வாக்களிப்பது கட்டாயமா….?

voting-1
ஆட்சியைப் பிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, ஆட்சிக்கு அவ்வளவாகச் சம்பந்தமில்லாத இடைத்தேர்தலோ, ஊராட்சி மன்றத் தேர்தலோ எதுவானாலும் நம் ஊடகங்கள் அனைத்தும்-சொல்லும் சேதி அனைவரும் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பது நம் கடமை என்பதுதான்.

இதில் மட்டும் கருத்து வேறுபாடே இல்லை- “வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றும் “வாக்களிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை வரை தரலாம்” என்றும் ஊடக மக்கள் பிரதிநிதிகள் முழங்குகிறார்கள்.  ஏன் வாக்களிக்கவேண்டும்? அதுவும் கட்டாயமாக? பெரிய கட்சிகளான ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலுமே நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வாக்க ளிக்க வேண்டிய அவசியம் என்ன? லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுவாங்குபவர் ஒருவராவது உண்டா?. ஒரே ஒரு ஊழல்புகார் அல்லது கொலை கொள்ளைக் குற்றம், அல்லது வேறு குற்றங்கள் இல்லாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டா?

நீதிமன்றங்களுக்கு,ம் லோகாயுக்தா மன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கும் வெட்க மில்லை?

சரி, பெரிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய்? சின்னக் கட்சிகளுக்குப் போடு. அல்லது சுயேச்சைகளுக்குப் போடு என்பார்கள் நம் மக்கள் பிரதிநிதிகள். இவர்களுக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்யப்போகிறார்கள்? ஒன்று: மாறிமாறி இது ஆட்சியமைக்குமா, அது ஆட்சியமைக்குமா என்ற நிலை வரும்போது விலைபோவார்கள். தங்களை அதன்மூலம் வளப்படுத்திக்கொள்வார்கள். அல்லது எதுவும் செய்ய இயலாமல் வக்கற்ற நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். சட்டமன்றத்துக்காவது போவார்களா, ஏதாவது சட்டம் வரக் கூடுமானால் கையைக்கூட உயர்த்துவார்களா என்பதே சந்தேகம்தான்.

இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக் கும்போது “வாக்களி, வாக்களி” என்று ஏன் கேட்கிறார்களோ ? ஒருவன்-நல்லது செய்வேன் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட முடியும்£? முதலில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்குங்கள், அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தம் செய்யுங்கள்.  பிறகு “வாக்களியுங்கள்’ என்று கேளுங்கள்..

அவ்வளவு வேண்டாம். சரிவரச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று ஒரு எளிய சட்டம் கொண்டு வாருங்களேன் பார்க்கலாம்-பிறகு நாங்கள்  கட்டாயம் வாக்களிக்கிறோம்..

“இந்தத் தேர்தலில் நிற்பவர்கள் எவருமே எனக்குப் பிடிக்கவில்லை, நான் வாக்களிக்கமாட்டேன்” என்றால் ஒரு படிவம் கொடுத்துப் பூர்த்திசெய்யச் சொல்லி, முகவரி எழுதச்சொல்லி, கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள்.  (இதெல்லாம் தெரிந்து கொண்டவுடனே நம் அரசியல் தலைவர்களும் காவல்துறையினரும்  ஒன்றுசேர்ந்து நீ தீவிரவாதி என்று முத்திரை குத்தி அடித்துநொறுக்கி சிறையில் தள்ளுவார்கள்) எப்படி வாக்களிப்பது மறைவாக வைக்கப் படுகிறதோ அதுபோல விருப்பமின்மையையும் மறைவாக வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்புறம் வாக்களிக்க மக்கள் ஏன் தயங்குகிறார்கள், பயப்படு கிறார்கள்?

அதாவது, வாக்களிக்கும் எந்திரத்தில், வாக்காளர் பட்டியலுக்கு பொத்தான் விளக்கெல்லாம் தயாரிப்பதுபோலவே, எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கும் ஒரு பொத்தான் பொருத்துங்கள். அதனால் என்ன இழப்பு?

எத்தனை கோடிரூபாய்கள் ஒருநாள் பாராளுமன்றத்திற்கு, ஒருநாள் சட்ட சபை நடத்துவதற்குச் செலவாகின்றன? எவ்வளவு இலவசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் மன்றத்திற்கு வர வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா? மன்றத்தை ஒழுங்காக நடத்தவிடவேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா?

ஆக மக்கள் நாயகத்தைக் கொல்வது வாக்களிக்க விருப்பமில்லாதவர்களா, அரசியல்வாதிகளும் தேர்தல்  அவர்கள் அடிவருடிகளுமா?

சமூகம்