10. அமைப்பியமும் பின்அமைப்பியமும்

10. அமைப்பியமும் பின்அமைப்பியமும்

அமைப்பியம் (பலபேருடைய வழக்கில் ‘அமைப்பியல்’) என்பது, சமூகவியல், மானிடவியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பல துறைகளில் கையாளப்படும் திட்டவட்டமான முறைசார்ந்த அணுகுமுறை எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். அமைப்பியத்திற்கு அடிப்படையாக அமைந்தது, ஸ்விஸ் நாட்டு மொழியியல் அறிஞரான ஃபெர்டினாண்ட் டி சசூர் எழுதிய பொதுமொழியியல் பற்றிய நூல் (1916) என்பர். ஆனால் அமைப்பியம் (ஸ்ட்ரக்சுரலிசம்) என்ற சொல்லை உருவாக்கியவர் ரோமன் யாகப்சன்.

சசூர், தமது நூலில், குறித்தல் செய்கை பற்றிய ஓர் அறிவியல் ரீதியான கொள்கையை முன்வைக்க முயன்றார். குறிகள் வாயிலாக நிகழும் குறித்தல் செய்கை பற்றிய அறிவியலுக்குக் குறியியல் (செமியாடிக்ஸ்) என்று பெயரிட்டார். அவருடைய கருத்துப்படி மொழி என்பது குறித்த உறவுகளின் ஓர் அமைப்பொழுங்கு. இவ்வுறவுகளால்தான் அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சொல், தானே ஒரு பொருளைக் ‘குறிப்பதில் லை’. மாறாகப் பிற சொற்களோடு அதற்குள்ள உறவினால் அர்த்தம் உருவாகிறது.

மொழியின் பொதுவான அமைப்பு ‘லாங்’ எனப்படும். இது மொழியின் அமைப்புக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இதற்கு மாறாக இருப்பது, ‘பரோல்’ எனப்படும் தனிவெளியீடு (தனிப்பேச்சு). இதில் மொழியமைப்பின் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோலவே குறியின் (சொல்லின்) அமைப்பிலும், குறிப்பான்-குறிப்பீடு என்னும் இரு தன்மை களைக் காண இயலும். குறிப்பதற்கெனக் கொள்ளப்படும் பொருள் பற்றிய நினைவுத் தோற்றத்தைக் குறிப்பீடு (சிக்னிஃபைடு) எனலாம். அதை ஒலிகளால் அல்லது பிற முறைகளால் குறிக்கும் விதத்தைக் குறிப்பான் (சிக்னிஃபையர்) எனலாம். இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு தன்னிச்சையானது, வரையறுக்கப்படாதது.

மொழியின் இயக்கத்திலும் இவ்வகை இருமை நிலைகளைக் காணலாம். சொற்களை நாம் தொடராக அமைக்கும்போது தொடர் இணைவு (சிண்டாக் மேடிக் ஸ்ட்ரக்சர்) முறையைப் பயன்படுத்துகிறோம். பெயர்ச்சொல் முத லில் வரவேண்டும், தொடர்ந்து வினைமுற்று வரவேண்டும் என்பதுபோன்ற அமைப்பு முறைகளை உருவாக்குகிறோம். ஆனால் எந்தப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும், எந்த வினைமுற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதும்போது பல சொற்களில் ஒன்றினைத் தேர்ந் தெடுக்கிறோம். இதனைச் சட்டக (வாய்பாட்டு) அமைப்பு (பேரடிக்மாடிக் ஸ்ட்ரக்சர்) என்போம். இம்மாதிரியே கலாச்சாரச் செயல்பாடுகள் யாவிலும் சட்டகத்திலிருந்து கூறுகளைத் தேர்ந்தெடுக்கும் தெரிவு முறையும், அவற் றைத் தொடர் இணைவுகளாக்கும் அமைப்பு முறையும் செயல்படுகின்றன என்று அமைப்பியம் சொல்கிறது.

அமைப்பியம் இம்மாதிரி இருமை எதிர்வுகளில் (சிக்னிஃபைடு x சிக்னி ஃபையர், லாங் x பரோல், சிண்டாக்மேடிக் x பேரடிக்மாடிக் என்பன போல எதிரெதிராக நிறுத்தப்படும் இருமைகள்) கவனம் செலுத்துகிறது. கலாச் சாரத்திலும் இம்மாதிரி இருமை எதிர்வுகள் நிரம்பிக்கிடக்கின்றன. நன்மை-தீமை, ஒளி-இருள், ஆதிக்கம்-ஒடுக்கம் என்பன போன்றவை இருமை எதிர்வுகள். எல்லா மொழிகளுக்கும் அடிப்படை அமைப்பு இருமை எதிர்வுகளால் உருவாகுவதாக ரோமன் யாகப்சன் சொல்கிறார். இத்தன்மையை இலக்கியத் திறனாய்வு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு பனுவலில் இருமை எதிர்வுகள் எப்படி அர்த்தத்தைக் கட்டமைக் கின்றன என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

எனவே அமைப்பிய நோக்கின்படி, ஒரு குறித்த, நிலையான, புறவய மான, அர்த்தம் என்பது இருக்கிறது. அது உள்ளாழத்தில் மறைந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தத் திறனாய்வினால் இயலும். எனவே தன்னை ஒரு புறவயமான அறிவியல் என்று நிலைநிறுதத அமைப்பியம் முனைகிறது. ஒரு குறித்த அமைப்பின் பல்வேறு கூறுகளுக்கிடையிலான தற்செயலான தொடர்பினால் விளைவது அர்த்தம் என்று நோக்கியதால், அமைப்புவாதிகள், அனுபவவாதம், மனிதமையவாதம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை வைத்தனர். அனுபவவாதம், தனித்தனிப் பதிவுகளாக விஷயங்களை ஆராய் கிறதே ஒழிய, ஒட்டுமொத்த அமைப்பினைக் கண்டறிய முற்படுவதில்லை. மனிதமையவாதம், அமைப்புறவுகளுக்கு மாறாக, மானிட சுயத்தினை மையப்படுத்துகிறது. எனவே நிகழ்வியல், இருத்தலியம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை அமைப்பியம் முன்வைத்தது. இவ்வகையில் அமைப் பியத்திற்கும் பின்அமைப்புவாதத்திற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

மானிடவியல் அறிஞரான கிளாட் லெவி ஸ்டிராஸ், மானிட சமூகத் திலும் கலாச்சாரத்திலும் செயல்படும் உலகப் பொதுவான அமைப்புகளை வெளிப்படுத்துவதற்கு அமைப்பியத்தைப் பயன்படுத்தினார். மார்க்சிய அமைப்பிய அறிஞரான அல்தூசர், மார்க்சியக் கொள்கைகளை அமைப்பிய அடிப்படையில்-குறிப்பாகக் கருத்தியல் அடிப்படையிலான நோக்கில் முன்வைத்தார்.

அமைப்புவாதத்தை ஆய்வில் பயன்படுத்தும் முறை
ஒவ்வோர் அறிஞரும் ஒவ்வொருவிதமான முறையில் அமைப்பியத்தை ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். எனவே பொதுமைப்படுத்தி இதுதான் என்று காட்டுவது கடினம். வ்ளாதிமிர் ப்ராப் முதலாக ரோலான் பார்த், ஜெனட் வரை பலவேறு முறைகள் கையாளப்பட்டுள்ளன. பொதுவாக, மொழியியலின் மாதிரியை அமைப்பியம் பயன்படுத்துகிறது. மொழியின் அமைப்பில் தொடர்நிலை அமைப்பு, அடுக்குநிலை அல்லது வாய்பாட்டு அமைப்பு என்பவை முக்கியமானவை.

தொடர்நிலை நோக்கு அடிப்படையில் முதன்முதலில் நாட்டுப்புறக் கதைகளை வைத்து ஆராய்ந்தவர் விளாதிமிர் பிராப். பிறகு ஆலன் டண்டிஸ். இவர்களைத் தவிர லெவி ஸ்டிராஸ், ஜெரார்டு ஜெனட், தொட ரோவ் போன்றோரும் தொடர்நிலை அமைப்பினைப் பல ஆய்வுகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அமைப்புவாதிகள் பிரதிகளைத் தொடர்நிலை அமைப்புகள் (சிண்டாக் மேடிக் ஸ்ட்ரக்சர்ஸ்) என்ற வகையில் ஆராய்கிறார்கள். தொடர்நிலை ஆய்வு என்பது ஒரு பிரதியின் அமைப்பினை அதன் பகுதிகளுக்குள் ஊடான தொடர்புகள் வாயிலாக ஆராய்வது. பிரதியில் காணப்படுகின்ற பகுதிக் கூறுகளான தொடர்க்கூறு (சிண்டாகம்)களை முதலில் கண்டறிய முற்படு கிறார்கள். இம்மாதிரித் தொடர்க்கூறுகளைக் கண்டுபிடித்தால், அவை எந்த உற்பத்தி விதிகளின்படிப் பிரதிகளில் இணைந்துள்ளன என்ற அமைப்பு கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு தொடர்நிலை அமைப்புவிதிமுறை என்பது கிடையாது. ஒரு அமைப்புவிதிமுறைக்கு பதிலாக இன்னொன்றினைப் பயன்படுத்தும்போது வேறுவிதமான அர்த்தங்கள் கிடைக் கின்றன.

கதைகளை ஆராய்வது பற்றி பார்த் கூறும்போது, அமைப்புரீதியாக ஆராய வேண்டுமானால், முதலில் கதைகளை மிகச் சிறிய கூறுகளாகப் பகுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். எந்த அடிப்படையில் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வரையறுக்கவேண்டும். பலர் செயல் என்பதன் அடிப்படையில் அக்கூறுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ‘தி மார்ஃபாலஜி அவ் தி ஃபோக் டேல்ஸ்’ என்ற செல்வாக்குமிக்க நூலினை எழுதிய பிராப், நூறு நாட்டுப்புறக் கதைகளை ஆராய்ந்து முப்பது செயல்களைக் கண்டறிந்தார். செயல் என்பது, கதைப்போக்கில் ஒரு கதை மாந்தரின் முக்கியத்துவம் வாய்ந்த செயல் ஆகும். பிராப் ஆராய்ந்த கதைகள் அனைத்தும் ஒரே விதமான சூத்திரத்தின் அடிப்படையில் அமைந்தனவாக இருந்தன.

இவ்வகையான ஆய்வு, தனித்தனிப் பிரதிகளின் தனித்தன்மைகளைக் கருத்தில் கொள்வதில்லை. ஒரு குறித்த பிரதி என்ன அர்த்தம் தருகிறது என்பதற்கு பதிலாக, எப்படிப் பிரதிகள் ஒட்டுமொத்தமாக அர்த்தக் கட்டமைப்பைப் பெற்றுள்ளன என்பதை நிறுவுகிறது. உலகின் கதைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரே அமைப்பில் குறுக்குவதற்கான ஆய்வுகளே முதலில் செய்யப்பட்டன என்று பார்த்தும் குறிப்பிடுகிறார். ஒரு பிரதி தனது தனித் தன்மையை இறுதியாக இழந்துவிடுவதால், இந்த வகை ஆய்வு விரும்பக்கூடியதன்று என்ற நிலையும் ஏற்பட்டது. இருந்தாலும் இந்த ஆய்வுமுறையில் சில நன்மைகள் உள்ளன என்று ஃபிரடெரிக் ஜேம்சன் குறிப்பிடுகிறார். உதாரணமாகக் கதைப்பின்னல்களின் இத்தகைய அமைப்பு என்பது ஒரு தலைமுறை எப்படிப்பட்ட மாதிரியில் சிந்திக்கிறது என்பதை வெளிப்படுத்த உதவுகிறது என்கிறார்.

பிராப்பினைப் போல அல்லாமல், கதையமைப்புகளுக்கு உள் இருக்கும் எதிர்வுகளை வைத்து லெவி ஸ்டிராஸ், கிரீமோ இருவரும் நோக்கினர். ஒரு கலாச்சாரத்தின் தொன்மங்களை, இயற்கை ஜ் கலாச்சாரம் என்ற முரண்பாட்டின் அடிப்படையில் எழுந்த எதிர்வுகளின் அடிப்படையிலான வரையறுத்த கருப்பொருள்களைக் கொண்டு அமைந்தவை என்று லெவி ஸ்டிராஸ் நோக்கினார். மிக வேறுபட்ட கதாபாத்திரங்களிலிருந்து சில அடிப்படையான செயல்களை உருவமைத்தால், பல்லாயிரக்கணக்கான கதைகளையும் ஒருசில வகைகளுக்குள் அடக்கிவிடலாம் என்று அவர் கூறினார். நமது முன்னோர்கள் நமக்குத் தருகின்ற செய்திகள்தான் தொன்மங்கள். ஆனால் அவற்றைத் தனித்தனித் தொன்மத்தில் தேடாமல், தொன்மங்கள் ஓர் ஒழுங்கமைவின் பகுதிகள் என்ற முறையில் தேட வேண்டும். அவற்றிலிருந்து தொன்மக்கூறுகள் (மிதீம்ஸ்) என்பவற்றைப் பகுக்கவும் செய்தார். வார்த்தைகளுக்கு உருபன்கள் எப்படியோ, அப்படியே தொன்மங்களுக்குத் தொன்மக்கூறுகள். உதாரணமாக, சிறார்க்கதையான ரைடிங்ஹூட் என்பதை அவருடைய முறையில் லாருசியா என்பவர் விளக்குகிறார்: (ரைடிங்ஹூட் என்பவள் ஒரு சிறுமி).
1.பாட்டி நோய்வாய்ப்பட்டதால்
தாய் சமையல் செய்கிறாள்
2. தாயின்கட்டளைப்படி
காட்டுக்குச் செல்கிறாள் சிறுமி
3. நண்பன் உருவத்தில் இருக்கும்
ஓநாயைப் பார்க்கிறாள் சிறுமி
1.விறகுவெட்டி காரணமாக
ஓநாயிடம் பேசுகிறாள் பெண்
2. ஓநாயின் அறிவுரைப்படி வீட்டுக்கு
நீண்டபாதையில்செல்கிறாள்
3. சிறுமி என நினைத்துப் பாட்டி
ஓநாயை உள்அனுமதிக்கிறாள்
4. ஓநாய் பாட்டியைக்
கொன்றுதின்கிறது
3. பாட்டியின் உருவிலுள்ள ஓநாயைச்
சிறுமி பார்க்கிறாள்
2. பாட்டி சொல்லுக்கேற்பப்
படுக்கச்செல்லுகிறாள்
3. பாட்டி உருவிலுள்ள
ஓநாயை வினவுகிறாள்
4. ஓநாய் சிறுமியைக்
கொன்றுதின்கிறது
இது லெவிஸ்டிராஸின் தொடர்நிலை அணுகுமுறை.

கிரீமோ என்பவர் பிராப்பின் முறையை இன்னும் குறுக்கினார். செயல் களும் போராட்டங்களும், ஒப்பந்தங்களை அமைத்தலும் உடைத்தலும், புறப்பாடுகளும் வருகைகளும் என மூன்றே வகையான தொடர்க் கூறுகளைக் கட்டமைத்தார். தன்னிலை/பொருள், அனுப்புவோன்/பெறு வோன், உதவியாள்/எதிரி என்னும் மூன்றே மூன்று ஆக்டண்டுகள்தான் எல்லாக் கதைகளிலும் இருப்பவர்கள் என்றும் சுருக்கினார்.

இதேபோல டெக்காமரான் கதைகளுக்கு தொடரோவ் ஓர் அமைப்பை உருவாக்கிக் காட்டினார். குறியியலாளரான அம்பர்ட்டோ ஈக்கோவும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படக்கதைகளுக்கென ஒரு தொடரியல் அமைப் பினை உருவாக்கிக்காட்டினார்.

எம் என்பவன், பாண்டுக்கு ஒரு பணியை அளிக்கிறான்
வில்லன் பாண்டுக்குக் காட்சியளிக்கிறான்
பாண்ட் வில்லனுக்கோ, வில்லன் பாண்டுக்கோ முதல் தடையை உருவாக் குகின்றனர்
ஒரு பெண் பாண்ட் முன்னால் தோன்றுகிறாள்
பாண்ட் பெண்ணை அனுபவிக்கிறான் அல்லது ஈர்க்கிறான்
வில்லன் பாண்டைச் சிறைப்பிடிக்கிறான்
வில்லன் பாண்டைச் சித்திரவதை செய்கிறான்
பாண்ட் வில்லனை வெற்றி கொள்கிறான்
ஓய்வெடுக்கும் பாண்ட் பெண்ணை அனுபவிக்கிறான், இழக்கிறான்.

அடுக்குநிலை நோக்கு அல்லது வாய்பாட்டுநிலை நோக்கு
எந்த ஒரு அமைப்பினையும் புறநிலை, ஆழ்நிலை என இருவகைகளாகப் பார்க்க இயலும். தொடர்நிலை நோக்கு, புறநிலை அமைப்பினை (சர்ஃபேஸ் ஸ்டிரக்சர்) மட்டுமே ஆராய்கிறது. அடுக்குநிலை ஆய்வு, ஆழ்நிலை அமைப் பினை ஆராய உதவுகிறது. ஏற்கெனவே அமைந்துள்ள குறிப்பான்களின் அடுக்குகளின் பல்வேறு அமைப்புகளை ஆராய்வதுதான் அடுக்குநிலை ஆய்வு. ஒவ்வொரு குறிப்பானும் எந்தவிதமான நேர்முக அல்லது எதிர்மறை உள்ளர்த்தங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இது கணக்கில் கொள்கிறது. பிறகு எவ்வித இருமை எதிர்வுகளால் ஆன கருப் பொருள் சார்ந்த அடுக்குகள் அந்த அமைப்பில் காணப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. ஒரே கணத்தைச் சேர்ந்த குறிப்பான்களுக் கிடையிலான எதிர்வுகள், முரண்பாடுகளைத்தான் நாம் அடுக்கியல் உறவுகள் என்கிறோம்.

ஒரு குறித்த சூழலில் இந்தக் குறிப்பானுக்குப் பதிலாக இன்னொரு குறிப்பானை ஏன் பயன்படுத்தியிருக்கக்கூடாது என்று ஆராய்வது ஓர் அணுகுமுறை. இப்போது நாம் அடுக்கியல் உறவுகள் என்று குறிப்பன வற்றை சசூர் தொடர்பு உறவுகள் என்று குறிப்பிடுகிறார். ஒரு குறித்த அடுக்கிற்கு மாற்று அடுக்கு இல்லாமற் போனால், அப்போது ஓர் இன்மை உருவாகிறது. இன்மைகள் தொடர்நிலை ஆய்வுக்கு மிகவும் உதவுகின்றன. குறிகள், தாங்கள் என்னவாக இல்லை என்பதிலிருந்தே தங்கள் அர்த்தங்க ளைப் பெறுகின்றன.

ஒரு பிரதியில் காணப்படுகின்ற குறிப்பான்களை, அந்தச் சமயத்தில் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய வேறு குறிப்பான்களுடன் ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கும் முறையில் அடுக்கியல் ஆய்வு அமைகிறது. இவ்வாறு நோக்கும் போது இருமை எதிர்வுகளை முதன்மையாக ஆராய்கிறார்கள் அமைப்பு வாதிகள். நான் – மற்ற(து)வர், நாம் – அவர்கள் என்பவை மிக அடிப்படையான இருமை எதிர்வுகள். இயற்கைசார்ந்த – இயற்கை இறந்த என்பது பொதுவாக நம் கதைகளில் காணப்படும் சிறப்பான இருமை எதிர்வு. எல்லாக் கதைகளிலுமே நன்மை – தீமை என்ற இருமை எதிர்வும் முன்வைக்கப்படுகிறது.

முரண்களைப் பொதுவாக எதிர்நிலைகள், முரண்நிலைகள் என இரண் டாகப் பார்க்க இயலும். எதிர்நிலை என்பது முன்னது இல்லாதது. உதாரண மாக, உயிரோடிருத்தல் – இறத்தல் என்பது எதிர்நிலை. இறப்பது என்றாலே உயிரோடு இல்லாதது என்றுதான் பொருள். உயிரோடு இருப்பது என்றாலே இறப்பு நேராதது என்றுதான் பொருள். முரண்நிலை என்பதில் சாயை வேறுபாடுகள் இருக்கும். உதாரணமாக நன்மை – தீமை. நன்மையற்றது என்றால் தீமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தீமையற்றது என்றால் நன்மைதான் என்று கருத வேண்டியதில்லை.

ஒரு கலாச்சாரத்தின் உறுப்பினர்களுக்கு அதன் இருமை எதிர்வுகள் இயல்பாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடுகின்றன. உதாரணத்திற்கு ஆண் – பெண், மனம் – உடல் இவை போன்று. விமரிசனபூர்வமாக நோக்கும்போது பல இருமைகள் போலி எதிர்வுகள் போலத் தோன்றினாலும் அன்றாடத் தொடர்பியல் பொதுப்புத்தி நோக்கில் இயல்பாகவே இருக்கின் றன. எல்லா எதிர்வுகளிலும் சுயம் – மற்றது என்ற எதிர்வுதான் மிக அடிப்படையானது.

ரொமாண்டிய இயக்கத்தில், எல்லா எதிர்வுகளும் செவ்வியல் இயக்கத் தின் கூறுகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன. உணர்ச்சி – சிந்தனை, தன்னிச்சையான வெளிப்பாடு – தேர்ந்தெடுத்து அமைப்பது, அகத்தெழுச்சி – முயற்சி, மேதைமை – முறைமை, படைப்பாற்றல் – கட்டமைப்பு, சுயத்தன்மை – மரபுத்தன்மை இப்படியாக. சர்ரியலிசத்தில், எல்லா எதிர்வுகளும் இறுதியில் தோற்ற அளவிலான எதிர்வுகளே என்பது அடிப்படை. எதிராகக் காட்சியளிக்கும் இருமைகள் எல்லாம் கடைசியாக ஆழமான ஓர் ஒருமையின் தோற்ற எதிர்வுகள். எனவே இந்த அடிப்படை ஒருமையை வெளிக்காட்டுவதை சர்ரியலிசவாதிகள் தங்கள் கடமையாகக் கருதினார்கள். தொடர்க்கூறுகள் நோக்கில் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை ஆராய்ந்த ஈக்கோ, அடுக்குக்கூறுகள் அடிப்படையிலும் ஆராய்ந்தார்.

பாண்ட் – வில்லன்,
அமெரிக்கா – சோவியத் நாடு,
மேற்கத்திய இனம் – பிற இனம்,
கடமை – காதல்,
தற்செயல் தன்மை – திட்டமிடுதல்,
மிகைத்தன்மைகள் – கட்டுப்பட்டு நடத்தல்கள்,
இயல்புக்கு மாறான தன்மை – கள்ளமற்ற தன்மை,
விசுவாசம் – விசுவாசமின்மை
போன்ற இருமை எதிர்வுகளால் அந்தக் கதைகளை விளக்கினார்.

எனவே மொழியியல், சமூக உறவுகள் யாவற்றையும் உருவாக்குகின்ற, ஆழ்நிலையில் காணப்படுகின்ற புறவயமான அமைப்புகளை வெளிப் படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைப்பியம் உள்ளது.

அமைப்பியம் தோன்றியவுடனே அதற்கெதிரான கருத்துகள் டெரிடா, ரோலான் பார்த் போன்ற பலரால் முன்வைக்கப்பட்டன. சான்றாக, டெரிடாவின் “ரைட்டிங் அண் டிஃபரன்ஸ்” (1967) என்பதிலுள்ள ‘ஆற்றலும் குறித்தலும்’ (ஃபோர்ஸ் அண் சிக்னிஃபிகேஷன்) என்ற கட்டுரையைக் காட்டலாம். மொழியிலோ சமூகத்திலோ குறித்த, நிலையான, உலகப் பொதுவான அமைப்புகள் உள்ளன என்பதை விவாதத்திற்கு உள்ளாக்கியதன் காரணமாகவே பின்அமைப்பு வாதம் பிறந்தது.

அமைப்பியத்தின்மீது வேறுவித குறைகளும் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, தன்னிலை அல்லது கர்த்தாத்தன்மை அல்லது சுயம் (சப்ஜெக்டிவிடி) எவ்விதம் கட்டமைக்கப்படுகிறது என்பதை (அதாவது, அமைப்புக்கும் கர்த்தாவாக இயங்குவதற்கும் உள்ள உறவை) அமைப்பிய ஆய்வில் காணும் விதம் ஒரு குறுகிய அணுகுமுறையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோல (சமூக/வரலாற்று) மாற்றம் பற்றிய விஷயத்திலும் அமைப் பியம் சரிவரக் கருத்துக் கூறவில்லை. இறுக்கமான கட்டமைப்புகளால் அர்த்தம் உருவாகும் என்றால், வரலாற்று மாற்றம் எவ்விதம் சாத்திய மாகிறது என்பது தெளிவாகவில்லை. அமைப்புகளே மாற்றக் கூறுகளை உட்கொண்டுள்ளன என்றால், அமைப்பு என்ற கருத்தாக்கமே சிதைகிறது. அல்லது மாற்றம் என்பது அமைப்புக்கு வெளியிலிருந்து வருகிறது என்றால், அப்போது அது சமூக அல்லது மொழியின் அமைப்புகளைச் சார்ந்திருக்கவில்லை, வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது என்று ஆகிறது. அவ்வாறாயின் அமைப்பியம் முழுமையாகத் தனது பொருளை விளக்க முடியாது. மேலும் விட்ஜென்ஸ்டீன் கூறியதுபோல, அர்த்தம் என்பது பயன்பாடு (Meaning is Use) என்றால், அர்த்தம் என்பதை அமைப்பின் வாயிலாக வெளிப்படுத்த இயலாது. இதேபோல இருமை எதிர்வு பற்றிய கருத்தாக்கமும் பிரச்சினைக்குள்ளான ஒன்றே.

பின்அமைப்புவாதம், பின்நவீனத்துவம், பிற்காலனியம் என்பவற்றிலுள்ள பின்- (போஸ்ட்-) என்ற முன்னொட்டின் பொருள் பிரச்சினைப்பாடு உடையது. வெறும் காலப் “பின்மை”யைக் குறிக்கும் ஒட்டாக அது இல்லை. அமைப்பியம், நவீனத்துவம், காலனியம் போன்றவற்றின் விளைவான, அவ்ற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய எதிர்க் கருத்துகளையும் கொண்ட ஒட்டா என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

பின்அமைப்பியமும் பலதுறை சார்ந்ததோர் இயக்கம்தான். இலக்கியத் திறனாய்வு, கலாச்சார ஆய்வுகள், அரசியல் கொள்கை, சமூகவியல், இனவரைவியல், வரலாற்று வரைவியல், கலாச்சாரச் சங்கேதங்கள், உளப்பகுப்பாய்வு போன்ற பல்வேறு துறைகளின் சிந்தனைகள் இதில் அடங்கியுள்ளன. 1950-60களில் அமைப்பு வாதிகளாயிருந்த அறிஞர்கள் பலர் பின்அமைப்புவாதிகளாக மாறினர்.

பின்அமைப்புவாதமும் சசூரின் மொழியியல், குறியியல் கருத்துகளை ஏற்கிறது. ஆனால் பனுவல்கள், குறியமைவுகள், கலாச்சாரச் சங்கேதங்கள், கருத்தியல் அமைப்புகள், சமூகச் செயல்முறைகள் ஆகியவற்றின் ஆய்வில் எவ்வித அறிவியல் அடிப்படையையும் கையாளுவதாக அது கொள்வ தில்லை. அவ்விதம் சொல்வதையும் எதிர்க்கிறது. காரணம், எந்த ஒரு துறையும் தான் ஆய்வதற்கு எடுத்துக்கொள்ளும் ஆய்வுப்பொருளுக்கு வெளியே/புறநிலையில் நின்று கருத்துகளைக் கூறமுடியும் என்று கருத இயலாது. ஆய்வுப்பொருளுக்குள்ளாகவே ஆய்வுமுறையும் இயங்கவேண்டி யிருக்கிறது. ஆராயும்போதே ஆய்வுப் பொருளின் தன்மையும் மாறுகிறது. எனவே “இதுதான் அறுதியானது” என எதையும் நிர்ணயம் செய்ய முடிவ தில்லை. மேலும் பிரதியையும் – உரையையும், மொழியையும் – இலக்கண (அல்லது மேல்-) மொழியையும் (மெடாலாங்வேஜ்), கருத்தியல் சார்ந்த நம்பிக்கை அமைவுகளையும் – அறிவியல் கொள்கைசார் நிலைப்பாடுகளை யும் எங்கு வேறுபடுத்துவது என்பதை அவ்வளவு எளிதில் தெளிவு படுத்தி விடமுடியாது. கருத்தியலைத் தவறான பிரக்ஞை என்றோ, அல்தூசர் கூறியது போல கற்பனையான புரிந்துகொள்ளல்/தவற்றின் ஒரு வடிவம் என்றோ எளிதில் கூறி விடமுடியாது. அறிவியலிலும் கருத்தியலும் கற்பனையும் செயல்படவே செய்கிறது.

சமூகத்தில் இயல்பானவை என்று கருதப்படுகின்ற, அல்லது இயல்பாக வே சரியானவை, உண்மையானவை என்று தோன்றுகின்ற பொதுப்புத்திக் கருத்துகள் ஏராளமாக உள்ளன. இவற்றிற்கு நாம் நிரூபணம் தேடுவதில்லை. ஆனால் இவைகளும் அந்தந்த சமூகத்தின், அரசியல் ஒழுங்கமைவின் கலாச்சார மதிப்புகளை உள்ளடக்கித்தான் இருக்கின்றன. அவற்றை அறியாமலே, அவை நடுநிலையானவை, உலகப் பொதுவானவை என்று நாம் கருதுகிறோம். பின்அமைப்புவாதிகளின் கருத்து கள் இவற்றிலிருந்து ஓர் அறிவாராய்ச்சி இடைவெளியை (எபிஸ்டமாலஜிகல் பிரேக்) உருவாக்குகின்றன. ஆனால் எல்லாத் தன்னிலைமைகளும் (சப்ஜெக்ட் பொசிஷன்ஸ்), பகுப்பாய்பவரின் கருத்துகள் உட்பட, இடப் பெயர்ச்சிச் செயல்முறையின் எல்லையற்ற தொடர்ச்சங்கிலியில் சிக்கியுள்ளன என்று அறியவரும்போது மேற்கண்ட நம்பிக்கைகள் பொய் என்பது புரிகிறது. இந்த நிச்சயமின்மை மொழியின் நிலையற்ற தன்மை, குறிப்பான்-குறிப்பீடு இவற்றிற்கிடையிலுள்ள தன்னிச்சையான உறவு, சொல்பவனின் உள்நோக்கத்தில் சிறைப்படுத்த முடியாத அர்த்த இயலாமை ஆகியவற்றினால் ஏற்படுகிறது.

பின்அமைப்புவாதம் தனக்கென ஒரு தீவிர அரசியல் கொள்கையைக் கொண்டிருக்கிறது. செயல்முறையில் உருவாகிக்கொண்டிருக்கும் தன்னிலை என்பது இதன் அடிப்படை. மொழியிலோ சொல்லாடலிலோ அதன் மாறும் வடிவங்கள் அறிவொளிக்கால அடிப்படையில் தோன்றிய கொள்கைகளால் கைப்பற்ற இயலாதவை. (அறிவொளிக்கால அடிப்படையில் தோன்றிய கொள்கைகள் என்பவை, அறிவு, உண்மை போன்ற கருத்துகளின்மீது நிலைத்திருக்கும் கொள்கைகள். மார்க்சியம், பெண்ணியம், அமைப்பியம் யாவும் இதன்பாற்படும்.)

இங்கு ரோலான் பார்த் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே வந்த எழுத்து முறையை விமரிசகர்கள் நோக்குகிறார்கள். அவரது எழுத்துமுறையின் அமைப்பியக் காலம் என்பது ‘மிதாலஜீஸ்’, ‘எடுத்துரைப்புகளின் அமைப் பியப் பகுப்பாய்வு’ போன்றவற்றை எழுதிய காலம். பின்னமைப்பியக் காலம் என்பது, ‘எஸ்/இஜட்’, ‘பிரதியின் பேரின்பம்’ போன்றவை எழுதப்பட்ட காலம். காலம் செல்லச் செல்ல அவர் அறிவியல்சார் கட்டுத்திட்டமான முறையிலிருந்து மாறி, மனத்திற்குத் தோன்றிய எத்துறையையும் குறித்த முறையியல்-கட்டுறுதி என்பதின்றி எளிதாகக் கையாளுகின்ற நிலைக்கு மாறுகிறார்.

தொன்மங்கள் (மிதாலஜீஸ்) எழுதும்போது விளம்பரங்களிலிருந்து ஃபிரெஞ்சு உணவுமுறை வரை, ஐன்ஸ்டீனின் மூளை என்பதிலிருந்து நவீன குத்துச்சண்டை வரை நவீன தொன்மங்களை விளக்குவதில் திட்டவட்ட மான முறையியலைக் கையாண்டவர் அவர். ஆனால் பத்தாண்டுகளில், மேல்நிலைமொழி ஆய்வினை மறுத்து, தமது ஆய்வுப் பொருளை மாற்றிக்கொண்டே செல்கின்ற வாசிப்புகளை உருவாக்கினார். குறிப்பாக நவீன தொன்மங்களைப் படைப்புரீதியான பிரதியாக்க (நூலாக்க) எழுத்து மூலமாக மீள்-எழுத்து முறை வாயிலாகப் புத்தாக்கம் செய்வதன் மூலம் அவற்றை விமரிசனத்துக்கு உட்படுத்தினார். இல்லாவிட்டால் தீவிர சிந்தனைகளும் குறிப்பிட்ட வடிவத்திற்குள் கட்டுப்பட்டுப் புதுமை இழக்க நேரிடும்.

நனவிலிமனம் (அன்கான்ஷியஸ்) என்பது மொழியின் அமைப்பைக் கொண்டுள்ளது என்பது லக்கானின் கூற்று. இதுவே பின்அமைப்பியத்தின் அடிப்படை ஆயிற்று. நனவிலியின் வேலைகள் அன்றாட மொழியினால் அறியப்பட இயலாதவை. மனிதத் தன்னிலை, கற்பனை நிலைக்கும் குறியீட்டு நிலைக்கும் இடையில் பிளவுபட்டு நிற்பதான நிலைமைக்கு நிரந்தரமாக ஆளாகிவிட்டது. (லக்கான் கூறும் கற்பனை நிலை என்பது, தன்னிலை ஈகோவுடன் ஒன்றுபடும் நிலை. குறியீட்டு நிலை என்பது சொல்லாடலின் மாறும் வடிவங்களால் தன்னிலையின் அடையாளம் அமையும் நிலை.)

ஃபூக்கோவின் வம்சாவளி ஆய்வுகளும் பின்அமைப்பியத்தில் முக்கியத்து வம் பெறுகின்றன. எங்கும் எப்போதும் உண்மை என்பது ஆதிக்க சக்திகளின் கடடுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது என்றார் ஃபூக்கோ. தானாகவே மனிதர் கள் உள்வாங்கிக்கொள்ளும் கண்காணிப்பையும், கட்டுப்பாடுகளையும் பற்றி அவர் பேசினார். தன்னிச்சையான சுதந்திரமும் தேர்வும் மனிதர்களுக்கு இருப்பதுபோலத் தோன்ற வைக்கின்ற மனிதமையவாதச் சொல்லாடலுக்கும் அதன் மதிப்புகளுக்கும் அப்பாற்பட்ட உலகம் ஒன்றினைப் பின்அமைப்பு வாதக் கருத்துகள் உருவாக்கிவிட்டன.

எனவே விடுதலையைக் கொடுக்கக்கூடிய, பன்மைத் தன்மை வாய்ந்த, மையமற்ற அல்லது மையமழிந்த, என்றைக்கும் தன்னிலைகள் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய ஓரிடத்திற்கு வழிகாட்டவல்லது பின்அமைப்பியம் என்ற கருத்து நிலவுகிறது. பாலியலோ, வர்க்கச் சார்போ-எந்த ஒரு சார்பும் கொண்ட நிலையான தன்னிலைகளுக்கு இங்கு இடமில்லை. எர்னஸ்டோ லாக்லா போன்றோர் இதுதான் உண்மையான பிற்கால மார்க்சியம் என்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கொள்கையைச் சார்ந்திருப்பது என்பது ஒரு பெருங்கதையாடலைச் சார்ந்திருப்பதாகும்.

பல இருப்புகள், சொல்லாடல்கள், போராட்டக் களங்கள் ஆகியவற்றில் தன்னிலைகள் கலைத்து வீசி எறியப்படுகின்றன. இந்தக் குழுவுக்கெனவோ அந்தக் குழுவுக்கெனவோ சார்பாக நின்று பேசக்கூடிய பெருங்கொள்கைகள் எதுவும் இன்று இல்லை என்கிறது பின்அமைப்பியம். எப்போதுமே-ஏற்கெனவே இருக்கக்கூடிய சொல்லாடல்களுக்குள் தன்னிலை பொருத்தப் படுவதால், தேர்வுகள் இயலுகின்றன என்றால், எவருமே ஒரு சரியான திட்டமிட்ட தேர்வினைத் தன் வாழ்க்கையில் செய்வது என்பது இயலாது. இவ்வகையில் பின்அமைப்பியம் ஒரு புதிய அவநம்பிக்கை வாதமாகக் காட்சியளிக்கிறது.

போத்ரியா போன்றோர் இன்றுள்ள வெகுஜன ஊடகங்களால் கட்டமைக் கப்பட்ட உலகில் யதார்த்தம் (உண்மை, விமரிசனம், கருத்தியல் போன்றன வும்) என்பதே இல்லை என்கின்றனர். எல்லாமே கற்பனாநிஜமாக, தோற்றமெய்ம்மைகளாக மாறிவிட்டன. வளைகுடாப்போர் என ஒன்று நிகழவேயில்லை, அது ஊடகங்கள் உருவாக்கிய தோற்ற மெய்ம்மை என்ற போத்ரியாரின் கருத்து பிரபலமானது.

பழங்கருத்துகளைத் தகர்ப்பது மூலமாக, அல்லது தகர்க்கவேண்டும் என்று கூறுதல் மூலமாக, இறுகிய மூடத்தனங்களிலிருந்து பின்அமைப் பியம் விடுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்ணியம், தலித்தியம், கருப்பினக் கொள்கை, பிற்காலனியம் போன்ற பலவிதக் கருத்துகளை முன்வைத்து ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடுகின்ற உறுதுணையாக டெரிடா கூறிய தகர்ப்பமைப்பு (டிகன்ஸ்ட்ரக்ஷன்) இருக்கும் என்று ஒருபுறம் நோக்கப்பட்டாலும், உண்மை என்று எதுவுமே இல்லை, எல்லாம் தோற்றமெய்ம்மைகளே என்று கூறும் ஐயுறவுவாதமாகப் பின்னமைப்பியக் கருத்துகள் அமையும்நிலை, விடுதலைக்கான அதன் பயன்பாட்டுச் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

அமைப்பியம், பின்னமைப்பியம் சார்ந்த நோக்கிலிருந்து தமிழ் இலக்கி யத்தையும் ஊடகங்களையும் விமரிசனப்படுத்துவது ஏறத்தாழ 1990களி லிருந்து தொடங்கிவிட்டது. சாதியம் பற்றிய சொல்லாடல்களைத் தகர்க்கும் விதமாக ராஜ்கவுதமன், மார்க்ஸ் போன்றோர் செயல்பட்டுள்ளனர். ‘மேலும்’ இதழில் தமிழவன் நாகார்ஜுனன் போன்றோர் எழுதிய அமைப்பியம் சார்ந்த விமரிசனங்கள் மிகத் தொடக்கநிலையிலேயே இருந்தன. தமிழவன் திருப் பாவை நூலின் அமைப்பை உடல் x பாடல் என்ற எதிர்மையை அடிப்படையாக வைத்து விளக்கியதை நினைவுகூரலாம். நாகார்ஜுனனோ கட்டுடைப்பு அல்லது அமைப்பிய விமரிசனம் என்பது எழுத்துகளையும் சொற்களையும் சிதைத்து அன்வயப்படுத்துவது போன்ற நோக்கினைக் கொண்டிருந்தார் எனத் தோன்றுகிறது. எம்.டி. முத்துக்குமாரசாமி, நோயல் இருதயராஜ் போன்றோர் சில சரியான நோக்குகளை அச்சமயத்தில் முன் வைத்தனர். சண்முகம், ஜமாலன் போன்றோர் வாயிலாகச் சில இலக்கிய ஆய்வுகள் வெளிவந்தன. பின்னர் அ. ராமசாமி ஊடகங்களை ஆய்வு செய்ய அமைப்பியத்தைப் பயன்படுத்தினார். இந்த நூலின் ஆசிரியரும், தமிழ் இலக்கியங்களை-குறிப்பாகச் சங்கக் கவிதைகளை அமைப்பிய, குறியியல், தகர்ப்பமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். சங்ககாலத்தின் வரலாற்று நிலைகளை ஆராய்வதில் ராஜ்கவுதமன் போன்றோர் இவ்வித வாசிப்பு முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏறத்தாழப் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்பு இவற்றின்மீதிருந்த கவர்ச்சி இன்று இல்லை. ஒருவகையில் பிற ஆய்வுமுறைகளுடன் இவை இணைந்துவிட்டன என்று தோன்றுகிறது. இவ்வித நோக்குகளிலான ஆய்வுகள் ஓரளவு பயனுடையவையாகத் தோற்றமளிப்பினும், அவற்றின் அடிப் படைகளை நன்கறிந்து பயன்படுத்துவோர் மிகக்குறைவாகவே உள்ளனர்.

இலக்கியம்