ஒரு அயல்நாட்டுக்கதை

இது ஒரு அயல்நாட்டுக்கதை.
ஒரு பையன் ஒரு கடைக்குச் சென்றான். அங்கு தொலைபேசி வசதி இருந்தது. தொலைபேசியின் சில எண்களைத் தட்டிப் பேச ஆரம்பித்தான். பேசுபவன் சிறு பையன் ஆனதால் கடைக்காரர் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கலானார்.
பையன்: அம்மா, உங்கள் தோட்டத்தில் புல்லை வெட்டி சீர்ப்படுத்தும் வேலையை எனக்குத் தருகிறீர்களா?
பெண் (அடுத்த முனையிலிருந்து): தம்பி, என்னிடம் அதற்கு ஆள் இருக்கிறது.
பையன்: அம்மா, இப்போது நீங்கள் அந்த ஆளுக்குத் தரும் கூலியைவிடக் குறைத்துக் கொடுங்கள். பாதி கொடுத்தாலும் போதும்.
பெண்: இப்போது வேலை செய்யும் பையனே நன்றாகச் செய்கிறான்.
பையன்: (விடாமுயற்சியோடு) உங்கள் தோட்டத்தின் நடைபாதை, பக்கத்திலுள்ள இடங்கள் எல்லாவற்றையும் நான் சுத்தம் செய்வேன் அம்மா. மற்றவீடுகளைவிட உங்கள் வீடு பார்க்க சுத்தமாக அழகாக இருக்கும்.
பெண்: இல்லைப்பா, வேண்டாம்.
பையன் தொலைபேசி ரிசீவரை வைத்தான். கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக வந்தான். அவர் சொன்னார்: தம்பி, உன் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நான் வேண்டுமானால் உனக்கு வேலை தருகிறேன்.
பையன்: வேண்டாம் சார்.
கடைக்காரர்: ஆனால் வேலை வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தாயே.
பையன்: இல்லை சார், என் வேலை எப்படி இருக்கிறது என்று செக் பண்ணிப் பார்த்தேன். நான் பேசிக்கொண்டிருந்தேனே, அந்தப் பெண்மணிக்குத் தோட்டவேலை செய்யும் பையன் நான்தான்.

தினம்-ஒரு-செய்தி