நாங்கள் சிலர் எங்கள் நண்பன்

நாங்கள் சிலர் எங்கள் நண்பன் கோல்பையை
மிரட்டிக்கொண்டிருந்தோம்

(டொனால்டு பார்த்தெல்மே எழுதிய இந்தச் சிறுகதை, 2000ஆம் ஆண்டில் என்னால் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் வெளி யாயிற்று. பிறகு 2001இல் காலச்சுவடு வெளியிட்ட ‘மஞ்சள் பூக்கள்’ என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியில் இது இடம்பெற்றது.)

அவன் நடந்துகொண்ட முறை காரணமாக, எங்கள் நண்பன் கோல்பையை நாங்கள் சிலபேர் ரொம்ப நாளாகவே மிரட்டிக் கொண்டிருந்தோம். இப்போது அவன் ரொம்பவும் மீறிப் போய் விட்டான். ஆகவே நாங்கள் அவனைத் தூக்கில் போடுவது என்று தீர்மானித்தோம். ரொம்பவும் மீறிப் போய்விட்ட காரணத்துக் காகவே தான் தூக்கிலிடப்படுவதற்கு உட்படவேண்டும் என்ற அவசியமில்லை என்றான் கோல்பை. (தான் ரொம்பவும் மீறிப் போய்விட்டதை அவன் மறுக்கவில்லை.) “ரொம்பவும் மீறிப் போவது என்பது எல்லோரும் சிலசமயம் செய்யக்கூடியதுதான்” என்றான். நாங்கள் இந்த வாதத்திற்கு அதிக கவனம் அளிக்க வில்லை. “தூக்கிலிடப்படும்போது என்ன விதமான இசையை நீ விரும்புகிறாய்” என்று அவனைக் கேட்டோம். அதைப்பற்றிச் சிந் திப்பதாகச் சொன்னான் அவன். ஆனால் முடிவு செய்துகூற சற்றே அவகாசம் தேவை என்றான். “நாங்கள் சீக்கிரமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் எங்கள் நண்பன் ஹவர்ட், ஓர் இசைக்குழு நடத்துநன். அவன் ஆட்களைப் பிடிக்கவேண்டும், அந்தக் குறிப்பிட்ட இசையை வாசிக்கப் பயிற்சி தரவேண்டும். இதற்கெல்லாம் நாளாகுமே” என்றேன் நான். “ஐவ்ஸினுடைய நான்காவது சிம்ஃபனி இசை எனக்கு மிகவும் பிடித்தது” என்றான் கோல்பை. ஹவர்ட், இதை ஓர் உத்திப்போடும் உத்தி என்று வருணித்தான். ஏன் என்றால், எங்கள் எல்லோருக்குமே ஐவ்ஸ், கிட்டத்தட்ட நிகழ்த்தமுடியாத இசை என்பது தெரியும். அதற்குப் பலவார ஒத்திகை தேவை. மேலும், இசைக்குழு, கோரஸ் இவற்றிலுள்ள ஆட்களின் எண்ணிக்கை மிகுதியால், எங்கள் பட் ஜெட்டுக்குள் அடங்காது. “பொறுப்புள்ளவனாகச் சொல்லு” என்றான் ஹவர்ட். இன்னும் கட்டுக்குள் அடங்கக் கூடியதாக யோசித்துச் சொல்கிறேன் என்றான் கோல்பை.

அழைப்பிதழின் வார்த்தைகள் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டி ருந்தான் ஹ்யூ. ஏதாவதொரு அழைப்பிதழ் அதிகாரிகள் கையில் சிக்கிவிட்டால் என்னாவது? கோல்பையைத் தூக்கிலிடுவது சட்ட விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்தத் திட்டம் பற்றி அதிகாரிகள் முன்கூட்டியே அறிந்துவிட்டால், அவர்கள் வந்து தலையிட்டு எங்கள் நிகழ்ச்சியை நிச்சயம் குழப்பி விடுவார்கள். “கோல்பையைத் தூக்கிலிடுவது கிட்டத்தட்ட சட்டத்துக்குப் புறம்பானதே என்றாலும், அவன் எங்களுடைய நண்பன். பல முக்கியமான அர்த்தங்களில் எங்களுக்கே சொந்தமானவன். மேலும் அவன் எங்களை ரொம்பவும் மீறிச் சென்றுவிட்டான் என்பதனால் எங்களுக்கு அவனைத் தூக்கிலிட முழு அளவு அறவியல் உரிமை உண்டு” என்று சொன்னேன் நான். அழைப்பிதழைப் பெறுபவர்கள், தாங்கள் என்ன நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறோம் என்பதை உறுதியாக உணர இயலாதவாறு அதனை வடிவமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய் தோம். இதனை, “திரு. கோல்பை வில்லியம்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி” என்று குறிப்பிடுவதெனத் தீர்மானித்தோம். கேட்லாக் புத்தகத்தைப் பார்த்து, அச்சிட அழகான எழுத்தமைப் பைத் தேர்ந்தெடுத்தோம். கிரீம் கலரில் நேர்த்தியான தாளை முடிவு செய்தோம். நன்றாக அச்சிட்டுத் தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மேக்னஸ், நிகழ்ச்சியில் அருந்துவதற்கு பானங்கள் தரப்படுமா என்று கேட்டான். “பானங்கள் நல்லதுதான், ஆனால் செலவைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறது” என்றான் கோல்பை. செலவு ஒரு பொருட்டேயில்லை என்று நாங்கள் அவனுக்கு அன்போடு உணர்த்தினோம். நாங்கள் எல்லாரும் அவனுடைய அன்பான நண்பர்கள்; “நெருங்கிய நண்பர்கள் ஒன்றுசேரும்போது இப்படிச் சற்றே ஆடம்பரமாகக் கொண்டாடா விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன இருக்கிறது” என்றோம். “நிகழ்ச்சிக்கு முன்பு நானும் கொஞ்சம் பானம் அருந்தலாமா” என்று கோல்பை கேட்டான். “நிச்சயமாக” என்றோம்.

தூக்குமேடைதான் அடுத்த பிரச்சினை. எங்கள் யாருக்கும் தூக்குப்போடும் தள அமைப்புப் பற்றிய விஷயம் ஒன்றும் தெரி யாது. எனினும் கட்டிடக் கலைஞனான தோமாஸ், தான் பழைய நூல்களைப் பார்த்து ‘பிளான்’ வரைந்து தருவதாகச் சொன்னான். தண்டனைக் குட்பட்டவன் நிற்கும் பலகைக் கதவு – டிராப் டோர் – சரியாக இயங்க வேண்டியதுதான் முக்கியம் என்று தான் கருதுவ தாக அவன் சொன்னான். அதைச் செய்வதற்கான பொருள்கள், உழைப்புக் கூலி எல்லாம் சேர்த்து நானூறு டாலர்களுக்கு மேல் செலவாகாது என்று தெரிவித்தான். “அவ்வளவு செலவா, கடவுளே” என்றான் ஹவர்ட். “என்ன, ரோஸ்வுட் மரத்திலா செய்யப்போகி றாய்?” என்று தோமாஸைக் கேட்டான் அவன். “இல்லை, நல்ல வகையான பைன் மரம்தான்” என்றான் தோமாஸ். “பெயிண்ட் அடிக்காத பைன் பலகை நேர்த்தியின்றித் தெரியாதா” என்றான் விக்டர். வால்நட் கலரில் எளிதாக வண்ணம் அடித்துவிடலாம் என்றான் தோமாஸ்.
எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட வேண்டியவைதான் என்றா லும், நான் சொன்னேன்: “பானங்கள், அழைப்பிதழ்கள், இசைக்குழு இவற்றின் செலவுகளுக்கெல்லாம் மேலாக, தூக்குமேடைக்காகத் தனியே நானூறு டாலர் செலவழிப்பது சற்றே அதிகமில்லையா? ஆகவே தூக்கிலிட, ஓர் இயற்கையான மரத்தையே, ஓர் அழகான ஓக் மரம்-இந்த மாதிரி-பயன்படுத்தினால் என்ன?” என்றேன். “தூக்கிலிடப்போவது ஜூன் மாதம் ஆகையால், எல்லா மரங்களுமே பச்சைப் பசேலென்று இருக்கும்-அது ஓர் இயற்கையான உணர்வையும் உண்டாக்கும். மேலும் மேற்கு நாடுகளில் மரங்களில் தூக்கிலிடுவதுதான் பாரம்பரியம்” என்றும் சொன்னேன். ஏற்கெனவே கையிலிருந்த கடித உறைகளின் மேல் தூக்குமேடை அமைப்புகளை வரைய ஆரம்பித்துவிட்டிருந்த தோமாஸ், “திறந்த வெளித் தூக்கிலிடல் என்பது எப்போதுமே மழையின் தாக்குதலுக்கு உட்பட்டது, அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றான். திறந்த வெளி நிகழ்ச்சியே நல்லது என ஆதரித்த விக்டர், ஏதாவதொரு நதிக்கரையில் அதை வைத்துக் கொண்டால் நல்லது என்றான். குறிப்பாக, “நகரத்திலிருந்து சற்றே தூரத்தில் இதனை நிகழ்த்தும்போது, விருந்தினர்கள், இசைக் குழுவினர் இவர்களையெல்லாம் நகரத்திலிருந்து நிகழ்விடத்திற்கு அழைத்துவந்து, மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லும் பிரச்சினை இருக்கிறது” என்றும் குறிப்பிட்டான்.

இந்தக் கணத்தில் நாங்கள் யாவரும், வாடகைக்குக் கார்/லாரி ஏற்பாட்டு ஏஜென்சி நடத்திவரும் ஹாரியை நோக்கினோம். இதற் குத் தேவையான லிமோசின் வேன்களை ஏற்பாடு செய்யமுடியு மென்று தெரிவித்த ஹாரி, ஆனால் டிரைவர்களுக்குத்தான் பணம் தரவேண்டியிருக்கும் என்றான். டிரைவர்கள் கோல்பைக்கு நண்பர் கள் அல்ல. ஆகவே பானக் கடைக்காரர்கள், இசைக்குழுவினர் போலவே அவர்களுக்கும் காசு தரவேண்டும். பெரும்பாலும் சவச் சடங்குகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே தன்னிடம் ஏறத்தாழ பத்து லிமோசின்கள் இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் நண்பர்களிடமிருந்து ஒரு டஜன் வேன்களை இரவல் வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் அவன் தெரிவித்தான். மேலும் வெளிப் புற நிகழ்ச்சி என்பதால், இதற்காக ஒரு டெண்ட் அல்லது பந்தல் அமைப்பது நலம் என்றும், அதை முக்கியஸ்தர்களுக்கும் இசைக் குழுவுக்குமாவது பயன்படுத்தலாம் என்றும் நிகழ்ச்சியின்போது மழை வந்துவிட்டால் இருண்ட மனநிலை ஏற்பட்டுவிடும் என்றும் சொன்னான். தூக்குமரம் அல்லது மேடை இவற்றைப் பொறுத்த அளவில், இதில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், இந்த இரண் டில் எது வேண்டும் என்பது தூக்கிலிடப்படப் போகும் கோல்பை யின் தீர்மானத்துக்கே விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தான். “எல்லாருமே சிலசமயம் ரொம்பவும் மீறிப் போகிறார்கள். இதில் நீங்கள் மட்டும் ரொம்பவும் கடுமையாக இப்போது நடந்துகொள்வ தாகத் தோன்றவில்லையா” என்று கேட்டான் கோல்பை. “இதெல்லாம் முன்பே பேசியாயிற்று. நீ இப்போது தீர்மானிக்க வேண்டியது சாவு மேடையா, மரமா என்பதுதான்” என்றான் ஹவர்ட். துப்பாக்கி சுடும் குழுவினரை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டான் கோல்பை. “இல்லை, கூடாது”-இது ஹவர்ட். சுடும் குழுவினரை ஏற்பாடு செய்வது, கோல்பைக்குத் தான் எனும் அகம்பாவத்தை உண்டாக்கும் நிகழ்ச்சியாகிவிடும். கண்ணைக் கட்டுவது, பிறகு கடைசி சிகரெட்- இப்படி, கோல்பை ஏற்கெனவே வேண்டிய தொல்லைக்குள் இருக்கிறான். ஆகவே மீண்டும் யாரையும் அவன் தனக்காக நாடகமாட வைத்து தானும் நாடகமாடத் தேவை யில்லை என்றான். “சாரி, இந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை, மரமே போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டான் கோல்பை. தோமாஸ் வெறுப்போடு தான் இதுவரை வரைந்து வைத்திருந்த சவமேடை அமைப்புப் படங்களைத் தூக்கி யெறிந்தான்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகும் ஆள் யார் என்பது பற்றி இறுதியாகச் சர்ச்சை நடந்தது. “தூக்குப்போடும் ஆள் வேறு நமக்கு வேண்டுமா” என்று கேட்டான் பால். “ஏனெனில், நாம் ஒரு மரத்தை உபயோகிக்கப் போகிறோம். ஆகவே நாமே ஒரு முடிச்சின் உயரத்தை ‘அட்ஜஸ்ட்’ செய்து விடலாம். கோல்பை, ஏதாவது நாற்காலி அல்லது ஸ்டூல் போன்ற ஒன்றின் மேலிருந்து குதித்தால் போதும்” என்றான். மேலும் தொடர்ந்தான், பால். “இப்போதெல்லாம் தூக்கிலிடுவதை நிகழ்த்தும் எந்த ஃப்ரீ லான்ஸ் ஆசாமியும் கிடைப்பானா என்பது சந்தேகமே. நாம் தூக்கிலிடும் முதன்மைத் தண்டனையை முற்றிலுமாக, தற்காலிகமாக ஒழித் துக் கட்டிவிட்டோம். ஆகவே தூக்கு ஆளை இங்கிலாந்திலிருந்தோ, ஸ்பெயினிலிருந்தோ, தென்அமெரிக்காவிலிருந்தோ விமானத்தில் வரவழைக்க வேண்டியிருக்கும். அப்படி வரவழைத்தாலும், நாம் முன்கூட்டியே அந்த ஆள் ஒரு நிஜமான, தொழில்ரீதியான தூக்கிலிடுபவனா, இல்லை அமெச்சூரா என்பதை எப்படிக் கண்டு பிடிக்கமுடியும்? அமெச்சூராக இருந்து, பணத்திற்கு ஆசைப்பட்டு வந்து, எல்லார் முன்னாலும் நிகழ்ச்சியைக் கெடுத்து, நம்மை அவமானப்படுத்திவிட்டால் என்ன செய்வது? கோல்பை ஏதாவதொன்றின் மீதிருந்து குதிக்க வேண்டியிருந்தாலும், அவன் குதிக்கக் கூடாது என்றோம் நாங்கள் எல்லோரும். அது கொள்கை மாற்றம் ஆகிவிடும். எங்கள் அழகான மரத்தின்கீழே ஏதோ ஒரு சமையலறை நாற்காலி இருப்பது சூழ்நிலைக்குப் பொருந்துமா? எங்களில் மிக நவீனக் கண்ணோட்டம் உடையவனும், புதுமை புகுத்த அஞ்சாதவனுமான தோமாஸ், பத்தடி விட்டமுள்ள ஒரு ரப்பர் பந்தின்மீது கோல்பை ஏறி நிற்கலாமென்று சொன்னான். குதிப்பதற்குப் போதுமானதாக இது இருக்குமென்றும் குதித்தபிறகு சட்டென்று கோல்பையின் மனம் மாறிவிட்டாலும் பந்து உருண் டோடிவிடும் என்றும் அவன் சொன்னான். முறையான ஒரு தூக்குக் காரனைப் பயன்படுத்தாமையால், நாம் கோல்பையின்மீதே இந்த நிகழ்ச்சிக்கான பொறுப்பைப் பெருமளவு சுமத்துகிறோம். கோல்பை இதை மிகச் செம்மையாகச் செய்துமுடிப்பான். தன் நண்பர்களைக் கடைசி நிமிடத்தில் அவமானத்திற் குள்ளாக்கிவிட மாட்டான் என்று தான் நினைப்பதாகவும் அவன் சொன்னான். “எனினும் இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில், மனிதன் சற்றே மனம் தளர்வது இயற்கைதான். எளிதாக வடிவமைக்கப்படக் கூடிய அந்தப் பத்தடி விட்டப் பந்து, மிக உற்சாகமான, பிரமாதமான நிகழ்ச்சியை கோல்பை தரக் காரணமாக அமையும்” என்றான் அவன்.
மிக உற்சாகமான என்பதற்கு அவன் பயன்படுத்திய ‘ஒயர்’ என்ற வார்த்தை, இதுவரை பேசாமலே இருந்த ஹேங்க்கை இந்த உலகத்திற்கு இழுத்துவந்தது. “கயிற்றுக்குப் பதிலாகக் கம்பியை உபயோகிப்பது இன்னும் தேர்ச்சியானதாகவும், கோல்பைக்கு நன்மை செய்வதாகவும் அமையுமல்லவா?” என்று அவன் கேட்டான். இதைக் கேட்டதும் கோல்பையின் முகம் மாறிவிட்டது. இதற்கு அவனைக் குற்றம் சொல்ல முடியாது. ஏன் எனில், கயிற்றில் தொங்குவதைவிடக் கம்பியில் தூக்கிலிடப்படுவது நல்ல ரசனைக்குச் சற்றும் ஒவ்வாத விஷயம். அதைப் பற்றிச் சிந்திக்கும் போதே ஒரு மனவேறுபாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. எதன்மீதிருந்து கோல்பை குதிக்கப்போகிறான் என்னும் பெரிய பிரச்சினையையே தோமாஸின் ரப்பர் பந்து பற்றிய சிந்தனை வாயிலாகத் தீர்த்து முடிவு செய்துவிட்டபோது, பொறுப்பற்று உட்கார்ந்துகொண்டிருந்த ஹேங்க் இப்படிக் கம்பியைப் பற்றிப் பேசுவது வெறுப்புக்குரியது என்று நினைத்தேன் நான். ஆகவே வேகவேகமாக, “கம்பியைப் பயன்படுத்துவது இயலாத வேலை” என்றேன். ஏனெனில் அது மரத்தைத் துன்பப்படுத்தும். கோல்பையின் முழு பளுவும் தாங்கும்போது கட்டப்பட்டுள்ள கிளையினுள் ளே கம்பி அறுத்துப் பதியும். சுற்றுச்சூழல் பற்றிய மரியாதை பெருகிவரும் இந்நாட்களில், இப்படிச் செய்வது நல்லதா? இப்படி நான் சொன்னவுடனேயே, கோல்பை என்மீது நன்றி நிரம்பியதொரு பார்வையைப் படரவிட்டான். அத்துடன் கூட்டம் முடிந்தது.
நிகழ்ச்சிக்குரிய நாளில் எல்லாம் சிறப்பாக நடந்தேறின. (இறுதியாகக் கோல்பை தேர்ந்தெடுத்த இசை, ஒரு ‘ஸ்டாண்டர்ட்’ விஷயம்தான். ‘எல்கர்’. அதை ஹவர்ட்டும் அவன் இளைஞர் களும் மிக நன்றாக வாசித்தார்கள்.) மழைகிழை வந்துவிடவில்லை. பலபேர் கூடியிருந்து ரசித்தார்கள். எல்லாருக்கும் வேண்டுமான அளவு ‘ஸ்காட்ச்’ பானமும் கிடைத்தது. மரங்களடர்ந்த நாட்டுப்புறப் பின்னணிக்கு ஏற்ப, அந்தப் பத்தடிப் பந்து பசுமையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. இந்த முழு நிகழ்ச்சியிலும் என் மனம் மறக்கமுடியாத விஷயங்கள் இரண்டு.

ஒன்று நான் ‘ஒயர் வேண்டாம்’ என்று சொன்னபோது கோல்பை பார்த்த நன்றிப்பார்வை.

மற்றது, யாரும் அதற்குப் பிறகு மீண்டும் ரொம்பவும் மீறிப்போனதில்லை என்பது.

மொழிபெயர்த்த_சிறுகதை