கல்வி-கேள்விகள். கேள்வி 5

வருங்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியப் பணி, தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் பணமும், அரசியலும் விளையாட வேண்டியது அவசியம் தானா?

பணமும் அரசியலும் கல்வித் துறையில் விளையாடுவது தவறென்று எல்லாருக்குமேதான் தெரியும்.
எப்போது உலகமயமாக்கல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் கொள்கைகள் புகுந்தனவோ, அப்போதே கல்வியையும் ஒரு வியாபாரமாகக் கருதித் தனியார் முதலாளிகளிடம் விட்டாயிற்று. ரவுடிகள் கொள்ளைக்காரர்கள் எல்லாம் கல்வித் தந்தைகள், கல்வி மாமாக்கள் ஆனார்கள்.
அவர்கள் போட்ட முதலை எடுத்தாக வேண்டும். அதற்கு இரண்டு வழிகள்தான்.
ஒன்று மாணவர்களிடம் அதிகப் பணம் வாங்கிக் கொள்ளையடிக்கலாம். அதனால்தான் நர்சரி, எல்கேஜி வகுப்புகளுக்கும் ஒரு லட்சம் முதல் மூன்று நான்கு லட்ச ரூபாய் கூடத் தலைத்தொகை (கேபிடேஷன் ஃபீ) வசூலிக்க முடிகிறது. எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணத்தை இஷ்டப்படி வகுத்து, அதிகப்படுத்திக் கொண்டே போகமுடிகிறது. இதை அரசாங்கம்தான் கேட்கவேண்டும். கேட்குமா?
இரண்டு, ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் வேலைக்கு வைக்காமல், மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் என்றும் காண்டிராக்ட் அலுவலர்கள் என்றும் வேலைக்கு வைத்தால் பலவித இலாபங்கள்.
எல்லாரிடமும் வேலை தரும்போது குறிப்பிட்ட தொகை (பள்ளியாக இருந்தால் ஐந்து லட்சம் முதல், கல்லூரியாக இருந்தால் பத்து லட்சத்துக்கு மேல்) லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம். அதைத் திருப்பித் தரவேண்டியதில்லை.
அடுத்து, தற்காலிக அடிப்படையில் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலை தரப்பட்டிருப்பதால், அவர்கள் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு கேட்க முடியாது. ஸ்டிரைக் செய்யவும் முடியாது.
மூன்று, தனக்கு வேண்டியவர்களுக்கு வேலை அளிக்கலாம்.
நான்கு, வேலைக்கு நியமிக்கப் பட்டவர்கள் ஏதாவது முரண்டுபிடித்தால், உடனே வேலையைவிட்டு நீக்கிவிடலாம்.
மேலும் அவர்களை நிரந்தர அச்சத்தில் எப்போதும் வைத்திருக்க முடியும்.
தனியார் மயமாக்கல்தான் இதற்கு முக்கியக் காரணம். அரசாங்கத்தின் கொள்கையே மன்மோகன் சிங் காலமுதலாகத் தனியார் மயமாக்க லாகத் தானே இருக்கிறது?
கல்வித்துறை தனியார் மயம் ஆக்கப்படக் கூடாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது விதிகள் கடுமையாக வகுக்கப்பட்டு மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களிடம்தான் அரசாங்கம் தேர்தல் வரும்போது கைநீட்டும். இவற்றை நீக்க நீங்கள் வழிசொல்வீர்களா?

கேள்வி பதில்