கலைச்சொற்கள்

தமிழில் கலைச்சொற்கள் ஆக்கம் ஒருகாலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளின் தொடக்கம் அந்தக்காலம் என்று சொல்லலாம். தமிழ்வழிக் கல்வியைக் கல்லூரிகளில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் முனைப்பாக இருந்த காலம் அது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களும், கோவையில் ஜி. ஆர். தாமோதரன் போன்ற ஆர்வம் கொண்ட தனி அறிஞர்களும் முயன்று கலைச்சொற்களை எல்லாத் துறைகளிலும் உருவாக்கினர். குறிப்பாகக் கலைக்கதிர் போன்ற இதழ்கள் இத்துறையில் ஆற்றிய தொண்டு பெரியது. அவையெல்லாம் இன்று எங்கே போயின, குறைந்தபட்சம் பொது(அரசு) நூலகங்களிலேனும் உள்ளனவா என்பது தெரியவில்லை. கன்னிமரா நூலகத்தில் ஒருவேளை காப்பாற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம்.

கலைச்சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒற்றைச் சொல்லாக அல்லது ஒருசொல் நீர்மையதாக அமைந்திருக்கும். இதற்கு விதிவிலக்குகள் குறைவு. பலசொற்களில் விளக்கவேண்டிய ஒரு அறிவியல் கருத்தை-அது திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட வேண்டியிருப்பதால், ஒற்றைச்சொல்லில் எடுத்துரைப்பது கலைச்சொல். கலைச்சொற்களில் முன்னொட்டுகள் பின்னொட்டுகள் இருப்பினும் அவை ஒரேசொல் தன்மையைப் பெறவேண்டும். சான்றாக, அட்மாஸ்பியர் என்ற சொல்லை நோக்கினால், அட்மா + ஸ்பியர் என்ற இரு சொற்களால் ஆகியிருந்தாலும் அது ஒரேசொல் போலவே தோற்றமளிக்கிறது. பெரும்பாலான ஆங்கிலக் கலைச்சொற்கள் இரு சொற்களால் ஆனவை என்றாலும் அவை ஒற்றைச்சொல் தன்மையைப் பெற்று விட்டன. சான்றாக, பயாலஜி என்பது பயோ + லஜி என்ற இரு சொற்கள் இணைந்தது என்றாலும் யாரும் அதைப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. மேலும் பயோ, லஜி ஆகியவை ஒட்டுகளின் தன்மையைப் பெற்றுவிட்டன.

தமிழில் அவ்வாறு ஒருசொல்நீர்மைத்தாகக் கலைச்சொற்கள் இல்லை என்பது வருந்தத் தக்கது. சான்றாக, சுற்றுச்சூழலியல் என்ற சொல், சுற்று, சூழல், இயல் என்ற மூன்று முழுச் சொற்கள் கொண்டதாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒரே சொல்லாக உள்ளதையும் தமிழில் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டே பெயர்க்கவேண்டியுள்ளது. gale என்ற ஆங்கில ஓரசைச்சொல்லைத் தமிழில் கடுங்காற்று என்று ஆக்குகிறோம். இது இரண்டுசொற்களைக் கொண்டு அமைகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் முதலில் கவனம் செலுத்தவேண்டிய பகுதி இதுதான்.

ஒருசொல்லாக அடிப்படைக் கலைச்சொல் அமைவதனால்தான் அதை வைத்துப் பிறகு முன்னொட்டும் பின்னொட்டும் சேர்த்து மேலும் பல கலைச் சொற்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆக்கமுடிகிறது. தமிழில் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. ஆண்டாலஜி என்ற ஒருசொல் நீர்மைத்தான ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இயல் + திட்ட + வாதம் என மூன்று சொற்கள் கொண்டதாக அமைக்க வேண்டி வருகிறது. அதனால் அதை விரிவுபடுத்த முடியாமல் போகிறது. ஆண்டலாஜிகல், ஆண்டலாஜிகலி என்றெல்லாம் ஆங்கிலத்தில் எளிதாக விரிவுபடும்போது, தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சொல்லைச் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே கலைச் சொல்லை ஆக்கும்போது ஒரேசொல்லாக ஆக்குங்கள்.

தமிழில் வினைச்சொற்களை மட்டுமே இதற்கு விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். சான்றாக, -ize என முடியும் ஆங்கில வினைச்சொற்களை இருசொல் கொண்டவையாக ஆக்கலாம். nationalize – தேசியமயமாக்கு, நாட்டுடைமையாக்கு என்பதுபோல. இவையும் மூன்று சொற்களாக உள்ளன. எனவே ‘தேசியமாக்கு’ என்று இரண்டே சொற்களில் கொண்டுவருவது நல்லது.

தினம்-ஒரு-செய்தி