2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி

2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி என்றால் மீண்டும் மலர்தல். இங்கே இச்சொல், ‘நமது மரபை மீண்டும் கண்டறிந்து புதிய ஆக்கங்களுக்குப் பயன்படுத்துதல்’ என்று பொருள் படுகிறது. ஒரு காலத்தில் இருந்த மலர்ச்சி மறைந்து, அது மீண்டும் உருவாக்கப்படும் நிலைதான் மறுமலர்ச்சி. ஐரோப்பாவில் கி.பி.15-16ஆம் நு£ற்றாண்டுகள் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்ததை யாவரும் அறிவர்.

தமிழிலும் ஒருகாலத்தில் மிகச் சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பின்னர் அக்காலம் மறைந்து, சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும் திரும்பத்திரும்ப ஒரே பாணியில் உற்பத்திசெய்யப்பட்டு, அவையே இலக்கியமாகக் கோலோச்சும் நிலை உரு வானது. இந்தத் தேக்கநிலை மாறி, புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்குச் சாதகமான சூழல் 19ஆம் நு£ற்றாண்டில் உருவாயிற்று. இதனைத் தமிழ் இலக்கியத்தின் மறு மலர்ச்சி என்கிறோம். இதற்கு உதவியாக ஆங்கிலக் கல்வி அமைந்தது.

பழைய நூல்கள் ஓலைச்சுவடி வடிவிலிருந்து அச்சுவடிவிற்கு மாற்றப்படும் செயல், மறுமலர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அச்சு ஊடகம் தமிழுக்குக் கிடைத்த நிலையில், பழைய இலக்கியங்கள் அச்சுவடிவம் பெறலாயின. தமிழகத்தில் அச்சுப்பதித்தல் 16ஆம் நூற்றாண் டிலேயே தொடங்கிவிட்டது. முதன்முதலில் கிறித்துவ நூல்களே அச்சுவடிவில் பதிக்கப்பட்டன. தம்பிரான் வணக்கம் என்ற வழிபாட்டு நூல் கி.பி.1557ஆம் ஆண்டிலேயே தமிழில் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. 1712இல் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இவையனைத்தும் ஐரோப்பியர் கரங்களில் இருந்தன.

திருக்குறளும் நாலடியாரும் கி.பி.1812இல் முதன்முதலில் அச்சுவடிவத்தைப் பெற்றன. 1847இல் தொல்காப்பியம் நச்சினார்க்கினியம், மழவை மகாலிங்கையரால் அச்சுவடிவில் கொணரப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதையர் முயற்சிகளால் சங்கஇலக்கியமும் பிறசில நு£ல்களும் அச்சுவடிவில் கிடைத்தன. திருக்குறளும் சங்க இலக்கியமும் பதிப்புக்குள்ளானதும் நமது பழைய மரபு மிக வளமானதோர் மரபு என்பது உலகிற்குத் தெரியவந்தது.

ஆங்கிலக் கலாச்சாரம் இந்தியாவில் திணிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்வினையாக, சமஸ்கிருத மரபு ஆழமானது, பழமையானது என நிலைநாட்டும் இயக்கங்கள் வடக்கில் ஏற்பட்டன. தமிழ் இலக்கியங்கள் பதிப்பிக்கப்பெற்றதும், சமஸ்கிருத மரபுக்கு மாறான, ஆனால் காலஅளவில் அதற்கு இணையான, ஓர் ஆழமான இந்திய மரபு தமிழில் இருக்கிறது என்பது தமிழர்களாகிய நமக்குப் பெருமை தருவதாயிற்று. சமஸ்கிருதம் ஓர் இந்தோஐரோப்பிய மொழியாக இருந்த காரணத்தினால் சமஸ்கிருதத்தின் பழமையை உடனே ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் தரமான மொழிபெயர்ப்புகள் துணையாக இருந்தன. ஆனால் தமிழ் திராவிடமொழி என நிலைநாட்டப்பட்டு, அதன் தனித்தன்மை ஏற்றுக்கொள்ளப் படுவதற்குள் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சென்றுவிட்டன. இன்றும் இந்திய இலக்கியம் என்றால் சமஸ்கிருத இலக்கியம், அதன் வழிவந்த இலக்கியங்கள் என்ற எண்ணமே அயல்நாடுகளில் நிலவுகிறது. இதை நமது துர்ப்பாக்கியம் என்றுதான் கூற வேண்டும்.

இருபதாம் நு£ற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வினை சர். ஜான் மார்ஷல் மேற்கொண்டார். ஹீராஸ் பாதிரியார் போன்றவர்களின் ஆய்வினால் அதுவும் பழமையான திராவிட-தமிழ் நாகரிகமே என்ற உணர்வு ஏற்பட்டது. இவை யாவும் உலக அளவில் தமிழ் மக்கள் தங்களை அடையாளப்படுத் திக்கொள்ள உதவின. இருப்பினும் வடநாட்டவர்கள் இதற்கும் இடம் கொடுக்கவில்லை. இன்றுவரை சிந்துவெளி நாகரிகமும் ஆரிய நாகரிகமே என்று சாதித்து வருகின்றனர். மேலும் அடிப்படைச் சான்றுகளையே அதற்கு ஏற்றாற்போலத் திருத்தவும் முனைந்துள்ளனர். சான்றாக, சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் ஆரியர்களின் முக்கியச் சின்னம் குதிரை. சிந்துவெளியில் கிடைத்துள்ள எருது முத்திரைகளைக் குதிரை முத்திரைகளாகத் திரித்து உருமாற்றம் செய்வதில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் மிக உறுதியாகச் சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகளே என்பதை நிறுவியுள்ளனர்.

வள்ளலார், சுந்தரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரின் கவிதைகள் தமிழ்க் கவிதையை நவீனப்படுத்த உதவின. சிறிதுகாலம் பிறகு புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் பிற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் முயற் சிகளும் தமிழ் உரைநடையை மேம்படுத்தவும் அதன் படைப்பாற்றலைச் சிறப்பாக வெளிக்கொணரவும் உதவின.

ஆங்கிலக் கல்விமுறை மெக்காலேயால் புகுத்தப்பட்ட நாள் முதலாக ஆங்கில அடிப்படையிலான இலக்கிய நோக்கு தமிழ்இலக்கியத்தில் புகுந்தது. தமிழ்போன்ற மொழிகளில் எழுத்துத் தொடர்புக்குரிய ஒரு கருவியாக உரைநடை பழங்காலத்தில் மிகுதியாகப் பயன்படவில்லை. ஆங்கில ஆட்சியில் இந்தியர் அச்சகங்கள் வைத்துக் கொள்ள அனுமதி தந்தபிறகுதான் பத்திரிகைகள் தோன்றின. உரைநடையின் பயன்பாடு மிகுதியடைந்தது. எழுத்துத் தொடர்புக்கான ஓர் இன்றியமையாக் கருவியாக உரைநடை ஆயிற்று. பத்திரிகைகளில் எழுதப்படும் வகைகளான கட்டுரைகள், பத்திகள், ஆசிரியவுரைகள், செய்தியளிப்பு முறைகள் போன்றவை ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழிலோ பிற இந்திய மொழிகளிலோ கிடையாது. பத்திரிகைச் செய்தியளிப்பு முறைகளும் கட்டுரைகளும் சிறுகதை போன்ற இலக்கிய வகைகள் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்தன.

இந்தியப் பாரம்பரியக் கதைகள்-பஞ்சதந்திரக் கதைகள், கதாசாகரத்தில் இடம் பெற்றுள்ள கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை-புனைகதை எழுத்திற்கு ஆதாரமாக அமைந்தன என்று சொல்பவர்கள் இருக்கி றார்கள். இக்கூற்றில் ஓரளவு தவறில்லை. என்றாலும் எனது கருத்தில், பத்திரிகை எழுத்து முறையே புனைகதையின் தோற்றத்துக்கான அடிப்படைகளை அளித்தது. பத்திரிகைக்கான கதைசொல்லல் (கட்டுரை) வடிவம், பத்தி வடிவம் போன்ற வகைகளில் தேர்ச்சியுற்ற ஒரு மனம்தான் புனைகதை என்ற இலக்கிய வடிவத்தை உருவாக்க முடியும்.

எனினும் இந்தியப் பாரம்பரியக் கதைசொல்லல் முறைகள், நாவல் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தன. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி போன்ற ஆரம்பகால நாவல்களில் இந்தியக் கதைசொல்லல் முறையின் தாக்கங்களை நன்கு காணலாம். தமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழி கள் அனைத்திலும், பாரம்பரியக் கதைசொல்லல் முறை நாவலின் தோற்றத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது. இந்திய மொழிகளின் முதல் நாவல்களை நோக்கினாலே இவ்விஷயம் தெளிவாக வெளிப்படும். அதேசமயம் ஆங்கிலக்கதைகளின் தாக்கமும் நாவலின் தோற்றத்திற்கு இன்னொரு முக்கியக் காரணம். சான்றாக, இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், ஆங்கிலத்தில் கோல்டுஸ்மித் எழுதிய ‘தி விகார் அவ் வேக்ஃபீல்டு’ என்ற கதையைப் பிரக்ஞை பூர்வமாகப் பின்பற்றிய முயற்சி என்று க.நா. சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்திய மொழிகளில் நாவல்கள்தான் முதலில் தோன்றின.

நாவல்கள் தோன்றியபோதும், அவை ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ என்ற மரபுரீதியான கருத்தின்படியே அமைந்தன. குறிப்பாக அறத்தை போதிப்பதற்கு நாவல் வடிவமே சரியானது என்று கருதப்பட்டது. சான்றாக, தமிழின் முதல் உரைநடைப் புனைகதையினை எழுதிய வேதநாயகம் பிள்ளை,
இந்தக் கதையை எழுதும்போது, மனித இயற்கை எவ்வாறு இருக்கவேண்டும்
என்ற நோக்கிற்கு மாறாக, இருப்பதை அப்படியே காட்டுவதுபோல நான்
எழுதவில்லை. இருப்பதை அப்படியே காட்டும்முறை, மனித இனத்தின்
மோசமான முன்மாதிரிகளை அளிப்பதன் வாயிலாக, இளைஞரும் அனுபவக்
குறைவுள்ளவர்களும் அவற்றைப் பின்பற்ற வழிசெய்கின்றன. டாக்டர்
ஜான்சன் என்னும் ஆங்கில அறவியலாளரின் கருத்துப்படி, முதன்மை மாந்தர்
களை முற்றிலும் நல்லொழுக்கம் படைத்தவர்களாகவே நான் உருவாக்கி
யிருக்கிறேன்
என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

பாரம்பரியக் கதைசொல்லல் முறைகள், நாவல் இலக்கியத்திற்கு உதவியது போல சிறுகதையின் தோற்றத்திற்கு உதவவில்லை. பத்திரிகை எழுத்துமுறைதான் சிறுகதையின் தோற்றத்துக்கான அடிப்படைகளை அளித்தது. பத்திரிகைக் கட்டுரை வடிவம், பத்திவடிவம் போன்ற எழுத்துவகைகளில் தேர்ச்சியுற்ற ஒரு மனம்தான் சிறுகதை என்ற இலக்கியவடிவத்தை உருவாக்க முடியும். எனவே நமது மரபு பற்றிய பிரக்ஞை ஆழமாக ஏற்பட்ட பிறகு-அதாவது, நாவல்களின் தோற்றத்திற்குக் குறைந்தது ஐம்பதாண்டுகள் கழிந்தபிறகுதான்-சிறுகதை தோன்றமுடிந்தது. என்றாலும் சிறுகதை வடிவம் நமக்கு முற்றிலும் அந்நியமானதும் அல்ல. பாரம்பரிய இந்திய இலக்கிய வடிவங்களிலும் சிறுகதைவடிவம் உள்ளடங்கியே இருக்கிறது. உதாரணமாக, கலித் தொகையில் ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதையாக அமைவதைப் பலரும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

தற்காலச் சிறுகதை, நாவல்கள் போன்ற புதிய இலக்கிய வகைகள் உருவானது ஒருபுறமிருக்க, ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு பழமையுடைய தமிழ்க்கவிதையின் அமைப்பே இன்று முற்றிலும் மாறியுள்ளது. பழங்கவிதைகள் பொருள் தெரிவிப்பதில் பெரும்பாலும் வெளிப்படையானவை. அவற்றை அன்வயப்படுத்திக் கடினமான சொற்களுக்குப் பொருள்சொல்லிவிட்டால் போதும், அக்கவிதைகளின் பொருள் புரிந்துவிடும் என்ற நோக்கு இருந்தது. பெரும்பாலும் மரபுக்கவிதைகள் இந்த நினைப்பை உண்மையாக்கவே செய்தன. எனவே மரபுக்கவிதைகள் பாடமாக நடத்தப்பட்ட விதம் இப்படித்தான் இருந்தது.

இக்காலக் கவிதைகள் வெளிப்படையாகப் பொருள் புரிவதுபோல் தோன்றுகின்றன. ஆனால் பொருளுணர்த்தலில் பலவகை உத்திகளைப் பின்பற்றுகின்றன. அவற்றின் உட்கோள் வேறு, வெளிப்படையாகச் சொல்லும் செய்தி வேறு. இப்படிப்பட்ட கவிதை உருவாக்கம் மேற்கத்திய வாசிப்புமுறை அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. எனவே தமிழிலக்கியப் பரப்பின் தோற்றமே மேற்கத்திய அணுகுமுறைகளால் மாறி விட்டது என்று சொன்னால் மிகையில்லை. மறைமுகமாக அன்றி, நேரடியாகவே, இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் என்பது சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து தொடங்கிவிட்டது.

மேற்கத்தியத் தாக்கத்தினால், பத்திரிகைக் கட்டுரை, பத்திகள், ஆசிரியவுரை, நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று/தன் வரலாற்று இலக்கியம், உரைநடைக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, திறனாய்வு இலக்கியம் போன்றவை உருவாயின. இவற்றில் நாவல், சிறுகதை இலக்கியங்கள் பற்றிப் பேசப்பட்ட அளவுக்குப் பிற இலக்கிய வகைகள் பற்றித் தமிழில் பேசப்பட்டதில்லை. குறிப்பாகக் குழந்தை இலக்கியம், கட்டுரை இலக்கியம், பயணஇலக்கியம் போன்றவை களும் அவை பற்றிய ஆய்வுகளும் தொடக்கநிலையிலேயே உள்ளன.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் ‘நர்சரி ரைம்’கள், சிறார்க்கதைகள் போன்றவை தனியாக உண்டு. தமிழில் 19ஆம் நு£ற்றாண்டுவரை நல்வழி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் போன்ற அறநூல்களைத்தான் குழந்தை இலக்கியம் என்று கருதி வந்திருக்கிறோம். பாரதியார் ‘ஓடிவிளையாடு பாப்பா’ போன்ற பாட்டுகளையும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ போன்ற பாட்டுகளையும் எழுதும்வரை, தனியாகக் குழந்தைப் பாடல்கள் அல்லது குழந்தை இலக்கியம் என ஒன்று உண்டு என்பதே தெரியா திருந்தது. இன்றும்கூடக் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் பலரும் அறிவுரை களையும் அறக்கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

பாரசீக மொழி, அராபிய மொழி போன்றவற்றில் ‘-நாமா’ என்ற பின்னொட் டுச் சொல்லில் முடியக்கூடிய தன்வரலாற்று/வாழ்க்கை வரலாற்று நு£ல்கள் பல உண்டு. ஆனால் தமிழில் அந்த இலக்கிய வகையும் இல்லை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் இதுபோன்ற இலக்கிய வகைகளைப் பார்த்தபிறகே தமிழிலும் அவ்வாறு எழு தும் வழக்கம் தோன்றியது. பயண நு£ல்களும் அவ்வாறே. பழங்காலத்தில் தமிழில் ‘தகடூர் யாத்திரை’, ‘செங்கோன் தரைச்செலவு’ போன்ற நு£ல்கள் இருந்த தாகக் குறிப்பிடப்பட்டாலும், அவை பயணநு£ல்களா என்பது தெரியவில்லை.

இருபதாம் நு£ற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசியம் தமிழில் வேரூன்றியது. அதற்குச் சில ஆண்டுகள் கழித்து தமிழ்தேசியம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அதற்கும் சில ஆண்டுகள் கழித்து தமிழ் வெகுஜன ஊடகங்களின் தாக்கத்தினால் வெகுஜனக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டுவிட்டது. இவையும், தமிழில் மணிக்கொடி காலம் முதல் தோன்றிய சிறுபத்திரிகைகளும், தமிழ் இலக்கிய உருவாக்கத்திலும், நுகர் விலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளன. இவையனைத்திற்கும் அடியில் நேர்முகமாகவோ எதிர்மறையாகவோ மேற்கத்தியத் தாக்கம் பரவலாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

ஏறத்தாழ மணிக்கொடிக் காலம் முதலாகவே வெகுஜன ஊடகங்களுக்கும் ஆழமான இலக்கிய நுகர்வுக்கான ஊடகங்களுக்கும் முரண்பாடு தோன்றிவிட்டது. இதனைக் கல்கி-புதுமைப்பித்தன் மோதலில் நாம் காணலாம். கல்கி வெகுஜனநுகர்விற்கான இலக்கியங்களைப் படைத்தார் என்றால், புதுமைப்பித்தன் அதற்கு எதிரான மனப் பான்மை கொண்டவராக இருந்தார். இம்மாதிரி, யாருக்காக எவ்விதம் இலக்கியம் படைப்பது என்பதில் மட்டுமன்றி, மொழிபெயர்ப்பு, தழுவல் போன்றவை குறித்தும் இருவருக்கும் கருத்து மாறுபாடுகள் இருந்தன.

சிறுபத்திரிகைகளும் மேற்கத்தியத் தாக்கத்தின் ஒரு விளைவே. தமிழில் மணிக் கொடி தொடங்கித்தான் இலக்கியச் சிற்றிதழ்களைக் காணமுடிகிறது. சமூக மேம்பாட்டுக்கான சிற்றிதழ்கள் அதற்கு முன்னாலிருந்தே உண்டு. ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒரு நு£ற்றாண்டு முன்பே சிற்றிதழ்கள் என்ற நிகழ்வு தோன்றிவிட்டது. புகழ்பெற்ற ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ்.எலியட் போன்ற எழுத்தாளர்களெல்லாம் இலக்கியச் சிற்றிதழ்
களிலேயே தங்கள் படைப்புகளை வெளியிட்டனர்.

திறனாய்வின் தோற்றத்திற்கும் மேற்கத்திய வாசிப்பு முறையே காரணம் என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியும். தமிழில் பழங்காலத் திறனாய்வு என்பதற்கு நாம் காணக்கூடிய உதாரணங்கள் எல்லாம், அரங்கேற்றத்தின்போது கரக்கம்பம் சிரக்கம்பம் செய்தல், நூலை வாசிக்கக்கேட்டு மூங்கையும் கண்ணீர் பெருக்கித் தலையசைத்தல் போன்ற பாராட்டு வெளிப்பாடுகள்தான். இதற்கும் மேலாக இறைவனிடம் நக்கீரர் நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாதிட்டது, திருக்குறள் போன்ற நூல்களைச் சங்கப்பலகையில் வைத்தபோது அது விரிந்து ஏற்றுக்கொண்டது, தகுதியற்ற நு£ல்களை வைத்தால் அது குளத்தில் குப்புறத் தள்ளிவிட்டது போன்ற கதைகள்தான் காணப்படுகின்றன. “குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றில் மிகைநாடி” நூலை ஏற்றுக்கொள்ளும் தன்மையை முதன்முதலாகப் பல்கலைக்கழக ஆங்கிலக் கல்வியின் வாயிலாகத் தமிழ்க்கல்வியைக் கற்ற செல்வக்கேசவராய முதலியார், மறைமலையடிகள் போன்றவர்களிடம்தான் காணமுடிகிறது.

நமது பண்டைய உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்களாகப் பலர் முன் வைக்க முனைந்துள்ளனர். உரையாசிரியர்களின் தன்மை வேறு, திறனாய்வாளர்களின் தன்மை வேறு. உரைகோள் என்பது திறனாய்வு அல்ல. மேலும் நமது பண்டை உரையாசிரியர்கள் யாவரும் முன்னோர் நு£லைப் பொன்னே போல் போற்றிக் கொண்டவர்கள். மூலநூலாசிரியனிடம் குறை காண விரும்பாதவர்கள். பிரதியில் குறைகள் தென்பட்டாலும் அதைப் பிற உரையாசிரியர்களின் குறையாகவே கொள்வார்களே ஒழிய, ஆசிரியனின் குறையாகக் கொள்ளமாட்டார்கள். நு£லைப் போற்று வதிலும் நயம் காண்பதிலும் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்களே ஒழிய, தர்க்கரீதியான வாசிப்பு, நிறைகளே அன்றிக் குறைகளையும் நோக்குதல், இதன் விளைவான தர மதிப்பீடு போன்ற தன்மைகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

தர மதிப்பீடு இன்மையால், பழங்காலத்திலிருந்தே பட்டியலிட்டவற்றை யெல்லாம் இலக்கியமாகக் கருதும் தன்மை தோன்றியுள்ளது. சான்றாகப் பதினெண்கீழ்க் கணக்குத் தொகுதியிலுள்ள பலநூல்கள் இலக்கியம் என்ற தகுதியைப் பெறமுடியாதவை. ஆனால் அவற்றைப் பழங்காலத்தில் இலக்கிய நூல்களாகக் கருதிச் சேர்த்துவிட்டபடியால், இன்றுவரை இலக்கிய வரலாற்று நூல்களில் அவற்றை விலக்கமுடியாமல் தத்தளிக்கிறோம். சாத்திர நூல்களும் இதுபோன்றவையே. சாத்திர நூல்களை மெய்யியல், மீமெய்யியல் சார்ந்த நூல்கள் என்று சொல்லலாம். அவை வேறு துறையைச் சேர்ந்தவை. அவற்றை இரசனைக்குரிய இலக்கியமாக எப்படிக் கொள்வது? ஆனால் எல்லா இலக்கிய வரலாற்று நூல்களிலும் அவை இலக்கியம் எனக் குறிப்பிடப்படுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இவ்வாறாகத் தமிழிலக்கிய வாசிப்புமுறை, தமிழிலக்கியத் திறனாய்வுப் பார்வை போன்ற யாவற்றிலும் மேற்கத்திய இலக்கிய, அழகியல் கொள்கைகளின் தாக்கத்தைக் காண்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்து நோக்கினால்,
“1. தமிழ் தனது ஜனநாயகத் தன்மையை நிலைநிறுத்தியுள்ளது.
2. அதன் ஆக்கவளம் உலக நிலையில் இணைந்துகொள்ள முயன்றுள்ளது.
3. தமிழ் உலகை அறிந்துகொண்டுள்ள அளவு, உலகும் தமிழை அறிந்துள்ளது”
என்று கா. சிவத்தம்பி தொகுத்துக்கூறியுள்ளார் (தமிழ் இனி2000, ப.26). இவை யாவற்றிற்கும் மேற்கத்தியத் தாக்கம் முக்கியக் காரணம் என்பதில் ஐயமில்லை.

தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில் முதன்முதல் ஆதிக்கம்கொண்ட மேற்கத்தியக் கொள்கை என்று மார்க்சியத்தைக் குறிப்பிடலாம். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியம் உரிய இடத்தைத் தனது படைப்புகளில் பிடித்துள்ளது. தலித்தியம் நமது மண்ணைச் சேர்ந்ததே ஆயினும் இன்றைய தலித்தியம், பின்னமைப்பியம், பின்நவீனத்துவம், கருப்பினக்கொள்கை, பெண்ணியம், தகர்ப்பமைப்பு போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது.

இவ்வாறாகத் தமிழ் இலக்கியப் பரப்பு ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. எத்தனை எத்தனையோ கொள்கைகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன, செலுத்துகின்றன. முன்னுரையிலேயே கூறியதுபோல, இவற்றை ஏற்பதில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டி யுள்ளது. உலகமயமாக்கலும், ஊடகங்களும் உலகம் முழுவதும் பொதுவான நிலைமைகளைச் சிருஷ்டித்து விட்டன போலத் தோன்றுவதால் அவற்றைக் குறைந்தபட்சம் அறிந்துகொள்வதேனும் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் புதிய கொள்கைகைளை ஏற்பதில் விவேகமும் விழிப்பும் தேவைப்படுகின்றன.

இலக்கியம்