திருப்பாவையும் திருவெம்பாவையும்

திருப்பாவையும் திருவெம்பாவையும்

தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய சிறப்பு அது கொண்டுள்ள பக்தி இலக்கியத் தொகுதி. தமிழ் பக்தியின் மொழி என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது. இப்பெயரை அது பெற முதன்மையான காரணம், நாயன்மார்களின் பாடல்களும் ஆழ்வார்களின் பாசுரங் களும். பக்தி இயக்கமே தமிழ்நாட்டில் உருவாகி வடக்குநோக்கிச் சென்ற ஒன்றுதான்.
பாகவத புராணத்தின் மகாத்மியப்பகுதியில் பக்தி, பெண்ணுருக் கொண்டு பேசுகிறாள்: “நான் திரவிடத்தில் (தமிழகத்தில்) பிறந் தேன். கருநாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் வளர்ந்தேன். கூர் ஜரத்தில் (குஜராத்தில்) மூப்படைந்தேன், இன்னலுக்காளேன். பிருந் தாவனத்தில் இழந்த இளமையை மீண்டும் எய்தினேன்” (பாகவத புராணம்,1,47-49). வடநாட்டினரும் பக்தி இயக்கம் தமிழகத்தி லே .பிறந்ததை ஒப்புக்கொண்டமைக்கு இக்கூற்றே சான்றாகும். பாகவதபுராணம் ஆழ்வார்களைப் பற்றிப் பேசும் நூல்.
கி.மு.நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசுக்கு வந்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ், வடநாட்டில் “ஹெராக்ளிடஸ் போன்றதொரு கடவுளின் வழிபாடு” இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த ‘ஹெராக்ளிடஸ்’ கிருஷ்ணன்தான் என்று ழான் ஃபிலியோசா போன்றோர் கருதினாலும் வடநாட்டில் அக்காலத்தில் முருகன் வழிபாடு இருந்ததை இது குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது.
இன்றைய ‘ஹிந்து’ மதத்தின் இருபெரும்பிரிவுகள் சைவமும் வைணவமும். சைவத்தின் தலைமைக் கடவுளாகச் சிவனும் வைணவத்தின் தலைவனாகக் கிருஷ்ணனும் கருதப்படுகின்றனர். இக்கடவுளரின் வழிபாடும் தமிழகத்திலிருந்து வடக்கிற்குச் சென்ற ஒன்றுதான். சிவன் தென்னாட்டிற்கே உரிய தெய்வமாகக் கருதப் பட்டதைத் “தென்னாடுடைய சிவனே போற்றி” போன்ற பெரியோர் வாக்குகளும், வடக்கில் கிருஷ்ணன் கோயில்களே மிகப் பெரிதும் காணப்படும் நிலையும் விளக்கும். மேலும் சைவசித்தாந்தம் தென் னாட்டின் தனிப் பெரும் இறைத்தத்துவம் என்பதைப் பலரும் கூறியுள்ளனர்.
விஷ்ணுவின் பத்துஅவதாரங்களில் பூரண அவதாரங்கள் இரா மன் கிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டுமே. கிருஷ்ணன், தமிழக முல்லைநிலத் தெய்வம் மாயோனின் வடநாட்டு வடிவம். (மாயோன் என்றால் மாமைநிறம், கருநிறம் உடையவன் என்று பொருள். கிருஷ்ணன் என்பதன் பொருளும் அதுவே). கிருஷ்ண னின் சகோதரியாகப் பின்னர் சித்திரிக்கப்பட்ட சக்தி/காளி (காளி என்றாலும் ‘கருப்பி’தான்) தமிழகத்தின் பாலைநிலத்திற்குரிய கொற்றவை யின் மறுஆக்கம்.
கிருஷ்ண வழிபாட்டிற்கு ஓர் எல்லை திருப்பாவை என்றால், சிவ வழிபாட்டிற்கு எல்லை திருவெம்பாவை. இவையன்றி சமணத் திருப்பாவை என்ற ஒன்றும் கிடைத்துள்ளது. ஆனால் அதன் பாடல்களின் அமைப்பும், சொற்களின்/வாக்கியங்களின் அமைப்புகளும் அது மிகவும் பிற்பட்டநூல் எனக் காட்டுகின்றன. அதன் தற்காலமொழி போன்றதொரு மொழியைப் பார்க்கும்போது குறைந்தது கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு அளவிலே எழுதப் பட்டதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. மேலும் மாணிக்கவாசகரின் தொடர்களையும் பாடலமைப்பையும் பெரும ளவு எடுத்தாண்டு அது சற்றும் தனித்தன்மையற்று மங்கி நிற்கிறது. இதன் ஆசிரியர் அவிரோதிநாதர் என்ற பெயருடையவர். இதிலும் திருவெம்பாவை போல இருபது பாக்களே உள்ளன. (திருப்பாவை முப்பது பாக்கள் கொண்டது.)
பாட்டின் எண்ணிக்கையில் தமிழின் முதன்மையான இரண்டு பாவைப் பாட்டுகளுக்கும் வேறுபாடிருப்பினும், ஒத்த தன்மைகள் சில இருப்பதை ஆய்வாளர்கள் பலரும் சுட்டியுள்ளனர். பாவை நோன்பு இயற்றல் இரண்டிற்கும் அடிப்படை. பாவை நோன்பி னைக் ‘காத்தியாயினி விரதம்’ என்று குறிப்பிடுகிறது, பாகவத புராணம். பிற்காலத்தில் ‘அம்பாவாடல்’ என்று இந்நோன்பு குறிப்பி டப்பட்டதற்கும் இதுவே காரணமாதல் வேண்டும், காத்தியாயினி விரதம் ஹேமந்த ருதுவின் முதல்நாளில் கொண்டாடப் படுவதா கவும் கூறுகிறது. இது மார்கழி மாத முதல் நாளுடன் ஒத்துச் செல்கிறது.
பெண்கள் விடியற்காலையில் எழுந்து பிறபெண்களையும் துயி லெழுப்புதல், அவர்களை நீராட அழைத்தல், அப்போது உலகியல் சார்ந்த நகைச்சுவை உரையாடலைக் கையாளுதல், மழை பொழியுமாறு வேண்டுதல், நல்ல கணவனை வேண்டுதல், தாம் வணங்கும் இறைவனின் பெருமைகளைக் கூறுதல் போன்ற கூறுகள் இரண்டு பாவைப்பாடல்களுக்கும் பொதுவானவை. அறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், சயாம் நாட்டிலும் (இன்றைய தாய்லாந்து) திரியெம்பாவை, திரிபாவை என்ற பெய ரில் இவை பாடப்படுவதையும், இவற்றின் தலைவனாக அரசன் கருதப்படுவதையும் குறித்துள்ளார்.
இரு பாவைப் பாடல்களுக்கும் நோக்கிலும் போக்கிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. ஆண்டாளின் திருப்பாவை ஒருகோடி என்றால், வாசகரின் திருவெம்பாவை எதிர்க்கோடி. மணிவாச கரின் திருவெம்பாவையில் பெண்கள் நீராடச் செல்கிறார்கள், சிலரைத் துயிலெழுப்புகிறார்கள், பிறகு யாவரும் சென்று நீராடு கிறார்கள், கணவனை வேண்டுகிறார்கள், மழையை வேண்டு கிறார்கள். இறுதியாக இறைவனைப் போற்றுவதுடன் திருவெம் பாவை முடிவடைகிறது.
திருவெம்பாவையில் தன்மைக்கூற்றும் கிடையாது. தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலும் கிடையாது. (தன்மை ஒருமையிலோ, பன்மையிலோ வரும் கூற்றுகளும், உண்மையில் படர்க்கைக் கூற்றுகளே. காரணம், அவை மூன்றாவது மனிதர் பேசும் அயற்கூற்று போலவே (நேர்க்கூற்றினை இன்னொருவர் எடுத்துக்கூறல் போலவே) தொனிக்கின்றன. (“நாம்சேர்ந்து சிவபெருமானைப் பாடுவோம்” என்று அப்பெண் கூறினாள்” என்பதுபோல. “என்று அப்பெண் கூறினாள்” என்பது கூற்றில் மறைந்திருக்கும்).
ஆனால் திருப்பாவையில் அப்படியில்லை. திருப்பாவையின் “நான்”, உண்மையான “நான்”. அதாவது ஒரு தன்னுணர்ச்சிக் கவிதையின் “நான்”. ஆண்டாள் பிருந்தாவனத்தில் தானும் ஒரு கோபிகையாக இருப்பதாகவே கருதுகிறாள். விழித்தெழுமாறும், நீராடுமாறும் அவள் கூப்பிடுவோர் வெறும் சக தோழிமாரல்லர். அவர்களும் யாவரும் கோபிகைக் கன்னியரே. (“வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலை யோ”). எனவே உரையாடல்கள் சம்பிரதாயமான துயிலெழுப்பும் உரையாடல்களாக மட்டுமில்லாமல் உயிரோட்டம் பெறுகின்றன. மணிவாசகர் பாக்கள் மிகச் சிலவற்றில் மட்டும் ஒரு பெண் துயிலெழுப்புவதும், அதற்கு மற்றவள் எதிர்மொழியுரைப்பதும் காணப்படுகிறது. ஆண்டாள் பாக்களிலோ அவ்வுரையாடல் தொடர் கிறது. சான்றாக,
“எல்லே, இளங்கிளியே, இன்னம் உறங்குதியோ?”
“சில்லென்றழையேன்மின் நங்கைமீர், போதருகின்றேன்”.
“வல்லையுன் கட்டுரைகள். பண்டேயுன் வாயறிதும்”
“வல்லீர்கள் நீங்களே! நானேதானாயிடுக”
“ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை”
“எல்லாரும் போந்தாரோ?”
“போந்தார், போந்து எண்ணிக்கொள்”
இப்படித் தொடரும் உரையாடல் அக்காட்சியை ஒரு நாடகமாக்கி விடுகிறது. இந்த நாடகப் பண்பை மணிவாசகர் எம்பாவையில் காணஇயலாது.
மேலும் ஆண்டாளின் பாக்களில் கோபியர்கள் நந்தகோபனு டைய அரண்மனைக் காவலன், வாயில்காப்பான் போன்றோரை யும் விளித்துப் பேசுகின்றார்கள். பிறகு நந்தகோபனை, யசோதை யை எழுப்புகிறார்கள். பிறகு கண்ணனையும் பலதேவனையும் எழுப்புகிறார்கள். கண்ணன் எழுந்திராமற்போகவே (ஒரே பாட்டிற் குள்) நப்பின்னையை எழுப்புகிறார்கள். நப்பின்னையைக் கடிந்து கொள்ளும் பகுதிகள் சுவைமிக்கவை.
மணிவாசகர் பாக்களில் இறுதியில் வரும் போற்றி, திருப் பாவையில் இருபத்துநான்காம் பாட்டிலேயே வந்துவிடுகிறது. (“அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி…”). முப்பதாம் இறுதிப் பாடல், திருப்பாவைப் பாட்டின் பயன் கூறும் பாங்கில் அமை கிறது. இது மணிவாசகரின் எம்பாவையில் கிடையாது.
மணிவாசகரின் எம்பாவையில்,
ஒரு பெண் மற்றொரு பெண்ணை/பெண்களை முன்னிலைப் படுத்தும் முன்னிலைக்கூற்றுகள் 1-8, 10, 12-15, 17, 18, (எழுந்திரு எனல்-9, நீராடு எனல்-1, நாம் நீராடுவோம் எனல்-5. மொத்தம் 15 பாக்கள் இம்முறையில் அமைந்துள்ளன.)
இவற்றில் உரையாடல்களாக அமைந்தவை 3 பாக்கள் மட்டுமே. இறைவனை முன்னிலைப் படுத்தும் கூற்றுகள்-9, 11, 19, 20 (கணவனைக்கொடு-1, எங்களைக் கா-1, உன்பணி செய்ய அருள்-1, போற்றி-1).
மழையை முன்னிலைப்படுத்தும் கூற்று-1 (16 மட்டும்).

ஆண்டாளின் திருப்பாவையில்,
ஒரு பெண் மற்றொரு பெண்ணை/பெண்களை முன்னிலைப்படுத் தும் கூற்றுகள்-1, 3, 5 6-8, 10-15,
கோயில் காப்பான், வாயில்காப்பான்-16,
நந்தகோபன், யசோதை, கண்ணன், பலதேவன் நால்வரையும் விளித்தல்-17,
நப்பின்னையை விளித்துப்பேசல்-18,
மக்களை முன்னிலைப்படுத்தும் பாடல்-2 (“வையத்து வாழ்வீர்காள்”)
கண்ணனை முன்னிலைப்படுத்தல்-4, 21-29
கண்ணன் நப்பின்னை இருவரையும் விளித்துப்பேசுதல்-19, 20
பெண்ணோடு அவள் தாயையும் விளித்துப்பேசுதல் (“மாமீர் அவளை எழுப்பீரோ”)-9,
காண்பார் கூற்று-30
என்று பலவிதமான கூற்றுகள் அமைகின்றன. இவை அற்புதமான நாடகத்தன்மையை உருவாக்குகின்றன.
இவற்றை நோக்கும்போது, மணிவாசகரின் பாக்கள் பாவைப் பாக்களின் பொது மரபிற்கேற்பப் பாடப்பெற்றவை (traditional), புறநிலையின (objective), பக்தர்கள் யாவரின் விருப்பங்களையும் பொதுவாக வெளிப்படுத்துபவை (expressing the wishes of others), எனவே செவ்வியப் பாக்கள் (Classical Poetry); கவர்ச்சி குறைந்தவை.
ஆண்டாளின் பாக்கள், தற்சார்புக் (subjective) கவிதைகள், அவ ளது சொந்த ஆவல்கள், ஆசைகள் போன்றவற்றைச் சொல்லும் ரொமாண்டிக் கவிதைகள். கோபிகையாகத் தன்னையே புனைந்து கொள்ளும் புனைவுக்கவிதைகள். எனவே கவர்ச்சி மிக்கவையாக இலங்குகின்றன.
மணிவாசகரின் எம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை இரண் டிற்கும் வண்ணப் படிமங்களிலும் வேறுபாடு உண்டு. மணிவாச கரின் பாக்களில், வெண்மை, செம்மை, கருமை ஆகிய மூன்றும் அமைகின்றன. பொழுதுவிடிதற் படிமமும், வாவியின் படிமமும், நீராடுதற் படிமமும் அமைகின்றன. மேலும் ஒலிப்படிமங்கள் மிகச் சிறப்பாகப் பல பாக்களில் அமைந்துள்ளன (சான்றுக்கு-”காதார் குழலாடப் பைம்பூண் கலனாட….” இதில் ஆட என்ற சொல் பன்முறை வந்து ஒலிப்படிமத்தை உருவாக்கும் தன்மையைக் காணலாம்.)
ஆண்டாளின் பாக்களில் பொய்கை வருணனை இல்லை. வண்ணப் படிமங்களில் வெண்மை முதலிடம் பெறுகிறது. இதற்குச் சிறப்பான காரணம், பால் பற்றி அவ்வப்போது வரும் குறிப்புகள். மேலும் வெண்சங்கு, வெள்ளி, வெண்தாமரை போன்ற படிமங்கள் உண்டு. மணிவாசகர்தம் பாவையில், வெண்மைப் படிமத்தினை உருவாக்கப் பசுக்கள் இடம்பெற வில்லை. வெண்ணகை, வெண்சங்கு என்பதுபோலவே இடம்பெறுகின்றன. பிறகு செம்மை, பொன்மை, கருமை என்னும் நிறங்கள் வருகின்றன.
திருப்பாவையில் பெரும்பாலும் கருமைநிறம் மழை மேகத்துட னும், கண்ணன் மேனியுடனும் சார்த்தி நோக்கப்படுகிறது. ஆண்டாள் பாக்களில் மணிவாசகர் பாக்களில் உள்ள அளவு ஒலிப்படிமங்கள் இல்லை. மேலும் ஆண்டாள் பாக்களில் (அவள் தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள் வதால்) பசுக்கள் பற்றிய குறிப்புகளும் மிகுதி. மணிவாசகர் எம்பாவையில் இவையெல்லாம் கிடையாது.
இரண்டு பாவைப் பாக்களையும் நோக்கும்போது நாம் முற் கூறிய வேறுபாட்டை “நாயன்மாரின் பாக்கள் யாவும் செவ்வியப் பண்பினையும், ஆழ்வார் அருளிச்செயல்கள் யாவும் ரொமாண்டிக் தன்மையையும் கொண்டவை” என்று இன்னும் பொதுமைப் படுத்தலாம். செவ்வியப்பண்பு (Classical nature) என்பது மரபுசார்ந்த படைப்புத்தன்மையை வெளிப்படுத்துவது. ரொமாண்டிக் தன்மை என்பது தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னுணர்ச்சியாகப் பாட்டு களை வெளிப்படுத்தும் தன்மை. அண்மைக்காலக் கவிஞர்களில் பாரதியிடம் ரொமாண்டிக் தன்மை விஞ்சியிருப்பதைக் காணலாம். இதுபோலவே ஆழ்வார்களின் பாசுரங்களிலும் குறிப்பிடத்தக்க ரொமாண்டிக் தன்மை காணப்படுகிறது.
இதற்குக் காரணங்கள் பல உள்ளன. இரண்டின் தத்துவப் பின்னணியும் ஒரு காரணம். சைவசித்தாந்தம், வைணவசித் தாந்தம் (விசிஷ்டாத்வைதம்) இரண்டுமே தமிழகத்தின் கொடை கள். என்றாலும் எதிரெதிர்த் தன்மைகள் கொண்டவை. சிவன் முழுமுதற்கடவுள் எனவும் அவனது லிங்கரூபம் அருவுருவம் எனவும் சைவசித்தாந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் வைணவசித்தாந்தத்தில் இறைவன் பல அவதாரங்கள் எடுத்துப் பிறந்து இறந்து மனிதரோடு மனிதராக வாழ்வதை ஏற்றுக்கொள் கின்றனர். எனவே சிவபெருமானின் திருவிளையாடல்கள் அதீத நிலையிலும், மனிதர்களோடு ஒன்றாத் தன்மையிலும் உள்ளன. இவற்றைப் பற்றற்றுப் பாடுவதே இயலும். அவ்வாறு பற்றற்ற நிலையில் பாடும்போது, மரபுசார்ந்த சில கதைகளையும் கருத்து களையும் மட்டுமே வைத்துப் பாடவேண்டிவருவதால் செவ்விய அமைப்பிற்குத் தாமாகவே அவை சென்றுவிடுகின்றன. வைண வத்தில் தன்னை மனிதரோடு ஒப்பவைத்துக் கொண்ட இறைவனைத் தம்மோடு புதுப்புது விதங்களில் சேர்த்துப் பாட ஆழ்வார்களால் இயல்கிறது. சான்றாக, பெரியாழ்வார் தன்னைக் கண்ணனின் தாயாகவே கற்பித்துக்கொண்டு காலின் மேலிட்டு எண்ணெய்க் குளியல் செய்வதைக் காணமுடிகிறது. இப்படிப்பட்ட கற்பனைகளுக்குச் சிவபெருமானை ஆட்படுத்தமுடியாதல்லவா?

இலக்கியம்