நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 2

kannaki-cooking
கேள்வி: தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பது அரசியல் சாராத இயக்கங்களால் முடியுமா?   செல்வன், சென்னை

பதில்:
 அரசியல் என்ற சொல்லின் அர்த்தத்தைக் குறுக்கிப் பார்ப்பதால் கேட்கப் படும் கேள்வி இது. எங்கே, எதில் அரசியல் இல்லை? இன்னொருவர் பண்பாடு நம் மீது சுமத்தப்படுவது அரசியல் செய்கை இல்லையா? அது என்ன கள்ளமற்ற, குழந்தைத்தனமான செயலா? ஆதிக்கத்துக்கான செயல்தானே?
அதுபோல அதிலிருந்து, நம் பண்பாட்டை நாம் மீட்டுருவாக்கம் செய்வது, காப்பாற்றுவது என்பதும் அரசியல் செய்கைதான். அதில் சந்தேகம் என்ன?
நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும், பேசும் எல்லாப் பேச்சுகளிலும் நுண்அரசியல் கலந்திருக்கிறது. நேரடி அரசியல் பங்கேற்பிலிருந்து வித்தியாசப்படுத்த, நுண்அரசியல் என்ற சொல் கையாளப்படுகிறது.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி என்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே. அதில் முக்கால்வாசி ஆங்கிலமும் கால்வாசித் தமிழும் ஒருவர் கலந்து பேசுகிறார் என்றால் அவரது இயல்பு, பின்னணி, நோக்கம் இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அவர் ஒரு பணக்காரராக, அல்லது உயர்மத்தியத் தர வகுப்பு சார்ந்தவராக இருப்பார். அவருக்குத் தமிழ் பற்றிப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது. ஏதோ கலப்புத் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவதோடு சரி. அதையும்கூட இப்போது பலர் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பேச்சு பழகவேண்டும், அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக வீட்டிலும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மொழித் தூய்மை பற்றியோ கலப்பு பற்றியோ கவலை கிடையாது. சுருக்க மாகச் சொன்னால் தமிழ்ப்பண்பாடு பற்றிக் கவலை கிடையாது. ஏதோ படித்தார்கள், நல்ல ஊதியம் வாங்கிப் பிழைக்கிறார்கள்- அவ்வளவுதான். ஆகவே தங்கள் பிள்ளைகளை அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்கமாட்டார்கள். அப்படிப் படித்தால் நல்ல வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாது அல்லவா? அவர்கள் ஊதிய உயர்வுக்கெல்லாம் போராட மாட்டார்கள். தாங்களே உயர் அதிகாரிகளாக இருப்பதால் இன்னும் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசியே முடித்துக்கொள்வார்கள்..

இத்தகைய மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் இவர்கள் தங்களோடு பழகுபவர்களுக்கும்-அவர்கள் கீழ்மத்தியத் தர வகுப்பினராக இருந்தாலும் பரப்புவார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா? இதை எப்படி ஒழிப்பீர்கள்? ஆகவே அரசியல் இயக்கங்களால் மட்டுமே நமது பண்பாட்டை மீட்க முடியும். வேண்டுமானால் நுண்அரசியலோடு நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறுங்கள். அதுவும் வெளிப்படையான அரசியலுக்குச் சில சம்பவங்கள் நிகழும்போது இட்டுச் சென்றுவிடும்தான். வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பெரியாரே அந்தந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அல்லவா?

கேள்வி: மதுரை மீது மாலிக் கபூரின்  படையெடுப்புக்குப் பிறகு சரண் அடைந்த வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் நிலை என்ன?  மதுரை பொற் குவியல்களை மாலிக் கபூர் கொள்ளை அடித்துச் சென்ற பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடு பஞ்சத்தில் இருந்து மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் (தமிழர்களின் தற்போதைய நிலை) தமிழர்கள் உயர முடியுமா? அதற்கு என்ன வழி? மௌ.வினோத் குமார்

பதில்- இந்தக் கேள்வி பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடியவரை பதில்சொல்ல முயற்சி செய்யலாம்.

மாலிக் காபூர் கொள்ளையடித்துச் சென்றபிறகு தமிழ்நாடு பாலைவன மாயிற்று. இன்னும் இரண்டு முறை- 1314இல் குஸ்ரூகான் என்பவன் படையெடுத்தான், 1323இல் உலூஸ்கான் படையெடுப்பு நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். உலூஸ்கான் பின்னால் முகமது பின் துக்ளக் ஆனான். அசன்ஷா என்பவனிடம் ஆட்சியை விட்டுச் சென்றான். முஸ்லிம்கள்தான் மதுரையில் 1344வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள், இருந்தாலும் நான்காம் சுந்தரபாண்டியன் 1320 வரையிலும், நான்காம் வீரபாண்டியன் 1347 வரையிலும் உயிரோடிருந்தார்கள் என்று தெரிகிறது. இதுபற்றித் தேவையானால், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற நூலைப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் பாண்டிய பரம்பரையினர் தலைக்கோட்டைப் போர் வரை (கி.பி.1565) வாழ்ந்திருந்தார்கள், விசயநகரப் பேரரசுக்குச் சிற்றரசர்களாக இருந் தார்கள் என்று தெரிகிறது. (உங்களுக்குத் தேவைப்பட்டால் 1309 முதல் 1565 வரை குறுநில மன்னர்களாக இருந்த பாண்டிய மன்னர்களின் பட்டியலைத் தர இயலும்.)

1336இல் விசயநகரப் பேரரசு ஆந்திரத்தில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குள் ளாகவே முதலாம் புக்கன் மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். பிறகு தமிழகத்தில் விசயநகர ஆட்சிதான். அவன் படையெடுப்பு பற்றி அவன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் நன்றாக விளக்குகிறது.

பாளையக்காரர்களான கட்டபொம்மு போன்றவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் பெயரில் பாண்டியன் இருந்தாலும் அவர்கள் பாண்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

கடைசியாக, இன்றைய தமிழர்கள் முன்னேறுவதற்கு வழிகேட்கிறீர்கள். மொழியுணர்வும் இனவுணர்வும் எந்த மக்களுக்கும் இன்றியமையாதவை. அவற்றை வளர்ப்பது ஒன்றுதான் நாம் எதிர்காலத்தில் இருப்பதற்கான ஒரே வழி. இல்லையென்றாலும் இருக்கமுடியும் -எந்த அடையாளமும் அற்றவர்களாக.

மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் நம்மைவிட தேர்ந்த மொழி யுணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் காணமுடியும். அவர்கள் இனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் கட்சிகளை, பிற பிரிவினைகளை மறந்து ஒன்றாக நிற்கிறார்கள். தமிழர்கள்?  மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் கூடி நம் இனத்தவரைக் கொலைசெய்ததை வேடிக்கை பார்த்த மாபெரும் இனமல்லவா நாம்? அந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இன்றுவரை தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதே, அதற்கு ஆதரவாக இங்கே ஊடகங்கள் இருக்கின்றனவே,  நமக்கு இன உணர்வு இருக்கிறதா?

கேள்வி: நிலம் வகைப்படுத்தலும், பிரிவுகளும் மற்ற எந்த நாகரிகங்களிலும் இல்லாத வகையில் தமிழர்கள் பகுத்தது வியப்பாக உள்ளது. அரப்பா நாகரிகத்தின் தொடராக நம் இனத்தை அடையாளம் காண எந்த வகையான தொன்மச் சான்றுகள் நம்மிடம் உள்ளன? மொழி தவிர்த்து வாழ்வியல் முறைகளில் ஒப்புமை உள்ளதா என்பதுதான் கேள்வியின் நோக்கம். கோவிந்தராஜ், அம்பத்தூர்

பதில்: இவை இரண்டு தனித்தனிக் கேள்விகள். நிலத்தைத் திணைகள் அடிப்படையில் வகைப்படுத்தலும் அதிலுள்ள துறைகளும் வேறு எந்த நாகரிகத் திலும் காணப்படாத, தமிழர்களுக்கே உரிய தனித்த முறை. இது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்த திணை துறைப் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. சங்க இலக்கியம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நு£ற்றாண்டு அளவிலிருந்து எழுதப்பட்டது என்பதால், அதற்கு முன்னரே இந்த முறை உருவாகியிருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் நாம் காண்பது சங்க இலக்கியம் என்றால், அது மிகச் செம்மையான கூறுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செம்மை அப்போதுதான் தோன்றுகின்ற இலக்கியத்திற்கு இருக்கமுடியாது. ஆகவே சங்க இலக்கியம் தோன்றுவதற்குக் குறைந்தது ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமையாவது தமிழ்மொழிக்கும் இலக்கியங்களுக்கும் இருந்திருக்கவேண்டும் என்பது நியாயமான யூகம். அதாவது கி.மு. 1200 அளவுக்கு நியாயமாகத் தமிழ் மொழியின் பழமை யைக் கொண்டு செல்ல இயலும்.

கி.மு. 1500 அளவில் வடமேற்கு ஐரோப்பா-இன்றைய காகசஸ்-யூரல் பகுதியிலி ருந்து ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. சிந்துவெளி நாகரி கத்தை ஆரியர்கள் அழித்தார்கள் என்று முன்னர் கூறினார்கள். இப்போது அந்தக் கருத்து மாறியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3000-2000 காலப் பகுதியைச் சேர்ந்தது. அது தட்பவெப்ப மாறுதல்களால் அழிந்ததாக இன்று கருதுகிறார்கள். இப்படிப் பார்த்தால், நாம் ஒரு கேள்விக்கு விடைகண்டாக வேண்டும்.

கி.மு. 2000 அளவில் மறைந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், கி.மு. 1000 அளவில் தோன்றிய தமிழர் நாகரிகத்திற்கும் எப்படித் தொடர்புப்படுத்துவது?

இப்படித் தொடர்பு படுத்துவதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இடைவெளி. இன்னொன்று ஆயிரம் மைல் இட வேறுபாடு.

இந்த இரண்டையும் மிகச் சரியாக நிரப்ப நம்மிடம் சான்றுகள் இல்லை. கி.மு. 1000க்கும் கி.மு. 2000க்குமான கால இடைவெளியும் வடக்கு-தெற்கு என்ற இட இடைவெளியும் நிரப்பப்படத் தக்க சான்றுகள் கிடைத்தால்-இதுவரை கிடைக்க வில்லை-நாம் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், தமிழ் நாகரிகம்தான் என்று அடித்துக்கூற முடியும். இல்லாதவரை சந்தேகம்தான்.

இந்த இடைவெளியைத்தான் வடநாட்டு இந்துவெறியர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆரியர் வருகை சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவோ பின்னால் என்ற போதிலும் அது ஆரிய நாகரிகமே என்று சான்று களையெல்லாம் திருத்தி வரலாறு எழுதுகின்றனர். (சான்றாக, சிந்துவெளி நாகரி கத்தில் பசு-எருது முத்திரைகள் உள்ளன. அவை இறைவனைப் போன்ற ஒருவர் அருகில் உள்ளன. அதனால் பசுபதி ஈசுவரருடைய முற்காலச் சித்திரிப்பு, திராவிடம் சார்ந்தது என்றார்கள். இந்துவெறியர்கள், அவற்றைக் குதிரை முத்தி ரைகளாகப் படம்வரைந்து அதை ஆரிய நாகரிகத்தினது என்று சித்திரிக்கின்றனர். குதிரைகள் ஆரிய நாகரிகத்தில் உண்டு. அஸ்வமேத யாகம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்?) அதனால் ஆரிய நாகரிகமே காலத்தினால் முந்தியது, அதன் தொடர்ச்சியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்-தமிழ் நாடு உட்பட-உள்ள நாகரிகம் என்று நிலைநாட்டுவது அவர்கள் நோக்கம். அவர்கள் இப்படிச்

செய்தது, இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இதற்கான இணையதளங்களில் இந்தச் சான்றழிப்புகளைக் காணலாம்.

இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வரலாம். தமிழர் திணை-துறைப் பகுப்புக்கு நேரடியான சான்றுத் தொடர்ச்சி சிந்துவெளிநாகரிகத்திலிருந்து கிடைக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தை நாம் சேர்ந்தவர்கள் என்றாலும் இல்லை என்றாலும், திணை-துறைப் பகுப்பு நமக்கே உரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

கேள்வி:  மார்ட்டின் வீலர் காலத்திற்குப் பின் தமிழகக் கரையோரம் மற்றும் கரைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு முடக்கப்பட்டது. இது தொடர்ந்திருக்கு மானால் நமது தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்குமல்லவா? பாண்டியன், மதுரை

பதில்: மார்ட்டின் வீலர் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்த நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், ரூபார், ராக்கிகடி, காளிபங்கன் முதலிய பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து குஜராத் வரை நீளும் நாகரிகப்பகுதி இது. இதை ஆரம்பித்து வைத்தவர் சர் ஜான் மார்ஷல். 1930-40களில், இந்தியா சுதந்திரம் பெறும்வரை அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருந்தவர் மார்ட்டிமர் வீலர். லோத்தல் இன்றும் குஜராத்தில் உள்ளது. மிச்சப் பகுதிகள் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் உள்ளன. 2010இல் சட்லெஜ் பகுதியில் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிர உருக்குச் சாலை (கி.மு.5000 அளவிலானது) மூழ்கிப்போயிற்று. இப்போது இந்து வெறியர்கள், ரிக்வேதத்தில் உள்ள நதிஸ்துதி சூக்தம் என்பது சிந்துவெளி நாகரி கத்தில் எழுதப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்ட்டிமர் வீலர்தான் சிந்துவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களை ஆராய்ந்து ஆரியர்கள் இந்த நாகரிகத்தை அழித்தவர்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்த அகழ்வா ராய்ச்சியின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதால் தொல்லியல் ஆய்வில் இந்தியர்களுக்கு ஆர்வம் குறைந்துபோயிற்று.

இந்தத் தொல்லியல் ஆய்வு தொடர்ந்திருக்குமானால் சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழ் நாகரிகத்தையும் இணைக்கும் சங்கிலிக்கான சான்றுகள் கிடைத்திருக்கலாம் என்பது யூகம்தான். உறுதியாகச் சொல்லமுடியாது. மேலும், சுதந்திரமடைந்தபின் இதில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள்-சிகாரிபுரம் ரங்கநாதராவ் போன்றவர்கள் அது ஆரியநாகரிகம் என்று நிரூபிக்க முனைந்தார்கள். எனவே பயன் கிட்டி யிருக்குமா என்பது சந்தேகம்தான்.

கேள்வி: கவிதை வடிவம் சிதைந்தது, புதுக்கவிதை என்ற வடிவம் வந்ததாலா அல்லது மக்களின் இலக்கண அறிவு குறைந்ததாலா? சேது, புதுக்கோட்டை

பதில்: புதுக்கவிதை என்ற வடிவம், உரைநடை பரவியதன் விளைவாக ஏற்பட்டது. தமிழைவிட ஆங்கிலத்தில் உரைநடை முன்னமே தோன்றிவிட்டதால், புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில், ஒரு நு£ற்றாண்டுக்கு முன்னமே தோன்றி விட்டது. இது உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு மாற்றம். இதற்கு மக்களின் இலக்கண அறிவின் குறைவைக் காரணம் சொல்லமுடியாது.

நாயக்கர் காலத்திலிருந்து சிற்றிலக்கியங்கள் புராணங்கள்தான் தமிழில் தோன் றின. அவை கற்பனை வறட்சியையும், வடநாட்டுக்கதைகளின் தழுவலையும் கொண்டிருந்தன. ஆனால் நல்ல யாப்பில்தான் எழுதப்பட்டன. இவற்றைக் கவிதைகள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் கவிதைக்குரிய உயிர்ப்புத் தன்மை இவற்றில் இல்லை.

யாப்பில் எழுதிவிட்டால் மட்டும் கவிதையாகாது. அது வெறும் செய்யுளா கவே நிற்கும். யாப்பு என்பது செங்கல்லை வைத்துக் கட்டடம் கட்டுவது போன்றது. அது கலையழகுமிக்க நேர்த்தியான கட்டடம் ஆகப்போகிறதா, எவ்விதச் சிறப்புமற்ற குட்டிச்சுவர் ஆகப்போகிறதா என்பது கட்டுவோனின் கலைநோக்கினைப் பொறுத்ததுதானே? அதுபோலத்தான் யாப்பும். அதைக் கம்பரைப்போல, பாரதியைப் போல, பாரதிதாசனைப்போல, செம்மையாகப் பயன்படுத்தினால் நல்ல கவிதையும் ஆகும். தெருவுக்குத் தெரு நம்நாட்டில் கவிஞர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு எழுதுபவர்கள் கையில் குட்டிச்சுவரும் ஆகும்.

புதுக்கவிதையும் அதுபோலத்தான். அதுவும் நல்ல கவிஞர்களிடம்தான் உயிர் பெறும். கலையாகும். எவர் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைத்தால் உரைநடைக் குட்டிச்சுவர்கள்தான் மிஞ்சும். எல்லாப் புதுக் கவிதைகளையுமே கவிதைச் சிதைவுகள் என்று பார்க்கலாகாது. ஆழ்ந்த உணர்வுகளை எழுப்புகின்ற சிறந்த புதுக்கவிதைகளும் உள்ளன.

ஆனால், புதுக்கவிதை யாப்பினைக் கைவிட்டதால், நல்ல உணர்வைத் தரக்கூடிய ஒரு சிறந்த கருவியை இழந்துவிட்டது என்பது உண்மை. கவிதையின் பொருளுக்கு யாப்பின் இசைநயம் அனுசரணையாக இருந்து உயிர் தருகிறது, அந்தக் கவிதைப் பொருளைச் செழுமையாக்குகிறது. கம்பரின் பல கவிதைகள், மிகச் சிறப்பாகக் கவிதைப்பொருளுக்கு அனுசரணையாகச் சந்தத்தைப் பயன்படுத்தக்கூடியவை.


தற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்

Pooranachnadran.k
(தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பு
 குறித்து சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பன்முகத் திறன் கொண்டவருமான பேராசிரியர் க. பூரணச் சந்திரன் அவர்களிடம் நேர்காணல் கண்டோம். பல தளங்களில் சிறப்பான ஆழ்ந்த அறிவு ஞானம் கொண்டுள்ள இவர் ஆங்கிலத்தில் இருந்து பல சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆண்டின் (2012)சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆனந்த விகடன் இவரைத் தெரிவு செய்துள்ளது. மொழி பெயர்ப்பு குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.)
சிறகு- நீங்கள் எப்போது முதல் மொழி பெயர்க்கத் தொடங்கினீர்கள்?
பூரணச்சந்திரன்-
 நான் 1982இல் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். மொழிபெயர்த்த முதல் நூல் “ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 365 நாட்கள்” என்ற மருத்துவ நூல். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். கலைச் சொற்களையும் நிறைய உருவாக்கியிருக்கிறேன். இதைத் தமிழுக்கு நான் செய்த கொடையாக நினைக்கிறேன். உதாரணமாக இன்று தொடர்பியல் துறையில் பயன்படும் பின்னூட்டம் என்ற சொல் முதன் முதலில் 1989இல் நான் உருவாக்கியதுதான். மேலும் தமிழில் அமைப்பியம், பின் அமைப்பியம், பின் நவீனத்துவம் சார்ந்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். அதுவும் திறனாய்வுத்துறையில் கலைச்சொல் உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது.

சிறகு- நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்யும் புத்தகங்களை உங்களின் விருப்பத்தின் பேரில் அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்வீர்களா?

பூரணச்சந்திரன்- இதுவரை நானாகத் தேர்ந்தெடுத்ததில்லை. எனது பதிப்பாளர்கள் -அடையாளம், காலச்சுவடு, எதிர்வெளியீடு போன்றோர் எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைத்தான் செய்கிறேன். ஆனால் என்னுடைய கருத்தியலுக்கு உடன்பாடாக அவை இருந்தால் மட்டுமே செய்வேன் என்ற நிபந்தனையை முதலிலேயே சொல்லி விடுகிறேன். இப்படி அவர்களிடம் புத்தகத் தேர்வை விடுவதற்குக் காரணம் என்ன வென்றால், சந்தைநோக்கு அவர்களுக்கு உண்டு. எந்தப் புத்தகம் விற்கும் விற்காது என்ற கணிப்புகள் அவர்களிடம் உண்டு. அவற்றில் எனது கருத்தியலுக்கேற்ப நான் தேர்வு செய்துகொள்கிறேன்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தால் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- ஆங்கிலத்தில் உள்ள பல நல்ல இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அப்படிச் செய்யக்கூடியவர்களும் நிறைய இருக்கிறார்கள். நான் சிறப்பாகக் கவனம் செலுத்த விரும்பும் துறை, திறனாய்வும் இலக்கியமும். திறனாய்வு அதிலும் மிகப் பெரிய துறை. அதற்கான கலைச்சொற்களே தனியாக உள்ளன. ஆங்கிலத்தில் திறனாய்வாளர்கள் எழுதுவதைப் புரிந்துகொள்வதே கடினம். அந்த அளவுக்குத் தனித்த திறனாய்வு நடையை உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு யாராவது தொடர்ந்து பண உதவி செய்தால் நான் ஆங்கிலத்தில் உள்ள சிறப்பான திறனாய்வு நூல்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பேன். உதாரணமாக பார்த், லக்கான், டெரிடா, ஃபூக்கோ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

சிறகு- தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எந்தப் புத்தகத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- சங்க இலக்கியங்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார்கள். ஏ.கே. இராமானுஜனின் மொழிபெயர்ப்புகள் சிறப்பானவை. ம.லெ. தங்கப்பாவும் நல்ல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வளம் குன்றாமல் பெயர்த்துள்ளார். மிகவும் கடினமான பணி இது. பிற சிலர் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளுக்கு ஏராளமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஏனென்றால் இலக்கியத்தன்மையை அவை சரிவரக்  கொண்டுசெல்லவில்லை. கம்பர் மிக அற்புதமாக, உணர்வுகளுக்கு ஏற்ற சந்தத்தைக் கையாள்பவர். அதை மொழிபெயர்ப்பில் கொண்டுசெல்லவே முடியாது. எனவே மொழிபெயர்க்கும்போது கதையம்சம் சென்று சேர்கிறதே அல்லாமல் இலக்கியத்தன்மை சென்று சேர்வதில்லை. திருக்குறள் மிக அற்புதமான இலக்கியம். ஆனால் நான் சந்தித்த வடநாட்டவர்கள் எல்லாம் இதில் என்ன இருக்கிறது? வெறும் அறிவுரைதானே என்று கேட்டிருக்கிறார்கள். நான் அதிகம் உழைத்து மொழிபெயர்க்க விரும்புவது திருக்குறளை, அடுத்து குறுந்தொகையை. அண்மைக்கால இலக்கியங்களை -நாவல், சிறுகதை போன்றவற்றை ஆங்கிலத்தில் பெயர்ப்பது எளிது.

சிறகு-1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது குறைந்த அளவு பக்கங்களாக வெளியிடுகிறார்கள். இது தவறில்லையா?

பூரணச்சந்திரன்- தவறில்லை. ஆங்கிலத்தில் தழுவல் பதிப்பு, சுருக்கப்பட்ட பதிப்பு (அடாப்டட் வெர்ஷன், அப்ரிட்ஜ்ட் வெர்ஷன்) என்றெல்லாம் உள்ளன. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர்ஃபீல்டு நாவலை முழுமையாகப் படித்தேன். ஆனால் அதன் தழுவிய, சுருக்கப்பட்ட பதிப்பை ஆங்கிலத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே சுமார் 100 பக்க அளவில் படித்துவிட்டேன். ஆங்கிலத்தில் இப்படி புகழ்பெற்ற எல்லா நாவல்களுமே சுருக்கப்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. குறிப்பாக ஈ.எஃப் டாட் என்பவர் பெயர், பிளாக்கி அண் சன்ஸ் என்ற பதிப்பகம் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. தமிழில் நாம் அதைப்போல் செய்ய வேண்டும். உதாரணமாக பொன்னியின் செல்வன் கல்கியின் புகழ்பெற்ற சரித்திர நாவல். இது ஏறத்தாழ 2000 பக்கம். இதை 150 பக்க அளவில் சுருக்கினால் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நல்ல தமிழ் உணர்வு வளரும்.

சிறகு- தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது குறைவாக இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?

பூரணச்சந்திரன்- முக்கியமாக இரண்டு காரணங்கள். தமிழ் பழமை வாய்ந்த மொழி. அதன் இலக்கியங்களை-கம்பராமாயணம் போன்றவற்றை- சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான காரியம். நம் தமிழருக்கே பழந்தமிழ் இலக்கியம் புரிவதில்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பதை பற்றி நினைத்துப்பாருங்கள். பிறமொழிக்காரர்கள் தான் தமிழிலுள்ள இலக்கியத்தை அவரவர் மொழியில் பெயர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேற்கத்திய அறிஞர்கள் தமிழ் செம்மொழி சிறந்த மொழி என்று ஏற்றுக்கொண்டார்கள் என்றால், இலக்கியத்தைப் படித்து அவ்விதமாக ஏற்கவில்லை, திராவிட மொழிகளில் மூத்தமொழி தமிழ் என்பதால் ஏற்றார்கள். இடைக்கால, பிற்கால, சிற்றிலக்கியங்கள் யாவும் வடமொழிக் கதைகளை உட்கொண்டவை. அவற்றை மொழிபெயர்த்தால் என்ன பயனளிக்கும் என்பதும் சந்தேகம். அண்மைக்கால இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. யார் யார் பரிசு வாங்குகிறார்களோ அவர்களை எல்லாம் சிறந்த ஆசிரியர்கள் என்று கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். உதாரணமாக அகிலன் ஞானபீட பரிசு வாங்கினார். அவருடைய நூல்களை எல்லாம் மொழிபெயர்த்தார்கள். அதுபோல பிற சாகித்திய அகாடெமி போன்ற பரிசு வாங்கியவர்களின் நூல்களையும் மொழிபெயர்க்கிறார்கள். பரிசுபெறாத நல்ல ஆசிரியர்களின் நூல்களை விட்டுவிடுகிறார்கள். இது தமிழில் இருக்கும் பிரச்சினை. பழந்தமிழ் இலக்கியத்தை இலக்கியச்சுவையோடு மொழிபெயர்ப்பதற்கோ சரியான ஆட்கள் இல்லை.

அண்மைக்கால இலக்கியத்தில் தமிழிலிருந்து தரமுள்ளவர்களைவிட தரமற்றவர்களை அதிகமாக மொழி பெயர்க்கிறார்கள். இது பிறமொழியாளர்கள் மத்தியில் தமிழைப் பற்றி ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தும்.

ஒரு வங்காளி நாவலை நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன் என்றால் எனக்கு வங்காளம் தெரியவேண்டும். தமிழ் தெரியவேண்டும். மேலும் மொழி பெயர்ப்பவன் இலக்குமொழியாளனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். தமிழிலிருந்து வங்காளிக்குப் பெயர்க்க வேண்டும் என்றால் பெயர்ப்பவன் வங்காளியாக இருக்கவேண்டும். ஆனால் வங்காளிக்குத் தங்கள் மொழிதான் உயர்வு, பிற தாழ்ந்தவை என்ற எண்ணம். அதனால் அவர்கள் மொழிபெயர்க்க வருவதில்லை. தமிழிலிருந்து இந்திக்குப் பெயர்க்கவேண்டும் என்றால் இந்தி மொழிக்காரர்களாக இருந்தால்தான் சிறப்பாகச் செய்வார்கள். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை. காரணம், இந்தி தேசிய மொழி. நாம் பிறமொழிகளைப் படிக்கவேண்டியதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு. நாம்தான் இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு என்றெல்லாம் நல்ல இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் செய்திருக்கிறோமே தவிர அவர்கள் அப்படிச் செய்யவில்லை. (சாகித்திய அகாதெமி மொழி பெயர்ப்புகளை பார்த்துவிட்டுத்தான் இதைச் சொல்கிறேன்), இதனால் தமிழின் சிறந்த படைப்புகள் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோளாறு. இந்தியாவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22. இவற்றில் ஒன்றை மட்டும் தேசியமொழி என்ற தகுதி கொடுத்துப் பிறவற்றை கவனியாதுவிட்டால், அவை வளர்வதில்லை. குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளைப் படிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மையை அரசியல் சட்டம் உருவாக்கி இருக்கிறது. அதனால் வடநாட்டுக்காரர்கள் தென்னிந்திய மொழிகளைப் படிப்பது குறைவு. அதிலும் தமிழ்தான் வடமொழிச் சார்பு மிகக் குறைவானது. அதனால் இதைப் படிப்பது மிகவும் குறைவு. மலையாளம் போன்ற மொழிகளில் சமசுகிருதக் கலப்பு ஏராளம். நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப போன்றவற்றை ஏற்றதோடு சம்புகாவியம் போன்ற வடமொழி இலக்கிய வகைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு அயலான மொழி. இந்திய மொழிகளிலேயே வடநாட்டுக்கு மிகக்குறைவாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழ்தான். இதற்குக் காரணம் வடநாட்டவரின் குறுகியநோக்கம்.

சிறகு– மொழிபெயர்ப்புத் துறை இணைய தளத்திற்குப் போகிறதா? அதற்குத் தனியான இணைய தளம் இருக்கிறதா?

பூரணச்சந்திரன்- இருக்கிறது…

சிறகு- மொழி பெயர்க்கும்போது ஒரு படைப்பின் மூலம் சிதைந்து விட வாய்ப்பு உண்டல்லவா?

பூரணச்சந்திரன்- மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். மூலமொழியைப் போலவே இலக்குமொழியும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். நல்ல ரசனை வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தால்தான் நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்கும். இன்றைக்கு இருககும் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழி அறிவும் ரசனை யும் போதிய அளவு இருப்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஸ்பானிய மொழிக் கதைகளை ஆங்கில வாயிலாகத் தமிழில் மொழிபெயர்க்கிறார், ஆனால் அவருடைய ஆங்கிலத்தகுதி, மேற்கத்திய கலாச்சார அறிவு பற்றி எனக்குச் சந்தேகம். அதனால் சரிவர இல்லை எனத் தோன்றுகிறது. ஜெர்மானிய இலக்கியங்களை-முக்கியமாக பிரெஹ்டின் நாடகங்களை 1970களிலேயே தமிழில் மொழிபெயர்த்தார்கள். ஆனால் எந்த மொழிபெயர்ப்புமே சரியாக வாசிக்கப்படும் அளவுக்கு இல்லை. இலக்கியமாகத் தமிழில் வரவில்லை. இந்தக் குறைபாடுகள் இன்றி மொழிபெயர்க்கவேண்டும்.

சிறகு- மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வார்த்தையாக அல்லது ஒரு பத்தியை படித்துவிட்டு அதன் கருத்தை உள்வாங்கி மொழிபெயர்ப்பீர்களா? எப்படி?

பூரணச்சந்திரன்- ஒவ்வொரு வார்த்தையாக மொழிபெயர்ப்பது முடியவே முடியாத காரியம். ஆங்கிலத்தில் கருத்துகள் வாக்கியமாக இடம்பெறும் முறை வேறு, தமிழில் வேறு. இந்தியில் வேறு. ‘The man who is there’  என்ற ஆங்கிலத் தொடரை அங்கே உள்ள மனிதர் என்று தமிழில் பெயர்க்கலாம். வார்த்தை வார்த்தையாக மனிதர் யார் இருக்கிறார் அங்கு என்று பெயர்க்க முடியாது. பொதுவாக மொழி பெயர்ப்பாளர்களாகிய நாங்கள் நூல்முழுவதையும் படித்துவிடுவோம். பிறகு பெயர்க்க வேண்டிய பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டு, வாக்கியம் வாக்கியமாக மொழிபெயர்ப்போம். சிலபேர் கடினமான வாக்கியங்களைத் தாண்டிப்போய்விடுவார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. முழுவதையுமே மொழிபெயர்ப்பதுதான் என் வழக்கம்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து மட்டுமா அல்லது வேறு மொழிகளில் இருந்தும் நீங்கள் மொழி பெயர்க்கிறீர்களா?

பூரணச்சந்திரன்- பொதுவாக இதுவரை பதிப்பகத்தார்கள் என்னிடம் ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நிறைய மொழிகளைப் படிக்க முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எதில்வேண்டுமானாலும் பெயர்க்க இயலும்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 1

597px-My_impression
கேள்வி 1. விரிச்சி கேட்டல் என்ற பண்டைய பழக்கம் இன்றைய சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒப்பானதா? காலக்கணிப்பு என்பது பிற்கால சங்க இலக்கியமான கணியன் பூங்குன்றனார் போன்றவர்களிடமும் இருநத வழக்கம் இல்லையா?

காசி விசுவநாதன், துபாய்
விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள். அதாவது, நாம் ஏதாவது ஒரு செயல் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலையோடு வீட்டு வாசற்படியை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கிறோம். தெருவில் யாரோ ஒருவன் இது முடியவே முடியாது என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டு போகிறான். நாம் உடனே மனம் துணுக்குறுகிறோம். பதிலாக, அவன் நிச்சயமா நல்லபடியா எல்லாம் நடக்கும்பா என்று சொல்லிக்கொண்டுபோவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது நம் மனம் மகிழ்ச்சிடைகிறது. இதுதான் விரிச்சி கேட்டல். இது ஒரு மூடநம்பிக்கை தான். இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான மூடநம்பிக்கை என்று ஆறுதல் அடையலாம்.
இது இக்காலச் சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒத்ததல்ல என்பது நான் விளக்கியபோதே தெரிந்திருக்கும். ஏனென்றால் இதில் ஜாதகம் எழுதுவது, அதை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பது, நல்லநாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைப் பார்ப்பது என்பதெல்லாம் கிடையாது.
“பிற்கால” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிய வில்லை. சங்க இலக்கியம்தான் தமிழில் முற்பட்டது, மூத்தது. கமில் சுவலபில் போன்ற உலகப் பேராசிரியர்கள் எல்லாம்கூட சங்க இலக்கியம் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமசுகிருதம், பிராகிருதம், பாலி போன்ற மொழிகளைத் தவிர இந்தியாவில் தமிழ் மட்டுமே இருந்தது. அக்காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளோ, குசராத்தி, வங்காளி போன்ற வடஇந்தியமொழிகளோ எவையும் தோன்ற வில்லை. தமிழைச் செவ்வியல் மொழி என்பதற்கு இது முக்கியக் காரணம்.
சங்க இலக்கியம் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக்காலமாவது பரப்பளவு உடையது. அதாவது ஒரே ஆண்டிலோ, ஒரு பத்தாண்டிலோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல அது. கி.மு. 300 வாக்கில் தொடங்கப்பட்டிருக்கலாம். கி.பி.200 வரை எழுதப்பட்டிருக்கலாம். அதில் கணியன் பூங்குன்றனாரை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக ஏசுநாதர் காலத்தை ஒட்டி இருக்கலாம். (தனித்தனிப் புலவரின் காலத்தை மதிப்பிடுவது கடினம், என்றாலும் சிலர் செய்திருக்கிறார்கள்.)
கணித்தல் என்பது கணக்கிடுதல். வானத்தின் நட்சத்திர, கோள் (கிரக) அமைப்புகளைக் கணக்கிடுபவர் என்பது இச்சொல்லின் பொருள். அதாவது இக்கால வழக்கில் சொன்னால், ஒரு வானியலாளர். சோதிடர் அல்ல. தமிழ் மக்கள் அக்காலத்தில் வானியலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம். பார்ப்பனர்கள் என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமானால், பிரம்மத்தைத் தேடுகிறார்களோ இல்லையோ, பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 3. தமிழிசை இயக்கம் தவற விட்ட பாதை என்ன? ஏன் தமிழர்களின் செவ்வியல் இசை வடிவமான கருநாடக இசை என்பதை-கர்நாடிக் என்ற இசைத்திருட்டினை மீட்டெடுக்க முடியவில்லை? 
கார்த்திகேயன், கலிபோர்னியா
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் தொட்டே தமிழ் இசைக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ்ப் பண்கள் (இராகங்கள்) பலவற்றைக் குறித்துள்ளன. பழந்தமிழ் நாட்டில் குழல், யாழ், தண்ணுமை (மிருதங்கம்) உட்படப் பல இசைக்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் இலக்கிய, கல்வெட்டு, பிற உரைநடைக்குறிப்புகள் சான்றுகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ பதிநான்காம் நூற்றாண்டில் சாரங்க தேவர், பின்னர் வேங்கட மகி காலம் தொடங்கி, தமிழிசை கர்நாடக இசையாக மாறியது. இவர்கள் எல்லாம் கன்னடர்கள், தெலுங்கர்கள். அவர்கள் தமிழ் இசையைக் கர்நாடக இசையாக மாற்றி, இராகங்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத்து, நூல்கள் எழுதிவிட்டார்கள். ஏனென்றால் அது விஜயநகரப் பேரரசின் காலம். தமிழ் ஆட்சியாளர்கள் இல்லை. இருந்த குறுநிலத் தமிழ் மன்னர்களாவது அபாயத்தை உணர்ந்து தமிழ் இசை பற்றிய நூல்களைத் தமிழ்இசை வாணர்களை வைத்து எழுதச் செய்திருக்கவேண்டும். அவ்வளவு நோக்கம் அவர்களுக்கு இல்லை. இடைக்கால வரலாற்றை விரிப்பது பதிலைப் பெரிதாக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
1930களில் தமிழிசை இயக்கம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்கள் பலரால் உருவாக்கப் பட்டது. தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ள பலர்-தண்டபாணி தேசிகர், இலக்குமணப் பிள்ளை போன்ற பலர் இதில் இணைந்தனர்.
ஆனால் தமிழிசை இயக்கம் ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1. தமிழிசை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீதிக்கட்சியைச் சேர்ந்த வர்கள். பச்சையாகச் சொன்னால், செட்டியார்கள், பிள்ளைமார்கள், முக்குலத் தோர் இத்தியாதி. அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற நிலையில், நீதிக்கட்சி செய்யும் எந்த முயற்சியும் காங்கிரஸுக்கும், இந்திய தேசியத்திற்கும் எதிரானதாகவே நோக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கம் பெரிய ஆதரவு பெறவில்லை. குறிப்பாகப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். காங்கிரஸ் பெரிய அளவில் பார்ப்பன இயக்கம்தான். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், கல்கியும் சத்தியமூர்த்தியும் மட்டுமே. பாரதியாருக்குத் தமிழ் இசையில் ஆர்வம் உண்டு. ஆனால் அவர் 1921இலேயே மறைந்துவிட்டார்.
2. இதை ஏற்ற நீதிக்கட்சிப் பெரும்தனக்காரர்கள், அடித்தட்டுவரை தமிழிசை இயக்கம் பரவுவதற்கான முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. மாநாடுகள் போட்டார்கள், சில கச்சேரிகள் நடத்தினார்கள், பத்திரிகைகளில் ஆதரவுக்கட்டுரைகள் எழுதினார்கள்-அவ்வளவுதான். உண்மையில் தமிழிசை சற்றேனும் பரவியது என்றால் காரணம் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகர்களால்தான். அவர்கள்தான் பொதுமக்களிடம் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சென்றார்கள். பொதுமக்களுக்கு இசையின் வரலாற்றிலோ, கோட்பாடுகளிலோ என்ன அக்கறை இருக்கமுடியும்?
3. மிக முக்கியமான கோளாறு, திராவிட இயக்கத்தவர் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. தி.க. எந்தக் கலையிலுமே ஆர்வம் காட்டியதில்லை. தி.மு.க. திரைப்படத்திலும், நாடகத்திலும் ஆர்வம் காட்டியதுபோல, தமிழிசையிலும் ஆர்வம் காட்டியிருந்தால் ஓரளவேனும் அது பிழைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடக்கத்தில் பாரதிதாசன் போன்றோர் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் கைவிட்டுவிட்டார்கள். திரைப்படப் பாடல்களின் திசை வேறாகப் போய்விட்டது. பொதுவுடைமை இயக்கத்திலும் பட்டுக்கோட்டை ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நல்ல பாடல்கள் எழுதியவர். வேறு ஒருவரும் கிடையாது.
4. பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் ஆற்றல் வாய்ந்த கவிஞனாக வந்தவர் கண்ணதாசன். ஆனால் அவருக்குக் கொள்கை எதுவும் கிடையாது. அதிகபட்சம், அவர் கண்ணனுக்கு தாசன்தான். கண்ணா கண்ணா என்று மறுபடியும் தெய்வப் புலம்பல்.
இப்படி எத்தனையோ காரணங்கள்.

கேள்வி 4. பரதவர் கலை என்ற பரதக்கலை, பின் நாட்களில் எவ்வாறு பரத நாட்டியம் என மாற்றம் பெற்று, ஒரு சாதி அமைப்பிற்கு மட்டுமே சொந்த மானது? அதனைப் பரத்தையர் கலை என்ற அவலம் வந்ததற்குக் காரணம் என்ன?

காந்திராஜ், வட கரோலினா 
அ. எல்லாச் சொற்களையும் வடமொழிச் சொற்கள் என்றாக்கி, அதற்கு ஒரு காரணத்தை அல்லது கட்டுக்கதையைச் சொல்லிவிடுவதில் பார்ப்பனர்களுக்கு நிகர் இல்லை. அப்படித்தான் பரதவர் கலை (பேச்சுத் தமிழில் பரதவக் கலை>பரதக்கலை) என்பதற்கும் ப-என்றால் பாவம், ர-ராகம், த-என்றால் தாளம், “பாவமும் ராகமும் தாளமும் நிரம்பியது பரதம்” என்றாக்கிவிட்டார்கள். உண்மையில் அப்படித்தான் என்றாலும், அது பாராதாக் கலை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்? (ஒருவேளை வடமொழியில் நெடில்களை எல்லாம் விட்டுவிடவேண்டுமா?)
ஆ. இதெல்லாம் பின்னால்தான். இம்மாதிரிக் காரணங்கள் கண்டுபிடிக்கும் முன்பே அது பார்ப்பனர்க் கலையாக உருமாற்றம் அடைந்துவிட்டது. அதற்கு முன்பு அதை இசைவேளாளர்களும் தாசிகளும்தான் காப்பாற்றிவந்தார்கள். இராஜராஜ சோழன் சோழநாட்டில் பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதும், அவற்றில் கணிகையர்களைப் பாட்டுப்பாடுவதற்கும் நாட்டியமாடுவதற்கும் நியமித்தான். அதற்காகவே முன்பு சிற்றளவில் இருந்த பரத்தையர்களை தேவதாசிகள் (தேவரடியார்கள்-இது இப்போது வழக்கில் தேவடியா என்று வசைச்சொல்லாக மாறிவிட்டது) என்று பெரியதொரு சாதியாக மாற்றிக் கோயிலுக்குக் கோயில் அனுப்பினான். இது நடந்தது கி.பி. பதினோரம் நூற்றாண்டில்.
இ. இவர்கள் தேவர் அடியார்களாக இருந்ததெல்லாம் சிறுகாலம்தான். பிறகு இயல்பாகவே அவர்கள் பெரியமனிதர்களுடைய, அதிகாரிகளுடைய, ஆதிக்க சாதியினருடைய (பார்ப்பனர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், இத்தியாதி) வைப்புகளானார்கள். (1950கள்வரை கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவருக்கும் வைப்பாட்டிகளாக தாசிகள் உண்டு. அவர்களுக்கு அதில் மிகவும் பெருமை. அக்காலத்து ஜமீன்தார், மைனர்களுக்கும் தாசிகளிடம் போய்வருவது மிகப் பெருமை.) ஆகவே இறைவனுக்குரிய கலை, பெரிய மனிதர்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. அதற்குப் பெயரும் பரதவர் கலை என்பதிலி ருந்து சதிர்க்கச்சேரியாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரதநாட்டியம், சதிர் என்ற பெயரில்தான் அறியப்பட்டது.
ஈ. இசை, நாட்டியக் கலையோடு அன்றிலிருந்து சம்பந்தப்பட்டது நாதசுரமும் பெரிய மேளம் எனப்படும் தவிலும். நாதசுரத்தை ஊத மூச்சுப்பிடிக்கவேண்டும். தவில் அடிக்க கைகளில் வலு வேண்டும். அந்த ‘தம்’-மும், வலுவும் இல்லாததால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள்.

கேள்வி 5. சங்க இலக்கியங்களின் காலநிலை குறித்து விளக்கம் தேவை.

சுப்பிரமணி, சென்னை 
முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இயற்றப் பட்டது சங்க இலக்கியம். இதற்கு ஆதாரங்களை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் (மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றில்) காணலாம். அகச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. புறச்சான்றுகளாகக் கிடைப்பவைதான் முக்கியமானவை. அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்.
அ. சங்ககாலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்) கிரேக்கர், ரோமானியர் பெரிய அளவில் தமிழகத்தோடு கப்பல்களில் வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ், பிளைனி, தாலமி எழுதிய நூல்கள் ஆகியவற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் கிரேக்க, ரோமானியக் (இவர்களை யவனர் என்பது தமிழ் வழக்கம்) காசுகள்-குறிப்பாக கி.மு.வில் இருந்த அகஸ்டஸ் சீஸரின் காசுகள் புதுச்சேரி அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களுக்கு யவனர் குற்றேவல் செய்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆ. தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பவை தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சொற்றொடர் அமைப்புகள், செய்திகள் ஆகியவை அக்காலத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிநடை, செய்திகள் ஆகியவற்றுடன் ஒத்துச் செல்கின்றன.
இ. சங்ககால நகரமான பூம்புகார் கடலடியில் இன்றும் மறைந்து கிடக்கிறது. 1980 கள்வரை கடலில் அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் காவிரி கடலில் கலக்குமிடத்துக்கு அருகில் கடலுக்கடியில் மிகப்பெரிய நகரம் ஒன்று இருப்பதைக் கண்டு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் பணம் இல்லை என்ற நொள்ளைச் சாக்கு காட்டி அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது.
இதுபோல இன்னும் ஏராளமாகக் கூறலாம். எதற்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படிப்பது நல்லது.