இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2

பொதுவாக இன்றைய உலகில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக காலம் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
என் சொந்த அனுபவத்திலும் இது உண்மை என்பதைக் கண்டிருக்கிறேன்.
எனது குடும்பத்திலேயே நான் கண்கூடாகக் கண்டவை இவை. என் தாத்தா மறைந்த பிறகுதான் பாட்டி மறைந்தார். என் தந்தையார் மறைந்த பிறகு என் தாயார் எட்டு ஒன்பதாண்டுகள் இருந்தார்கள். என் மாமனார் மறைந்த பிறகுதான் மாமியார் இறந்தார்.
எனக்கு இரண்டு சிற்றப்பாக்கள். முதல்வர் இறந்தபிறகு அவருடைய துணைவியார் – என் முதல் சித்தி பத்தாண்டுகள் இருந்தார்கள். அடுத்த சிற்றப்பா மறைந்து இப்போது ஒன்பதாவது ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போதும் என் இரண்டாவது சித்தி இருக்கிறார்கள்.
தாய்வழியிலும் அப்படித்தான். என் தாய்மாமன் இறந்தபிறகும் மாமி இருக்கிறார்கள். என் சித்திமார் இருவர் (தாயின் தங்கையர்). அவர்களும் தத்தம் கணவன்மார்கள் இறந்தபிறகும் இன்றும் இருக்கிறார்கள்.
ஆகவே ஆடவரைவிடப் பெண்டிர் சில ஆண்டுகள் அதிகமாக வாழ்வது பொது விதி என்றே தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபிறகு, மனைவி சராசரியாகப் பத்தாண்டுகள் உயிரோடு வாழ்வது வழக்கமாக இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம் திட்டமாக இருக்கிறது. பழைய காலங்களில் கணவரைவிட மனைவி ஏழு எட்டு ஆண்டுகள்கூட வயதில் குறைந்தவராகவே இருப்பார். மற்றொரு காரணம், அநேகமாக எல்லா மனைவிமார்களுமே தங்கள் கவலைகளைத் தங்கள் கணவர்மீது சுமத்திவிட்டுத் தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
என் மனைவியைப் பொறுத்தவரை இதுவரை என்னை நன்கு கவனித்துவருகிறார். இனிமேலும் நான் உயிருடன் இருக்கும் காலம்வரை அவர் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்து, என்னை அனுப்பிவிட்டு தக்க காலம்வரை மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
இதில் மகிழ்ச்சிதான். ஏனெனில் மனைவி இறந்தபிறகு கணவன் வாழ்ந்தால், அவனை கவனிக்க ஆள் இருக்காது. ஆனால் தந்தை இறந்த பிறகு தாய் இருந்தாலும் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்வார்கள். தாய்மைக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது. ஆனால் ஒரேவிஷயம், அந்தத் தாய் தன் மருமகளுடன் சற்றே ஒத்துப் போய்விட வேண்டும்.

தினம்-ஒரு-செய்தி