி, த. வே. உமாமகேசுவரம் பிள்ளை.
மேலும் சங்கத்தின் வரலாற்றை விரிவாகக் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடுகளான கட்டுரைப் பொழில், கரந்தைக் கட்டுரை ஆகிய நூல்களிலும், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு அறிக்கைகளிலும் காணலாம்.
11. இரா. சின்னத்தம்பி, கரந்தைத் தமிழ்ச் சங்கம், ப.3
12. செ. தனக்கோடி, நமது சங்கமும் தமிழ்மொழி வளர்ச்சியும், கட்டுரைப் பொழில் மணிவிழா மலர், ப.12
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்களும், தொடக்கத்தில் அதிலிருந்தவர்களும் அதன் புரவலர்களும் அக்காலத்தில் நீதிக் கட்சியின் உறுப்பினர்களாகவும் அதில் செல்வாக்குப் பெற்றவர்களா கவும் இருந்தவர்கள். சங்கத் தலைவர் உமாமகேசுவரன், தஞ்சைப் பகுதி நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்டவர். புரவலர் ஏ. டி. பன்னீர் செல்வம், மாநில நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர். அரசு உயர்பதவிகள் பலவற்றை வகித்தவர். எனவே தொடக்க முதலா கவே கரந்தைத் தமிழ்ச் சங்கம், பார்ப்பனரல்லாதோர் இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றின் சார்புடன் இருந்ததில் வியப் பில்லை.

மேலும் தற்செயலாக அமைந்துவிட்டாலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இயல்பைக் காட்டும் ஒரு முக்கியக் குறிப்பு கருதத்தக்கது. உண்மையில், ‘கரந்தை’ என்பது கருந்தட்டான்குடி (தஞ்சாவூரின் ஒரு பகுதி) என்பதன் மரூஉப் பெயராக இருந்தாலும், வெட்சி x கரந்தை என்ற இருமையில். பாதுகாப்பு உணர்வைக் காட்டும் ஒன்றாக அமைகிறது. ‘வெட்சி’ என்பது தாக்கப் போகும் அரசன் தன் வீரர்களை அனுப்பி ஆநிரை கவர்தல். அதை எதிர்த்துத் தடுத்து ஆநிரை மீட்பதற்காக எதிரி அரசன் நடத்தும் தற்காப்புப் போர் கரந்தைத் திணை என்பதில் அடங்கும். இதில் உள்ள தற்காப்பு, மீட்சி போன்றவை இக்காலத் தமிழ்ச் சங்கங்களின் மனநிலையைக் காட்டப் போதுமானவை.

அக்காலத் தமிழறிஞர்கள் பலர் தங்களை மொழிக் காவலர்களாகக் கருதிக் கொண்டனர். ‘முத்தமிழ்க் காவலர்’ கி. ஆ. பெ. போன்ற அடைமொழிகளைக் காண்க. புதிது படைத்தல் என்பதைவிடப் பாது காப்பு உணர்வு மேம்பட்டிருந்தது. வடமொழியின் அஞ்சத்தக்க தாக்கமும், இந்தித் திணிப்பும் இதற்கு முக்கியக் காரணங்களாக லாம். எல்லாவற்றையும் விட மேலாக, கால்டுவெல் இலக்கணம் வெளிப்பட்டிருப்பினும், அக்காலத்தில் தமிழ்மொழி தனித்த மொழி யாகவும், திராவிட மொழிக்குடும்பம் தனியாகவும் நோக்கப்பட்டதே இல்லை. காலங்காலமாகத் தொடர்ந்து வந்த நோக்கான “வடமொழியிலிருந்து பிறந்தவையே பிற இந்திய மொழிகள் யாவும்” என்ற கருத்தே ஆட்சி பெற்றிருந்தது. இது இன்று வரையிலுமே ஒரு தாழ்வுணர்ச்சியைத் தமிழர்களுக்கு அளித்து வருகிறது எனலாம்.

அக்காலத்தில் (1925-50) இருந்த காங்கிரஸ் கட்சியோ, இந்து மகாசபையோ, தமிழையோ, திராவிடமொழிகளையோ தனித்த பண்பாடு கொண்டவர்கள் என்று நோக்கியதில்லை. முன்னது சுதந்திரப் போராட்ட நோக்கில் ஒற்றை இந்தியா என்று நோக்கியது. இந்து மகாசபை, மத அடிப்படையில் ஒற்றை இந்தியா என்று நோக்கியது. ‘ஒற்றை இந்தியா’ என்பதன் அர்த்தம் வடநாட்டவர் களின் ஆதிக்கம், பார்ப்பனர்களின் ஆதிக்கம் என்பதே ஆகும்.
13. த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, ‘நமது சங்கமும் மொழி வளர்ச்சியும்’, கரந்தைக் கட்டுரை, கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளிவிழா வெளியீடு, ப.16
14. செ. தனக்கோடி, மே. நூ., ப.12
15. K. Nambi Arooran, op.cit., pp.122-130.
தமிழ்ப் பொழிலின் முதல் துணரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று கேட்டு வரையப்பட்ட கருத்துரைகளையும் கட்டுரைகளையும் காண்க. தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தேவை என்பதில் அக்காலத்தில் மிக முனைப்பாகச் செயல்பட்டவர் பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளை.
16.தமிழாசிரியர்கள் அக்காலத்தில் மூன்றாந்தரத்தினராகவே மதிக்கப்பெற்றனர். அவர்கள் நிலை குறித்து அவ்வப்போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. அவை தமிழ்ப்பொழிலிலும் இடம் பெற்றன. தமிழாசிரியர் சங்கங்கள், தமிழாசிரியர் நிலை குறித்து அறிவிக்கும் செய்திகளும் அவவ்ப்போது தமிழ்ப்பொழிலில் வெளியிடப் பட்டன. சான்றாகப் பார்க்க: தமிழசிரியர் கழகம், நாமக்கல், ‘தமிழாசிரியர்களின் தாங்கொணாத் துயரங்கள்’, தமிழ்ப்பொழில், துணர் 22, பக்.164-166.
17. K. Nambi Arooran, op.cit., p.189.
18. க. வெள்ளைவாரணன், ‘யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளார்’, மணிவிழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், ப.41.
19. கலைச்சொல்லாக்க முயற்சிகள் பற்றிய தமிழ்ப்பொழில் கட்டுரைகளைத் துணர் 19 முதல் 25வரை பரவலாகக் காணலாம். குறிப்பாகக் காண்க: அரசு கலைச்சொல்லாக்கக் குழுவின் அறிக்கை, தமிழ்ப்பொழில், துணர் 16, பக். 248-250, 278-279, 285-287, 353-357.
20. தமிழக எல்லைச் சிக்க்ல, தமிழ் ஆட்சிமொழிச் சிக்கல், இந்தி எதிர்ப்பு, இலங்கத் தமிழர் சிக்கல் போன்ற பல சிக்கல்கள் பற்றித் தமிழ்ப்பொழிலில், பொழிற்றொண்டர் கருத்துரைகளில் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
21. சோமலெ, தமிழ் இதழ்கள், ப.63.
22. இரா. சின்னத்தம்பி, மே. நூ., ப.47.
23. ஆர். வேங்கடாசலம் பிள்ளை, ‘நமது பொழில்’, தமிழ்ப்பொழில், துணர் 1, ப.1 இக் கூற்றிலுள்ள சமயமணம் கவனிக்கத் தக்கது. பொதுவாகவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
24. இரா. சின்னத்தம்பி, மே. நூ., ப.47
25. ஆர். வேங்கடாசலம் பிள்ளை, மேல்கட்டுரை, ப.2 வேங்கடாசலம் பிள்ளையின் இந்த நடையே மிகக் கடினமான் ஒன் றாக இருப்பதைக் காண்கிறோம். இம்மாதிரி நடை எந்தப் பத்திரி கைக்கும் ஏற்றதன்று..ஒரு வேளை இம்மாதிரி நடையைத் தான் தெள்ளிய இனிய தீந்தமிழ் நடை என அக்காலத்தில் கருதினர் போலும்!
26. மேல்கட்டுரை, பக்.2-3
27, மேல்கட்டுரை, ப.3
28.இதன் பயன்பாடு கருதி, ஐதராபாத்தின் ஆங்கிலமொழி நிறுவனம், இதனை இந்தியப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கல்வி ஆய்வு மையம் இதனை இரண்டாவது இந்தியப் பதிப்பாகக் கொண்டுவந்துள்ளது. The M.L.A. Stylesheet, American Studies and Research Center, Hyderabad, 1975.
29.The M.L.A. Stylesheet, p.3
30. துணர் 4 முதல் 14 வரை தொடர்ச்சியாக எல்லா மலர்களிலும் பின்உள் அட்டைகளிலோ, அன்றி இறுதிப் பக்கங்களிலோ இவ்வறிவிப்பைக் காணலாம்.
31. தமிழ்ப்பொழில் ஆசிரியர் ச. பாலசுந்தரம் நேரில் தெரிவித்த செய்தி.
32. தனியாகவும், சேர்ந்தும் வெளிவந்த 525 மலர்களின் அமைப்புப் பட்டியலை இந்த ஆய்வேட்டின் பின்னிணைப்பில் காணலாம்.
33. துணர் 17 வரை இரண்டிரண்டு ஆசிரியர்கள் பொழிற்றொண்ட ராக இருந்துவந்தனர். பெரும்பாலும் ஒருவர் உள்ளூரிலும் ஒருவர் வெளியூரிலும் இருந்ததால் இவ்வாறு நேர்ந்தது. பதினேழாம் துணர் வெளிவரும்போது ஆசிரியராக இருந்த உமாமகேசுவரன் காலமானார். இதனால் பாதியில் ஐ. குமாரசாமிப் பிள்ளை, சங்கத் தலைவர் பொறுப்பையும், பொழிற்றொண்டர் பொறுப்பையும் ஏற்றார். துணர் 19 சமயத்தில், வேங்கடாசலம் பிள்ளையும் நலிவுற்றிருந்த காரணத்தினால் பெரியசாமிப் புலவர் உடன் பணியேற்றார். துணர் 22இன்போது அவர் சங்கத்தைவிட்டு வெளியேறியதனால், சங்கத்தலைவராக இருந்த கணபதிப் பிள்ளை, பொழிற்றொண்டர் ஆனார். இச்சமயத்திலிருந்துதான் பொழிற் றொண்டர் பதவியும் பொழிலாசிரியர் பதவியும் வெவ்வேறாயின,
34. தொடக்கத்தில் உண்மையிலேயே தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தனர். ஏறத்தாழ கணபதிப் பிள்ளை காலமுதலாக சங்கத் தலைவர்கள் அல்லது சங்க அமைச்சர்கள் பொழிற்றொண்டர்க ளாயினர், இவர்களுக்குப் போதிய தமிழறிவு இருந்ததா என்பது ஐயத்திற்குரியது. ஆனால் உண்மையில் பொழிலாசிரியர்கள் வேறு. மெய்யான பொழிலாசிரியர்களாக இயங்கியவர்கள், முதலில் க. வெள்ளைவாரணனும், பிறகு ச. பாலசுந்தரமும் ஆவர். இதனை சோமலெ குறிப்பிடுகிறார்:
“பொழிற்றொண்டர் என்ற பெயரில் சிறந்த ஆராய்ச்சியாளரும், ஞானியாரடிகளின் மாணவருமான க. வெள்ளைவாரணர் எழுதும் இலக்கியக் கட்டுரைகளையும் வேறு பலர் எழுதும் சொல்லாராய்ச் சிக் கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட்டு வருகிறது”. சோமலெ, தமிழ் இதழ்கள், ப.63
சோமலெ, வெள்ளைவாரணர் பெயரைப் பொழிற்றொண்டர் பெயராகத் தம் நூலில் குறிப்பிட்டிருப்பினும், ஒருமுறைகூட அவர்பெயர், தமிழ்ப்பொழில் இதழ் அட்டையில் இடம்பெற்றதில்லை. (மேற்கூற்றை சோமலெ எழுதிய சமயத்தில், பொழிற் றொண்டர், அரங்க. வே. சுப்பிரமணியன்.)
35. ஐம்பதாம் துணரில் அமைக்கப்பட்ட பதிப்பாசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தோர் பின்வருமாறு:
1. அரங்க. வே. சுப்பிரமணியன், அமைச்சர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
2. எஸ். நடராசன், தலைவர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
3. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை
4. வித்துவான் க. வெள்ளைவாரணன்
5. வித்துவான் பி. விருத்தாசலம், முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி
6. வித்துவான் ச. பாலசுந்தரம், துணைமுதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி
7. வித்துவான் சி. கோவிந்தராசன்
8. வித்துவான் மீனா. இராமதாசன்

திறனாய்வு