நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 6

aa
கேள்வி: துரை என்பது தமிழ்ச்சொல்லா? மக்கள் எந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்?

பதில்:
 துரை என்ற சொல்லின் மூலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல் ஐரோப்பியர்கள் நம் நாட்டில் வந்தபிறகுதான் புழக்கத்திற்கு வந்தது. மேலானவர், பதவியில் உயர்ந்தவர் என்ற பொருளில் பொதுவாக ஆங்கிலேயர்களையும், குறிப்பாக அதிகாரிகளையும் துரை என்று அழைப்பது பழக்கமாக இருந்தது. பிறகு அது மக்களின் சிறப்புப் பெயராகவும் காலப்போக்கில் (துரை, துரையரசன், துரைராஜ், பெரியதுரை, தருமதுரை, தம்பிதுரை என்பவை போல) மாறிவிட்டது. இந்தப் பெயர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு காணமுடியவில்லை.
கேள்வி: ஆன்மிகத்தில் அத்வைதம், துவைதம் என்று கூறுகிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
பதில்: 
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவை நம் இந்தியத் தத்துவத்தில் வழங்கும் சொற்கள். ஆன்மிகம் வேறு, தத்துவம் வேறு என்பது என் கருத்து. இந்த மூன்று தத்துவங்களுமே தென்னாட்டில் ஏற்பட்டவை. அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர் ஆதிசங்கரர். அவர் பிறந்த இடம் இன்று கேரளாவில் உள்ள காலடி என்ற ஊர் (அக்காலத்தில்-கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அது தமிழகம்). விசிஷ்டாத் வைதக் கொள்கையை உருவாக்கிய இராமாநுஜர் திருப்பெரும்புதூரைச் சேர்ந்தவர். துவைதக் கொள்கையை உருவாக்கிய மத்வர், உடுப்பியைச் சேர்ந்தவர்.
அத்வைதம் என்பது ஒருமைக் கொள்கை ((monism). அ+த்வைதம். இரண்டு அல்லாதது, ஒன்று, என்பது பொருள். த்வைதம் என்பது இருமைக் கொள்கை (dualism). சுருக்கமா கச் சொல்வதானால், பழங்காலத்தில் ஆன்மாவும் (அதாவது உயிர்களும்) இறைவனும் (தத்துவச் சொல்லாடலில் பிரம்மம்) ஒன்றா, வெவ்வேறா-குறிப்பாக ஜீவன்கள் முக்தி அடைந்தபின் இறைநிலை அடைகின்றனவா, அல்லது இறைவனுக்கு வேறான நிலை யில் உள்ளனவா என்ற கேள்வி பற்றி யோசித்ததன் விளைவு இவை. இறைவனும் ஆன்மாக்களும் வெவ்வேறு அல்ல (இறைவன் பரமாத்மா, மனிதன் ஜீவாத்மா) என்பது அத்வைதம். இவை வெவ்வேறானவை (ஒன்றல்ல, இரண்டுதான்) என்பது துவைதம். மேற்குநாட்டிலும் ஒருமைக்கொள்கை, இருமைக் கொள்கை உண்டு. spirit and matter இவை ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி அது.

கேள்வி: பார்ப்பன வெறுப்பு தமிழ்நாட்டில் ஏன் ஏற்பட்டது? – சதாசிவம், பெங்களூர்

இந்தக் கேள்வி தவறு. பார்ப்பன வெறுப்பு ஏற்படவில்லை, பார்ப்பனிய வெறுப்புதான் ஏற்பட்டது. பார்ப்பனியம் என்பது ஒரு தத்துவம், கொள்கை. அதைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லாச் சாதியினருமே கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவராகப் பிறந்தும், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட பிறகு இன்றைய பார்ப்பனர்களைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சாதி மக்களையே இழிவாக நோக்கும் தலித்துகளும் பார்ப்பனியத்தில் திளைப்பவர்கள்தான். பார்ப்பனர்களைப்போலவே தங்களுக்குக் கீழுள்ளவர்களை இழிவாக நினைக்கின்ற வேளாளர்கள் போன்ற சாதியினரும் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள்தான்.
எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் மேல்-கீழ், உயர்ந்த-தாழ்ந்த என்ற வேறு பாடு இல்லையா என்று பலர் கேட்கிறார்கள். பிற மதங்களில் இல்லையா என்ற கேள் வியையும் எழுப்புகிறார்கள். இதற்கு விடை எளியது. பிற நாடுகளிலும், பிற மதங்களி லும், ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது பிறப்பினால் ஏற்படுகிறது என்றும் அப்படிக் கடவுள் (பிரம்மா) எழுதிவைத்தார் என்றும் நியாயப் படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே நிகழ்கிறது. இதுதான் பார்ப்பனியம். இப்படிப் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு என்றால் இந்த மதத்தில் இருப்பதற்கு நாம் வெட்கப்படுகிறோம்.

கேள்வி பதில்