குறளில் சில விசித்திரங்கள்

திருக்குறள் மிக உயர்ந்த நூல் என்பதில் நமக்குத் தனிப் பெருமை. இருப்பது நியாயம்தானே? இங்கே அதன் பெருமைகளை நான் பேச வரவில்லை. சில விசித்திரங்களை எடுத்துக்காட்டுவது மட்டுமே நோக்கம்.
கடவுள் என்ற சொல்லைத் திருவள்ளுவர் எங்குமே கையாளவில்லை. ஆனால் முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்று யார் எப்போது பெயர் வைத்தார்கள், எப்படி அது நிலைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எல்லா நூலாசிரியர்களும் தாங்களே கடவுளை வாழ்த்துவதுதான் மரபு. அறநூல்களுக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து இதுதான் தமிழில் காணப்படும் வழக்கு. ஆனால் திருவள்ளுவர், தாம் கடவுளை வாழ்த்தவில்லை, மற்றவர்களைத்தான் வாழ்த்துமாறு சொல்லுகிறார். இது ஒரு வேடிக்கை அல்லவா?
அறத்துப்பால், பொருட்பால்களை நேரடியாகத் தமது அறிவுரை முறையில் அளித்த திருவள்ளுவர், ஏன் காமத்துப்பாலில் அத்தகைய முறையினைக் கையாளவில்லை? ஏன் சங்க அக இலக்கிய மரபின்படி நாடகப்பாங்காக அமைத்திருக்கிறார்? இதுவும் ஒரு விசித்திரமே.

தினம்-ஒரு-செய்தி