சுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்

சுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்

1951 முதல் 2005 வரை 55 ஆண்டுகள் தொடர்ச்சியாக படைப்புத்துறையில் இயங்கிவந்தவர் சுந்தர ராமசாமி. தமிழின் தவிர்க்கமுடியாத முதல்தரப் படைப்பாளியாகத் திகழ்பவர் என்பதில் எவருக்கும் ஆட்சேபணை இருக்கமுடியாது. அவருடைய கருத்தியலில் வேறுபாடு கொள்பவர்களும் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் அவர் என்பதை ஒப்புக் கொள்வர்.

நான் சுந்தர ராமசாமியின் சிறுகதைகளை முதலில் படிக்கவில்லை. ‘புதுக்குரல்கள்’ தொகுதியில் வெளிவந்த அவரது கவிதைகளே என்னை முதலில் கவர்ந்தன. பிறகுதான் அவரது சிறுகதைகள் சிலவற்றையும் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகுதான் அவருடைய அனைத்துப் படைப்புகளுடனுமான பரிச்சயம் ஏற்பட்டது.

அவரது எழுத்தைப் பற்றி விமரிசனம் செய்யும் யாவரும் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் உக்கிரம். தீவிரம். படைப்பாளுமை. கூர்மை. தீவிரம். இறுக்கம். வாசிப்பின் கனம். அனுபவ வெளிப்பாடு. நேர்மை. நுட்பம் ஆகியவை. இந்தச் சொற்களை யெல்லாம் தள்ளிவிட்டு சுந்தர ராமசாமியை விமரிசனம் செய்யமுடியுமா என்று பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் முதல்நோக்கம். இதற்காக நான் எடுத்துக்கொள்ளும் களம் அவருடைய சிறுகதைகள்.

“சிறுகதையே படைப்பு சக்தியின் கடைசிக் குழந் தை. படைப்பு சக்தி அதற்குப் பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை” என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுவதையும், “நான் உரைநடையின் குழந்தை” என்று குறிப்பிடுவதையும் அதற்குக் காரணமாகக் கொள்ளலாம். புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையைப் படித்தபிறகுதான் எழுதவேண்டும் என்ற உந்துதல் தமக்கு ஏற்பட்டது என்றும் சு.ரா. குறிப்பிட்டிருக்கிறார். அவர் முதலில் பெற்ற குழந்தையும் சிறுகதைதான். பிறகுதான் நாவல். கடைசியாகப் பெற்ற குழந்தைதான் கவிதை. ஆகவே தனது முதல் குழந்தையை அவர் எப்படி காலப்போக்கில் வளர்த்திருக்கிறார் என்று பார்க்கலாம் அல்லவா?

கடைசியாக, அவரது கரட்டுப்படியில் (rough draft) கண்டதாக வெளியிடப்பட்ட ‘பள்ளியில் ஒரு நாய்க்குட்டி’ தொகுதியிலுள்ள சிறுகதைகள் உட்பட சுந்தர ராமசாமி மொத்தம் 84 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இந்த எண்ணிக்கையில் பலவீனமாக இருக்கின்றன எனக் கருதி அவர் வெளியிடாமல் தள்ளிவிட்ட ஐந்து கதைகளும், ‘கிங்காங்கும் தாராசிங்கும்’ என்ற முடிவுபெறாத கதையும் அடக்கம். அவர் எழுதியவற்றில் இரண்டினை நாம் நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல் என்று கொள்ளமுடியும். இந்த இரண்டு நீண்ட சிறுகதைகள், ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’, ‘இரு நண்பர் கள்’ என்பனவாகும். ‘இரு நண்பர்கள்’ கதையும் முடிவுபெறவில்லை.

என்றாலும், 55 ஆண்டுகளில் 84 கதைகள் எழுதியிருக்கிறார். ஒன்றரைக் கதை ஓராண்டுக்கு என்பது சுந்தர ராமசாமியைப் போன்ற கலைஞருக்கு மிக அதிகம் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் சிற்பம் செதுக்குவதுபோல ஒவ்வொரு கதையையும் செதுக்குபவர் அவர்.

ஆரம்பகால மூன்று நான்கு கதைகளில் மட்டுமே இந்தச் செதுக்குவேலை புலப்படா மல் இருக்கிறது. ஏறத்தாழ எண்பது கதைகளில் அவருடைய சிற்பக்கைவினைச் செயலை, சாதாரணமாகப் படிப்பவனும் மிக நன்றாகவே உணர்ந்து கொள்ளமுடியும். இதனைப் பலர் தவறான ஒன்று  போலக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ல, நிச்சயமாகத் தவறு அல்ல என்பதற்கு இரண்டு காரணங்களை உடனடியாகக் குறிப்பிடமுடியும்.

ஒன்று, பல கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள் தங்கள் படைப்புகளை அடித்துப் பலமுறை திருத்தி மாற்றி எழுதிய பின்னரே வெளியிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ராபர்ட் ஃப்ராஸ்ட், ஜாய்ஸ் போன்றோரின் இத்தகைய திருத்தப்படிகள் வாசகர்களின் பார்வைக்கென வெளியிடப்பட்டுள்ளன.

தமிழில்தான் ஏதோ மாற்றி எழுதுவ தும் அடித்துத் திருத்தி எழுதுவதும் தவறுபோலவும், ஒரேமூச்சில் உள்ளத்தின் உந்து சக்தியின் தீவிரத்தில் எழுதிமுடிப்பவன்தான் உயர்ந்த படைப்பாளி என்பதுபோலவும் ஒரு கற்பனை மயக்கம் விதைக்கப்பட்டிருக்கிறது. இசைக்கலைஞன் போல, ஓவியக் கலைஞன் போல எழுத்துக் கலைஞனும் ஒரு கலைஞன்தான். அவர்கள் எப்படி மாற்றி மாற்றி அமைப்பதால் முழுமை பெறுகிறார்களோ அப்படித்தான் எழுத்துக் கலைஞனும்.

இரண்டாவது, கிளாசிசிஸம்/செவ்வியம் என்ற இலக்கியக் கொள்கையின் ஆணி வேரே பயிற்சியின் வாயிலாகக் கலை பிறக்கிறது என்பதுதான். கலைஞன் போலி செய்பவன். மேலும் மேலும் பயில்வதன்வாயிலாகப் போலிசெய்வதை சிறப்பாகக் கற்றுக்கொள்கிறான். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற ஒளவையின் சிந்தனையும் இதனை வலியுறுத்தும்.

மூன்றாவது, சுந்தர ராமசாமி தமிழின் நவீனத்துவம் சார்ந்த படைப்பாளி என்பதை எவருமே ஏற்றுக்கொள்வர். நவீனத்துவ இயக்கமும் படைப்பினைப் பலமுறை திரும்பத்திரும்பச் செதுக்கி அமைப்பதை ஏற்றுக்கொள்வதுதான். இக்கருத்தை ஏற்கத் தயங்குபவர்கள், எஸ்ரா பவுண்டின் ‘காண்ட்டோ’ எத்தனைமுறை திருத்திச் செம்மை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், அவர் எலியட்டின் ‘பாழ்நிலம்’ கவிதையை எவ்விதம் திருத்தியமைத்தார் என்பதையும் சற்றே காண்பார்களாக. சுந்தர ராமசாமியின் அனைத்துக் கதைகள், கவிதைகளின் கரட்டுப்படிகள், செப்பம்பெறாத கையெழுத்துப் படிகள் கிடைத்தால் அவரது இலக்கிய நோக்கினை இன்னும் நாம் செம்மையாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எனவே சுந்தர ராமசாமி சிற்பம் செதுக்குவது போலக் கதைகளைச் செதுக்குபவர் என்பதை மிகச்சிறந்த ஒரு பாராட்டாகவே நான் அவருக்கு அளிக்கிறேன். அவர் எவ்விதம் மொழியை முன்னணிப்படுத்துகிறார், எவ்வித விலகல்களுக்கு உள்ளாக்குகிறார் என்பவை தனியே மொழிநோக்கில் ஆராயப் படவேண்டியவை.

இங்கு நான் நோக்க நினைப்பது அவரது ஐம்பத்தைந்து ஆண்டுக்கால எழுத்து வாழ்க்கையில் எவ்வித இயக்கத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் ஒரு முயற்சியே. அவர் எழுதியவை மூன்றே மூன்று நாவல்கள், அவைகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வந்தவை என்பதால் அவை அந்த இயக்கத்தை சௌகரியமாகக் காட்டக்கூடிய மைல்கல்கள் ஆகலாம். அவருடைய ‘புளிய மரத்தின் கதை’, தமிழின் கதைசொல்லல் மரபிலிருந்து பிறந்த கதை. கதைசொல்வதில் அவருக்கு உள்ள ஆர்வம் அதில் வெளிப்படுகிறது. அது யதார்த்த எழுத்துமரபில் பிறந்த ஒன்று. சமூகத்தின்மீது ஒரு சம்பவம் ஏற்படுத்தும் விளைவை அளவிடும் முயற்சி.

ஆனால் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ அப்படிப்பட்டதல்ல. அது ஒரு சோதனை முயற்சி. கதை கூறுதல் என்ற நிலைப்பாட்டிற்கு மாறாக, எழுத்தின் செயல்பாடு என்ற அடிப்படையில் பிறந்த நவீனத்துவக் கதை.

‘குழந்தைகள்-பெண்கள்-ஆண்கள்’ என்னும் நாவல் மீண்டும் யதார்த்தக் கதைகூறலுக்குச் சென்றுவிட்டதாயினும், அது புளியமரத்தின் கதை போலச் சமூகத்தை விவரிப்பதாக இல்லை. மாறாக உள்நோக்கிய பயணத்திற்கு மாறிவிடுகிறது.

ஆகவே நாவல்களை வைத்து விவரிப்பதாயின், சமூகம் சார்ந்த யதார்த்த விவரிப்பு-நவீனத்துவசோதனை முயற்சி-யதார்த்த எழுத்தினு£டே உள்நோக்கிய பயணம் என அவரது எழுத்து இயக்கத்தை விவரிக்கவேண்டும்.

சிறுகதைகளில் இப்படிப்பட்ட பயணத்தைக் காணமுடியுமா என்று நோக்குவ தற்கு முன்னதாக அவருடைய சிறுகதைகளில் சிலவற்றைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். சுந்தர ராமசாமியின் சில கதைகளில் வடிவம் கட்டுப்படவில்லை. பாத்திரத்தின் விளிம்பை மீறி வழியும் நீரைப்போல வடிவம் கட்டுப்படாமல் வழிந்துகொண்டே செல்கிறது. ‘இரு நண்பர்கள்’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ என்னும் அவரது இரு குறுநாவல்களும் அப்படிப்பட்டவைதான்.

சில கதைகளில் சொற்கள் கட்டுப்படாமல் கதையை வீணடிக்கின்றன. அவருடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் கடைசியாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘உணவும் உணர்வும்’ என்பதைச் சேர்க்காமலே விட்டிருக்கலாம். அதில் கையாளப்படும் குழந்தை என்ற சொல்லின் பரிமாணம் புலப்படவில்லை. நாம் அப்போதுதான் பிறந்ததையும் குழந்தை என்றுதான் சொல்கிறோம். காலப்போக்கில், சொல்பவனின் பார்வைக்கேற்ப குழந்தை என்ற சொல்லின் பொருள் மாறுபடலாம். முப்பது வயதுப் பெண்ணைக் குறிப்பிட்டு, “என் குழந்தை சென்னையில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள்” என்பவர்கள் உண்டு.

இங்கே குழந்தை உலகைப் புரிந்துகொள்கிறது, பணத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்கிறது, சாப்பிட்ட வயிற்றைக்காட்டி பிள்ளையார்சாமி கணக்கா இருக்கு என்றும், உன் சாப்பாட்டையும் சேர்த்து மொக்கிப்போட்டேனா என்றும் தெளிவாகக் கருத்துரைத்துப்  பேசுகிறது-என்ன வயது அதற்கு? அது பற்றிய குறிப்பேதும் கதையில் இல்லை. ஒவ்வொரு வயதில் குழந்தை ஒவ்வொருவிதமாக உலகைப் புரிந்துகொள்ளக் கூடும், பேசக்கூடும். இங்கு வயது குறிப்பிடாமையால் ஐந்துவயதா, எட்டுவயதா அல்லது பத்துவயதா என்றெல்லாம் கற்பனையில் இறங்கவேண்டியிருக்கிறது. ஆனால் அப்படிக் கொண்டால், அந்தக் குழந்தையின் செயல்பாடு வெறுமனே தாயைச் சார்ந்து உணவுக்காக மண்ணில் அழுதுபுரள்வதாக மட்டுமே இருக்கமுடியாது. வேறுவிதத்தில் செல்லும். எனவே கதை பலவீனமாகிறது.

கடைசித்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ‘புலமையின் அம்மணம்’ கதையிலும் வயதுப் பிரச்சினை இருக்கிறது. எட்டுவயதுப் பெண்குழந்தை என்று இங்கே வயதை முதலிலேயே சொல்லிவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எட்டுவயதுப் பெண்குழந்தை குளியலறையைவிட்டு அம்மணமாக வந்துவிடுவது அவ்வளவுபெரிய குற்றமா என்ன? இன்று இரண்டுவயதிலேயே ப்ரிகேஜி ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கும் பொம்மைப் படிப்புக்குழந்தைகளுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அதுபற்றி அவள் தாய் கொள்ளும் கடுமை பொருந்துவதாக இல்லை.

அதோடு கதை புலமையின் அம்மணத்தைப் பற்றியதும் அல்ல, திருக்குறள் தலைகீழாக ஒப்புவிப்பதை ஒரு புலமை என்றோ, அந்தக்குழந்தை ஒரு புலவர் என்றோ எவரும் ஏற்கவும் மாட்டார்கள். ஒரு எட்டுவயதுக் குழந்தையைக் கட்டாயப்படுத்தித் திருக்குறள் ஒப்புவிப்பவளாக ஆக்கிய ஒரு அரசியல்வாதியின் போலித்தனம் பற்றியதுதான் இந்தக்கதை. எனவே தலைப்பு முற்றிலும் பொருந்தாமல் போகிறது. இந்தக் கதைத்தலைப்பு, வாழ்நாள் முழுவதும் சுந்தர ராமசாமியும் அவர்போன்ற சிற்றிதழ் எழுத்தாளர்களும் புலவர்கள்மீது காட்டிய வெறுப்பின் விளைவாக எழுந்தது என்றுதான் தோன்றுகிறது.

‘தயக்கம்’ கதை ஒரு திரைப்படக்கதை மாதிரியான தோற்றம் கொண்டது.

இன்னொருவிதத்திலும் சுந்தர ராமசாமியின் கதைகளை நோக்கவேண்டும். அவருடைய சில கதைகளில் தான்(self/I) என்பது வெளிப்படுவதில்லை. பல கதைகளில் ‘தான்’ கமுக்கமாக வெளிப்படுகிறது. சில கதைகளில் வெளிப்படையாகவே முன் வந்து நிற்கிறது.

தன்னைப் பற்றி ஒரு படைப்பாளி எழுதக்கூடாது, அல்லது சிறு கதையோ நாவலோ சுயசரிதத் தன்மையுடன் அமையக்கூடாது என்பதல்ல. ஆனால் அவற்றின் கலைத்தன்மை கேள்விக்குள்ளாகும்போது அது ஒரு எதிர்மறைப் பண்பாகவே நோக்கப்படும். குறிப்பாக 2001-2004 காலப்பகுதியில் சுந்தர ராமசாமி எழுதிய சில கதைகளை நாம் ‘கலிபோர்னியாக் கதைகள்’ என்றே தலைப்பிட்டுவிட முடியும். இவற்றில் கடைசித்தொகுப்பில் வெளியான ‘பெயர் தெரியாத மரம்’, ‘பள்ளி யில் வந்த நாய்க்குட்டி’, ‘இரு நண்பர்கள்’  உட்பட்ட கதைகளும் அடக்கம்.
தன்னை வெளிப்படுத்துபவர்களும், தன்னை மறைப்பவர்களுமாக உலகில் இருவகையான படைப்பாளிகளும் இருந்தே வருகிறார்கள்.

பொதுவாக, கற்பனாவாதப் படைப்பாளிகள்தான் தம்மை வெளிப்படுத்திக்கொள்வது வழக்கம். ஆங்கிலத்தில் இதற்கு ஒரு நல்ல விதிவிலக்கு மில்டன். ஷேக்ஸ்பியர், கம்பன் போன்ற உலகத்தரப் படைப்பாளிகள் எவரும் தம்மை எந்தப் பாத்திரத்தின் வாயிலாகவும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. கைகேயியைக் கம்பன் என்பதா, சூர்ப்பநகையைக் கம்பன் என்பதா, அல்லது சீதையைத்தான் கம்பன் என்பதா? பெரும்படைப்பாளிகள் பாத்திரத்திற்கேற்பப் பேசக்கூடியவர்களே தவிரத் தங்களைப் பாத்திரமாக்கிக் கொள்பவர்கள் அல்ல.

அப்படித் தம்மைப் பாத்திரமாக்கிக் கொள்வதுகூட ஒரு proxy என்ற அளவில் இருந் தால் நாம் கவலைப்படுவதில்லை. சுத்தசுயம்புவாக சுந்தர ராமசாமி தம்மைப் பாத்திரமாக்கிக்கொள்வது உறுத்துகிறது. சுந்தர ராமசாமியின் மிகச் சிறந்த சிறுகதைகள்-அது ‘கோவில் காளையும் உழவு மாடுமா’க இருந்தாலும் சரி, ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ யாக இருந்தாலும் சரி, ‘தான்’ வெளிப்படாத கதைகள்தான்.
மேலும், பலரது கருத்திற்கு மாறாக, அவரது முதற்காலகட்டச் சிறுகதைகள் தான் மிகச் சிறந்தவை என்பதும் எனது கருத்து. ஏனென்றால் அதிகமும் ‘தான்’ வெளிப்படாத கதைகள் அக்கால கட்டத்தியவைதான்.

முதற்கால கட்டத்தில் அவர் எழுதிய கதைகளில், ‘சன்னல்’ மட்டுமே தான் வெளிப்படும் கதை. ஒரு நோயாளிப் பையனின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதை அது. அவனை ஜன்னல் பக்கமிருந்து உள் பக்கமாகப் படுக்கையை மாற்றிப் படுக்க வைத்ததும் அளவில்லாத துக்கம் கொள்கிறான். அந்தப் பையன் தான்தான் என்று சுந்தர ராமசாமியே கூறியிருந்தாலும், வாசிக்கும்போதே புரிந்துவிடும் விஷயமாக அது இருக்கிறது. இந்தக் கதைக்குப்பின் ‘மெய்+பொய்=மெய்’ கதையில் கதை சொல்லி எழுத்தாளனாகக் குறிக்கப்பட்டாலும் அது proxy என்பது தெரிந்துவிடுகிறது. ‘சன்னல்’ கதைக்குப் பிறகு ‘தான்’ நுணுக்கமாக வெளிப்படுவது ‘பக்த துளசி’, ‘நாய், சிறுவன், பாம்பு’ கதைகளில்தான். இதுவரை முதல்கால கட்டக் கதைகள் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் காலகட்டக் கதைகளில் மூன்றில் மட்டுமே ‘தான்’ வெளிப்படுகிறது என்பது அவர் சமூகத்தின்மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.

இதன்பின் ஏழு ஆண்டுகள் சுந்தர ராமசாமி எதுவும் எழுதவில்லை. அதற்குப் பிறகு ‘அழைப்பு’ கதை. பல்லக்குத் தூக்கிகளில் அரசியல் விமரிசனம் மிக நன்றாக வெளிப்படுவதைப் பலரும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். என்றாலும் இதில் கதை சொல்லியின் மேட்டிமைப் பண்பு நன்கு வெளிப்படவும் செய்கிறது.
“ஆட்களுக்கு வாட்டசாட்டமான உடம்பு. பயில்வான்கள்மாதிரி.          பக்கடா மீசைகள். முண்டாசு தார்ப்பாய்ச்சிக்கட்டு. தொடைகளில் எல்லாம் அட்டைகள் சுருண்டமாதிரி ஒரே கறுப்புமயிர். மொத்தத்தில் எனக்கு ஒரு அருவருப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு-கள்ளிப்புதர்ப்பக்கம், வற்றல்கூழ் மாதிரி மலம் கழித்திருந்த வரிசைக்கு முன்னால் ஒரு சாமான் தெரிந்தது.
அதுதான் பல்லக்கு”.

ஆக, பல்லக்கு, பல்லக்குத் தூக்கிகள் எல்லோருமே கீழானவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். நம் அரசியலைச் சுமப்பவர்கள்-இம்மாதிரிக் கீழ்மக்கள்-இவர்கள்தான் பொதுமக்கள்-அல்ல. எல்லாம் தெரிந்த பெரிய ஊழல் மிக்க அதிகாரிகளும் அவர்கள் கையாள்களும்தான். ஏன் இப்படிப் பொதுமக்களை சுந்தர ராமசாமி இழிவுபடுத்துகிறார் என்று இக்கதையில் ஆத்திரம்தான் வருகிறது. இதுதான் காலப்போக்கில் சுந்தர ராமசாமிக்குள் ஏற்பட்ட மாற்றம்போலும்! இவர்களுக்கு வழி காட்டிதான் சொல்கிறான்-‘முருகா’ன்னு கூப்பிடவேண்டாம். ‘சுப்ரஹ்மண்யா’ என்று சொல்லவேண்டும் என்றும் நன்றாக வளைந்து கும்பிடவேண்டும் என்றும். இதிலேயே அவன் யார், எந்த சாதி என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது.

ஆனால் அவனைக் கண்டால் சு.ரா.வுக்கு வெறுப்பு வரவில்லை. ஏனென்றால் அவன் ஒல்லியாக இருக்கி றான், ‘பவித்திரமாக’ இருக்கிறான். இந்தக் கதைசொல்லி வேறு எவனாகச் சித்திரிக்கப் பட்டிருந்தாலும் இதைச் சரியான நோக்கில் எழுதப்பட்ட அரசியல் விமரிசனம் என்று எடுத்துக்கொள்ளலாம். இதிலும் ‘தான்’ வெளிப்படுகிறது. அந்தச் சாதாரணமக்கள் தன் சாதியைக் குறித்துப் பேசினார்கள் என்றும், அதனால் திரும்பிக் கெட்டவார்த்தைகள் பேசவேண்டும் என்றும் கதைசொல்லி தீர்மானிக்கிறான்.

‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ மிகப் பாராட்டப்படும் கதை. பாஷை ஒரு அற்புதம் தான். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த பாஷை என்பதுதான் கேள்வி. ரத்னாபாய் ஒரு சட்டைக்காரப் பெண் அல்ல. அவள் தாய்மொழி தமிழ்தான். தன் அர்த்தமற்ற ஆங்கிலமோகம்தான் வாழ்க்கையைக் கெடுக்கிறது என்பதை அறியாத ‘அப்செஸிவ் கம்பல்சிவ் டிசார்டர்’ கொண்ட மனநோயாளி அவள். இந்த வகையில் கதையை வாசிக்காமல் அவள் செய்வது சரியென அவள்மீது அனுதாபம் ஏற்படும் வகையிலேயே நான் பார்த்த பலரும் இக்கதையை வாசித்திருக்கிறார்கள். அப்படி வாசிப்பதாயின் சுந்தர ராமசாமியின் சார்பு தமிழைவிட ஆங்கிலத்தின் பக்கத்திலேயே அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

திரைப்படம் பார்க்கும் மோகத்தில் தன் குழந்தையின் கண்ணைத் தோண்டும் தாயையும், பெற்ற குழந்தையைத் தாரில் முக்கிஎடுக்கும் பெண்ணையும் சித்திரிக்கிறார் சுந்தர ராமசாமி. ஆனால் குரங்குகளுக்கு-ஆஞ்சநேய அவதாரங்களுக்குப் பாம்பு விஷயத்தில் மட்டும் புத்தியில்லாமல் போயிற்றே என்று அவருடைய கதைமாந்தர் ஒருவர் வருத்தப்படுகிறார். இவற்றில் சமூகநோக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவை சமூகத்தில் நடக்கமுடியாத நிகழ்ச்சிகள் அல்ல. ஆனால் சமூகத்தில் நடக்கக்கூடிய, நடக்கமுடிந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கதை எழுதுவது நவீனத்துவத்திலும் சேராது, யதார்த்தத்தவாதத்திலும் சேராது. அதற்கு தனியே இயற்கைவாதம்/நேச்சுரலிசம் என்ற பெயர் இருக்கிறது.

பல்லக்குத் தூக்கிகளும், ரத்னாபாயின் ஆங்கிலமும் நிச்சயமாக நவீனத்துவ எழுத்துசார்ந்த முயற்சிகள்தான். நடையும் சொல்லும் விதமும் முன்னைவிட மேம்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை, ஆனால் சமூகநோக்கம் மட்டுப்பட்டுவிட்டது என்பதிலும் சந்தேகமில்லை. ‘பட்டுவாடா’ கதையும் இப்படிப்பட்டதுதான். ஏனென்றால் அக்கதையில் பெண்ணின்மீது வாசகனின் அனுதாபம் தோன்றுமாறு மொழி வெளிப்படவில்லை.
‘பக்கத்தில் வந்த அப்பா’வும் ‘தான்’ கூர்மையாக வெளிப்படும் கதை. வெளிப் படுவது ‘தான்’ மட்டுமல்ல, தமக்குத் தம் தந்தைமீதிருந்த கோபமும்தான்.

ஒருசில கதைகளின் பலவீனங்களை மேலே சுட்டிக்காட்டியதுபோலக் குறிப்பிடலாமாயினும், இவை எவ்விதத்திலும் ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் சு.ரா. என்ற தகுதியைக் குறைப்பவை அல்ல.

இப்படி ஒரு விமரிசகன் எழுத்தாளரைக் குறைகூறலாமா என்றால் கூறத்தான்வேண்டும். கோழிமிதித்துக் குஞ்சு நோவதில்லை, அல்லது தாயடித்துக் குழந்தை கெடுவதில்லை. ஒரு விமரிசகன் தாய் என்ற நிலைக்குத் தகுதியானவனா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகத் தகுதியானவன்தான். ஏனெனில் எந்தப் படைப்பையும் காலத்தினூடே நிலைநிறுத்துபவர்கள் விமரிசகர்களே அல்லவா? க.நா.சு. திரும்பத் திரும்பப் பட்டியலிடாவிட்டால் எத்தனைபேரை வெளியுலகிற்குத் தெரிந்திருக்கும்?

இது ஒருபுறம்இருக்க, எவ்வளவுதான் யோசித்து, தீர்மானத்துடன் எழுதுபவன் மொழியைக் கையாண்டபோதிலும், மொழியின் சக்தி வேறு. அது எவருக்கும் கட்டுப்படாமல் நழுவிக்கொண்டே போகக்கூடியது என்பதைத்தான் மேற் கண்ட குறைகாணல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இக்கால கட்டத்தின் எல்லாக் கதைகளுமே இப்படி என்று முடிவு கட்டவும் தேவையில்லை. ஏனென்றால் ‘நாடார் சார்’, ‘இருக்கைகள்’ போன்ற கதைகளும் எழுதப்பட்டுள்ளன.
‘பள்ளியில் வந்த நாய்க்குட்டி’ தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கதைகளில் தலைப்பிடாத கதைதான் மிகமுக்கியமானது.

மிகவித்தியாசமான நடையை-மிகக்கூர்மையான அங்கதத்தையும் நையாண்டியையும் கொண்டுள்ள கதை அது. சுந்தர ராமசாமி ஏன் இந்தப் பாணியில் இன்னும் அதிகமான கதைகள் எழுதவில்லை என்று கேட்கவைக்கிறது, நம்மைக் குலுங்கிச் சிரிக்கவைக்கிறது. சுயசரிதைப் பாணிக்கதை, அதுவும் விளித்தலோடு சேர்ந்து கூர்மையான அங்கதம் வரும்போது அதன் பண்பு கூடுகிறது. சு.ரா.வின் நடைக்காக ஓரிரு பகுதிகள்…
“எனக்கு மட்டுமே சொந்தமான மான்கன்றைப் பலரும் அறியும்படி வர்ணிப்பது மிகக் கேவலமானது அன்றோ. தமிழில் காதல் கதை எழுதியவர்கள் அனைவரும்-பெண்கள் எழுதிய காதல்கதைகளை நான் படித்ததில்லை-தங்கள் காதலிகளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரையும் பெண்மையின் பேரழகு சுழியும் இடங்களை மையப்படுத்தி வர்ணித்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அடப்பாவிகளா! என்ன காரியம் செய்கிறீர்கள்! இது எவ்வளவு அவமானகரமான செயல்! இதிலிருந்தே அவர் எந்தப் பெண்ணையும் காதலித்தது இல்லை என்று சொல்லலாம்…”

இந்த நடையோடு இதில் வரும் ஆட்குறிப்புகள் (references)தான் மிகச் சுவையானவை. சு.ரா.வின் மேல்வருணனையில் எனக்கு வெளிப்படும் குறிப்புகள் சாண்டில்யன், கோவி. மணிசேகரன் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பெண் வருணனையைக் கம்பர் செய்ததை எண்ணிஎடுத்துக்காட்டிய அண்ணா போன்றவர்களும்.
“காதலிகள் புகையிலிருந்து வெளிப்பட ஆசைப்படுவது ஏன் என்பது இன்றுவரையிலும் எனக்குப் புரியாமலே இருக்கிறது. என் இளம்பருவத்திலிருந்து எம்.ஜி.ஆர். படங்களில் அவருடன் ஒருதலைக் காதல்கொள்ள விரைந்தோடிவந்த பெண்களின் பட்டியலை நான் தயாரித்துக்கொண்டு வந்தபோது கடவுளே எவ்வளவு முகங்கள்! எவ்வளவு குலுக்கல்கள்! எவ்வளவு நெளிவுகள்! எவ்வளவு நொடிப்புகள்!…..”

இங்கு வெளிப்படையாகவே குறிப்பு இருக்கிறது. இங்கும் இந்த வாக்கியங்களின் பின்னால் வரும் அம்மையார் (“அவருடைய பெயரை இங்குக் கூறுவது பண்பாட்டுக்கு ஊனம் அன்றோ”-அவருக்குக் கதைசொல்லி கடிதம் எழுதினாராம்) பற்றிய குறிப்பும்
சுவையானது. ஒரு பள்ளிப்பருவக் காதல்கதையை இவ்வளவு சுவையாக எழுதமுடியும் என்று யாரும் நினைத்தும் பார்க்கமுடியாது.

இந்த அங்கதத்தில் ஒரு மாற்றுக் குறைவாக, ‘கொசு, மூட்டை, பேன்’ கதையிலும் இருக்கிறது.

கடைசி ஆண்டில் எழுதிய ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ கதையைப் பற்றியும் சற்றே சொல்லியாக வேண்டும். இது மிகவும் தவறாக வாசிக்கப்பட்ட கதை. அதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பன்முக வாசிப்புக்கு இடம் தரும் கதை என்ப தையும் சொல்லியிருக்கிறார்கள். தாயம்மாள் என்ன சாதி என்பது “பொட்டையா, போடாதே மேல்சீலை” என்ற வரியில் குறிப்பாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. அதேசமயம், தாயம்மாள் மீது குற்றம் சொல்வதற்கான இடமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். தாயம்மா பற்றி வரும் வருணனையும், மணிகண்டனை ‘என்ன அழகு’ என்று வருணிப்பதும் இதற்கு உதவி செய்கின்றன. ஆனால் அவள்மீது குற்றம்சொல்லப்பட்ட செயலுக்கும் அவள் தண்டிக்கப்பட்டதற்கும் தொடர்பு கிடை யாது. ஏனெனில் அன்று அந்தப் பையன் முகம் வீங்கியிருந்ததாகவும் அவன் அழுது கொண்டே வீடு திரும்பியதாகவுமே குறிப்பு வருகிறது. எவ்வாறாயினும் ஒரு பெண் ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரிக்கும் கதை அது என்பதில் ஐயமில்லை.

இந்தக் கதையின் மிக முக்கியமான ஒரு பகுதி-தங்கக்கண் படிப்பை நெருப்பு என்று வருணிக்கிறான். அது எப்படி என்று செல்லத்துரை கேட்கிறான். “நெருப்புத் தாம்லே. பத்தியெரியற நெருப்பு. களைகளெக் கரிக்கும். கரிச்ச இடத்திலே பயிர் முளைவிடும்.” சுந்தர ராமசாமி சுதந்திரத்தின்மீது வைத்திருக்கும் பற்றையும், அதற்காக அவர் கண்ட வழியையும் சுட்டிக்காட்டும் குறிப்பு இது.

இனி கட்டுரையின் முதற்பகுதிக்கே மீண்டும் செல்லவேண்டும். நாவல்களை வைத்து விவரிப்பதாயின், சமூகம் சார்ந்த யதார்த்த விவரிப்பு-நவீனத்துவசோதனை முயற்சி-யதார்த்த எழுத்தினூடே உள்நோக்கிய பயணம் என அவரது எழுத்து இயக்கத்தை நோக்கலாம் என முன்புசொல்லப்பட்டது.

சிறுகதைகளிலும் இந்தப் போக்கு தான் முற்றிலும் சரியாக வெளிப்படுகிறது என்பது ஆச்சரியமானது.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்காலத்தை இருவகையாகச் சிலர் பகுத்துநோக்கி யிருக்கிறார்கள். குறைந்தது மூவகையாகப் பிரிக்க இடமிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

அவர் எழுதிய கதைகளில், ‘இல்லாத ஒன்று’ என்பது முதற்கால கட்டத்தின் கடைசிக்கதை (1967).

இரண்டாவது கட்டத்தின் தொடக்கக்கதை ‘அழைப்பு’ (1973).

ஆனால் இவையிரண்டிற்கும் இடையில் ‘உமா’ பத்திரிகையில் அவர் எழுதிய-ஆண்டுதெரியாத-‘காலிப் பெட்டி’ என்ற கதை நுழைந்திருக்கிறது.

இதுபோல இடைவெளி-ஆனால் இடைவெளி என்று கவனிக்கப்பட இயலாத அளவு இன்னொன்று-நேர்ந்திருக்கிறது. ‘இருக்கைகள்’ என்ற கதையை சு.ரா. இரண் டாம் காலகட்டத்தில் கடைசியாக எழுதிய கதை என்று வைத்துக்கொள்ளலாம் (1997).

அதற்குப்பின் மயில் என்ற கதை (2002) கலிபோர்னியாவிலிருந்து எழுதப்பட்டது. கலிபோர்னியாக் கதைகளின் தொடக்கம் அது. இடையில் ஐந்தாண்டுகள். ஆனால் முன்பு ‘உமா’ பத்திரிகைக் கதை இடையில் நுழைந்ததுபோலவே, இங்கு ‘டால்ஸ்டாய் தாத்தாவின் கை’ நுழைந்திருக்கிறது (1999). இருவேறு போக்குகளைச் சுட்டிக்காட்டும் இடை வெளி இங்கும் இருக்கிறது.

இதற்குப் பின்வருவது மூன்றாவது காலப்பகுதி என்று வைத்துக்கொள்ளலாம். இங்கும் சோதனைக் கதைகள், நவீனத்துவப் பாணிக்கதைகள் கிடையாது. எல்லாம் யதார்த்தப் பாணிக் கதைகள்தான்.

முதல் காலப்பகுதிச் சிறுகதைகள் சமூக உணர்வோடு எழுதப்பட்டவை, யதார்த்த நோக்கில் எழுதப்பட்டவை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அது போலவே இரண்டாம் காலப்பகுதிக் கதைகள் சோதனைசெய்யும் நோக்கில்-நவீனத் துவப் போக்கில்-மொழியின் எல்லைகளை விரிக்கும் போக்கில் எழுதப்பட்டவை என் பதையும் சுட்டியிருக்கிறார்கள்.

இந்த மூன்றாம் காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமது பயணத்தின் நோக்கத்தைத் தேடும் முகமாக-உள்நோக்குமுகமாக சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதனால்தான் முன் இரு காலப்பகுதிகளையும்விட இவற்றில் தன்னையே கதைசொல்லியாக வைத்து எழுதும் பாங்கு கூடியிருக்கிறது. எனவே சிறுகதைகளிலும் கதைசொல்லல் சார்ந்த கதை கள்-பிறகு சோதனைக் கதைகள்-பிறகு தன்வெளிப்பாட்டுக் கதைகள் என்ற இயக்கம் அமைந்திருக்கிறது. இதுதான் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் சுந்தர ராமசாமியின் இயக்கம்.

‘பிள்ளை கெடுத்தாள் விளை’ நல்ல சமூகக்கதை அல்லவா, அது முதற்கால கட்டத்திற்கான திரும்பிச் செல்லலைக் குறிப்பது ஆகாதா என்று கேட்கலாம். சமூகக் கதைதான், யதார்த்தக் கதைதான். அந்த அளவில் முதற்காலப்பகுதிக்கும் இதற்கும் உள்ள உறவு முற்றிவிடுகிறது. முதற்கால கட்டக் கதையாக இருந்தால் இது செல்லத் துரை இந்தக் கதை சொல்வதுபோலவே அமைந்திருக்கும். இங்கு தங்கக்கண் என்ற இரண்டாம் கதைசொல்லி ஏன் நுழைகிறான்? ஏன் வார்த்தைக்கு வார்த்தை “நெனைச்சிப்பாரு செல்லத்தொரெ” என்று சொல்கிறான்? ஏன் அவ்வளவு சிறப்பாக வருண னைகளைத் தொடுக்கிறான்?

‘ரத்னாபாயின் ஆங்கிலத்’தில் “மொழி ஒரு அற்புதம்” என்று ரத்னாபாய் மூலமாக சந்தோஷப்பட்டார் சு.ரா. இங்கு, “தங்கக்கண் கண்டு பிடித்த உண்மைகளைவிட, அவனுடைய கற்பனைகள்தான் என்னைப் பைத்தியமாக அடித்தன” என்கிறான் செல்லத்துரை. ‘என்ன வாய்ஜாலம்’ என்றும், ‘அவன் கவிஞன்’ என்றும் பாராட்டுகிறான். இங்கு பெண்ணின்மீது இழைக்கப்பட்ட அபவாதத்தையும் மீறி மொழியின்மீதே மீண்டும் மீண்டும் கவனம் குவிக்கப்படுகிறது-ஆனால் இந்தச் சமயம் ஆங்கிலத்தின்மீது அல்ல. இது ஒரு மீட்சி மட்டும் அல்ல, மொழியின் வாயிலாகத்தான் வெளியில்-புறத்தில் மட்டும் அல்ல, அகத்தில்-உள்ளேயும் செல்ல முடியும். அதுதான் இங்கு நோக்கமும்கூட. இக்காலப்பகுதியில் எழுதப்பட்ட மற்றக் கதைகளையும் பார்த்தால் உள்முகநோக்கின்மீதும், காலம்செய்யும் கோலத்தைப் புரிந்து கொள்ளும் பாவனையின்மீதும், அதற்கு எவ்வளவுதொலைவு மொழி உதவும் என்ற தேடலின்மீதும் சுந்தரராமசாமியின் சிந்தனைகள் படர்ந்துசெல்வதைப் பார்க்கலாம்.

புறநோக்கிலிருந்து அகநோக்கிற்கு மாறுவது முன்னேற்றமா? பின்னிறக்கமா? ஆன்மிகக் கருத்தியலில் உடன்பாடு கொண்டவர்கள் முன்னேற்றம்தான் என்பார்கள். சமூகமுன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் பின்னிறக்கமாக இதை நோக்குவார் கள். ஆனால் இந்த வாதத்தைவிட நமக்கு முக்கியமானது அவருடைய மனிதநேயம் விரிந்திருக்கிறதா என்பதுதான். நிச்சயமாகவே, அவரது நேயம் மனிதர்களையும் மீறி, பறவைகள், நாய்கள் இவற்றின்மீதெல்லாம் விரிந்துபரந்து செல்வதைப் பின்னர் எழுதிய கதைகள் காட்டுகின்றன. காகங்கள், மயில், பள்ளிக்குவந்த நாய்க்குட்டி என உதாரணங்கள் சொல்லலாம்.

ஜீவராசிகளின்மீது காட்டும் அன்பு-பிறரின், பிறவற்றின் நன்மையில், சுகத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் எல்லையற்ற அன்பு ஒன்றைத்தான் உலகம் என்றைக்கும் ஜீவாதாரமாக நம்பியிருக்கிறது. அது குறைந்துபோவதால்தான் மனிதன் பணத் தின் பின்னால் ஓடித் தான் ஒருவனே உலகில் மேலாக இருக்கவேண்டும் என்று அலைகிறான், இயற்கையை அழிக்கிறான், பிற மனிதர்களின், ஜீவராசிகளின் இருப்பையும் ஒடுக்குகிறான்.

சுந்தர ராமசாமியின் இடையறாப் பேரன்பு சகல ஜீவராசிகள் மீதும் பரவி வந்ததைச் சோதனைக்காலக் கதை களைவிட, கலிபோர்னியாக் காலக் கதைகள் சிறப்பாகக் காட்டுகின்றன.

எழுத்தின் இடையறாத இயக்கத்தில் தம்மைக் கரைத்துக்கொண்டவர் சுந்தர ராமசாமி. கருத்தியல் காலத்துக்குக் காலம் மாறிவந்தபோதும் தம் எழுத்துகள் வாயிலாகத் தமிழின் சாத்தியப்படல்களை மிகவும் விரிவுபடுத்தியிருக்கிறார் என்ற விதத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாகச் சொல்லப்படவேண்டியவர் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. அந்த உள்ளுணர்வு அவருக்கே இருந்த காரணத்தினால்தான் (பாரதியின் வாரிசாக அல்ல), தம்மைப் புதுமைப்பித்தனுக்குப் பின்வந்தவராகவே நோக்கிக்கொண்டார் என்றும் தோன்றுகிறது.

திறனாய்வு