கனவு கண்டால் போதுமா?

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த டாக்டர் அப்துல் கலாம் நேற்று காலமாகிவிட்டார். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் அவர் இருந்தபோது இரண்டாம் முறையும் அநேகமாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக அவ்வாறு அவர் தேர்வுசெய்யப்படவில்லை.
மிகச் சிறந்த பண்புகள் வாய்ந்த, தம் வாழ்க்கையைச் சமூகத்திற்கே அர்ப்பணித்த பொதுநலத்தொண்டர் அவர். திருமணமும் செய்துகொள்ளாதவர். தமிழகத்தில் பொதுத்தொண்டில் ஈடுபடுவோர் கடைசிக் காலத்தில் அதை வெறுத்துத் தமிழ்நூல்களிலோ, அறிவுரைகளிலோ இறங்கிவிடுவது வழக்கம். அதுபோலத்தான் கலாமும் தம் இறுதிக்காலத்தில் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அறிவுரை புகட்டுவதில் ஈடுபட்டுக் “கனவு காணுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
கனவு காணுதல் தவறல்ல, ஆனால் அது ஒரு பாதிதான். மற்றொரு பாதி நமது சூழல் எப்படி அதற்குக் கைகொடுக்கிறது என்பதில் இருக்கிறது. இதை அறியாதவரா கலாம்? ஆனால் அறிவுஜீவிகள் பலரும்கூட, சூழலின் பாதிப்பினை உணர்வதில்லை, மறுக்கவே செய்கிறார்கள். கனவு கண்டால் நிறைவேறி விடும் என்று சொல்வதற்கு அவருடைய தனிப்பட்ட சிந்தனையோ, சமூகவியல் பார்வையின்மையோ வாழ்க்கை அனுபவங்களோ எதுவும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இது போன்றவற்றைச் சொல்வதற்குத்தான் “365 நாளில் வெற்றி பெறுவது எப்படி?” போன்ற அமெரிக்கத் தனமான நூல்கள் இருக்கின்றனவே?

தினம்-ஒரு-செய்தி