பரஜன்

பரஜா என்பது ஒரியா மொழியில் கோபிநாத் மோஹாந்தி என்பவர் ஒரிஸாவின் சோட்டாநாகபுரிப் பீடபூமிக் காடுகளில் வசிக்கின்ற மக்களைப் பற்றி எழுதிய நாவல். பரஜா என்பது (தமிழில் பரஜன்) அங்குள்ள காட்டுக்குடிகளில் ஓர் இனத்தவரின் பெயர். ராணா, பல்கர், தொம்பர், கடபர், கோண்டு போன்ற திராவிடப் பழங்குடி இனத்தவர்களின் எச்சங்களே இவர்கள். பரஜா என்ற சொல்லே பறையா என்பது போல ஒலிக்கவில்லையா?

கோபிநாத் மோஹாந்தி 1914இல் கட்டக்கில் பிறந்து 77 வயதில் 1991இல் மறைந்தவர். ஞானபீட விருது பெற்றவர். பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

பரஜா நாவலின் கதை அந்தப் பழங்குடியின மனிதனான சுக்ரு ஜானி என்பவன் பற்றியது. அவன் மனைவி சாம்பரி ஓர் ஆட்கொல்லிப் புலியால் தாக்கப்பட்டு இறந்துவிட்டாள். அவனுக்கு இரண்டு மகன்கள்–மண்டியா, டிக்ரா. இரண்டு மகள்கள்–ஜிலி, பிலி. தன் மகன்களோடு இரவுபகலாகத் தன் நிலத்தில் பாடுபட்டு வருகிறான் சுக்ரு. தன் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளைத் தன் உழைப்பால் பெருக்கியிருக்கிறான். கதைத் தொடக்கத்தில் அவன் நன்றாகத்தான் இருக்கிறான். தன் வீட்டில் தன் மக்கள் திருமணமாகிப் பல்கிப் பெருகுவதையும் நிலம் விரிவடைவதையும் கனாக் கண்டுகொண்டு அமர்ந்திருக்கிறான். ஆனால் விதி இந்தக் காட்டு மக்களிடம் பலவேறு ரூபங்களில் விளையாடுகிறது. காட்டு அதிகாரிகள் அதில் ஒரு கோர ரூபம்.

பரஜா மக்கள் பயப்படும் ஒரே ஆள்–நகர்ப்புறத்திலிருந்து வருகின்ற காட்டுப் பாதுகாவலன் (ஃபாரஸ்டு கார்டு). விரும்பாத எவரையும் “காட்டு மரங்களை வெட்டினான், காட்டின் பகுதியை எரித்தான், காட்டில் தேன் சேகரித்தான்” என்றெல்லாம் ‘வழக்குப்’ போட்டுப் பழிவாங்கி விடுவான். பரஜா மக்கள் அவனுக்கு ஆண்டுதோறும் உழவுக்காணி (வரி) தரவேண்டும். மற்றபடி அவன் விரும்பும் அனைத்தையும்(!)கூடத் தர வேண்டும்.

இந்த அரசாங்கக் காவலனுக்கு சுக்ருவின் மகள் ஜிலி மீது ஆசை. அதனால் சுக்ரு கோபமடைகிறான். பரஜன்கள் பெண்களைக் கண்போல் காப்பவர்கள். தங்கள் பெண்கள் பிற இனத்தவரோடு உறவுகொள்ளச் சம்மதிக்காதவர்கள். ஒரு கோபமடைந்த பரஜா விலங்கைப் போன்றவன். பரஜா இனத்திற்கு நன்கு கள்ளமற்று உழைக்கவும், காட்டுக் காவலன் போன்ற ஆட்களுக்கு மரியாதை தரவும் தெரியும். ஆனால் தங்கள் மானத்தில் எவனும் கைவைக்கலாகாது. இந்தக் கோபமும் பிடிவாதமும் சுக்ருவின் வாழ்க்கையை முழுவதும் சீரழித்துவிடுகின்றன.

கார்டு, பழிவாங்குவதற்கெனப் பிற நகர்ப்புற அலுவலர்களோடு வருகிறான். சுக்ரு காட்டின் விதிகளைக் கெடுத்துவிட்டான், அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டான் என்று குற்றங்கள் அடுக்கப்படுகின்றன. உண்மையில் மரங்களை வெட்ட காவலனின் வாய்மொழி அனுமதியின்றி வேறு எழுத்து-அனுமதி எதுவும் கிடையாது. இவனை உன் அனுமதிப்பத்திரம் எங்கே என்று கேட்டு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். காவலன் இவன் புதிதாகப் பெற்ற நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறான், எண்பது ரூபாய் தண்டம் (ஃபைன்) விதிக்கிறான். இது அந்த மக்களுக்குச் சுமார் முப்பது மாத வருவாய்க்குச் சமம். அக்காலத்தில் மூன்று ரூபாயில் ஒரு மாதத்தை ஓட்டுபவர்கள் அவர்கள்.

எனவே இவன் தனது மூத்த மகனிடம் குடும்பத்தை விட்டுவிட்டு தானும் தன் இளைய மகனும் நகர்ப்புறத்தில் சாஹுகார் (லேவாதேவிக்காரன், சேட்டு) ராமச்சந்திர பிஷோயி என்பவனிடம் அடிமைகளாகின்றனர். இவர்களை அடிமைகளாக்கிக் கொண்ட போது அந்த லேவாதேவிக்காரனின் ஆழ்ந்த கண்கள் தந்திரத்துடன் கனத்த புருவங்களின்கீழ் பளிச்சிட்டன. இவர்கள் இருவரையும் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அவன் காசு தருகிறான். அவன்  வைத்திருக்கும் பத்திரங்கள், ஸ்டாம்புகள், சட்டப்படிவங்கள் எல்லாம் பரஜன் போன்ற பழங்குடிகளுக்குப் புரியாதவை, எட்டாதவை, அவர்களால் வெறுக்கப்படுபவை.

சாஹுகார், இவர்கள் இருவருக்கும் வருடக்கூலி ஐந்து ரூபாய் என்று சொல்கிறான். ஆனால் இவர்கள் வாங்கிய பணத்துக்கு வருடாவருடம் 50% வட்டி தர வேண்டும். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் கைநாட்டுகிறார்கள். அந்த சாஹுகாரனின் நிலத்தில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்கிறார்கள். இவர்கள் வருமானமோ ஆண்டுக்கு ஐந்து ரூபாய். ஆனால் கொடுக்க வேண்டியது ஆண்டுக்கு 75 ரூபாய். எத்தனை ஜென்மங்கள் உழைத்து இவர்களால் கடனைத் தீர்க்கமுடியும்?

உழைப்பின் சோர்வு தெரியாமலிருக்க இவர்களுக்கு சோற்றுக்கு பதிலாக மஹுவா சாராயம் அளிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவனது முதல் மகனும் இவன் மருமகனாக வரவேண்டிய மண்டியா என்பவனும் இவர்களுடன் சேர்ந்து அடிமையாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஆக வீட்டில் ஆண்துணை எவருமின்றி இரண்டு பெண்கள் ஜிலி, பிலி மட்டுமே தனித்து விடப்படுகிறார்கள். வீட்டில் வருமானமின்றிப் போனதோடு பிறரது ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகிறார்கள். சாஹுகாரிடம் அடிமைகளாகச் சென்றவர்களோ ஆண்டு அறுவடை நேரத்தில்கூட வீட்டுக்குச் செல்ல விடுமுறை அளிக்கப்படவில்லை.

இந்தச் சமயத்தில் சாலைபோடும் ஒப்பந்தக்காரர்கள் எல்லாக் காட்டுப்பகுதி கிராமங்களுக்கும் வேலையாட்களைத் தேடி வருகிறார்கள். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி மூன்றணா, பெண்களுக்கு இரண்டணா. இவர்களின் கிராமத்துக்கும் வருகிறார்கள். ஜிலி, பிலி இருவரும் அவர்களிடம் சேர்ந்து வயிற்றுக்காக உழைக்க வேண்டியதாகிறது. தங்கள் வீட்டை விட்டுப் புதிய இடம், புதிய உழைப்பு, புதிய புகை நாற்றம்…

நல்ல வேளை, இந்த நிலை சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. தன் நிலத்தை சாஹுகாரனிடம் அடகுவைத்துவிட்டு தன்னை விடுவித்துக் கொண்டு சுக்ரு வீட்டுக்கு வருகிறான்.

ஆனால் சாஹுகாருக்கு தன்னிடம் வீட்டைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்பதை சுக்ரு புரிந்துகொள்கிறான். வயது முதிர்ந்த சாஹுகார் அதற்கு பதிலாக இவன் மகள் ஜிலியைக் கேட்கிறான். சுக்ருவுக்குத் தன்மகளைக் கொடுக்க மனமில்லை என்றாலும் இவனது கிராமவாசிகள் உட்பட எல்லாரும் அவனை வலியுறுத்துகிறார்கள். எனவே வேறுவழியின்றி தன் மகளை சாஹுகாருக்குத் திருமணம் செய்து தர வேண்டியிருக்கிறது. இடையில் கோர்ட் வழக்கும் தோற்றுப் போய் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறான் சுக்ரு.

கடைசியாக உயிர் பிழைகக ஒரே வழி–சுக்ரு போய் மருமகன் சாஹுகாரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதுதான் என்றாகிறது. அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் அவன் புறப்படுகிறான். ஆனால் சாஹுகாரின் வீட்டுக்குச் சென்றவுடனே அவனுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்துகொள்கிறது. கோபத்தில் கொதித்த அவன் லேவாதேவிக்காரன் காலில் விழுவதற்கு பதிலாக ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன்மீது விழுந்து அடி அடி என்று அடித்து அவனைக் கொன்றுவிடுகிறான்.

ஏறத்தாழ சினுவா அச்சுபே-யின் Things Fall Apart, பேர்ல் எஸ். பக்கின் The Good Earth  ஆகிய நாவல்கள் ஆப்பிரிக்காவிலும் , சீனாவிலும் நிகழ்ந்த இதே போன்ற விஷயத்தைத்தான் பேசுகின்றன. சோட்டா நாகபுரிப் பீடபூமியிலும் அதையொட்டிய மலைக்காடுகளிலும் கனரக உலோகங்கள் ஏராளமாக இருப்பதால் சுரங்கம் தோண்டுவதற்கென பெருமுதலாளிகள் படையெடுக்கிறார்கள். அவர்களோடு போராடி இந்தக் காட்டுவாசிகள் இப்படித்தான் இன்றுவரை வாழவேண்டியிருக்கிறது. இதை முதன்முதலில் நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமுன்பாகவே (1945) பதிவுசெய்த கோபிநாத் பாராட்டுக்குரியவர்.

இலக்கியம்