கல்வி-கேள்விகள். கேள்வி 2

(2) கேள்வி கேட்காது சொன்னதைச் செய்யும் மனோபாவத்தை வளர்க்கும் மெக்காலே கல்வித் திட்டத்தை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமாக மாற்றாதது ஏன்?

இதற்கு நமது கல்வியாளர்களின் அடிமை மனோபாவம்தான் காரணம். மெக்காலே இவ்வாறு கூறினார்—”நம் அளவுபட்ட வருவாயில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகைக்கும் கல்வி தர முயற்சி செய்வது இயலாது என்று உணர்கிறேன். இப்போது நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் நமக்கும் நாம் ஆளுகின்ற மில்லியன் கணக்கான அவர்களுக்கும் இடையில் விளக்கமளிப்பவர்களாக இருக்கக்கூடிய ஒரு வகுப்பை உருவாக்க முயல வேண்டும். அவர்கள் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாக, ஆனால் ரசனைகளில், கருத்துகளில், ஒழுக்கங்களில், அறிவில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்.”
எந்த ஒரு அடிமைப்பட்ட சமூகத்திலும் நடைமுறையில் உள்ள படித்த, சிறுபான்மைப் பகுதியினர் தங்கள், மற்றும் தங்கள் பண்பாட்டின் தகுதியின்மையை காலப்போக்கில் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பண்பாடும் நாகரிகமும் தங்களுக்கு அளித்த எல்லாவற்றையும் பிறர் கொள்ளையடிக்க விடுவார்கள். தங்களை ஆள்பவர்களின் (அரசியல் சுதந்திரம் அடைந்தாலும் தங்களை ஆண்டவர்களின்) நிலையற்ற மோஸ்தர்களுக்கும் சிந்தனைக்கும் ஆட்பட்டுத் தங்களைப் பணிவாக மறுவார்ப்புச் செய்துகொள்வார்கள். பிறகு தங்களைப் போலவே பெரும்பான்மையான பிறரையும் ஆக்க முயற்சி செய்வார்கள். அதனால்தான் சுதந்திரமடைந்து எழுபது ஆண்டாகியும் நாம் ஆங்கிலக் கல்வியிலிருந்து மாறவில்லை.  
மேற்கத்திய முன்மாதிரிகள் நம்மைப் பற்றி நாம் எவ்வித முடிவுகளைக் கொள்ள வைத்தது என்பதை எஸ். என். நாகராஜன் கூறுகிறார்.
1. உங்கள் கைத்தொழில்கள் பயனற்றவை
2. உங்கள் பயிர்களும் தாவரங்களும் பயனற்றவை
3. உங்கள் உணவு பயனற்றது
4. உங்கள் உழவுமுறையும் விவசாய நடைமுறைகளும் பயனற்றவை
5. உங்கள் வீடுகள் பயனற்றவை
6. உங்கள் கல்வி பயனற்றது
7. உங்கள் மதமும் ஒழுக்கமும் முற்றிலும் பயனற்றவை
8. உங்கள் கலாச்சாரம் பயனற்றது
9. உங்கள் மண் பயனற்றது
10. உங்கள் மருத்துவ ஒழுங்கமைப்பு பயனற்றது
11. உங்கள் காடுகள் பயனற்றவை
12.. உங்கள் நீர்ப்பாசனத் திட்டம் பயனற்றது
13. உங்கள் நிர்வாகம் பயனற்றது
14. இறுதியாக நீ ஒரு பயனற்ற மனிதன்
அறிவை இழிவு செய்யும், ஆன்மாவை அழிக்கும் இந்த அழிவுமுறையியல், துருக்கி, இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற பலவகையான நாடுகளின் மக்களுக்கும் எல்லையற்றுத் திரும்பத் திரும்ப ஆங்கிலேயரால் கையாளப்பட்டது. இந் நாடுகள் அனைத்தும் மிக விரைவில் பலி நாடுகளாகவும், தோல்வியுற்ற நாகரிகங்களாகவும் ஆயின.
மனத்தளவில் தோற்றுபோன இந்திய அடிமைச் சமூகம்—அதாவது அக்காலப் படித்த முன்மாதிரிகள், இந்தியக் கல்வி முறையை மாற்ற முயலாததில் வியப்பில்லை. மரபு என்ற வகையில் அது அப்படியே தொடர்கிறது.
சிந்தனையைத் தூண்டும் விதமான கல்விமுறை அறவே இல்லாமல் போயிற்று. மனப்பாடக் கல்வியே கல்வி ஆயிற்று.

சமூகம்