தக்காளித் தோட்டம்

ஓர் இத்தாலியக் கிழவர் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்துவந்தார். ஆண்டுக்கொருமுறை அவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிடுவது வழக்கம். ஆனால் தரை கெட்டியாக இருந்ததால் அவருடைய வேலை மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. அவருக்கு உதவி செய்வது அவருடைய மகன் வின்சென்ட். ஆனால் இப்போது அவன் சிறையில் இருந்தான்.
இந்தக் கிழவர் தன் நிலையைப் பற்றித் தன் மகனுக்கு எழுதினார்: “அன்புள்ள வின்சென்ட், என்னால் இந்த வருடம் தக்காளித் தோட்டம் வைக்க முடியாதென்று நினைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. அதனால் தோட்டப்பகுதி முழுவதையும் கொத்தமுடியவில்லை. நீ இருந்தால் நிச்சயம் வழக்கம்போலவே தோட்டத்தை உருவாக்குவாய். ஆனால் என்ன செய்வது? அன்புடன், உன் தந்தை.”
அதற்கு அவர் மகனுடைய பதில் வந்தது: “அப்பா, நீங்கள் நிலத்தைக் கொத்தவேண்டாம். அங்கேதான் உடல்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன.”
அடுத்தநாள் விடியற்காலை நான்கு மணிக்கு அமெரிக்க உளவு நிறுவனத்தினர் வந்து தோட்டப்பகுதி முழுவதையும் கொத்திப் பார்த்தனர். அவர்களுக்கு உடல் எதுவும் கிடைக்கவில்லை.
அதே நாளன்று அவர் மகனிடமிருந்து மற்றொரு கடிதம் கிழவருக்கு வந்தது. “அன்புள்ள அப்பா, இப்போது தோட்டத்தில் பயிரிட முடியும். பயிரிடுங்கள். நான் இருக்கும் நிலையில் இதைத்தான் என்னால் செய்ய முடிந்தது. அன்புடன், வின்சென்ட்.”

தினம்-ஒரு-செய்தி