16. முடிவுரை

15. முடிவுரை

தமிழ் வளரவேண்டும் என்பதுதான் நம் அனைவர் விருப்பமும். இதற்குப் பல்வேறு தாக்கங்கள் உதவியும் உள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ஒவ் வொரு விதமான தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பழங்காலத்திலேயே – சங்க நூல்கள் எழுந்த காலத்திலேயே – சமஸ்கிருத, பிராகிருத, பாலி நூற் கருத்துகளின் தாக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. விஜயநகர, நாயக்க ஆட்சியின்போது தெலுங்கு, கன்னட மொழித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்கள் ஆட்சியின்போது பாரசீக, அராபிய, உருது மொழித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்கத்தியவர்களின் வருகையினால் தமிழில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியத் தாக்கங்கள் பரவலாக ஏற்பட்டுள்ளன. இவற்றிலும் ஆங்கில வாயிலாக வந்த தாக்கங்களே மிகுதி. எவ்வளவு கொள்கைகள் இதுவரை ஆங்கில வாயிலாக நம்மை எட்டியுள்ளன என்பதை இதுவரை வாசித்த பகுதிகள் தெளிவாகவே விளக்கியிருக்கும்.

தாக்கங்களின்றித் தூய வாழ்வு நடத்துவது என்பது கலாச்சாரரீதியாகச் சாத்தியமில்லை. எப்போதும் என்றும் ஏதோ ஒரு/சில அந்நியக் கலாச் சாரத்தின் தாக்குதல் இருந்துகொண்டுதான் இருக்கும். தமிழ் ஒருவகையில் அதிர்ஷ்டம் பொருந்திய மொழி. பிற திராவிட மொழிகள் போல சமஸ்கிருத நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல், தனது தனித்தன்மையையும், தனக்கு ஆதியான மூலதிராவிடப் (அல்லது மூலத்தமிழ்ப்) பண்பாட்டையும் எக்காலத்திலும் காப்பாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. இந்தியாவின் அடிப்படை திராவிடப் பண்பாடு என்கிறோம். அதைக் கண்டறிய இன்ற தமிழைவிட்டால் வேறு கதியே இல்லை. ஆனால் தனித்தன்மையை அளவுக்கு மிஞ்சி வலியுறுத்தவும் முடியாது. தனிமனிதனுக்குத் தனது வீடு, அதே சமயம் வெளி உலகம் என்றிருப்பதுபோல, மொழிக்கும் தனக்குள்ள தனித்தன்மை, வெளித்தாக்கங்கள் என்ற இரண்டுமே உண்டு. ஒன்றை மட்டுமே வலியுறுத்துவது சிறப்பன்று.

இதுவரை வந்த எல்லாத் தாக்கங்களையும் விட ஆங்கிலத்தின் தாக்கம் கடுமையானது. எத்தனையோ மொழிகள், கலாச்சாரங்கள், உலகமயமாக்கலி னால் அழிந்து போயிருக்கின்றன. அழிந்தும் வருகின்றன. ஆனால் தமிழ் இதனை ஆக்கபூர்வமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்னும் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இன்னும எத்தனையோ வகைப் படைப்பு முறைகள், கதையாடல்கள் தமிழில் வ(ள)ர வேண்டும். இந்நூலில் விவாதிக்காத மேற்கத்தியக் கொள்கைகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக, இயற்கைவாதம் (நேச்சுரலிசம்), வெளிப்பாட்டியம் (எக்ஸ்பிரஷனிசம்), பதிவு நவிற்சியியம் (இம்ப்ரெஷனிசம்), மீயதார்த்த வாதம் (சர்ரியலிசம்) போன்ற எத்தனையோ கொள்கைகள்-நமக்குத் தேவையானவை-விவாதிக்கப்படவில்லை. எவை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவோ அவை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யதார்த்தவாத, இயற்கைவாத, (இவையெல்லாம் காலாவதியாகி விட்டன என்பதில் நமக்கு உடன்பாடில்லை) வெளியீட்டுவாத….இன்னும் எத்தனை எத்தனையோ விதமான எழுத்துமுறைகள் தமிழில் பதிவாக வேண்டும்.

இன்று தன்னிச்சையான, இயல்பான இலக்கியக் கவிதை வெளிப்பாடு என்ற ரொமாண்டிக் கொள்கை இயலாதது. எவரும் பின்பற்ற முடியாதது. வாசிப்பவனுக்கும் திறனாய்வாளனுக்கும்தான் கொள்கைகள் தெரியவேண் டும் என்பதல்ல. எழுதுபவனும் அவற்றை நன்கறிந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்து வெறும் கொள்கை விளக்கமாகவோ, பிச்சாரமாகவோ போய்விடக்கூடாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, அம்பர்ட்டோ ஈக்கோ வின் கொள்கைசார் திறனாய்வும் புனைவு எழுத்துகளும். குறியியலில் தொடக்கத்தில் எவ்வளவு ஆர்வ்த்துடன் ஈடுபட்டாரோ அதே ஆர்வத்தோடு அவர் ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’, ‘ஃபூக்கோ’ஸ் பெண்டுலம்’ போன்ற நாவல்களையும் எழுதினார். இம்மாதிரியான வாசிப்பறிவும் எழுத்துப பயன்பாடும் தமிழுலகில் வரவேண்டும். தமிழ் எழுத்தாளப் பெருமக்களோ இன்னும் ரொமாண்டிக் காலத்திலேயே-உள்ளத்திலேயே எல்லாம் இருக் கின்றன என்ற கற்பனையில் இருக்கிறார்கள். இன்றும் பலர் கொள்கை களைப் படிப்பதோ கற்றறிவதோ பெரிய தீங்கு என்பதுபோலப் பார்க் கிறார்கள்.

அதேபோல நல்ல கூர்மையான விமரிசகர்களும் தோன்றவேண்டும். தமிழ் இலக்கியப் பரப்பு பெரியது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை-பின்நவீனத்துவ எழுத்துமுறை வரை, பலவேறு தளங் களைக் கொண்டுள்ளது. இவற்றைப் பல்வேறு வழிகளில் பல்வேறு கொள்கைகளின் ஊடாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. சங்க இலக்கியத்தை இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் வாசிக்க இயலும். ஆனால் இக்காலக் கொள்கைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளாமல், புதிதாக எந்த நாவல் அல்லது கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது என்று, அதன் தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேடி அலைவதை நான் ஓர் ஆய்வு மேற்பார்வையாளனாகக் கவலையோடு கவனித்திருககிறேன். புதியபுதிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அவற்றின் சார்பான நூல்களைக் கற்றறிந்து, ஆய்வு செய்ய இது போன்ற நூல்கள் ஓரளவு ஆர்வத்தைத் தூண்டுமானால்கூட, வெற்றிதான் என்று சொல்லலாம்.

இதேபோலத் தமிழ் இலக்கியத்தைப் பிறமொழிகள் அனைத்திலும் (ஆங்கிலத்தில் மட்டும் அல்ல) நன்கு மொழிபெயர்க்கவும் நிறையப்பேர் தேவைப்படுகின்றனர். உலகத்தின் கவனததைத் தமிழின்பால் ஈர்க்க இது உதவும். ஏனெனில் தமிழ் தனக்குரிய கவனத்தை இதுவரை பெறவில்லை. உலகத்தரத்திலான ஏராளமான படைப்புகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு ஆனால் அவற்றை உலகம் அறியச் செய்ய இயலாமல் (உலகம் எதற்கு? வடக்கு மாநிலத்தவர்களே அறியச் செய்ய முடியாமல்) பிறரால் கேவலப்படுத்தப்படும் ஒன்றாகத் தமிழ்மொழி இன்று தயங்கி மயங்கி நின்று கொண்டிருக்கிறது. எனவே தமிழ் இலக்கியத்தை வெறும் வயிற்றுப் பிழைப்புக்கான படிப்பாக மட்டும் ஆக்கிவிடாமல், ஒரு சிறப்பூதியம் (இன்சென்டிவ்) பெற்றுவிட முடிகிறது என்பதற்காக மட்டும் படிக்காமல், சிரத்தையுடன் தமிழ் இலக்கியத்தைப் பயின்று அதன் மேன்மைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புதியனவற்றைப் பயின்று, புதியனவற்றைப் படைத்து, தமிழ் இலக்கியம் அழிந்துபோகாமல் சிறப்புப் பெறச் செய்வது இன்றைய முதன்மைத் தேவை.

இலக்கியம்