மேல்மட்டத்தில் இவர்கள்…

இரவு விடிந்த உடனே
ஒவ்வொருவரின் பணியும் இதுதான்:
‘வட்டாட்சியரிடம்’ செல்கிறார்கள்
‘விஏஓவிடம்’
‘மாவட்ட ஆட்சியரிடம்’
இன்னும் பல அலுவலகங்களுக்குச்
சென்று மறைகிறார்கள்.

நீங்கள் அலுவலகங்களுக்குள் நுழைந்தவுடன்
காகிதத்தாள் தொழில் பொழிகிறது
கரன்சியும் பொழிகிறது.
பெருமழைபோல கணினிகள் வந்தும்
‘நூற்றில் ஒன்றைப் பொறுக்கியெடு–
மிக முக்கியமானதை! — இவர் கேட்பதை அல்ல’.

அலுவகக் கூட்டங்களில்
சென்று மறைகிறார்கள் அதிகாரிகள்.

நான் சென்று கேட்கிறேன்:
‘இங்கே ஒருகாலத்தில் வந்திருக்கிறேன்.
அப்போது சங்கர் என்பவர் இருந்தார்
இப்போது யாரைப் பார்க்க வேண்டும்?’
‘பவானி சங்கர் இஆப
சென்றிருக்கிறார் புயல் நிவாரண
அமைச்சரிடம் ஆலோசனைக்கு’.

எண்ணற்ற படிக்கட்டுகள் காலை ஒடிக்கின்றன
ஏதோ கொஞ்சம் ஒளி மினுக்குகிறது
மறுபடியும்:
‘அடுத்தவாரம் வரச் சொல்கிறார்.
–கூட்டத்தில்: –
மின்கம்பங்கள் வாங்க வேண்டுவது தொடர்பாக
மத்தியக் குழுவிடம் நிதிக்காக’.

அடுத்த வாரம் —
எழுத்தர் ஒருவரும் வரவில்லை
அலுவலகப் பையனும் வரவில்லை
இருக்கைகள் காலி!
அத்தனை பேரும்
ஐந்தாம் மாடியில் அறிக்கைகள் தயாரிக்கும் கூட்டத்தில்.

இரவும் வந்துவிட்டது.
எனது தற்காலிக இருப்பிடத்தின் மிக உயரமான தளத்திற்கு
ஏறிக் கொண்டிருக்கிறேன்.
‘அதிகாரி வந்துவிட்டாரா?”
‘இன்னும் சந்திப்பில் இருக்கிறார்
தம்பானி குழுமப் பிரதிநிதிகளுடன்.’

அந்தக் கூட்டத்திற்குள்
பாய்கிறேன் எரிமலைக் குழம்புபோல
காட்டுத்தனமான வசைகள் உதிர்கின்றன.
அப்புறம் பார்:
அதிகாரிகள் துண்டு துண்டாக அமர்ந்திருக்கிறார்கள்
மேலே ஒன்றுமில்லை!
அவர்களின் மற்ற துண்டுகள் எங்கே?
‘வெட்டப் பட்டார்கள்!
கொல்லப் பட்டார்கள்!’

பித்துப்பிடித்தவன் போல் ஓடிக் கூச்சலிடுகிறேன்.
என் மனம் பேதலிக்கிறது.
மிக அமைதியாக ஒருவர்
சுட்டிக்காட்டுகிறார்:
‘அவர்கள் பல கூட்டங்களில் ஒரேசமயத்தில்
பங்கேற்கிறார்கள்’.
இருபது கூட்டங்களில் நாங்கள்
பங்கேற்க வேண்டும்.

இந்தவிழா அந்தவிழா நடத்த வேண்டும்
பத்துவழிச் சாலை போடவேண்டும்
பார்க்காமலே அறிக்கை தயாரிக்க வேண்டும்
மத்திய, மாநில… கேட்கவேண்டும்
தினமும்—
இன்னும் பல மிச்சம் இருக்கின்றன.
ஆகவே நாங்கள் எங்களை வெட்டிக் கொள்கிறோம்
துண்டுகளாக!

இங்கே இடுப்பு வரை
மீதிகளை அங்கே பார்.
எங்களுக்கு வேலை அதிகம்.
“கவனிக்கவேண்டும்” எங்களை
இல்லையேல் தேடியவர் கண்ணில் படுவாரா?

புதிர்நிலையில் தூங்க இயலவில்லை.
உணர்வு மழுங்கிய நிலையில்
விடியலைச் சந்திக்கிறேன்.
ம்ம், இன்னும் ஒரே ஒரு கூட்டம்
போடுங்கள்…
பாதிக்கப்படும் அனைவரையும்
ஒழிப்பதற்காக.

சமூகம்