இலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு

இலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு 

(இந்தக் கட்டுரை  2009இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்த மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் அளிக்கப்பட்டது.)

இலக்கியக் கொள்கை-திறனாய்வு இவற்றின் மொழிபெயர்ப்பு என்னும் இத்தலைப்பே பலருக்கு விசித்திரமாகத் தோன்றக்கூடும். ஆனால் இதுபற்றி நிறையப் பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்கள் என்றாலே நாவலை, சிறுகதையை, கவிதையை மொழிபெயர்ப்பவர்கள்தான் நமது நினைவுக்கு வருகிறார்கள். அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அவை பற்றிய பிரச்சினைகள்தான் நிறைய விவாதிக்கப்பட்டும் இருக்கின் றன. ஏன் நமது நினைவில் பிளேட்டோவின் ‘அரசியலை’ மொழிபெயர்த்த சாமிநாத சர்மாவோ, பல மார்க்சியத்தத்துவ, திறனாய்வு நூல்களை மொழிபெயர்த்த தர்மராஜனோ, அல்லது வெல்லக்-வாரனின் இலக்கியக்கொள்கையை மொழிபெயர்த்த குளோறியா சுந்தரமதியோ தோன்றுவதில்லை? எந்தவிதத்திலும் பிற மொழிபெயர்ப்பாளர்களின் பணிக்கு இவர்களது பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்னும் பார்த்தால், எனது அனுபவத்தில் ஒரு நாவலை, கவிதையை மொழிபெயர்க்க ஆகும் நேரத்தைவிட, முயற்சியை விட அதிகமாக ஒரு திறனாய்வு அல்லது இலக்கியக் கொள்கை நூலை மொழிபெயர்க்க ஆகிறது. பேர்ல் பக்கையோ  நட்ஹாம்சனையோ அல்லது இன்னும் அண்மைக்கால ஆசிரியர்களையோ ஆங்கிலவாயிலாகத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் – அல்லது அவர்களைப் போன்றவர்களிடம் டெரிடாவையோ, லக்கானையோ மொழிபெயர்க்கக் கொடுத்துப் பாருங்கள், பிறகு தெரியும்.

நானறிந்தவரை, ஆங்கில இலக்கியம் படித்தவன் என்ற முறையில், ஆங்கில இலக்கிய மொழியை வசப்படுத்துவது எளிது. ஆனால் ஆங்கிலத் திறனாய்வு அல்லது இலக்கியக் கொள்கை மொழியை வசப்படுத்த அதற்கப்பாலும் போய் பிரமாண்ட முயற்சிசெய்யவேண்டும். சந்தேகமிருந்தால் இதனை நீங்கள் எந்த ஆங்கில ஆசிரியரிடமும் சரிபார்த் துக்கொள்ளலாம். அதனால்தான் பல ஆங்கில ஆசிரியர்களே ‘நமக்கேனடா வம்பு’ என்ற முறையில் எஃப் ஆர் லீவிஸ், ஐ ஏ ரிச்சட்ஸ் கால இலக்கியத் திறனாய்வைத் தாண்டி அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம், குறியியல் போன்ற துறைகளுக்கு வருவதேயில்லை. இன்றைய இலக்கியத் திறனாய்வு அவ்வளவு சிக்கலானது. அது தொடாத துறையோ பயன்படுத்திக்கொள்ளாத துறையோ இல்லை. திரைப்படத்துறை முதல் தத்துவம் வரை, மக்கள்-கலாச்சாரத்திலிருந்து மனோதத்துவம் வரை எந்தத் துறையையும் அது விட்டுவைக்கவில்லை. ஒரு நல்ல திறனாய்வாளனுககு எமில் டர்க்ஹீமும் தெரிந்திருக்க வேண்டும், ஃப்ராய்டும் தெரிந்திருக்கவேண்டும், டெரிடாவும் தெரிந்திருக்கவேண்டும், விட்ஜன்ஸ்டீனும் தெரிந்திருக்க வேண்டும். “தெரிந்திருக்கவேண்டும்” என்பதைவிடப் “புரிந்திருக்கவேண்டும்”. ஒரு நல்ல நாவலாசிரியராகவோ நாவல் மொழிபெயர்ப்பாளராகவோ இருப்பதற்கு இவை எதுவும் தேவையேயில்லை.

நான் சிலகாலத்திற்கு முன்னால் அறிஞர் ஒருவரை “ஏன் திறனாய்வு மொழிபெயர்ப்பைப் பற்றி எவரும் பேசுவதில்லை?” என்று கேட்டேன்.அதற்கு அவர், “அது அறிவியல் போன்றது தானே? கலைச் சொற்கள் சரிவர மொழிபெயர்க் கப்பட்டு விட்டால் போதுமே, அதற்கப்பால் என்ன இருக்கிறது?” என்றார். இப்படித்தான் பல மொழிபெயர்ப்பாளர்கள் தவறாக நினைக்கிறார்கள். கலைச்சொற்கள்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை, அதற்குப் பிறகு ஒன்றுமில்லை என்பது அவர்கள் நினைப்பு. “அப்படியானால், கலைச்சொற்கள்கூடத் தேவையில்லாத, நாவல் மொழி பெயர்ப்பை, கவிதைமொழிபெயர்ப்பைப் பற்றி ஏன் மாய்ந்து மாய்ந்து பேசுகிறீர்கள்” என்று கேட்டேன். விழித்தார்.

இங்கு திறனாய்வு மொழிபெயர்ப்புதான் பிறவகைகளை விடக் கடினமானது என்று நிலைநாட்டுவதோ ஒப்பிடுவதோ என் நோக்கமல்ல. இருந்தாலும் இதுவரை அதைப்பற்றிய போதிய அக்கறை செலுத்தப்படாததாலும், அது இன்றைக்கு மிகமுக்கியமாக, மிக அதிகமாகத் தேவைப்படுவதாலும் அதன் அருமையை உணர்த்தத்தான் மேற்கண்ட வாதம்.

மொழிபெயர்ப்பே ஒரு கலை என்பார்கள். ‘Translation is probably the most complex type of event yet produced in the evolution of cosmos’ (-Casogrande-1954) என்று காசோகிராண்ட் என்பவர் சொன்னார். மொழிபெயர்ப்பு ஒரு மிகச்சிக்கலான நிகழ்வு என்பது திறனாய்வு/கொள்கை மொழிபெயர்ப்புக்கு மிகவும் பொருந்தும். திறனாய்வு வெறும் அறிவுசார்ந்த விஷயம் மட்டுமல்ல, கலையும் கூடத்தான். உலகத்தைப் பற்றிய அனுபவத்தை முன் வைப்பது இலக்கியம் என்றால், ஒரு நூலைப் பற்றிய அனுபவத்தை முன்வைப்பது திறனாய்வு. அந்த விதத்தில் அது ஒரு கலைதான். மேலும் எப்படி ஒரு இலக்கியப் படைப்பு படிக்க ஏற்ற இலக்கியப் பண்புகளோடு அமைந்திருக்க வேண்டுமோ, அது போலவே திறனாய்வும் படிக்க ஏற்ற இலக்கியப்பண்புகளோடு அமையத்தான் வேண்டும். அப்போது தான் அது திறனாய்வு.

தமிழில் அப்படிப்பட்ட திறனாய்வு நூல்கள் அதிகம் உருவாக வில்லை என்பதால் பலபேர் திறனாய்வை இலக்கியமாக நோக்குவதே யில்லை. ஆனால் ஆங்கில இலக்கியம் படித்தவர்க்குத் தெரியும் – அவர்களது கல்வி பெரும்பாலும் அரிஸ்டாடிலின் ‘கவிதையியல்’ நூலிலிருந்தும், சர் ஃபிலிப் சிட்னியின் ‘அபாலஜி ஃபார் பொயட்ரி’ என்ற படைப்பிலிருந்தும் தான் தொடங்கும். அதற்கு முந்திய படைப்புகள்(சாஸர், செனேகா போன்றோர் எழுதிய நூல்கள் உட்பட) மத்தியகால ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டு விடுகின்றன. நாம் தமிழில் எப்படி தொல்காப்பியம் தான் முதலில் கிடைக்கிறது, அது இலக்கண நூல் என்று பெருமையடித்துக் கொள்கிறோமோ அதுபோல ஆங்கிலேயரும் நவீன ஆங்கிலத்தின் தொடக்கம் ஓர் இலக்கியக் கொள்கை நூலில் என்று பெருமை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கொள்கை நூல்களும், ஜான் டிரைடன் காலந்தொடங்கி முறையான திறனாய்வு நூல்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தின் செம்பாதியாகத் திறனாய்வு /கொள்கை நூல்களும் அமைகின்றன என்பதைக் கற்றோர் அறிவார்கள். அதனால் அங்கு (புகழ் பெற்ற டேவிட்லாட்ஜின் திறனாய்வுத் தொகுப்புகள் போல) ஏராளமான திறனாய்வு / கொள்கைத் தொகுப்புநூல்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றை யெல்லாம் தொடாமல் எந்த ஒரு ஆங்கில மாணவனும் முதுகலைகூட படித்துவிடமுடியாது. தமிழில்தான் இலக்கியத் திறனாய்வு/கொள்கை பற்றி எதுவும் அறியாமலே இலக்கிய அறிஞனாக வந்துவிடமுடியும். ஏன் ஆங்கிலத்திலிருந்தாவது கொள்கை / திறனாய்வு நூல்களை மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்பதற்கு இந்தக் காரணமே போதுமானது. இன்னும் பல காரணங்கள் உண்டு.

நாம் ஆங்கிலக் காலனி அடிமைகள். இன்றும் கூடத்தான். நமக்கு என்றொரு திறனாய்வுப் பாரம்பரியம் இல்லை. சமஸ்கிருதப் பாரம்பரியத்தையும் நாம் ஸ்வீகரிக்கவில்லை. இன்னொன்று, சமஸ்கிருதப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானாலும் அதற்கு நமக்கு ஆங்கிலம்தான் தேவைப்படுகிறது. எப்படியிருப்பினும் கொள்கைகளுக்கோ திறனாய்வுக்கோ போகவேண்டுமானால் நாம் அயல்மொழிக்குச் செல்லவேண்டிய தேவையிருக்கிறது. எனவே ஆங்கிலவழித் திறனாய்வு நமக்குத் தேவைப்படுகிறது. மேலும், அ.ச.ஞானசம்பந்தன், மு.வ., தெ.பொ.மீ தொடங்கித் தமிழ்ப்பேராசிரியர்கள் அந்த முறைக்கு நம்மைப் பழக்கப்படுத்திவிட்டார்கள். நாம் முழுமையாகக் கற்றோமா என்பது வேறுவிஷயம்.

இலக்கியக் கொள்கை மொழிபெயர்ப்பு நமக்குப் புதியதும் அல்ல. தொல்காப்பியரே ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலைக்கற்றவர் என்று பாயிரம் சொல்கிறது. அறிஞர் பி.எஸ்.எஸ்.சாஸ்திரியார், தொல்காப்பியர் வேதசங்கிதைகளின் உரைகளையும் யாஸ்கரது நிருக்தத்தையும் ஊன்றிப்படித்தவர் என்பதை நிலைநாட்டியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, சமஸ்கிருதத்திலிருந்து இலக்கியக் கொள்கைகள் -த்வனி, அலங்காரம், ரஸம், ஒளசித்யம், ரீதி போன்ற பலதுறைகள் சம்பந்தப்பட்டவை – ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை? இதற்கு அக்காலத்தில்நிலவிய சமஸ்கிருத ஆதிக்கம்தான் காரணம் என்பது என் கருத்து.

ஒரு காலனியாதிக்கம் இன்று என்ன செய்கிறதோ அதையே அன் றைய சமஸ்கிருத ஆதிக்கமும் செய்திருக்கிறது. தன் அடிமை நாட்டிலிருந்து விலை மதிப்புயர்ந்த பொருட்களைச் சொந்தநாட்டிற்குக் கொண்டுபோய், அதை விற்பனைச் சரக்காக்கியபின், திருப்பி விற்பதும், மதிப்பற்ற சரக்குகளை அடிமைநாட்டில் உள்ளவர்கள் தலையில்கட்டுவதும் எப்போதுமே ஆதிக்கக்காரர்கள் செய்பவைதான். அதை அன்றைக்கிருந்த சமஸ்கிருதக்காரர்களும் செய்திருக்கிறார்கள்.இங்கிருந்து சிறந்த கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தாங்கள் மொழிபெயர்த்துக்கொண்டு (சான் றாக, பரதரும் கௌடில்யரும் தென்னாட்டினர், தமிழ்நாட்டினர்; மேலும் பழங்காலத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம் போன்றஇடங்கள் சமஸ்கிருதக் கல்விக்கும் மொழிபெயர்ப்புக்கும் பெயர்பெற்றிருந்தன) உதவாத அணியலங்காரக் கொள்கைகள் (கொள்கைகள் கூட அல்ல, வெறும் பட்டியல்கள்) மட்டும் தமிழில் வருமாறு செய்துவிட்டார்கள். மேலும் இன்று எப்படி இந்தியப் படைப்பாளிகள் பலர் ஆங்கி
லத்தில் மட்டுமே எழுதுகிறார்களோ, அதுபோல அன்றைக்கு எந்தமொழிப் படைப்பாளிகளும் சமஸ்கிருதத்தில் எழுதுவதே மரபாக இருந்தது. (இவற்றிற்கெல்லாம், தமிழும்கூட பாகதத்திரிபு அல்லது சமஸ்கிருதத்திரிபு என்று கருதப்பட்டதும் ஒரு முதன்மையான காரணம்.)

இது மேலும் ஆராயப்படவேண்டிய ஒரு கோட்பாடு. தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கும்,சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும் என்னென்ன நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்ற முழுமையான விவரம் கிடைத்தால் இதைத் தயக்கமின்றி நிலைநாட்டலாம். ஆனால் பின்னது வேண்டுமானால் கிடைக்குமே தவிர முன்னது கிடைக்க வழியில்லை. அவர்களுடைய மொழிபெயர்ப்பு நேர்மை அத்த கையது. ஆனாலும் இன்றைக்கு சமஸ்கிருத இலக்கியக் கொள்கைகளைக் கற்பது நமக்கு இன்றியமையாத் தேவை.

ஒருவகையில் முன்பு சொன்னதுபோல இலக்கியக்கொள்கை/திறனாய்வு மொழிபெயர்ப்பும் அறிவியல் மொழிபெயர்ப்பை ஒத்ததே. இரண்டிலுமே கலைச்சொல் உருவாக்கம் முக்கியம். சரியான நிகரன்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அந்நிகரன்கள் நிலைப்படுத்தப்படுவது முக்கியம். அவை பின்னால் கையாளப்படுவது முக்கியம். ஆனால் திறனாய்வு மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பொறுப் பினை உணர்வதில்லை. அவர்கள் கலைஞர்களாகவும் இருப்பதால், தங்கள் முனைப்பை(ஈகோவை) யே முதன்மையாக நினைக்கிறார்கள். எனவே ஆளுக்கொரு மொழிபெயர்ப்புக்கலைச்சொல் உருவாக் குகிறார்கள். இந்நிலை பல குழப்பங்களுக்கு இடமளிப்பதோடு, இலக்கியத்துறைகளில் அவ்வாறுமொழி பெயர்க்கப்பட்ட துறைகள் பாடமாக வருவதற்கும் குந்தகமாகி விடுகின்றன.

அதேபோல ஆங்கிலத்தில் காணப்படும் மேற்கத்திய இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வு முறைகளும் ந்மக்கு இன்றியமையாத் தேவை. விமரிசன மனப்பான்மை இல்லாத, எல்லாவற்றையும் பாராட்டுகின்ற ஒரு சமுதாயம் அழிந்துபோய்விடும்.

உடனே “தமிழில் பழங்காலத்தில் திறனாய்வு இல்லையா, உரையாசிரியர்கள் திறனாய்வாளர்கள் இல்லையா” என்றெல்லாம் கேள்விஎழும். பழைய உரைகாரர்களை நான் விமரிசகர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் உரைகோள் (hermeneutics)இல் மட்டும் கவனம் செலுத்தியவர்கள் என்பதும் ஒருகாரணம்.(எனது கொள்கைப்படி உரைகோள் வேறு, திறனாய்வு வேறு) அவர்கள் மூலநூலாசிரியரிடம் எந்தக் காரணத்தைக்கொண்டும் குறைகாண்பதில்லை. இதனால்தான் மொழியியல் நோக்கில் அபத்தமான கருத்துகளைக்கூறும் நன்னூலுக்குக்கூட நான்கு உரைகள் இருக்கின்றன. உரைகாரர்கள் தமக்குள் “நீ செய்த உரை தவறு, நீ பொருள்கொண்டமுறை தவறு” என்று சாடிக்கொள்வார்களே தவிர, மூலநூலாசிரியனுக்கு இழுக்கு ஏற்பட ஒருகாலும் விடுவதில்லை. இது அப்பட்டமான தலைமை வழிபாடே அன்றி வேறல்ல.எனவே திறனாய்வு மனப்பான்மையும் அல்ல.

இதுமட்டுமல்ல, சங்கப்பலகை விரிந்து இடம் கொடுப்பதும், இலக்கியப்பகுதியை மூங்கைகேட்டுக் கண்ணீர் துளிர்ப்பதும் விமரிசனங்கள் ஆகுமா? இதுதான் திறனாய்வு என்று இப்போதும் நமது வணிகச்சினிமாக்காரர்கள் மட்டுமே நம்புகின்றனர். அவர்களுக்குக் கைதட்டினால், சூடம் கொளுத்தி னால், அலங்கார வளைவுகள் வைத்துவிட்டால் போதும். ஆனால் திறனாய்வு என்பது வேறு. தவ றான கருத்தைச் சொன்னாலும் கூட அதற்கு தர்க்கரீதியான ஆயிரம் காரணம் முன்வைக்கவேண்டும். எனவே தமிழர்களாகிய நமக்குத் திறனாய்வு மனப்பான்மையும் இல்லை, திறனாய்வு நூல்களும் இல் லை. ஆகவேதான் மொழிபெயர்ப்பாவது தேவைப்படுகிறது. இந்த ஜனநாயகக் காலத்தில் திறனாய்வு மனப்பான்மையற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தலைவர்க ளையும் அதிகாரிகளையும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களையும் கண்டவர்களையெல்லாம் வழிபடும் மனப்பான்மைதான் நம்நாட்டை இன்னும் அடிமைநாடாகவே வைத்திருக்கிறது.

தொல்காப்பியம்கூடத் துல்லியமான கலைச்சொல்லாக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமிழ்க் கொள்கைகளான திணைக்கோட்பாடு, கூற்றுமுறைகள் போன்றவற்றையெல்லாம் அமைப்பியமுறையில் செய்திருக்கும் அவர், சமஸ்கிருதத்தோடு ஒப்புநோக்கக்கூடிய மெய்ப்பாட்டியல் வரும்போதுகோட்டை விட்டுவிடுகிறார். மெய்ப்பாடு என்ற சொல் ரஸத்தைக் குறிக்கிறதா, பாவத்தைக் குறிக்கிறதா? பாவம் என்பது இலக்கியத்தில் அல்லது நாடக நடிகனிடம் அல்லது நடனமங்கையிடம் காணப்படுவது. ரஸம் என்பது வாசகராகிய நமக்கு ஏற்படும் விளைவு. ஒரு விதூஷகன் அழுகிறான் என்பது அவனிடம் காணப்படும் வியபிசாரிபாவம். நாம் அதைக்கண்டு சிரிப்பது நமக்குள்தோன்றும் ஹாஸ்ய ரஸவெளிப் பாடு. தொல்காப்பியம் இவ்விரு சொற்களையும் ஒன்றாக்கிக் குழப்ப, உரையாசிரியர்கள் தமக்குத் தோன்றியவாறு அதற்குப் பொருள் எழுத, படிக்கும் மாணவர்களுக்கு எப்போதுமே குழப்பம்தான்.

தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல் என்று பாரதியார் சொல்வார்.அது கவிதைக்கு மட்டுமன்று, மொழிபெயர்ப்புக்கு-குறிப்பாக இலக்கியக் கொள்கை மொழிபெயர்ப்புக்கு எவ்வளவு பொருந்தும் என்பதை உணர்ந்துபார்த்தால் புரியும்.

தெளிவற்ற மொழிபெயர்ப்புகளாக இருந்தாலும்கூட திறனாய்வுத்துறையில் நல்லதுதான். சமூகக்கொள்கை, திறனாய்வுக்கொள்கை நூல்களை எப்படி மொழிபெயர்க்கக்கூடாது என்பதற்குப்பழைய கால என்சிபிஎச் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்த நூற்றுக்கணக்கான (மாஸ்கோவி லிருந்து ரஷ்ய நூல்களாக வந்து மொழிபெயர்க்கப்பட்ட) நூல்கள் உதாரணம். அவை படிப்போரை ஈர்ப்பதைவிடப் புறந்தள்ளுவதையே அதிகமாகச்செய்துள்ளன என்று பலர்கூறக் கேட்டிருக்கிறேன். ஆயினும் ஒன்றுமே யில்லாததற்கு ஏதோ ஒன்று மேல் என்ற அளவில் அவற்றை நோக்கவேண்டும். தமிழவனின் ஸ்ட்ரக் சுரலிசம் எனக்கு அறவே புரியாமற்போனதினால்தான் நான் அமைப்பியம் பற்றிய நூல்களைப் படிக் கவே ஆரம்பித்தேன். அதற்குமுன் அமெரிக்கப் புதுத்திறனாய்வு வரை எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆனால் தமிழவனின் நூல்தான் அமைப்புமையவாதமும் பின்னமைப்புவாதமும் நூல் எழுத எனக்கு உத்வேகம் அளித்தது. அதற்குப் பிறகு செய்தித்தொடர்பியல் கொள்கைகள் என்றநூல் எழுதினேன். அதில் பாதிக்குமேல் குறியியல் (semiotics)பற்றிய நோக்குதான். மூன்றாண்டுகளுக்குமுன் நவீனமொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் எழுதினேன். இம்மூன்று நூல்களிலும் நேரடியாகவோ மறை முகமாகவோ கொள்கை/திறனாய்வு மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது. முக்கியமாக அமைப்புமையவாதம் நூலை எழுதியபோது மிகுதியான சொற்களுக்கு நானே சொல்லாக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உதாரணமாக deconstruction என்ற சொல்லை நான் அதில் தகர்ப்பமைப்பு என மொழி பெயர்த்தேன். ஏனெனில் de- என்ற முன்னொட்டுக்கு எதிர்மறையான பொருளன்றி, உடன்பாடாக, இன்னும் மிகுதியாக்கல் என்னும்பொருளும் உண்டு. பின்வந்தோர் அதைக் கட்டவிழ்ப்பு, கட்டுடைப்பு என்றெல்லாம் மொழியாக்கம் செய்தார்கள். (மேற்கண்ட தொடரில்கூட நான் Ôஉடன்பாடாகÕ என்று எழுதியிருப்பதை அவர்கள் ‘நேர்மறையாக’ என்று எழுதுவார்கள். தமிழ்மரபு என்பது மிகவும் அவசியம்-மொழிபெயர்ப்பாளர்களுக்கு).அவற்றில் ஒரு அர்த்தம் மட்டும் இடம்பெறும் குற்றம் இருப்பதன்றி, ஏதோ கட்டியதை உடைத்து அல்லது அவிழ்த்துவிடுதல்தான் Deconstruction என்பது போன்ற தவ றான அர்த்தமும் இடம்பெறுகிறது. அண்மையில் நாரங் என்பவரின் அமைப்பியம், பின்னமைப்பியம் பற்றிய ஹிந்திநூலைத் தமிழில் மொழிபெயர்த்த எச்.பாலசுப்பிரமணியன் எனது மொழியாக்கங்களைப் பெரும்பாலும் (தகர்ப்பமைப்பு என்பது உட்பட) பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிறைவு தந்தாலும் வேறு கவலைகள் இருக்கின்றன.
பொதுவாக மொழிபெயர்ப்பைப் பற்றி One translates a culture என்பார்கள். அதாவது நாம் மொழியை மொழிபெயர்க்கவில்லை, கலாச்சாரத்தை மொழிபெயர்க்கிறோம். இக்கூற்று பெருமளவு அறிவியல்-கலைச்சொல்லாக்க மொழிபெயர்ப்புக்குப் பொருந்தாது. ஆனால் இலக்கியத்திறனாய்வு /கொள்கை மொழிபெயர்ப்புக்கும் இது பொருந்துவதே.
கொள்கை மொழிபெயர்ப்பில் அவரவர் தன்முனைப்பு இருக்கும் அளவுக்கு தர்க்கம் இல்லை. இதுதான் முதற்கவலை. There should be more sense and less syntax என்பார் எஸ்ரா பவுண்டு.இலக்கியக்கொள்கை மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான முதல் தகுதி இதுதான். இன்றைய மொழி
பெயர்ப்புகளைப் பார்க்கும்போதோ full of sound and fury, signifying nothing என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
பொதுவாக, இலக்கியக் கொள்கை, திறனாய்வு சம்பந்தப்பட்ட சிலகலைச்சொற்களை அப்படி யே எழுத்துப்பெயர்ப்பும் செய்துவிடலாம். சில சொற்களை- உதாரணமாக, ரொமாண்டிசிஸம் என்ற சொல்லை- மொழிபெயர்ப்பதைவிட எழுத்துப்பெயர்ப்பு செய்வதே நல்லது. மொழிபெயர்க்கும்போது பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
1. முற்காலச் சொற்களைத் தக்கவாறு பயன்படுத்தல்
(உதாரணமாக, personification என்ற சொல்லை நானும்கூட மனிதப்படுத்தல், மானிடப்படுத்தல் என்ற
வகையிலேயே மொழிபெயர்த்துக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால் இப்படிச்செய்யத் தேவை
யில்லை. திணையுருவகம் என்ற சொல் முன்பே தமிழில் உள்ளது. இதனை தெ.பொ.மீ போன்றோர் கையாண்டிருக்கிறார்கள். திணையுருவகம் என்றால் என்ன? அஃறிணையை உயர்திணையாக்கலும் (மிகச்சில சமயங்களில்)உயர்திணையை அஃறிணையாக்கலும்தான். அதைத்தான் இப்போது இன்றைய பாணியில் மனிதப்படுத்தல் என்கிறோம். ஆனாலும், இன்றைய நவீன வெளிப்பாட்டு முறை கருதி இதனைப் பயன்படுத்த நேர்ந்துள்ளது.)
2. பழங்காலச் சொற்களை சற்றே மாறுபட்ட விதத்தில் வழங்குதல்.
3. இப்போதுள்ள வார்த்தைகளைப் புதிய அர்த்தங்களில் வழங்குதல்.
4. புதிய சொற்களை உருவாக்கல்.
5. இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்துப் புதுச்சொல் உருவாக்கல்.
6. கடன்வாங்கல்.
இவற்றுள் எந்த முறையையும் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஒழுங்கு தேவை. சான்றாக, அறிவியலாக, தர்க்கரீதியான முறையில் நிரூபிக்கப்படத்தக்கதான துறையைக் குறிப்பதாக இருந்தால் – அதாவது ஆங்கிலத்தில் -logy, -ics போன்ற ஒட்டுகளில் முடியும்சொல்லாக இருந்தால், தமிழில் ‘இயல்’ என மொழிபெயர்க்கலாம். அதாவது biologyஐ உயிரியல் என்றும் physicsஐ இயல்பியல் என்றும்மொழிபெயர்ப்பதில் தவறில்லை.ஆனால் -ism எனப்படும் வாதக்கருத்துகளை எப்போதும் ‘-இயம்’ என்றுதான் மொழிபெயர்க்கவேண்டும். அந்தவகையில் நாம் காந்தியம், தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், தேசியம் என்றெல்லாம் சொல்பவை சரி. ஆனால் ஸ்ட்ரக்சுர லிசத்தை அமைப்பியல் என்பது தவறு. அமைப்பியம், பின்னமைப்பியம், நவீனவாதம்,பின்நவீனவாதம் என்பன போலத்தான் மொழிபெயர்க்கவேண்டும். முன்பு கூறிய அறிவியல்களுக்கும் இவைகளுக்கும் பெருத்தவேறுபாடு உண்டு.

ரொமாண்டிசிஸம் என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் எனக்குக் கிடைக்கவில்லை.அதனால் தக்கசொல் கிடைக்கும் வரை ரொமாண்டியம் என்றே பயன்படுத்தலாம். இது எழுத்துப்பெயர்ப்பு. ஆனால் ‘புனைவியல்’ என்றால் அது என்ன இயல், புனைகின்ற இயல்? இம்மாதிரி பொருளற்ற சொல்லாக்கங்கள்தான் இன்றைய திறனாய்வுலகில் பெரும்பாலும் வழங்குகின்றன. திறனாய்வுக் கலைச் சொற்களுக்குத் துல்லியம் தேவை அப்போதுதான் தொடர்ந்து கருத்துகள் வளர முடியும். காட்டை அழிப்பவன் தனது சந்ததிகளை நினைத்துப்பார்க்காதது போல, இம்மாதிரி மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் சொல்மேல் கொண்ட ஆர்வத்தினால் பின்வரப்போகும் வளர்ச்சியில் அக்கறை கொள்வதில்லை. பின்நவீனத்துவம் என்ற சொல் வழக்குக்கு வந்த பின்னரும் ஒருசிலர் பின்னை நவீனத்துவம் எனப் பெயர்க்கிறார்கள். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்றபோது ஒருவர் ‘பின்’, ‘முன்’ என்பனவெல்லாம் பெயர்ச்சொற்களுக்கு ஒட்டுகளாக வராது” என்று கூறினார். ஆனால் அவரே, பிற்பகுதி,பின்ன ழகு, பின்மண்டை என்றெல்லாம் பெயர்ச்சொற்களோடு சேர்த்து எழுதக்கூடியவர்தான். ஆக, நாம் ஆக்கிய சொல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற முனைப்பு தவிர வேறு எதுவும் இதில் இல்லை.

மிக ஆதாரமான கலைச்சொற்கள்கூடத் திறனாய்வுத்துறையில் நமக்கு இல்லை. இதற்கு உதாரணமாகத்தான் ரொமாண்டிசிஸம்  என்ற சொல் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் சிலசமயங்களில் அழகான மொழிபெயர்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது, அதுவே ஆபத்தாகவும் மாறிவிடுகிறது.உதார ணமாக நனவோடை என்றசொல். Stream of consciousness என்பதற்கு இதைவிடச் சிறந்த மொழி பெயர்ப்பு இருக்கமுடியாது. இதை முதலில் செய்தவர்கள் மிகுபாராட்டுக்குரியவர்கள்.ஆனால் இதுவே ஆபத்தாகவும் மாறிவிட்டது. ஏனென்றால், நனவோடை(நனவு என்பது உணர்வோடிருத்தல், பிரக்ஞை பூர்வ நிலை) என்பதைப் பலர் ‘நினைவின்'(சிந்தனையின்) ‘ஓடை'(ஓட்டம்) என்று பொருள் கொண்டு தமிழ் நாவல்களில் எங்கெங்கெல்லாம் நினைவுகள் சுழல்வதாக அல்லது ஓடுவதாக இவர்களுக்குத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் நனவோடை நாவல்கள் என்று ஆக்கிவிட்டார்கள். அதாவது தங்களுக்குத் தோன்றுகின்ற அர்த்தத்தை ஒரு புதிய கலைச்சொல்லுக்கு அளித்துவிடுதல் அல்லது எடுத்துக்கொண்டுவிடுதல். இது பெரிய ஆபத்தாகும்.

ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இரண்டு மூன்று தமிழ்க் கலைச்சொற்கள் சர்வசாதாரணம்.
Feminism என்ற சொல்லை நல்ல தமிழில் பெண்ணியம் எனக்கையாளத் தொடங்கியபின்னரும் பெண் நிலைவாதம் என்பவர்கள் இருக்கிறார்கள். ரொமாண்டிசிஸத்திற்கு புனைவியல், அதீத கற்பனா வாதம் என்று பல மொழியாக்கங்கள். அப்புறம் எல்லாவற்றுக்கும் ‘இயல்’ வேறு.
திறனாய்வு மனப்பான்மை எல்லாருக்கும் அவசியம். எனவே அதைக் கற்றுத்தரும் திறனாய்வுத் துறையை ஆங்கிலத்தில் வைத்திருந்து என்ன பயன்? ஜனநாயகப்படுத்தவேண்டுமானால்,அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், அது தமிழில் இருககவேண்டும். அதனால் பிறஎல்லாத் துறைகளையும் விட திறனாய்வுத் துறை மொழிபெயர்ப்புகள் இன்றைக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. திறனாய்வுத் துறையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இல்லாதிருந்தால், சமூகவியல், உளப்பகுப் பாய்வு, மேற்கத்திய தத்துவம் போன்ற பலதுறைகளைப் பலர் படித்திருக்க்வேமாட்டார்கள். திறனாய்வு அந்த அளவுக்கு ஒருவருடைய வாழ்க்கையை மாற்றவல்லது. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபிறகு திறனாய்வின் அவசியம் கூடியிருக்கிறது. ஏனெனில் திறனாய்வின்றி இலக்கிய வளர்ச்சியில்லை. இலக்கிய வளர்ச்சி மிகுந்த காலங்களில் திறனாய்வு இலக்கியப்பயிருக்குப் பசுமை உரமாகவும், இலக்கிய வளர்ச்சி தேங்கியிருக்கும் காலங்களில் அதுவே தனிப்பயிராகவும் ஆகக்கூடியது என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

திறனாய்வு நூலையும் இலக்கிய வளத்தோடு எழுதமுடியும். உதாரணமாக எம். எச். ஆப்ராம் எழுதிய முக்கியமான ஒரு நூலின் பெயர் The Mirror and the Lamp என்பது. தான் அந்நூல் முழு
வதும் என்ன கருத்துகளை உணர்த்தவருகின்றாரோ அவற்றை ஒட்டி உருவகமாக இத்தலைப்பைத் தந்திருக்கிறார். எழுத்தாளனின் மனம் ஒரு கண்ணாடிபோன்று, பிரதிபலிப்பதாக அமைந்திருக்கவேண்
டுமா, அல்லது விளக்கு போன்று தானே ஒளிதருவதாக அமைந்திருக்கவேண்டுமா என்பது ஆதார
மான வினா. கண்ணாடி போல இருக்கவேண்டும் என்பது பிரதிபலிப்புக்கொள்கை, போலிசெய்தல் கொள்கை. பழங்காலத்திலிருந்தே செவ்வியம்Classicism இதைத்தான் வலியுறுத்துகிறது. நடப்பியத்திலும்Realism இதுவே ஆதாரமான கொள்கை. ரொமாண்டியத்தில் எழுத்தாளன் ஒளிதரும் விளக்கு போன்றவன். Ôஉள்ளத்தில் உண்மையளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்Õ.
உலகின் பல சிறந்த எழுத்தாளர்கள் திறனாய்வாளர்களும், இலக்கிய இயக்கங்களுக்குத் தலை மை தாங்கியவர்களும் கூட. இலக்கியத்துக்கு என்று நோபல்பரிசு பெற்றோரிலும்கூட எத்தனை எத்த னையோபேர் திறனாய்வாளர்களும் இருக்கிறார்கள். பால்ஹெய்சி(1910), மாரிஸ்மேட்டர்லிங்க்(1911), ரவீந்திரநாத் தாகூர்(1913), அனடோல் ஃப்ரான்ஸ்(1921), பெர்னாட்ஷா(1925), ஹென்றி பெர்க்சன் (1927), சிங்க்ளேர் லு£யிஸ் (1930),டி.எஸ். எலியட்(1948), ஆல்பர்ட் காம்யூ (1957), சால்வடோர் குவாஸிமோடோ(1959), ழான்பால் சார்த்ரு(1964), செஸ்லா மிலோஸ்(1980), வோல சோயிங்கா (1986), எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் நாவல் அல்லது கவிதைத் துறையில் மட்டுமல்ல இலக்கியத்திறனாய்வுத் துறையிலும் சாதனை புரிந்தவர்கள்தான்.
எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்கள் திறனாய்வுத்துறைக்குத் தேவை.
முறையான மொழிபெயர்ப்புகள் திறனாய்வுத்துறையில் குறைவு. அதாவது நாவல்-கவிதை போன்ற
துறைகளில்செய்வதைப்போல ஒருவரது படைப்பினை அப்படியே மொழிபெயர்த்துத் தருவது குறைவு.
உதாரணத்திற்குப் பலபேர் டி.எஸ்.எலியட்டின் கொள்கைகளை அறிந்திருப்பார்கள். ஆங்காங்கு மேற்
கோள் காட்டுவார்கள். தங்கள் பாணியில் முக்கியமான அவரது கருத்துகளை எடுத்துரைப்பார்கள். ஆனால் அவரது The Function of Criticism, Tradition and Individual Talent போன்ற ஏதாவது ஒரு கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்திருந்தால் அது எதிர்காலத்திற்குப் பாடமாக வைக்கப்படுவதற்கும், அசலாக எலியட்டின் கருத்துகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கும் உதவும். அப்படித் தமிழில் நன்முயற்சிகள் வரவில்லை என்பது வருந்தத்தக்கது. மலையாளத்தில் அநேகமாக எல்லா
முக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்படும் நிலை இருக்கிறது.
அதேபோல, இலக்கியச் சொல்லகராதி ஒன்றும் தமிழுக்குத் தேவை. பிரின்ஸ்டன் என்சைக் ளோபீடியா ஆஃப் பொயடிக்ஸ் போன்ற ஒன்று. எம்.எச்.அப்ராம்ஸ் தொகுத்த இலக்கியச் சொல்லக
ராதியும் பார்வைநூலாகப் பெருவழக்குடையது. இம்மாதிரி நூல்கள் தமிழில் வெளிவந்தால் இலக்கி
யத் திறனாய்வு நன்கு வளர்ச்சிபெறும். விமரிசன வளர்சசியின்றி இலக்கியவளர்ச்சி, மொழிவளர்ச்சி மட்டுமல்ல- எந்த வளர்ச்சியுமே கிடையாது. விமரிசன நோக்கு இருந்திருப்பின் தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் உட்பட நிறைய மாற்றங்கள் எளிதாக நடந்திருக்கும். நேற்றைய மரபைக் காப்பாற்றவேண் டும் என்பதைவிட, நாளைய பயன்பாடுதான் முக்கியமானது.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திறனாய்வு