தமிழ் மலர் 2010

தமிழ் மலர் 2010

கோவை ஞானி அவர்கள், 2010இல் ‘தமிழ் மலர் 2010 ‘என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். கி.பி. 2000ஆம் ஆண்டில் காலச்சுவடு அமைப்பு ‘தமிழ் இனி’ என்ற பெரும் கருத்தரங்கினை நடத்தி, அதில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் ‘தமிழ் இனி 2000’ என்ற பெரிய தொகுப்பு நூலாக வெளியிட்டது. ஞானியின் இந்த முயற்சி அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது, அதுபோல ஒன்றைத் தாமும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கோவை செம்மொழித் தமிழ் மாநாடு நடக்கப்போகின்ற நிலையில் அதற்கு எதிர்வினையாகத் தம்மால் இயன்ற முயற்சியைச் செய்ய வேண்டுமென்ற ஞானியின் பேரார்வத்தையும் இம் மலர் காட்டுகிறது.

பெரும்பொருட்செலவில் அது நடக்கப்போகின்ற நிலையில், ஞானி, குறைந்த பொருட்செலவில், கட்டுரை களை வருவித்துத் தொகுத்துத் தந்துள்ளார். பாராட்டுக்குரிய முயற்சி, சிறந்த கட்டுரைகளைத் தாங்கிய அருமையான தொகுப்பு. இந்த மலரை வெளியிட்டபின் இதற்கென ஒரு சிறியவிழாவினையும் இலக்கியக் கருத்தரங் கினையும் ஏற்பாடு செய்து அந்த முயற்சியை அவர் நிறைவுசெய்தார். தமிழ் ஆர்வமுள்ள நண்பர்கள் யாவரும் இந்த தமிழ்மலர் 2010ஐ வாசிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

(நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது எழுதப்படும் கட்டுரை அல்ல இது. 2010இல் தமிழ்மலர் வெளியீட்டு விழாவிலே படிக்கப்பட்ட கட்டுரை. ஆகவே இதில் சொல்லப்படுபவை அப்போதைய 2010 நிலை பற்றிய கருத்துகள். முதலில் ஒரு புறவுரை.)

[புறவுரை:  தமிழ் மலர் 2010 தக்க நேரத்தில்தான் வெளிவருகிறது. ஏறத்தாழ சென்ற வருடத்தின் (2009) பாதிப்புகளை ஓரளவு தமிழ் மக்கள் சற்றே மறந்திருக்கும் வேளையில் சிங்கள அதிபர் தில்லிக்கு வந்துவிட்டார். பற்றுள்ளோர் சிலர் கருப்புக்கொடியேனும் காட்டினார்கள். மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து, பின்னும் இலட்சக்கணக்கான தமிழர் இரும்புவேலிகளுக்குள் அடைபட்டுத் தவிக்கும் வேளையில், அரசியல் தீர்வே கிடையாது என்று அந்தக் கொலைகாரன் மறுத்துவிட்டநிலையில், அக்கொலைகாரனிடமே நம் தமிழகத் தலைவர் இலங்கைத் தமிழர்களைக் ‘காப்பாற்று, காப்பாற்று’ என்று மனுக்கொடுக்கிறார் இன்னும். நம்மால் வாயால் சிரிக்கமுடியவில்லை. இந்த நிலையில் செம்மொழி மாநாடு அடுத்த பத்துநாட்களில் நிகழ இருக்கிறது.

செம்மொழி என்ற அறிவிப்பு வந்தபோதே நமக்கு அதன் பின்னணியில், அந்த ‘மத்திய அரசாங்க விருது’ அளிக்கப்பட்டதில் உடன்பாடில்லை. ஞானி உடனே எதிர்ப் புத் தெரிவித்தார் என ஞாபகம். நான் என்னுடைய ‘இந்திய மொழிகள்’ என்ற நூலில் தெரிவித்த கருத்தைச் சொல்லிச் சற்றே ஆறுதல டைகிறேன். “ஆயிரம் ஆண்டுப் பழமைதான் செம்மொழித் தன்மைக்குக் காரணம் என்றால் பல மொழிகள் தமிழோடு போட்டிக்கு வந்துவிடும். நியாயமாகவே ஆயிரம் ஆண்டு வரலாறு உடைய தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் எங்களுக்கும் செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று கேட்கக்கூடும். இறுதியில் செம்மொழி என்பதற்கான அர்த்தமே அபத்தமாகிவிடும்” (ப.136) என்று அந்நூலில் ஆறாண்டுகளுக்கு முன் எழுதினேன். அக்கூற்று இப்போது பலித்து விட்டதா இல்லையா?

சுமார் 40-45 ஆண்டுக்குமுன் தி.மு.க. என்னை தீவிரமாக பாதித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது செம்மொழி மாநாட்டைக் கூட்டுபவர் வசனம் எழுதிய ‘அவன் பித்தனா’ என்ற திரைப்படத்தைப் பார்த்த ஞாபகம். அதில் கடைசியாகக் கதாநாயகர், இலட்சிய நடிகர் இராசேந்திரன், ‘இன்னின்னவற்றையெல்லாம் இலட்சியத்திற்காக, பொது நன் மைக்காகச் செய்தேன், நான் பித்தனா’ என்று அடுக்கிக் கொண்டே போய், ‘அட பைத்தியக்கார உலகமே’ என்று முடிப்பார். இன்று அந்த வசனகர்த்தா தமது வசனத்தை மறுபடியும் கண்டிப்பாக மீண்டும் படித்துப்பார்க்க வேண்டும். எவைஎவை யெல்லாம் சமூக அநீதி என்று அவரால் கண்டிக்கப் பட்டனவோ அவையெல்லாம் இன்று அவராலே மிகத் திருத்தமாகச் செய்யப்பட்டுவிட்டன. அவர் தாம் பித்தரல்ல, தமிழ்மக்கள்தான் பைத்தியங் கள் என்று நிறுவுவதில் உலகளாவிய வெற்றி கண்டுவிட்டார். இதைத்தான் காலத்தின் கோலம் என்பதா? (1914-பின் குறிப்பு: அவருக்குப் பின் வந்தவர் தமிழ் மக்களை இன்னும் அதிக பைத்தியக்காரர்கள் ஆக்குவதில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது.)

இதை இங்கே நான் நினைக்கக் காரணம், இப்போதைய பின்னணி மட்டுமல்ல. நம் தமிழ்த்திரைப்படங்கள் ஒரு போதும் திரைப்படங்களாக இருந்ததில்லை. பழங்காலத்தில் அவற்றில் சில இலக்கிய வெளிப்பாடுகளாக இருந்தன. இலக்கியம் என்ற தலைப்பு அவற்றில் ஒன்றை நினைக்கத் தூண்டியது-அவ்வளவுதான். மற்றப்படி, செம்மொழி மாநாட்டின் வன்மை மென்மை பற்றித் ஞானி விமர்சித்த சிந்தனைப்பகுதிகள், ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர்களின் கருத்துரைகள் ஆகியவை பொருத்தமே.

இதுவரை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஏழு மாநாடுகள் நடந்துள்ளன. இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு 1968இல் நான் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது. எனது ஊரான வேலூருக்குச் சென்னை வெகுதொலைவில் இல்லை. அதை வேடிக்கை பார்க்கப்போனேன். பல தமிழ் அறிஞர்களை தூரத்திலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேளிக்கைகளையும் சிலை திறப்புகளையும் பார்க்கும் பாக்கியமும்கூட. அடுத்தடுத்த மாநாடுகள் நிகழ்ந்தபோது நான் தமிழ் ஆசிரியனாகிவிட்டபோதிலும் ஒன்றிலும் நான் பங்கேற்றதில்லை. ஆறாம் மாநாடு மதுரையில் நடந்தபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு சென்றோம். அப்போதுதான் அறிஞர் எஸ் ஆர் கே, கைலாசபதி, சிவத்தம்பி, கவிஞர் அக்னிபுத்திரன் போன்றோரை முதன்முதல் சந்தித்தேன். ஏழாம் மாநாடு நினைவில் புகவேயில்லை. எட்டு பெரும் வெறுப்பை உண்டாக்கியிருந்தது. விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கையில் இப்போது நிகழ்கிறது ஒன்பதாம் திருவிழா-செம்மொழி மாநாடு என்ற பெயரில். இதற்குத் தமிழ்மலர் 2010 போன்றதொரு எதிர்வினை தேவைதான்.]

இந்தத் தொகுப்புநூலை ஞானி நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். முதற் பகுதியில் அவருக்குப் பிடித்தமான தமிழியக்கம், தமிழ் நாகரிகம் பற்றிய சிந்தனைகள் அடங்கியிருக்கின்றன. அதில் 22 கட்டுரைகள் உள்ளன. பகுதி இரண்டில் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. மூன்றாம் பகுதியில் கவிதைகளும், நான்காம் பகுதியில் நூல்கள் அறிமுகமும் உள்ளன. இவற்றுடன் ஆர்வலர்கள் சிலரின் நினைவுக்குறிப்பு களும் உள்ளன. இம்மலரில் வெளிவந்துள்ள இலக்கியக் கட்டுரைகள் பற்றி மட்டும் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.

இலக்கியக் கட்டுரைகள் என்ற தொகுப்பில்,
1 தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் (மருதநாயகம்),
2 தொல்காப்பியம்-எடுத்துரைப்பியல் நோக்கு (பஞ்சாங்கம்),
3 அகப்பாட்டின் கவிதைக்கோட்பாடு (குளோரியா சுந்தரமதி),
4 அமைப்பியல்வழி சங்கப்பாடல்களை அணுகுதலின் தேவை (விஷ்ணுகுமா ரன்),
5 மரபியலும் சொருகியலும் (இரணியன்),
6 குறுந்தொகை ஆய்வுகள் இதுவரையும் இனியும் (அறவேந்தன்),
7 வெட்சியும் முல்லையும் (சிலம்பு நா. செல்வராசு),
8 கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை (மணியன்),
9 தமிழின் செவ்வியல் மரபுத்தொடர்ச்சி (நளினிதேவி),
10 புலம்பெயர் இலக்கியம் (பூரணச்சந்திரன்),
11 பின்காலனியப் புலப்பாடுகளும் மட்டுப்பாடும் (சபா. ஜெயராசா),
12 தமிழில் இரண்டு உலக நாவல்கள் (யமுனா இராசேந்திரன்),
13 நவீனத் தமிழ்த் திறனாய்வாளர்கள் (வேணுகோபால்),
14 தமிழ்ச் சிற்றிதழ்கள் 2009 (கோவைவாணன்),
15 ஞானியின் மாயக் கம்பளம் (செந்தமிழ்த் தேனீ)
ஆகிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் பற்றி மிகுதியாகப் பேசுகிறது. அவை பற்றி ஏழு கட்டுரைகள். நவீன இலக்கியம் பற்றி நான்கு கட்டுரைகள் உள்ளன. சிற்றிதழ்கள் பற்றி ஒன்றும், பொதுவான நோக்கில் ஒன்றும் உள்ளன.

{இறுதிக்கட்டுரையாக (15) அமைந்துள்ள ‘ஞானியின் மாயக்கம்பளம்’ என்பது இலக்கியக்கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட இயலாத ஒன்று. அது தன் அனுபவத்தைப் பேசும் கட்டுரை. படைப்பிலக்கியப் பாங்கில், பாராட்டு நோக்கில் அமைந்தது. கடைசியில் ஞானியை நெடியோனாகிய மாயக் கண்ணனின் அவதாரமாக்கி விடுகிறார் கட்டுரையாசிரியர் செந்தமிழ்த்தேனீ. கடவுளே இல்லை, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை என்றெல்லாம் கேள்வியெழுப்பிய ஞானியையே கடவுளாக்கி விசுவரூபம் எடுக்கவைத்தி ருப்பது அதிசயம்தான். ஆனால் ஞானியைக் கடவுளாக்குவதற்கு முன்பு நிச்சயமாகக் கார்ல் மார்க்ஸையும் இன்னும் பலரையும் கடவுளாக்கினால்தான் முடியும். செந்தமிழ்த் தேனீ போன்றவர்கள் பலர் இருந்தால் எதிர்காலத்தில் கார்ல் மார்க்ஸுக்கும் ஊருக்கு ஊர் கோயில் தென்படலாம்.}

(14) தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிக் கோவைவாணன் எழுதியிருப்பது கட்டுரையல்ல. சிறு நினைவுக்குறிப்பு. ஏறத்தாழ அறுபத்தைந்து வயதுள்ள யாவருக்கும் குறைந்தது ‘எழுத்து’ காலத்திலிருந்தேனும் சிற்றிதழ்களின் வரலாறு தெரியும். சிற்றிதழ்களின் வன்மை மென்மைகள் சாதனைகள் தோல்விகள் போன்றெல்லாம் ஆராய்ந்திருந்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் சிற்றிதழ்களுடனாவது ஒப்பிட்டுச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொதுவாகப் பிற கட்டுரைகள் தங்கள் இலக்கை எட்டியுள்ளன.

(9) நளினிதேவி சொல்லவருவதை மிகவும் கஷ்டப்பட்டு, கஷ்டப்படுத்திச் சொல்கிறார். இன்னும் எழுத்தில் எளிமை கூடவேண்டும். அவர் கூறும் சில விஷயங்கள் விவாதத் திற்குரியவை. சான்றாக, (ப.283) இளங்கோவடிகளைப் பற்றிப் பேசும்போது “அரசியல் பிழைத்தோருக்கு மக்கள் போராட்டம் மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்று தீர்வு கூறியுள்ளார் இளங்கோவடிகள்” எனவரும் பகுதியைக் காட்டலாம். பொதுவா கப் பெரியாரியத்தையும் சமதர்மத்தையும் வலியுறுத்தும் கட்டுரை.

(11) சபா. ஜெயராசாவின் கட்டுரையிலும் விஷயம் போதாது. கட்டுரை முடிவுபெறவே இல்லை என்று அதன் வடிவம் காட்டுகிறது. இன்னும் நிறையச் சொல்லக்கூடிய தலைப்பு அது. குறிப்பாக காயத்ரி ஸ்பீவக்கின் முறையியல் பற்றி நிறைய விமரிச னங்கள் இன்று எழுந்துள்ளன.

(5) ‘மரபியலும் சொருகியலும்’ போன்ற கட்டுரைகள் இன்று தேவைதானா? தொல்காப்பியத்தில் இடைச்செருகல் உள்ளது என்ற கருத்து ஏறத்தாழ 1920-30களில் முன்வைக்கப்பட்டது. உண்மையிருப்பினும் இந்தக்கருத்தை எத்தனைகாலம் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? ஏற்கெனவே கிடைக்கும் சான்றுகள் தெளிவற்ற நிலையில், தொல்காப்பியத்தில் இடைச்செருகல் இருப்பதை மூலப்பிரதித் திறனாய்வு மூலம் மட்டுமே உறுதிப்படுத்தமுடியும். புதிய ஓலைச்சுவடிகள் கிடைக்காத நிலையில் இது இயலாதது. பொதுநிலையில்-நமது தமிழ்ஆர்வ மிகுதியினால், மரபியலில் இடைச்செருகல் உண்டு என நாம் ஏற்றாலும், அயல்நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற இடங்களிலிருந்தும் வாசிப்போர் ஏற்கமாட்டார்கள். மீண்டும் மீண்டும் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில்தான் இது முடிவடையும்.

(8) கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை-அல்ல, கபிலர் அகவல் தரும் சாதிஎதிர்ப்புச் சிந்தனை என்று தலைப்பு அமைந்திருக்கவேண்டும். மணியன் எழுதிய கட்டுரையில் கபிலர் அகவல் மூலத்தையும் தந்து தமதுநோக்கை வெளிப்படுத்தியுள்ளார். அது மிகப் பிற்கால நூல். ஆனால் சாதி எதிர்ப்பைத் தெளிவாக முன்வைக்கும் நூல். இப் பாட்டைக் கூறுபவர் எவர் என்னும் கேள்வி சிந்திக்கத்தக்கது.

(10) புலம்பெயர் இலக்கியம் பற்றிய சிந்தனை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் ஆழமாகத் தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்படவில்லை. எனது கட்டுரை இத்துறை பற்றிய ஓர் அறிமுகமாக அமைந்திருக்கிறது. புலம்பெயர் இலக்கியம் பற்றி விவாதிக்க நிறைய மொழிபெயர்ப்புகள் நம்மிடையே தேவை. இலங்கையைச்சேர்ந்த சிவானந்தனின் கீலீமீஸீ னீமீனீஷீக்ஷீஹ் பீவீமீs நாவலையும்கூட நாம் ஆங்கிலத்தில்தான் வாசிக்கவேண்டியிருக்கிறது. எண்பதுகளின் ஈழப்போராட்டம் பற்றிய மிக முக்கியமான நாவல் அது.

[தமிழ் ஆய்வின் குறைபாடுகள் இத்தொகுப்பிலும் நன்றாகவே வெளிப்படுகின்றன:
நன்கு வாசிக்காமலே பொதுநோக்கில் கட்டுரை எழுதுதல்,
தரவுகளைச் சரிவரத் தராமை,
தகவற்பிழைகள்,
குழுமனப்பான்மையோடு சிலரை மட்டும் மேற்கோள் காட்டுதலும் வலியுறுத்தலும், முன்னரே ஒரு துறையில் எழுதப்பட்டவற்றை மறந்து இன்று எழுதப்படுவனவற்றைப் புதிதாகச் சொல்கிறது எனப் பாராட்டுதல்,
அவசரக்கோலத்தில் போதிய தரவுகளின்றி எழுதுதல்,
அதிகமாக எழுதி வெளியிட்டு அங்கீகாரம் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுதல்
எனப் பல குறைகள் தமிழ்ச் சூழலில் உள்ளன. இப்படி எழுதுபவர்களிலும் சிலர் என் மாணவர்கள், நண்பர்கள், மதிப்புக்குரியவர்கள். ஆனால் ஆய்வு என்பதன் புறநோக்கு அடிப்படையை அவர்கள் மறந்து விடுகிறார்களே என்பது வேதனைப்படுத்துகிறது.
இலக்கியம் படிப்பவனுக்குப் பரந்த வாசிப்பு இல்லாமல் இருக்கலாம். அது குறையல்ல. விமரிசகனுக்குப் பரந்த வாசிப்பு தேவையெனினும் தான் எடுத்துக்கொண்ட இலக் கியம் பற்றிய அறிவே மிகுதியாக இருக்கலாம். அதுவும் தவறல்ல. ஆனால் ஆராய்ச்சித் துறையில் வருபவன், தனக்கு முன் அத்துறையில் என்ன சாதனைகள் நிகழ்ந்துள்ளன, என்ன என்ன கூறப்பட்டுள்ளன என்பனவற்றை முற்றிலும் நன்கு வாசித்தறிந்த பின் னரே ஆய்வில் ஈடுபட முடியும். இல்லாவிட்டால் ஆய்வுகளே பயனற்றுப் போய்விடும். தமிழ்ச்சூழலில் பெருமளவு இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.]

(13) வேணுகோபாலின் கட்டுரை முதலில் வரலாற்றுப் பாங்கிலும் பின்னர் ஞானி பற்றிய பகுதிக்கு வரும்போது முற்றிலும் புகழ்பாடும் நோக்கிலும் அமைந்துள்ளது. அப்பகுதியைக் குறைத்திருக்கலாம். அல்லது வன்மை மென்மைகளைப் பேசியிருக்க லாம். இந்த மலர் ஞானிக்குப் பாராட்டு மலர் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பெரிய மாநாடு (செம்மொழித் தமிழ் மாநாடு) நிகழப்போகும் சூழலில் அதற்கு நியாயமான, அறிவார்த்தமான எதிர்வினை என்றே கருதுகிறேன்.

(2 & 3) பஞ்சாங்கம், குளோறியா சுந்தரமதி ஆகியோரின் கட்டுரைகள் நன்கு அமைந்திருப்பினும் முன்னர் தங்களால் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்ட கருத்து களையே மீண்டும் கூறியிருக்கிறார்கள். சுந்தரமதி புதியதாக எதையும் கூறவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இன்னும் பலநோக்குகளில் ஆராயவேண்டும் என்பதே கட்டுரை கூறவிரும்புவது என்று முடித்துவிடுகிறார். பஞ்சாங்கம் தொல்காப் பியக் கருத்துகள் சிலவற்றை அமைப்பிய, குறியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

(6) அறவேந்தனின் கட்டுரை இன்னும் ஆழமாக அமைந்திருக்கலாம். குறுந்தொகை ஆய்வில் இதுவரை வெளிவந்த நூல்கள், நல்ல கட்டுரைகள் ஆகியவற்றைப் பட்டிய லிட்டுக் கூறியிருந்தால் சிறப்பு. பின்வருவோர்க்கு-குறிப்பாக ஆய்வு மாணவர்களுக் குப் பயன்படக்கூடியதாக அமைந்திருக்கும். குறுந்தொகையின் ஈற்றடிகள் போன்ற என்னுடைய முன்னோடியான கட்டுரையை அவர் குறிப்பிடவில்லை. அவர் பாராட் டும் பாலசுப்பிரமணியன் நூலின் கருத்துகளும், தலைப்பும்கூட (கட்டுடைத்துக் கோர்த் தல்) எனது பழையதொரு நூலின் தலைப்பை (கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும்) ஒட்டியிருக்கிறது என்பதையும் கூறியிருக்கலாம். வரலாற்று ஆய்வைப் பற்றியே (மௌரியர்/பாடலிபுத்திரம்) இறுதியில் பேசியுள்ளார். அதனை எத்தனையோ அறிஞர் கள் செய்திருக்கிறார்கள். சான்றாக, தமது ஆய்வேட்டில் அறிஞர் பே.க. வேலாயுதம், நந்தர் காலத்தின்பின் மௌரியர் காலத்தில் அமைந்த தமிழக மூவேந்தர் கூட்டணி, அக்கூட்டணி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் நூற்றாண்டு நிலைத்திருந்த தன்மை, பின்னர் அது வலுவிழந்தமைக்கான காரணங்கள் என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்திருக் கிறார். ஏறத்தாழ சங்ககாலத்தின் வரலாற்றைச் சிறப்பாகக் கட்டமைத்துக் காட்டியவர் களில் அவர் ஒருவர். ஆனால் பாவம், அவர் எந்தக்குழுவிலும் இல்லை என்பது அவர் செய்த பாவம்!

(7) பெருங்கற்படைக் காலத்தோடு சங்ககாலத்தை இணைத்துப்பார்க்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது. சிலம்பு நா. செல்வராசு ‘வெட்சியும் முல்லையும்-பெருங்கற்படைக் கால இலக்கிய மரபுகள்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். வெட்சியோ முல்லை யோ குறிஞ்சியோ கரந்தையோ-எதுவாயினும் இவை தொல்காப்பியரால் உண்டாக்கப் பட்ட-அல்லது அவருடைய காலத்திற்கு முன்னரே உருவாகியிருந்த இலக்கிய மரபுகள். இவை காலத்தால் பிற்பட்டவை. தமிழ்மொழி மிகச் செம்மையடைந்த பிறகு, தமிழர் கள் நன்கு நாகரிகம் பெற்ற பிறகே உருவானவை. பெருங்கற்படைக்காலம் (மெகாலிதிக்) என்பது காட்டுமனிதர்களுடைய காலம். நாகரிகம் பெறாத காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருங்கற்காலம் கி.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் முடிந்ததாகக் கருதலாம். அடுத்த பத்து நூற்றாண்டுகளில் தமிழனும் தமிழும் செம்மை பெற்றதன் விளைவே தொல்காப்பியமும் சங்கஇலக்கியமும் என்பது எனது கருத்து. செல்வராசு கூறுவதுபோல கி.மு.9க்கும் கி.மு.3க்கும் (sic-கி.மு. 9ஆம் நூற்றாண்டுக் கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பதே இப்படிக் குறிப்பிடப் பட்டிருக்கிறது)-வெட்சி முல்லைக் காலமாக ஏற்க இயலவில்லை. நான் வரலாற்ற றிஞன் அல்ல; அதனால் இதை அறிஞர்களின் ஆய்வுக்காக விட்டு விட்டு மேற்செல்கிறேன்.

(1, 4 & 12) இப்போது மூன்று கட்டுரைகளே-மருதநாயகம், விஷ்ணுகுமாரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடையவை எஞ்சியிருக்கின்றன. இவை மூன்றும் இந்நூலில் சிறந்தவை.

(4) விஷ்ணுகுமாரனின் கட்டுரை ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுடையது. அமைப்பியத்தை ஒரு தத்துவமாகவும் கற்கமுடியும். ஒரு ஆய்வுவழிமுறையாகவும் காணமுடியும். இங்கு அமைப்புவழி ஆய்வினைப் புறநானலூற்றினை ஆராயப் பயன் படுத்திக் காட்டியிருக்கிறார். அந்நூலின் தொடர்களை வைத்துப் பதினாறு அமைப்பு களுக்குள் அடக்கலாம் என்கிறார். இம்மாதிரி அமைப்புசார் ஆய்வுகளை ஏ,கே, இராமானுஜன், குளோறியா சுந்தரமதி, ஆலிஸ், (இவர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்றோர் செய்துகாட்டியுள்ளனர். சங்கப்பாக்களைக் கட்டுடைப்போர் எதிர்நிலையிலும் செய்துள்ளனர். இதனை ஏற்கெனவே நாட்டார் வழக்காற்றியலில் பாளையங்கோட்டை சேவியர் கல்லலூரியினர் செய்து காட்டியுள் ளனர். பொதுவாகத் தத்துவநோக்கில் அணுகி வன்மை மென்மை என்று செல்லாமல் ஓர் ஆய்வு நெறிமுறையாக அவர் காட்டியிருப்பதை நமது மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும். ஆய்வுக்குத் தெளிவானதோர் வழிமுறை சொல்ல வேண்டிய அவசியம் இன்று மாணவர்களிடையே உண்டு. சங்க இலக்கிய ஆய்வினை இவ்வாறு பலவழிகளில் முன்னெடுத்துச் செல்லலாம்.

(1) தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் கட்டுரை மதிப்பிற்குரிய பேரா சிரியர் மருதநாயகம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதனை நன்கு கற்றுணர மிகப் பரந்த மேற்கத்தியத் திறனாய்வு வாசிப்பும் ஆழ்ந்த தொல்காப்பிய அறிவும் தேவை. ஒரு பருந்துப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல். அதன் முதல் ஐந்து இயல் கள் எடுத்துரைப்பியல் பற்றியவை. கடைசி நான்கு இயல்களில் விடுபட்ட சில அழகி யல் கோட்பாடுகளையும் மரபையும் பற்றிச் சொல்கிறார்.

செவ்வியம், ரொமாண்டிசிசம் என்னும் உலகளாவிய இருவகை மரபுகளில் தொல் காப்பியம் செவ்வியமரபைச் சார்ந்தது என்பதை முதலில் எடுத்துக்காட்டுகிறார் மருதநாயகம். இது பாராட்டுக்குரியது. தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தி யது என்பது ஆசிரியரின் கருத்து. தொல்காப்பியம் சங்ககாலத்தை ஒட்டி அதன் இறுதியில் எழுந்தது என்று வைத்துக்கொண்டாலும், இக்கருத்து தேவையான ஒன்றே. இது கைலாசபதி போன்றோரின் கருத்துக்கு எதிரானது. கைலாசபதி The Tamil Heroic Poetryயில் சங்க இலக்கியம் வாய்மொழி மரபுசார்ந்த செவ்வியநிலை பெறாத வெளிப்பாடு என்றே கருத்துரைத்திருக்கிறார். சங்கஇலக்கியத்தை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான பாக்களின் தொகுப்பாகக் காணும் நாம், அதுவரையில் தமிழ்மரபு வெறும் வாய்மொழி-பாண மரபாகவே இருந்தது என்று நினைப்பது சாத்தியமில்லை. தொல்காப்பியத்தில் செவ்வியற்கூறுகள் உள்ளன என்பது தமிழின் பழஞ்செம்மை நிலையை உணர உதவும்.

பிறகு டி.எஸ்.எலியட் கூறிய ‘அப்ஜெக்டிவ் காரலேடிவ்’ என்ற வெளிப்பாட்டு முறை சங்கப்பாக்களில் சிறப்புற அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனை சங்கப்பாக்கள் உதாரணவழி விளக்கியிருப்பின் நன்றாக இருந்திருக்கும். (இது பற்றி முதன்முதலில் எழுத்து இதழிலேயே எழுதிவிளக்கியவர் சி.சு. செல்லப்பா).

பிறகு பிரவுனிங்கின் நாடகத்தனிமொழி பற்றிச் சொல்லிவிட்டுக் கவிஞனின் ஆளுமை பற்றிப் பேசமுனையும்போது டி.எஸ். எலியட் அக்கருத்தைப் பெறக் காரணமாக இருந்த எஃப். எச். பிராட்லிக்கும் அவரது உடனடி அனுபவம் என்னும் அகவய மெய் யியற் கருத்துக்கும் சென்றுவிடுகிறார்.
தொல்காப்பியம் குறிப்பிடும் சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாத கவிதை முறைக்கு ஒப்பேயில்லை. சங்கப்பாக்களின் நாடகத்தன்மை வாய்ந்த படைப்பு முறையை பிரவு னிங்கின் ஃப்ரா லிப்போ லிப்பிக்கும் எலியட்டின் ப்ரூஃப்ராக்கிற்கும் ஒப்பிட்டுப் பாராட்டுவது சிறப்பு. பிரவுனிங்கின், எலியட்டின் பாக்கள் பெயர்சுட்டப்பட்ட தனி மனிதனின் நாடகப்பாங்கான வெளிப்பாடுகள். ஆனால் சங்கப்பாக்கள் இவற்றிற்குக் காலத்தில் எவ்வளவு முந்தியவை? பிரவுனிங் படைத்த சகோதரர் லிப்பி பற்றிப் பின்னரும் பேசியிருக்கலாம்-கலைபற்றிய பிரச்சினைகளுக்காக (கவிதை-அறமுரைத் தலுக்கா, மகிழ்வூட்டலுக்கா என்பதைப் பற்றிப் பேசும்போது) இக்கவிதைக் கருத்தை விவாதித்திருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும்.

அகப் பாக்கள் அகவய அனுபவங்களைச் சித்திரிப்பவை என்பதைவிட ஒரு மரபைக் கைவிடாமல் போற்றுபவை என்பதுதான் சிறப்பு. அகவய அனுபவங்கள் நோக்கமாக இருந்திருப்பின் காதல் கொள்ளும் சமயம்தொடங்கி அதிகபட்சமாக முதல்குழந்தை யைச் செவிலி காணவரும் காலத்தோடு ஆண்-பெண் அனுபவங்களை வரையறைப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
தமிழ்க் கவிஞர்கள் எளிய இயற்கைக் காட்சியுருக்களைப் பயன்படுத்த வல்லவர்கள் என்பது தெளிவு. அதனை விளக்க, பழங்கால ஐரோப்பிய வழக்கமான தீமீணீக்ஷீதீணீவீtவீஸீரீ என்பதை ஷேக்ஸ்பியர் சிறப்பாகக் கையாண்டுள்ளதனோடு ஒப்பிட்டுக்காட்டுகிறார். கடைசியாகக் கவிதை எவ்வாறிருக்க வேண்டும் என்பது பற்றியும் கவிதைமொழி பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ள அளவைகள் ரிச்சர்ட்ஸ் தொடங்கி அண்மைக் காலப் புதுத்திறனாய்வாளர்கள் கூறியுள்ளவற்றிற்கு ஒத்துச் செல்லுதலை ஆசிரியர் எடுத்துக் காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளது.
புதுத் திறனாய்வாளர்களின் ஆய்வுமுறைக்கு ஒத்த “நோக்கு” என்ற கருத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி முதன்முதலில் அழுத்திக் கூறியவர் தமிழண்ணல் என்பது என் ஞாபகம்.

மருதநாயகத்தின் கட்டுரையின் கருத்துகள் பல்வேறு சமயங்களில் பலரால் முன்னரே சொல்லப்பட்டவை என்றாலும், தொடர்ச்சியான நோக்கில் தொல்காப்பியத்தின் பல்வேறு கூறுகளையும் விட்டுவிடாமல் அவை தொடர்பான ஆங்கிலத் திறனாய்வுக் கருத்துகளை ஒப்பிட்டுச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளது.
போகும் போக்கில் சங்க இலக்கியத் தலைவர்கள் யாவரும் வீரர்கள், தலைவியர் யாவரும் அழகியர் என்று ஒரு கருத்தைச் சொல்கின்றார் ஆசிரியர். சங்க இலக்கியத்தைப் படித்தபோது இவ்வாறான ஓர் உணர்வு எனக்கு ஏற்படவில்லை. தலைவன் வீரனோ, வியாபாரம் செய்பவனோ-தலைவி அழகானவளோ அழகற்றவளோ அவர் களுக்கிடையிலான அன்பு வாழ்க்கைதான் அதில் பேசப்படுகிறது. பெரும்பாலான தலைவன் தலைவியர் மேல்தர வாழ்க்கையைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். மீண்டும் இப்பண்பும் செவ்வியத்தன்மைக்கே இட்டுச் செல்லக்கூடியது.
(ஓர் அடைப்புக்குறி இடப்படாமை (ப.209) பொருள்மயக்கத்தைத் தோற்றுவித்து விடுகி றது. The Well Wrought Urn  என்ற தொடர் அடைப்பில் இருக்கவேண்டும். இல்லை எனில் அதுஒரு கவிதையின் பெயர் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.)

ஆகவே கடைசிநோக்கில் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கே இந்தக் கட்டுரை பயன் தருவதாகிறது. ஆங்கிலம் அறியாதவர்களுக்கும் பயன்தருமாறு எழுதினால் நலம் பயக் கும். உதாரணமாக கிளெந்த் புரூக்சின் ‘தி வெல்ராட் அர்ன்’ நூலையோ (குறிப்பாக paradox கவிதையின் உயிர் என்று விளக்கும் அதன் முதல் இயல் முக்கியமானது), நீண்ட கவிதை என்பது இருக்கவே இயலாது என்று வாதிடும் எட்கர் ஆலன்போ-வின் ‘தி ஃபிலாசஃபி அவ் காம்போசிஷன்’ என்னும் கட்டுரையையோ மொழிபெயர்த்து அளிப்பது நம் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.

மேலும் சில அடிக்குறிப்புகள் தந்திருந்தால் ஆய்வாளர்க்கும் மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். உதாரணமாக “புளூம்பீல்டு, சாம்ஸ்கி போன்றோரின் கவனத்தை தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் ஓரளவு கவர்ந்தன” என்று கூறுகின்றார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில் என்ற குறிப்பைத் தருவது நன்று. அதேபோலத் தமிழில் முதன்மையாக எழுதுவோரின் நூல் தலைப்புகளை ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்புகளாகக் குறிப்பிடாமல் (வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல் போன்றோரின் நூல்கள்) தமிழ்த் தலைப்புகளிலேயே குறிப்பிட்டிருக்கலாம் (The Tamil Concept of Love என்பதைவிடத் ‘தமிழ்க்காதல்’ நூல் பலருக்கும் அறிமுகம்).

மருதநாயகத்தின் கட்டுரை எழுத்துப்பெயர்ப்பிலும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. பிரா லிபோ லிபி (Fra Lippo Lippi), புரூச்சு (Brooks), சான்சன் (Johnson), ரிச்சர்ட்சு (Richards) போன்ற எழுத்துப்பெயர்ப்புகள் சற்றே சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. டகரத்திற்குப் பக்கத்தில் வரும் சகரத்திற்கு ஒலிப்பற்ற ஒலியே உண்டு. அதை ஸகரமாக ஒலிக்கஇயலாது. (Richards in English becomes Richardchu in Tamil). (குறிப்பாக சுயேச்சை-சுய+இச்சை போன்ற சொற்களை யெல்லாம் ‘சுயேட்சை’ என எழுதுகின்ற தற்கால நிலையையும் இன்று கருதுகிறேன்.) அறிஞர்கள் கூடி தமிழில் ஒலிபெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஓர் ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும். இப்படிப் பொதுநிலையில் செய்யவேண்டியவை எத்தனையோ உள்ளன. இவற்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களோ, அடுத்தபத்துநாட்களில் நிகழவிருப்பது போன்ற அறிஞர்கள் கூடும் மாநாடுகளும்தான் செய்ய இயலும். மாறாக இவை என்ன செய்கின்றன?

(12) கடைசியாக யமுனா ராஜேந்திரனின் கட்டுரை. ‘வரலாறும் கருத்துலகமும்-தமிழில் இரண்டு உலக நாவல்கள்’ என்பது அவரது தலைப்பு. இன்று தமிழிலும் பிறநாட்டு வாழ்க்கையை மையமாகக்கொண்டு நாவல்கள் என எழுதப்படுகின்றன. தமிழ்நாட்டிலி ருந்து போலந்திற்கு ஆசிரியப் பணிக்கெனச் சென்ற இந்திரா பார்த்தசாரதியும் தமிழவ னும் அப்படிப்பட்ட இரண்டு நாவல்களை (ஏசுவின் தோழர்கள், வார்ஸாவில் ஒரு கடவுள்) எழுதியிருக்கிறார்கள். இரண்டிற்கும் கால இடைவெளி இருபதாண்டுகள். முதல் நாவல் 1987இலும், அடுத்தது 2007இலும் வெளியாகியிருக்கின்றன. இரண்டிற் கும் இடைப்பட்ட காலவெளியில் சோவியத் அமைப்பு வீழ்ந்து விட்டது. போலந்து கம்யூனிசத்திலிருந்து விடுபட்டு ஐரோப்பியக் கூட்டணியில் சேர்ந்து விட்டது.

இந்த இரண்டு நாவல்களையும் பற்றிக் கருத்துரைக்கவரும் யமுனா ராஜேந்திரன், வேறு ஐந்து தென்னாசிய நாவல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறார். இவை, அருந்ததிராய் எழுதிய God of  Small Things, பங்கஜ்மிஸ்ரா எழுதிய The Romantics, அரவிந்த அடிகா எழுதிய The White Tiger, மைக்கேல் ஒண்டாட்ஜி எழுதிய Anil’s Ghost, சிவானந்தன் எழுதிய When Memory Dies ஆகிய நாவல்கள். சுருக்கமாகக் கூறினால், இவற்றுள் அருந்ததி ராயின் நாவலும், சிவானந்தனின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்நிறுத்தி எழுதப்படாதவை, கலைத்தன்மை கூடியவை. மைக்கேல் ஒண்டாட்ஜியின் நாவலும் ஓரளவு அப்படிப்பட்டதுதான். அடிகாவின் நாவலும் பங்கஜ் மிஸ்ராவின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்னிறுத்தி எழுதப்பட்டவை, கலைத்தன்மை குறைந்தவை என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு.

அருந்ததி ராயின் God of Small Things, கேரள சிரியக் கிறித்துவ வகுப்புக்குடும்பம் ஒன்றின் அதிஉயர் சாதி ஒழுக்கம், அதில் சாதிக்கலப்பு ஏற்படுதல், அதன் காரணமாக அடித்தட்டு மக்கள் கொல்லப்படுவது, அக்குடும்பத்தில் ஏற்படும் தளர்ச்சி, பின்வரும் தலைமுறைகள்-குறிப்பாக இரட்டையர் இருவர் வாழ்க்கை நாசமாகிப்போவது என்பதையெல்லாம் சித்திரிக்கிறது.

பங்கஜ் மிஸ்ரா எழுதிய நாவலில் கிராமத்தில் பிறந்த பிராமண இளைஞன், வாரா ணசியில் தன் வாழ்க்கையை நிறுவிக்கொள்ளமுற்படும்போது தற்செயலாக ஏற்படும் மேற்கத்திய மக்களின் தொடர்பு, அவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு, பின்னரும் அவன் நிலைபெறாமல் தன்வாழ்க்கையைத் தேடி அலைதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

அரவிந்த அடிகா எழுதிய நாவலில் ஒரு கீழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவன் பிழைப்பிற் காக தில்லிவந்து டிரைவராக வேலை செய்யும்போது தனது எஜமானனையே கொன்று விட்டு அவன் பணத்தைக் கவர்ந்து பெங்களூருக்கு வந்து ஒரு பெரு முதலாளி ஆகிவிடுகிறான். இந்தியாவுக்கு, பெங்களூருக்கு வரும் சீனப்பிரதமருக்குத் தன் வாழ்க்கையைக் கடிதமாக எழுதுகிறான்.

மைக்கேல் ஒண்டாட்ஜி சிங்களர். அவர் கதாபாத்திரங்களும் சிங்களர்களே. அனில் என்ற பெண்-நீச்சல் வீராங்கனை-புலம்பெயர்ந்து மேற்கில் வளர்ந்து ஈழத்திற்குத் தொல்பொருளாய்வாளராகத் திரும்புகிறாள். தற்செயலாக அவள் கண்டெடுக்கும் ஒரு எலும்புக்கூடு யாருடையது என்ற ஆராய்ச்சி அரசியல் தலைமையை பாதிக்கக் கூடியது என்பதனால் இடைஞ்சலுக்கு ஆளாகித் தன் நண்பனின் உதவியால் தப்பிச் செல்கிறாள். இதில் சிங்களருடைய நோக்கில் ஈழத்துப்போர் நோக்கப்படுகிறது.

சிவானந்தனின் நாவல் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் அவலத்தைப் பேசும் நாவல். அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை ஈழப்போராட்டம் இதன் பின்னணியாக அமைந்திருக்கிறது.

இந்த நாவல்கள் அனைத்திலும் மேற்கு-கிழக்கு வாழ்க்கை ஊடாட்டம் பிரதானம் பெறுகிறது. இன்று போலந்து நாவல்கள் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்படும் நிலையில், இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் ஆகியோரின் நாவல்கள் தமிழில் எழுதப் பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை என்றாலும் அவையும் ஐரோப்பாவில் பல மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

இவை இரண்டுமே சுய அனுபவம் இன்றி-போலந்து மக்களின், குறிப்பாக அவர்களில் அடித்தட்டு மக்களைப் பற்றிய நேரடி அனுபவம் இன்றி ஒரு பொதுப் பார்வை யில் எழுதப்பட்டதால் கலைத்தன்மை குறைந்து காணப்படுகின்றன என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு. இவற்றிலும் இந்திரா பார்த்தசாரதியின் நாவல், தமிழவனின் நாவலைவிடச் சற்றே மேலானது என்ற அளவில் அவருடைய மதிப்பீடு அமைந்துள் ளது. இதனைச் சற்றே இடைஞ்சலான மொழியில்-பற்பல விஷயங்களுக்கிடையே சொல்லி முடித்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவருடைய மதிப்பீடுகள் ஏற்புடை யவைதான்.

தமிழிலக்கியம் பற்றிய ஒரு முழுப்பார்வையை தமிழ்மலர் தொகுப்பிலுள்ள கட்டுரை கள் அளிக்கவில்லை. இடைக்கால இலக்கியங்களில் கபிலர் அகவல் தவிர ஏனைய வை பற்றிக் குறிப்புகள் கூடக் கிடையாது. குறிப்பாகக் காப்பியங்கள் பற்றியோ பக்தி இலக்கியம் பற்றியோ எந்தக் கட்டுரையும் இல்லை என்பது வருத்தம் தருவது. விமரிசனங்கள் அல்லது ஆய்வுரைகள் பாராட்டாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றி நுணுக்கமான கருத்தளிப்பு கள் உள்ளன. பிற சில இலக்கியப்பகுதிகள் தொடப்பட்டுள்ளன. நூல் அரங்கும், நினைவுக் குறிப்புகளும் வரலாற்று நோக்கில் எதிர்கால நோக்கர்களுக்கும், ஆய்வாளர் களுக்கும் பயன்படக்கூடியவை.