1. முன்னுரை

1. முன்னுரை
தமிழ் இலக்கியமும் மேற்கின் கொள்கைகளும்

காலம் மாறிக்கொண்டே செல்கிறது. கால மாறுதலுக்குக்கேற்ப மக்களின் வாழ்நிலைகளும் மாறுகின்றன. மக்களின் வாழ்நிலைகள் மாறும்போது அவர்களது கருத்தியல்களும் மாறுகின்றன. அதாவது வாழ்க்கை பற்றியும் பிறவற்றைப் பற்றியும் மக்கள் கொண்டிருக்கும் எண்ணங்களும் மாறுகின்றன. வாழ்நிலை மாற்றத்தில் பிறரின் (அந்நியரின், அல்லது நமக்குத் தொடர்பற்றவர்களின்) தாக்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வணிகத்துக்கென இந்தியாவிற்குள் வந்தனர். அவர்களது பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் மனப் பான்மைகளும் சிந்தனைகளும் நமக்கு அந்நியமானவை. நமக்கு அறிமுகமற்ற, அல்லது நம் சிந்தனைமுறைகளுக்கு அப்பாற்பட்ட, நாம் அறியமுடியாத அல்லது அறிய விரும்பாத தன்மைகளைக் கொண்டவர்களைப் பிறர்/அந்நியர்/மற்றவர் (The OTHER) என்று குறிப்பிடுவது வழக்கம். இவர்களின் தாக்கம் அல்லது குறுக்கீடு நமது வாழ்க்கைநிலைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் மாற்றவும் செய்கிறது. இந்நூல் அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் கால மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள மேற்கத்திய இலக்கியக் கொள் கையின் பாதிப்பினை ஆராய முற்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் படைப்பாளர்களும் வாசகர்களும் நோக்கிய விதம் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு முன்புவரை இலக்கியம், இறைவனைப் பாடுதல், அரசர்கள்-குறுநில மன்னர்கள்-ஜமீன்தார்கள் உள்ளிட்ட மேன்மக்களைப் புகழ்ந்து பாடுதல் எனப் பாடாண் திணையாகவே இருந்தது. இருபதாம் நு£ற்றாண்டில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றம், தமிழ் ஓர் நவீன மொழியாக, நவீன இலக்கிய மொழியாக உருப்பெற்ற நிலை. இலக்கியம் ஒரு சிறு குழுவினர் அல்லது புலவர்கள் உருவாக்குவது, வாசிப்பது என்ற நிலை மாறியது. புலவர்கள் பிழைப்புக்காகப் புரவலர்களை அண்டி வாழுகின்ற நிலையும் மாறியது. பழங்காலப் புலவர்கள், இன்றைய எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளர்கள் ஆயினர். முற்காலப் புரவலர்களுக்கும் அரசர்களுக்கும் பதிலாக ஊடகங்களின் ஆதரவு இன்றைய படைப்புகளுக்குத் தேவையாயிற்று. தமிழ் இலக்கியத்தின் வாய்மொழிப் பாரம்பரியத் தில் புலவர்கள் பாடி அரங்கேற்ற, அதைக் கேட்பவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பதிலாக இப்போது வாசகர் கூட்டம் தோன்றிவிட்டது. இவற்றால் இலக்கியத்தின் நோக்கம், பணி பற்றிய கொள்கைகளும் மாறின. இதற்குமுன், சமகால மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இலக்கியம் இருக்க வேண்டும், சமகாலப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்ற நோக்கு தமிழில் (பிற இந்திய மொழிகளிலும்தான்!) இருந்த தில்லை. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும் கவலைகொள்வதாகவும் மாறியது இருபதாம் நு£ற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம்.

இம்மாற்றம், மேற்கத்திய இலக்கிய வாசிப்பு நோக்கினால் ஏற்பட்ட ஒன்று. இதனோடு பல்வேறு கலை/இலக்கிய இயக்கங்களும் தத்துவக் கொள்கைகளும் தமிழ் இலக்கியப் பரப்பில் புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. சான்றாக, மார்க்சியம், ஃப்ராய்டியம், நவமார்க்சியம், இருத்தலியம், அமைப்பியம், பின்னமைப்பியம், நவீனத் துவம், பின்நவீனத்துவம், பிற்காலனியம் போன்ற மேற்கத்தியத் தத்துவ, இலக்கியக் கொள்கைகள் தமிழில் இடம்பெற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவையன்றி வேறுபல அழகியல்/மெய்யியல் கொள்கைகளும் புகுந்துள்ளன. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மாந்திரிக யதார்த்தம் என்ற சித்திரிப்பு முறை புகுந்துள் ளது. இருபதாம் நு£ற்றாண்டில் தமிழ் மக்களின் உலகப் பரவல் காரணமாகவும், உலகளாவிய இலக்கியத் தாக்கங்கள் காரணமாகவும் தமிழ் மொழி உலகளாவியதோர் மொழியாகியிருக்கிறது. குறிப்பாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சமயச் சார்பான இலக்கியங்களை உற்பத்தி செய்யும் மொழியாக இருந்த தமிழ், சமயச்சார்பற்ற, உலகப்பொதுவானதோர் இலக்கிய மரபினைக் கொண்டதாக உருவாகியது.

ஒரேமாதிரி எழுத்தும் வாசிப்பும் நிலவும் வரையில் கொள்கைகளை எவரும் ஆராய முற்படுவதில்லை. வெவ்வேறு வகையான எழுத்துமுறைகள் பரவும்போது அவற்றை வாசிப்பதற்கான பயிற்சியும் வாசிப்பதற்கான கொள்கை பலம் சார்ந்த உள்ளமும் தேவைப்படுகின்றன. எனவே அப்போது அம்மாதிரியான இலக்கியங்களை அறிமுகப் படுத்தலும், தத்துவம்/கொள்கை சார்ந்த பயிற்சியை வழங்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இம்மாற்றங்களின் காரணமாக, ஒரு புதிய இலக்கிய விமரிசன மரபும் தமிழில் உருவாகத் தொடங்கிற்று. முதலில் இம்மாற்றங்கள் இலேசாக, நமது மரபை நாம் கண்டறிதல் என்ற அளவிலேயே தொடங்கின. இம்மாற்றங்களின் நிலையைக் கா. சிவத்தம்பி பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். (தமிழ் இனி 2000, ப.23).
இதற்கெல்லாம் அப்பால், வெவ்வேறு வகையான இலக்கியங்களும் வெவ்வேறு கொள்கைகள் அடிப்படையிலான இலக்கியங்களும் பெருகிய காலம் இருபதாம் நு£ற்றாண்டுதான். எனவே இந்நாளில் இலக்கியத்தைப் பற்றிய கருத்து மாற்றம் ஏற்பட்டதிலும், இலக்கிய வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டதிலும் வியப்பில்லை.

இன்று தமிழ் இலக்கியப் பரப்பு ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. எத்தனை எத்தனையோ கொள்கைகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன, செலுத்து கின்றன. இவற்றை ஏற்பதில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. காரணம், மேற்கில் இம்மாதிரிக் கொள்கைகள் அவற்றுக்கு அடிப்படையான சமூகப் பின்னணியிலிருந்து, உலகப் போர்கள் முதலிய காரணிகளிலிருந்து தோன்றின. நாமோ தக்க பின்னணி உண்டோ இல்லையோ, வெறும் படிப்பின்மூலமாக இவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். அதேசமயம், உலகமயமாக்கமும் ஊடகங்களும் உலகம் முழுவதும் பொதுவான நிலைமைகளை சிருஷ்டித்துவிட்டன போலவும் தோன்றுகிறது. எனவே எந்தப் புதிய கொள்கையையும் ஏற்பதில் விவேகமும் விழிப்பும் தேவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இந்த நூல் ஒரு சிறிய அறிமுகம்தான். இதில் இடம் பெறும் கருத்துகளை நோச்கும் மாணவர்கள், பிறகு அவற்றை விரிவாகத் தெரிந்துகொள்வது ஆழமான சிந்தனைகளைப் பெறவும் அவற்றைப் தமிழ் இலக்கிய உலகில் பயன்படுத்தவும் உதவும்.

இலக்கியம்