நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 4

aaa959
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாய் விளங்கும் ஆன்மிக வாதிகள் சொல்லும் இராமர்பாலம் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு பாலம் அங்கு இருக்குமாயின் குமரிக்கண்டம் கடலடியில் மறைந்த பிறகு கட்டப்பட்டிருக்குமா? விளக்கம் தேவை. (இன்றைய தலைமுறையேனும் தெளிவுறப் புரிந்துகொள்ளவேண்டும்) சுவாமிநாதன் திருமுல்லைவாயில்

பதில்
: நமக்கு அறிவியல் மனப்பான்மை முதலில் தேவை. கட்டுக்கதைகளிலிருந்து மெய்ம்மைகளை வேறுபடுத்தி அறிய இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகள், வேண்டுமென்றே இதில் குட்டைகுழப்புகிறார்கள்.

இராமன், அவன் வாழ்ந்தது, பாலம் கட்டியது எல்லாம் கட்டுக்கதை. ஒவ்வொரு மதத்திற்கும் கட்டுக்கதைகள் உண்டு. இராமன் என்பவன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டுவந்தான் என்பது இந்துமதத்தின் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதைகளுக்கும் மெய்ம்மைக ளுக்கும் சம்பந்தமில்லை. (உதாரணமாக, சிந்தித்துப்பாருங்கள், இராமனின் தந்தை தசரதன் பல லட்சம் ஆண்டுகள் பத்தாயிரக்கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தானாம். இது சாத்தியமா?  உண்மையில் நடக்கக்கூடியதா? அவன் தேவர்களுக்காக சம்பராசுரன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றானாம்…)

குமரிக்கண்ட நிகழ்வு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போது மனித இனம் தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறி. எனவே குமரிக்கண்டம் போன்றவற்றை கட்டுக்கதைகளோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கடற்பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாகவும் சில ஆழமின்றியும் தானாகவே அமைந்திருக்கின்றன. பூமியில் மேடு பள்ளங்கள் இல்லையா? மலைகள், பள்ளத் தாக்குகள் இல்லையா? அப்படித்தான் கடலின் பரப்பிலும். அவற்றில் ஆழங் குறைந்த பகுதியைப் புராணங்களோடு இணைத்து அது ஆதாம் கட்டிய பாலம், இராமன் கட்டிய பாலம் என்று கட்டுக்கதை ஆக்கிவிடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள வள்ளிமலைஎன்ற ஊரில் இன்னும் பல இடங்களில்-சற்றே பாறைகள் மஞ்சளாக இருந்தால் வள்ளியம்மை முருகப்பெருமானோடு மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்று கதை கட்டியிருப்பார்கள். அது போன்றதுதான் இதுவும்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது அறிவியல் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு அது என்ன எதிர்விளைவு ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டியது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டமும் உடன் பாடில்லை. மனிதன் இயற்கையை ஒட்டி, அதனோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சிசெய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சுனாமிகள்தான் மிஞ்சும்.

கேள்வி : மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஏற்படுவதாக இருந்தாலும், தமிழில் மட்டும் அது விரைவாகவும் திட்டமிட்டும் நடப்பதாகப் படுகிறதே, மொழிக்கலப்பைத் தவிர்க்க வழி என்ன? – கண்ணன், சேலம்

மொழிக்கலப்பு எல்லா மொழிகளிலும் நிகழ்வது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படியானால் தமிழில் மட்டும் அது எப்படி நடவாமல் போகும்? எங்கெல்லாம் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து பழகவேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மொழிகள் இரண்டிலுமே கலப்பு ஏற்படும்.

தமிழில் மொழிக்கலப்பு விரைவாக நடக்கிறது என்பது யூகம். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் திட்டமிட்டு நடக்கிறது என்று நமக்குத் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

இந்தியாவில், சமசுகிருதக் கலப்பில்லாமல் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றுதான். பிற திராவிட மொழிகளும்கூட சமசுகிருதக் கலப்பினை வெவ்வேறு அளவில் ஏற்றுக்கொண்டு அது இயற்கை என்று கருதிவிட்டன. மொழிக்கலப்பு இயற்கை என்பதை ஏற்காதவர்கள் தமிழ்பேசுபவர்களில் மட்டுமே இருக்கிறார்கள். சமசுகிருத, இந்தி, வடநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாம் தமிழில் வடமொழிக்கலப்பு கூடாது என்கிறோம். இது அரசியல் பிரச்சினை. மொழிசார்ந்த பிரச்சினை அல்ல. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை இருந்து இந்தியின் ஆதிக்கமோ, சமசுகிருத ஆதிக்கமோ இல்லை என்றால் நாம் மொழிக்கலப்பைப் பெரும்பாலும் எதிர்க்கமாட்டோம்.

ஏறத்தாழ கி.பி.1310 முதலாகத் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் கள், பிறகு கடைசியாக ஐரோப்பியர்கள் ஆகியவர்களால் ஆளப்பட்டது. சுதந்திர மடைந்த பிறகும் நாம் சுதந்திரமாக இல்லை. ஆதிக்கத்தில் பிறமொழியினர் இருக்கும்போது, நமது மொழி எப்படி வளரும்? அவர்கள் மொழி நமது மொழி யுடன் அதிகமாகக் கலக்கும் சாத்தியமே அதிகம்.

தமிழ்நாட்டில் பிறமொழியினர் ஆண்டதால் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி யினர் தமிழர்களுடன் கலந்து வாழ்வதைப் பார்க்கலாம். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் எல்லா கிராமங்களிலும் உள்ளனர். நாயுடுகள், நாயர்கள், ஒக்கலிகர்கள் என இவர்கள் பட்டியல் நீளும். ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ பிற மாநிலங்களிலோ இப் படிப்பட்ட பிரச்சினை இல்லை. எல்லையில் மட்டுமே ஓரளவு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் ரெட்டியாரோ நாயுடுவோ இல்லாத கிராமம் ஏது? அவர்கள் பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தங்கள் மொழி யையே பேசுகிறார்கள். இவர்களைத் தமிழர்கள் என்பதா, அயலார்கள் என்பதா? எங்கள் கிராமத்தில்கூட நிலையாக வாழ்ந்து சொந்த நிலங்களில் விவசாயம் செய்துவருபவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என்றே சொல்லுகிறார்கள். வீட்டில் அதில்தான் பேசுகிறார்கள். வடமாவட்டங்களின் முஸ்லிம்களும் (சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி,…) அப்படித்தான். அவர்கள் வீட்டில் உருதுதான் பேசுகிறார்கள். வெளியில் வந்தால் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அதன் கலப்பு மிகுதியாகிறது. செயற்கையான கலப்பு என்று நாம் சொல்லக்கூடியது ஆங்கிலக் கலப்பைத்தான். ஆங்கிலத்தைக் கலந்து பேசாவிட்டால் அது சரியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அந்த மோகம் இருக்கிறது. அதற்கு மேல், கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்து வளர்ச்சி. தொலைக் காட்சிகள் திட்டமிட்டே மொழிக்கலப்பை வளர்க்கின்றன. அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். 90 சதவீதம் கிராமப்புறப் பெண்கள் பார்க்கக்கூடிய சமையல் நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து நடத்துகிறார்கள். குழம்பு, சோறு, எல்லாம் மறைந்து கிரேவி, நான், புடிங் போன்ற சொற்கள் சமையல் நிகழ்ச்சிக்குள் வந்துவிட்டன. காய்கறிகளின் பெயரைக்கூட அவர்கள் தமிழில் சொல்வதில்லை. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் அப்படித்தான். பிறமொழிகளில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

செயற்கையான மொழிக்கலப்பை மட்டுமே நாம் தவிர்க்கவேண்டும். எனவே ஆங்கிலக்கலப்பையும், வடநாட்டுப் பண்பாடு திட்டமிட்டுச் சுமத்தப்படுவதால் புகும் இந்திக்கலப்பையும் மட்டும் நாம் சற்றே தீவிரமாக நிராகரித்தால் போதுமா னது. நல்லது. தேவையானது.

கேள்வி :. தமிழகம் இப்போதிருப்பதைவிட அகன்ற நிலப்பரப்பு உள்ளதாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே? – முகம்மது யூசுப், துபாய்

பதில்: ஆமாம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியும், கிழக்கில்-மேற்கில் கடல்களும் தமிழகத்துக்கு அக்கால எல்லைகள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகம் என்பது தொல்காப்பியம். இப்போதிருக்கும் வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் கிழக்குக் கடல், மேற்குக் கடல் என்றே அக்காலத்தில் (குணகடல், குடகடல் என்றும்) வழங்கப்பட்டன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். அக்காலத்தில் சாலை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடுகள். இப்போதுபோல எல்லா நிலமும் விவசாய நிலங்களாகவோ, குடியிருப்பு மனைகளாகவோ பழங்காலத்தில் இல்லை. பொது விளக்குகள் கிடையாது. வேக மான வாகனப் போக்குவரத்து  எதுவுமே கிடையாது. மலையாள மொழி அப்போது தோன்றவில்லை. அதனால்  இன்றிருக்கும் கேரளா அப்போது சேர நாடாகவே- தமிழ்நாடாகவே இருந்தது. வடக்கிலும் வேங்கடம் வரை தமிழ் தான் இருந்தது. அதற்கும் அப்பால் வடக்கில் இருந்தவர்கள் வடுகர் (வடக்கு நாட் டவர்) என்றழைக்கப்பட்டார்கள். மேற்கிலும் மைசூர் வரை தமிழ்நாடுதான். அது எருமைநாடு என்று தமிழ் இலக்கியங்களில் வருகிறது. மைசூர் என்பது மஹிஷ + ஊர். மஹிஷம் (வடமொழி) என்றால் எருமை. எருமையூரை, மஹிஷ ஊராக மாற்றி, மைசூராக இப்போது ஆக்கிவிட்டார்கள். அதேபோல கொங்குநாடு என்பது பிற்காலப் பல்லவர்  காலத்தில் கங்க நாடாக மாறிவிட்டது. இப்படி எத்தனையோ மாற்றங்கள். இப்போதிருக்கும் மங்களூரிலிருந்து நேர் கிழக்காகத் திருப்பதி வரை ஒரு கோடு கிழியுங்கள். அதற்குத் தெற்கே உள்ளதெல்லாம் பழங் காலத் தமிழ்நாடுதான். அப்போது வடுக மொழி இருந்தது. கன்னட மொழி உருவாகவில்லை. வெம் + கால் + ஊர் = வெங்காலூர் (மேற்கத்தியச் சீமையி லிருந்து கீழே இறங்கி வந்தால் வெம்மையான காற்று வீசும் ஊர் என்று அர்த்தம்)

என்ற பெயர்தான் இப்போது பெங்களூர் ஆகியிருக்கிறது. பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பேச்சு மொழியில் அவ்வளவாக வித்தியாசம் கிடையாது. (சென்னைத் தமிழுக்கும் கோவைத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்கூடக் கிடையாது.) எழுத்து மொழிதான் வேறுபட்டுவிட்டது.

இதற்குமேல் இன்னொரு குறிப்பு: வடவேங்கடம் தென்குமரி என்பதிலுள்ள தென் குமரி-அது குமரிமுனை அல்ல, பழங்காலத்தில் குமரிக்கண்டம் இருந்தது, அதில் குமரி ஆறு ஓடியது, அந்தக் குமரி ஆற்றைத்தான் தென்குமரி என்ற சொல் குறிக்கிறது என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், அப்போதிருந்த தமிழகத்தின் பரப்பு எவ்வளவு இருக்கும்?

கேள்வி : கலிங்கத்துப் பரணி கற்பனையால் எழுதப்பட்ட இலக்கியமா? இல்லை உண்மையில் நடந்தனவற்றின் தொகுப்பா? – செந்தில் குமார், சென்னை

பதில்: கற்பனையும் உண்மையும் அற்புதமாக இணைக்கப்பட்ட ஒரு படைப்பு கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்க சோழ  அரசன், காஞ்சி புரத்தில் தன் அரண்மனையில் வந்து தங்கியிருந்து, அங்கிருந்து தன் படைத்தலைவன் கருணாகர பல்லவனைக் கலிங்கத்துக்குச் சென்று போரிட்டு வருமாறு கூறுகிறான். கருணாகர பல்லவனும், அவ்வாறே ஒரு பெரும் படையுடன் கலிங்கத்துக்குச் சென்று அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தோற்கடித்து (வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் தனித்தனி அரசர்கள் அப்போது) திறை செலுத்தச் செய்து வருகிறான். இது வரலாற்றுச் செய்தி.

கடுங்கோடை காலம். எங்கும் உணவின்றி, பேய்கள் பசியால் வாடுகின்றன. அவை தங்கள் தலைவியான காளியிடம் முறையிடுகின்றன. அவள், இப்போது கலிங்கத்தில் பெரும் போர் நடக்கிறது. அந்தப் போர்க்களத்திற்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான இரத்தக்கூழும் நிணமும் கிடைக்கும், உங்கள் பசி தீரும் என்று சொல்லி அவற்றை அனுப்புகிறாள். அவ்வாறே அந்தப் பேய்கள் கலிங்கப் போர்க்களத்திற்குச் சென்று உணவருந்திப் பசி தீர்ந்து காளியை வாழ்த்துகின்றன. இது சுத்தமான கற்பனைப் பகுதி.

இன்னொரு சிறிய கற்பனைப் பகுதியும் கலிங்கத்துப் பரணியில் உண்டு. போர்க்களத்திலிருந்து  திரும்பி வருகின்ற வீரர்கள் நள்ளிரவிலோ, விடியலுக்கு முன்னரோ கண்ட நேரத்தில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அப்போது வாயிலைத் திறக்குமாறு அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் வேண்டு கின்றனர். மனைவியர் எவ்விதம் கணவன் மார்களின் காதலுக்கு ஏங்கியிருந்தார் கள், இப்போது எவ்விதம் நடந்துகொள்கிறார்கள் என்பது கடைதிறப்பு என்ற முதற்பகுதியில் வரும் ஒரு சிற்றின்பச் சுவை மிக்க கற்பனைப் பகுதி.

ஒரு வரலாற்றுப் போரையும் ஒரு பேய்க்கதையையும் இணைப்பது எவ்வளவு வித்தியாசமான கற்பனை?

கேள்வி : சங்க இலக்கியங்களில் உள்ள தமிழ் தமிழ் மொழியா என்னும் அளவுக்கு உள்ளது. வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. அவைகள் வேறு ஏதோ மொழிக்காக தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருக்கின்றன. அந்த வார்த்தைகள்தான் அக்காலத்தில் வழக்குச் சொல்லாக இருந்தனவா? இல்லையெனில் புலவர்கள் தங்கள் பழமையை வெளிப்படுத்த அத்தகைய சிக்கலான சொற்களைக் கையாண்டுள்ளார்களா? – பாண்டியன் – ராமநாதபுரம்

பதில்: உண்மையில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறைவு, மிகக் குறைவு. சங்க இலக்கியம் படிக்கும்போது  நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மொழியைப் படிக்கிறீர்கள். மொழி காலத்தாலும் இடத்தாலும் வேறுபடக் கூடியதுதானே?  ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த பல வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்போது இருந்த பெரியவர்களுக்கு- அவர்கள் இருந்தால்- இப்போது உள்ள தமிழ் சுத்தமாகப் புரி யாது. ஐம்பதாண்டுகளிலேயே இவ்வளவு மாற்றம் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தமொழி எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

உங்களுக்கு ஒரு சில மொழிகளேனும் நன்றாகத் தெரிந்தால் இந்தக் கேள்வியே எழாது. ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும்- ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமே (சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது சுத்தமாகப் புரியாது. அவ்வளவு மாற்றம். பிற எல்லா மொழிகளுமே அப்படித் தான். சமசுகிருதம் ஒன்றைத்தான் செயற்கையானதாக, உச்சரிப்பு மாறாததாக வைத்திருக்கவேண்டும் என்று “செம்மைப்படுத்தியதால்” அது மாறாததாக ஓரள வுக்கு இருக்கிறது. அதே சமசுகிருதத்தின் பேச்சுமொழி வடிவமான பிராகிருதம்-இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்தது-அபபிரம்சமாக உரு மாறி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, இந்தி என்பதுபோல பல மொழிகளாக மாறிவிட்டது. இவற்றோடு எல்லாம் ஒப்பிடும்போது தமிழின் மாற்றம் மிகக் குறைவு. இன்றைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புரிகிறதே. (கேளிர் என்பது மட்டும் சற்றே கடினமான சொல்.) அல்லது செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்றால் புரிகிறதே. அதனால் உங்கள் கூற்று ஓரளவு உண்மை. உங்கள் பிற கேள்விகளுக்கு பதில்கள்.

1. தமிழ்ச் சொற்கள், தமிழுக்காக மட்டுமே உருவானவைதான். வேறு எந்த மொழிக்காகவும் அல்ல. இதுதான் எந்த மொழிக்குமே உள்ளது.

2. அந்தச் சொற்கள்தான் அந்தக் காலத்தில் வழக்குச் சொற்களாக இருந்தன.

3. புலவர்கள் செயற்கையான பழந்தமிழில் எழுதினால் நிற்காது. இந்தக் காலத்தில்கூடப் பெருஞ்சித்திரனார் போன்ற சிலர் அக்கால வழக்கைக் கையாண்டு கவிதை எழுதிப்பார்த்தார்கள். ஆனால் அவற்றைப் படிப்போர் இல்லை. எந்தக் காலமாக இருந்தாலும், அந்தந்தக் காலத்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினால்தான் மக்கள் படிப்பார்கள்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 3

c03115lb
கேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£? மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா?  செ.ராஜ்குமார் சென்னை

பதில்:
 இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ஏன் அப்படி? உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள்? தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும்? உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது.  இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.

கேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே? தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது? சரவணன், மேட்டூர்

பதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.

சமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.

சங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.

வடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.

இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலாம்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.

சமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.

உதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.

கேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்னஅதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன? கிருஷ்ணன், சென்னை

பதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)

2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும்? மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.

4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.

5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.

6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்களை சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.

7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.

இப்படி இன்னும் பலப்பல……

தமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள்,  இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது? (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)

அறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள்? நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது? நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன? சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது  ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.

கேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையேஅது கடினம் என்றால்வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன? செந்தில் குமார், மதுரை

பதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.

வெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது? பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தானான/ – /தானான/

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தான்.

என்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள்! (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).

அல்லது,

தானன / தானன / தானன/ தானன /

தானன / தானன / தானன / – / தானன /

தானன / தானன / தானன / தானன /

தானன / தானன / தான்.

தானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனம்.

இவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.

கேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும்,சித்தமருத்துவம் தமிழிலும்ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதேஇப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே? குமார், கலிபோர்னியா

பதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.

1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா? எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.

3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.

4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.

5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

வடநாட்டில்-பீகாரில் கூட கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பல கருத்துகள்  தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.


வாக்களிப்பது கட்டாயமா….?

voting-1
ஆட்சியைப் பிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, ஆட்சிக்கு அவ்வளவாகச் சம்பந்தமில்லாத இடைத்தேர்தலோ, ஊராட்சி மன்றத் தேர்தலோ எதுவானாலும் நம் ஊடகங்கள் அனைத்தும்-சொல்லும் சேதி அனைவரும் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பது நம் கடமை என்பதுதான்.

இதில் மட்டும் கருத்து வேறுபாடே இல்லை- “வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றும் “வாக்களிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை வரை தரலாம்” என்றும் ஊடக மக்கள் பிரதிநிதிகள் முழங்குகிறார்கள்.  ஏன் வாக்களிக்கவேண்டும்? அதுவும் கட்டாயமாக? பெரிய கட்சிகளான ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலுமே நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வாக்க ளிக்க வேண்டிய அவசியம் என்ன? லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுவாங்குபவர் ஒருவராவது உண்டா?. ஒரே ஒரு ஊழல்புகார் அல்லது கொலை கொள்ளைக் குற்றம், அல்லது வேறு குற்றங்கள் இல்லாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டா?

நீதிமன்றங்களுக்கு,ம் லோகாயுக்தா மன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கும் வெட்க மில்லை?

சரி, பெரிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய்? சின்னக் கட்சிகளுக்குப் போடு. அல்லது சுயேச்சைகளுக்குப் போடு என்பார்கள் நம் மக்கள் பிரதிநிதிகள். இவர்களுக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்யப்போகிறார்கள்? ஒன்று: மாறிமாறி இது ஆட்சியமைக்குமா, அது ஆட்சியமைக்குமா என்ற நிலை வரும்போது விலைபோவார்கள். தங்களை அதன்மூலம் வளப்படுத்திக்கொள்வார்கள். அல்லது எதுவும் செய்ய இயலாமல் வக்கற்ற நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். சட்டமன்றத்துக்காவது போவார்களா, ஏதாவது சட்டம் வரக் கூடுமானால் கையைக்கூட உயர்த்துவார்களா என்பதே சந்தேகம்தான்.

இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக் கும்போது “வாக்களி, வாக்களி” என்று ஏன் கேட்கிறார்களோ ? ஒருவன்-நல்லது செய்வேன் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட முடியும்£? முதலில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்குங்கள், அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தம் செய்யுங்கள்.  பிறகு “வாக்களியுங்கள்’ என்று கேளுங்கள்..

அவ்வளவு வேண்டாம். சரிவரச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று ஒரு எளிய சட்டம் கொண்டு வாருங்களேன் பார்க்கலாம்-பிறகு நாங்கள்  கட்டாயம் வாக்களிக்கிறோம்..

“இந்தத் தேர்தலில் நிற்பவர்கள் எவருமே எனக்குப் பிடிக்கவில்லை, நான் வாக்களிக்கமாட்டேன்” என்றால் ஒரு படிவம் கொடுத்துப் பூர்த்திசெய்யச் சொல்லி, முகவரி எழுதச்சொல்லி, கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள்.  (இதெல்லாம் தெரிந்து கொண்டவுடனே நம் அரசியல் தலைவர்களும் காவல்துறையினரும்  ஒன்றுசேர்ந்து நீ தீவிரவாதி என்று முத்திரை குத்தி அடித்துநொறுக்கி சிறையில் தள்ளுவார்கள்) எப்படி வாக்களிப்பது மறைவாக வைக்கப் படுகிறதோ அதுபோல விருப்பமின்மையையும் மறைவாக வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்புறம் வாக்களிக்க மக்கள் ஏன் தயங்குகிறார்கள், பயப்படு கிறார்கள்?

அதாவது, வாக்களிக்கும் எந்திரத்தில், வாக்காளர் பட்டியலுக்கு பொத்தான் விளக்கெல்லாம் தயாரிப்பதுபோலவே, எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கும் ஒரு பொத்தான் பொருத்துங்கள். அதனால் என்ன இழப்பு?

எத்தனை கோடிரூபாய்கள் ஒருநாள் பாராளுமன்றத்திற்கு, ஒருநாள் சட்ட சபை நடத்துவதற்குச் செலவாகின்றன? எவ்வளவு இலவசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் மன்றத்திற்கு வர வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா? மன்றத்தை ஒழுங்காக நடத்தவிடவேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா?

ஆக மக்கள் நாயகத்தைக் கொல்வது வாக்களிக்க விருப்பமில்லாதவர்களா, அரசியல்வாதிகளும் தேர்தல்  அவர்கள் அடிவருடிகளுமா?