விதி என்றால் என்ன?

விதி என்பது ஏதோ மேலிருந்து நமக்கு அளிக்கப்படுவது, அல்லது கடவுளால் தலையில் எழுதப்படுவது என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாக இருந்தால், அது அவன் தலைவிதி, நான் ஏழையாக இருந்தால் இது என் விதி என்கிறார்கள்.

ஆனால் நொந்தவர்கள் புலம்புவதற்குத்தான் விதி என்பது பயன்படுகிறதே ஒழிய, நிம்மதியாக இருப்பவர்களோ வசதியாக இருப்பவர்களோ அதைப் பயன்படுத்துவதில்லை. எவனும் “நான் வசதியாக இருப்பது என் விதி” என்று சொல்வதில்லை.

விதி என்றால் என்ன என்று அர்த்தப்படுத்தப் பலகாலமாக முயற்சி செய்தும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது நம் “விதி” போலும்! ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

விதி என்றால் சட்டம். “நீ என்ன செய்கிறாயோ அதற்குத் தகுந்த பலனை அடைகிறாய்” என்பது விதி. இதைத்தான் இயற்பியலில் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொல்கிறது. ஒவ்வொரு செயலுக்கும், எப்போதும் சமமான எதிர்விளைவு இருக்கிறது என்கிறது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று நம் முன்னோர் சொன்னார்கள்.
இதுதான் ‘விதி’ போலும். ஓரளவு -ஓரளவுதான்! -தனிமனிதர்களுக்குப் பொருந்துகின்ற இவ்விதி, பெரும் மனிதக்குழுக்களுக்கு, நாடுகளுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை.

தினம்-ஒரு-செய்தி