தமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்

தமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்

–பேராசிரியர் க. பூரணச்சந்திரன்.

(‘திறனாய்வுச் செம்மல்’ என்ற விருது திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சார்பாக எனக்கு 02-02-2018 அன்று அளிக்கப்பட இருக்கிறது. அதன் ஏற்புரையாகத் தயாரிக்கப்பட்ட கட்டுரை இது.)

கால வரிசைப்படி நான் எழுதிய திறனாய்வு நூல்களாக இங்கு தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள், கவிதையியல், கதையியல், சான்றோர் தமிழ், பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிர, அமைப்புமையவாதமும் பின்னமைப்பு வாதமும், தொடர்பியல் சமூகம் வாழ்க்கை, க.நா.சு., போன்றவற்றிலும் என் நோக்கு ஓரளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவையன்றி, நான் மொழிபெயர்த்த, தொகுத்த சில நூல்களிலும் என் அணுகுமுறைகள் வெளிப்பட்டுள்ளன.

முதன்முதலில் நான் எழுதிய நூல் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு. 1983ஆம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக் கழகக் குறுகியகால திட்டப்பணி ஒன்றிற்காக நான் எழுதிய நூல் அது. முதுகலை ஆங்கில இலக்கியத்தில் திறனாய்வினைச் சிறப்பாகப் படித்திருந்ததாலும், குறிப்பாக அச்சமயத்தில் வெளிவந்திருந்த டேவிட் லாட்ஜின் இலக்கியத் திறனாய்வு பற்றிய தொகுப்பு நூலான Twentieth Century Literary Criticism: A Reader என்ற நூலைப் படித்திருந்ததாலும் துணிச்சலாகவே இந்தத் திட்டப்பணியில் இறங்கினேன். மேலும் இலக்கியச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து படித்து வந்ததால் என் மனத்தில் உருவவியல் அணுகுமுறை தொடர்பான கருத்துகள் ஊன்றியிருந்தன. திருவாளர்கள் க. நா. சு,, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்ததால் ஏறத்தாழ கலை-கலைக்காகவே என்ற மாதிரியான கருத்தும், உள்வட்டம்-வெளிவட்டம் போன்ற சிந்தனைகளும் பதிவாகியிருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியத் திறனாய்வைப் பயின்றதன் காரணமாகக் க.நா.சு போன்றவர்களின் அவ்வப்போதான மனப்பான்மைக் கேற்ற பட்டியல் மதிப்பீடுகளில் எனக்கு அக்கறை இருந்ததில்லை. ஆகவே இலக்கியத் திறனாய்வு வரலாற்றை எழுதும்போது, அமெரிக்கப் புதுத் திறனாய்வு அடிப்படையையே நான் முக்கியமாக அதில் முன்வைத்தேன். குறிப்பாக, முதல் இயலில் எவ்விதம் ஒரு நூலை மதிப்பிடுவது என்பதற்கு அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் ஜான் குரோ ரேன்சம் எவையெல்லாம் திறனாய்வு அல்ல என்று குறிப்பிடும் ஒரு பகுதியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்திருந்தேன்.

உருவவியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருத்துகளைச் சுருக்கமாக
(1) வடிவம்தான் முதன்மையானது, யாவற்றையும் உள்ளடக்குவது (இதில் ஒருமைப்பாடு, சீர்மை, உயிரித்தன்மை ஆகியவை அடங்கும்)
(2) உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாதவை (இதில் இலக்கியத்தைப் பொழிப்புரை செய்ய முடியாது, வடிவத்திற்கு முந்திப் பிறப்பதல்ல உள்ளடக்கம் என்பவை அடக்கம்)
(3) குறிப்புமுரணும் பொருள்மயக்கமும் முதன்மையாக நோக்கப்பட வேண்டிய இலக்கியப் பண்புகள் (இவற்றுள் எதிர்மாறு, இழுவிசை, உள்முரண்கள் பற்றிய கருத்துகள் அடங்கும்)
(4) இலக்கிய மொழி தனித்தது, முதன்மையானது (இதில் அருவம் சாராத, பருமையான மொழியைக் கையாளவேண்டும் என்பது அடக்கம்)
(5) பனுவலை ஆழ்ந்து நுணுகி ஆராய வேண்டும் (உள்நோக்கப் போலிநியாயம், விளைவுப் போலிநியாயம் போன்றவை அடங்கும்)
என்று குறிப்பிடலாம்.

உருவவியல் அடிப்படையில் நான் பல திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். க.நா.சு. பற்றிய மதிப்பீடு, குறுந்தொகையில் பொருள்மயக்கம், திருக்குறளில் பொருள் மயக்கம், சங்க இலக்கியம் மறுவாசிப்பு போன்ற கட்டுரைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். எனது கவிதையியல், கதையியல் நூல்களில் முதன்மையாக உருவவியல் அணுகுமுறையையே முன்வைத்துள்ளேன்.
1983இல் எழுதி முடிக்கப்பட்ட தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு திரு. வ.அய். சுப்பிரமணியம் பணிமுடிந்து சென்றபின் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பேரா. ஆறு. இராமநாதன் முயற்சியால் 2005ஆம் ஆண்டில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளிவந்தது.

அச்சமயத்தில்தான் தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல் வெளிவந்து அது மிகுதியாகப் பேசப்படலாயிற்று. அச்சமயத்தில் கோவை ஞானி அவர்கள் என்னை அது பற்றி ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அமைப்புவாதம், உருவவியலின் நீட்சியே என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அமைப்பு மொழியியலும் தெரியும். என்றாலும் தமிழவன் பேசிய அமைப்பியம் சரிவர உருப்பெற்று வெளியிடப்பட்டதாகத் தோன்றவில்லை. அக்காலத்தில் எதிர்க்கமுடியாத ஓர் ஆளுமை அவர். எனவே நான் காலந்தாழ்த்தியே எனது அறிமுக நூலான அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்பதை எழுத (1989) கோவை ஞானி அதை வெளியிட்டார் (1990). அதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவெனில், அப்பொழுதே எனக்கு அமைப்புவாதத்தின்மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது என்பதுதான். அந்நூலின் இறுதிப்பகுதியைப் படிப்பவர்கள் அமைப்புமைய வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, கடுமையாக விமரிசனத்தை அதன்மீது வைக்கிறேன் என்பதையும் உணரலாம். இதே நோக்கினை இன்னும் பின்னால், சுந்தர ராமசாமியின் காலச்சுவடு மலரில் எழுதிய கட்டுரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். எனது அமைப்புமையவாதம் புத்தகத்தின் இறுதிப்பகுதி இது.

“மானிடக் கர்த்தாக்கள் இயற்கை பற்றிய சரியான அறிவின்றி கலாச்சார உற்பத்திச் செயல்முறைகள் பற்றிய அறிவை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. மேலமைப்புவாதங்களின் வருகைக்கு முன்பு, சுயத்துவம் என்பது இடைவிடாத அனுபவம் பெறற்குரியது என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் நிகழ்ந்தன. மேலமைப்புவாதங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தன. ஆனால் அடுத்து எதனை மையமாக வைத்து உலகை அறிவது என்ற பிரச்சினை எழுகிறது…வரலாற்று நோக்கின்மை, மனிதனைக் கரைத்தழித்தல் போன்ற யாவற்றையும் ஒருங்குவைத்து நோக்கும்போது வெறும் சூனியவாதமே எஞ்சுகிறது.”

அமைப்புமைய வாதம் நூலுக்கு முன்னரே எழுதப்பட்டு ஆனால் பின்னால் வெளிவந்த நூல் தொடர்பியல் சமூகம் வாழ்க்கை. அதில் குறியியல் பற்றி மிக நன்றாகவே அறிமுகம் செய்திருக்கிறேன். மேலும் அதன் இறுதிப்பகுதி யில் மார்க்சிய அடிப்படையில் ஊடகங்களை நோக்குவதற்கான தேவையை நன்றாகவே உணர்த்தியிருக்கிறேன். 1990களில் திருச்சி பால்’ஸ் செமினரியிலிருந்து வெளிவந்த அன்னம் இறையியல் சிற்றேடு, லயோலா கல்லூரியிலிருந்து வெளிவந்த ஊடக ஏடுகள் போன்றவற்றில் மார்க்சிய அணுகுமுறையிலான கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறேன். திரு. ஞானி அவர்களின் தொடர்பினால் மார்க்சிய அணுகுமுறை என்னிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே ஆனது. நான் மொழிபெயர்த்த சிறைப்பட்ட கற்பனை, இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு போன்ற நூல்களிலும் அந்த அணுகுமுறை சிறப்பாகவே பயன்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறை பற்றி ஓரளவு மாணவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்பதால் அதனை நான் இங்கு விளக்க முற்படவில்லை.

1990களின் இடைப்பகுதியில் நான் எழுதிய முக்கியமான நூல் கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும். அதில் தகர்ப்பு, குறியியல், வாசக மையத் திறனாய்வு ஆகிய கொள்கைகளை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி யிருக்கிறேன். இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் என்ற அடுத்த நூலில் வாசக எதிர்வினைத் திறனாய்வு இன்னும் நன்றாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றோர் தமிழ் என்ற நூல், சங்க இலக்கியம் பற்றிய எனது சில கட்டுரைகளின் தொகுப்பு. இறுதியாக 2016இல் வெளிவந்த நூல் பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்.

பொருள்கோள் மிகவும் அடிப்படையான விஷயம். ஒருவகையில் பார்த்தால் இந்த நோக்குதான் எனது பிற நோக்குகளுக்கு அடிப்படையாக முதலிலிருந்தே அமைந்துள்ளது என்பதையும் உணர்கிறேன். காலச்சுவடில் குறிஞ்சிப்பாட்டு பற்றிய என் கட்டுரையைப் படித்த பேராசிரியர் அ. ராமசாமி அப்போது அக்கட்டுரையில் என் அணுகுமுறை என்ன என்ற கேள்வியை அந்த இதழுக்குக் கடிதமாக எழுதியிருந்தார். அப்போது நான் அவருக்கு விடை சொல்லவில்லை. இப்போது அதைத் தெளிவாகவே சொல்கிறேன் – அது பொருள்கோள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு என்பதுதான். சாகித்திய அகாதெமியில் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசியபோது, எனது உரை இப்படித் தொடங்குகிறது.

“As a teacher of literature in Tamil, I know the smallest deviations in interpreting a text results in huge differences in the meaning of the text. While teaching literature, we interpret a text to children of our own language. While doing a translation, we interpret a text to the people of another language and culture. Hence in my experience, teaching and translating is one and the same act, but done to different kinds of audience. But in translation we have to be more careful; it involves interpreting the text to another people on one hand; and, if found with flaws, it will not deliver the correct ‘thing’ to those people who have not read it; and it will degrade the quality of the interpreter (and hence his own community) to the people outside his culture.”

இதில் நமது மாணவர்களுக்கு இலக்கியத்தை விளக்குவதுபோல வேறொரு கலாச்சாரத்தினருக்கு ஒரு நூலை விளக்கப்படுத்துவதே மொழிபெயர்ப்பு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விளக்கப்படுத்தும் தொழில்தான் பொருள்கோள். அதனால் வடிவவியல் நோக்கோ, மார்க்சிய நோக்கோ, குறியியல் நோக்கோ, வாசகத்திறனாய்வு நோக்கோ எதுவாயினும், அதன் அடிப்படையில் பொருள்காணுதல், விளக்குதல் என்ற செயல்கள் – அதாவது பொருள்கோள் முறைகள் முக்கியமானவை ஆகின்றன. அதிலும் குறிப்பாகத் தகர்ப்புச் செயலில், அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

“பொருள்கோள் என்பதை ஒரு பனுவலுக்குப் பொருள் விளக்கம் தருதலும் அதைப் பகுத்தாராய்தலும் பற்றிய கோட்பாடு என்று விளக்குவார்கள்… பொருள்கோளில் உரைசெய்வது என்பது ஒரு பகுதியாக அமையக்கூடும். ஆனால் அதற்கும் மேலாக, அதை எப்படிச் செய்கிறோம் என்பது பற்றிய ஆய்வுத் துறையாக அமைவதுதான் பொருள்கோள்.”

எப்படிச் செய்கிறோம் என்பதில் வெவ்வேறுவித திறனாய்வு அணுகுமுறைகளைக் கொண்டுவரும்போது அந்தந்த வகைத் திறனாய்வாக அது மலர்கிறது என்று கருதுகிறேன். அதனால் தொடக்கத்திலிருந்து எனது அடிப்படை அணுகுமுறை பொருள்கோள் சார்ந்தது என்று ஓரளவு குறிப்பிடலாம். இது ஏற்கெனவே தமிழில் உள்ள எழுத்தெண்ணிப் படித்தல், இலக்கண அடிப்படையிலான ஆய்வு போன்ற முறைகளை உள்ளடக்கியதுதான்.

முக்கியமாக பால் ரிக்கோர் முன்வைக்கும் அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பதைப் பற்றிச் சில சொல்லவேண்டும். அதைப் பற்றி எனது நூலில் விளக்கும் ஒரு பகுதியை இங்குத் தருகிறேன்.
“ஒரு நபர் வெளிப்படுத்தும் சொற்களும் சிந்தனைகளும், உடல் இருப்புநிலை, வாய்தவறுதல் உள்ளிட்ட அவருடைய நடத்தை முறைகளும் சில சமயங்களில் அர்த்தமற்றவைபோலத் தோன்றலாம். ஆனால் அவை அவருடைய உண்மையான சிந்தனைகளை வெளிக்காட்டுகின்றன. புறத்தில் அவற்றுக்கு எதிரான சிந்தனைகள் அல்லது செயல்கள் வெளிப்பட்டாலும் அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. இதுதான் அவநம்பிக்கைப் பொருள்கோளின் முக்கியக் கூறு. இதற்குச் சான்றுகளாக,
ஃ கருத்தியல்கள் வர்க்கச் சார்புகளில் நிலைகொண்டுள்ளன என்ற மார்க்ஸின் கோட்பாட்டையும்,
ஃ ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுதல் போன்ற கிறித்துவச் சிந்தனைகள், உண்மையில் பிறர் வெறுப்பிலும் தன் வெறுப்பிலும் உருவாகியவை என்ற நீட்சேயின் கோட்பாட்டையும்,
ஃ அர்த்தமுள்ள, அர்த்தமற்ற நடத்தை முறைகள் எவையாயினும் அவை நனவிலி உந்தல்களையும் அர்த்தங்களையும் காட்டுகின்றன என்ற ஃப்ராய்டின் கோட்பாட்டையும் காட்டுவார்கள். இவை புற மற்றும் உட்கிடையான மனநிலைகளின் ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எனவே இவை பொருள்கோள் முறைகள் ஆகின்றன.”

இத்தகைய ஓர் அணுகுமுறையைத்தான் எனது கவிதைமொழி நூலிலும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் நூலின் சில கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறேன். எனது அணுகுமுறைகள் பற்றி மேற்கூறிய கருத்துகள் போதுமானவை என்று கருதுகிறேன். பிற கட்டுரைகள், கால வரிசைப்படி நான் எழுதிய திறனாய்வு நூல்களாக இங்கு தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள், கவிதையியல், கதையியல், சான்றோர் தமிழ், பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிர, அமைப்புமையவாதமும் பின்னமைப்பு வாதமும், தொடர்பியல் சமூகம் வாழ்க்கை, க.நா.சு., போன்றவற்றிலும் என் நோக்கு ஓரளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவையன்றி, நான் மொழிபெயர்த்த, தொகுத்த சில நூல்களிலும் என் அணுகுமுறைகள் வெளிப்பட்டுள்ளன.
முதன்முதலில் நான் எழுதிய நூல் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு. 1983ஆம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக் கழகக் குறுகியகால திட்டப்பணி ஒன்றிற்காக நான் எழுதிய நூல் அது. முதுகலை ஆங்கில இலக்கியத்தில் திறனாய்வினைச் சிறப்பாகப் படித்திருந்ததாலும், குறிப்பாக அச்சமயத்தில் வெளிவந்திருந்த டேவிட் லாட்ஜின் இலக்கியத் திறனாய்வு பற்றிய தொகுப்பு நூலான Twentieth Century Literary Criticism: A Reader என்ற நூலைப் படித்திருந்ததாலும் துணிச்சலாகவே இந்தத் திட்டப்பணியில் இறங்கினேன். மேலும் இலக்கியச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து படித்து வந்ததால் என் மனத்தில் உருவவியல் அணுகுமுறை தொடர்பான கருத்துகள் ஊன்றியிருந்தன. திருவாளர்கள் க. நா. சு,, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்ததால் ஏறத்தாழ கலை-கலைக்காகவே என்ற மாதிரியான கருத்தும், உள்வட்டம்-வெளிவட்டம் போன்ற சிந்தனைகளும் பதிவாகியிருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியத் திறனாய்வைப் பயின்றதன் காரணமாகக் க.நா.சு போன்றவர்களின் அவ்வப்போதான மனப்பான்மைக் கேற்ற பட்டியல் மதிப்பீடுகளில் எனக்கு அக்கறை இருந்ததில்லை. ஆகவே இலக்கியத் திறனாய்வு வரலாற்றை எழுதும்போது, அமெரிக்கப் புதுத் திறனாய்வு அடிப்படையையே நான் முக்கியமாக அதில் முன்வைத்தேன். குறிப்பாக, முதல் இயலில் எவ்விதம் ஒரு நூலை மதிப்பிடுவது என்பதற்கு அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் ஜான் குரோ ரேன்சம் எவையெல்லாம் திறனாய்வு அல்ல என்று குறிப்பிடும் ஒரு பகுதியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்திருந்தேன்.
உருவவியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருத்துகளைச் சுருக்கமாக
(1) வடிவம்தான் முதன்மையானது, யாவற்றையும் உள்ளடக்குவது (இதில் ஒருமைப்பாடு, சீர்மை, உயிரித்தன்மை ஆகியவை அடங்கும்)
(2) உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாதவை (இதில் இலக்கியத்தைப் பொழிப்புரை செய்ய முடியாது, வடிவத்திற்கு முந்திப் பிறப்பதல்ல உள்ளடக்கம் என்பவை அடக்கம்)
(3) குறிப்புமுரணும் பொருள்மயக்கமும் முதன்மையாக நோக்கப்பட வேண்டிய இலக்கியப் பண்புகள் (இவற்றுள் எதிர்மாறு, இழுவிசை, உள்முரண்கள் பற்றிய கருத்துகள் அடங்கும்)
(4) இலக்கிய மொழி தனித்தது, முதன்மையானது (இதில் அருவம் சாராத, பருமையான மொழியைக் கையாளவேண்டும் என்பது அடக்கம்)
(5) பனுவலை ஆழ்ந்து நுணுகி ஆராய வேண்டும் (உள்நோக்கப் போலிநியாயம், விளைவுப் போலிநியாயம் போன்றவை அடங்கும்)
என்று குறிப்பிடலாம்.
உருவவியல் அடிப்படையில் நான் பல திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். க.நா.சு. பற்றிய மதிப்பீடு, குறுந்தொகையில் பொருள்மயக்கம், திருக்குறளில் பொருள் மயக்கம், சங்க இலக்கியம் மறுவாசிப்பு போன்ற கட்டுரைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். எனது கவிதையியல், கதையியல் நூல்களில் முதன்மையாக உருவவியல் அணுகுமுறையையே முன்வைத்துள்ளேன்.
1983இல் எழுதி முடிக்கப்பட்ட தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு திரு. வ.அய். சுப்பிரமணியம் பணிமுடிந்து சென்றபின் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பேரா. ஆறு. இராமநாதன் முயற்சியால் 2005ஆம் ஆண்டில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளிவந்தது.
அச்சமயத்தில்தான் தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல் வெளிவந்து அது மிகுதியாகப் பேசப்படலாயிற்று. அச்சமயத்தில் கோவை ஞானி அவர்கள் என்னை அது பற்றி ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அமைப்புவாதம், உருவவியலின் நீட்சியே என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அமைப்பு மொழியியலும் தெரியும். என்றாலும் தமிழவன் பேசிய அமைப்பியம் சரிவர உருப்பெற்று வெளியிடப்பட்டதாகத் தோன்றவில்லை. அக்காலத்தில் எதிர்க்கமுடியாத ஓர் ஆளுமை அவர். எனவே நான் காலந்தாழ்த்தியே எனது அறிமுக நூலான அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்பதை எழுத (1989) கோவை ஞானி அதை வெளியிட்டார் (1990). அதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவெனில், அப்பொழுதே எனக்கு அமைப்புவாதத்தின்மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது என்பதுதான். அந்நூலின் இறுதிப்பகுதியைப் படிப்பவர்கள் அமைப்புமைய வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, கடுமையாக விமரிசனத்தை அதன்மீது வைக்கிறேன் என்பதையும் உணரலாம். இதே நோக்கினை இன்னும் பின்னால், சுந்தர ராமசாமியின் காலச்சுவடு மலரில் எழுதிய கட்டுரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். எனது அமைப்புமையவாதம் புத்தகத்தின் இறுதிப்பகுதி இது.
“மானிடக் கர்த்தாக்கள் இயற்கை பற்றிய சரியான அறிவின்றி கலாச்சார உற்பத்திச் செயல்முறைகள் பற்றிய அறிவை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. மேலமைப்புவாதங்களின் வருகைக்கு முன்பு, சுயத்துவம் என்பது இடைவிடாத அனுபவம் பெறற்குரியது என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் நிகழ்ந்தன. மேலமைப்புவாதங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தன. ஆனால் அடுத்து எதனை மையமாக வைத்து உலகை அறிவது என்ற பிரச்சினை எழுகிறது…வரலாற்று நோக்கின்மை, மனிதனைக் கரைத்தழித்தல் போன்ற யாவற்றையும் ஒருங்குவைத்து நோக்கும்போது வெறும் சூனியவாதமே எஞ்சுகிறது.”
அமைப்புமைய வாதம் நூலுக்கு முன்னரே எழுதப்பட்டு ஆனால் பின்னால் வெளிவந்த நூல் தொடர்பியல் சமூகம் வாழ்க்கை. அதில் குறியியல் பற்றி மிக நன்றாகவே அறிமுகம் செய்திருக்கிறேன். மேலும் அதன் இறுதிப்பகுதி யில் மார்க்சிய அடிப்படையில் ஊடகங்களை நோக்குவதற்கான தேவையை நன்றாகவே உணர்த்தியிருக்கிறேன். 1990களில் திருச்சி பால்’ஸ் செமினரியிலிருந்து வெளிவந்த அன்னம் இறையியல் சிற்றேடு, லயோலா கல்லூரியிலிருந்து வெளிவந்த ஊடக ஏடுகள் போன்றவற்றில் மார்க்சிய அணுகுமுறையிலான கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறேன். திரு. ஞானி அவர்களின் தொடர்பினால் மார்க்சிய அணுகுமுறை என்னிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே ஆனது. நான் மொழிபெயர்த்த சிறைப்பட்ட கற்பனை, இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு போன்ற நூல்களிலும் அந்த அணுகுமுறை சிறப்பாகவே பயன்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறை பற்றி ஓரளவு மாணவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்பதால் அதனை நான் இங்கு விளக்க முற்படவில்லை.
1990களின் இடைப்பகுதியில் நான் எழுதிய முக்கியமான நூல் கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும். அதில் தகர்ப்பு, குறியியல், வாசக மையத் திறனாய்வு ஆகிய கொள்கைகளை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி யிருக்கிறேன். இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் என்ற அடுத்த நூலில் வாசக எதிர்வினைத் திறனாய்வு இன்னும் நன்றாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றோர் தமிழ் என்ற நூல், சங்க இலக்கியம் பற்றிய எனது சில கட்டுரைகளின் தொகுப்பு. இறுதியாக 2016இல் வெளிவந்த நூல் பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்.
பொருள்கோள் மிகவும் அடிப்படையான விஷயம். ஒருவகையில் பார்த்தால் இந்த நோக்குதான் எனது பிற நோக்குகளுக்கு அடிப்படையாக முதலிலிருந்தே அமைந்துள்ளது என்பதையும் உணர்கிறேன். காலச்சுவடில் குறிஞ்சிப்பாட்டு பற்றிய என் கட்டுரையைப் படித்த பேராசிரியர் அ. ராமசாமி அப்போது அக்கட்டுரையில் என் அணுகுமுறை என்ன என்ற கேள்வியை அந்த இதழுக்குக் கடிதமாக எழுதியிருந்தார். அப்போது நான் அவருக்கு விடை சொல்லவில்லை. இப்போது அதைத் தெளிவாகவே சொல்கிறேன் – அது பொருள்கோள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு என்பதுதான். சாகித்திய அகாதெமியில் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசியபோது, எனது உரை இப்படித் தொடங்குகிறது.
“As a teacher of literature in Tamil, I know the smallest deviations in interpreting a text results in huge differences in the meaning of the text. While teaching literature, we interpret a text to children of our own language. While doing a translation, we interpret a text to the people of another language and culture. Hence in my experience, teaching and translating is one and the same act, but done to different kinds of audience. But in translation we have to be more careful; it involves interpreting the text to another people on one hand; and, if found with flaws, it will not deliver the correct ‘thing’ to those people who have not read it; and it will degrade the quality of the interpreter (and hence his own community) to the people outside his culture.”
இதில் நமது மாணவர்களுக்கு இலக்கியத்தை விளக்குவதுபோல வேறொரு கலாச்சாரத்தினருக்கு ஒரு நூலை விளக்கப்படுத்துவதே மொழிபெயர்ப்பு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விளக்கப்படுத்தும் தொழில்தான் பொருள்கோள். அதனால் வடிவவியல் நோக்கோ, மார்க்சிய நோக்கோ, குறியியல் நோக்கோ, வாசகத்திறனாய்வு நோக்கோ எதுவாயினும், அதன் அடிப்படையில் பொருள்காணுதல், விளக்குதல் என்ற செயல்கள் – அதாவது பொருள்கோள் முறைகள் முக்கியமானவை ஆகின்றன. அதிலும் குறிப்பாகத் தகர்ப்புச் செயலில், அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
“பொருள்கோள் என்பதை ஒரு பனுவலுக்குப் பொருள் விளக்கம் தருதலும் அதைப் பகுத்தாராய்தலும் பற்றிய கோட்பாடு என்று விளக்குவார்கள்… பொருள்கோளில் உரைசெய்வது என்பது ஒரு பகுதியாக அமையக்கூடும். ஆனால் அதற்கும் மேலாக, அதை எப்படிச் செய்கிறோம் என்பது பற்றிய ஆய்வுத் துறையாக அமைவதுதான் பொருள்கோள்.”
எப்படிச் செய்கிறோம் என்பதில் வெவ்வேறுவித திறனாய்வு அணுகுமுறைகளைக் கொண்டுவரும்போது அந்தந்த வகைத் திறனாய்வாக அது மலர்கிறது என்று கருதுகிறேன். அதனால் தொடக்கத்திலிருந்து எனது அடிப்படை அணுகுமுறை பொருள்கோள் சார்ந்தது என்று ஓரளவு குறிப்பிடலாம். இது ஏற்கெனவே தமிழில் உள்ள எழுத்தெண்ணிப் படித்தல், இலக்கண அடிப்படையிலான ஆய்வு போன்ற முறைகளை உள்ளடக்கியதுதான்.
முக்கியமாக பால் ரிக்கோர் முன்வைக்கும் அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பதைப் பற்றிச் சில சொல்லவேண்டும். அதைப் பற்றி எனது நூலில் விளக்கும் ஒரு பகுதியை இங்குத் தருகிறேன்.
“ஒரு நபர் வெளிப்படுத்தும் சொற்களும் சிந்தனைகளும், உடல் இருப்புநிலை, வாய்தவறுதல் உள்ளிட்ட அவருடைய நடத்தை முறைகளும் சில சமயங்களில் அர்த்தமற்றவைபோலத் தோன்றலாம். ஆனால் அவை அவருடைய உண்மையான சிந்தனைகளை வெளிக்காட்டுகின்றன. புறத்தில் அவற்றுக்கு எதிரான சிந்தனைகள் அல்லது செயல்கள் வெளிப்பட்டாலும் அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. இதுதான் அவநம்பிக்கைப் பொருள்கோளின் முக்கியக் கூறு. இதற்குச் சான்றுகளாக,
ஃ கருத்தியல்கள் வர்க்கச் சார்புகளில் நிலைகொண்டுள்ளன என்ற மார்க்ஸின் கோட்பாட்டையும்,
ஃ ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுதல் போன்ற கிறித்துவச் சிந்தனைகள், உண்மையில் பிறர் வெறுப்பிலும் தன் வெறுப்பிலும் உருவாகியவை என்ற நீட்சேயின் கோட்பாட்டையும்,
ஃ அர்த்தமுள்ள, அர்த்தமற்ற நடத்தை முறைகள் எவையாயினும் அவை நனவிலி உந்தல்களையும் அர்த்தங்களையும் காட்டுகின்றன என்ற ஃப்ராய்டின் கோட்பாட்டையும் காட்டுவார்கள். இவை புற மற்றும் உட்கிடையான மனநிலைகளின் ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எனவே இவை பொருள்கோள் முறைகள் ஆகின்றன.”
இத்தகைய ஓர் அணுகுமுறையைத்தான் எனது கவிதைமொழி நூலிலும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் நூலின் சில கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறேன். பிற கட்டுரைகள், நூல்களின் இதற்கு எதிரான உடன்பாட்டு அல்லது நம்பிக்கைப் பொருள்கோள் என்பதைக் கையாண்டிருக்கிறேன். எனது அணுகுமுறைகள் பற்றி மேற்கூறிய கருத்துகள் போதுமானவை என்று கருதுகிறேன்.

இலக்கியம்