சுயசார்பு

நாமே வேளாண்மை செய்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே தன்னிறைவு விவசாயம் என்று நம்மாழ்வார் சொல்வதுண்டு.
இப்போதெல்லாம் கடைகளில் வரும் எண்ணெய்கள் பாரபின் குரூட் ஆயில் கழிவுகள் கலந்துதான் விற்பனைக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
நாமே நம் வீட்டுத்தேவைகளுக்கு எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாமே என யோசனை தோன்றியது.
எங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காய்களை இதுவரை வெளியே விற்றுவிடுவேன். இம்முறை எண்ணெய் தயாரித்து விடுவது என முடிவெடுத்தேன்.
எங்கள் தோட்டம் வளமான மண் உடையது. அவ்வப்போது சாண உரம்மட்டுமே போடுவோம். 20 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் என்பதால் தேங்காய் நல்ல அடர்வாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய்களை உடைத்து இரண்டுநாள் வெயிலில் காயவைத்து சிறு கத்தியால் தோண்டினால் சில்லு தனியாகவும், பருப்பு தனியாகவும் வந்துவிடும்.
தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு மாதம் வெயிலில் காயவைத்தேன். நன்றாக காய்ந்து கொப்பரை ஆனதும் செக்கில் கொடுத்து எண்ணெய் ஆக்கி விட்டேன்.
நூறு தேங்காய்க்கு 12 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைத்தது. அதில் மீந்த தேங்காய்ப் பிண்ணாக்கைச் செக்குக்காரரே எடுத்துக்கொண்டதால் ஆட்டியதற்குக் கட்டணம் வாங்கவில்லை.
இப்போது என் வீட்டுச் சமையலுக்கு சுத்தமான, மணமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் தயார்! நீங்களும் முயற்சி செய்யலாமே நண்பர்களே!

தினம்-ஒரு-செய்தி