கற்க கசடற

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக
என்பது வள்ளுவர் அறிவுரை. மிக ஆழமான பொருள் இக்குறளில் அடங்கியிருக் கிறது. கற்க/ கசடறக் கற்க/ கற்பவை கற்க/ கற்றபின் அதற்குத் தக நிற்க என இதைக் கொண்டு கூட்டவேண்டும்.

கற்பது ஆரம்பநிலை. எனவே யாராக இருப்பினும் அவர்கள் கற்பதைத் தூண்டவேண்டும். ஆகவே “கற்க” என்றார்.
அடுத்தநிலை, பிழையின்றிக் கற்பது. பிழையோடு கற்றால் பயனில்லை. எந்தத் துறையாயினும் (கணிதம், அறிவியல், சமூகம், இலக்கியம்…) நாம் முன்னோர் எழுதியவற்றைத்தான் முதலில் கற்கிறோம். பிறகுதான் நம் சிந்தனை வருகிறது. எனவே கற்பனவற்றைப் பிழையறக் கற்க வேண்டும். கசடு என்பது பிழை என்பதை மட்டும் குறிப்பதல்ல, இன்னும் ஆழமான பொருளுடையது. “கசடறக் கற்க”.

அடுத்த நிலை “கற்பவை கற்க”. உலகில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் ஒருவன் கற்பது இயலாது. எழுதப்பட்ட அனைத்தும் கற்கத் தகுதி உள்ளனவும் அல்ல. எனவே கற்க வேண்டியநூ ல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்.

கடைசியாகக், கற்கவேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றபின், அதற்கு ஏற்ப நடக்கவேண்டும். இல்லாவிட்டால் வெறும் ஏட்டுப்படிப்புதான். அதனால் தனக்கும் பயனிலை, உலகிற்கும் பயனில்லை.

பாரதியார் கூறியபடி, திருக்குறள் உலகினுக்கு அளிக்கப் பெற்ற செல்வமாக இருக்கட்டும். தமிழர்கள் அதை ஒருபோதும் மறக்கலாகாது.

தினம்-ஒரு-செய்தி