புதிய நூல் – தமிழ்ப் பொழில் ஆய்வு

குறிப்பு:
1980களில் தொடக்கத்தில் நான் தமிழ்ப்பொழில் என்ற தமிழ் ஆய்விதழை என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கென ஏற்றேன். அதைப் பற்றிய கட்டுரைகளையோ அந்த ஆய்வேட்டையோ நான் நூலாக இதுவரை வெளியிட வில்லை. அவற்றை இப்போது வெளியிட முனைகிறேன். இப்பகுதி, ஆய்வேட்டின் முதற் பகுதியான முன்னுரையாக அமைந்தது.

தமிழ்ப் பொழில் ஆய்வு-முன்னுரை

ஆய்வுப் பொருள்

இதழ்கள் பலவகை. அவற்றுள், இலக்கிய இலக்கண ஆய்வுக்கென இயங்கும் இதழ்கள் ஒருவகை. இம்மாதிரி இதழ்களில் ஒன்று, ‘தமிழ்ப்பொழில்’. இந்த இதழைப் பற்றியது இந்த ஆய்வு. தமிழ்ப்பொழில், தஞ்சாவூரின் ஒரு பகுதியான கரந்தையில் (கருந்தட்டான்குடியில்) விளங்கும் தமிழ்ச் சங்கத் திலிருந்து குரோதன ஆண்டு சித்திரைத்திங்கள் (1925 ஏப்ரல்) முதல் வெளிவரலாயிற்று. இன்றுபோல் இதழ்கள் பல்கிப் பெருகாத காலத்திலிருந்தே இந்த இதழ் தமிழியல் ஆய்வுக்கென உழைத்து வந்துள்ளது.1 இது ஓர் தமிழியல் ஆய்விதழ் என்பதனால் இந்த இதழ் தமிழ் ஆய்வுக்கு ஆற்றிய பணி இங்கு ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. சுருக்கமாக இதனைத் ‘தமிழ்ப் பொழில் தந்த தமிழ் ஆய்வு’ என்று பெயரிடலாம். தமிழ்ப் பொழில் இதழ்வழி வெளிப்பட்ட ஆய்வுப்பொருள் (முதன்மையாக இலக்கிய, இலக்கண ஆய்வு), ஆய்வு முறை, ஆய்வுப்போக்குகள் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இங்கு இது ஆளப் படுகிறது.

ஆய்வுத் தேவை
தமிழில் இலக்கிய இலக்கண ஆய்வுக்கென நடத்தப்படும் இதழ்கள் மிகக் குறைவு. வணிக நோக்குடன் வெளிவரும் இதழ்களின் நோக்கம் மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக மட்டுமே இருக்கிறது. அவை இலக்கண இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டால் அவற்றின் விற்பனை குறைந்துபோகும் என்ற வணிக நோக்கு காணப்படுகிறது. புத்திலக்கியத் தோற்றத்துக்கு உதவும் இதழ்க ளும் பழைய இலக்கண இலக்கிய ஆய்வுகளைப் பொருட் படுத்துவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ப்பொழில் இதழ், பொருள் பற்றாக்குறை ஒருபுறம் இருநதபோதிலும், தமிழியல் ஆய்வுக்கெனத் தொடர்ந்து இயங்கி வருகிறது.2 இதுவரை இந்த இதழின் பணி பற்றிய எவ்விதக் கட்டுரைகளும் ஆய்வுகளும் வெளிவரவில்லை. தமிழ் இதழ்கள் பற்றி ஆய்வாளர்கள் வரைந்துளள கட்டுரைகளில் ஆங்காங்கு இந்த இதழ் பற்றிய குறிப்புகள் சில உள்ளன.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வருவதால் இந்த இதழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு உரியதாகிறது. ஏறத்தாழ இரண்டு தலைமுறைத் தமிழியல் ஆய்வுக்களத்தில் தமிழ்ப் பொழில் இதழின் கொடை என்ன, இந்தக் கொடை எந்த அளவு தமிழ் ஆய்வுக்களத்தில் விழிப்புணர்ச்சியோ தாக்கமோ பலனோ ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காண்பது அவசியம். இனிமேல் இந்த இதழின் எதிர்காலம் என்ன என்னும் வினாவும் இயல்பாகவே எழக்கூடியது. இந்த வினாக்களுக்கு விடைகாணும் முயற்சி இந்த ஆய்வு என்று கொள்ளலாம்.

ஆய்வு எல்லை
இந்த ஆய்வினைத் தொடங்கியபோது (1982), தமிழ்ப்பொழில் ஐம்பதாண்டுகளைக் கடந்திருந்தது. ஐம்பத்துநான்காம் ஆண்டில் நடையிட்டுவந்தது. எனவே ஐம்பதாண்டுகளுக்குரிய தமிழ்ப் பொழில் இதழ்கள் மட்டும் இந்த ஆய்வுக்கான மூலமாகக் கொள்ளப்பட்டன.

தமிழ்ப்பொழிலின் பன்னிரணடு மாத இதழ்களின் தொகுப்பு ஒரு ‘துணர்’ எனப்படுகிறது. ஆகவே இந்த ஆய்வின் எல்லை, தமிழ்ப்பொழிலின் முதல் ஐம்பது துணர்கள்.

ஆய்வுநோக்கம்
இந்த ஆய்வின் நோக்கங்களாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.
1. முதல் ஐம்பது துணர்களில் வெளிவந்த கட்டுரைகளைப் பகுத்து, அவற்றைப் பற்றிய தகவல்களை முறைப்படுத்துதல்.
2. இக்கட்டுரைகளை அடைவு படுத்துதல்; இவற்றில் சிறப்பானவற்றை எடுத்துக் காட்டுதல்; அதனால் இவற்றை ஆய்வுலகிற்குப் பயன்படுமாறு வெளிப்படுத்துதல்.
3. இக்கட்டுரைகளில் காணப்படும் புதிய செய்திகளை வெளிப்படுத்துதல்.
4. இக்கட்டுரைகளின்வழி பெறப்படும் ஆய்வுமுறைகள் சிறப்பாக இருப்பின் அவற்றை எடுத்துககாட்டுதல்.
5. இக்கட்டுரைகளின் ஆய்வுப்போக்குகளை எடுத்துக்காட்டுதல்.
6. இவ்வாறு பெற்ற ஆய்வுச் செய்திகள், ஆய்வுப்போக்குகள், ஆய்வுமுறைகள் ஆகியவற்றை பொதுவான தமிழ் ஆய்வுப் பின்னணியில் மதிப்பிடுதல்.
7. ஆய்வுப்பணிகள் தவிர, தமிழ்ப்பொழில் செய்துள்ள தமிழ் மேம்பாட்டுப் பணிகளையும், அது மேற்கொண்ட போராட்டங்க ளையும் தமிழ்ச் சமூகப் பின்னணியில் எடுத்துக்காட்டுதல்.
8. தமிழ்ப்பொழில் இதுவரை கடந்துவந்த பாதையை மதிப்பிடுதல். அதன்வழி இனி அது மேற்கொள்ளவேண்டிய செய்திகளை எடுத்துரைத்தல்.

தமிழ்ப்பொழில் உள்ளடக்கம்
தமிழ்ப்பொழிலில் இடம்பெற்ற படைப்புகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.
1. தமிழ்ச் செய்திகள்
2. புதுப்படைப்புகள்
3. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்
4. பொதுவான கட்டுரைகள்
5. தமிழ்நூல் பதிப்புகள்
இவற்றைப் பற்றி வரிசையாகக் காணலாம்.
1. தமிழ்ச் செய்திகள்
இவற்றை
அ. கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புடைய செய்திகள்
ஆ. தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இ. பொழிற்றொண்டர் கருத்துரைகள்
ஈ. பொழிற்றொண்டர் நூல் மதிப்புரைகள்
எனப்பகுத்து நோக்கலாம்.

அ. கரந்தைத் தமிழ்ச் சங்கம், இராதாகிருட்டினன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரன் மேல்நிலைப்பள்ளி, கரந்தைப் புலவர் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களைப் பற்றிய செய்திகளும் விளம்பரங்களும் தமிழ்ப்பொழிலில் இடம்பெற்றுள்ளன. மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாக்கள், கரந்தைக் கல்லூரியைச் சேர்ந்த இளங்கோவடிகள் தமிழ்க் கழக விழாக்கள் ஆகியவை பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.

கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாக்களில் அறிஞர்கள் சொற் பொழிவாற்ற வரும்போது அவர்களுக்கு அளித்த வரவேற்புரைகள், வாழ்த்துரைகள், வாழ்த்துப் பாக்கள் ஆகியனவும் வெளியிடப் பெற்றுள்ளன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புடையோர், உயர் பதவி கள், பட்டங்கள், சிறப்புகள் முதலியவற்றைப் பெறும்போது ‘மகிழ்ச்சி’ என்னம் தலைப்பில் அச்செய்திகள் வெளியிடப்பட்டன. சங்கத்துடன் தொடர்புடையோர் எவரேனும் மறைந்தால், அச்செய்தி ‘துயரம்’ என்னும் தலைப்பில் இடம்பெறும். சிலசமயங்களில் கையறுநிலைப் பாக்களும் இடம்பெறுவது வழக்கம்.

ஆ. ஏனைத் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் வளர்ச்சி அமைப்புகள், தமிழாசிரியர் கழகங்கள் போன்ற அமைப்புகள் தரும் செய்திகள் பிற செய்திகள் என்பதில் அடங்கும். மேற்கண்டவை ஆற்றும் தமிழ்ப்பணிகள், அவற்றின் அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவையும் இடம்பெறும்.

இ. தமிழ்ப் பொழிலின் ஆசிரியர், பொழிற்றொண்டர் (பொழில் + தொண்டர்) எனப்பட்டார். தமிழ் ஆக்கம் தொடர்பான செய்திகள், தமிழகம் பற்றிய செய்திகள், இந்திய, உலக நடப்புப் பற்றிய செய்திகள் என எதைப் பற்றியும் பொழிற்றொண்டர் அல்லது பொழிலாசிரியர் வரையும் கருத்துரைகள் பொழிற்றொண்டர் கருத்துரைகள் எனப்படும். இவை பிற இதழ்களின் தலையங் கங்கள் அல்லது ஆசிரியவுரைகள் போன்றவை.

ஈ. பொழிற்றொண்டர் நூன்மதிப்புரைகள்
தமிழ்ப் பொழிலில் வெளிவந்த நூல் மதிப்புரைகள் இரு வகைப்படும். ஒன்று, பொழிலாசிரியர் தாமே ஒரு நூலுக்கு வழங்கிய மதிப்புரை; மற்றது, பிறர் எவராயினும் ஒரு நூலை மதிப்பிட்டு எழுதிய மதிப்புரை. இவை சிறப்பாக இருப்பின், கட்டுரை வடிவில் எழுதப் பட்டிருப்பின் கட்டுரைப் பகுதியில் இடம்பெறும். குறிப்புரைகளாக இருப்பின் தமிழ்ச் செய்திகள் என்பதில் இடம்பெறும்.

பொழிற்றொண்டரின் நூல் மதிப்புரைகள், இரண்டு மூன்று வரிகள் முதலாக ஓரிரு பத்திகள் வரை செல்லும். இவற்றில் நூல் பற்றிய மதிப்பீடு இருக்காது. நூலினை வெளியிட்டோர் பற்றிய குறிப்பு, நூலாசிரியர், ஆண்டு, விலை, நூல் கூறும் சுருக்கமான பொருள் ஆகியவை பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.

இந்த ஆய்வேட்டில் இவை தமிழ் ஆய்வுக் கட்டுரைகளாக ஏற்கப்படவில்லை.

ஆ. புதுபபடைப்புகள்
கவிதைகள், நாடகங்கள், படைப்புக் கட்டுரைகள், அறவுரைக் கட்டுரைகள், வாழ்வியற் கட்டுரைகள், தமிழ்நேயக் கட்டுரைகள், பிற கட்டுரைகள் என அனைத்தும் புதுப படைப்புகள் என்று கொள்ளப்பட்டுள்ளன.

இ. தமிழியற் கட்டுரைகளும் பதிப்புகளும்
தமிழ்ப்பொழிலில் வெளிவந்த தமிழியற் கட்டுரைகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

க. இலக்கியக் கட்டுரைகள்
கா. இலக்கணக் கட்டுரைகள்
கி. தமிழக வரலாற்றுக் கட்டுரைகள்
கீ. தமிழ்ப் பண்பாட்டுக் கட்டுரைகள்
கு. கலைச் சொல்லாக்கக் கட்டுரைகள்
தமிழ்ப் பொழிலில் வெளியான படைப்புகள் இருவகை.
ங. பழைய நூல் பதிப்புகள், பழம்பாடல் பதிப்புகள்
ஙா. கல்வெட்டு வெளியீடுகள்

இவற்றில் அனைத்தும் ஆய்வாக உள்ளவை என்று கொள்ள முடியாது. இவற்றில் ஆய்வு£க உள்ளவை, தமிழ்ப் பொழிலின் ஆய்வு பற்றிய இந்த ஆய்வேட்டின் பொருளாகக் கொள்ளப்படுகின்றன. பிற கொள்ளப் படவில்லை. தமிழ்ப் பொழிலின் இலக்கியக் கட்டுரைகள் அனைத்தையும், இலக்கியக் கட்டுரைகள், இலக்கணக் கடடுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள் என மூன்று பெரும்பரிவுகளில் அடக்கிவிடலாம்.4

இந்த ஆய்வேட்டின் ஆய்வுமுறை
ஆய்வுமதிப்பீட்டு நோக்கு முதல் இடத்தைப் பெற்றாலும் அது இறுதியில் நிகழ்வது. கட்டுரைப் பொருள் பகுப்பு நோக்கு எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது. காலப்பகுப்பு நோக்கும் கையாளப்பட்டுள்ளது. தேவைப்படுமிடங்களில், புள்ளிவிவர நோக்கு, சமூகவியல் நோக்கு இரண்டும் ஆளப்பட்டுள்ளன.

ஆய்வு மதிப்பீட்டு நோக்கு
இலக்கியமோ, இலக்கணமோ எத்துறைக் கட்டுரை ஆயினும் அது ஆராய்ச்சி சார்ந்ததா, ஆராயச்சியற்றுக் கூறியது கூறலாக எழுதப்பட்டதா என்பது முக்கியமானது. இவ்வாறு பகுத்து நோக்குவதை ஆய்வு மதிப்பீட்டு நோக்கு எனலாம். பலவேறு அறிஞர்களும் பொதுவாக ஆய்வு என்ற சொல்லுக்குச் சுட்டியுள்ள பொருளே இங்கு ஆய்வு என்பதற்குக் கொள்ளப்படுகிறது.5
ஒரு துறையிலுள்ள புலமையின் காரணமாக அத்துறையில் காணப்படும் சிக்கல்கள் ஆராய்ச்சியாளன் கண்ணில் படுகின்றன. ஒரு சிக்கலை எடுத்து, அதற்கான கருதுகோளை அமைத்துக்கொள்ளும் நிலை வரை தேடல் (சர்ச்) எனலாம். பின்னர் அக்கருதுகோளை ஆய்வாளன் சான்றுகள் காட்டி நிறுவ முற்படும் முயற்சி மறுதேடல் (ரிசர்ச்) எனப்படுகிறது.6 இதுதான் ஆய்வு என்பது.

ஏதேனும் ஒரு கருத்தை (அதாவது கருதுகோளை) மனத்தில் கொண்டு அதை நிறுவ முற்படும் கட்டுரையை ஆய்வுக்கட்டுரை என்கிறோம். நிறுவுகின்ற முயற்சி தான் ஆய்வு. முடிவுகள் அவரவர் மனப்பாங்கிற்கேற்ப, நோக்கிற்கேற்ப, கருத்துநிலைக் கேற்ப மாறுபடலாம்.7

சிலசமயங்களில், இவ்வாறு நிறுவும் முயற்சியில் குறித்த தேடலின்றி, மேம்போக்காகத், தான் கருதிய கருதுகோளையே ஒரு ஆசிரியன் சிறியதொரு கட்டுரையாக ஆக்கிவிடுவதுண்டு. இன்னும் சில சமயங்களில் கருதுகோளை நிறுவப் போதுமான சான்றுகள் இனறி, ஓரிரண்டு சான்றுகளோடு கருத்தை முன் வைத்துச் சென்றுவிடுவதும் உண்டு. இவைகளும் ஆய்வுக் கட்டுரைக்கான தன்மை உடையனவே.

தமிழ்ப்பொழில் இதழ்க்கட்டுரைகள், பெருமபாலும் நான்கு பக்க அளவின. சிலசமயம், ஒரு பக்கம், இருபக்கம் என்னும் குறைந்த அளவுகளிலும் அமைவதுண்டு. அவை ஒரு நூல் அல்லது ஆய்வேடு போன்று அளவில் பெரியவை அல்ல. எனவே போதிய சான்றுகளின்மை பெரிதாகக் கொள்ளப்பட வில்லை. மேற்கூறிய அடிப்படைகளில் தமிழ்ப்பொழிலின் தமிழியற் கட்டுரைகள் ஆய்வா, ஆய்வுப்போக்கு அற்றனவா என்ற சோதிக்கப்பட்டு தேறியவை ஆய்வு என்றும், தேறாதவை ஆய்வற்றவை என்றும் இந்த ஆய்வாளரால் கொள்ளப்பட் டுள்ளன.6 சில சமயங்களில் ஆய்வு என்று தேறாத நிலையிலும் சில கட்டுரைகளில் புதிய தகவல்கள் தரப்பட்டிருக்கலாம். அபபோது அவையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

கட்டுரைப்பொருள் பகுப்பு
அனைத்துக் கட்டுரைகளும் அவற்றின் பொருள் அடிப்படை யில், இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறும் பண்பாடும் என்னும் முன்று அடிப்படைத் தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் உட்பகுப்புகளுக் குள்ளாக்கப் படலாம். உதாரண மாக, இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளை, இலக்கிய வரலாறு, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு என்று பகுத்துப்பார்க்கலாம்.9 இலக்கணக் கட்டுரைகளை மரபுவழியான இலக்கண ஆய்வு, மொழியியல் ஆய்வு என்னும் பகுப்புகளுக் குள்ளாக்கலாம்.10 மரபுவழி இலக்கண ஆய்வுகளை எழுத்து, சொல், பொருள் போன்ற அடிப்படைகளில் பகுக்கலாம். மொழியியல் சார்ந்த ஆய்வுகளை, மொழி விளக்க ஆய்வுகள், மொழிவரலாற்று ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள் என்ற நிலைகளில் பகுத்துப் பார்க்கலாம். இலக்கணக் கட்டுரைகளின் ஒரு பகுதியாகவே கலைச்சொல்லாக்கமும் நோக்கப்படுகிறது. வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகளை வரலாற்றாய்வுகள், பண்பாட்டாய்வுகள் எனத் தனித்தனியே நோக்கலாம். இவை மேலும் உட்பகுப்புகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.11
இவ்வாறு பகுத்து நோக்குதல், காலந்தோறும் எந்தெந்தத் துறைகளில் எந்தவிதப் போக்குகள் தோன்றியுள்ளன அல்லது வளர்ச்சி பெற்றுள்ளன என்க் காண்பதற்கு உதவும்.

காலப்பகுப்பு
தமிழ்ப்பொழிலின் ஐம்பதாண்டுக் கட்டுரைகளைப் பத்தாண்டுக ளுக்கு ஒரு காலப்பகுதி என ஐந்து பகுப்புகளாகக் காணலாம். பத்தாண்டுகள் என்பது பெரும்பாலும் கட்டுரைப்பொருள், ஆய்வு முறை போன்றவற்றின் மாற்றத்துக்கு ஓரளவு ஒத்துச்செல்லும் காலப்பகுதி எனலாம். சிலசமயங்களில் பத்திரிகை நின்றும் போயிருக்கிறது. சில மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது. இம் மாதிரிக் காரணங்களால் மிகத் துல்லியமாகப் பத்துப் பத்தாண்டு கள் எனப் பிரிப்பதற்கு மாறாக, சற்றே கூடக்குறையக் கால அளவைப் பகுத்துக் கொள்ளலாம். எனவே
1).முதல் துணர் முதல் பதினோராம் துணர் வரை-தொடக்க காலப்பகுதி
2) பன்னிரண்டாம் துணர் முதல் இருபத்தோராம் துணர் வரை- இரண்டாம் காலப்பகுதி
3) 22ஆம் துணர் முதல் 30ஆம் துணர்வரை-மூன்றாம் காலப்பகுதி
4) 31ஆம் துணர் முதல் 42ஆம் துணர்வரை-நான்காம் காலப்பகுதி
5) 43ஆம் துணர் முதல் 50ஆம் துணர்வரை-ஐந்தாம் காலப்பகுதி
சிறுகாலப்பகுதி மாறுதல்களுக்குக் காரணங்கள் ஆங்காங்கு தரப்பட்டுள்ளன. கால அடிப்படை நோக்கில் ஆய்வுப்போக்கைக் காண உதவும் என்பதால் இந்த அடிப்படையில் இயல்கள் அமைகின்றன. பொதுவாக இவ்வாறு பகுப்பதற்கான அடிப்படை கள் அந்தந்த இயலின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளன. சான்றாக, ஐம்பதாண்டுக்கால அளவில் இலக்கிய ஆய்வு எவ்விதம் வளர்ந்துள்ளது என்பதை ஒரே நோக்கில் காணும் சிரமத்தை நோக்கிப் பத்துப் பத்தாண்டுகள் எனக் காலப்பகுதியை வரையறுத்துக்கொண்டு நோக்குவது எளிதல்லவா?
பொதுவாக அந்தந்தக் காலப்பகுதியில் வெளியான கட்டுரைகள் பற்றிய புள்ளி விவரங்களும் தேவையான இடங்களிலும் பின்னிணைப்பிலும் தரப்பட்டுள்ளன.

மேற்கூறியவாறு, இயல் பகுப்புமுறை, கால அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இந்த முன்னுரை அன்றி, ஐந்து காலப்பகுதிகளுக்கு ஐந்து இயல்கள், பிறகு முழுப்பார்வை குறித்த இயல் ஒன்று, முடிவுரை என இந்த ஆய்வேடு அமைந்துள்ளது.

ஐம்பதாண்டுகளில் காணப்படும் பத்திரிகைப் போக்கினைத் தேட முயலுவதால், இந்த ஆய்வு ஒருவித அகலாய்வாகவே (மேக்ரோஸ்டடி) அமைந்துவிடுவதில் வியப்பில்லை. மேலும் ஆராய விருமபுகின்றவர்கள் நுட்ப ஆய்வைக் (மைக்ரோ ஸ்டடி) குறித்த துறைகளில் மேற்கொள்ளலாம். மேலும் குறித்த துறைகளாகப் பகுத்தும் நோக்கலாம். சான்றாக தமிழ்ப்பொழில் நடை பற்றிய ஆய்வு என்று ஒன்றை மேற்கொள்ள இயலும. மேலும் சமூகவியல் நோக்கிலும் தமிழ் இயக்க அல்லது திராவிட இயக்க நோக்குகளிலும் பார்க்கலாம். காரணம், இந்த இதழ், தொடக்கத்தில் நீதிக்கட்சி சார்பாகவும், பின்னர் திராவிட இயக்கச் சார்பாகவும், அதன்பிறகு தனித்தமிழ் இயக்கச் சார்பாகவும் மாறியுள்ளது. இது ஒரு தர்க்கரீதியான, தவிர்க்கவியலாத மாற்றம் என்று கருதமுடியும். இவ்வித மாற்றம் ஏன் நிகழ்ந்துள்ளது என்பதை நோக்கலாம்.

மேலும் இந்தி எதிர்ப்பு, கலைச் சொல்லாக்க இயக்கம், தமிழிசை இயக்கம் போன்ற பல இயக்கங்களில் இந்த இதழ் மிகுந்த பங்காற்றியுள்ளது. இவற்றின் அடிப்படையிலும் இந்த இதழை மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உண்டு.

இறுதியாக

‘செந்தமிழ்’ என்ற ஆய்விதழின் தொடகக காலத் தொகுப்புகளை அடைவுபடுத்திய முனைவர் பா.ரா. சுப்பிரமணியன் கூறுகிறார்:
“செந்தமிழ் இதழின் தொடக்க காலத் தொகுப்புகளை அடைவு படுத்துவது என்பது ஒருவகையில் ஒரு மாயப் பெட்டியைத் திறப்பதுபோன்றது. இந்தத் தொகுப்புகளில் அடங்கியுள்ள பொருட்கள் படிப்போரை மெய்சிலிர்க்கச் செய்யும்; எழுச்சியூட்டும்; போலச் செய்திருக்கும்; ஏமாற்றவும் செய்யும். இவற்றை அடைவுபடுத்துவதே பெரிது. மதிப்பீடு என்பது பின்னால் வருவது.”12

தமிழ்ப்பொழில் இதழின் கட்டுரைகளை அடைவு படுத்துபவர்க ளுக்கும் இதே உணர்வுகள்தான் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அவை வியப்பூட்டும்; சிலசமயங்களில் மற்றவர் எழுதியதன் நிழலாகவும் இருக்கும்; சிலசமயம் எழுச்சியூட்டும்; சிலசமயம் ஏமாற்றவும் செய்யும். தமிழ்ப்பொழில் முதல் ஐம்பது துணர்களில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் இந்த ஆய்வுக்கான பணியில் அடைவு படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுநோக்கில் மதிப்பிடப் பட்டும் உள்ளன.

அடிக்குறிப்பு
1. தமிழ்ப்பொழில் தோன்றிய 1925ஆம் ஆண்டினை ஒட்டிய காலப் பகுதியில் இதழ்க ளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதிலும் இலக்கியத் திங்களிதழ்கள் மிகக் குறைவு. இது பற்றி வெ. சாமிநாத சர்மா கூறுவது இங்கு கருதத் தக்கது:
“அப்பொழுதைய (1920-30 காலப்பகுதி) தமிழ்ப் பத்திரிகை உலகம் குறுகிய விஸ்தீரணமுள்ளதாகவே இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டுமூன்று பத்திரிகைகளே அதில் உலாவிக் கொண்டிருந்தன….ஓரளவு பிரசித்தியடைந்திருந்த வார இதழ்களும் மாத சஞ்சிகைகளும் ஏழெட்டுக்குமேல் இல்லை.” சோமலெ, தமிழ் இதழ்கள், ப.20.

2. தமிழ்ப்பொழில் இதழ் 1977 ஏப்ரலுடன் ஐம்பதாண்டு நிறைவுபெற்றது. 1925இல் ஆரம்பிக்கப்பட்டதனால், இது 1975இலேயே ஐம்பதாண்டு நிறைவுபெற்றிருக்க வேண்டும். ஆனால் 41ஆம் துணர் முடிந்தவுடன் (1966 ஏப்ரல்) இதழ் நின்றுபோயிற்று. பிறகு 1968இல் மீண்டும் வரத்தொடங்கியது. இதனால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது.

3. இந்த ஆய்வேட்டின் பின்னிணைப்புகளில் இவை பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

4. “இக்காலத்தில் வெளிவந்திருக்கும் ஆராய்ச்சி நூல்கள்-இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி என மூவகைப்படும்.” சோமலெ, வளரும் தமிழ், ப.361.

5. “ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்து என ஆராய்தல். ஆராய்தல் எனினும், தெரிதல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும்.” தொல். 1206, பேராசிரியர் உரை.
“ஆய்வு என்ற சொல்லே, ‘ஆய்’ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்தது. ஆய்வு என்றால், நுணுக்கமாகக் காணல்.” ந. சஞ்சீவி, ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.90

6. இரண்டாவது முறை தேடுதல், அல்லது மறுதேடல் அல்லது மீண்டும்மீண்டும் தேடல் என்பதை ஆய்வுக்குரிய முதன்மைப் பொருளாக ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. The Compact Edition of the Oxford Dictionary, Volume II, p.2505..

7. “அறிவியல் முறைப்படி சிக்கல்களுக்கு விடைகாணும் முயற்சி ஆய்வு எனப் பெயர் பெறும்.” முத்துசசண்முகன், சு. வேங்கட ராமன், இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.2,
“Research is any systematic quest for knowledge that is characterized by disciplinal enquiry.” Allan Kent (ed), Encyclopaedia of Library and Information Sciences, Vol.25., p.254.
“Empirical Social research, like any other type of research, does not aim at persuasion nor at finding ultimate truths.” Pauline V. Young, Scientific Social Surveys and Research, p.31.

8. வெறும் தகவல்களைத் தனியாகவோ அன்றித் தொகுத்தோ தரும் கட்டுரைகள் ஆய்வு அல்ல. அத்தகவல்கள் புதியவையாக இருந்தாலும் சரி, தகவல்களை மட்டுமே தருவது ஆய்வாகாது. ஒரு தகவலைவிட, அது அடையப்பட்ட நெறிதான் ஆய்வுக்கு முதன்மையானது. இக்காரணத்தால் வெறுமனே பதிப்பிக்கப்பட்ட பாடல், நூல் வெளியீடுகளோ, கல்வெட்டு, தொல்பொருள் வெளியீடுகளோ இந்த ஆய்வேட்டில் ஆய்வு எனக் கொள்ளப்படவில்லை.

9. இலக்கிய ஆய்வை இவ்வாறு மூவகையாக அடக்கிப்பார்த்தல் அறிஞர்களுக்கு உடன்பாடானது. “இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கொள்கை என மூவகைக் கல்வி பற்றிக் குறிப்பிடுவர்.” ச. வே. சுப்பிரமணியன், இலக்கியக் கல்வி, இலக்கி யக் கொள்கை-8, ப.2.
“Within our proper study, the distinctions between literary theory, literary criticism and literary history are clearly the most important.” Rene Wellek and Austin Warren, Theory of Literature, p.39.

10. மொழியின் இயல்பை விளக்கிப் பழங்காலத்தில் எழுதப்பட்ட கருத்துத் தொகுப்பு களை இலக்கணங்கள் என்கிறோம். அறிவியல் முறைப்படி, இன்று மொழியை ஆராய்தலை மொழியியல் என்கிறோம். மொழியியலுக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு, ஒற்றுமை வேற்றுமைகள் ஆகியவற்றை மோ. இசரயேல் நன்கு விளக்கியுள்ளார். மோ. இசரயேல், தலைமை உரை, அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழக முதல் மாநாட்டுக் கருத்தரங்கு மலர், மொழியியல், தொகுதி 8, எண் 3-4, பக். 9-14.

11. தமிழ்ப்பொழில் இதழில் வரலாற்று-பண்பாட்டுக் கட்டுரைகளின் எல்லைப் பரப்பும் குறைவு, அவற்றின் எண்ணிக்கையும் இலக்கிய இலக்கணக் கட்டுரைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு. எனவே இந்த இரு பகுப்புகளே போதும் என விடப்படலாயிற்று.

12. P. R. Subramanian, Annotated Index to Centamil, Part B, p.xiv.

திறனாய்வு