பின்நவீனத்துவப் புன்னகைகள்

இராஜசேகரனின் கவிதைகள்

(இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால், 2012 மார்ச்சில், பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. இராஜசேகரனின் ‘பின்நவீனத்துவப் புன்னகைகள்’ என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரை இது – மதிப்பீடு என்றும் வைத்துக் கொள்ளலாம்.)

இயற்கையோடு ஒட்டியிருந்த காலத்தில் சொற்களுக்கு வலுவிருந்தது. மந்திரமாக இருந்தது. இயற்கை சொற்களைத் தாங்கி நின்றது. அதை அழிக்கப் புறப்பட்டுவிட்ட போது சொற்களுக்கு வலுவேது? இன்று கவிதைக்கு என்ன வலு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் இயற்கையோடு கொண்ட பழைய நட்பை மறக்காமல் சொற்கள் அதைத் தாங்க முற்படுகின்றன. கனம் தாங்காமல் அவ்வப்போது மூச்சு வாங்குகின்றன, சமயத்தில் தளர்ந்துவிழுகின்றன. கொஞ்சம் கழித்து ஏதோ உணர்த்தி விட்ட இறுமாப்பில் மகிழ்ச்சியோடு குதிக்கவும் செய் கின்றன. இறுமாப்பை எதிர்த்து மக்கள் போராடுவதற்கு உதவும் போது அந்தச் சொற்களுக்குச் சற்றே ஆற்றல் வாய்த்தாலும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளை களில் அந்த வலு இற்றுப்போய் கணினியின் செயற்கை மொழி களாக மாறவும் செய்கின்றன.

இராஜசேகரனின் கவிதை இப்படிப்பட்ட தாங்குதலையும் மூச்சு வாங்குதலையும் நொய்ந்து விழுதலையும் குதித்தலையும் புலப் படுத்துகிறது. பிரபஞ்சத்தில் பரிதிக்கும் நிலவுக்கும் மேகத்திற்கும் உள்ள உறவைப் பற்றி யோசிப்பது தொன்மக்கால நிகழ்வு. அந்தத் தொடர்பை இவருடைய கவிதைகள் மறுபடியும் நினைவுகூர் கின்றன. நம்மை எங்கோ ஒரு முற்காலத்துக்குக் கொண்டுசெல்ல முற்படுகின்றன. தோல்வியுறுகின்றன.

இயற்கைக்கும் சொற்களுக்குமான உறவைத் துண்டித்தது யார்? இயற்கையை அழிக்கப் புறப்பட்டது யார்? பன்னாட்டு நிறுவனங் களின் பேராசைதான். அதனை எதிர்க்கத்தானே வேண்டும்? எல்லாமே விற்பனைப் பண்டமாகிவிட்ட காலத்தில், பழைய மதிப்புக்குரிய பிம்பங்கள் வெறும் சிமெண்ட் சிலைகளாக மாற அவற்றின் யோனியைப் பிளாஸ்டிக் பைகள்தானே அடைத்துக் கொள்ளும்?

காக்கை, சேவல், பிற பறவைகள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. ஆனால் குருவிகள் மட்டும் இல்லை. பெரியபெரிய செல்ஃபோன் கோபுரங்கள் வந்ததில் முதல் பலி அவைதான். அதனால் ஒப்பாரி பற்றிய இரகசியத்தை அவை கூகைக்குக் கொடுத்துச் சென்றுவிட்டன. கூகைக்கு மட்டுமல்ல, குழந்தை யைத் தூங்க வைக்கவேண்டி தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து விட்டன. என்றைக்கு வாழ்க்கை இயந்திர மயமானதோ, அன்றைக்கே அலாரம் துயிலெழுப்ப வந்து விட்டது. வருந்திப் பயன்என்ன? பற்றிப் பரவி வருகின்ற நெருப்பு, நம் அண்டை நாடுகள் வரை வந்தது மட்டும் அல்ல-நம் சொந்த நாட்டிலேயே நீண்ட காலமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்பில்தான் முத்துக்குமார் போன்ற எத்தனையோ பேர் எரிந்தார்கள்.

இராஜசேகரனின் கவிதைகளில் நிறைய செயப்பாட்டுவினைகள். செய்வினைகளை விட எடுப்பாக. ‘அடைக்கப்பட்ட’, ‘சேதப்படுத் தப்பட்ட’ (சேதப்பட்ட அல்ல), ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘செப்பனிடப் பட்ட’, ‘கையளிக்கப்பட்ட’, ‘பேணப்பட்ட’ (பகல்), ‘கொன்றொழிக்கப் பட்ட’, இப்படி. நிறைய நிறைய. இந்தச் செயப்பாட்டு வினைச் சொற்கள், இன்றைக்கு நாம் பிறரால் பிறருக்காக பிறரின் பேராசைக்காகச் செயல் படுத்தப்படும் பொருளாக மாறிக்கொண்டி ருக்கிறோம், நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன.

சில காதல் கவிதைகள் உள்ளன. எல்லாம் அற்புதமான மழை வீடுகள், கனவுக் குடைகள். ரொமாண்டிக் தப்பித்தல்கள். இதுவும் இன்றைய வாழ்க்கைக்கு ஒருபுறம் தேவையாகத்தான் இருக்கிறது. மகன் பற்றிய கவிதைகளில் மிக எளிமையான மகிழ்ச்சியும் கொண்டாடலும் தென்படுகின்றன. மிகச்சில கவிதைகளில் பைபிளின் தாக்கமும் கிறித்துவச் சொல்தாக்கமும் (பலுகிப் பெருகி…) தென்படுகின்றன. (பல்குதல், சமயநடையில் பலுகுதலா கிறது.) அவ்வப்போது நீலத்தேவதை நீலப்பூச் சூடி வந்து போகிறாள்.

கல்வியை எப்படி வியாபாரப் படுத்தினார்கள் என்று மிக எளிமையாகவும் வேகமாகவும் ஒரு கவிதை பேசுகிறது. என்ன, அரிசிக்கு பதிலாக இப்போது குடோனில் மூட்டைகளாக்கப் படுபவர்கள் மாணவர்கள். டிக்கெட் கொடுக்குமிடம் தன் பழைய பணியை மாறாமல்-காசு வாங்கிக்கொண்டு ‘சீட்டுக்’கொடுக்கும் பணியைச்-செய்கிறது. அங்கதம் இயல்பாக எழுகிறது. அதுபோலத் தான் திணை மயக்கம் கவிதையிலும்.
ஒரு கவிதை உனக்கு என்ன பெயர்வைப்பது என்று கேட்கிறது. எதற்குப் பெயர் வைக்கவேண்டும்? கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஆண்கள் வியாபாரிகளாக வும் வியாபார விலைப்பொருள்களாகவும் ஆகிப்போனார்கள். பெண்களோ அதிகாரத்தின் நீளும் கரங்கள் பற்றி எவ்விதக் கவலையுமற்று முகப்பரு பற்றிய கவலையில் ஆழ்ந்திருக் கிறார்கள்.

பின்நவீனத்துவப் புன்னகைகள் பூமியைச் செவ்வாய் ஆக்குவது ஒரு புறம். ஆக்குபவர்கள் சந்திரனில் வீடு தேடுவது இன்னொரு புறம். ஆனால் சாமானிய மக்களாகிய நாம் என்ன செய்வது? விளைநிலங்களை யெல்லாம் பிளாட்போட்டு விற்கும்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீட்டப்படும் நெல்நாற்றுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதா? பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரக் கொள்ளைக்காகத் தமிழ்நாட்டுக்கே உரிய தொழில்கள் பலியிடப் படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? அண்டை நாட்டின் டைடல் பூங்காக்களுக்காகக் கூடங்குளமும் முல்லைப் பெரியாறும் விலை போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதா? இந்தக் கையறுநிலைதான் வாழ்க்கையா என்ற கேள்விகளையெல்லாம் இராஜசேகரனின் கவிதைகள் எழுப்புகின்றன.

இராஜசேகரனின் கவிதைகள் சமுதாய உணர்வும் தனிவாழ்க்கை யின் சிறுசிறு மகிழ்ச்சிகளும் அடங்கிய நல்ல தொகுப்பு. ஆனால் அந்தச் சொற்களில் ஆறு மணிக்கு வீடு திரும்பும் தொழிலாளி யின்-அல்ல அல்ல, கணினி மென்பொருள் துறை தன் சகல சக்திகளையும் உறிஞ்சியபின் நள்ளிரவில் வீடுதிரும்பும் மிடில் கிளாஸ்காரனின் நிராசை அதிகமும் தென்படுகிறது. (அதற்கு மாற்றுக் கனவுதான் காதலும் குழந்தையும் நீலத் தேவதையும் மழைத் திரைச்சீலைகளும்.) 1960களில் நாலுமாதத்திற்குப்பின் விளைச்சலை அறுவடை செய்யப்போன விவசாயியின் முகத்தில் தென்பட்ட குதூகலமும் வலுவும் இப்போது தென்படவில்லை. ஒருவேளை இதுதான் இந்தக் காலத்திற்கு வாய்த்திருக்கிறதோ என்னவோ?
சொல்லை வேய்பவர்களாகிய கவிஞர்கள் எதிர்காலச் சமுதாயத் திற்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதை அளித்துச் செல்ல முடியும்? இராஜசேகரனும் தனது பங்காகக் கொஞ்சம் சொல் விதைகளை உணர்வுபூர்வமாக அளித்திருக்கிறார்.

முதுகலையில் எல்லோருக்கும்போலவே-எந்த வகையிலும் ஒரு வழிகாட்டியாகக் கூட அல்லாமல்-கொஞ்சம் கொஞ்சம் அவருக் குப் பாடம் நடத்தியவன் நான் என்பதில் பெருமைகொள்கிறேன்.

நூல்-பரிந்துரை