விருந்தாளி

மொழிபெயர்ப்புக் கதை

விருந்தாளி (ஆல்பர்ட் காம்யூ)

[ஆல்பர்ட் காம்யூ ஃப்ரெஞ்சு மொழியின் சிறந்த எழுத்தாளர். இருத்தலியத் தத்துவ ஞானி. அல்ஜீரியாவில் ஃப்ரெஞ்சுக் காலனியாதிக்கத்தில் பிறந்தவர். நாடகாசிரியர், இதழியலாளர், சிறுகதையாளர், விமரிசகர்.
‘விருந்தாளி’ காம்யூவின் மிகச் சிறந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது. 1957இல் ஒரு சிறுகதைத்தொகுதியில் வெளியானது. அரசாங்கத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமைக்கும் நீதிசார்ந்த நட்புக்கும் இடையிலான மோதலை இக்கதை காட்டுகிறது. காலனியாதிக்கம், அந்நியமாதல், நீதிக்கும் சுதந்திரத்திற்குமிடையிலான முரண்பாடு ஆகியவற்றில் காம்யூவின் ஆர்வத்தை இக்கதை காட்டுகிறது.]
””

அந்த ஆசிரியன், பள்ளிக் கட்டிடத்தை நோக்கி இரண்டுபேர் ஏறிவருவதைக் கண்டான். ஒருவன் குதிரைமேல், மற்றவன் நடந்து. ஒரு மலைச்சரிவில் அந்தப் பள்ளிக் கட்டிடம் இருந்தது. அதற்கு முன்னிருந்த செங்குத்தான மேட்டை அவர்கள் இன்னும் ஏறவில்லை. அந்த உயர்ந்த, ஆளரவமற்ற மேட்டுநிலத்தின் கற்களினு£டாக, பனி அதிகம் விழுவதனால் மெதுவாக முன்னேறினார்கள். சற்றைக்கொருமுறை குதிரையின் கால் இடறியது. அவர்கள் பேச்சு இன்னும் காதுக்கு எட்டவில்லை. ஆனால் குதிரையின் மூச்சு பனியில் புகைபோல வந்தது. இந்தச் சரிவுமேல் ஏறிவர இன்னும் அரைமணிநேரம் போல் ஆகும் என்று கணித்தான் ஆசிரியன். கடுங்குளிர். ஸ்வெட்டர் போட்டுக்கொண்டுவரப் பள்ளிக்குள் சென்றான்.

யாருமற்ற, பனி உறைந்த வகுப்பறையைக் கடந்தான். கரும்பலகையில் நான்கு வித வண்ணங்களில் வரையப் பட்டிருந்த ஃப்ரான்சின் நான்கு முக்கிய ஆறுகள் தங்கள் முகத்துவாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதக் கடும் வறட்சிக்குப் பின்னர், மழையின் இடையீடின்றியே, திடீரென அக்டோபர் மத்தியில் பனிவிழ ஆரம்பித்துவிட்டது. அதனால் அந்த மேட்டுநிலத்தின் பலவேறு பக்கங்களிலிருந்தும் வந்து படித்துக் கொண்டி ருந்த இருபது பையன்களும் நின்று விட்டார்கள். வெப்பநிலை கொஞ்சம் சீரடைந்தால் திரும்பி வருவார்கள். அந்த வகுப்பறையை அடுத்திருந்த ஒரே அறைதான் தாருவின் வசிப்பிடம். அதை மட்டுமே அவன் இப்போது வெப்பப்படுத்தி வந்தான். வகுப்பறை ஜன்னல்களைப் போலவே அதன் ஒரே ஜன்னலும் தெற்குப் பார்த்ததுதான். அந்த ஜன்னலின் வெளிப்புறமாகப் பள்ளிக்குச் சில கிலோமீட்டர் து£ரத்தில் மேட்டுநிலம் தெற்கு நோக்கிச் சரிந்தது. நல்ல வெப்பநிலையில் பாலைவனத்தை நோக்கி விரிந்த இடைவெளியினு£டே ஊதாநிற மலைகள் நன்றாகத் தெரியும்.

கொஞ்சம் கதகதப்பூட்டிக்கொண்டு தாரு அந்த இரு மனிதர்களையும் பார்த்த ஜன்னலுக்குத் திரும்பினான். இப்போது அவர்கள் இருவரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. சரிவில் ஏறத்தொடங்கியிருப்பார்கள். இரவுமுதல் பனிவிழுவது சற்றே குறைந்திருந்ததால் அவ்வளவு இருட்டாக இல்லை. காலைப்பொழுது அழுக்கேறிய மங்கிய பிரகாசத்தோடு விடிந்தது. மேகக்கரை விலகியும் வானம் பிரகாசம் கொள்ளவில்லை. பகல் இரண்டு மணியாகியும் இப்போதுதான் விடிந்ததுபோலிருந்தது. ஆனால் சென்ற மூன்று நாட்களைவிட இப்போது பரவாயில்லை. அப்போது கனத்த பனிமழை. அடர்ந்த இருளினூடே சிறு சுழற்காற்று வகுப்பறையின் கதவுகளை தடதடத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது கொட்டகைக்குப் போய் கோழிக்குஞ்சுகளுக்கு இரைபோடுவது, அல்லது கணப்புக்குக் கரிகொண்டு வருவது தவிர, தாரு தன் அறையிலேயே பொழுதைக் கடத்தினான். நல்ல வேளையாக, வடக்கில் அருகிலிருந்த கிராமமாகிய தாஜித்திலிருந்து வந்த லாரி இந்தப் பனிமழைக்கு இரண்டு நாட்கள் முன்னமே அவனது தேவைகளைக் கொண்டுவந்திருந்தது. அது மீண்டும் இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் திரும்பும்.

அது இல்லாவிட்டாலும், ஒரு முற்றுகையைச் சமாளிக்கும் அளவுக்கு அவனிடம் உணவு இருநதது. பஞ்சத்தில் அடிபட்ட குடுமபத்தினரின் பிள்ளைகளுக்குத் தருவதற்காக நிர்வாகத்தினர் விட்டிருந்த கோதுமை மூட்டைகளால் அந்தச் சிறிய அறை அடைந்திருந்தது. பெரும்பாலும் எல்லாக் குடும்பத்தினருமே இந்த வறட்சியில் பாதிப்புக்குள்ளாகி யிருந்தனர். யாவரும் ஏழைகள். தினந்தோறும் அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களுக்கான பங்கீட்டை தாரு தருவான். இந்தப் பனிமழையால் அவர்கள் அதைப் பெறமுடியவில்லை. ஒருவேளை சில பிள்ளைகளின் தகப்பன்களோ, அண்ணன்களோ இன்றுமாலைகூடத் தங்கள் பங்கீடுகளைப் பெறுவதற்கு வரலாம். அடுத்த அறுவடை வரை எப்படியாவது இந்த இருப்பை வைத்துத்தான் தாக்குப் பிடிக்க வேண்டும். பிரான்சிலிருந்து இப்போது கோதுமை மூட்டைகள் கப்பலில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. மிக மோசமான பருவநிலையைத் தாண்டியாயிற்று. ஆனால் இந்தப் பஞ்சத்தை நினைவிலிருந்து அழிப்பது கஷ்டமாயிருக்கும். சதை ஒட்டிய எலும்புகளோடு மக்கள் பிசாசுகள் போல வெயிலில் கூட்டம் கூட்டமாக அலைந்தனர். நாளுக்கு நாள் அந்த மேட்டுநிலம் எரிந்துபோன கரிக்கட்டி ஆயிற்று. பூமி கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பு விட்டுப் பிளந்தது. எரிதலினால், காலடியில் கற்கள் பொடிப்பொடியாகிப் புழுதியாயின. கொடும் பஞ்சம். ஆயிரக் கணக்கான ஆடுமாடுகள் இறந்துபோயின. இங்குமங்குமாக மனிதர்களும்தான்.

யாரும் அறியாமலே. இந்தக் கொடும் வறுமைக்கு முரணாக, இவன் மட்டும் ஒரு மடாதிபதிபோல, தனது பள்ளிக் கட்டிட வீட்டில் வாழ்ந்தான். வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்- குறுகிய படுக்கை-பெயிண்ட் அடிக்காத அலமாரிகள்-அவனுக்கு ஒரு கிணறு, வாராந்திர உணவு, நீர்த்தேவையின் நிறைவு-தன்னை ஒரு பிரபுபோல அவன் உணர்ந்தான். இப்போது திடீரென்று, மழையின் முன்வரவின்றி, இந்தப் பனிமழை. இப்படித்தான் இந்தப் பிரதேசம். எந்த உதவியும் செய்ய விரும்பாத இந்த மனிதர்களைப் போலவே கொடியதாக இருந்தது. ஆனால் தாரு இங்கே பிறந்தவன்; வேறு எங்குச் சென்றாலும் தன்னை அந்நியனாகவே உணர்ந்தான்.

பள்ளியின் முன்னிருந்த மொட்டை மாடிமீது அடியெடுத்துச் சென்றான். அந்த இருவரும் இப்போது மேட்டில் பாதி ஏறிவிட்டிருந்தனர். குதிரை மேல் வருபவன் பால்தூச்சி என்று தெரிந்தது. தாருவுக்கு நெடுநாளாகத் தெரிந்த முன்னாள் இராணுவ வீரன் அவன். பால்தூச்சி பிடித்திருந்த கயிற்றின் முனையில், இரு கைகளும் கட்டப்பட்டு, தலைகுனிந்து, அராபியன் ஒருவன் வந்தான். பால்தூச்சி தாருவைப் பார்த்து சந்தோஷமாகக் கையை ஆட்டினான். தாரு அராபியனின் தோற்றத்தில் மூழ்கியிருந்ததால் அதை கவனிக்கவில்லை. அராபியன், மங்கிப்போன நீல நிற ஜெலாபா அணிந்திருந்தான். அவன் கால்களில் வெறும் குளியலறைச் செருப்புகள். பதப்படாத கம்பளியாலான சாக்ஸ் அணிந்திருந்தான். தலையில் ஷேஷே எனப்படும குறுகிய நீண்ட குல்லாய். அராபியனுக்கு அடிபடாமலிருப்பதற்காக, பால்தூச்சி குதிரையின் கடிவாளத்தைத் தளரவிட்டு நடத்தினான். அது மெதுவாக ஊர்ந்து முன்னேறியது.

கூப்பிடுதூரம் வந்ததும், “எல் ஆமூரிலிருந்து (அல்ஜீரியாவில் ஒரு நகரம்) மூன்று கிலோமீட்டர் வர ஒரு மணிநேரம்” என்று பால்தூச்சி கத்தினான். தாரு பதில் சொல்லவில்லை. அவர்கள் வருவதைப் பார்த்தபடியே இருந்தான். அராபியன் ஒருமுறை கூடத் தலையை உயர்த்தவில்லை. மாடியருகே வந்ததும், “இருவரும் கயிற்றை விட்டுவிடாமல் வந்து வெப்பப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றான் தாரு. பால்தூச்சி குதிரையிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கினான். முள்போன்ற மீசைக்கடியிலிருந்து ஆசிரியனைப் பார்த்துச் சிரித்தான். சிறிய கருத்த கண்களும், வெயிலில் பழுப்பேறிய நெற்றியில் அவை ஆழமாகப் பதிந்திருந்த விதமும், சுருக்கங்கள் சூழ இருந்த அவன் உதடுகளும் அவனை மிகுந்த கவனமுள்ளவனாகவும் உழைப்பாளியாகவும் காட்டின. தாரு கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையைக் கொட்டடியில் கொண்டு விட்டான். பள்ளிக்கூட அறையில் காத்திருந்த இருவரிடமும் திரும்பிவந்தான். தன் அறைக்கு அவர்களை இட்டுச்சென்றான். “வகுப்பறையில் கணப்பு ஏற்றுகிறேன். அங்கு இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்” என்றான்.

மீண்டும் தன் அறைக்கு அவன் திரும்பியபோது பால்தூச்சி படுக்கையில் படுத்துவிட் டிருந்தான். அராபியனைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டிருந்தான். அராபியன் ஸ்டவ் பக்கத்தில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந் தான். கைகள் மட்டும் கட்டியபடியே இருந்தன. ஷேஷே, தலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்க, ஜன்னலுக்காகப் பார்த்தபடி இருந்தான். நீக்ரோக்களை நினைவூட்டும் அவனது தடித்த, பெரிய, மிருதுவான உதடுகளைத்தான் தாரு முதலில் கவனித்தான். அவனது மூக்கு நேராகவும், கண்கள் ஜுரவேகத்திலிருப்பது போலவும், கருத்தும் இருந்தன. ஷேஷேவுக்கு வெளியே தெரிந்த நெற்றி, பிடிவாத குணத்தை வெளிப்படுத்தியது. கால மாறுதல்களால் உரமேறிய அவன் தோல், குளிரால் நிறமிழந்திருந்தது. முகத்தில் நிதானமற்ற, எதற்கும் அஞ்சாத தீவிரமாகப் போராடுகின்ற களை இருந்தது. “பக்கத்து அறைக்குப் போ” என்றான் ஆசிரியன். “கொஞ்சம் மசாலா டீ தருகிறேன்”. “ரொம்ப நன்றி” என்றான் பால்தூச்சி. “அப்பா! என்ன வேலை! சீக்கிரம் ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.” அராபிய மொழியில் “நீயும் வா” என்றான். அராபியன் மெதுவாக எழுந்து கட்டப்பட்ட இருகைகளையும் முன்னால் பிடித்தபடி வகுப்பறைக்குள் சென்றான்.

டீயோடு, தாரு ஒரு நாற்காலியையும் கொண்டுவந்தான். ஆனால் பால்து£ச்சி ஏற்கெனவே தானாக ஒரு டெஸ்க் எதிரில் உட்கார்ந்திருந்தான். டெஸ்குக்கும் ஜன்ன லுக்கும் இடையில் ஆசிரியன் நிற்கும் மேடையில் ஸ்டவ் எதிரில் அராபியன் உட்கார்ந் திருந்தான். தாரு டீ டம்ளரை அராபியனிடம் நீட்டியபோது, பால்து£ச்சி அவன் கட்டுண்ட கைகளை நோக்கித் தயங்கினான். “அவன் கைகளை அவிழ்க்கலாமே.” “செய்யலாம், கட்டியது பிரயாணத்திற்காகத்தான்.” இதற்குள் டீ டம்ளரைத் தரையில் வைத்து விட்டு, தாரு கட்டை அவிழ்க்க மண்டியிட்டிருந்தான். எதுவும் சொல்லாமல் அராபியன் ஜுரம் நிரம்பிய கண்களால் அவனைப் பார்த்தான். கைகள் சுதந்திரமடைந்ததும், வீங்கிய மணிக்கட்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தான். பிறகு டீ கிளாஸை எடுத்து வேகமாக உறிஞ்சிக் குடிக்கலானான்.
“நல்லது, இப்போது எங்கே பயணம்?” என்றான் தாரு.
பால்தூச்சி டீயிலிருந்து தன் மீசையை உயர்த்தினான்.
“உன்னிடந்தான் தம்பி” என்றான்.
“விசித்திரமான மாணவர்கள்! இரவை இங்கேதான் கழிக்க உத்தேசமா?”
“இல்லை, நான் எல் ஆமூருக்குத் திரும்புகிறேன். நீ இவனை டிங்க்வீட்டில் சேர்த்துவிடு. போலீஸ் தலைமையகத்தில் தேடப்படுபவன் இவன்” என்று கூறியவாறே பால்தூச்சி தாருவை நட்பார்ந்த புன்னகையோடு நோக்கினான்.
“இது என்ன கதை? என்னை ஏன் இதில் இழுக்கிறாய்?” என்றான் தாரு.
“இல்லை தம்பி, அதுதான் கட்டளை”
“கட்டளையா? நான் ஒன்றும்….” தாரு தயங்கினான். அந்த வயதானவனை ஏன் புண்படுத்த வேண்டுமென்று நினைத்துச் சொன்னான், “அதாவது அது என் வேலை அல்ல என்றேன்”
“என்ன, இப்படிப் பேசுகிறாய்? போர்க்காலமென்றால் ஜனங்கள் எல்லா வேலையையும்தான் செய்ய வேண்டும்”
“அப்படியானால், போர் அறிவிப்பு வரட்டும், காத்திருக்கிறேன்”
பால்தூச்சி மறுப்பதுபோல் தலையை ஆட்டினான், பிறகு சொன்னான், “சரி, ஆனால் ஆணை இப்போதே இருக்கிறது. அது உன்னையும் கட்டுப்படுத்தும். விஷயம் கொந்தளிப்பாக உள்ளது. கலகம் வெடிக்கப் போகிறதென்ற பேச்சு பரவலாக இருக்கிறது. நாமும் ஒருவகையில் அதில் சிக்கியிருக்கிறோம்”

தாரு இன்னும் பிடிவாதமாகவே இருந்தான்.
“கேள் தம்பி! உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் புரிந்துகொள். ஒரு துறை முழுவதையும் கண்காணிக்க எல் ஆமூரில் நாங்கள் பத்துப் பன்னிரண்டு பேர்தான் இருக்கிறோம். எனவே நான் உடனே திரும்பி விரைய வேண்டும். இவனை அங்கே வைத்திருக்க இயலாது. ஊரே கொந்தளிக்கிறது. இவனை விடுவிக்க வேண்டும் என்றார்கள். நீ நாளைப் பொழுதிற்குள் இவனை டிங்க்விட்டிற்கு அழைத்துப்போய்விடு. உன்னைப் போல வலுவான இளைஞனுக்கு இருபது கிலோமீட்டர் ஒரு தூரமில்லை. அதற்குப் பின் எல்லாம் முடிந்துவிடும். நீ, உன் மாணவர்கள், உன் சொகுசான வாழ்க்கை, இதற்குத் திரும்பிவிடலாம்”

சுவருக்குப்பின் குதிரை கனைப்பதும் தரையை உதைத்துக்கொண்டிருப்பதும் கேட்டன. தாரு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போலக், காலநிலை தெளிவுபட்டுக்கொண்டிருந்தது. பனிபடர்ந்த மேட்டுநிலத்தின்மேல் ஒளி பரவி வந்தது. எல்லாப் பனியும் உருகிய பின், சூரியன் தன் ஆட்சியை மீண்டும் மேற்கொள்வான். கல்பரவிய அந்நிலத்தை எரிப்பான். இன்னும் பலநாட்களுக்கு, மனிதனின் தொடர் பற்றுப்போன அந்தத் தனிமைப் பெருவெளியில் தன் வறண்ட ஒளியை மாறாத ஆகாயம் வீசிக்கொண்டிருக்கும்.

“அப்படி என்ன செய்துவிட்டான் அவன்?” பால்தூச்சியிடம் திரும்பியவாறே கேட்டான். அவன் வாயைத் திறக்குமுன்பே தொடர்ந்தான், “பிரெஞ்சுமொழி பேசுவானா?”
“ஒரு வார்த்தை கூடத் தெரியாது. நாங்கள் இவனை ஒருமாதமாகத் தேடிவந்தோம். ஆனால் அவர்கள் மறைத்துவைத்திருந்தார்கள். தன் சிற்றப்பன் மகனைக் கொன்று விட்டான் இவன்”
“நமக்கு எதிரியா?”
“இருக்கச் சாத்தியமில்லை. என்றாலும் உறுதியாகச் சொல்லமுடியாது.”
“ஏன் கொன்றான்?”
“குடும்பச் சண்டை என்று நினைக்கிறேன். ஒருவன் அடுத்தவனுக்கு தானியம் தரவேண் டும் என்று தோன்றுகிறது. தெளிவாக இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஆட்டு ரோமம் வெட்டும் கத்தியால் அவனை-ஒரு ஆட்டைப் போலவே-கசக்! வெட்டி விட்டான்”

பால்தூச்சி தன் கழுத்தில் விரலைக் குறுக்கே வைத்து அறுப்பதுபோன்ற பாவனை காட்டினான். அராபியனின் கவனம் இவன் மேல் திரும்பி ஒருவிதக் கவலையுடன் இவனைப் பார்த்தான். தாருவுக்கு அவன்மேல் திடீரெனக் கோபம் உண்டாயிற்று. எல்லா மனிதர்களின் மேலும், அவர்களின் அழுகிநாறும் வெறுப்பின்மேலும், ஓயாத அவர்கள் போராட்டத்தின்மேலும், அவர்கள் இரத்தவெறியின்மேலும். ஸ்டவ்மீது வைத்த கெட்டில் ஓசையிட்டது. பால்தூச்சிக்கு இன்னும் கொஞ்சம் டீ கொடுத்தான். மீண்டும் அராபியனுக்கும். அவன் பேராவலோடு இரண்டாம் தரமும் குடித்தான். அவனது உயர்த்திய கைகளின்வழி அவன் ஜெலாபா விரிந்து திறந்தது. ஆசிரியன் அவனது ஒல்லியான சதைப்பிடிப்புள்ள மார்பை நோக்கினான்.

“நன்றி தம்பி, நான் இதோ கிளம்பிவிட்டேன்” என்றான் பால்தூச்சி. தன் ஜேபி யிலிருந்த கயிற்றை எடுத்துக்கொண்டு அராபியனை நோக்கிப்போனான்.
“என்ன சொல்கிறாய்?” தாரு வறட்சியாகக் கேட்டான். மனந்தளராது பால்து£ச்சி கயிற்றைக் காட்டினான்.
“கட்ட வேண்டாம்”
அந்த வயதான இராணுவவீரன் தயங்கினான். “உன் இஷ்டம். சரி, உன்னிடம் ஆயுதம் ஏதாவது தற்காப்புக்கு இருக்கிறதா?”
“என் வேட்டைத் துப்பாக்கி இருக்கிறது”
“எங்கே?”
“டிரங்குப் பெட்டியில்”
“அதைப் படுக்கையில் உன்னோடு வைத்துக்கொள்”
“ஏன்? என்னிடம் பயப்பட ஒன்றுமில்லை”
“உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது, தம்பி! கலவரம் உண்டானால் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாம் எல்லாரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம்”
“நான் என்னைக் காத்துக்கொள்வேன். கலகக்காரர்கள் வருவதைக் காண எனக்கு அவகாசம் இருக்கிறது”
பால்தூச்சி சிரிக்க ஆரம்பித்தான். அவன் மீசை அவன் வெண்பற்களை மூடியது. “அவகாசம் இருக்கிறதா, சரி சரி. அதைத்தான் நானும் சொல்லவந்தேன். உன் மண்டையின் மூலையில் கொஞ்சம் கோளாறுதான். அதனால்தான் உன்னை நேசிக்கிறேன். என் மகனும் இப்படித்தான் இருந்தான்”

அதேசமயம் தனது ரிவால்வரை எடுத்து மேஜைமீது வைத்தான். “வைத்துக்கொள். எனக்கு எல் ஆமூர் போய்ச்சேர இரண்டு ஆயுதங்கள் தேவையில்லை” என்றான்.
மேஜையின் கருப்புப் பின்னணியில் அந்த ரிவால்வர் பளபளத்தது. அந்த இராணுவத் தான் தன்னைப் பார்க்கத்திரும்பியதும், தாருவுக்குத் தோல்மணமும், குதிரைச் சதை நாற்றமும் கலந்துவீசின.
“பால்தூச்சி, இதெல்லாம்-நீ கொண்டுவந்த ஆள் உட்பட-எனக்குக் குமட்டுகிறது. நான் அவனைக் கொண்டுபோய் விடமாட்டேன். சண்டைபோட என்றால் நான் தயார் தான். ஆனால் இந்த வேலை வேண்டாம்”
அந்த வயதான இராணுவத்தான் இவன் முன்னால் வந்து கடுமையாக இவனைப் பார்த்தான்.
“நீ ஒரு முட்டாள்” கடுமையாகச் சொன்னான். “எனக்கும்தான் பிடிக்கவில்லை. பல ஆண்டுகள் மனிதனைக் கட்டிப் பழகிவிட்டாலும, ஒருவனைக் கயிற்றால் கட்டுவது பழக்கமாகாதுதான். இன்னும் கேட்டால், அவ்வாறு கட்ட வெட்கப்படுகிறேன். ஆம், வெட்கம்தான். ஆனால் இவர்களை இவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது”
“நான் இவனைப் போலீசில் ஒப்படைக்கமாட்டேன்” என்றான் தாரு மறுபடியும்.
“இது கட்டளை தம்பி, மறுபடியும் சொல்கிறேன்”
“சரி! அவர்களிடம் போய் நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லு. இவனை நான் ஒப்படைக்க மாட்டேன்”
பால்தூச்சி சிந்திக்க முயற்சி செய்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அராபியனை யும் பிறகு தாருவையும் பார்த்தான். கடைசியாக முடிவுசெய்தான்.

“நான் அவர்களிடம் எதுவும் சொல்லமாட்டேன். என்னை நீ கைவிடுவதானால் அப்படியே செய். உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன். இந்தக் குற்றவாளியை ஒப்படைக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளை இருக்கிறது. நான் அதை நிறைவேற்றுவேன். இப்போது எனக்காக நீ இந்தத் தாளில் எழுதிக் கையெழுத்திடு”
“தேவையில்லை. நீ இவனை என்னிடம் விட்டுச் சென்றாய் என்பதை நான் யாரிடமும் மறுக்கமாட்டேன்”
“நீசத்தனமாக நடந்துகொள்ளாதே. நீ உண்மையைத்தான் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவன் நீ, அதற்கும் மேல், மனிதன். ஆனாலும் நீ கையெழுத்திடவேண்டும். அதுதான் சட்டம்”

தாரு டிராயரைத் திறந்தான். சதுரவடிவிலிருந்த ஊதாநிற மைப்புட்டியை எடுத்தான். பிள்ளைகளுக்குக் கையெழுத்துக் கற்றுக்கொடுப்பதற்கான மாதிரியை எழுதுவதற்காக வைத்திருந்த சார்ஜண்ட் மேஜர் என்று பொறிக்கப்பட்ட பேனாவையும் அதன் தாங்கி யையும் எடுத்தான். கையெழுத்திட்டான். இராணுவத்தான் அதை பத்திரமாக மடித்துத் தன் பைக்குள் போட்டுக்கொண்டான். பிறகு கதவை நோக்கி நகர்ந்தான்.
“கொஞ்சம் இரு. வருகிறேன்”
“வேண்டாம்” என்றான் பால்தூச்சி. “பணிவாக நடந்துகொண்டு பயனில்லை. என்னை அவமதித்துவிட்டாய் நீ”
தன் இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருந்த அராபியனைப் பார்த்தான், பால்தூச்சி. மோப்பம் பிடிப்பதுபோல் மூச்சுவிட்டான். திரும்பிக் கதவைநோக்கி நடந் தான். “தம்பி வருகிறேன், வந்தனம்” என்றான். கதவு அவனுக்குப் பின் அறைந்து மூடியது. பனியால் அவன் நடை சற்றே தள்ளாடியது. கோழிக்குஞ்சுகள் பயத்தில் இறக்கை அடித்துப் பறந்தன. ஒருநொடிக்குள் அவன் ஜன்னலின் வெளிப்புறம் குதிரையின் கடி வாளத்தைப் பிடித்து இழுத்துச் செல்வது தெரிந்தது. அந்தச் சிறிய மேட்டை நோக்கி, நேராக, திரும்பாமல் சென்றான். அவன் குதிரையும் கண்ணிலிருந்து மறைந்தது.

தன்னையே அசையாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கைதியிடம் சென்றான் தாரு. அவனிடம் அராபிய மொழியில் “பொறு” என்று சொல்லிவிட்டு, படுக்கையறை நோக் கிச் சென்றான். அதேசமயத்தில் ஏதோ நினைப்பு வந்து, மேஜைக்கு வந்தான். ரிவால் வரை எடுத்து தன் ஜேபியில் போட்டுக்கொண்டான். திருமபிப்பார்க்காமல் தன் அறைக்குப் போனான்.

கொஞ்ச நேரம், வானத்தில் இருள் கவிவதைப் பார்த்தவாறே, சந்தடியற்ற மோனத்தைக் கேட்டவாறே படுக்கையில் கிடந்தான். போருக்குப்பின் வந்த சில நாட்களில் இவனை மிகவும் துன்பப்படுத்தியது இந்த அமைதிதான். உயர்மேட்டு நிலத் தையும் பாலைவனத்தையும் பிரிக்கும் சிறு குன்றுகளின் அடிப்பாகத்திலிருந்த ஒரு சிறு நகரத்தில்தான் அவன் வேலை கேட்டான். அங்கே வடக்கில், பச்சையும் கருப்புமான பாறைச்சுவர்கள், தெற்கில் இளஞ்சிவப்பும் மஞ்சளானவையுமான பாறைகள். என்றும் ஓயாக் கோடைகாலத்தின் அறிகுறிகள் அவை. ஆனால் அவன் வடக்கில் இந்த மேட்டுப்பிரதேசத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டான். கற்கள் மட்டுமே குடியிருந்த இந்த மேட்டுநில சாம்ராஜ்யத்தின் வெறுமையும் தனிமையும் முதலில் அவனை மிகவும் கஷ்டப்படுத்தின. சிலசமயங்களில் இங்கே உழப்பட்டிருக்கும் நிலம், மனித நடமாட்டத் தைக் காட்டும். அவ்வாறு உழுதது, கட்டடம்கட்டத் தேவையான ஒருவகைக் கற்களைத் தோண்டி எடுப்பதற்கே. இங்கு விவசாயமே, கற்களை விளையச் செய்வதற்குத்தான். இவ்வாறு உழுவதனால் ஆங்காங்கு குழிகளில் நிரம்பும் மென்மையான மண், கிராமங்களின் தோட்டத்திற்கெனச் சுரண்டிச் செல்லப்படும். முக்கால்வாசிப் பிரதேசத்தை வெறும் பாறை கவ்வியிருந்தது. நகரங்கள் திடீரென எழுந்தன, வளம் பெற்றன. பிறகு மறைந்தன. மனிதர்கள் வந்தார்கள். ஒருவரையருவர் நேசித்தார்கள். அல்லது கசப் போடு சண்டையிட்டார்கள். பிறகு செத்துப்போனார்கள். இப்படித்தான் அங்கு வாழ்க்கை. இந்தப் பாலைவனத்தில் யார் ஒருவனும், அவன் விருந்தினனும் முக்கிய மில்லை. இருந்தாலும், தாருவுக்குத் தெரியும், அவர்கள் யாரும் வாழந்திருக்கவே இயலாது.

அவன் எழுந்தபோது, வகுப்பறையிலிருந்து எந்தச் சத்தமுமில்லை. அந்த அராபியன் தப்பி ஓடியிருப்பான். எவ்விதத் தீர்மானமும் எடுக்கத் தேவையின்றித் தான் இருக்கலாம் என்னும் நினைப்பில், தனக்குள் எழுந்த கலப்பற்ற சந்தோஷத்தை உணர்ந்து அவன் வியப்படைந்தான். ஆனால் அந்தக் கைதி அங்கேயேதான் இருந்தான். ஸ்டவ்வுக்கும் மேஜைக்கும் இடையில் நீட்டிப்படுத்துக் கூரையை வெறித்த வாறு இருந்தான். அவனது தடித்த உதடுகள் கவனத்தை ஈர்த்தன. “வா” என்றான் தாரு. அராபியன் எழுந்து அவனைத் தொடர்ந்தான். படுக்கையறையின் ஜன்னல்கீழிருந்த மேஜைக்கு அருகில் ஒரு நாற்காலியைக் காட்டினான். தாருவைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்காமலே அராபியன் உட்கார்ந்தான்.
“பசிக்கிறதா?”
“ஆம்” என்றான் கைதி.

இருவருக்கு மேஜை அமைத்தான் தாரு. கொஞ்சம் மாவும் எண்ணெயும் எடுத்து அடுப்பில் கேக் செய்ய உருவமைத்தான். பாட்டிலில் அடைக்கப்பட்ட வாயுவால் எரிந்த சிறிய ஸ்டவ்வைப் பற்றவைத்தான். கேக் தயாராகிக் கொண்டிருந்தபோதே கொட்டகைக்குப்போய்ப் பாலடை, முட்டை, குளிர்பதனப் பால், முதலியவற்றைக் கொண்டுவந்தான். கேக் வெந்துமுடிந்ததும் ஜன்னல்விளிம்பில் அதைக் குளிரவைத் தான். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்தான். முட்டையை அடித்து ஆம்லெட் போட்டான். முன்பின் நகர்கையில் வலது ஜேபியிலிருந்த ரிவால்வர் உறுத்தியது. கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, வகுப்பறைக்குச் சென்று ரிவால்வரை மேஜை டிராயருக்குள் வைத்தான். அறைக்குத் திரும்பியபோது இருள் கவியத் தொடங் கியிருந்தது. விளக்கைப் போட்டு அராபியனுக்குப் பரிமாறினான். “சாப்பிடு” என்றான். கேக் துண்டை எடுத்து வாயருகே கொண்டுபோன அந்த அராபியன் நிறுத்தினான். “நீ?” என்றான்.
“உனக்குப் பின்னால்” என்றவன், “சரி, உன்னோடுதான் சாப்பிடுகிறேன்” என்றான். அவனது தடித்த உதடு சற்றே திறந்தது. கொஞ்சம் தயங்கினான். பிறகு தீர்மானத்துக்கு வந்தவன்போல் சாப்பிடத் தொடங்கினான்.
சாப்பாடு முடிந்ததும அராபியன் ஆசிரியனைப் பார்த்தான். “நீதான் நீதிபதியா?” என்றான்.
“இல்லை. உன்னைச் சும்மா நாளை வரை வைத்திருக்க உத்தேசம்”
“நீ ஏன் என்னுடன் சாப்பிட்டாய்?”
“எனக்குப் பசித்தது”

அராபியன் அமைதியானான். தாரு வெளியே போனான். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலைக் கொண்டுவந்து மேஜைக்கும் ஸ்டவ்வுக்கும் மத்தியில் தன் படுக் கைக்குச் செங்குத்தாகப் போட்டான். மூலையில் பேப்பர் வைக்கும் அலமாரிபோல் பயன்படுத்திவந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து இரண்டு போர்வைகளை எடுத்துக் கட்டில் மேல் விரித்தான். பிறகு, தான் செய்ய ஒன்றுமில்லை என்று உணர்ந்தவனாக, கட்டில் மேல் உட்கார்ந்தான். வேறு எதுவும் செய்வதோ எதற்கும் தயாராவதோ தேவை யில்லை. இந்த அராபியனை மட்டும் கவனிக்கவேண்டும். அவன் முகம் கோபத்தில் கொந்தளிப்பதுபோல் கற்பனை செய்துகொண்டே அராபியனைக் கூர்ந்து பார்த்தான். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை. அந்தக் கரிய மின்னும் கண்களையும் விலங்கு வாயையும் தவிர வேறெதையும் காணமுடியவில்லை.
“நீ ஏன் அவனைக் கொன்றாய்?” தனக்கே ஆச்சரியமூட்டிய ஒரு கோபத்தொனியில் கேட்டான்.
அராபியன் தலையைத் திருப்பிக் கொண்டான். “அவன் தப்பி ஓடினான். நான் துரத்தினேன்”
தாருவை நேருக்கு நேர் பார்த்தான். அவன் கண்களில் துயரம் நிரம்பிய கேள்வி நின்றது. “என்னை அவர்கள் என்ன செய்வார்கள்?”
“பயப்படுகிறாயா?”
அராபியன் உடல் விறைத்தது. கண்களை மீண்டும் வெளித் திருப்பினான்.
“வருத்தப்படுகிறாயா?”

வாயைச் சற்றே பிளந்தவாறே இவனை வெறித்தான் அராபியன். புரியவில்லை என்று தோன்றியது. தாருவின் சஞ்சலம் அதிகரித்தது. அவனது பெரிய உருவம் இரு படுக்கை களுக்கும் இடையில் ஆப்புப் போல் உட்கார்ந்திருந்தது. அதைப் பற்றிய சஞ்சலமும் அசிங்கமும் அவனுள் எழுந்தன.
“அங்கே படு” என்றான் பொறுமையற்ற குரலில். “அதுதான் உன் படுக்கை”
அராபியன் அசையவில்லை. கத்தினான். “எனக்கு பதில் சொல்”. ஆசிரியன் அவனைப் பார்த்தான்.
“நாளை அந்த இராணுவக்காரன் வருவானா?”
“தெரியாது”
“நீ எங்களுடன் வருவாயா?”
“தெரியாது. ஏன்?”
கைதி, எழுந்து ஜன்னல் பக்கம் காலை நீட்டி விரிப்பின் மீது படுத்தான். மின் விளக்கிலிருந்து வந்த வெளிச்சம் நேராக அவன் கண்ணைக் குத்தியது. கண்ணிமைப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, “நீயும் எங்களோடு வா” என்றான்.

நடுநிசி வந்தும் தாரு தூங்கவில்லை. எல்லா உடைகளையும் கழற்றிவிட்டு படுக்கைக்குப் போய்ப்படுத்தான். எப்போதும் நிர்வாணமாகத்தான் தூங்குவான். ஆனால் தன்மேல் ஒன்றுமேயில்லை என்ற நினைப்பு வந்து யோசிக்க ஆரம்பித்தான். பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாகத் தோன்றி உடை அணியும் எண்ணம் தோன்றியது. தோளைக் குலுக்கிக் கொண்டான். அவன் ஒன்றும் குழந்தையில்லை. சண்டை என்று வந்தால் அவன் தன் எதிரியை இரண்டாக முறித்தே போட்டுவிட முடியும். மல்லாந்து படுத்தே அசையாமல், விளக்கு வெளிச்சத்திற்கு நேரே உறங்கும் அவனைப் பார்த்தான். விளைக்கு அணைந்தபோது திடீரென்று இருட்டு சூழ்ந்துகொண்டதுபோல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திரங்களற்று மந்தமாய்ச் சயனித்திருந்த ஆகாயத்திலிருந்து ஜன்னல் வழியே இரவு மீண்டும் உயிர்பெற்று வந்தது. தன் கால் புறம் அவன் இருக்குமாறு படுத்தான். இன்னும் அந்த அராபியன் அசையாமல்தான் இருந்தான். ஆனால் அவன் கண்கள் திறந்திருந்தன. பள்ளியைச் சுற்றி லேசான காற்று சுழன்றுகொண்டிருந்தது. ஒருவேளை அது மேகங்களைத் துரத்திவிடலாம். சூரியன் மீண்டும் தோன்றலாம்.

இரவு செல்லச் செல்லக் காற்று அதிகரித்தது. கோழிகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. பிறகு அமைதி. அராபியன் தாருவுக்குத் தன் முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்தான். அவன் முனகுவதுபோல் கேட்டது. தாரு தன் விருந்தாளியின் மூசசு ஒலியை உன்னிப்பாகக் கவனித்தான். அது கனத்துக் கொண்டே சென்று பிறகு சீராகியது. அந்த மூச்சு அவன் வெகுசமீபத்தில் இருப்பதுபோல உணர்ந்து து£ங்க முடியாமல் ஏதேதோ நினைத்தவாறு இருந்தான். ஒரு வருடமாக அவன் இந்த அறையில் தனித்துத் தூங்கிவந்தான். அராபியனின் இருப்பு அவனைத் தவிப்புக்குள் ளாக்கியது. மேலும் இந்தச் சூழ்நிலையில், அவன ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த ஒரு சகோதரத்துவ நிலையை அவன்மேல் சுமத்தியதனாலும் அவனை அது நிலைகுலையச் செய்தது. இருந்தாலும் இதுபற்றி அவன் நன்கு அறிந்தே இருந்தான். சிப்பாய்களோ கைதிகளோ யாராயினும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள், அவர்கள் உடைகளைக் களையும்போதே தங்கள் கவசத்தையும் கழற்றிவிட்டது போன்ற ஒரு விசித்திரமான நேசத்தை வார்த்துக்கொண்டார்கள். அவர்களது வேற்றுமைகளுக்கு மேல், பழைய காலத்துக் கனவும் கதைப்புமான சமுதாயத்திலிருப்பதுபோன்ற ஒரு சகோதர பாசம் கொண்டார்கள். தாரு தன்னைத்தானே கடிந்துகொண்டான். இவ்விதச் சிந்தனைகளில் அவன் ஈடுபட விரும்பவில்லை. அவன் தூங்கியாக வேண்டியிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து அராபியன் மெதுவாக அசைந்தான். அப்போதும் ஆசிரியன் உறங்கவில்லைதான். கைதி இன்னொருமுறை அசைந்ததும் அவன் எச்சரிக்கையினால் இறுக்கம் கொண்டான். தூக்கத்தில் நடப்பவன் போலத் தன் கைகளை மெல்ல ஊன்றி அராபியன் மெல்ல எழுந்தான். படுக்கையில் நேரே உட்கார்ந்து தாருவின் பக்கம் தன் தலையைக் கொஞ்சமும் திருப்பாமல், உன்னிப்பாகக் காதுகொடுத்துக் கேட்பவன் போல் அசையாதிருந்தான். தாருவும் அசையவில்லை. அவனது மேஜை டிராயருக்குள்தான் ரிவால்வர் இன்னும் இருக்கிறது என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது. உடனே செயல்பட்டுவிடுவது நல்லது. எனினும் அவன் அசையாமலே கைதி யை கவனித்தான். அவன் முன்போலவே பூனைபோன்ற அசைவுடன் காலைத் தரையி லு£ன்றி, அசையாமலிருந்த பிறகு மெதுவாக எழுந்து நின்றான். மிக இயல்பாகவும், அதேசமயம் சந்தடியற்ற முறையிலும் நடக்கத் தொடங்கியதைப் பார்த்த தாரு அவனைக் கூப்பிட இருந்தான். அராபியன் கொட்டகைக்குச் செல்லும் வழியை நோக்கி நேராக அறைக்கோடிக்கு நடந்தான். எச்சரிக்கையோடு தாழைத் திறந்துவிட்டு, தனக்குப் பின், கதவை முழுதும் மூடாதவாறு சற்றே தள்ளிவிட்டு வெளியே சென்றான்.
தாரு அசையவில்லை. ஓடிப்போகிறான் போலும் என்று நினைத்தான். நல்லதுதான். இருப்பினும் கூர்ந்து கவனித்தான். கோழிகள் சிறகடிக்கவில்லை. விருந்தினன் மேட்டு நிலத்தின்மீது இருக்கவேண்டும். தண்ணீர்ச் சத்தம் லேசாகக் கேட்டது. அந்த அராபியன் மீண்டும் கதவு நிலைக்கு வந்து நிற்கும்வரை, அது என்னவென்று அவனுக்குப் புரியாதிருந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு சந்தடி இன்றி மீண்டும் வந்து படுத்துக்கொண்டான். அதன்பின் தாரு புரண்டுபடுத்துத் தூங்கிப் போனான். எனினும் உறக்கத்தின் ஆழத்தில், பள்ளியைச் சுற்றித் தெளிவான காலடி ஓசைகள் கேட்பதுபோல அவன் உணர்ந்தான். கனவுதான், ஆகவேதான் என்று தனக்குத்தானே திருமபத்திரும்பக் கூறித் தூங்கிக்கொண்டே இருந்தான்.

அவன் விழித்தபோது, வானம் நிர்மலமாக இருந்தது. சரியாகப் பொருந்தாத ஜன்னல் கதவுகளின் இடுக்கு வழியே குளிர்ந்த து£ய்மையான காற்று வீசியது. அந்த அராபியன், வாயைப் பிளந்தவாறு, இறுக்கம் சிறிதுமற்று, போர்வைக்குக்கீழ் உடம்பைக் குறுக்கி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் தாரு அவனை உலுக்கியபோது அவன் தூக்கிவாரிப்போட்டு எழுந்து, யங்கரமான பார்வையோடு தாருவை ஒருபோதும் பார்த்திராதவன் போல விழித்த விழிப்பில் தாரு பின்வாங்கினான். “பயப்படாதே, நான்தான், சாப்பிடலாம்” என்றான். அராபியன் தலையசைத்து ஆமோதித்தான். இப்போது அவன் முகத்தில் அமைதி திரும்பிவிட்டது. எனினும் கண்களில் அமைதி யற்ற வெறித்த பார்வை இருந்தது.

காப்பி ரெடி ஆயிற்று. இருவரும் கேக் துணடுகளைக் கட்டிலில் உட்கார்ந்து மென்றவாறே காப்பி குடித்தார்கள். தாரு அராபியனைக் கொட்டகைக்குக் கீழ் அழைத்துச் சென்று தான் குளிக்குமிடத்தைக் காட்டினான். திரும்பிச்சென்று கட்டிலின் மேல் போர்வையை மடித்துவைத்தான். படுக்கையைத் தனக்கேற்ற வகையில் அமைத்தான். அறையை ஒழுங்குசெய்தான். பிறகு வகுப்பறையினுள் நுழைந்து மாடிக் குச் சென்றான். நீல வானத்தில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. மென்மையான பளீரென்ற பிரகாசம் யாருமற்ற அந்த மேட்டு நிலத்தைச் சூழ்ந்திருந்தது. மேட்டுநில ஓரத்தில் பனி பொட்டுப்பொட்டாக உருகியிருந்தது. கற்கள் மறையுமாறிருந்தன. மேட்டு நில ஓரத்தில் மண்டியிட்டு பாலைவனப் பாழ்வெளியை நோக்கினான். பால்
தூச்சியை நினைத்துக்கொண்டான். அவனோடு தொடர்பு வைத்திருக்க அவசியமில்லாததுபோல் அனுப்பிவிட்டதால் அவனைப் புண்படுத்திவிட்டிருந்தான். அந்த இராணுவத்தானின் விடைபெறுகை இப்போதும் மனத்தில் உறுத்தியது. ஏனென்று தெரியாமலே ஒரு விசித்திர வெறுமையையும் பலவீனத்தையும் உணர்ந்தான்.

பள்ளிக்கட்டிடத்தின் அப்புறமிருந்து கைதி இருமினான். தாரு தன்னை அறியாமலே அதைக் கூர்ந்து கேட்டான். பிறகு சினமுற்று ஒரு கூழாங்கல்லை எறிந்தான். பனியில் விழுமுன் அது உய்யென்று காற்றில் ஒலியெழுப்பிச் சென்றது. கைதியின் மடத்தனமான குற்றம் இவனை எரிச்சலில் ஆழ்த்தியது. அவனை ஒப்படைத்துவிடுவது, இவனுடைய கௌரவத்திற்குக் குந்தகமானது. அதைப்பற்றி நினைப்பதே இவனை அவமானத்தில் குன்றச்செய்தது. தன்னிடம் இந்த அராபியனை அனுப்பிவைத்த தன் சொந்த ஜனங்களையும், ஒரு கொலைசெய்யுமளவு துணிச்சல்கொண்டு ஆனால் தப்பி ஓடத் திராணியற்றுப்போன அராபியனையும் ஒரேசமயத்தில் தாரு சபித்தான். எழுந்து மாடிமீது வட்டமாக நடந்தான். காத்திருந்தான். பிறகு பள்ளிக்குச் சென்றான்.

கொட்டகையில் சிமெண்ட் தரைமீது குனிந்தவாறு அராபியன் இரு விரல்களால் தன் பல்லைத் துலக்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து தாரு “வா” என்றான். கைதிக்கு முன்னால் அறைக்குத் திரும்பிச் சென்றான். ஸ்வெட்டர்மீது வேட்டைக்குரிய கோட்டை மாட்டிக்கொண்டு, ஷ¨க்களை அணிந்தான். அராபியன் வந்து ஷே-ஷேவை அணிந்து செருப்புப் போடும்வரை காத்திருந்தான். பிறகு இருவரும் வகுப்ப றைக்குச் செல்ல, ஆசிரியன் வழியைக் காட்டி “நட” என்றான். அராபியன் பணிய மறுத்தான். “நானும் வருகிறேன்” என்றான் இவன். அவன் வெளியேறினான். தாரு அறைக்குள் சென்று, ரஸ்க் துண்டுகள், பேரீச்சைகளைப் பொட்டலம் கட்டிக்கொண் டான். வகுப்பறையில் தன் மேஜைக்கு வரும்போது சற்றுத் தயங்கினான். பின் வாசல் கதவைத் தாழிட்டுப் பூட்டினான். “அதுதான் வழி” என்றான். கிழக்குநோக்கிக் கைதி பின்தொடர நடந்தான். பள்ளியிலிருந்து கொஞ்சது£ரம் செல்வதற்குள் லேசான சத்தம் பின்னால் கேட்க, திரும்பிப்போய் வீட்டின் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவருமில்லை. அராபியன் எதுவும் புரியாமல் இவனை நோக்கி விழித்தான். “வா போகலாம்” என்றான் தாரு.

ஒருமணி நேரம் இருவரும் நடந்தனர். ஊசிவடிவமான சுண்ணாம்புக்கல் பாறையின் கீழ் ஓய்வெடுத்தனர். பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகின. சூரிய கிரணங்கள் உருகிய நீர்க்குட்டைகளை வேகமாக உறிஞ்சி, மேட்டுநிலத்தைச் சுத்தப்படுத்தின. ஆவியான நீர் காற்று போலவே அதிர்ந்து சுழன்றது. மீண்டும் நடக்க முனைந்தபோது தரை காலடி யில் சில்லென்று இருந்தது. அவ்வப்போது எங்கேயாவது ஒரு பறவை அவர்கள் முன்னால் சந்தோஷக் குரலில் ஆகாயத்தைப் பிளந்தது. வானக்கூரைக் கீழ் இப்போது பெருமளவு மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்ட அந்தப் பரந்த நிலம் தாருவுக்குப் பெருங் களிப்பை அளித்தது. தெற்கு நோக்கி இறங்கி இன்னும் ஒருமணி நேரம் நடந்தார்கள். நொறுங்கும் கற்களால் ஆன ஒரு தட்டையான மேட்டை அடைந்தார்கள். அங்கிருந்து பீடபூமி சரிந்து கீழே இறங்கியது. கிழக்கில் ஒரு தாழ்வெளி-அடிதல் சில உருண்டை மரங்கள் தென்பட்டன. தெற்கில், எங்கும் சிதறிய பாறைத்துண்டுகள் ஒரு பாழ்வெளித் தோற்றத்தைத் தந்தன.

தாரு இரண்டு பக்கங்களையும் பார்வையால் அலசினான். ஒருவரும் கண்ணில் படவில்லை. தன்னை நோக்கி வெறித்தவாறிருந்த அராபியனிடம் திரும்பினான். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தான். “இதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குத் தாங்கும். இந்தா, இதில் ஆயிரம் பிராங்க் இருக்கிறது.”

இரண்டையும் வாங்கிக்கொண்டு, இருகைகளையும் மார்பின் அருகே வைத்தவாறு, அவற்றை என்ன செய்வது என்று தெரியாதவன்போல் நின்றான் அராபியன்.

“அதோ பார்” என்று கிழக்குப் புறத்தைக் காட்டினான், தாரு. “அதுதான் டிங்க்விட் போகும் வழி. இங்கிருந்து இரண்டுமணி நேர நடை. அங்கே நிர்வாகமும் போலீசும் இருக்கிறார்கள். உனக்காகக் காத்துக்கொண்டு.”
பொட்டலத்தை மார்பருகே வைத்த நிலை மாறாமலே அராபியன் கிழக்குநோக்கிப் பார்த்தான். அவனது முழங்கையைப் பிடித்து அவனைத் தள்ளுபவன்போல் தெற்கு நோக்கித் திருப்பினான் தாரு. இவர்கள் நின்றிருந்த திட்டின் கீழிருந்து ஒரு மங்கிய பாதை தெரிந்தது. “மேட்டுநிலத்தின் குறுக்கே செல்லும் பாதைதான் அது. ஒருநாள் நடையில் நீ புல்வெளியையும் அங்கே மாடுமேய்க்கும் நாடோடிகளையும் அடைந்துவிடலாம். அவர்களது சட்டப்படி அவர்கள் உன்னை ஏற்றுக்கொண்டு தங்க வசதி செய்வார்கள் உனக்கு.”
அராபியன் இப்போது தாருவைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்ணில் ஒருவித பீதி. “இதோ பார்” என்றான்.

தாரு, தலையை மறுப்பதுபோல் ஆட்டினான். “பேசாதே. நான் போகவேண்டும்.” பள்ளியிருந்த திசையை நோக்கி இரண்டு எட்டு வைத்தான். பிறகு தயக்கத்துடன் திரும்பி அசையாதிருந்த அராபியனைப் பார்த்தான். மீண்டும் நடக்கத் தொடங்கினான். சில நிமிடங்கள் கழிந்தபின், அந்தக் குளிர்ந்த தரையில் அவனுடைய காலடி ஓசைதவிர வேறு எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை. தலையையும் திருப்பவில்லை. எனினும் கொஞ்சநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தான். அந்த அராபியன், இப்போது கைகளைக் கீழே தொங்கப்போட்டு, ஆசிரியனையே பார்த்தவாறு திட்டையின் ஓரத்தி லேயே நின்றிருந்தான். இவன் நெஞ்சுக்குள் ஏதோ கனப்பதுபோல் இருந்தது. ஆனால் பொறுமையின்றி, வசவுவார்த்தைகளைப் பேசிக்கொண்டே, கையை அவனுக்கு நிச்சயமற்று வீசிக்காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினான். கொஞ்சது£ரம் போய்விட் டான். பிறகு பார்த்தான். இப்போது அக்குன்றின்மீது எவரும் இல்லை.

தாரு தயங்கினான். சூரியன் நன்றாக உயர்ந்துவிட்டிருந்தது. தலைக்கு மேல் சுள்ளென்று அடித்தது. முதலில் சற்றே உறுதியின்றியும் பிறகு சற்றே உறுதியுடனும் திரும்பிச் சென்றான் ஆசிரியன். முன்னிருந்த குன்றின் அடியை அடைந்தபோது வியர் வையில் குளித்திருந்தான். விறுவிறு என்று ஏறி உச்சியில் மூச்சற்று நின்றான். நீலவானப் பின்னணிக்குக் கூர்மையான முன்புலமாகத் தெற்கில் பாறை நிலங்கள் நின்றன. அங்கு ஒன்றுமில்லை. ஆனால் கிழக்கிலிருந்து சமவெளிப்பக்கம் ஆவிப்புகை போல ஓர் ஆள் செல்லும் வெப்ப அலை எழுந்துகொண்டிருந்தது. அந்த அராபியன் சிறையின் பாதையில் மெதுவாக நடப்பதை கனத்த இதயத்துடன் தாரு கண்டான்.

சிலமணி நேரம் கழித்து, தன் வகுப்பறையில் ஜன்னல்முன் ஆசிரியன் அம்மேட்டு நிலத்தைச் சூரியன் தன் தெள்ளிய ஒளியால் நீராட்டுவதைப் பார்ததவாறு நின்றான். அவ் வகுப்பறையின் கரும்பலகையில் சுற்றி வளைந்து செல்லும் பிரெஞ்சு நாட்டு ஆறுகளினு£டே சற்றுமுன் அவன் படித்துப்பார்த்த கிறுக்கல் இன்னும் தெரிந்தது. “எங்கள் சகோதரனைக் காட்டிக் கொடுத்துவிட்டாய், அதற்காகப் பழிவாங்கப்படப் போகிறாய்.” அந்த வானத்தையும் மேட்டுநிலத்தையும் அதற்கப்பால் கடல்வரை பரவி நீண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத பரந்த வெளியையும் கூர்ந்து நோக்கியவாறு இருந்தான் தாரு. தான் மிகவும் நேசித்த அந்தப் பரந்த நிலப்பரப்பில் தன்னந்தனியாக நின்றான் அவன்.

மொழிபெயர்த்த_சிறுகதை