சுயநல அரக்கன் (சிறுகதை)

ஆஸ்கார் ஒயில்டு  –  தமிழில் க.பூரணச்சந்திரன்

garden
(சிறந்த கூர்மதியாளர். ஆஸ்கார் ஒயில்டு, டப்ளின் நகரில் 1854இல் பிறந்தார். நாவல்கள், கட்டுரைகள் முதலியன தவிர Importance of being Earnest போன்ற நாடகங்களை எழுதினார். சிறுவர்களுக்காக Happy Prince போன்ற சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு சிறுகதை)

ஒவ்வொரு நாள் மாலையிலும், பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது சிறுவர்கள் அந்த அரக்கனின் தோட்டத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம்.

மென்மையான பசும்புல் தரைகொண்ட பெரிய அழகான தோட்டம். ஆங்காங்கு புற்களின் மத்தியில் நட்சத்திரங்கள் போல் சிறிய பூக்கள். பன்னிரண்டு பீச் மரங்கள். வசந்த காலத்தில் இளஞ்சிவப்பிலும் முத்துநிறத்திலும் பூக்கும். இலையுதிர்காலத்தில் பழங்கள் நிறைந்திருக்கும். மரங்களில் பறவைகள் அமர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டையும் நிறுத்திவிட்டு அந்தப் பாட்டுகளைக் கேட்பார்கள். “ஆஹா, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் அரக்கன் திரும்பிவந்தான். தனது நண்பனான கார்னிஷ் ராட்சஸ னைப் பார்க்கச் சென்றிருந்தான் அவன். அப்படியே ஏழாண்டுகள் அவனுடன் தங்கி விட்டான். ஏழாண்டுகளில் அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அவனது உரையாடுவது மிகக்குறைவு. தனது மாளிகைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வந்தபோது தனது தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று சீறும் குரலில் கத்தினான். பிள்ளைகள் ஓடிப்போய்விட்டார்கள்.

“என் தோட்டம் எனக்கு மட்டும்தான்” என்றான் அரக்கன். “எல்லோருக்கும் இது புரியும். இதில் என்னைத் தவிர வேறு எவரும் விளையாட அனுமதிக்கமாட் டேன்” என்றான். அதைச் சுற்றி ஒரு உயர்ந்த சுவரை எழுப்பினான். ஒரு அறிவிப்புப் பலகையை அதில் தொங்கவிட்டான்.

அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

மிகவும் சுயநலம்பிடித்த அரக்கன்தான் அவன்.

பிள்ளைகளுக்கு இப்போது விளையாட வேறு இடம் இல்லை. தெருக்களில் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் அவை புழுதியாகவும் கூர்கற்களோடும் இருந்தன. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. தங்கள் பாடங்கள் முடிந்தபிறகு அந்தச் சுவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். உள்ளேயிருக்கும் அழகான தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள். “எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்” என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தம் வந்தது. நாடு முழுவதும் சிறிய மலர்களும் சிறிய பறவைகளும் தென் பட்டன. சுயநல அரக்கனின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. சிறுவர்கள் இல்லாததால் அதில் பறவைகள் சென்று பாட அக்கறைகொள்ளவில்லை. மரங்களும் பூக்க மறந்துவிட்டன. ஒருமுறை ஓர் அழகான பூ, புற்களுக்கு மத்தியிலிருந்து தலையை நீட்டியது. அறிவிப்புப் பலகையை அது பார்த்ததும் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் தரைக்குள் தூங்கப்போய்விட்டது. கடுங்குளிரும் உறைபனியும் மட்டுமே அங்கு சந்தோஷமாக இருந்தன. “வசந்தம் இந்தத் தோட்டத்தை மறந்து போய்விட்டது. எனவே இங்கே வருஷமுழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்” என்றன அவை. உறைபனி தன் பரந்த வெண்மையான போர்வையால் புற்களை மூடியது. கடுங்குளிர் எல்லா மரங்களையும் வெள்ளி நிறமாக்கியது. பிறகு அவை வாடைக்காற்றைத் தங்களோடிருக்குமாறு அழைத்தன. அதுவும் வந்தது. அது கம்பள மேலாடையை அணிந்திருந்தது. தோட்டத்தில் நாள் முழுவதும் சுற்றிக் கூச்சலிட்டது. புகைபோக்கிகளைக் கவிழ்த்தது. “மிகவும் சந்தோஷமான இடம்”. “நாம் ஆலங்கட்டி மழையையும் ஒரு சுற்று வந்துபோகச் சொல்லலாம்” என்றது. பனிக்கட்டி மழையும் வந்தது. தினசரி மாளிகையின் கூரையில் மூன்று மணிநேரம் அடிஅடி என்று அடித்தது. பெரும்பாலான பலகைகள் பெயர்ந்தே விட்டன. பிறகு அது தோட்டத்தில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சுற்றிச்சுற்றி ஓடியது. சாம்பல் நிற உடையை அணிந்திருந்தது அது. அதன்மூச்சே பனிக்கட்டிபோல் இருந்தது.

தன் ஜன்னலருகே அமர்ந்து குளிர்ந்த வெண்ணிறத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுயநல அரக்கன், “ஏன் வசந்தம் வர இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று புரியவில்லையே” என்று சொல்லிக்கொண்டான். “அன்றாடத் தட்பவெப்ப நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.”

ஆனால் வசந்தமும் வரவில்லை, கோடையும் வரவில்லை. இலையுதிர் காலம் எல்லாத் தோட்டங்களுக்கும் பொன்னிறக் கனிகளைக் கொடுத்துச் சென்றது, ஆனால் இந்தத் தோட்டத்தில் ஒன்றுமில்லை. “ரொம்பவும் சுயநலக்காரன்” என்று அது சொல்லியது. அதனால் எப்போதுமே அங்கு பனிக்காலமாக இருந்தது. வாடைக்காற்றும் ஆலங்கட்டி மழையும் வெண்பனியும் உறைபனியும் மரங்களினூடே சந்தோஷ தாண்டவம் புரிந்தன.

snow-landscapes-
ஒருநாள் காலை. அரக்கன் தன் படுக்கையில் கண்விழித்துப் படுத்திருந்தான். ஓர் இனிய இசை கேட்டது. அரசனின் சங்கீதக் குழுவினர் அந்த வழியாகச் செல்கிறார்கள் என்று நினைத்தான். கடைசியில், அவன் ஜன்னலுக்கருகில் பாடிய சிறு லின்னட் பறவைதான் அது. ஆனால் அவன் தன் தோட்டத்தில் பறவைகளின் பாடலையே கேட்டுப் பலகாலம் ஆனதால் அவனுக்கு உலகிலேயே மிகச் சிறந்த இசை அதுதான் என்று தோன்றியது. உடனே ஆலங்கட்டி மழை அங்கு நடனமிடுவதை நிறுத்தியது. வாடைக்காற்று ஓலமிடுவதை நிறுத்தியது. திறந்த ஜன்னலின் வழியே ஒரு இனிய வாசம் வந்தது. “கடைசியாக வசந்தம் வந்துவிட்டது” என்று நினைக்கிறேன் என்றான். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து வெளியே நோக்கினான்.

அவன் கண்ணுக்குத் தென்பட்டது என்ன?

மிக ஆச்சரியமான ஒரு காட்சி. சுவரிலிருந்த ஒரு சிறிய ஓட்டையின் வழியாகச் சிறார்கள்  உள்ளே வந்துவிட்டார்கள். மரக்கிளைகளின் மீது அவர் கள் உட்கார்ந்திருந்தார்கள். காணமுடிந்த ஒவ்வொரு மரத்தின் கிளையிலும் ஒரு குழந்தை. மரங்களுக்குத் திரும்பக் குழந்தைகள் வந்தது பெரும் சந்தோஷம். அவை தங்களைப் பூக்களால் அலங்கரித்துக் கொண்டன. தங்கள் கிளைகளைக் குழந்தைகளின் தலைகளைச் சுற்றி மென்மையாக வீசின. மகிழ்ச்சியோடு பறவைகள் சுற்றிப்பறந்து கூச்சலிட்டன. புற்களின் இடையே இருந்து சிறுபூக்கள் சிரித்தன. மிக அழகான காட்சி, ஆனால் ஒரு மூலையில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. தோட்டத்தின் தொலைதூர மூலை அது. அங்கே ஒரு சிறுபையன் நின்றிருந்தான். மிகச்சிறியவனாக இருந்ததால் மரத்தின்மீது அவனால் ஏறமுடியவில்லை. அழுதுகொண்டே அதைச் சுற்றிச்சுற்றி வந்தான். பாவம், அந்த மரத்தில் மட்டும் வெண்பனியும் உறைபனியும் தங்கியிருந்தன. வாடைக்காற்று அதைச் சுற்றி வீசி ஓலமிட்டது. “சின்னப் பையா, ஏறு” என்றது மரம். தன்னால் இயன்ற அளவு கிளைகளைத் தாழ்த்தியது. ஆனால் பையன் மிகச் சின்னவன்.

அதைப் பார்த்து அரக்கனின் உள்ளம் நெகிழ்ந்தது. “எவ்வளவு சுயநலத்தோடு இருந்துவிட்டேன்” என்றான். “ஏன் இங்கே வசந்தம் வரவில்லை என்று இப்போது புரிகிறது. அந்தப் பையனை மரத்தில் அமர்த்துவேன். சுவரை இடித்துத் தள்ளுவேன். இந்தத் தோட்டம் என்றைக்கும் என்றைக்குமாகப் பிள்ளைகளின் விளையாட்டுக் களமாக இருக்கும்.” தான் செய்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்தினான் அவன்.

கீழே இறங்கிவந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் அவனைப் பார்த்ததும் சிறுவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். மீண்டும் தோட்டத்தில் வாடைக்காலம்தான். அந்தச் சின்னஞ் சிறுவன் மட்டுமே ஓடவில்லை. அவன் கண்களில் நீர்நிறைந்து பார்வையை மறைத்திருந்தது. மெதுவாக அவன் பின்னால் சென்ற அரக்கன் கையில் மென்மையாக அவனைத் தூக்கி ஒரு கிளையில் அமரவைத்தான். மரம் உடனே பூத்துக்குலுங்கியது. பறவைகள் அதில் அமர்ந்து பாடின. சிறுவன் தன் இருகைகளையும் அரக்கனின் கழுத்தைச்சுற்றி வீசிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். அரக்கன் முன்போல் இல்லாததைக் கண்ட பிற சிறார்களும் திரும்ப ஓடிவந்தார்கள். அவர்களுடன் வசந்தமும் வந்தது. “சின்னப் பசங் களே, இனிமேல் இது உங்கள் தோட்டம்” என்றான் அரக்கன். பெரிய கடப்பாறை எடுத்துச் சுவரை இடித்துத் தள்ளினான். பகல் பன்னிரண்டு மணிக்கும், மக்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது, மிக அழகான தோட்டத்தில் அரக்கன் சிறுவர் களோடு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடினார்கள். இருட்டும் நேரத்தில் அரக்கனிடம் விடைசொல்லிக்கொண்டுபோகச் சிறுவர்கள் வந்தார்கள்.

“உங்கள் சின்னஞ்சிறு தோழன் எங்கே? நான் மரத்தில் ஏற்றி உட்கார வைத்தேனே, அவன்” தன்னை முத்தமிட்டதால் அந்தச் சிறுவனை அரக்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் அவர்கள். “அவன் போய்விட்டிருப்பான்.”

“நாளைக்கு நிச்சயமாக அவனை வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்றான் அரக்கன். ஆனால் பிள்ளைகளுக்கு அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவனை இதற்குமுன்னால் பார்த்ததும் கிடையாது. அரக்கனுக்கு வருத்தமாக இருந்தது.

ஒவ்வொரு மாலையும், பள்ளிக்கூடம் விட்டபிறகு, பிள்ளைகள் வந்து அரக்கனோடு விளையாடினார்கள். ஆனால் அரக்கன் நேசித்த அந்தச் சின்னஞ்சிறு வன் வரவேயில்லை. எல்லாச் சிறுவர்களுடனும் அரக்கன் மிக அன்பாக இருந்தான். என்றாலும் தன் முதல் தோழனுக்காக அவன் ஏங்கினான். அவனைப்பற்றி அடிக்கடி பேசினான். “அவனைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறிவந்தான்.

ஆண்டுகள் சென்றன. அரக்கனுக்குத் தள்ளாமல் போய்விட்டது. வலிமை குறைந்துவிட்டது. சுற்றிவிளையாட முடியவில்லை. பெரிய சாய்வுநாற்காலியில் அமர்ந்து சிறார்கள் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். தனது தோட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டான். “என்னைச்சுற்றி அழகான பூக்கள் பல இருக்கின்றன. ஆனால் சிறுவர்கள்தான் மிக அழகான பூக்கள்.”

ஒரு பனிக்காலத்தில் காலை எழுந்து உடை உடுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னனலின் வழியே பார்த்தான். இப்போது அவனுக்குப் பனிக்காலம் என்றால் வெறுப்பு இல்லை. வசந்தம் ஓய்வெடுக்கும் காலம் அது, அவ்வளவுதான். பூக்களும் ஓய்வெடுக்கின்றன.

திடீரெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான், மறுபடி பார்த்தான். மிக ஆச்சரியகரமான காட்சிதான் அது. தூரத்து மூலையில் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பூத்துக்குலுங்கியது. அதன் கிளைகள் பொன்னிறம். வெண்நிறப் பழங்கள் அவற்றிலிருந்து தொங்கின. அவன் நேசித்த சின்னஞ்சிறுவன் அதன்கீழ் நின்றுகொண்டிருந்தான்.

பெரும் சந்தோஷம் கவிய, அரக்கன் படிகளில் இறங்கி தோட்டத்திற்குள் புல்தரையில் விரைந்து ஓடினான். சிறுவன் அருகில் சென்றான். மிகநெருக்கத்தில் வந்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. “உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆணிகள் குத்திய காயங்கள். அதேபோல் இரு பாதங்களிலும்.

“உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” கத்தினான் அரக்கன். “சொல். என் பெரிய வாளை எடுத்துச் சென்று அவனைக் கொன்றுபோடுகிறேன்.”

“இல்லை” என்றான் குழந்தை. “இவை அன்பின் காயங்கள்.”

“யார் நீ?” என்றான் அரக்கன். ஒரு விசித்திரமான பயம் அவனுக்குள் ஏற்பட்டது. குழந்தையின் முன்னால் மண்டியிட்டான்.

சிறுவன் அரக்கனைப் பார்த்து முறுவல் செய்தான். “ஒருசமயம் உன் தோட்டத்தில் என்னை விளையாட அனுமதித்தாய் நீ. இப்போது என்னுடன் என் தோட்டத்திற்கு- விண்ணுலகிற்கு நீ வா” என்றான்.

மாலையில் சிறுவர்கள் விளையாடத் தோட்டத்திற்குள் ஓடிவந்தபோது, அரக்க னின் உடல் அந்த மரத்தடியில் வெண்ணிறப் பூக்களின் போர்வையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.


சிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை

classroom
ஆதித்யா தொலைக்காட்சியில் ஒரு வேடிக்கை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அவர் தன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தில் “அரிசி எங்கிருந்து வருகிறது?” என்று கேட்கிறார். பல பேர்- சுமார் இருபத்தைந்து முப்பது வயது முதல் பதினைந்து வயதுப் பிள்ளைகள் வரை கூடியிருக்கிறார்கள்-அது தொழிற்சாலையில் செய்யப்படுகிறது, மரத்தில் காய்க்கிறது, என்பது மாதிரி பதில் சொல்கிறார்கள். (கொஞ்சம் பெரியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான் அது நெல்லிலிருந்து வருகிறது, நெல் பயிரிடப் படுகிறது என்ற மாதிரி சரியான பதில் சொல்கிறார்கள்.)

“பாரதியார் யார்?” என்று கேட்கிறார் நம் கேள்வியாளர். இந்தியாவின் ஜனாதி பதியாக இருந்தவர் என்று பதில் வருகிறது. நம் பிள்ளைகளின் கல்வியை அளவிட இந்த நிகழ்ச்சியை விடச் சரியான ஒரு அளவுகோல் கிடையாது. நம் கல்வி முறை பற்றித் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

ஏறத்தாழ ஆறாண்டுகள் பள்ளியிலும், முப்பத்திரண்டு ஆண்டுகள் கல்லூரி யிலும், ஓரிரண்டாண்டுகள் பல்கலைக்கழகத்திலும் என்று ஆசிரியப்பணி புரிந்ததன் காரணமாக இன்றைய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வித் திட்டம் போன்றவை பற்றி நன்றாகவே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை முன்னிட்டுச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, எனது ஆசிரிய வாழ்க்கையை மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறேன்.

இன்றைய கல்வி சமூகத்துக்கோ, தனிப்பட்ட மனித வாழ்க்கைக்கோ பயன் படுவதாக இல்லை. அறமதிப்புகள், வாழ்க்கை மதிப்புகள் போன்றவை பற்றி இன்றைய கல்விக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை. மனிதர்களைப் பிழைப்புக்குப் பாடுபடும் எந்திரங்களாக மாற்றவே இது உதவி செய்கிறது.

சின்னஞ்சிறுவர்களை திருச்சியைச் சேர்ந்த கிராமப்புறப் பகுதியில் ஒரு முறை கேள்வி கேட்டேன். (கொஞ்சம் செம்மைப்படுத்தியிருக்கிறேன்)

நீ என்ன ஆக விரும்புகிறாய்?

மருத்துவர் அல்லது பொறியாளராக.

எதற்காக?

நிறையப் பணம் சம்பாதிப்பதற்காக.

நிறையப் பணம் சம்பாதித்த பிறகு?

வசதியோடு சந்தோஷமாக இருப்பதற்காக.

பிறகு?

அவ்வளவுதான். அப்புறம் என்ன?

இந்தக் கூற்றுகளில் காணப்படும் சில உள் விவகாரங்களைப் பார்ப்பது அவசியம். அதெப்படி ஒருவனுக்கே மருத்துவனாகவும் பொறியியல் துறையில் செல்லவும் ஏற்புடைமை இருக்கும்? இரண்டுமே இல்லாமல் வேறு துறையில் செல்லும் பொருத்தப்பாடும் இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுடைய ஆளுமையும் ஒவ்வொரு விதமானது.

தனிப்பட்ட நோக்கில் பார்த்தால், ஆளுமையை உருவாக்குவதுதான் கல்வி. சமூக நோக்கில் பார்த்தால், சமூகத்தில் அமைதியாக வாழ்வதற்கு உதவுகின்ற அறமதிப்புகளை, அன்புமயமான மனப்பான்மையைத் தரவேண்டியது கல்வி. பிழைப்புக்கு வழிசெய்வது என்பது கல்வியின் ஏதோ ஒரு கூறு மட்டுமே.

உளவியலில் மனப்பாங்குகள், திறன்கள்  பற்றி நிறையப் பேசுவார்கள். ஏன் ஒருவன் தன் மனப்பாங்கிற்கும் திறமைக்கும் ஏற்ப ஓர் ஓவியனாகவோ கலைஞனாகவோ பத்திரிகைகாரனாகவோ விவசாயியாகவோ அறிவிய லாளனாகவோ தச்சனாகவோ ஆகக் கூடாது? சில சிறுவர்களுக்குக் கைவினைகளில் திறன் இருக்கலாம். சிலருக்கு அருவமான சிந்தனைத் திறன் இருக்கலாம். சிலருக்குப் பருமையான பொருட்களைச் செய்வதில் ஆர்வம் இருக்கலாம். எல்லாவற்றையும் புறக்கணித்து மனிதர்களை வெட்டிச் செதுக்கி மருத்துவராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதில் என்ன லாபம்?

இன்னும் அடிப்படையாக, எல்லாருமே பணம் சம்பாதிக்கும் வேலைகளில்(!) ஈடுபட்டுவிட்டால், உணவு எப்படி வரும்? நீர் எப்படிக் கிடைக்கும்? உணவின்றி எப்படி உயிர்வாழ முடியும்?

இவையெல்லாம் இன்றைய கல்வித்திட்டம் (curriculum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது) பாழாகிவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. (பாடத்திட்டம் (syllabus) என்பது வேறு. அது ஒவ்வொரு பாடத்திலும் என்ன படிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் செயல்.)

இன்று கற்பிக்கும் முறைகள் எப்படி இருக்கின்றன?  எப்படியாவது மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு ஒரு 1100 மதிப்பெண்ணாவது வாங்கிவிடவேண்டும். புரிந்து கொண்டு படிக்கத் தேவையில்லை. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடை எழுதி விட்டால போதும். அதற்கு நிறைய மனப்பாடம் செய்யவேண்டும். அதற்குப் பயிற்சி அளிக்க எத்தனையோ தனி வகுப்புகள்,  கற்பித்தல்  முறைகள். பழங்காலத்தில் பாடம் நடத்துதல், போதித்தல் (teaching) என்று சொல்வார்கள். இப்போது ‘teaching’ போய் ‘coaching’ வந்து விட்டது. ஒரு விளையாட்டு வீரனுக்கு, நடிகனுக்கு, சர்க்கஸ்காரனுக்குப் பயிற்சி அளிப்பதுபோல, பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் பிறகு கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் பயிற்சி (coaching).

ஒரு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நிலையைச் சிந்தித்தால் பாவமாக இருக்கிறது. காலையில் 6 முதல் 7 வரை வேதியியலில் பயிற்சி(tuition), 7 முதல் 8 வரை இயற்பியலில், காலை எட்டு முப்பதிலிருந்து மாலை ஐந்தரை வரை பள்ளியில் ‘Coaching’. மாலை 6 மணி முதல் 8 மணிவரை கணக்கு பயிற்சி. 8 முதல் 9 வரை உயிரியலில் பயிற்சி. வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்ற பிற பாடங்களைப் படிக்கத் தேவையில்லை. விளையாட்டு தேவையில்லை, உடற்பயிற்சி தேவையில்லை, உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டிய கல்விகள்- உணவு, சுகாதாரம் போன்றவை பற்றித் தேவையில்லை, அற மதிப்புகள் பற்றிய கல்வி தேவையில்லை.

our-education-system1
பாடத்தை நடத்துவதோ புரிந்துகொள்வதோ கிடையாது. மாதிரித் தேர்வுகள் எழுதி எழுதி என்ன கேள்வி தேர்வில் கேட்டாலும் எந்திரத்தனமாகச் சரியான விடையளிக்கும் ஒரு எந்திர மனிதனாக மாணவன் மாறிவிடவேண்டும். நிறைய மதிப்பெண் வாங்கவும் வசதியான வாழ்க்கை வாழவும் கனவு காணவேண்டும். அவற்றை வாங்கத் தயங்கினால், முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது நன்மையை மட்டும் சிந்தியுங்கள்( positive thinking) -”உன்னால் முடியும் தம்பி” என்ற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இருக்கவே இருக்கிறார்கள் அப்துல் கலாம் முதல் நித்யானந்தா வரையிலான போதகர்கள்.

இப்படிப்பட்ட கல்வி யாருக்குப் பயன்படுகிறது? பெரிய முதலாளிகளுக்கு. அவர்கள் கொள்ளையடிப்பதற்கு. அவர்கள் தூக்கி எறியும் எச்சில்களை இந்தக் கல்வி முறையில் படித்தவர்கள் பொறுக்கித் தின்பதற்கு. உலகத்தை அழிப்பதற்கு.

இப்படிப்பட்ட கல்வியின் விளைவுதான் மனிதத்தன்மையற்ற பெரிய தலைவர்கள்- மன்மோகன் சிங்குகள் உருவாகுவதற்கு வழிசெய்கிறது. வெளிநாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டை விலைபேசுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. நம் நாட்டு மக்கள் செத்தாலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழிவிட வேண்டும். அந்நிய முதலீடு வேண்டும். அதுதான் வளர்ச்சி. இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற கல்வி பெற்றதனால்தான் கூடங்குளம் போன்ற அணு உலைகளின் அபாயங்களைப் பற்றி நன்கறிந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வசதியான வாழ்க்கைக்கு கனவு காணச்சொல்லிச் சின்னஞ் சிறுவர்களைத் தூண்டுகிறார்.

ஆசிரியர்களும் இப்படிப்பட்ட பயனற்ற அறமதிப்புகளற்ற கல்விமுறைக்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். மாணவர்களுக்கு டியூஷன் நடத்திக், கொள்ளையடித்தது வரை லாபம் என்ற வியாபார மனப்பான்மைக்கு உட்பட்டுவிட்டார்கள்.

பழங்காலத்தைவிட இப்போது நன்றாகப் பாடம் நடத்தும் திறன் பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனிப்பயிற்சி நடத்தும் வாழ்க்கை முறைக்கு ஒருவகையில் தள்ளப்படுகிறார்கள். அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஓரளவு ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் ஐந்தாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம் வரைதான் ஊதியம். வேறு வேலை கிடைக்காதவன்தான் இந்த வேலைக்கு வரமுடியும்.

தேர்வு, அதற்கு வினாத்தாள் தயாரிக்கும் முறை, திருத்தும் முறை போன்றவையும் சீர்கெட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துவதற்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் பணி கேவலமானது. ஒரு நாளுக்கு ஒருவர் முப்பது விடைத்தாள் வரைதான் நியாயமாகத் திருத்தமுடியும். ஆனால் அரசுத்தேர்வு மையங்களிலேயே எழுபது முதல் நூறுவரை திருத்தச் சொல்லுகிறார்கள். திருத்தும் ஆசிரியர் படிக்காமலே எல்லாவற்றிற்கும் நாற்பது, நாற்பது, நாற்பது என்றே பெரும்பாலும் மதிப்பெண் அளித்துச் செல்கிறார். இந்தத் திருத்தும் நாடகத்தில்தான் நான் 1100 வாங்கினேன், நான் முதல் இடம் பெற்றேன், நான் 1150 வாங்கினேன் என்று பிரதாபம் வேறு.

அரசு பள்ளிகள் மேல் முற்றிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு பள்ளிகளை விட மோசமாக நடத்தப்படுகின்ற நிறுவனங்களில் குழந்தையை சேர்ப்பதற்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று கட்டணம் தரத் தயாராக இருக்கிறார்கள். இது நமது மக்களின் மனக்கோளாறு.

கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது. இன்றைய கல்வியின் ‘தாதா’க்கள் (இதுதான் சரியான சொல்-இதை நாகரிகமாக கல்வித் தந்தை, தாளாளர் என்று சொல்லிக்கொள்வார்கள்) எல்லாம் கள்ளச்சாராய வியாபாரிகளாகவோ, கருப்பு சந்தைக்காரர்களாகவோ, கள்ளக்கடத்தல் ரவுடிகளாகவோ, கட்சிக்கு விலை போய் மலிவாக நிலங்களை வளைத்துப்போட்டவர்களாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உயர்ந்த மதிப்புகள் பற்றியோ உயர்ந்த வாழ்க்கை பற்றியோ ஒன்றும் தெரியாது. எப்படியாவது நிலங்களைக் கொள்ளையடித்து, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரியபெரிய கட்டிடங்களைக் காட்டி நிறைய கேபிடேஷன் தொகை வசூல் செய்வார்கள். இதைத்தவிர அந்த கட்டணம் , இந்த கட்டணம் என்று ஏராளமாக மாணவர்களிடம் பிடுங்கிக்கொண்டு முன்கூறியபடி எந்திரங்களை  உருவாக்குவார்கள். இந்த மாணவர்களுக்கு நம் சமூக அமைப்பு, பொருளாதாரம், கிராமப்புற வாழ்க்கை முறைகள், கலாச்சாரம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. சிறுவயதிலேயே வெளிநாட்டு கலாச்சாரத்தில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அந்நியமானவர்கள் இவர்கள்.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே-எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பல்கலைக்கழகம்-அந்தக்கால விலைவாசிப்படி இருபதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவப் படிப்புக்கு இடம் அளித்தது. அப்புறம் நான்காண்டுகள் அந்தப் பையன் படிப்பதே இல்லை. பயிற்சி மருத்துவர் ஆக இருக்கும் சமயத்தில் கட்டு போடவும் ஊசிபோடவும் ஸ்டெதாஸ்கோப்பில் துடிப்புப் பார்க்கவும் கற்றுக் கொண்டால் தீர்ந்தது. வெளிவந்த பிறகு, இருக்கவே இருக்கிறார்கள்-மருத்துவப் பிரதிநிதிகள்-தலைவலி முதலாக புற்று நோய் வரை என்ன மருந்துகள் கொடுப்பது என்று பட்டியலைக் காட்டி சாம்பிளும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு இருக்கவே இருக்கிறார்கள் பொதுமக்கள், அவர்கள் மீது மாற்றி மாற்றி மருந்துகொடுத்துச் சோதனை செய்துவிட்டால் போயிற்று. நோயாளி செத்துப்போனால், எல்லாம் கடவுள் செயல், விதி, மருத்துவர் என்ன கடவுளா-எத்தனை தப்பிப்பு சாத்தியங்கள்? அப்புறம் இருக்கவே இருக்கின்றன, இன்றோ, மருத்துவத்தை விலைபேசும் பெரிய பெரிய மருத்துவமனைகள். நீங்கள் சாதாரணத் தலைவலி என்று போனாலும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவச் சோதனைகள் நடத்திவிடுவார்கள்.

நமது மருத்துவக் கல்லூரிகளில் விடுதிகளில் போய்ப்பார்த்தால் டாக்டர்கள்மீது உள்ள நம்பிக்கை முற்றிலும் போய்விடும். குடித்துவிட்டு, போதைமருந்து ஏற்றிக் கொண்டு உருண்டு கிடப்பவர்கள் சிலர். பெண்களோடு சுற்றுபவர்கள்…எல்லோருமே இப்படியா என்று தயவு செய்து உருப்படாத கேள்வி கேட்காதீர்கள். இப்படிப்பட்ட கேள்விகேட்டுத்தான் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை ஒன்றுமே செய்ய இயலாமல்போய் இன்றைக்கு ஊழல் என்றால் பதினைந்து லட்சம்கோடி, இருபத்தைந்து லட்சம் கோடி என்றுபோய் நிற்கிறது.

ஒரு ஊரில் இப்போது இருபது பொறியியல் கல்லூரி இருந்தால், நான்கு கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. இப்போது பி.ஏ. பொருளாதாரம், வரலாறு போன்ற படிப்புகள் காணாமல் போய்விட்டதைப்போல, எதிர்காலத்தில் கலைக் கல்லூரிகளே காணாமல் போய்விடலாம். கலைக்கல்லூரிகளும்-பெயர்தான் அப்படி-எல்லாம் கணிப்பொறித்துறையிலும் எம்.பி.ஏ. படிப்பிலும்தான் மாணவர் களை ஈர்க்கின்றன. நமது பல்கலைக்கழகங்கள், அவற்றில் அளிக்கப்படும் மேல்படிப்புகள், பிஎச்.டி. ஆராய்ச்சிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத் தனிக்கட்டுரையே எழுதவேண்டும். அவற்றைப்பற்றிப் பிறகு பார்க்கலாம்.

இந்த மாதிரிக் கல்வி முறையில், சமூக அக்கறை, நமது கலாச்சாரத்தைப் பற்றிய அக்கறை, தாய்மொழி மீதான அக்கறை இவற்றிற்கெல்லாம் எங்கே இடம் இருக்கிறது?  ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் கம்பெனிப் பொறியியலாளருக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, உலகம் வெப்பமாதல் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருக்கு அது தேவையுமில்லை. போனவருடத்தைவிட இந்த வருடம் வெப்பம் கூடுதலா? வீட்டில் குளிர்சாதன போட்டுக்கொள். அவ்வளவுதான் அவருக்குத் தெரியும்.

முற்றிலும் வாழ்க்கை வணிகமயமாக்கப்பட்டு வீணாகப்போனது ஓரிரண்டு தலைமுறைகளின் வரலாறு.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 5

11619999906_32821ccb1c
கேள்வி : அந்தக் காலத்தில் பொதுமக்கள், புலவர், அரசர் எல்லாம் ஒரே தமிழில்தான் பேசினார்களா? அருண்குமார் – நாமக்கல்

பதில்:சாத்தியமே இல்லை. எந்தக் காலத்திலும் பொதுமக்களின் பேச்சுமொழி வேறு, புலவர்களின் செம்மையான இலக்கிய மொழி வேறு. அரசர்கள் புலவர்களிடம் உரையாடும்போது செந்தமிழில்தான் பேசவேண்டும். மக்களிடம் குறைகேட்கும் போது அவர்கள் மொழியிலேயே பேசியாக வேண்டும்.
சமஸ்கிருதத்தில் மிருச்சகடிகம் (மண்ணால் செய்யப்பட்ட சிறிய தேர்) என்ற நாடகம் இருக்கிறது. அதில் புலவர்கள், அரசர்கள், உயர்குலத்தோர் பேசும் வசனங்களில் மட்டும் சமஸ்கிருதமும், பொதுமக்கள் பேசும் வசனங்களில் பிராகி ருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதான் இயல்பான நிலை.
பொதுமக்களின் மொழிதான் உண்மையான மொழி. இயக்கமுள்ள மொழி. மாறு கின்ற மொழி. புலவர்களின் மொழி செம்மொழியாக இருந்தாலும், அது காலத்தில் உறைந்துபோய்விட்ட மொழி. அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது. புலவர்கள்கூட வீட்டில் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் செம் மொழியிலா பேசமுடியும்? அப்போது இயல்பான பேச்சுத் தமிழைத்தான் பயன் படுத்தியிருப்பார்கள்.

கேள்வி :தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சமணத்தைத் தழுவி உள்ளதே? நாகராஜன் – சென்னை

பதில்: அப்படியில்லை. தமிழில் மிகுதியான நூல்களுக்குரிய பெருமை சைவத்திற்குத் தான் உண்டு. அடுத்த நிலையில்தான் சமணம் வரும். மூன்றாம் நிலையில் வைணவமும், நான்காவதாக பௌத்தமும் வரும். அண்மைக்காலத்தில் கிறித்துவ  நூல்கள் மிகுதியாக இயற்றப்பட்டுள்ளன. எனவே இப்போது மூன்றாம் நிலையில் கிறித்துவ நூல்களே இருந்தாலும் இருக்கலாம். ஏனோ தெரியவில்லை, முஸ்லிம்கள்தான் இதில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படி நோக்கும்போது இதில் அண்மைக்கால இலக்கியத்தைச் சேர்க்கக்கூடாது. ஏனென் றால் அண்மைக்கால-நவீன இலக்கியத்தின் தன்மை சமயம் சார்ந்தது அல்ல.

சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது, வடநாட்டிலிருந்து வந்த வைதிகக் கருத்துகளும், சமணசமயமும் ஒரே சமயத்தில் தமிழ்நாட்டில் பரவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சமணப்புலவர்கள் பலர்- உலோச்சனார் போன்றவர்கள் சங்க இலக்கியத்தில் கவிதை படைத்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில்

-சங்க காலத்து நூல்களுக்குச் சமயம் இல்லை, கற்பிக்க இயலாது.

-பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மை (திருக்குறள் உட்பட) சமணச் சார்புடையவை.

-தொல்காப்பியம் சமண நூல்.

-ஐம்பெரும் காப்பியங்கள், சமண-பௌத்த நூல்கள் கலந்தவை. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண நு£ல்கள். மணிமேகலை, குண்டல கேசி  இரண்டும் பௌத்த நூல்கள்.

ஆபரணங்களைப் பெயர்களாகக் கொண்ட முதல் தொகுப்பான இந்தப் பழந்தமிழ்க் காப்பியங்களில் எவையுமே சைவ, வைணவ நூலாக இல்லை என்பதை நோக்கவேண்டும்.

மிகுதியான இலக்கண நூல்களும், நிகண்டு நூல்களும் சமணப்புலவர்கள் செய்தவையே. தமிழில் தொடக்ககாலத்தில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர்கள் சமணர்கள். ஆனால் வைதிக சமயங்களால் சமணம் அழிந்தபிறகு,  அவர்கள் பங்களிப்பு குறைந்துபோயிற்று. ஆனாலும் நூல்களைப் படியெடுத்து வாழ்க்கை வைபவங்களில் தருகின்ற தங்கள் பழக்கம் மூலமாக அவர்கள் சிலப்பதிகாரம் போன்ற நூல்களைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

கேள்வி : தமிழகத்தில் சமணம் எப்பொழுது பரவியது? மீனாட்சி ராஜன் – செய்யாறு

பதில்:முன் கேள்வியிலேயே ஓரளவு பதில் இருக்கிறது. சமணமதத்தை நிறுவிய மகாவீரர் கி.மு. 599இல் பிறந்து கி.மு.527இல் மறைந்ததாகச் சொல்கிறார்கள்-அதாவது கி.மு. ஆறாம் நு£ற்றாண்டு. ஏற்கெனவே ஒரு கேள்வியில் நான் குறிப் பிட்டிருந்ததுபோல, கி.மு. 1500வாக்கில் வடநாட்டுக்கு வந்த ஆரியர்களும் மெதுவாகப் பரவி தெற்கில் வந்துசேர ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே அவர்களில் ஒருபகுதியினர் ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் தமிழகத்துக்கு வந்திருப்பார்கள். சமணர்களும் அவர்களோடு சேர்ந்தே தமிழகத்துக்கு வந்திருக் கலாம். அல்லது ஒரு 25 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் வந்திருக்கலாம். எப்படியானாலும் சமணர்கள் கி.மு. நான்காம் நு£ற்றாண்டு அளவிலேனும் (அதாவது கடைச்சங்கத் தொடக்கக்காலம்) தமிழகத்திற்கு வந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்போதிருந்து சமணம் தமிழகத்தில் பரவியது. ஆனால் வைதிக சமயமோ, சமணமோ எதுவாயினும் அவ்வளவு வேகமாகச் சங்க காலத்தில் பரவவில்லை. ஏறத்தாழ கிறித்துவுக்கு ஓரிரு நு£ற்றாண்டுகள் கழித்துத்தான் இவை வேகமாகப் பரவவும் செய்தன. தங்களுக்குள் போரிடவும் தொடங்கின.

கேள்வி : சங்க இலக்கியத்தில் தலைவன் பரத்தை வீட்டிற்குச் செல்வது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழன் அன்றிலிருந்தே ஆணுக்கான தனிமனித ஒழுக்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையா? – முருகேசன் – மாயவரம்

பதில்: உண்மை அதுதான். உலகத்தில் எந்த நாட்டிலுமே தொடக்கத்தில் தாய்வழிச் சமூகம் என்பது இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்குப் பல ஆதாரங்களும் உண்டு. தாய்வழிச் சமூகம் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூக மாக மாறியது. தந்தைவழிச் சமூகம் என்பது பெண்களை அடக்கியாளுகின்ற ஆண்தலைமைச் சமூகம்தான்.

புராதனப் பொதுவுடைமைச் சமூகம்தான் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்க முடியும். எப்போது சொத்துடைமையும் அடிமை முறையும் உருவானதோ, அப்போதே பெண்களுக்குச் சனியன் பிடித்துவிட்டது. தன் சொத்தைத் தன் மக்களுக்கே தரவேண்டும் என்பதற்காகக் கற்பு என்ற கருத்து உண்டாக்கப்பட்டது. அதன்வாயி£கப் பெண் அடிமையாக்கப் பட்டாள். இதைப்பற்றிப் பெரியார், பெண் ஏன் அடிமையானாள் என்று ஒரு சிறிய நல்ல புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார். காலம் செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் இறுகின.

பரத்தையர் ஒழுக்கத்திற்கு ஒருவித சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. தந்தைவழிச் சமூகம் உருவான காலத்திலிருந்தே எல்லா நாடுகளிலும் பரத்தைமை இருந்துதான் வருகிறது. அக்காலச் சமூகம் போர்ச்சமூகம். ஆண்கள் எல்லாம் போருக்குச் செல்வார்கள். செல்பவர்களில் எத்தனை சதவீதம் திரும்பிவரு வார்கள் என்று தெரியாது. முழுதும் அழிந்துபோகவும் கூடும். எனவே ஆண்க ளின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது, அதனால், பரத்தைமை உருவானது என்று சிலர் சொல்கிறார்கள்.

பழங்காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனுக்கும் அவன் வீரர்களுக்கும் முதல் வேலை எதிரிநாட்டுப் பெண்களைக் கைப்பற்றுவதுதான். பல சமயங்களில் அவர்களை அரண்மனை போன்ற இடங்களில் பணிப்பெண்களாக வும் அடிமைகளாகவும் அமர்த்திக்கொள்வார்கள். வடநாட்டில் பர்தா முறை தோன்றியதற்கு முஸ்லீம்களின் படையெடுப்பு முக்கியக் காரணம்.

சங்க இலக்கியங்கள் ஆணுக்குத் தனி உரிமையே தருகின்றன. அவன்தான் குடும்பத் தலைவன் என்பதால் தலைவி அவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண் டும். அவள் செய்யக்கூடியதெல்லாம் கொஞ்சம் மறுப்பது, கொஞ்சம் ஊடல் கொள்வது அவ்வளவுதான்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 4

aaa959
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாய் விளங்கும் ஆன்மிக வாதிகள் சொல்லும் இராமர்பாலம் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு பாலம் அங்கு இருக்குமாயின் குமரிக்கண்டம் கடலடியில் மறைந்த பிறகு கட்டப்பட்டிருக்குமா? விளக்கம் தேவை. (இன்றைய தலைமுறையேனும் தெளிவுறப் புரிந்துகொள்ளவேண்டும்) சுவாமிநாதன் திருமுல்லைவாயில்

பதில்
: நமக்கு அறிவியல் மனப்பான்மை முதலில் தேவை. கட்டுக்கதைகளிலிருந்து மெய்ம்மைகளை வேறுபடுத்தி அறிய இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகள், வேண்டுமென்றே இதில் குட்டைகுழப்புகிறார்கள்.

இராமன், அவன் வாழ்ந்தது, பாலம் கட்டியது எல்லாம் கட்டுக்கதை. ஒவ்வொரு மதத்திற்கும் கட்டுக்கதைகள் உண்டு. இராமன் என்பவன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டுவந்தான் என்பது இந்துமதத்தின் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதைகளுக்கும் மெய்ம்மைக ளுக்கும் சம்பந்தமில்லை. (உதாரணமாக, சிந்தித்துப்பாருங்கள், இராமனின் தந்தை தசரதன் பல லட்சம் ஆண்டுகள் பத்தாயிரக்கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தானாம். இது சாத்தியமா?  உண்மையில் நடக்கக்கூடியதா? அவன் தேவர்களுக்காக சம்பராசுரன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றானாம்…)

குமரிக்கண்ட நிகழ்வு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போது மனித இனம் தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறி. எனவே குமரிக்கண்டம் போன்றவற்றை கட்டுக்கதைகளோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கடற்பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாகவும் சில ஆழமின்றியும் தானாகவே அமைந்திருக்கின்றன. பூமியில் மேடு பள்ளங்கள் இல்லையா? மலைகள், பள்ளத் தாக்குகள் இல்லையா? அப்படித்தான் கடலின் பரப்பிலும். அவற்றில் ஆழங் குறைந்த பகுதியைப் புராணங்களோடு இணைத்து அது ஆதாம் கட்டிய பாலம், இராமன் கட்டிய பாலம் என்று கட்டுக்கதை ஆக்கிவிடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள வள்ளிமலைஎன்ற ஊரில் இன்னும் பல இடங்களில்-சற்றே பாறைகள் மஞ்சளாக இருந்தால் வள்ளியம்மை முருகப்பெருமானோடு மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்று கதை கட்டியிருப்பார்கள். அது போன்றதுதான் இதுவும்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது அறிவியல் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு அது என்ன எதிர்விளைவு ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டியது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டமும் உடன் பாடில்லை. மனிதன் இயற்கையை ஒட்டி, அதனோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சிசெய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சுனாமிகள்தான் மிஞ்சும்.

கேள்வி : மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஏற்படுவதாக இருந்தாலும், தமிழில் மட்டும் அது விரைவாகவும் திட்டமிட்டும் நடப்பதாகப் படுகிறதே, மொழிக்கலப்பைத் தவிர்க்க வழி என்ன? – கண்ணன், சேலம்

மொழிக்கலப்பு எல்லா மொழிகளிலும் நிகழ்வது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படியானால் தமிழில் மட்டும் அது எப்படி நடவாமல் போகும்? எங்கெல்லாம் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து பழகவேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மொழிகள் இரண்டிலுமே கலப்பு ஏற்படும்.

தமிழில் மொழிக்கலப்பு விரைவாக நடக்கிறது என்பது யூகம். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் திட்டமிட்டு நடக்கிறது என்று நமக்குத் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

இந்தியாவில், சமசுகிருதக் கலப்பில்லாமல் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றுதான். பிற திராவிட மொழிகளும்கூட சமசுகிருதக் கலப்பினை வெவ்வேறு அளவில் ஏற்றுக்கொண்டு அது இயற்கை என்று கருதிவிட்டன. மொழிக்கலப்பு இயற்கை என்பதை ஏற்காதவர்கள் தமிழ்பேசுபவர்களில் மட்டுமே இருக்கிறார்கள். சமசுகிருத, இந்தி, வடநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாம் தமிழில் வடமொழிக்கலப்பு கூடாது என்கிறோம். இது அரசியல் பிரச்சினை. மொழிசார்ந்த பிரச்சினை அல்ல. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை இருந்து இந்தியின் ஆதிக்கமோ, சமசுகிருத ஆதிக்கமோ இல்லை என்றால் நாம் மொழிக்கலப்பைப் பெரும்பாலும் எதிர்க்கமாட்டோம்.

ஏறத்தாழ கி.பி.1310 முதலாகத் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் கள், பிறகு கடைசியாக ஐரோப்பியர்கள் ஆகியவர்களால் ஆளப்பட்டது. சுதந்திர மடைந்த பிறகும் நாம் சுதந்திரமாக இல்லை. ஆதிக்கத்தில் பிறமொழியினர் இருக்கும்போது, நமது மொழி எப்படி வளரும்? அவர்கள் மொழி நமது மொழி யுடன் அதிகமாகக் கலக்கும் சாத்தியமே அதிகம்.

தமிழ்நாட்டில் பிறமொழியினர் ஆண்டதால் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி யினர் தமிழர்களுடன் கலந்து வாழ்வதைப் பார்க்கலாம். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் எல்லா கிராமங்களிலும் உள்ளனர். நாயுடுகள், நாயர்கள், ஒக்கலிகர்கள் என இவர்கள் பட்டியல் நீளும். ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ பிற மாநிலங்களிலோ இப் படிப்பட்ட பிரச்சினை இல்லை. எல்லையில் மட்டுமே ஓரளவு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் ரெட்டியாரோ நாயுடுவோ இல்லாத கிராமம் ஏது? அவர்கள் பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தங்கள் மொழி யையே பேசுகிறார்கள். இவர்களைத் தமிழர்கள் என்பதா, அயலார்கள் என்பதா? எங்கள் கிராமத்தில்கூட நிலையாக வாழ்ந்து சொந்த நிலங்களில் விவசாயம் செய்துவருபவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என்றே சொல்லுகிறார்கள். வீட்டில் அதில்தான் பேசுகிறார்கள். வடமாவட்டங்களின் முஸ்லிம்களும் (சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி,…) அப்படித்தான். அவர்கள் வீட்டில் உருதுதான் பேசுகிறார்கள். வெளியில் வந்தால் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அதன் கலப்பு மிகுதியாகிறது. செயற்கையான கலப்பு என்று நாம் சொல்லக்கூடியது ஆங்கிலக் கலப்பைத்தான். ஆங்கிலத்தைக் கலந்து பேசாவிட்டால் அது சரியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அந்த மோகம் இருக்கிறது. அதற்கு மேல், கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்து வளர்ச்சி. தொலைக் காட்சிகள் திட்டமிட்டே மொழிக்கலப்பை வளர்க்கின்றன. அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். 90 சதவீதம் கிராமப்புறப் பெண்கள் பார்க்கக்கூடிய சமையல் நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து நடத்துகிறார்கள். குழம்பு, சோறு, எல்லாம் மறைந்து கிரேவி, நான், புடிங் போன்ற சொற்கள் சமையல் நிகழ்ச்சிக்குள் வந்துவிட்டன. காய்கறிகளின் பெயரைக்கூட அவர்கள் தமிழில் சொல்வதில்லை. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் அப்படித்தான். பிறமொழிகளில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

செயற்கையான மொழிக்கலப்பை மட்டுமே நாம் தவிர்க்கவேண்டும். எனவே ஆங்கிலக்கலப்பையும், வடநாட்டுப் பண்பாடு திட்டமிட்டுச் சுமத்தப்படுவதால் புகும் இந்திக்கலப்பையும் மட்டும் நாம் சற்றே தீவிரமாக நிராகரித்தால் போதுமா னது. நல்லது. தேவையானது.

கேள்வி :. தமிழகம் இப்போதிருப்பதைவிட அகன்ற நிலப்பரப்பு உள்ளதாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே? – முகம்மது யூசுப், துபாய்

பதில்: ஆமாம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியும், கிழக்கில்-மேற்கில் கடல்களும் தமிழகத்துக்கு அக்கால எல்லைகள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகம் என்பது தொல்காப்பியம். இப்போதிருக்கும் வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் கிழக்குக் கடல், மேற்குக் கடல் என்றே அக்காலத்தில் (குணகடல், குடகடல் என்றும்) வழங்கப்பட்டன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். அக்காலத்தில் சாலை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடுகள். இப்போதுபோல எல்லா நிலமும் விவசாய நிலங்களாகவோ, குடியிருப்பு மனைகளாகவோ பழங்காலத்தில் இல்லை. பொது விளக்குகள் கிடையாது. வேக மான வாகனப் போக்குவரத்து  எதுவுமே கிடையாது. மலையாள மொழி அப்போது தோன்றவில்லை. அதனால்  இன்றிருக்கும் கேரளா அப்போது சேர நாடாகவே- தமிழ்நாடாகவே இருந்தது. வடக்கிலும் வேங்கடம் வரை தமிழ் தான் இருந்தது. அதற்கும் அப்பால் வடக்கில் இருந்தவர்கள் வடுகர் (வடக்கு நாட் டவர்) என்றழைக்கப்பட்டார்கள். மேற்கிலும் மைசூர் வரை தமிழ்நாடுதான். அது எருமைநாடு என்று தமிழ் இலக்கியங்களில் வருகிறது. மைசூர் என்பது மஹிஷ + ஊர். மஹிஷம் (வடமொழி) என்றால் எருமை. எருமையூரை, மஹிஷ ஊராக மாற்றி, மைசூராக இப்போது ஆக்கிவிட்டார்கள். அதேபோல கொங்குநாடு என்பது பிற்காலப் பல்லவர்  காலத்தில் கங்க நாடாக மாறிவிட்டது. இப்படி எத்தனையோ மாற்றங்கள். இப்போதிருக்கும் மங்களூரிலிருந்து நேர் கிழக்காகத் திருப்பதி வரை ஒரு கோடு கிழியுங்கள். அதற்குத் தெற்கே உள்ளதெல்லாம் பழங் காலத் தமிழ்நாடுதான். அப்போது வடுக மொழி இருந்தது. கன்னட மொழி உருவாகவில்லை. வெம் + கால் + ஊர் = வெங்காலூர் (மேற்கத்தியச் சீமையி லிருந்து கீழே இறங்கி வந்தால் வெம்மையான காற்று வீசும் ஊர் என்று அர்த்தம்)

என்ற பெயர்தான் இப்போது பெங்களூர் ஆகியிருக்கிறது. பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பேச்சு மொழியில் அவ்வளவாக வித்தியாசம் கிடையாது. (சென்னைத் தமிழுக்கும் கோவைத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்கூடக் கிடையாது.) எழுத்து மொழிதான் வேறுபட்டுவிட்டது.

இதற்குமேல் இன்னொரு குறிப்பு: வடவேங்கடம் தென்குமரி என்பதிலுள்ள தென் குமரி-அது குமரிமுனை அல்ல, பழங்காலத்தில் குமரிக்கண்டம் இருந்தது, அதில் குமரி ஆறு ஓடியது, அந்தக் குமரி ஆற்றைத்தான் தென்குமரி என்ற சொல் குறிக்கிறது என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், அப்போதிருந்த தமிழகத்தின் பரப்பு எவ்வளவு இருக்கும்?

கேள்வி : கலிங்கத்துப் பரணி கற்பனையால் எழுதப்பட்ட இலக்கியமா? இல்லை உண்மையில் நடந்தனவற்றின் தொகுப்பா? – செந்தில் குமார், சென்னை

பதில்: கற்பனையும் உண்மையும் அற்புதமாக இணைக்கப்பட்ட ஒரு படைப்பு கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்க சோழ  அரசன், காஞ்சி புரத்தில் தன் அரண்மனையில் வந்து தங்கியிருந்து, அங்கிருந்து தன் படைத்தலைவன் கருணாகர பல்லவனைக் கலிங்கத்துக்குச் சென்று போரிட்டு வருமாறு கூறுகிறான். கருணாகர பல்லவனும், அவ்வாறே ஒரு பெரும் படையுடன் கலிங்கத்துக்குச் சென்று அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தோற்கடித்து (வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் தனித்தனி அரசர்கள் அப்போது) திறை செலுத்தச் செய்து வருகிறான். இது வரலாற்றுச் செய்தி.

கடுங்கோடை காலம். எங்கும் உணவின்றி, பேய்கள் பசியால் வாடுகின்றன. அவை தங்கள் தலைவியான காளியிடம் முறையிடுகின்றன. அவள், இப்போது கலிங்கத்தில் பெரும் போர் நடக்கிறது. அந்தப் போர்க்களத்திற்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான இரத்தக்கூழும் நிணமும் கிடைக்கும், உங்கள் பசி தீரும் என்று சொல்லி அவற்றை அனுப்புகிறாள். அவ்வாறே அந்தப் பேய்கள் கலிங்கப் போர்க்களத்திற்குச் சென்று உணவருந்திப் பசி தீர்ந்து காளியை வாழ்த்துகின்றன. இது சுத்தமான கற்பனைப் பகுதி.

இன்னொரு சிறிய கற்பனைப் பகுதியும் கலிங்கத்துப் பரணியில் உண்டு. போர்க்களத்திலிருந்து  திரும்பி வருகின்ற வீரர்கள் நள்ளிரவிலோ, விடியலுக்கு முன்னரோ கண்ட நேரத்தில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அப்போது வாயிலைத் திறக்குமாறு அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் வேண்டு கின்றனர். மனைவியர் எவ்விதம் கணவன் மார்களின் காதலுக்கு ஏங்கியிருந்தார் கள், இப்போது எவ்விதம் நடந்துகொள்கிறார்கள் என்பது கடைதிறப்பு என்ற முதற்பகுதியில் வரும் ஒரு சிற்றின்பச் சுவை மிக்க கற்பனைப் பகுதி.

ஒரு வரலாற்றுப் போரையும் ஒரு பேய்க்கதையையும் இணைப்பது எவ்வளவு வித்தியாசமான கற்பனை?

கேள்வி : சங்க இலக்கியங்களில் உள்ள தமிழ் தமிழ் மொழியா என்னும் அளவுக்கு உள்ளது. வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. அவைகள் வேறு ஏதோ மொழிக்காக தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருக்கின்றன. அந்த வார்த்தைகள்தான் அக்காலத்தில் வழக்குச் சொல்லாக இருந்தனவா? இல்லையெனில் புலவர்கள் தங்கள் பழமையை வெளிப்படுத்த அத்தகைய சிக்கலான சொற்களைக் கையாண்டுள்ளார்களா? – பாண்டியன் – ராமநாதபுரம்

பதில்: உண்மையில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறைவு, மிகக் குறைவு. சங்க இலக்கியம் படிக்கும்போது  நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மொழியைப் படிக்கிறீர்கள். மொழி காலத்தாலும் இடத்தாலும் வேறுபடக் கூடியதுதானே?  ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த பல வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்போது இருந்த பெரியவர்களுக்கு- அவர்கள் இருந்தால்- இப்போது உள்ள தமிழ் சுத்தமாகப் புரி யாது. ஐம்பதாண்டுகளிலேயே இவ்வளவு மாற்றம் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தமொழி எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

உங்களுக்கு ஒரு சில மொழிகளேனும் நன்றாகத் தெரிந்தால் இந்தக் கேள்வியே எழாது. ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும்- ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமே (சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது சுத்தமாகப் புரியாது. அவ்வளவு மாற்றம். பிற எல்லா மொழிகளுமே அப்படித் தான். சமசுகிருதம் ஒன்றைத்தான் செயற்கையானதாக, உச்சரிப்பு மாறாததாக வைத்திருக்கவேண்டும் என்று “செம்மைப்படுத்தியதால்” அது மாறாததாக ஓரள வுக்கு இருக்கிறது. அதே சமசுகிருதத்தின் பேச்சுமொழி வடிவமான பிராகிருதம்-இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்தது-அபபிரம்சமாக உரு மாறி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, இந்தி என்பதுபோல பல மொழிகளாக மாறிவிட்டது. இவற்றோடு எல்லாம் ஒப்பிடும்போது தமிழின் மாற்றம் மிகக் குறைவு. இன்றைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புரிகிறதே. (கேளிர் என்பது மட்டும் சற்றே கடினமான சொல்.) அல்லது செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்றால் புரிகிறதே. அதனால் உங்கள் கூற்று ஓரளவு உண்மை. உங்கள் பிற கேள்விகளுக்கு பதில்கள்.

1. தமிழ்ச் சொற்கள், தமிழுக்காக மட்டுமே உருவானவைதான். வேறு எந்த மொழிக்காகவும் அல்ல. இதுதான் எந்த மொழிக்குமே உள்ளது.

2. அந்தச் சொற்கள்தான் அந்தக் காலத்தில் வழக்குச் சொற்களாக இருந்தன.

3. புலவர்கள் செயற்கையான பழந்தமிழில் எழுதினால் நிற்காது. இந்தக் காலத்தில்கூடப் பெருஞ்சித்திரனார் போன்ற சிலர் அக்கால வழக்கைக் கையாண்டு கவிதை எழுதிப்பார்த்தார்கள். ஆனால் அவற்றைப் படிப்போர் இல்லை. எந்தக் காலமாக இருந்தாலும், அந்தந்தக் காலத்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினால்தான் மக்கள் படிப்பார்கள்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 3

c03115lb
கேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£? மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா?  செ.ராஜ்குமார் சென்னை

பதில்:
 இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ஏன் அப்படி? உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள்? தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும்? உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது.  இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.

கேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே? தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது? சரவணன், மேட்டூர்

பதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.

சமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.

சங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.

வடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.

இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலாம்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.

சமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.

உதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.

கேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்னஅதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன? கிருஷ்ணன், சென்னை

பதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)

2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும்? மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.

4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.

5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.

6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்களை சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.

7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.

இப்படி இன்னும் பலப்பல……

தமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள்,  இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது? (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)

அறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள்? நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது? நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன? சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது  ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.

கேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையேஅது கடினம் என்றால்வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன? செந்தில் குமார், மதுரை

பதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.

வெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது? பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தானான/ – /தானான/

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தான்.

என்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள்! (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).

அல்லது,

தானன / தானன / தானன/ தானன /

தானன / தானன / தானன / – / தானன /

தானன / தானன / தானன / தானன /

தானன / தானன / தான்.

தானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனம்.

இவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.

கேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும்,சித்தமருத்துவம் தமிழிலும்ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதேஇப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே? குமார், கலிபோர்னியா

பதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.

1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா? எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.

3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.

4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.

5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

வடநாட்டில்-பீகாரில் கூட கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பல கருத்துகள்  தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.


வாக்களிப்பது கட்டாயமா….?

voting-1
ஆட்சியைப் பிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, ஆட்சிக்கு அவ்வளவாகச் சம்பந்தமில்லாத இடைத்தேர்தலோ, ஊராட்சி மன்றத் தேர்தலோ எதுவானாலும் நம் ஊடகங்கள் அனைத்தும்-சொல்லும் சேதி அனைவரும் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பது நம் கடமை என்பதுதான்.

இதில் மட்டும் கருத்து வேறுபாடே இல்லை- “வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றும் “வாக்களிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை வரை தரலாம்” என்றும் ஊடக மக்கள் பிரதிநிதிகள் முழங்குகிறார்கள்.  ஏன் வாக்களிக்கவேண்டும்? அதுவும் கட்டாயமாக? பெரிய கட்சிகளான ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலுமே நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வாக்க ளிக்க வேண்டிய அவசியம் என்ன? லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுவாங்குபவர் ஒருவராவது உண்டா?. ஒரே ஒரு ஊழல்புகார் அல்லது கொலை கொள்ளைக் குற்றம், அல்லது வேறு குற்றங்கள் இல்லாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டா?

நீதிமன்றங்களுக்கு,ம் லோகாயுக்தா மன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கும் வெட்க மில்லை?

சரி, பெரிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய்? சின்னக் கட்சிகளுக்குப் போடு. அல்லது சுயேச்சைகளுக்குப் போடு என்பார்கள் நம் மக்கள் பிரதிநிதிகள். இவர்களுக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்யப்போகிறார்கள்? ஒன்று: மாறிமாறி இது ஆட்சியமைக்குமா, அது ஆட்சியமைக்குமா என்ற நிலை வரும்போது விலைபோவார்கள். தங்களை அதன்மூலம் வளப்படுத்திக்கொள்வார்கள். அல்லது எதுவும் செய்ய இயலாமல் வக்கற்ற நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். சட்டமன்றத்துக்காவது போவார்களா, ஏதாவது சட்டம் வரக் கூடுமானால் கையைக்கூட உயர்த்துவார்களா என்பதே சந்தேகம்தான்.

இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக் கும்போது “வாக்களி, வாக்களி” என்று ஏன் கேட்கிறார்களோ ? ஒருவன்-நல்லது செய்வேன் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட முடியும்£? முதலில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்குங்கள், அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தம் செய்யுங்கள்.  பிறகு “வாக்களியுங்கள்’ என்று கேளுங்கள்..

அவ்வளவு வேண்டாம். சரிவரச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று ஒரு எளிய சட்டம் கொண்டு வாருங்களேன் பார்க்கலாம்-பிறகு நாங்கள்  கட்டாயம் வாக்களிக்கிறோம்..

“இந்தத் தேர்தலில் நிற்பவர்கள் எவருமே எனக்குப் பிடிக்கவில்லை, நான் வாக்களிக்கமாட்டேன்” என்றால் ஒரு படிவம் கொடுத்துப் பூர்த்திசெய்யச் சொல்லி, முகவரி எழுதச்சொல்லி, கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள்.  (இதெல்லாம் தெரிந்து கொண்டவுடனே நம் அரசியல் தலைவர்களும் காவல்துறையினரும்  ஒன்றுசேர்ந்து நீ தீவிரவாதி என்று முத்திரை குத்தி அடித்துநொறுக்கி சிறையில் தள்ளுவார்கள்) எப்படி வாக்களிப்பது மறைவாக வைக்கப் படுகிறதோ அதுபோல விருப்பமின்மையையும் மறைவாக வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்புறம் வாக்களிக்க மக்கள் ஏன் தயங்குகிறார்கள், பயப்படு கிறார்கள்?

அதாவது, வாக்களிக்கும் எந்திரத்தில், வாக்காளர் பட்டியலுக்கு பொத்தான் விளக்கெல்லாம் தயாரிப்பதுபோலவே, எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கும் ஒரு பொத்தான் பொருத்துங்கள். அதனால் என்ன இழப்பு?

எத்தனை கோடிரூபாய்கள் ஒருநாள் பாராளுமன்றத்திற்கு, ஒருநாள் சட்ட சபை நடத்துவதற்குச் செலவாகின்றன? எவ்வளவு இலவசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் மன்றத்திற்கு வர வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா? மன்றத்தை ஒழுங்காக நடத்தவிடவேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா?

ஆக மக்கள் நாயகத்தைக் கொல்வது வாக்களிக்க விருப்பமில்லாதவர்களா, அரசியல்வாதிகளும் தேர்தல்  அவர்கள் அடிவருடிகளுமா?


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 2

kannaki-cooking
கேள்வி: தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பது அரசியல் சாராத இயக்கங்களால் முடியுமா?   செல்வன், சென்னை

பதில்:
 அரசியல் என்ற சொல்லின் அர்த்தத்தைக் குறுக்கிப் பார்ப்பதால் கேட்கப் படும் கேள்வி இது. எங்கே, எதில் அரசியல் இல்லை? இன்னொருவர் பண்பாடு நம் மீது சுமத்தப்படுவது அரசியல் செய்கை இல்லையா? அது என்ன கள்ளமற்ற, குழந்தைத்தனமான செயலா? ஆதிக்கத்துக்கான செயல்தானே?
அதுபோல அதிலிருந்து, நம் பண்பாட்டை நாம் மீட்டுருவாக்கம் செய்வது, காப்பாற்றுவது என்பதும் அரசியல் செய்கைதான். அதில் சந்தேகம் என்ன?
நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும், பேசும் எல்லாப் பேச்சுகளிலும் நுண்அரசியல் கலந்திருக்கிறது. நேரடி அரசியல் பங்கேற்பிலிருந்து வித்தியாசப்படுத்த, நுண்அரசியல் என்ற சொல் கையாளப்படுகிறது.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி என்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே. அதில் முக்கால்வாசி ஆங்கிலமும் கால்வாசித் தமிழும் ஒருவர் கலந்து பேசுகிறார் என்றால் அவரது இயல்பு, பின்னணி, நோக்கம் இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அவர் ஒரு பணக்காரராக, அல்லது உயர்மத்தியத் தர வகுப்பு சார்ந்தவராக இருப்பார். அவருக்குத் தமிழ் பற்றிப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது. ஏதோ கலப்புத் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவதோடு சரி. அதையும்கூட இப்போது பலர் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பேச்சு பழகவேண்டும், அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக வீட்டிலும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மொழித் தூய்மை பற்றியோ கலப்பு பற்றியோ கவலை கிடையாது. சுருக்க மாகச் சொன்னால் தமிழ்ப்பண்பாடு பற்றிக் கவலை கிடையாது. ஏதோ படித்தார்கள், நல்ல ஊதியம் வாங்கிப் பிழைக்கிறார்கள்- அவ்வளவுதான். ஆகவே தங்கள் பிள்ளைகளை அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்கமாட்டார்கள். அப்படிப் படித்தால் நல்ல வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாது அல்லவா? அவர்கள் ஊதிய உயர்வுக்கெல்லாம் போராட மாட்டார்கள். தாங்களே உயர் அதிகாரிகளாக இருப்பதால் இன்னும் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசியே முடித்துக்கொள்வார்கள்..

இத்தகைய மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் இவர்கள் தங்களோடு பழகுபவர்களுக்கும்-அவர்கள் கீழ்மத்தியத் தர வகுப்பினராக இருந்தாலும் பரப்புவார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா? இதை எப்படி ஒழிப்பீர்கள்? ஆகவே அரசியல் இயக்கங்களால் மட்டுமே நமது பண்பாட்டை மீட்க முடியும். வேண்டுமானால் நுண்அரசியலோடு நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறுங்கள். அதுவும் வெளிப்படையான அரசியலுக்குச் சில சம்பவங்கள் நிகழும்போது இட்டுச் சென்றுவிடும்தான். வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பெரியாரே அந்தந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அல்லவா?

கேள்வி: மதுரை மீது மாலிக் கபூரின்  படையெடுப்புக்குப் பிறகு சரண் அடைந்த வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் நிலை என்ன?  மதுரை பொற் குவியல்களை மாலிக் கபூர் கொள்ளை அடித்துச் சென்ற பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடு பஞ்சத்தில் இருந்து மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் (தமிழர்களின் தற்போதைய நிலை) தமிழர்கள் உயர முடியுமா? அதற்கு என்ன வழி? மௌ.வினோத் குமார்

பதில்- இந்தக் கேள்வி பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடியவரை பதில்சொல்ல முயற்சி செய்யலாம்.

மாலிக் காபூர் கொள்ளையடித்துச் சென்றபிறகு தமிழ்நாடு பாலைவன மாயிற்று. இன்னும் இரண்டு முறை- 1314இல் குஸ்ரூகான் என்பவன் படையெடுத்தான், 1323இல் உலூஸ்கான் படையெடுப்பு நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். உலூஸ்கான் பின்னால் முகமது பின் துக்ளக் ஆனான். அசன்ஷா என்பவனிடம் ஆட்சியை விட்டுச் சென்றான். முஸ்லிம்கள்தான் மதுரையில் 1344வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள், இருந்தாலும் நான்காம் சுந்தரபாண்டியன் 1320 வரையிலும், நான்காம் வீரபாண்டியன் 1347 வரையிலும் உயிரோடிருந்தார்கள் என்று தெரிகிறது. இதுபற்றித் தேவையானால், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற நூலைப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் பாண்டிய பரம்பரையினர் தலைக்கோட்டைப் போர் வரை (கி.பி.1565) வாழ்ந்திருந்தார்கள், விசயநகரப் பேரரசுக்குச் சிற்றரசர்களாக இருந் தார்கள் என்று தெரிகிறது. (உங்களுக்குத் தேவைப்பட்டால் 1309 முதல் 1565 வரை குறுநில மன்னர்களாக இருந்த பாண்டிய மன்னர்களின் பட்டியலைத் தர இயலும்.)

1336இல் விசயநகரப் பேரரசு ஆந்திரத்தில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குள் ளாகவே முதலாம் புக்கன் மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். பிறகு தமிழகத்தில் விசயநகர ஆட்சிதான். அவன் படையெடுப்பு பற்றி அவன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் நன்றாக விளக்குகிறது.

பாளையக்காரர்களான கட்டபொம்மு போன்றவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் பெயரில் பாண்டியன் இருந்தாலும் அவர்கள் பாண்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

கடைசியாக, இன்றைய தமிழர்கள் முன்னேறுவதற்கு வழிகேட்கிறீர்கள். மொழியுணர்வும் இனவுணர்வும் எந்த மக்களுக்கும் இன்றியமையாதவை. அவற்றை வளர்ப்பது ஒன்றுதான் நாம் எதிர்காலத்தில் இருப்பதற்கான ஒரே வழி. இல்லையென்றாலும் இருக்கமுடியும் -எந்த அடையாளமும் அற்றவர்களாக.

மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் நம்மைவிட தேர்ந்த மொழி யுணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் காணமுடியும். அவர்கள் இனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் கட்சிகளை, பிற பிரிவினைகளை மறந்து ஒன்றாக நிற்கிறார்கள். தமிழர்கள்?  மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் கூடி நம் இனத்தவரைக் கொலைசெய்ததை வேடிக்கை பார்த்த மாபெரும் இனமல்லவா நாம்? அந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இன்றுவரை தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதே, அதற்கு ஆதரவாக இங்கே ஊடகங்கள் இருக்கின்றனவே,  நமக்கு இன உணர்வு இருக்கிறதா?

கேள்வி: நிலம் வகைப்படுத்தலும், பிரிவுகளும் மற்ற எந்த நாகரிகங்களிலும் இல்லாத வகையில் தமிழர்கள் பகுத்தது வியப்பாக உள்ளது. அரப்பா நாகரிகத்தின் தொடராக நம் இனத்தை அடையாளம் காண எந்த வகையான தொன்மச் சான்றுகள் நம்மிடம் உள்ளன? மொழி தவிர்த்து வாழ்வியல் முறைகளில் ஒப்புமை உள்ளதா என்பதுதான் கேள்வியின் நோக்கம். கோவிந்தராஜ், அம்பத்தூர்

பதில்: இவை இரண்டு தனித்தனிக் கேள்விகள். நிலத்தைத் திணைகள் அடிப்படையில் வகைப்படுத்தலும் அதிலுள்ள துறைகளும் வேறு எந்த நாகரிகத் திலும் காணப்படாத, தமிழர்களுக்கே உரிய தனித்த முறை. இது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்த திணை துறைப் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. சங்க இலக்கியம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நு£ற்றாண்டு அளவிலிருந்து எழுதப்பட்டது என்பதால், அதற்கு முன்னரே இந்த முறை உருவாகியிருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் நாம் காண்பது சங்க இலக்கியம் என்றால், அது மிகச் செம்மையான கூறுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செம்மை அப்போதுதான் தோன்றுகின்ற இலக்கியத்திற்கு இருக்கமுடியாது. ஆகவே சங்க இலக்கியம் தோன்றுவதற்குக் குறைந்தது ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமையாவது தமிழ்மொழிக்கும் இலக்கியங்களுக்கும் இருந்திருக்கவேண்டும் என்பது நியாயமான யூகம். அதாவது கி.மு. 1200 அளவுக்கு நியாயமாகத் தமிழ் மொழியின் பழமை யைக் கொண்டு செல்ல இயலும்.

கி.மு. 1500 அளவில் வடமேற்கு ஐரோப்பா-இன்றைய காகசஸ்-யூரல் பகுதியிலி ருந்து ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. சிந்துவெளி நாகரி கத்தை ஆரியர்கள் அழித்தார்கள் என்று முன்னர் கூறினார்கள். இப்போது அந்தக் கருத்து மாறியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3000-2000 காலப் பகுதியைச் சேர்ந்தது. அது தட்பவெப்ப மாறுதல்களால் அழிந்ததாக இன்று கருதுகிறார்கள். இப்படிப் பார்த்தால், நாம் ஒரு கேள்விக்கு விடைகண்டாக வேண்டும்.

கி.மு. 2000 அளவில் மறைந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், கி.மு. 1000 அளவில் தோன்றிய தமிழர் நாகரிகத்திற்கும் எப்படித் தொடர்புப்படுத்துவது?

இப்படித் தொடர்பு படுத்துவதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இடைவெளி. இன்னொன்று ஆயிரம் மைல் இட வேறுபாடு.

இந்த இரண்டையும் மிகச் சரியாக நிரப்ப நம்மிடம் சான்றுகள் இல்லை. கி.மு. 1000க்கும் கி.மு. 2000க்குமான கால இடைவெளியும் வடக்கு-தெற்கு என்ற இட இடைவெளியும் நிரப்பப்படத் தக்க சான்றுகள் கிடைத்தால்-இதுவரை கிடைக்க வில்லை-நாம் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், தமிழ் நாகரிகம்தான் என்று அடித்துக்கூற முடியும். இல்லாதவரை சந்தேகம்தான்.

இந்த இடைவெளியைத்தான் வடநாட்டு இந்துவெறியர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆரியர் வருகை சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவோ பின்னால் என்ற போதிலும் அது ஆரிய நாகரிகமே என்று சான்று களையெல்லாம் திருத்தி வரலாறு எழுதுகின்றனர். (சான்றாக, சிந்துவெளி நாகரி கத்தில் பசு-எருது முத்திரைகள் உள்ளன. அவை இறைவனைப் போன்ற ஒருவர் அருகில் உள்ளன. அதனால் பசுபதி ஈசுவரருடைய முற்காலச் சித்திரிப்பு, திராவிடம் சார்ந்தது என்றார்கள். இந்துவெறியர்கள், அவற்றைக் குதிரை முத்தி ரைகளாகப் படம்வரைந்து அதை ஆரிய நாகரிகத்தினது என்று சித்திரிக்கின்றனர். குதிரைகள் ஆரிய நாகரிகத்தில் உண்டு. அஸ்வமேத யாகம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்?) அதனால் ஆரிய நாகரிகமே காலத்தினால் முந்தியது, அதன் தொடர்ச்சியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்-தமிழ் நாடு உட்பட-உள்ள நாகரிகம் என்று நிலைநாட்டுவது அவர்கள் நோக்கம். அவர்கள் இப்படிச்

செய்தது, இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இதற்கான இணையதளங்களில் இந்தச் சான்றழிப்புகளைக் காணலாம்.

இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வரலாம். தமிழர் திணை-துறைப் பகுப்புக்கு நேரடியான சான்றுத் தொடர்ச்சி சிந்துவெளிநாகரிகத்திலிருந்து கிடைக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தை நாம் சேர்ந்தவர்கள் என்றாலும் இல்லை என்றாலும், திணை-துறைப் பகுப்பு நமக்கே உரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

கேள்வி:  மார்ட்டின் வீலர் காலத்திற்குப் பின் தமிழகக் கரையோரம் மற்றும் கரைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு முடக்கப்பட்டது. இது தொடர்ந்திருக்கு மானால் நமது தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்குமல்லவா? பாண்டியன், மதுரை

பதில்: மார்ட்டின் வீலர் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்த நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், ரூபார், ராக்கிகடி, காளிபங்கன் முதலிய பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து குஜராத் வரை நீளும் நாகரிகப்பகுதி இது. இதை ஆரம்பித்து வைத்தவர் சர் ஜான் மார்ஷல். 1930-40களில், இந்தியா சுதந்திரம் பெறும்வரை அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருந்தவர் மார்ட்டிமர் வீலர். லோத்தல் இன்றும் குஜராத்தில் உள்ளது. மிச்சப் பகுதிகள் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் உள்ளன. 2010இல் சட்லெஜ் பகுதியில் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிர உருக்குச் சாலை (கி.மு.5000 அளவிலானது) மூழ்கிப்போயிற்று. இப்போது இந்து வெறியர்கள், ரிக்வேதத்தில் உள்ள நதிஸ்துதி சூக்தம் என்பது சிந்துவெளி நாகரி கத்தில் எழுதப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்ட்டிமர் வீலர்தான் சிந்துவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களை ஆராய்ந்து ஆரியர்கள் இந்த நாகரிகத்தை அழித்தவர்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்த அகழ்வா ராய்ச்சியின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதால் தொல்லியல் ஆய்வில் இந்தியர்களுக்கு ஆர்வம் குறைந்துபோயிற்று.

இந்தத் தொல்லியல் ஆய்வு தொடர்ந்திருக்குமானால் சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழ் நாகரிகத்தையும் இணைக்கும் சங்கிலிக்கான சான்றுகள் கிடைத்திருக்கலாம் என்பது யூகம்தான். உறுதியாகச் சொல்லமுடியாது. மேலும், சுதந்திரமடைந்தபின் இதில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள்-சிகாரிபுரம் ரங்கநாதராவ் போன்றவர்கள் அது ஆரியநாகரிகம் என்று நிரூபிக்க முனைந்தார்கள். எனவே பயன் கிட்டி யிருக்குமா என்பது சந்தேகம்தான்.

கேள்வி: கவிதை வடிவம் சிதைந்தது, புதுக்கவிதை என்ற வடிவம் வந்ததாலா அல்லது மக்களின் இலக்கண அறிவு குறைந்ததாலா? சேது, புதுக்கோட்டை

பதில்: புதுக்கவிதை என்ற வடிவம், உரைநடை பரவியதன் விளைவாக ஏற்பட்டது. தமிழைவிட ஆங்கிலத்தில் உரைநடை முன்னமே தோன்றிவிட்டதால், புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில், ஒரு நு£ற்றாண்டுக்கு முன்னமே தோன்றி விட்டது. இது உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு மாற்றம். இதற்கு மக்களின் இலக்கண அறிவின் குறைவைக் காரணம் சொல்லமுடியாது.

நாயக்கர் காலத்திலிருந்து சிற்றிலக்கியங்கள் புராணங்கள்தான் தமிழில் தோன் றின. அவை கற்பனை வறட்சியையும், வடநாட்டுக்கதைகளின் தழுவலையும் கொண்டிருந்தன. ஆனால் நல்ல யாப்பில்தான் எழுதப்பட்டன. இவற்றைக் கவிதைகள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் கவிதைக்குரிய உயிர்ப்புத் தன்மை இவற்றில் இல்லை.

யாப்பில் எழுதிவிட்டால் மட்டும் கவிதையாகாது. அது வெறும் செய்யுளா கவே நிற்கும். யாப்பு என்பது செங்கல்லை வைத்துக் கட்டடம் கட்டுவது போன்றது. அது கலையழகுமிக்க நேர்த்தியான கட்டடம் ஆகப்போகிறதா, எவ்விதச் சிறப்புமற்ற குட்டிச்சுவர் ஆகப்போகிறதா என்பது கட்டுவோனின் கலைநோக்கினைப் பொறுத்ததுதானே? அதுபோலத்தான் யாப்பும். அதைக் கம்பரைப்போல, பாரதியைப் போல, பாரதிதாசனைப்போல, செம்மையாகப் பயன்படுத்தினால் நல்ல கவிதையும் ஆகும். தெருவுக்குத் தெரு நம்நாட்டில் கவிஞர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு எழுதுபவர்கள் கையில் குட்டிச்சுவரும் ஆகும்.

புதுக்கவிதையும் அதுபோலத்தான். அதுவும் நல்ல கவிஞர்களிடம்தான் உயிர் பெறும். கலையாகும். எவர் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைத்தால் உரைநடைக் குட்டிச்சுவர்கள்தான் மிஞ்சும். எல்லாப் புதுக் கவிதைகளையுமே கவிதைச் சிதைவுகள் என்று பார்க்கலாகாது. ஆழ்ந்த உணர்வுகளை எழுப்புகின்ற சிறந்த புதுக்கவிதைகளும் உள்ளன.

ஆனால், புதுக்கவிதை யாப்பினைக் கைவிட்டதால், நல்ல உணர்வைத் தரக்கூடிய ஒரு சிறந்த கருவியை இழந்துவிட்டது என்பது உண்மை. கவிதையின் பொருளுக்கு யாப்பின் இசைநயம் அனுசரணையாக இருந்து உயிர் தருகிறது, அந்தக் கவிதைப் பொருளைச் செழுமையாக்குகிறது. கம்பரின் பல கவிதைகள், மிகச் சிறப்பாகக் கவிதைப்பொருளுக்கு அனுசரணையாகச் சந்தத்தைப் பயன்படுத்தக்கூடியவை.


தற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்

Pooranachnadran.k
(தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பு
 குறித்து சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பன்முகத் திறன் கொண்டவருமான பேராசிரியர் க. பூரணச் சந்திரன் அவர்களிடம் நேர்காணல் கண்டோம். பல தளங்களில் சிறப்பான ஆழ்ந்த அறிவு ஞானம் கொண்டுள்ள இவர் ஆங்கிலத்தில் இருந்து பல சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆண்டின் (2012)சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆனந்த விகடன் இவரைத் தெரிவு செய்துள்ளது. மொழி பெயர்ப்பு குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.)
சிறகு- நீங்கள் எப்போது முதல் மொழி பெயர்க்கத் தொடங்கினீர்கள்?
பூரணச்சந்திரன்-
 நான் 1982இல் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். மொழிபெயர்த்த முதல் நூல் “ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 365 நாட்கள்” என்ற மருத்துவ நூல். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். கலைச் சொற்களையும் நிறைய உருவாக்கியிருக்கிறேன். இதைத் தமிழுக்கு நான் செய்த கொடையாக நினைக்கிறேன். உதாரணமாக இன்று தொடர்பியல் துறையில் பயன்படும் பின்னூட்டம் என்ற சொல் முதன் முதலில் 1989இல் நான் உருவாக்கியதுதான். மேலும் தமிழில் அமைப்பியம், பின் அமைப்பியம், பின் நவீனத்துவம் சார்ந்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். அதுவும் திறனாய்வுத்துறையில் கலைச்சொல் உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது.

சிறகு- நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்யும் புத்தகங்களை உங்களின் விருப்பத்தின் பேரில் அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்வீர்களா?

பூரணச்சந்திரன்- இதுவரை நானாகத் தேர்ந்தெடுத்ததில்லை. எனது பதிப்பாளர்கள் -அடையாளம், காலச்சுவடு, எதிர்வெளியீடு போன்றோர் எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைத்தான் செய்கிறேன். ஆனால் என்னுடைய கருத்தியலுக்கு உடன்பாடாக அவை இருந்தால் மட்டுமே செய்வேன் என்ற நிபந்தனையை முதலிலேயே சொல்லி விடுகிறேன். இப்படி அவர்களிடம் புத்தகத் தேர்வை விடுவதற்குக் காரணம் என்ன வென்றால், சந்தைநோக்கு அவர்களுக்கு உண்டு. எந்தப் புத்தகம் விற்கும் விற்காது என்ற கணிப்புகள் அவர்களிடம் உண்டு. அவற்றில் எனது கருத்தியலுக்கேற்ப நான் தேர்வு செய்துகொள்கிறேன்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தால் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- ஆங்கிலத்தில் உள்ள பல நல்ல இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அப்படிச் செய்யக்கூடியவர்களும் நிறைய இருக்கிறார்கள். நான் சிறப்பாகக் கவனம் செலுத்த விரும்பும் துறை, திறனாய்வும் இலக்கியமும். திறனாய்வு அதிலும் மிகப் பெரிய துறை. அதற்கான கலைச்சொற்களே தனியாக உள்ளன. ஆங்கிலத்தில் திறனாய்வாளர்கள் எழுதுவதைப் புரிந்துகொள்வதே கடினம். அந்த அளவுக்குத் தனித்த திறனாய்வு நடையை உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு யாராவது தொடர்ந்து பண உதவி செய்தால் நான் ஆங்கிலத்தில் உள்ள சிறப்பான திறனாய்வு நூல்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பேன். உதாரணமாக பார்த், லக்கான், டெரிடா, ஃபூக்கோ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

சிறகு- தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எந்தப் புத்தகத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- சங்க இலக்கியங்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார்கள். ஏ.கே. இராமானுஜனின் மொழிபெயர்ப்புகள் சிறப்பானவை. ம.லெ. தங்கப்பாவும் நல்ல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வளம் குன்றாமல் பெயர்த்துள்ளார். மிகவும் கடினமான பணி இது. பிற சிலர் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளுக்கு ஏராளமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஏனென்றால் இலக்கியத்தன்மையை அவை சரிவரக்  கொண்டுசெல்லவில்லை. கம்பர் மிக அற்புதமாக, உணர்வுகளுக்கு ஏற்ற சந்தத்தைக் கையாள்பவர். அதை மொழிபெயர்ப்பில் கொண்டுசெல்லவே முடியாது. எனவே மொழிபெயர்க்கும்போது கதையம்சம் சென்று சேர்கிறதே அல்லாமல் இலக்கியத்தன்மை சென்று சேர்வதில்லை. திருக்குறள் மிக அற்புதமான இலக்கியம். ஆனால் நான் சந்தித்த வடநாட்டவர்கள் எல்லாம் இதில் என்ன இருக்கிறது? வெறும் அறிவுரைதானே என்று கேட்டிருக்கிறார்கள். நான் அதிகம் உழைத்து மொழிபெயர்க்க விரும்புவது திருக்குறளை, அடுத்து குறுந்தொகையை. அண்மைக்கால இலக்கியங்களை -நாவல், சிறுகதை போன்றவற்றை ஆங்கிலத்தில் பெயர்ப்பது எளிது.

சிறகு-1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது குறைந்த அளவு பக்கங்களாக வெளியிடுகிறார்கள். இது தவறில்லையா?

பூரணச்சந்திரன்- தவறில்லை. ஆங்கிலத்தில் தழுவல் பதிப்பு, சுருக்கப்பட்ட பதிப்பு (அடாப்டட் வெர்ஷன், அப்ரிட்ஜ்ட் வெர்ஷன்) என்றெல்லாம் உள்ளன. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர்ஃபீல்டு நாவலை முழுமையாகப் படித்தேன். ஆனால் அதன் தழுவிய, சுருக்கப்பட்ட பதிப்பை ஆங்கிலத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே சுமார் 100 பக்க அளவில் படித்துவிட்டேன். ஆங்கிலத்தில் இப்படி புகழ்பெற்ற எல்லா நாவல்களுமே சுருக்கப்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. குறிப்பாக ஈ.எஃப் டாட் என்பவர் பெயர், பிளாக்கி அண் சன்ஸ் என்ற பதிப்பகம் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. தமிழில் நாம் அதைப்போல் செய்ய வேண்டும். உதாரணமாக பொன்னியின் செல்வன் கல்கியின் புகழ்பெற்ற சரித்திர நாவல். இது ஏறத்தாழ 2000 பக்கம். இதை 150 பக்க அளவில் சுருக்கினால் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நல்ல தமிழ் உணர்வு வளரும்.

சிறகு- தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது குறைவாக இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?

பூரணச்சந்திரன்- முக்கியமாக இரண்டு காரணங்கள். தமிழ் பழமை வாய்ந்த மொழி. அதன் இலக்கியங்களை-கம்பராமாயணம் போன்றவற்றை- சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான காரியம். நம் தமிழருக்கே பழந்தமிழ் இலக்கியம் புரிவதில்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பதை பற்றி நினைத்துப்பாருங்கள். பிறமொழிக்காரர்கள் தான் தமிழிலுள்ள இலக்கியத்தை அவரவர் மொழியில் பெயர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேற்கத்திய அறிஞர்கள் தமிழ் செம்மொழி சிறந்த மொழி என்று ஏற்றுக்கொண்டார்கள் என்றால், இலக்கியத்தைப் படித்து அவ்விதமாக ஏற்கவில்லை, திராவிட மொழிகளில் மூத்தமொழி தமிழ் என்பதால் ஏற்றார்கள். இடைக்கால, பிற்கால, சிற்றிலக்கியங்கள் யாவும் வடமொழிக் கதைகளை உட்கொண்டவை. அவற்றை மொழிபெயர்த்தால் என்ன பயனளிக்கும் என்பதும் சந்தேகம். அண்மைக்கால இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. யார் யார் பரிசு வாங்குகிறார்களோ அவர்களை எல்லாம் சிறந்த ஆசிரியர்கள் என்று கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். உதாரணமாக அகிலன் ஞானபீட பரிசு வாங்கினார். அவருடைய நூல்களை எல்லாம் மொழிபெயர்த்தார்கள். அதுபோல பிற சாகித்திய அகாடெமி போன்ற பரிசு வாங்கியவர்களின் நூல்களையும் மொழிபெயர்க்கிறார்கள். பரிசுபெறாத நல்ல ஆசிரியர்களின் நூல்களை விட்டுவிடுகிறார்கள். இது தமிழில் இருக்கும் பிரச்சினை. பழந்தமிழ் இலக்கியத்தை இலக்கியச்சுவையோடு மொழிபெயர்ப்பதற்கோ சரியான ஆட்கள் இல்லை.

அண்மைக்கால இலக்கியத்தில் தமிழிலிருந்து தரமுள்ளவர்களைவிட தரமற்றவர்களை அதிகமாக மொழி பெயர்க்கிறார்கள். இது பிறமொழியாளர்கள் மத்தியில் தமிழைப் பற்றி ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தும்.

ஒரு வங்காளி நாவலை நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன் என்றால் எனக்கு வங்காளம் தெரியவேண்டும். தமிழ் தெரியவேண்டும். மேலும் மொழி பெயர்ப்பவன் இலக்குமொழியாளனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். தமிழிலிருந்து வங்காளிக்குப் பெயர்க்க வேண்டும் என்றால் பெயர்ப்பவன் வங்காளியாக இருக்கவேண்டும். ஆனால் வங்காளிக்குத் தங்கள் மொழிதான் உயர்வு, பிற தாழ்ந்தவை என்ற எண்ணம். அதனால் அவர்கள் மொழிபெயர்க்க வருவதில்லை. தமிழிலிருந்து இந்திக்குப் பெயர்க்கவேண்டும் என்றால் இந்தி மொழிக்காரர்களாக இருந்தால்தான் சிறப்பாகச் செய்வார்கள். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை. காரணம், இந்தி தேசிய மொழி. நாம் பிறமொழிகளைப் படிக்கவேண்டியதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு. நாம்தான் இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு என்றெல்லாம் நல்ல இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் செய்திருக்கிறோமே தவிர அவர்கள் அப்படிச் செய்யவில்லை. (சாகித்திய அகாதெமி மொழி பெயர்ப்புகளை பார்த்துவிட்டுத்தான் இதைச் சொல்கிறேன்), இதனால் தமிழின் சிறந்த படைப்புகள் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோளாறு. இந்தியாவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22. இவற்றில் ஒன்றை மட்டும் தேசியமொழி என்ற தகுதி கொடுத்துப் பிறவற்றை கவனியாதுவிட்டால், அவை வளர்வதில்லை. குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளைப் படிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மையை அரசியல் சட்டம் உருவாக்கி இருக்கிறது. அதனால் வடநாட்டுக்காரர்கள் தென்னிந்திய மொழிகளைப் படிப்பது குறைவு. அதிலும் தமிழ்தான் வடமொழிச் சார்பு மிகக் குறைவானது. அதனால் இதைப் படிப்பது மிகவும் குறைவு. மலையாளம் போன்ற மொழிகளில் சமசுகிருதக் கலப்பு ஏராளம். நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப போன்றவற்றை ஏற்றதோடு சம்புகாவியம் போன்ற வடமொழி இலக்கிய வகைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு அயலான மொழி. இந்திய மொழிகளிலேயே வடநாட்டுக்கு மிகக்குறைவாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழ்தான். இதற்குக் காரணம் வடநாட்டவரின் குறுகியநோக்கம்.

சிறகு– மொழிபெயர்ப்புத் துறை இணைய தளத்திற்குப் போகிறதா? அதற்குத் தனியான இணைய தளம் இருக்கிறதா?

பூரணச்சந்திரன்- இருக்கிறது…

சிறகு- மொழி பெயர்க்கும்போது ஒரு படைப்பின் மூலம் சிதைந்து விட வாய்ப்பு உண்டல்லவா?

பூரணச்சந்திரன்- மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். மூலமொழியைப் போலவே இலக்குமொழியும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். நல்ல ரசனை வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தால்தான் நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்கும். இன்றைக்கு இருககும் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழி அறிவும் ரசனை யும் போதிய அளவு இருப்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஸ்பானிய மொழிக் கதைகளை ஆங்கில வாயிலாகத் தமிழில் மொழிபெயர்க்கிறார், ஆனால் அவருடைய ஆங்கிலத்தகுதி, மேற்கத்திய கலாச்சார அறிவு பற்றி எனக்குச் சந்தேகம். அதனால் சரிவர இல்லை எனத் தோன்றுகிறது. ஜெர்மானிய இலக்கியங்களை-முக்கியமாக பிரெஹ்டின் நாடகங்களை 1970களிலேயே தமிழில் மொழிபெயர்த்தார்கள். ஆனால் எந்த மொழிபெயர்ப்புமே சரியாக வாசிக்கப்படும் அளவுக்கு இல்லை. இலக்கியமாகத் தமிழில் வரவில்லை. இந்தக் குறைபாடுகள் இன்றி மொழிபெயர்க்கவேண்டும்.

சிறகு- மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வார்த்தையாக அல்லது ஒரு பத்தியை படித்துவிட்டு அதன் கருத்தை உள்வாங்கி மொழிபெயர்ப்பீர்களா? எப்படி?

பூரணச்சந்திரன்- ஒவ்வொரு வார்த்தையாக மொழிபெயர்ப்பது முடியவே முடியாத காரியம். ஆங்கிலத்தில் கருத்துகள் வாக்கியமாக இடம்பெறும் முறை வேறு, தமிழில் வேறு. இந்தியில் வேறு. ‘The man who is there’  என்ற ஆங்கிலத் தொடரை அங்கே உள்ள மனிதர் என்று தமிழில் பெயர்க்கலாம். வார்த்தை வார்த்தையாக மனிதர் யார் இருக்கிறார் அங்கு என்று பெயர்க்க முடியாது. பொதுவாக மொழி பெயர்ப்பாளர்களாகிய நாங்கள் நூல்முழுவதையும் படித்துவிடுவோம். பிறகு பெயர்க்க வேண்டிய பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டு, வாக்கியம் வாக்கியமாக மொழிபெயர்ப்போம். சிலபேர் கடினமான வாக்கியங்களைத் தாண்டிப்போய்விடுவார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. முழுவதையுமே மொழிபெயர்ப்பதுதான் என் வழக்கம்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து மட்டுமா அல்லது வேறு மொழிகளில் இருந்தும் நீங்கள் மொழி பெயர்க்கிறீர்களா?

பூரணச்சந்திரன்- பொதுவாக இதுவரை பதிப்பகத்தார்கள் என்னிடம் ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நிறைய மொழிகளைப் படிக்க முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எதில்வேண்டுமானாலும் பெயர்க்க இயலும்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 1

597px-My_impression
கேள்வி 1. விரிச்சி கேட்டல் என்ற பண்டைய பழக்கம் இன்றைய சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒப்பானதா? காலக்கணிப்பு என்பது பிற்கால சங்க இலக்கியமான கணியன் பூங்குன்றனார் போன்றவர்களிடமும் இருநத வழக்கம் இல்லையா?

காசி விசுவநாதன், துபாய்
விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள். அதாவது, நாம் ஏதாவது ஒரு செயல் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலையோடு வீட்டு வாசற்படியை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கிறோம். தெருவில் யாரோ ஒருவன் இது முடியவே முடியாது என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டு போகிறான். நாம் உடனே மனம் துணுக்குறுகிறோம். பதிலாக, அவன் நிச்சயமா நல்லபடியா எல்லாம் நடக்கும்பா என்று சொல்லிக்கொண்டுபோவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது நம் மனம் மகிழ்ச்சிடைகிறது. இதுதான் விரிச்சி கேட்டல். இது ஒரு மூடநம்பிக்கை தான். இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான மூடநம்பிக்கை என்று ஆறுதல் அடையலாம்.
இது இக்காலச் சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒத்ததல்ல என்பது நான் விளக்கியபோதே தெரிந்திருக்கும். ஏனென்றால் இதில் ஜாதகம் எழுதுவது, அதை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பது, நல்லநாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைப் பார்ப்பது என்பதெல்லாம் கிடையாது.
“பிற்கால” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிய வில்லை. சங்க இலக்கியம்தான் தமிழில் முற்பட்டது, மூத்தது. கமில் சுவலபில் போன்ற உலகப் பேராசிரியர்கள் எல்லாம்கூட சங்க இலக்கியம் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமசுகிருதம், பிராகிருதம், பாலி போன்ற மொழிகளைத் தவிர இந்தியாவில் தமிழ் மட்டுமே இருந்தது. அக்காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளோ, குசராத்தி, வங்காளி போன்ற வடஇந்தியமொழிகளோ எவையும் தோன்ற வில்லை. தமிழைச் செவ்வியல் மொழி என்பதற்கு இது முக்கியக் காரணம்.
சங்க இலக்கியம் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக்காலமாவது பரப்பளவு உடையது. அதாவது ஒரே ஆண்டிலோ, ஒரு பத்தாண்டிலோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல அது. கி.மு. 300 வாக்கில் தொடங்கப்பட்டிருக்கலாம். கி.பி.200 வரை எழுதப்பட்டிருக்கலாம். அதில் கணியன் பூங்குன்றனாரை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக ஏசுநாதர் காலத்தை ஒட்டி இருக்கலாம். (தனித்தனிப் புலவரின் காலத்தை மதிப்பிடுவது கடினம், என்றாலும் சிலர் செய்திருக்கிறார்கள்.)
கணித்தல் என்பது கணக்கிடுதல். வானத்தின் நட்சத்திர, கோள் (கிரக) அமைப்புகளைக் கணக்கிடுபவர் என்பது இச்சொல்லின் பொருள். அதாவது இக்கால வழக்கில் சொன்னால், ஒரு வானியலாளர். சோதிடர் அல்ல. தமிழ் மக்கள் அக்காலத்தில் வானியலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம். பார்ப்பனர்கள் என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமானால், பிரம்மத்தைத் தேடுகிறார்களோ இல்லையோ, பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 3. தமிழிசை இயக்கம் தவற விட்ட பாதை என்ன? ஏன் தமிழர்களின் செவ்வியல் இசை வடிவமான கருநாடக இசை என்பதை-கர்நாடிக் என்ற இசைத்திருட்டினை மீட்டெடுக்க முடியவில்லை? 
கார்த்திகேயன், கலிபோர்னியா
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் தொட்டே தமிழ் இசைக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ்ப் பண்கள் (இராகங்கள்) பலவற்றைக் குறித்துள்ளன. பழந்தமிழ் நாட்டில் குழல், யாழ், தண்ணுமை (மிருதங்கம்) உட்படப் பல இசைக்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் இலக்கிய, கல்வெட்டு, பிற உரைநடைக்குறிப்புகள் சான்றுகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ பதிநான்காம் நூற்றாண்டில் சாரங்க தேவர், பின்னர் வேங்கட மகி காலம் தொடங்கி, தமிழிசை கர்நாடக இசையாக மாறியது. இவர்கள் எல்லாம் கன்னடர்கள், தெலுங்கர்கள். அவர்கள் தமிழ் இசையைக் கர்நாடக இசையாக மாற்றி, இராகங்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத்து, நூல்கள் எழுதிவிட்டார்கள். ஏனென்றால் அது விஜயநகரப் பேரரசின் காலம். தமிழ் ஆட்சியாளர்கள் இல்லை. இருந்த குறுநிலத் தமிழ் மன்னர்களாவது அபாயத்தை உணர்ந்து தமிழ் இசை பற்றிய நூல்களைத் தமிழ்இசை வாணர்களை வைத்து எழுதச் செய்திருக்கவேண்டும். அவ்வளவு நோக்கம் அவர்களுக்கு இல்லை. இடைக்கால வரலாற்றை விரிப்பது பதிலைப் பெரிதாக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
1930களில் தமிழிசை இயக்கம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்கள் பலரால் உருவாக்கப் பட்டது. தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ள பலர்-தண்டபாணி தேசிகர், இலக்குமணப் பிள்ளை போன்ற பலர் இதில் இணைந்தனர்.
ஆனால் தமிழிசை இயக்கம் ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1. தமிழிசை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீதிக்கட்சியைச் சேர்ந்த வர்கள். பச்சையாகச் சொன்னால், செட்டியார்கள், பிள்ளைமார்கள், முக்குலத் தோர் இத்தியாதி. அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற நிலையில், நீதிக்கட்சி செய்யும் எந்த முயற்சியும் காங்கிரஸுக்கும், இந்திய தேசியத்திற்கும் எதிரானதாகவே நோக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கம் பெரிய ஆதரவு பெறவில்லை. குறிப்பாகப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். காங்கிரஸ் பெரிய அளவில் பார்ப்பன இயக்கம்தான். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், கல்கியும் சத்தியமூர்த்தியும் மட்டுமே. பாரதியாருக்குத் தமிழ் இசையில் ஆர்வம் உண்டு. ஆனால் அவர் 1921இலேயே மறைந்துவிட்டார்.
2. இதை ஏற்ற நீதிக்கட்சிப் பெரும்தனக்காரர்கள், அடித்தட்டுவரை தமிழிசை இயக்கம் பரவுவதற்கான முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. மாநாடுகள் போட்டார்கள், சில கச்சேரிகள் நடத்தினார்கள், பத்திரிகைகளில் ஆதரவுக்கட்டுரைகள் எழுதினார்கள்-அவ்வளவுதான். உண்மையில் தமிழிசை சற்றேனும் பரவியது என்றால் காரணம் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகர்களால்தான். அவர்கள்தான் பொதுமக்களிடம் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சென்றார்கள். பொதுமக்களுக்கு இசையின் வரலாற்றிலோ, கோட்பாடுகளிலோ என்ன அக்கறை இருக்கமுடியும்?
3. மிக முக்கியமான கோளாறு, திராவிட இயக்கத்தவர் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. தி.க. எந்தக் கலையிலுமே ஆர்வம் காட்டியதில்லை. தி.மு.க. திரைப்படத்திலும், நாடகத்திலும் ஆர்வம் காட்டியதுபோல, தமிழிசையிலும் ஆர்வம் காட்டியிருந்தால் ஓரளவேனும் அது பிழைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடக்கத்தில் பாரதிதாசன் போன்றோர் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் கைவிட்டுவிட்டார்கள். திரைப்படப் பாடல்களின் திசை வேறாகப் போய்விட்டது. பொதுவுடைமை இயக்கத்திலும் பட்டுக்கோட்டை ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நல்ல பாடல்கள் எழுதியவர். வேறு ஒருவரும் கிடையாது.
4. பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் ஆற்றல் வாய்ந்த கவிஞனாக வந்தவர் கண்ணதாசன். ஆனால் அவருக்குக் கொள்கை எதுவும் கிடையாது. அதிகபட்சம், அவர் கண்ணனுக்கு தாசன்தான். கண்ணா கண்ணா என்று மறுபடியும் தெய்வப் புலம்பல்.
இப்படி எத்தனையோ காரணங்கள்.

கேள்வி 4. பரதவர் கலை என்ற பரதக்கலை, பின் நாட்களில் எவ்வாறு பரத நாட்டியம் என மாற்றம் பெற்று, ஒரு சாதி அமைப்பிற்கு மட்டுமே சொந்த மானது? அதனைப் பரத்தையர் கலை என்ற அவலம் வந்ததற்குக் காரணம் என்ன?

காந்திராஜ், வட கரோலினா 
அ. எல்லாச் சொற்களையும் வடமொழிச் சொற்கள் என்றாக்கி, அதற்கு ஒரு காரணத்தை அல்லது கட்டுக்கதையைச் சொல்லிவிடுவதில் பார்ப்பனர்களுக்கு நிகர் இல்லை. அப்படித்தான் பரதவர் கலை (பேச்சுத் தமிழில் பரதவக் கலை>பரதக்கலை) என்பதற்கும் ப-என்றால் பாவம், ர-ராகம், த-என்றால் தாளம், “பாவமும் ராகமும் தாளமும் நிரம்பியது பரதம்” என்றாக்கிவிட்டார்கள். உண்மையில் அப்படித்தான் என்றாலும், அது பாராதாக் கலை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்? (ஒருவேளை வடமொழியில் நெடில்களை எல்லாம் விட்டுவிடவேண்டுமா?)
ஆ. இதெல்லாம் பின்னால்தான். இம்மாதிரிக் காரணங்கள் கண்டுபிடிக்கும் முன்பே அது பார்ப்பனர்க் கலையாக உருமாற்றம் அடைந்துவிட்டது. அதற்கு முன்பு அதை இசைவேளாளர்களும் தாசிகளும்தான் காப்பாற்றிவந்தார்கள். இராஜராஜ சோழன் சோழநாட்டில் பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதும், அவற்றில் கணிகையர்களைப் பாட்டுப்பாடுவதற்கும் நாட்டியமாடுவதற்கும் நியமித்தான். அதற்காகவே முன்பு சிற்றளவில் இருந்த பரத்தையர்களை தேவதாசிகள் (தேவரடியார்கள்-இது இப்போது வழக்கில் தேவடியா என்று வசைச்சொல்லாக மாறிவிட்டது) என்று பெரியதொரு சாதியாக மாற்றிக் கோயிலுக்குக் கோயில் அனுப்பினான். இது நடந்தது கி.பி. பதினோரம் நூற்றாண்டில்.
இ. இவர்கள் தேவர் அடியார்களாக இருந்ததெல்லாம் சிறுகாலம்தான். பிறகு இயல்பாகவே அவர்கள் பெரியமனிதர்களுடைய, அதிகாரிகளுடைய, ஆதிக்க சாதியினருடைய (பார்ப்பனர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், இத்தியாதி) வைப்புகளானார்கள். (1950கள்வரை கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவருக்கும் வைப்பாட்டிகளாக தாசிகள் உண்டு. அவர்களுக்கு அதில் மிகவும் பெருமை. அக்காலத்து ஜமீன்தார், மைனர்களுக்கும் தாசிகளிடம் போய்வருவது மிகப் பெருமை.) ஆகவே இறைவனுக்குரிய கலை, பெரிய மனிதர்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. அதற்குப் பெயரும் பரதவர் கலை என்பதிலி ருந்து சதிர்க்கச்சேரியாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரதநாட்டியம், சதிர் என்ற பெயரில்தான் அறியப்பட்டது.
ஈ. இசை, நாட்டியக் கலையோடு அன்றிலிருந்து சம்பந்தப்பட்டது நாதசுரமும் பெரிய மேளம் எனப்படும் தவிலும். நாதசுரத்தை ஊத மூச்சுப்பிடிக்கவேண்டும். தவில் அடிக்க கைகளில் வலு வேண்டும். அந்த ‘தம்’-மும், வலுவும் இல்லாததால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள்.

கேள்வி 5. சங்க இலக்கியங்களின் காலநிலை குறித்து விளக்கம் தேவை.

சுப்பிரமணி, சென்னை 
முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இயற்றப் பட்டது சங்க இலக்கியம். இதற்கு ஆதாரங்களை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் (மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றில்) காணலாம். அகச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. புறச்சான்றுகளாகக் கிடைப்பவைதான் முக்கியமானவை. அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்.
அ. சங்ககாலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்) கிரேக்கர், ரோமானியர் பெரிய அளவில் தமிழகத்தோடு கப்பல்களில் வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ், பிளைனி, தாலமி எழுதிய நூல்கள் ஆகியவற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் கிரேக்க, ரோமானியக் (இவர்களை யவனர் என்பது தமிழ் வழக்கம்) காசுகள்-குறிப்பாக கி.மு.வில் இருந்த அகஸ்டஸ் சீஸரின் காசுகள் புதுச்சேரி அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களுக்கு யவனர் குற்றேவல் செய்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆ. தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பவை தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சொற்றொடர் அமைப்புகள், செய்திகள் ஆகியவை அக்காலத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிநடை, செய்திகள் ஆகியவற்றுடன் ஒத்துச் செல்கின்றன.
இ. சங்ககால நகரமான பூம்புகார் கடலடியில் இன்றும் மறைந்து கிடக்கிறது. 1980 கள்வரை கடலில் அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் காவிரி கடலில் கலக்குமிடத்துக்கு அருகில் கடலுக்கடியில் மிகப்பெரிய நகரம் ஒன்று இருப்பதைக் கண்டு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் பணம் இல்லை என்ற நொள்ளைச் சாக்கு காட்டி அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது.
இதுபோல இன்னும் ஏராளமாகக் கூறலாம். எதற்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படிப்பது நல்லது.