14. தலித்தியம்

13. தலித்தியம்

தலித் இயக்கத்தை மேற்கத்தியத் தாக்கத்தின் விளைவாக உருவான ஒன்று எனக் காண இயலாது. என்றாலும், தமிழ் தலித் இயக்கத்தின் தோற் றம், மேற்கத்திய நாடுகளிலிருந்து பெறப்படாவிட்டாலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களிலிருந்து (மகாராஷ்டிரம், கன்னடம்) உந்துசக்தி பெற்ற ஒன்று. இரண்டாவது, இன்றைய தலித் இயக்கத்தின் கருத்துகளின் பின்னணியில் அமைப்பியம், பின்னமைப்பியம், கருப்பினக் கொள்கை போன்ற பல மேற்கத்திய இயக்கங்களின் தாக்கம் மிகுதியாகக் காணப் படுகிறது. மூன்றாவது நமது தலித் இலக்கியத்தின் தோற்றத்திற்கு மேற்கத்தியச் சார்பான கல்விமுறை ஒரு காரணமாக நிற்கிறது. எனவே மேற்கத்திய நோக்குகள் பற்றிய இந்த நூலில் இதுவும் இடம் பெறலாயிற்று.
என்றாலும், தலித்தியம் தமிழ்ச் சிந்தனையே என்பதும் இன்று வெளி யாகியுள்ளது. இதற்குக் காரணம் அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள்.

அயோத்தி தாசர்-ஒடுக்கப்பட்டவர்களின் முன்னோடி
அயோத்திதாச பண்டிதர் (1845-1914), அம்பேத்கர் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர், பௌத்த மதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்றாலும் அவர் வெளியுலகிற்குத் தெரியவரவில்லை. 1999க்குப் பின்னரே அவர் படைப்புகள் (அயோத்திதாசர் சிந்தனைகள், மூன்று பாகங்கள்) வெளியிடப்பட்டன. அவற்றிலிருந்து நோக்கும்போது முழு இந்தியாவிலுமே தலித்துகளின் அடையாளத்திற்கென முதன்முதலாகப் போராடியவர், விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தவர் அயோத்திதாசர் என்பது தெரியவருகிறது.

நீதிக்கட்சியும் பெரியாருமே தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, ஆத்திகக் கொள்கை எதிர்ப்பு போன்றவற்றின் முன்னோடிகள் என்ற பார்வை அயோத்திதாசர் நூல்களின் வருகைக்குப் பின் பொய்யாகியிருக் கிறது. தமிழகத்தின் முதல் பொதுவுடைமையாளரான சிங்காரவேலரும் அயோத்திதாசரும் சமகாலத்தவர்கள். பௌத்த மதத்தில் பொதுவாக ஈடுபாடு காட்டியவர்கள். அயோத்திதாசர், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வழக்கமாக வள்ளுவர் (இவர்களைப் பண்டிதர் என்றும் சொல்வதுண்டு) எனப்பட்ட மருத்துவச் சாதியில் தோன்றியவர் என்று தெரிகிறது. அயோத்தி தாசர் பௌத்தம் என்ற சொல்லை சமண மதத்தையும் உள்ளடக்கிய சிரமண மரபைக் குறிக்கும் ஒன்றாகவே கையாளுகிறார். இந்தச் சிரமண மரபு மகாவீரருக்கும் புத்தருக்கும் முன்னாலிருந்தே வருவது. தமிழகத்தில் வைதிக மதங்களின் வருகைக்கு முன்னரே இத்தகைய மரபு இருந்ததைக் காணமுடியும்.

பெரியாருக்கு முன்னரே நாத்திகக் கருத்துகளையும் பிராமண எதிர்ப்புக் கருத்துகளையும் தமிழகத்தில் முதன்முதலாக வெளியிட்டவர் அயோத்தி தாசர். அவருடைய தமிழக வரலாற்று மீட்புணர்வு மிகப் பெருமைப்படத் தக்கது. தலித்துகள் தான் இந்திய வரலாற்றிலேயே பிராமண எதிர்ப்பாளர்க ளாகவும், சாதியுணர்வின் கொடுமைகளாலும் தீண்டாமையினாலும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்ததை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் இவர்தான். மேலும் அக்காலச் சுதேசிப் போராட்டத்தினர், ஆங்கிலேயரை வெளியேற்றினால் போதும் என்று கருதினார்களே தவிர, முதலாளித் துவத்தையோ சாதியமைப்பையோ எதிர்க்கத் தயாராக இல்லை என்பதையும் நிறுவியுள்ளார். அதேபோல நீதிக்கட்சி பற்றிய தனது ஐயப் பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியில் இருந்த பிராமணரல் லாத சாதிகளிடம் சாதியுணர்வு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் யாவரும் பணக்காரர்களாகவே இருப்பதையும் சுட்டிக்காட்டியுள் ளார். இன்று பெரியாரைப் பலர் சாதிமறுப்புக்காகப் பாராட்டினாலும், உண் மையில் அவரிடமிருந்து கற்றிருக்க வேண்டிய பாடங்களைப் பெரியார் கற்கவில்லை என்பது வெளிப்படை.

தலித் இலக்கியம்
தலித் இலக்கியம் குறித்த சொல்லாடல்கள் தமிழ்ச் சிற்றிதழ்களிலும் தமிழ் இலக்கிய உலகிலும் தவிர்க்கவியலாத இடத்தைப் பெற்றுள்ளன. தலித் இலக்கியம் குறித்த விவாதங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பத்திரிகைகள் பல உண்டு. சுபமங்களா, நிறப்பிரிகை, களம் புதிது, கிழக்கு, சாரதா, நிகழ், செம்மலர், தாமரை எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் நிறப்பிரிகையின் பங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. படைப் பாளிகள் குறித்த நேர்காணல்களில் தலித் இலக்கியம் குறித்த விவாதங்கள் இடம்பெற்று வந்தன. தமிழில் தலித் இலக்கியம் குறித்துத் தொடர்ந்து ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், ரவிக்குமார், கே. ஏ. குணசேகரன், ப. சிவகாமி, பிரபஞ்சன், பொன்னீலன், அருணன் போன்றவர்கள் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் பூலேவும், அம்பேத்கரும் தங்களுடைய பன்முகச் செயல்பாடுகளால் மராட்டிய ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினர். இதன் விளைவாகத் தோன்றியதே தலித் இலக்கியம். மராட்டிய தலித் இலக்கியத்தின் தொடக்கம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உண்டு. புத்தர் காலத்திலேயே தோன்றியதாகவும், சோகாமேளர் தொடங்கி வைத்ததாகவும் கருத்துகள் உண்டு. 1969இல் மராத்வாடா இதழில எழுந்த விவாதத்திற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் என்ற பெயர் தோன்றியது என்பது பரவலான கருத்து. மராட்டியத்தில் தலித் இலக்கியம் தோன்றி யதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் அதன் பாதிப்பு ஏற்பட்டது. மராட்டி, கன்னட மொழிகளில் தலித் இலக்கியம் தோன்றிய பிறகே தமிழ் இலக்கியத்திலும் அதன் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெரியாரின் தாக்கமும், மார்க்சிய சித்தாந்தப் பார்வையுடன் நடந்த பொருளாதாரப் போராட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புகளும் செயல்பாடுகளும் ஒரு வளமான தளம் அமைத்துக் கொடுத்துள்ளன.

தலித் இலக்கியத்தின் தன்மைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1. சாதியை எதிர்ப்பது
2. தலித் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பது
3. கலக இலக்கியம் ஒன்றினை உருவாக்குவது
4. ஒடுக்கப்பட்ட நிலையின் ஆழமான உளவியல் உலகினை ஆராய்வது
5. தலித்துகளுக்கு ஆதரவான அரசியல் எதிர்வினைகளை ஏற்படுத்துவது
6. பொருளதாரச் சமத்துவத்தை வலியுறுத்துவது
7. மனிதர்களுக்குள் புதைந்துள்ள ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான உணர் வைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களை தலித்துகளோடு அடையாளம் காண வைப்பது
8. தலித் விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக இயங்குவது.

தலித் அல்லாதவர்களாயினும் தமிழ் எழுத்தாளர்கள் சிலர்-இன்குலாப், பா. செயப்பிரகாசம், மாற்கு, அ. மார்க்ஸ், பழமலய் போன்றோர் தலித்துக ளாகத் தங்களை உணர்ந்து படைக்க முனைந்தார்கள். இம்மாதிரிப் பிற சாதி யினரும் தங்களைத் தலித் உணர்வோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு தலித் இலக்கியம் படைக்க முடியும் என்பது ராஜ் கௌதமன் கருத்து.

இதற்கு மாறாக, தலித்துகளால் படைக்கப்படுவதே தலித் இலக்கியம் என்ற கருத்து ஆர்ம்பத்தில் இருந்தது. இது கேள்விக்குரியது. ஒரு குறிப்பிட்ட சாதி, இனம் சேர்ந்தவர் களால்தான் அதைப் பற்றிய இலக்கியம் படைக்க முடியும் எனறால் இலக்கியம் என்பதே இருக்காது. குஜராத்தி எழுத்தாளர் ஹரீஷ் மங்களமும் தலித்துகளால்தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்று சொல்கிறார். “செருப்புப் போட்டிருப்பவனுக்குத்தான் அது எங்கே கடிக்கிறது என்பது புரியும். இது தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். தலித்துகள் மீது கரிசனம் உடையவர்களாக இருந்தாலும்கூட, தலித் அல்லாத எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகளில் ஒரு வெறுமையை நாம் காணமுடியும். சகபயணிகள், சகபயணிகள்தானே?” என்கிறார் ரவிக் குமார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய படைப்புகளையெல்லாம் தலித் இலக்கியம் என்று அழைத்தாலும், தலித்தால்தான் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி உண்மையோடும், அனுபவரீதியில் நம்பகத்தன்மையோடும் எழுத முடியும் என்று சொல்கிறார்.

“இந்தச் சமூகத்தில் ஒரு சமமற்ற தன்மை உள்ளது. மேல்-கீழ் என்ற உணர்வு உள்ளது. தலித்துகள்மேல் அடக்குமுறை உள்ளது. தலித்துகளுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது. இவற்றைப் பேசுகின்ற இலக்கியம் தலித் இலக்கியம். இவற்றிலிருந்து மாறி, வேறொரு சிறந்த சமநிலை வாய்ந்த சமூகத்தைக் கட்ட விழைவதே தலித் இலக்கியத்தின் கனவாக இருக்கிறது” என்கிறார் கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா. அதே சமயத்தில் அவர் சொல்கின்ற மற்றொரு கருத்து முக்கியமானது.

“சாதியைக் குறிக்கின்ற ஒன்றாக தலித் என்ற சொல்லைக் குறுக்கிவிடக் கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கவேண்டுமே தவிர, சுரண்டலின் குறியீடாகி விடக்கூடாது. சுரண்டல், கொடுமை, அக்கிரமங் களை எதிர்க்கிற சொல்லாக அது மலர வேண்டும். அவமானம், பாதுகாப் பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களை தலித் என்ற சொல் தரவேண்டும்” என்கிறார் சித்தலிங்கையா. தலித்துகளால்தான் தலித் இலக்கியம் எழுதப்பட வேண்டும் என்று கூறும் அ. மார்க்ஸ், ரவிக்குமார் போன்றோர் கருத்து களை மறுப்பதற்கு இது போதுமானது. மேலும் சொல்கிறார்: “போராட்டம், தலித்துகள் மததியில் விழிப்புணர்வை ஊட்டுகின்ற அதேசமயத்தில் வெறும் சாதிப்போராட்டமாக நின்றுவிடக்கூடாது. சாதியை மீறிய ஒன்றாக வேண்டும். சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வுகாண்கின்ற, சுரண்டப்படுகின்ற எல்லாருக்கும் ஒரு தீர்வைக் காட்டுகின்ற ஒன்றாக எழவேண்டும்.”

ராஜ் கௌதமன் இந்தக் கருத்தை ஏற்பவர்தான். சாதி ஒழிப்பிற்காக நிற்பவர்கள் தலித்துகள், சாதி காத்து நிற்பவர்கள் தலித் அல்லாதவர்கள் என்பது அவர் கருத்து. மராட்டிய எழுத்தாளரான அர்ஜுன் டாங்ளே, “ஒடுக்கப்பட்டோர் என்றால் மதம் மற்றும் பிறசில கூறுகளின் பெயரால் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த மக்கள்திரள்” என்கிறார். தாழ்த்தப் பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படுகின்ற அனைவரும் தலித்துகள்தான் என்கிறார் கெய்ல் ஓம்வெட். ஆகவே தலித் என்ற சொல்லைச் சாதிகளைத் தாண்டி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அடையாளப்படுத்துகின்ற ஒன்றாக ஏற்கலாம்.

தலித் இலக்கிய அழகியல் என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
1. எதிர்மறைச் சொல்லாடல்களைப் பற்றி நிற்பது
2. புதிய தொன்மங்களை நிர்மாணிப்பது
3. மரபுகளை உடைப்பது
4. தலித் மொழியால் எழுத்துவடிவமுறையை மாற்றுவது
5. இலக்கியத்திற்கென வரையறுககப்பட்ட மரபுரீதியான இலக்கணங்களை மீறுவது
6. நாட்டுப்புறக் கலைகளின் நீட்சியாக இருப்பது

பொதுவாக நாட்டுப்புறக் கலைகளில் ‘நான்’ என்பது காணப்படாது. ‘நாங்கள்’, ‘நாம்’ என்ற சொற்களே இடம்பெறுவதைப் பார்க்கலாம். மேலும் பெரும்பாலோர் பங்கேற்கும் ஜனநாயகத்தன்மையும் சமநிலையும் அவற்றில் காணப்படும். அதனால் கலகம், எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் அரசியல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட தலித் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியத்தின் தன்மைகளை ஏற்பது அவசியம். மேலும் நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படும் இயல்பான வெளிப்பாடும் கூட்டு வாழ்க்கையின் அடையாளங்களும் ஒடுக்குபவர்களைப் பற்றிய கேலி, கிண்டல், நையாண்டி போன்றவையும் பாலியல் சார் அனுபவங்களும் தலித் இலக்கியத்திற்குப் பெரும் உந்துசக்தியாக அமையும்.

“ஒவ்வொரு இலக்கியப் போக்கிறகும் தனித்த அரசியல் உண்டு. முதலாளித்துவச் சமூகத் தோற்றத்தோடு உருவாகிய யதார்த்தவாத இலக்கியத்திற்கும் இது உண்டு. தனி நபரின் புறவயமான பார்வையில், உள்ள நிலைமைகளை உள்ளவாறே எழுத்தில் யதார்த்தமாகப் படைப்பதாக அது சொல்கிறது….தமிழ்ச் சூழலில் தலித் அல்லாதவர்கள் படைத்த யதார்த்த இலக்கியத்தில், தலித்துகளைப் பற்றிய யதார்த்தம், தலித் யதார்த்தமாக அன்றி, பார்ப்பன, வேளாள மரபால் கட்டுமானமாகிய ஒருசார்பான யதார்த்தமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தில், தலித் ஒரு பாவி, குற்றவாளி, தாழ்வு மனப்பான்மை கொண்டவன், ஒழுக்கமற்றவன், உயர்வதற்கு விரும்பாதவன், முன்னேற அருகதையற்றவன், அடிமை வாழ்வில் சுகம் காண்பவன் என்ற படிமங்களே பதிவாகி யுள்ளன. எனவே இப்படிப்பட்டவர்களாக தலித்துகளை ஆக்கிய யதார்த்தத்தையும் இதனையே மேலழுத்தம் செய்து பழக்கப்படுத்துகின்ற இலக்கிய யதாத்தவாதத்தையும் தலித்துகளும் தலித் இலக்கியமும் தங்களுக்கு ஏற்றவையாக எண்ண முடியாது” என்பது ராஜ் கௌதமனின் கூற்று.

தங்களிடையே புழங்கிவரும் பாலியல் புனைவுகளைத் தொகுப்பதும், புதிய விதங்களில் படைப்பதும், தலித் இலக்கியம் பற்றி அக்கறை கொண் டோரின் பணிகளில் ஒன்று என்கிறார் ரவிக்குமார். ஆனால் வசவுகளையும் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுவனவற்றையும் அப்படியே பயன்படுத்தி இலக்கியம் படைத்தால் அது மக்களை ஈர்ப்பதாக அமையுமா என்ற வினா உண்டு. தமிழில் ஓரிரு எழுத்தாளர்கள் இப்படிச் செய்வதைத்தான் கலகம் என்று போற்றிவருகிறார்கள். ஆனால் தலித் மொழியை-அவர்களுடைய கொச்சை மொழியைப் பயன்படுத்துவது முக்கியமானது. தலித் மக்களிடம் உணர்வெழுச்சியைத் தூண்டும் எந்தச் செயலும் ஆதிக்க மக்களுக்கு எரிச் சலை ஊட்டுவது. தங்களிடம் உள்ளதெல்லாம் பெருமைக்குரியது, பார்ப் பனப் பண்பாடு மட்டுமே இந்தியாவுக்குரியதன்று, பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்டோரின் பண்பாடே இந்தியப் பண்பாடு என்று தலித் மக்களை உணர வைப்பது, அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது என்பனவும் தலித் இலக்கியத்தின் கூறுகளாகும்.

தலித் இலக்கியம் மேற்கின் கருப்பர் இலக்கியத்திலிருந்து-ஆப்பிரிக்க இலக்கியம் போன்றவற்றிலிருந்து தன் அழகியலை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெண்ணிய இலக்கியத்திற்கும் தலித் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை என்றே கூறலாம்.

ஜனநாயகத்தன்மை கொண்ட திருவிழாக்கள் தலித் மக்கள் பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சம். கர்நாடக ராய்ச்சூர் மாவட்டத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் கந்தலாடை அணிந்தவர்கள் மட்டுமே பங்கேற்கமுடியும் என்று சித்தலிங்கையா எடுத்துக்காட்டுகிறார். கந்தலாடையோடு எல்லாரும் காட்டுக்குச் சென்று சமையல் செய்து, அதனைக் கல்லின் மேல் வைத்து உண்பது வழக்கமாம். ஆண்டுக்கொரு முறை கடவுளைச் செருப்பால் அடித்து வழிபடும் வழக்கமும், ஒரு குறிப்பிட்ட நாளில் அம்மன்மேல் எச்சில் துப்பி வழிபடும் வழக்கமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது பக்தீன் கூறும், ரஷ்ய நடப்பான கார்னிவலை ஒத்துள்ளது.

சேலம் மாவட்டத்திலும செருப்படித் திருநாள் என்ற விழா உண்டு. வரிசையாக நின்று ஒவ்வொருவரும் அம்மனைச் செருப்பால் அடிப்பதுதான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இம்மாதிரித் திருவிழாக்களின் நோக்கம் எதிர்ப்புக்குணம்தான். மனிதர்கள் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பான் என்பதுபோல, கடவுள் தவறு செய்தால் மனிதனும் தண்டிக்க முடியும் என்பதற்கான குறியீடாக இது இருக்கலாம்.

கீழ்த்தட்டு மக்களிடம்தான் உண்மையான கலைத்தன்மை உள்ளது. அவர்களின் மொழியில் காணப்படும் கேலி, கிண்டல், வக்கணையான சொற் கட்டுகள் போன்றவை இதற்கு அடையாளம். அதேசமயம், நடுத்தர வர்க்க மக்களின் வெற்றுக்கவலைகளையே எழுதி எழுதி யதார்த்தவாத இலக்கியம் தன் களையிழந்துவிட்டது. அதில் புதிதாக எதுவுமே சொல்லப் பெரும்பாலும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களில் பெண் தெய்வங்கள் மிகுதி என்பதும் காணத்தக்க ஒன்று.

முற்றிலும் ஆணையே சார்ந்து நிற்கும் பண்பாடு தலித் பெண்களிடம் இல்லை. ஒத்துவராத ஆண்களை உதறிவிட்டுச் செல்லும் குணம் அவர்களிடம் உண்டு. கோ. கேசவன், தலித் குரலை ஆரம்பத்தில் ஒலித் தவர் சேக்கிழார் என்கிறார். மார்க்சியம் பெரியாரியம் இவற்றில் வேர்பிடித்துப் பார்ப்பனிய எதிர்ப்புச் சக்தியுடன் இணைந்த போர் முகமே தலித்தியம் என்பது ப. சிவகாமியின் வரையறை. தனது முதல் நாவலான பஞ்சமர் வழியாக அறியப்பட்ட டானியலை தலித் இலக்கிய முயற்சிகளின் முன்னோடி என்கிறார் மார்க்ஸ்.

தலித் இலக்கியப் படைப்பாளிகள்
‘கருக்கு’, ‘சங்கதி’ போன்ற நாவல்களை பாமா எழுதியுள்ளார். பெண்ணாகவும் தலித்தாகவும் கிறித்துவப் பெண் துறவியாகவும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தன் படைப்புகளில் அவர் தந்துள்ளார். கருக்கு, தலித் இலக்கியத் தன்வரலாற்று நூல் என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. விழி. பா. இதயவேந்தனின் ‘நந்தனார் தெரு’ என்னும் சிறுகதைத்தொகுப்பு பாராட்டுப் பெற்ற ஒன்று. ‘பழையன கழிதலும்’, ‘ஆனந்தாயி’ போன்ற நாவல்களை ப. சிவகாமி எழுதியுள்ளார். யுத்தம் தொடரும் என்னும கவிதைத் தொகுதியை க. சுப்பையா வெளியிட்டுள்ளார். முனைவர் கே. ஏ. குணசேகரன் நாட்டுப்புறப் பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளார். ‘மனுசங்கடா’ என்ற இசைப்பேழையை உருவாக்கியவர். ‘பலி ஆடுகள்’ என்ற இவரது நாடகமே முதல் தலித் நாடகம் என்பது இவர் கருத்து.

ராஜ் கௌதமன், இலக்கு காலந்தொட்டுச் சிற்றிதழ்கள் களத்தில் பணியாற்றியவர். தலித் இலக்கியம் பற்றிய தொடர்ந்த உரையாடலை முன் வைத்தவர். சுயசரித நோக்கிலான நாவல் (சிலுவைராஜ் சரித்திரம்) ஒன்றையும் எழுதியுள்ளார்.

உஞ்சை ராசன், தலித் இலக்கியத்திற்கென ‘மனுசங்க’ என்ற இதழை நடத்தியவர். அபிமானியின் ‘நோக்காடு’ என்ற சிறுகதைத்தொகுதியும் பரவலான கவனிப்பைப் பெற்றது.
இந்திரன் பெருமளவு தன்னை தலித் எழுத்தாளர்களோடு அடையாளம் காணாவிட்டாலும், ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். உலகமெங்கும் உள்ள எதிர்ப்பு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர். பூமணி, இமையம், சோ. தர்மன் போன்றவர்களும் தலித் இலக்கியவாதிகளாகத் தங்களை அடையாளம் காண்பதில்லை. எனினும் சிறந்த இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளனர்.

“தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள் இணைந்து பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் எதிர்த்து சமூகப் புரட்சி செய்யவேண்டும்” என்று அருணன் கூறுகிறார். இன்று இது சாத்தியமாக இல்லை. முதலாளித்துவத்தின் மிக வலுவான நாடாக இந்தியாவை மாற்ற, பன்னாட்டு முதலாளியத்தை முற்றிலும் ஆதரித்து உள்நாட்டு மக்களை ஒடுக்குபவர்களாக இன்றைய ஆட்சிளாளர்கள் செயல் படுகின்றனர். அதேபோல சாதிக்கும் பிற்பட்ட மனப்பாங்கிற்கும் ஆதரவான இந்துத்துவ, பிறமதச் சக்திகளும் ஒன்றிணைந்துள்ளனர். மேலும் இம்மூன்று வகை மக்களிடையலும் பார்ப்பனிய, முதலாளித்துவ ஆதரவாளர்கள் வலுப் பெற்றுள்ளனர். சாதியுணர்வு எல்லா மக்களின் இரத்ததிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஊறிப்போயிருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே தமிழிகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை நாம் இனம் காணமுடியும். இட ஒதுக்கீடு ஒன்றைத் தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட செயல்பாடுகள் எதுவும் நடை முறையில் இல்லை.

தலித்துகளின் கொடுமை மிகுந்த வாழ்க்கை அனுபவங்கள் போதிய அளவு இன்னும் இலக்கியத்தில் வெளிப்படவில்லை. அதாவது தலித் இலக்கியம் தமிழில் சிறப்பாக உருவாகவில்லை என்பது நிதரிசனம். சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும். தலித் மேம்பாட்டிற்குச் சாதி ஒழிப்பு இன்றியமையாதது. தலித் இலக்கியம் முதன்மையாக இந்த விஷயத்தைக் கையாள வேண்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தலித் இலக்கியம் குரலெழுப்ப வேண்டும். அர்ஜுன் டாங்ளேயும், தயா பவாரும், சித்தலிங்கையாவும் சொல்வதைப்போல் ஓர் உணர்வுக்கான அடையாளமாக தலித் இலக்கியம் இருக்க வேண்டும்.

இலக்கியம்