மேனிலையாக்கத் தமிழர்கள்

தமிழர்கள் உயர்ந்த நிலை பெறும்போது தங்களைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை, வேறு மாநிலத்தவர்களாகக் காட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.கே. இராமாநுஜன், ஆர்.கே. நாராயணன் போன்றவர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் அவர்களின் தந்தை/தாய்/பெற்றோர் இருவரும் பிறந்திருப்பர், அல்லது தாங்களே பிறந்திருக்கலாம், இருப்பினும் புகழ்வரும்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தவர் ஆகிவிடுகின்றனர். இவர்களின் முன்னோடி மாஸ்தி வேங்கடேச ஐயங்காரும் அப்படியே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்படியே. சர்வபள்ளி திருத்தணிக்கு மிக அருகிலுள்ள சிற்றூர். ஆனால் இப்போதெல்லாம் அவரை ஆந்திரர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.
இந்த வரிசையில் அண்மையில் என் மருமகனும் சேர்ந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. திரு. டாக்டர் அருண் (அருணாசலம்) எம்.டி., ஐ.ஏ.எஸ்., என் தங்கை மகன். அவர் தந்தை சோளிங்கர் அருகில் ஆயல் கிராமத்தில் பிறந்தவர். தாய் ஆர்க்காடு. மைசூரில் தந்தை இரயில்வே வேலையிலிருந்த காலத்தில் பிறந்ததனால் அவர் மைசூர்க்காரர் ஆகிவிட்டார். ஐஏஎஸ் முடித்து இப்போது மிசோரம் பகுதியில் ஒரு கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறந்த நற்பணிகள் ஆற்றிவருகிறார். அவரது சேவை மனப்பான்மை மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால் தன்னைப் பற்றி பேட்டி எடுத்த ஆங்கிலப் பத்திரிகையில் அவர் மைசூர்ப்பகுதியைச் சேர்ந்தவராக (கன்னடராக)த் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்பது வருத்தத்தை தருகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தது போல தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் அடுத்த மாநிலத்துக்கே தருகின்ற தமிழகத்தின் அவப்பேற்றினை என்ன சொல்ல?

தினம்-ஒரு-செய்தி