15. பிற்காலனியம்

14. பிற்காலனியம்

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிவரை உலகின் பல நாடுகள் மேற்கு நாடுகளின் நேரடிக் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. இருபதாம் நூற் றாண்டின் இறுதியிலோ நேரடிக் காலனி ஆதிக்கம் அகன்றாலும், உலக மயமாக்கம் போன்ற கொள்கைகளின் வாயிலாக மறைமுகமா பொருளாதார நெருக்கடிக்கும் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் உள்ளாகியுள்ளன. இவற் றால் ஏற்பட்ட (மேற்கத்திய) பாதிப்புகளை ஆராய்கின்ற பிற்காலனிய ஆய்வு போன்றவற்றிலும் நாம் மேற்கத்தியக் கொள்கைகளையே பயன்படுத்துவது/ பயன்படுத்த வேண்டியிருப்பது ஒரு வேடிக்கைமுரண்தான்.

தமிழில் பிற்காலனிய நோக்கிலான ஆய்வுகள் எதுவும் இதுவரை முழு மையாகச் செய்யப்பட்டு வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிற் காலனியச் சிந்தனைகள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக (அப்பெயரில் இல்லாவிட்டாலும்) தமிழ் மண்ணில் இருந்துவருகின்றன. இன்று முனைப்புப் பெறவேண்டிய ஆய்வுமுறை இது.

பிற்காலனியம் பற்றிய சிந்தனையிலும் ஒற்றைத்தன்மை வாய்ந்த, ஒருமைப்பட்ட கருத்துநிலைப்பாட்டைக் காண்பது அரிது. காரணம், பிற்காலனியக் கொள்கைகள், பேரளவு வீச்சுள்ள தத்துவ, அறவியல், அரசியல், முறையியல் அடிப்படைகளில் அமைந்தவை. பிற்காலனியம் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்விளைவாக உலகக் கலாச்சார அளவில் எழுந்த சில எதிர்ப்பியக்கங்களைக் குறிக்கிறது. ஐரோப்பியக் காலனியாதிக்கத்தை வீழ்ச்சியுறச் செய்த கலாச்சார, பொருளாதார, சமூக நிகழ்வுகளையும் இச்சொல் குறிக்கிறது. இந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள கலாச்சார அடையாளம், பால், தேசியம், இனம் முதலிய கருத்தாக்கங்கள், அந்நிய ஆட்சியின்கீழ்த் தன்னிலை உருவாக்கம், காலனிய மொழியாதிக்கம் சம்பந் தப்பட்ட வினாக்களும் இத்துறையில் அடங்கும்.

எளிமையாகக் கூறினால், முன்பு காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தேசங்களின் கலாச்சார நிலைகளை ஆராய்வது பிற்காலனியம். காலனி யாதிக்கமும், காலனிய மீட்பும் எவ்வாறு நிகழ்ந்தன? காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளின் இன்றைய கலாச்சாரச் சூழல்களுக்கும் விளைவு களுக்கும் எவ்வாறு அந்நிகழ்வுகள் காரணமாகியுள்ளன? இவை குறித்த விமரிசனபூர்வ ஆய்வும் பிற்காலனிய ஆய்வு என்பதில் அடங்கும்.

தேசியக் கலாச்சார உருவாக்கத்தையும், அக்காலச்சாரத்திலுள்ள தன் னிலை அடையாளங்களையும் காலனி ஆதிக்கம், அதிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றின் பருப்பொருள்சார் நிலைமைகள்தான் நிர்ணயிக்கின்றன. பலவேறு கலாச்சாரங்களின் உள்ளமைவுகளைப் பருமையான அரசியல், வரலாற்று, கலாச்சார ஊடுதொடர்புகள் எவ்வாறு பலவிதங்களில் பாதித்திருக்கின்றன என்று கண்டறியும் ஆர்வத்துக்கான எதிர்வினை இது. ஒரு கலாச்சாரத்தின் அழகியல், அதன் கடந்தகால் அரசியலின் விளைவு மட்டுமல்ல, குறித்த கலாச்சார ஊடாட்டத் திட்டங்களை அதில் நுழைப்பதற் கான கருவியும் ஆகும்.

பிற்காலனியம் என்பதிலுள்ள பின்- என்ற ஒட்டு, காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட கலாச்சாரங்களின்மீது அந்த ஆதிக்கத்தின் தாக்கம் முடிந்தவுடனே-அந்த அடிமை நாடுகள் விடுதலை பெற்றவுடனே முடிந்துவிடுகிறது என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு அன்று. ஒரு தேசத்தின் எல்லை களுக்கு அப்பாலுள்ள (ஆதிக்க) நாடுகளின் மக்கள், அந்த தேசத்தில் குறுக்கீட்டையும் கட்டுப்பாட்டையும் செலுத்த இயலும், அப்படிச் செலுத்து வது, அந்த தேசத்தின் தோற்றத் தனித்தன்மையையும் தனிமதிப்பையும் நியாயப்படுத்துகின்ற தேசிய அடையாளத்தின் சமூக உறுதிப்பாட்டை உடைக்கும் செயல்.

காலனியம் என்பது வெறும் நாட்டை/நிலத்தைக் கைப்பற்றும் ஆதிக்கம் மட்டும் அல்ல. அரசியல், பொருளாதார, கலாச்சார ஆதிக்கங்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது. காலனி ஆதிக்கத்தை இம்மாதிரிப் புரிந்துகொண்ட கொள்கையாளர்கள், பிற்காலனியச் சமூகங்கள், அரசியல் விடுதலை பெற் றாலும் அவை உண்மையில விடுதலை பெற்றவை ஆகிவிடுவதில்லை என்பதை அறிவார்கள். அவை நவகாலனிய வடிவங்களுக்கு அடிமை யாகின்றன. காலனிய ஆதிக்கம் ஒற்றைத் தன்மை வாய்ந்தது அல்ல.

1. காலனிய நாட்டு மக்களை அடிமைப்படுத்துவது, அவர்களது எதிர்ப் பைத் தூண்டக்கூடிய செயல். ஆதிக்கநாட்டினரின் கலாச்சாரக் கட்டுப் பாட்டிற்கான கருவிகளை எப்படி ஆதிக்கத்திற்கு உட்படுவோர் தலை கீழாக்குகிறார்கள், எப்படி அவற்றை இரகசியமான கவலையுடனும் வீறாப் புடனும் எதிர்கொள்கிறார்கள் என்பவை பிற்காலனிய ஆய்வுகளின் முக்கியமான பொருளாகின்றன.
2. மேற்கு நாடுகள் நாகரிக உலகின் மையமாகத் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு களின் மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு விளிம்புக்குத் தள்ளப்படும் மக்களின் கலாச்சார வரலாற்றைப் பற்றியும் பிற்காலனிய ஆய்வுகள் அக்கறை கொள்கின்றன. இந்த ஆதிக்க மையத் திற்கும் காலனிய விளிம்புக்குமான தொடர்பு பிற்காலனியக் கொள்கை யாளர்கள் பலரால் ஆராயப்படுகிறது.

3. பிற்காலனியப் பகுப்பாய்வு, கலாச்சார எல்லைகளின் பிரக்ஞையை உட்கொண்டுள்ளது. கலாச்சார எல்லைகள் என்பவை, தமதும் பிறரதுமான அடையாளங்கள் மாறக்கூடிய கற்பனை எல்லைக் கோடுகள் ஆகும். தங்க ளைச் சமூகக் களத்தில் தன்னிலைகளாக ஆதிக்கத்துக்கு உட்பட்டோர் எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பிற்காலனியக் கொள்கை ஆராய்கிறது.

4. இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரச்சினை, மானிடக் கர்த்தா நிலையையும் தன்னிலையையும் பற்றி விவாதிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆதிக்க நாடுகளின் கருத்தியல் களும், கலாச்சாரச் சொல்லாடல்களும் சமூக அமைவுகளில் தனிமனித நிலைகளை நிர்ணயிப்பதில் எவ்விதப் பங்கு வகிக்கின்றன என்பதையும் பிற்காலனிய ஆய்வுகள் ஆராய்கின்றன. ஆதிக்கத்திற்குட்பட்ட தன்னிலை இருந்து, பேசி, எழுதி, தன்னைப் பிறர்மீது சுமத்திக்கொள்ளும் சமூகத்தளம், பிற்காலனியக் கொள்கையாளர்களுக்கு மிக முக்கியமானது. இத்தன்னிலை கள், தங்கள் தனித்த கலாச்சார, இன அடையாளங்களை மீண்டும் பெறுவதற்கான தேவை பற்றிச் சிலர் விளக்கியுள்ளனர். பொதுக் கலாச்சார வெளியின் வாயிலாகவே அவர்கள் தங்கள் குரலை எழுப்பமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி ஆய்வு நோக்குகள் பலவகைகளில் வித்தியாசப்படுகின்றன.

பின்அமைப்பியமும், பின்நவீனத்துவமும் கொண்டுள்ள பிரதி/பனுவல் பற்றிய கருத்தாக்கமும், சமூகச் சொல்லாடலின் பிரதித்துவம் (டெக்சு வாலிட்டி) பற்றிய கருத்தாக்கமும் பிற்காலனிய ஆய்வாளர்களின் அணுகு முறைகள் மீது அதிகச் செல்வாக்குடையவை. தன்னாட்டவன் (நேடிவ்) என்ற அடையாளத்தைக் காலனியாதிக்கக் கலாச்சாரம் சமைத்து ஒட்டும் செயலில் இலக்கியப் பிரதியின் தன்மை மையமானது. காலனியாதிக்கச் சூத்திரங்களுக்குப் பின்னால் உள்ள இடைவெளிகள், விடுபாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றைச் சமகால இலக்கியக் கொள்கையாளர்கள் வலியுறுத்து கிறார்கள்.

இந்தியாவில் பிற்காலனிய ஆய்வுகளின் முன்னோடியாக அமைந்தது, ஆங்கிலப் பாடத்திட்டமாக அமைந்த காமன்வெல்த் இலக்கியம் என்னும் துறை. காமன்வெல்த் நாடுகள் என்பவை பிரிட்டனின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்து விடுதலை பெற்ற நாடுகள். காமன்வெல்த் நாடுகளில் ஆங்கிலத்தில் உருவான இலக்கியம் (சான்றாக, ஆர். கே. நாராயண், சினுவா அச்சுபே போன்றோர் எழுத்துகள்) பற்றிய படிப்பாக அது அமைந்தது. மொழிப் பயன்பாட்டின் அர்த்தம், விளைவு பற்றிய ஆய்வு களுக்கு இது இட்டுச்சென்றது. பிற்காலனியக் கலாச்சாரத்தில் (இந்தியா போன்றவற்றில்) காலனிய ஆடசியின் மொழியைத் (ஆங்கிலம் போன்ற வற்றைத்) தொடர்ந்து பயன்படுத்துவது அரசியல்ரீதியாக முன்னோக்கிச் செல்லும் உத்தியா, அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள் அதிலி ருந்து மீளமுடியாத அடிமைத்தனத்தைக் காட்டுவதா என்னும் விவாதங்கள் எழுந்துள்ளன.

5. காலனியத்தை எதிர்க்கும் உருவாக்குவதற்காகத் தங்களை ஒடுக்கி யவர்களின் வடிவங்களை எப்படித் தலைகீழாக்குகிறார்கள், ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களின் பிரதிகள் ஆதிக்கவாதிகளைநோக்கி எப்படித் திரும்ப எழுதுகின்றன (ரைட்-பேக்) என்பது பிற்காலனிய ஆய்வின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேம்போக்கான பார்வையில், ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு இலக்கியப் பிரதிகள் அடிபணிவதுபோலத் தோன்றினாலும், இரண்டாம் நிலையில், காலனியத்திற்கு எதிரான பன்முக அர்த்தங்களை எப்படி உருவாக்குகின்றன? சிலேடை, குறிப்புமுரண் (ஐரனி), முரண் மொழிவு (பேரடாக்ஸ்) போன்ற இலக்கியக் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின் றன. இருக்கும் சொல்லாடலிலேயே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அர்த்தங்களை உருவாக்க இவை பயன்படுகின்றன.

இறுதியாக, ஆதிக்கப்படுத்தும் கலாச்சாரத்துக்கும், அடங்கிச் செல்லும் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு, கலப்பு (ஹைப் ரிடிடி) பற்றிய விரிவான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இருவழி ஏற்புகளையும், தடைகளையும் கொண்டதோர் இயங்கியல் உறவு இரு கலாச்சாரங்களுக்கும் இடையே நிலவுகிறது. அவ்வப்போது கலாச்சாரங்க ளுக் கிடையிலான குறுக்குமறுக்கான ஊடுருவல்கள் பறறிய சமரசமும் நிகழ்கிறது. காலனியாதிக்கத்தின் ஊடே இப்படிப்பட்ட இடைவினைகள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆராய்வதும் பிற்காலனிய ஆய்வின் முக்கியப் பகுதியாகிறது.

பிற்காலனியக் கொள்கையின் பரப்பு மிகப் பெரியது. சமூகவியல், மானிடவியல், தத்துவம், இலக்கிய ஆய்வு, கணிதம் போன்ற பலதுறை களின் மிதமிஞ்சிய அறிவை நாடுகிறது. எனவே இக்கொள்கையை மிகவும் சுருக்கிச் சொல்லுதல் என்பது இயலாதது. இத்துறையில் சில குறிப்பிட்ட அறிஞர்கள் பிறர்மீது பெருமளவு செல்வாக்கினை உருவாக்கியிருக்கிறார்கள். ஃபேனான், எட்வர்டு சயீத், காயத்ரி சக்ர வர்த்தி ஸ்பீவக், ஹோமிபாபா ஆகியோரின் பணிகள் விரிவானவை. எனவே அவர்களின் பணிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

ஃபேனான் (1925-61)
இவர் ஒரு மேற்கிந்திய ஃபிரெஞ்சு உளவியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஃபிரான்சில் பயிற்சிபெற்றவர். ‘கருப்புத்தோல்-வெள்ளை முகமூடிகள்’ (1952), ‘உலகின் இரங்கத்தக்கவர்கள்’ (1962) ஆகிய நூல்கள் இவருக்குப் புகழ் தேடித்தந்தன. ஃபிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளில், ஆட்சியாளரின் காலனியாதிக்க நடைமுறைகள், ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த குடிகள்மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தவர் ஃபேனான். தேசிய அடையாளத்தின் வாயிலாக எழும் தடைக்கருத்தியலை அவர் ஆதரித்தார். இன்றுள்ள கொள்கையாளர்களுக்கு முன்னோடி. ஆதிக்கம் செய்வோர்-அடிமைப்பட்டோர் இருவர்க்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவுகளை அவற்றின் மிகச் சிக்கலான தன்மையோடு சிறப்பாக விளக்கியுள்ளார். காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட தன்னிலைகளின் ஒடுக்கப் பட்ட பிரக்ஞையை வெளிப்படுத்த உதவியிருக்கிறார். அவர்கள்மீது சுமத்தப்படும் விளிம்புநிலைகள், மற்றமை (அதர்னஸ்) போன்றவற்றிற்கு எதிரான தடைகளைக் கையாள அவர் கூறும் வழிமுறைகள் இன்றும் ஏற்றனவாகவே உள்ளன.

ஒரு கலாச்சாரத்தில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு மக்களும் மட்டுமே அந்நியக் கலாச்சாரத் தடைக்கான கருவிகளாகின்றனர். அதேசமயம், காலனியாதிக்க வகுப்பினருக்கு ஏற்றாற்போல நடந்துகொண்டு, ‘நல்ல குடிமக்கள்’ என்று தங்களை நிறுவிக் கொண்டு பதவிகளையும் பட்டங் களையும் பரிசுகளையும் பெறுபவர்கள் அவர்கள்தான். (நம் நாட்டில் பிராமணர்கள் நடந்துகொண்ட முறை இதுதான்.) ஆனால் இவர்கள்தான் ஓர் எதிர்க்கலாச்சாரத்திற்கெனப் போராடக்கூடியவர்கள். காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அரசியல் தளத்தில் போராடுபவர்கள். இன்றைய சூழல் அடிப்படை யில், பொருளாதாரத் தளத்தில் போராடினால், இவர்கள் தங்கள் போராட்டத் திற்கு ஆதாரமாகப் பழைய வரலாற்றையும் புராணங்ளையும் பயன்படுத்து கிறார்கள். அதனால் காலனிஆதிக்கம் செலுத்துவோர், (ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா செய்ததுபோலவும், இலங்கையின் வடபகுதியில் சிங்களவர் செய்தது போலவும்) முதலில் அங்குள்ள மக்களின் பழங்கலாச்சாரச் சின்னங்களையும் வரலாற்றையும் அழிக்கிறார் கள். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களும் முதன்முதலில் ஆதிக்க நாட்டினரின் பார்வையில் எது உகந்ததோ அங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புக் கலாச்சாரம் வலுவடைகிறது. உதாரணமாக, நாவல் என்ற இலக்கிய வகை தோன்றியபோது மேற்கத்திய மதிப்பீடு அடிப்படையிலேயே அதன் வடிவம் போன்றவை நோக்கப்பட்டன.

அந்நிய ஒற்றையாட்சி, அல்லது காலனி ஆட்சி, தனக்குக் கீழ்ப்பட்ட மக்கள் “உள்செரித்துக்கொள்ளும்” செயல்முறை ஒன்றை ஆரம்பித்து வைக்கிறது. இந்தச் செயல்முறைக்கு ஆட்பட்டவர்கள், புற அளவில் மட்டும் பொருளாதார, அரசியல், சமூகத் தாழ்வுகளை அனுபவிப்பதோடு நிற்ப தில்லை. அக அளவிலும்-தங்கள் அடை யாளங்களை இழக்கும் நிலைக்கும் அதற்கு ஆட்படுகிறார்கள். எனவே புறவய, பொருளாதாரக் கீழ்ப்படுத்தல் என்பது இன, கலாச்சாரக் கீழ்ப்படுத்தலையும் உள்ளடக்கி யிருக்கிறது.

இதில் மொழியின் பங்கினை ஃபேனான் ஆராய்ந்தார். காலனி ஆதிக்கம் என்பது மொழியின் ஆதிக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மொழி யின் ஊடாகவும் செயல்படுகிறது. உதாரணமாக, ஃபிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ், க்ரியோல் என்ற மொழி தாழ்ந்த மொழியாக உணரப்பட்டது. இவ்வாறு மொழிவாயிலாக அடிமைப்படுத்தப்படும் தன்னிலைகள் தங்களை ஆதிக்கம் கொள்ளும் உயர்ந்த மொழியைப் பேசுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் மொழித்திறன்கள், அடையாளம் ஆகியவற்றின் வாயிலாகத் தங்கள் தாழ்வினை உணர்கிறார்கள். கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்தின் மேலாதிக்கம் ஐரிஷ் மொழி, வெல்ஷ் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளின் மீதும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபேனானின் இக்கருத்துகள், மேற்கத்தியக் கலாச்சார ஆதிக்கச் சூழலில் கலாச்சாரம், இனம் இவற்றின் வரையறை குறித்த நோக்கில் எழுத்தா ளர்களைச் சிந்திக்க வைத்தன.

இரண்டாம் நிலையில்தான் தேசிய இலக்கியம் என்பது உருவாகிறது. போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட சுதந்திர ஆர்வ எழுத்துகளுக்கு வரவேற்பு ஏற்பட்டது இந்த நிலையில்தான், இக்கட்டத்தில் நமது கலாச்சாரத்தை விளக்கும் எழுத்துகள் மிகுதியான வரவேற்புப் பெற்றன. தாகூர், பாரதி, திலகர் போன்றவர்கள் நமது பழங்கலாச்சாரத்தை மேம்படுத்திப் பேசிய கட்டம் இதுதான். இச்சமயத்தில் ஃபேனான் எச்சரித்த ஆபத்து நம் நாட்டில் உருவாகியே விட்டது. இம்மாதிரிச் சமயங்களில் ஆதிக்கத்தினரை வெளி யேற்றிவிட்டு, அந்த இடத்தில் அவர்களுக்கு பதிலாக அந்தந்த நாட்டு மேலாதிக்க வகுப்பினரே அந்த இடத்தில் அமர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்பது ஃபேனானின் எச்சரிக்கை. ஃபேனானின் கலாச்சார அரசியல், பயன் வழி நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், கருப்பினத்தன்மை போன்ற கருத்துகளும் அனைத்து ஆப்பிரிக்க அரசியல் திட்டம் போன்ற இயக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

எட்வர்ட் சயீத்
இவரது ‘கீழையியம்’ (ஓரியன்டலிசம்) என்னும் நூல் பிற்காலனியச் சிந்தனைகளுக்கு வெகுவாகக் களம் அமைத்துத் தந்த ஒன்று. 1978இல் வெளியாயிற்று. கீழையியம் இன்று பல்கலைக்கழகங்களில் ஓர் கல்வித் துறையாகவே மாறிவிட்டது. மேற்கு-கிழக்கு என்னும் இருமை எதிர்வுகளை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தும் நூல் இது. கிழக்கு நாடுகளின் மக்களின் சிந்தனை முறையைக் கேவலப்படுத்துவதே மேற்கத்திய ஆய்வு முறையாக இருக்கிறது. ‘கிழக்கு’ என்பதே மேற்கத்தியர்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள, தங்களுக்கு அந்நியமான மற்றமைக்கு (தி அதர்) இட்ட பெயர்தான். எனவே கிழக்கு என்பதும் மேற்கத்தியப் பொருள்சார் நாகரிகம், இலக்கியம், இலக்கியம், மொழி பற்றிய கருத்துகளையே கொண்டிருக்கு மாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. அழகியலும் பிற கலாச்சாரங்களை இழிவு படுத்தும் மேற்கத்தியர் கைக்கருவியாகவே செயல்படுகிறது. சயீத்தின் ஆய்வு, ஃபூக்கோவின் நவ-வரலாற்றிய அடிப்படையில்தான் அமைந்துள்ளது. ஃபூக்கோ பொதுவரலாற்றில் ஆய்வுக்குள்ளாகாத கருத்துகளை (பிறழ் மனநிலை, பாலியல் போன்றவற்றை) எடுத்து ஆய்வு செய்தது போலவே, சயீத் கீழைத்தன்மை என்ற கருத்தை எடுத்து ஆராய்கிறார். மேற்கத்திய ஆதிக்கத்தின் பல இழைகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். கீழைத்தன்மை என்பதை மேற்கு எப்படி உருவாக்குகிறது என்று அவர் ஆராய்ந்த விதம் பின்னால் வந்தவர்களுக்கு முன்னோடி ஆயிற்று.

மேற்கு உருவாக்கிய ‘கிழக்கு’ என்னும் கருத்து, கிழக்கு நாட்டினரின் உண்மையான கலாச்சாரங்களை நோக்குவதில்லை. ஆனால் கிழக்கின் உண்மையான கலாச்சாரங்களை எப்படி நோக்குவது என்பதை அவர் தெளிவுபடுத்தவுமில்லை. பலவித உறவுமுறைகளிலும தொடர்புகளிலும மேற்கின் கையே மேலோங்கியிருக்குமாறு எவ்விதம் மேற்குநாடுகள் நடந்துகொள்கின்றன என்பதை அவர் நூல் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய அறிவியல், இறையியல், இராணுவ, மத, வணிகச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் கருத்துக்கட்டுப்பாட்டினை மேற்கு எவ்விதம் மேற்கொள் கிறது என்பதை சயீத் நன்கு ஆராய்ந்துள்ளார்.

பூக்கோ போலவே, சயீத்தும் “அறிவுதான் ஆதிக்க அதிகாரம்” என்னும் கருத்தினைக் கொண்டவர். மேற்கத்திய அதிகாரத்தைத் தக்க வைப்பதில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இம்மாதிரி ஒடுக்கும் முறைகளி லிருந்து விடுபடுவதற்கான அரசியல் செயல்முறைதான் சயீத் முன் வைப்பது. ஃபூக்கோவும் டெரிடாவும் பிரதிகளைச் சந்தேகிப்பதில் ஒன்று படுகிறார்கள் என்றாலும், பிரதிகளின் விடுபாடுகளையும் இடைவெளி களையும் மட்டுமே டெரிடா நோக்குகிறார். பூக்கோ அவற்றை அதிகாரத் துடன் தொடர்புபடுத்துகிறார். அவற்றில் இரகசியமான ஆதிக்கக் கூறுகள் பொதிந்து அவை சமூகச் சொல்லாடல்களைக் கட்டுப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறார். எனவே அரசியல் செயல்பாட்டுக்கு உதவக்கூடியவர் என்ற முறையில் டெரிடாவை விட ஃபூக்கோவை மதிக்கிறார் சயீத். பிரதிகளின் அர்த்தச் செயல்முறையை டெரிடா சந்தேகிப்பது அரசியல் செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. ஆனால் நிறுவன ஆதிக்கம், பிரதியின் கருத்துநிலை இவற்றிற்கிடையிலான இணைப்புகளை அடையாளம் காண பூக்கோவின் ஆய்வுகள் உதவுகின்றன. எனவே ஒற்றைத்தன்மை வாய்ந்த மேற்கத்தியச் சொல்லாடலை எதிர்கொள்ள அது உதவும். சமூகச் சொல்லாடல்கள் சொல்ல விரும்பாத விஷயங்களை மறைத்துவைக்கும் காப்பகங்களாகப் பிரதிகள் செயல்படுகின்றன. அவற் றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும்போது அவை உடைகின்றன.

காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தி
காலனிய ஆதிக்கவாதிகள் உருவாக்கும் கலாச்சார வெளிக்குள் காலனி யத் தன்னிலை எவ்வாறு அமைப்புறுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தியின் நூல்கள் அமைந்துள்ளன. குறிப்பாகக் காலனியத்தில் இரட்டை விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் பற்றி அவர் எழுதுகிறார். தந்தையாதிக்கம், காலனி ஆதிக்கம் என்னும் இரட்டை அடிமை நிலைக்கு உள்ளாகிறார்கள் பெண்கள்.

‘அடித்தட்டினர் பேசமுடியுமா?’ (கேன் தி சபால்டர்ன் ஸ்பீக்?) என்னும் அவரது கட்டுரையில் இரட்டை விளிம்புநிலைக்குள்ளான பெண்கள், ஆதிக் கக் கலாச்சாரத்தின் உரைகளில் அவர்கள் நுழைய முடியுமா என்ற வினாவை எழுப்புகிறது. சாத்தியமில்லை என்பதே அவரது கட்டுரையின் முடிவு. “ஆனால் அடித்தட்டு ஆய்வு: வரலாறு எழுதும் முறையைத் தகர்த்தமைத்தல்” என்னும் கட்டுரையில் அவர் உரைக்கும் கருத்துகள், காலனி ஆதிக்கம் செய்யும் கொள்கையாளர்களுக்கு உதவுபவையாகவே உள்ளன என்று பலரும் எதிர்த்துள்ளனர்.

சயீத்துக்கு மாறாக, ஃபூக்கோவைப் புறக்கணிக்கிறார் ஸ்பீவக். டெரிடாவை ஏற்கிறார். முதலில், ஒடுக்கப்பட்ட தன்னிலைகள் பேச முடியாது என்று கூறிய ஃபூக்கோ, அவர்களால் பேச இயலும் என்று தமது பிற்கால எழுத்துகளில் தெரிவிப்பது ஸ்பீவக்கின் கண்டனத்திற்கு அடிப்படை. ஃபூக்கோவின் கருத்துகள், மேற்கத்திய ஆதிக்கக் கருத்தியலுக்கு ஒத்தவை என்றும் சாடுகிறார். மேற்கத்திய பூர்ஷ்வா முதலாளித்துவம், கிழக்கு நாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்னும் வகைமுறையைக் கணக்கில் கொள்ளாமல் ஃபூக்கோ சிந்திக்கிறார். மேற்கு உலகில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பைத்தியங்கள்-குழந்தைகள்-சிறையினர் ஆகிய வர்களைப் பற்றி மட்டும் பேசுவதும் கிழக்கு உலகினரை ஒடுக்கும் மேற்குமையப் பேச்சாகவே அமைகிறது. ஏனெனில், கருப்பினத்தவர், சாதியமைப்பில் கீழ்ப்பட்டவர்கள் போன்றோர் அவர்களைவிடப் பன்மடங்கு ஒடுக்குதல்களை அனுபவிக்கின்றனர்.

அறிவுஜீவிகள் உண்டாக்கிய கதையாடல்கள்/வரலாறுகளின் வாயிலாக ஆதிக்கம்/ஆசை/ஆர்வம் ஆகியவற்றின் ஆதிக்கச் சொல்லாடல்களை வெளிப்படுத்த முடியும் என்பது ஃபூக்கோ, டெல்யூஷ் போன்றவர்களின் கருத்து. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற இயலாதவை என்று சாடுகிறார் ஸ்பீவக். சமூகத்தின் மற்றமையை-அதாவது இருட்பகுதிகளை-புத்திஜீவிகள் வாசிக்க இயலும் என்பதும் ஆகாதது என்கி றார்.

ஒடுக்கப்பட்டவர்கள், தங்கள் நிலையை அறிவார்கள் என்பதும, வாய்ப்பளித்தால் அதனை வெளிப்படுத்துவார்கள் என்பதும் ஃபூக்கோவின் நிலைப்பாடு. ஆனால் தங்களை ஒடுக்கும் அமைப்பிலேயே பயனை விளை விக்கும்படியாகவும், அதன் உற்பத்தியில் பங்கேற்கும் விதமாகவும் அடித்தட்டினர் மழுங்கடிக்கப்பட்டுள்ளனர். விளிம்புநிலைக்குத் தள்ளப்பட் டுள்ள மற்றவர்/பிறர் பற்றி நன்கு அறிந்து கொள்ளவோ, அவர்களுக்காகப் பேசவோ அறிவுஜீவிகளால் முடியாது என்பது ஸ்பீவக்கின் கருத்து. மாறாக, அவர்கள் வரலாற்றை மீட்டெழுதுவதில் அக்கறை காட்ட வேண்டும். மீள் எழுத்து (ரெப்ரசண்டேஷன்) என்பது இயலாததாயினும், தேவையானது என்பது டெரிடாவின் கருத்து. இந்த வழியையே ஸ்பீவக் பரிந்துரைக்கிறார். அடித்தட்டு மக்களின் நிலையை மேம்படுத்த மார்க்சிய வகைபாடுகள் பொருந்தாது என்று கூறும் அவர், ஒடுக்கப்பட்டவர்களை வரையறுத்து அடிமைப்படுத்தும் மேற்கத்தியப் பெருங்கதையாடல்களின் திறனை ஒழிப்பதுதான் அரசியல் வழி என்கிறார். ஒடுக்கப்பட்ட பெண்களின் வரலாறு களை வரைந்துள்ள முறை ஸ்பீவக்கிற்கு இத்துறையில் செல்வாக்கினை நிலைநிறுத்தியுள்ளது.

பிற வேறுபாடுகள் இருப்பினும், தங்கள் அறிவு ஆய்வுச் செயல்களின் வழியாக ஓர் அரசியல் இலக்கை அடையும் விளைவுக்குப் பாடுபடுவதில் சயீதும் ஸ்பீவக்கும் ஒன்றுபடுகின்றனர்.

ஹோமி கே. பாபா
‘கலாச்சாரத்தின் இருப்பிடம்’ (தி லொகேஷன் ஆஃப் கல்ச்சர்) என்ற நூலில், ஒடுக்கப்படும் தன்னிலை எப்படி உருவாகிறது என்பதைக் கொள் கைப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளார். ‘ஆஃப் மிமிக்ரி அண் மேன்’ என்னும் கட்டுரையில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரங்களுக்குத் தங்கள் நோக்கில் ஓர் அடையாளத்தைக் காலனியப் படுத்துபவர்கள் எவ்விதம் அளிக்கிறார்கள் என்பதை ஆராய்கிறார். போலி செய்தல் (மிமிக்ரி) என்னும் கருத்தை இதற்குச் சான்றாக்குகிறார். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள், காலனியர்களின் அடையாளங்களைத் தாங்களும் மிமிக்ரி செய்பவர் களாக உள்ளனர். ஆனால், இதுவும் மிமிக்ரிச் செய்கை போலவே போலியாக நிகழும் ஒன்றுதான்.

ஓர் ஆளை மிமிக்ரி செய்பவன் எப்படி அந்த ஆளாக முடியாதோ, அது போலவே ஆதிக்கத்திற்கு உட்பட்டவனும் தன் மிமிக்ரியினால் காலனிய வாதி ஆகிவிட முடியாது. காலனிப்படுத்தப்பட்ட அடையாளங்கள் யாவற் றிலும் இந்தக் கலப்பு, ஒரே மாதிரியும் வேறுமாதிரியும் இருத்தல் என்ற ஈரடிநிலையில் செயல்படுகிறது. இதே கருத்தை ‘சைன்ஸ் டேக்கன் ஃபார் ஒண்டர்ஸ்’ என்னும் கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆதிக்கவாதி யைப் போலவே அடிமைநாட்டில் உள்ளவன் நடிக்கவேண்டி யிருப்பதால் அவனுடைய வழிகாட்டுதல் இவனுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் இவனால் அவனாக முடியாது. அடிமை, அடிமைதான். எனவே ஆதிக்க வாதியின் நாகரிகத்தையும் கட்டுப்பாட்டையும் எந்த அளவுக்கும் ஏற்கக் கூடிய வளமான பூமியாக இவன் இருக்கிறான். ஆனால் அவன் கட்டமைக் கும் பூமியின் விளிம்பிலேயே இவனுக்கு இடம் அளிக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கவாதியின் நிலையை ‘உற்றுநோக்குதல்’ (gaze) என்னும் லக்கானின் நிலைப்பாட்டின் ஊடாக பாபா விளக்கியுள்ளார். ஆதிக்கவாதி, தனக்குக் கீழ்ப்பட்டவர்களை, தங்கள் சொந்த நாடுகளிலேயே அந்நியர் ஆக்குகிறான். ஆதிக்கத்திற்கு முன்பு அவர்கள் அடிமைத்தனம் என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. அதே சமயம், ஆதிக்கத்தில் அவர்களுக்கு இடமும் இல்லை. இது வெளி பற்றிய பிரச்சினை. யாருக்கு உரியது இந்த வெளி? தன் அடிமைகள் அறியா வண்ணம் அவர்களைப் பின்னிருந்து கண்காணிக்கும் நோக்கினைப் பயன்படுத்துகிறான் காலனியவாதி. அதுவே அவனது இயலாமையையும் காட்டுகிறது. பயத்தினால்தான் ஒடுக்குதல் நிகழ்கிறது. பயமில்லாத இடத்தில்-சமத்துவம் நிகழும் இடத்தில்-ஒடுக்குபவர்களும் இல்லை, ஒடுக்கப்படுபவர்களும் இல்லை. பாபாவின் நூல்கள், இந்த இருவிதத் தன்னிலைகளின் உருவாக்கம் பற்றியதாகவே அமைந்துள்ளது. கலாச்சார ஆய்வாளர்களுக்கு இந்தத் தன்னிலைகளுக்கிடையிலான உறவே முதன் மையாக அமைந்துள்ளது.
பிற்காலனியக் கொள்கைகள்,
-:காலனி ஆதிக்கத்திற்கு முந்திய நிலைமைகளைக் கணக்கில் கொள்வ தில்லை,
-:ஒற்றைச் சாராம்சத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை,
-:மேற்கு-கிழக்கு என்ற இருமை எதிர்வை மட்டுமே மையப்படுத்துகின்றன,
-:மேற்கத்தியப் பெண்ணியத்திற்கு மாற்றாக, மூன்றாம் உலகப் பெண் என்ப வளைச் சாராம்சரீதியாக உருவாக்க உதவுகின்றன
என்று மேற்கத்தியக் கொள்கையாளர்கள் குறைசொல்கின்றனர். மேற்கத் தியக் கல்விமுறையில் உருவான மேல்தட்டு புத்திஜீவிகளின் கருத்துகளை ஏற்று, உண்மையான தனித்தன்மைகளைப் புறக்கணிக்கிறது பிற்காலனியம் என்றும் சொல்கின்றனர். இதிலும் மேற்கத்திய உலகமய அறிவுச் செயல் பாடுகளின் தீனியாகவே கிழக்கு ஆக்கப்படுகிறது.

பிற்காலனிய நிலைமைகளைப் பற்றி விரிவாகப் பேசலாம். ஆனால் அப்படிப் பேசுவது, அந்த நிலைகளையே மாறாத இருப்புக்குள்ளாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது; அல்லது அதைப்பற்றிப் பேசாமலும் இருக்கலாம், அப்படி இருந்தாலோ அந்த நிலைகள் உண்மையிலேயே மாறாதபடி இருக்கும் – என்ற ஈரடி நிலைக்குள் சிந்திப்பவர்களைத் தள்ளு வதாகப் பிற்காலனியக் கொள்கை அமைகிறது. இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, உண்மையிலேயே ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை நீக்கும் அல்லது எதிர்க்கும் செயல்பாடுகளிலும் போராட்டங்களிலும் இறங்குவது தான்.

இறுதியாக, பிற்காலனிய ஆய்வில், தேசிய இனப் பிரச்சினை பல்லாண் டுகளாக ஆராயப்பட்டு வருகிறது. பாபா முதலியோரின் நூல்கள் இதற்குச் சான்று. ஐரோப்பியக் கலாச்சாரத்தின் குறித்த வடிவங்களில், ஐரோப்பியக் கலாச்சாரமே மேலானது, கிழக்குக் கலாச்சாரங்கள் கீழ்ப்பட்டவை என்ற கலாச்சார ஒருசார்புத் தன்மை உள்ளடங்கியுள்ளது. இதனை ஓரியண்டலிசம் போன்ற நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. பிற்காலனிய ஆய்வில், புலம் பெயர்ந்தோர் பற்றியும், கலப்பு பற்றியும் மிகுதியாக ஆராயப்படுகிறது. டயஸ்போரா, ஹைப்ரிடிடி போன்றவை, மூன்றாம் உலகின், அல்லது பிற்காலனியக் கலாச்சாரங்களின் அடிப்படையாக அமைந்துள்ள கலாச்சாரப் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த ஏற்பட்ட சொற்கள். இதனை ஸ்டூவர்ட் ஹால், ஹோமி பாபா போன்றோர் விளக்கியுள்ளனர். இவற்றில் மேற்கத்தியக் கலாச்சாரங்கள் x மேற்கத்தியத்திற்கு மாறான கலாச்சாரங்கள் இவற்றின் வித்தியாசங்களை வெளிப்படுத்த எனச் சொல்லாடல்கள், கதையாடல்கள் போன்ற கொள்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேற்கத்தியக் கொள்கைகளின் உயர்வு பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. இவற்றில் மார்க்சிய, பின்நவீனத்துவ, பின்அமைப்பியக் கொள்கைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பிற்காலனியத் தன்னிலைகளின் அனுபவத்தை வெளிப்படுத்துவதில், பின்நவீனத்துவம்/பின்அமைப்பியக் கொள்கைகள் ஏற்கும் எதிர்யதார்த்த நிலைப்பாடுகள் எவ்விதம் பயன்படும் என்ற கேள்வியை எட்வர்டு சயீத் எழுப்புகிறார். ஏனெனில், பின்நவீனத்துவ, பின்அமைப்பியச் சிந்தனைகளின் பெரும்பகுதி மேற்கத்தியக் கலாச்சாரச் சிந்தனைகளின் வழி உண்டானவை.

காலத்தைக் குறிப்பதாகப் பிற்காலனியம் என்ற சொல்லைப் பயன் படுத்துவது முரணான கருத்துகளுக்கு இடம் தருகிறது. மேற்கத்தியக் கலாச்சாரம கடந்த இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளில் எய்திய கலாச்சார மேன்மையை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற சிந்தனைக்கு இது இடமளிக்கிறது. ஆகவே பிற்காலனிய- என்ற அடை மொழிக்கு உட்பட, காலனியம் இன்னும் தொடர்ந்து பிற்காலனியத் தன்னிலைகளின் அடையாளத்தின்மீதும் அதன் கலாச்சாரங்கள்மீதும் செல்வாக்குச் செலுத்திவருகிறது என்னும் சிந்தனை அடிப்படையாக உள்ளது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு உட்பட்ட காலம் மட்டுமே காலனிய வடிவங்களிலிருந்து வெளிநோக்கி நகரும் மனப்பான்மையை உருவாக்கியது என்பது போன்ற பொதுமைப் படுத்தல்களும் கேள்விக்குட் பட்டவை. ஒற்றை அரசு மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஐரோப் பிய தேசிய அரசின் தோற்றம், முதலாளித்துவத்துடன் தொடர்புடையது. இந்தத் தேசிய அரசின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே விடுதலை பெற்ற நாடுகளின் அரசியலமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. உலகமயமாக் கலின் விளைவாக மேற்கு தனது மேலாதிக்கத்தினைத் தொடர்ந்து கிழக்கு நாடுகளின்மீதும், மூன்றாக உலக நாடுகளின்மீதும் செலுத்திவருவதை அறிவோம். இம்மாதிரிச் செயல்பாடுகளை எதிர்க்கும் கருவியாகப் பிற்கால னியம் பயன்படுகிறது. பின்அமைப்பிய, பின்நவீனத்துவக் கொள்கைகளின் ஒருசார்புத் தன்மை ஒருபுறம் இருப்பினும், பிற்காலனிய நோக்கினைப் பயன்படுத்த அவற்றை ஆராய்ந்து ஏற்கவேண்டிய நிலையும் உள்ளது.

இலக்கியம்