வெள்ளை ஆதிக்கம்

இன்று பலரும் காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற சொற்களை அர்த்தமின்றி கையாளுகிறார்கள். மாணவர்களோ, ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள், காந்தி வந்தார், சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பது போலப் படித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் உண்மையில் வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குக் கையாண்ட முறைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நாம் இன்று தக்க நூல்கள் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. சான்றாக, ஈ. போலேர் (E. Boelaert) என்பவர் தமது நூலான La situation demographique des Nikundo-Mungo என்பதில், முன்னாள் பெல்ஜியக் காங்கோ பிரதேசத்தில் சுவாபா என்ற மாநிலத்தில் மக்களினங்கள் வெள்ளையர் நுழைவால் அழிந்துபோன நிலையை எடுத்துக்காட்டுகிறார். நவீன நாகரிகத்தின் நுழைப்பு, அந்த இனத்தின் உடல்சார்ந்த, ஒழுக்கவியல் சீரழிவுக்குக் காரணமாகியது. அவர்களுக்குள் பரிச்சயமே அற்ற கர்ப்பத்தடுப்பு, கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், மத நம்பிக்கைகளிலும் நடைமுறைகளிலும் தளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன. இவற்றின் விளைவாக, அந்த இனத்தின் இளைஞர்கள் தங்கள் பாரம்பரியமான பொதுக்குடி அமைப்பிலிருந்து வேரறுக்கப்பட்டனர், அதனால், அவர்களின் குடும்பங்கள், வழக்காறுகள், மரபுகள், தனிப்பட்ட உறவுகள் ஆகியவை சீர்குலைந்து போயின. மேற்கண்ட நூலாசிரியர் கூறுகின்றவாறு, அவருடைய புலனாய்வுகளின் போது (1950), திருமணமான நூறு பெண்களுக்கு முப்பது குழந்தைகள் வீதமே இருந்தன. நான்கில் மூன்று குடும்பங்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களில் பாதிப் பெண்கள் மலட்டுத்தனம் கொண்டவர்களாக இருந்தார்கள். பின்னர் 1970 அளவில் அந்த இனமே முற்றிலும் அழிந்துபோயிற்று. தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக இம்மாதிரி வெள்ளையர்கள் அழித்து ஒழித்த இனங்கள் ஆயிரக்கணக்கானவை. ஒருகாலத்தில் இப்படி நேரடியாக மனிதர்களை அழித்தவர்கள் இன்று பொருளாதாரத்தால் தாக்கிச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா ஆத்திகவாதிகளுக்கும் ஒரு கேள்வி: ஆமாம், கடவுள் என்பவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

தினம்-ஒரு-செய்தி