நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 6

aa
கேள்வி: துரை என்பது தமிழ்ச்சொல்லா? மக்கள் எந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்?

பதில்:
 துரை என்ற சொல்லின் மூலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல் ஐரோப்பியர்கள் நம் நாட்டில் வந்தபிறகுதான் புழக்கத்திற்கு வந்தது. மேலானவர், பதவியில் உயர்ந்தவர் என்ற பொருளில் பொதுவாக ஆங்கிலேயர்களையும், குறிப்பாக அதிகாரிகளையும் துரை என்று அழைப்பது பழக்கமாக இருந்தது. பிறகு அது மக்களின் சிறப்புப் பெயராகவும் காலப்போக்கில் (துரை, துரையரசன், துரைராஜ், பெரியதுரை, தருமதுரை, தம்பிதுரை என்பவை போல) மாறிவிட்டது. இந்தப் பெயர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு காணமுடியவில்லை.
கேள்வி: ஆன்மிகத்தில் அத்வைதம், துவைதம் என்று கூறுகிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
பதில்: 
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவை நம் இந்தியத் தத்துவத்தில் வழங்கும் சொற்கள். ஆன்மிகம் வேறு, தத்துவம் வேறு என்பது என் கருத்து. இந்த மூன்று தத்துவங்களுமே தென்னாட்டில் ஏற்பட்டவை. அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர் ஆதிசங்கரர். அவர் பிறந்த இடம் இன்று கேரளாவில் உள்ள காலடி என்ற ஊர் (அக்காலத்தில்-கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அது தமிழகம்). விசிஷ்டாத் வைதக் கொள்கையை உருவாக்கிய இராமாநுஜர் திருப்பெரும்புதூரைச் சேர்ந்தவர். துவைதக் கொள்கையை உருவாக்கிய மத்வர், உடுப்பியைச் சேர்ந்தவர்.
அத்வைதம் என்பது ஒருமைக் கொள்கை ((monism). அ+த்வைதம். இரண்டு அல்லாதது, ஒன்று, என்பது பொருள். த்வைதம் என்பது இருமைக் கொள்கை (dualism). சுருக்கமா கச் சொல்வதானால், பழங்காலத்தில் ஆன்மாவும் (அதாவது உயிர்களும்) இறைவனும் (தத்துவச் சொல்லாடலில் பிரம்மம்) ஒன்றா, வெவ்வேறா-குறிப்பாக ஜீவன்கள் முக்தி அடைந்தபின் இறைநிலை அடைகின்றனவா, அல்லது இறைவனுக்கு வேறான நிலை யில் உள்ளனவா என்ற கேள்வி பற்றி யோசித்ததன் விளைவு இவை. இறைவனும் ஆன்மாக்களும் வெவ்வேறு அல்ல (இறைவன் பரமாத்மா, மனிதன் ஜீவாத்மா) என்பது அத்வைதம். இவை வெவ்வேறானவை (ஒன்றல்ல, இரண்டுதான்) என்பது துவைதம். மேற்குநாட்டிலும் ஒருமைக்கொள்கை, இருமைக் கொள்கை உண்டு. spirit and matter இவை ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி அது.

கேள்வி: பார்ப்பன வெறுப்பு தமிழ்நாட்டில் ஏன் ஏற்பட்டது? – சதாசிவம், பெங்களூர்

இந்தக் கேள்வி தவறு. பார்ப்பன வெறுப்பு ஏற்படவில்லை, பார்ப்பனிய வெறுப்புதான் ஏற்பட்டது. பார்ப்பனியம் என்பது ஒரு தத்துவம், கொள்கை. அதைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லாச் சாதியினருமே கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவராகப் பிறந்தும், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட பிறகு இன்றைய பார்ப்பனர்களைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சாதி மக்களையே இழிவாக நோக்கும் தலித்துகளும் பார்ப்பனியத்தில் திளைப்பவர்கள்தான். பார்ப்பனர்களைப்போலவே தங்களுக்குக் கீழுள்ளவர்களை இழிவாக நினைக்கின்ற வேளாளர்கள் போன்ற சாதியினரும் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள்தான்.
எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் மேல்-கீழ், உயர்ந்த-தாழ்ந்த என்ற வேறு பாடு இல்லையா என்று பலர் கேட்கிறார்கள். பிற மதங்களில் இல்லையா என்ற கேள் வியையும் எழுப்புகிறார்கள். இதற்கு விடை எளியது. பிற நாடுகளிலும், பிற மதங்களி லும், ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது பிறப்பினால் ஏற்படுகிறது என்றும் அப்படிக் கடவுள் (பிரம்மா) எழுதிவைத்தார் என்றும் நியாயப் படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே நிகழ்கிறது. இதுதான் பார்ப்பனியம். இப்படிப் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு என்றால் இந்த மதத்தில் இருப்பதற்கு நாம் வெட்கப்படுகிறோம்.


தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை

Music-e1339701935618-1024x707
திரைப்படப் பாடல்கள் எல்லாம் கவிதை என்று எத்தனையோ பேர்-கல்லூரிப் பேராசிரியர்கள், நன்கு கற்றவர்கள் உள்பட-நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள்மேல் தப்பில்லை. காலம் காலமாக நாம் இலக்கியத்தை-செய்யுள் வடிவில் எழுதப்பட்டதை எல்லாம் பாடல் என்றே சொல்லி வந்திருக்கிறோம். உதாரணமாக “இந்தச் சங்கப்பாடல் கடினமாக இருக்கிறது” என்போம்.

ஆனால் பாடல் வேறு, கவிதை வேறு. இது காலம்காலமாக-நான் ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் கருத்து. அது மட்டுமல்ல, செய்யுள் என்பதும் வேறுதான். ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகள் முன்னால் இந்தப் பிரிவுகளுக்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலக் கல்வி வளர்ந்து, ஆங்கில முறையைப் பின்பற்றி நாம் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றெல்லாம் ஆளத்தொடங்கிய பிறகு, முன்புபோலப் பேசினால் அர்த்தமில்லை.

முதலில் செய்யுள் என்ற சொல். இதை நாம் உடன்பாடாகவோ (பாசிடிவாகவோ), எதிர்மறையாகவோ (நெகடிவாகவோ) எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் என்றால் செய்யப்பட்ட ஒன்று என்று அர்த்தம். அது கவிதையாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம், புதுக்கவிதையாகவும்கூட இருக்கலாம். ஆனால் பொதுவழக்கின்படி, யாப்பின்படி அமைந்த, கவிதையாகாமல் போய்விட்ட ஒன்றிற்குத்தான் செய்யுள் என்று பெயர்.

அண்ணன்  என்பவன்  தம்பிக்கு  மூத்தவன்

திண்ணை  என்பது தெருவிலே  உள்ளது

கண்ணன்  என்பவன்  கண்ணிரண்டு  உள்ளவன்

வெண்ணெய்  என்பது  பாலினில்  விளைவதே.

இது செய்யுள் என்பதற்கு பேராசிரியர் கைலாசபதி தந்த எடுத்துக்காட்டு. இதில் யாப்பு மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்று நமது நண்பர்கள் கருதமாட்டார்கள் என்பது நிச்சயம்!

கவிதை என்பது ஓர் அனுபவத்தை மனத்திற்குள் விதைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒன்று. அது யாப்பில் அமைந்திருக்கலாம், யாப்பில் இல்லாமலும் இருக்கலாம். யாப்பில் இல்லாததைப் புதுக்கவிதை என்றும் மற்றதை மரபுக் கவிதை என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மிகச் சிறிய கவிதை இதோ-

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.

வருகிறோம்-போகிறோம் என்ற இருமை எதிர்வையும், இருப்பதற்கென்றுதான்-இல்லாமல் என்ற முரண்பாட்டையும் பாருங்கள். எவ்வளவு அற்புதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறது!

இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது பாட்டு. பாட்டு, இசை என்ற கைத்தடி இல்லாமல் நடக்கமுடியாது. ஸ்வரம் மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்வரங்களால் ஆன ராகத்தைப் பாட்டு கொண்டிருக்கவேண்டும், லயம் என்ற தாளத்திற்கேற்ப அது நடக்கவேண்டும்-அதாவது பாடப்பட வேண்டும்.

கவிதை பாடப்படவேண்டிய அவசியம் இல்லாதது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் கவிதையை-இது நிச்சயம் கவிதை-எந்த ராகத்தில் பாடுவது? பாடுவதுதான் தேவையா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கக்கவிதையை எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் பாடுவது? இவற்றைப் படித்து அனுபவிப்பது, உணர்வதுதான் முக்கியம்.

திரைப்படப் பாடல்கள் எல்லாம் பாட்டுகள்தான். பாட்டுகளில் வார்த்தை இல்லாத இடத்தை லாலாலாலா, ராராரீரீ, டபக் டபக்கு டபக்குதான், சிங்கிரி சிச்சான் சிச்சான் ங்ங்கொய்யா என்று எதையாவது போட்டு நிரப்பிவிடுவார்கள். பழைய பாகவதர்கள் என்றால் ஆலாபனையிலேயே இழுத்துவிடுவார்கள். ஆக, இசைக்காக, தாளத்துக்காக எழுதப்பட்டதைப் பாட்டு என்கிறோம். பழைய காலத் திலேயே ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆளுங்கோ ரவுண்டானா அசந்துட்டா டஹல்தானா என்று திரைப்படப் பாட்டு எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையதாஸ்.

ஆகவே பாட்டு வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்று தெரிந்து கொள்வது நல்லது. பாட்டு எழுதுபவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. லிரிசிஸ்டு என்பார்கள் ஆங்கிலத்தில். பொயட் என்று அந்தஸ்து தரமாட்டார்கள். நம் ஊரில்தான் பாட்டு எழுதுபவன் எல்லாருமே கவிஞன் என்று போட்டுக்கொள்கிறான்.

நாம் இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களுடனே வாழ்ந்து திரைப் படப் பாடல்களுடனே சாகிறோம். குழந்தை பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே சினிமாப்பாடல் பழக்கமாகிவிடுகிறது.

பாட்டு கவிதை இல்லை என்று சொன்னதால் கெட்டது என்று அர்த்த மில்லை. நம் திருவையாற்றில், பிறகு சென்னையில் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய சங்கீதத் திருவிழா நடத்துகிறார்களே, எதற்கு? எல்லாம் தியாகராஜ சுவாமிகள் செய்த தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு (பாடல்களுக்கு)த்தான்.

அப்பர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி, வள்ளலார் வரைக்கும் இறைவன்மீது பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வள்ளலார் கீர்த்தனைகளும் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதி தாசன் இசையமுது இயற்றியிருக்கிறார். இவையெல்லாம் நல்ல பாட்டுகள் (அதாவது ஏதோ ஒரு இலட்சியத்தைக் கொண்டு அமைந்த பாடல்கள்) என்று சொல்லலாம். இலட்சியமில்லாத பாட்டுகளையும், பாட்டு எழுதுபவன் வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத பாட்டுகளையும் நான் மோசமான பாட்டுகள் என்பேன்.

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஆகா, என்ன அற்புதமான வரிகள், எவ்வளவு அற்புதமான கருத்து என்று பாராட்டத் தொடங்கிவிடுவீர்களே? இதை எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியும்.

இது உண்மையான, இலட்சியப் பாட்டு என்றால், அந்தப் பாடலாசிரிய ருக்கு வானம் என்ற போதிமரம் நாளும் தந்த சேதி என்ன? கோடிகோடியாகக் குவித்துக்கொள், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதா? இந்த ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள், நன்றாக இவர்களை எந்த உருவகத்தையாவது போட்டு ஏமாற்று என்பதா? அதனால்தான் இதுபோன்றவற்றைப் போலிப்பாட்டுகள், ஏமாற்றுப் பாட்டுகள், வணிகப்பாட்டுகள் என்கிறோம். அந்த நேரக் கவர்ச்சிதான் இதற்கெல் லாம் முக்கியம். அதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் மிக முக்கியமான குணம், பெண்    அடிமைத்தனத்தை உருவாக்குவது. சிறு குழந்தை முதலாகவே திரைப்படப் பாடல்கள் மனத்தில் நம்மை அறியாமல் பதிந்து நம்மை ஆட்சிசெய்துகொண்டே இருப்பதால், பெண் அடிமைத்தனம்-அதாவது பெண்களை அடிமைகளாக நினைப்பது, இரண்டாந்தர மனிதர்களாக நினைப்பது என்ற பண்பு ஆண்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பெண்களுக்குத் தங்கள் அடிமைத்தனத்தை இது இயல்பானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

இதற்கு விதிவிலக்கான திரைப்படப்பாடல்கள் மிகக் குறைவு. ஒரு சதவீதம் தேறுவதுகூடக் கடினம். உதாரணத்திற்கு சில பாடல்களை நாம் பார்க்கலாம். நான் எங்கள் காலத்திலிருந்து (ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) எங்களை பாதித்த-நல்ல இனிமையான பாடல்கள் என்று கருதப்பட்டவற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

1968இல் வெளிவந்த ஒரு பாட்டு-நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்….என்று செல்வது. உங்களில் பலபேருக்குத் தெரியும் இது.

பலபேர் இது ஒரு நல்ல காதல்பாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு காதலன் தன் காதலியைக் கேள்வி கேட்பது போலவும், காதலி அதற்கு விடை சொல்வதுபோலவும் அமைந்திருக்கிறது. காதலன் கேட்கிறான்-

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளைகொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார்?

(இதையெல்லாம் இந்தக் காதலனே செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம், இது மரபாம்.) அந்தக் காவியக் காதலி அவ்வளவு சுரணை உள்ளவள் அல்ல. அவள் சற்றும் கோபமில்லாமல் சொல்கிறாள்-

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்கிறாள். உண்மை கூறவாம், நினைத்துப்பாருங்கள், எவ்வளவு மோசம் என்று.

இன்னும் பழங்காலப் பாட்டு ஒன்று.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

பெண்ணுக்குச் சிந்திப்பதற்கும் தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிமை கொஞ்சம்கூட இல்லையா?

முதல்வராய் இருந்த ஒரு நடிகரின் பாட்டுகளில் பெண் அடிமைத்தனம் மிகப் பச்சையாகவே இருக்கும். ஒரு திரைப்படத்தில் வரும் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே-இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே” என்ற பாட்டைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். அல்லது “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாட்டைக் கேட்டுப்பாருங்கள். இதில் புரட்டிப்பார்ப்பது, பள்ளியறை என்ற சிலேடை (இரண்டு அர்த்தம் தொனிக்கும் சொற்கள்) வேறு.

இப்படி புத்தகம், கித்தகம் என்ற நல்ல சொற்கள்கூட இல்லாமல்போய், இப்போது சினிமாப் பாட்டுகளில் பெண்ணைக் கட்டையாக்கி, ஃபிகர் ஆக்கிவிட்டார்கள். சற்றும் கூச்சமில்லாமல் நாட்டுக்கட்டே நாட்டுக்கட்டே என்று பெண்ணை விளிக்கிறான் ஆண். பெண்ணும் சற்றும் தயக்கமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். போய் உண்மையாகவே கிராமத்தில் விளித்துப்பாருங்கள். விளைவு என்னவென்று தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பொது இடத்தில்- ஏற்றுக்கொள்ளும், பாடும் மனம்-திருவிழாவில் ரிகார்டு போடும் மனப்பான்மை எப்படி உண் டாயிற்று? அதுதான் ஈவ்டீசிங் முதலிய கொடுமைகளுக்குக் காரணம். இப்படிப் பாடல் எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.


சுயநல அரக்கன் (சிறுகதை)

ஆஸ்கார் ஒயில்டு  –  தமிழில் க.பூரணச்சந்திரன்

garden
(சிறந்த கூர்மதியாளர். ஆஸ்கார் ஒயில்டு, டப்ளின் நகரில் 1854இல் பிறந்தார். நாவல்கள், கட்டுரைகள் முதலியன தவிர Importance of being Earnest போன்ற நாடகங்களை எழுதினார். சிறுவர்களுக்காக Happy Prince போன்ற சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு சிறுகதை)

ஒவ்வொரு நாள் மாலையிலும், பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது சிறுவர்கள் அந்த அரக்கனின் தோட்டத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம்.

மென்மையான பசும்புல் தரைகொண்ட பெரிய அழகான தோட்டம். ஆங்காங்கு புற்களின் மத்தியில் நட்சத்திரங்கள் போல் சிறிய பூக்கள். பன்னிரண்டு பீச் மரங்கள். வசந்த காலத்தில் இளஞ்சிவப்பிலும் முத்துநிறத்திலும் பூக்கும். இலையுதிர்காலத்தில் பழங்கள் நிறைந்திருக்கும். மரங்களில் பறவைகள் அமர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டையும் நிறுத்திவிட்டு அந்தப் பாட்டுகளைக் கேட்பார்கள். “ஆஹா, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் அரக்கன் திரும்பிவந்தான். தனது நண்பனான கார்னிஷ் ராட்சஸ னைப் பார்க்கச் சென்றிருந்தான் அவன். அப்படியே ஏழாண்டுகள் அவனுடன் தங்கி விட்டான். ஏழாண்டுகளில் அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அவனது உரையாடுவது மிகக்குறைவு. தனது மாளிகைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வந்தபோது தனது தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று சீறும் குரலில் கத்தினான். பிள்ளைகள் ஓடிப்போய்விட்டார்கள்.

“என் தோட்டம் எனக்கு மட்டும்தான்” என்றான் அரக்கன். “எல்லோருக்கும் இது புரியும். இதில் என்னைத் தவிர வேறு எவரும் விளையாட அனுமதிக்கமாட் டேன்” என்றான். அதைச் சுற்றி ஒரு உயர்ந்த சுவரை எழுப்பினான். ஒரு அறிவிப்புப் பலகையை அதில் தொங்கவிட்டான்.

அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

மிகவும் சுயநலம்பிடித்த அரக்கன்தான் அவன்.

பிள்ளைகளுக்கு இப்போது விளையாட வேறு இடம் இல்லை. தெருக்களில் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் அவை புழுதியாகவும் கூர்கற்களோடும் இருந்தன. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. தங்கள் பாடங்கள் முடிந்தபிறகு அந்தச் சுவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். உள்ளேயிருக்கும் அழகான தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள். “எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்” என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தம் வந்தது. நாடு முழுவதும் சிறிய மலர்களும் சிறிய பறவைகளும் தென் பட்டன. சுயநல அரக்கனின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. சிறுவர்கள் இல்லாததால் அதில் பறவைகள் சென்று பாட அக்கறைகொள்ளவில்லை. மரங்களும் பூக்க மறந்துவிட்டன. ஒருமுறை ஓர் அழகான பூ, புற்களுக்கு மத்தியிலிருந்து தலையை நீட்டியது. அறிவிப்புப் பலகையை அது பார்த்ததும் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் தரைக்குள் தூங்கப்போய்விட்டது. கடுங்குளிரும் உறைபனியும் மட்டுமே அங்கு சந்தோஷமாக இருந்தன. “வசந்தம் இந்தத் தோட்டத்தை மறந்து போய்விட்டது. எனவே இங்கே வருஷமுழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்” என்றன அவை. உறைபனி தன் பரந்த வெண்மையான போர்வையால் புற்களை மூடியது. கடுங்குளிர் எல்லா மரங்களையும் வெள்ளி நிறமாக்கியது. பிறகு அவை வாடைக்காற்றைத் தங்களோடிருக்குமாறு அழைத்தன. அதுவும் வந்தது. அது கம்பள மேலாடையை அணிந்திருந்தது. தோட்டத்தில் நாள் முழுவதும் சுற்றிக் கூச்சலிட்டது. புகைபோக்கிகளைக் கவிழ்த்தது. “மிகவும் சந்தோஷமான இடம்”. “நாம் ஆலங்கட்டி மழையையும் ஒரு சுற்று வந்துபோகச் சொல்லலாம்” என்றது. பனிக்கட்டி மழையும் வந்தது. தினசரி மாளிகையின் கூரையில் மூன்று மணிநேரம் அடிஅடி என்று அடித்தது. பெரும்பாலான பலகைகள் பெயர்ந்தே விட்டன. பிறகு அது தோட்டத்தில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சுற்றிச்சுற்றி ஓடியது. சாம்பல் நிற உடையை அணிந்திருந்தது அது. அதன்மூச்சே பனிக்கட்டிபோல் இருந்தது.

தன் ஜன்னலருகே அமர்ந்து குளிர்ந்த வெண்ணிறத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுயநல அரக்கன், “ஏன் வசந்தம் வர இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று புரியவில்லையே” என்று சொல்லிக்கொண்டான். “அன்றாடத் தட்பவெப்ப நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.”

ஆனால் வசந்தமும் வரவில்லை, கோடையும் வரவில்லை. இலையுதிர் காலம் எல்லாத் தோட்டங்களுக்கும் பொன்னிறக் கனிகளைக் கொடுத்துச் சென்றது, ஆனால் இந்தத் தோட்டத்தில் ஒன்றுமில்லை. “ரொம்பவும் சுயநலக்காரன்” என்று அது சொல்லியது. அதனால் எப்போதுமே அங்கு பனிக்காலமாக இருந்தது. வாடைக்காற்றும் ஆலங்கட்டி மழையும் வெண்பனியும் உறைபனியும் மரங்களினூடே சந்தோஷ தாண்டவம் புரிந்தன.

snow-landscapes-
ஒருநாள் காலை. அரக்கன் தன் படுக்கையில் கண்விழித்துப் படுத்திருந்தான். ஓர் இனிய இசை கேட்டது. அரசனின் சங்கீதக் குழுவினர் அந்த வழியாகச் செல்கிறார்கள் என்று நினைத்தான். கடைசியில், அவன் ஜன்னலுக்கருகில் பாடிய சிறு லின்னட் பறவைதான் அது. ஆனால் அவன் தன் தோட்டத்தில் பறவைகளின் பாடலையே கேட்டுப் பலகாலம் ஆனதால் அவனுக்கு உலகிலேயே மிகச் சிறந்த இசை அதுதான் என்று தோன்றியது. உடனே ஆலங்கட்டி மழை அங்கு நடனமிடுவதை நிறுத்தியது. வாடைக்காற்று ஓலமிடுவதை நிறுத்தியது. திறந்த ஜன்னலின் வழியே ஒரு இனிய வாசம் வந்தது. “கடைசியாக வசந்தம் வந்துவிட்டது” என்று நினைக்கிறேன் என்றான். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து வெளியே நோக்கினான்.

அவன் கண்ணுக்குத் தென்பட்டது என்ன?

மிக ஆச்சரியமான ஒரு காட்சி. சுவரிலிருந்த ஒரு சிறிய ஓட்டையின் வழியாகச் சிறார்கள்  உள்ளே வந்துவிட்டார்கள். மரக்கிளைகளின் மீது அவர் கள் உட்கார்ந்திருந்தார்கள். காணமுடிந்த ஒவ்வொரு மரத்தின் கிளையிலும் ஒரு குழந்தை. மரங்களுக்குத் திரும்பக் குழந்தைகள் வந்தது பெரும் சந்தோஷம். அவை தங்களைப் பூக்களால் அலங்கரித்துக் கொண்டன. தங்கள் கிளைகளைக் குழந்தைகளின் தலைகளைச் சுற்றி மென்மையாக வீசின. மகிழ்ச்சியோடு பறவைகள் சுற்றிப்பறந்து கூச்சலிட்டன. புற்களின் இடையே இருந்து சிறுபூக்கள் சிரித்தன. மிக அழகான காட்சி, ஆனால் ஒரு மூலையில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. தோட்டத்தின் தொலைதூர மூலை அது. அங்கே ஒரு சிறுபையன் நின்றிருந்தான். மிகச்சிறியவனாக இருந்ததால் மரத்தின்மீது அவனால் ஏறமுடியவில்லை. அழுதுகொண்டே அதைச் சுற்றிச்சுற்றி வந்தான். பாவம், அந்த மரத்தில் மட்டும் வெண்பனியும் உறைபனியும் தங்கியிருந்தன. வாடைக்காற்று அதைச் சுற்றி வீசி ஓலமிட்டது. “சின்னப் பையா, ஏறு” என்றது மரம். தன்னால் இயன்ற அளவு கிளைகளைத் தாழ்த்தியது. ஆனால் பையன் மிகச் சின்னவன்.

அதைப் பார்த்து அரக்கனின் உள்ளம் நெகிழ்ந்தது. “எவ்வளவு சுயநலத்தோடு இருந்துவிட்டேன்” என்றான். “ஏன் இங்கே வசந்தம் வரவில்லை என்று இப்போது புரிகிறது. அந்தப் பையனை மரத்தில் அமர்த்துவேன். சுவரை இடித்துத் தள்ளுவேன். இந்தத் தோட்டம் என்றைக்கும் என்றைக்குமாகப் பிள்ளைகளின் விளையாட்டுக் களமாக இருக்கும்.” தான் செய்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்தினான் அவன்.

கீழே இறங்கிவந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் அவனைப் பார்த்ததும் சிறுவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். மீண்டும் தோட்டத்தில் வாடைக்காலம்தான். அந்தச் சின்னஞ் சிறுவன் மட்டுமே ஓடவில்லை. அவன் கண்களில் நீர்நிறைந்து பார்வையை மறைத்திருந்தது. மெதுவாக அவன் பின்னால் சென்ற அரக்கன் கையில் மென்மையாக அவனைத் தூக்கி ஒரு கிளையில் அமரவைத்தான். மரம் உடனே பூத்துக்குலுங்கியது. பறவைகள் அதில் அமர்ந்து பாடின. சிறுவன் தன் இருகைகளையும் அரக்கனின் கழுத்தைச்சுற்றி வீசிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். அரக்கன் முன்போல் இல்லாததைக் கண்ட பிற சிறார்களும் திரும்ப ஓடிவந்தார்கள். அவர்களுடன் வசந்தமும் வந்தது. “சின்னப் பசங் களே, இனிமேல் இது உங்கள் தோட்டம்” என்றான் அரக்கன். பெரிய கடப்பாறை எடுத்துச் சுவரை இடித்துத் தள்ளினான். பகல் பன்னிரண்டு மணிக்கும், மக்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது, மிக அழகான தோட்டத்தில் அரக்கன் சிறுவர் களோடு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடினார்கள். இருட்டும் நேரத்தில் அரக்கனிடம் விடைசொல்லிக்கொண்டுபோகச் சிறுவர்கள் வந்தார்கள்.

“உங்கள் சின்னஞ்சிறு தோழன் எங்கே? நான் மரத்தில் ஏற்றி உட்கார வைத்தேனே, அவன்” தன்னை முத்தமிட்டதால் அந்தச் சிறுவனை அரக்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் அவர்கள். “அவன் போய்விட்டிருப்பான்.”

“நாளைக்கு நிச்சயமாக அவனை வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்றான் அரக்கன். ஆனால் பிள்ளைகளுக்கு அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவனை இதற்குமுன்னால் பார்த்ததும் கிடையாது. அரக்கனுக்கு வருத்தமாக இருந்தது.

ஒவ்வொரு மாலையும், பள்ளிக்கூடம் விட்டபிறகு, பிள்ளைகள் வந்து அரக்கனோடு விளையாடினார்கள். ஆனால் அரக்கன் நேசித்த அந்தச் சின்னஞ்சிறு வன் வரவேயில்லை. எல்லாச் சிறுவர்களுடனும் அரக்கன் மிக அன்பாக இருந்தான். என்றாலும் தன் முதல் தோழனுக்காக அவன் ஏங்கினான். அவனைப்பற்றி அடிக்கடி பேசினான். “அவனைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறிவந்தான்.

ஆண்டுகள் சென்றன. அரக்கனுக்குத் தள்ளாமல் போய்விட்டது. வலிமை குறைந்துவிட்டது. சுற்றிவிளையாட முடியவில்லை. பெரிய சாய்வுநாற்காலியில் அமர்ந்து சிறார்கள் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். தனது தோட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டான். “என்னைச்சுற்றி அழகான பூக்கள் பல இருக்கின்றன. ஆனால் சிறுவர்கள்தான் மிக அழகான பூக்கள்.”

ஒரு பனிக்காலத்தில் காலை எழுந்து உடை உடுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னனலின் வழியே பார்த்தான். இப்போது அவனுக்குப் பனிக்காலம் என்றால் வெறுப்பு இல்லை. வசந்தம் ஓய்வெடுக்கும் காலம் அது, அவ்வளவுதான். பூக்களும் ஓய்வெடுக்கின்றன.

திடீரெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான், மறுபடி பார்த்தான். மிக ஆச்சரியகரமான காட்சிதான் அது. தூரத்து மூலையில் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பூத்துக்குலுங்கியது. அதன் கிளைகள் பொன்னிறம். வெண்நிறப் பழங்கள் அவற்றிலிருந்து தொங்கின. அவன் நேசித்த சின்னஞ்சிறுவன் அதன்கீழ் நின்றுகொண்டிருந்தான்.

பெரும் சந்தோஷம் கவிய, அரக்கன் படிகளில் இறங்கி தோட்டத்திற்குள் புல்தரையில் விரைந்து ஓடினான். சிறுவன் அருகில் சென்றான். மிகநெருக்கத்தில் வந்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. “உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆணிகள் குத்திய காயங்கள். அதேபோல் இரு பாதங்களிலும்.

“உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” கத்தினான் அரக்கன். “சொல். என் பெரிய வாளை எடுத்துச் சென்று அவனைக் கொன்றுபோடுகிறேன்.”

“இல்லை” என்றான் குழந்தை. “இவை அன்பின் காயங்கள்.”

“யார் நீ?” என்றான் அரக்கன். ஒரு விசித்திரமான பயம் அவனுக்குள் ஏற்பட்டது. குழந்தையின் முன்னால் மண்டியிட்டான்.

சிறுவன் அரக்கனைப் பார்த்து முறுவல் செய்தான். “ஒருசமயம் உன் தோட்டத்தில் என்னை விளையாட அனுமதித்தாய் நீ. இப்போது என்னுடன் என் தோட்டத்திற்கு- விண்ணுலகிற்கு நீ வா” என்றான்.

மாலையில் சிறுவர்கள் விளையாடத் தோட்டத்திற்குள் ஓடிவந்தபோது, அரக்க னின் உடல் அந்த மரத்தடியில் வெண்ணிறப் பூக்களின் போர்வையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.