நீண்ட வாடையும் நல்ல வாடையும்

நீண்ட வாடையும் நல்ல வாடையும்

சங்க இலக்கியப் பத்துப்பாட்டின் நூல்களில் ஒன்று நெடுநல்வாடை. இது நக்கீரரால் இயற்றப்பட்டது என்பர்.

தொகைகளில் உள்ள பாக்களைப் பாடிய நக்கீரர் வேறு, திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் வேறு, இவர் வேறு என்றே கொள்ளத் தோன்றுகிறது. தொகைப்பாடல் நக்கீரர் சோழமன்னன் கரிகாற் பெருவளத்தானைப் பாடியிருக்கிறார். இந்த நக்கீரரோ ஒரு பாண்டிய மன்னனைப் (இவனை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பலகாலமாகச் சொல்லி வருகின்றனர்) பாடுகிறார். ஒரு வேளை நெடுநல்வாடையின் தலைவனும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனாகவே இருந்து, அவனும் கரிகாற் பெருவளத்தான் காலத்திலேயே வாழ்ந்திருந்தால், இருவரும் ஒரே நக்கீரர் என்று கொள்ள இடமுண்டு.

இக்கட்டுரை, நெடுநல்வாடையின் தொடர் அமைப்பைக் காண்கிறது.

பொதுவாக சங்கக் கவிதைகள் யாவுமே இரண்டு மூன்று வாக்கியங்களில் அமைகின்றன. இதற்குப் பத்துப்பாட்டுக் கவிதைகளும் விதிவிலக்கல்ல, அவ்வாக்கியங்களுக்குரிய எச்சத்தொடர்களும் தழுவு தொடர்களும் அவற்றை ஓர் அமைப்புக்கு உட்பட்டனவாக, கவிதையாக வடிவமைக்கின்றன.
நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டிருந்தாலும், இரண்டே இரண்டு வாக்கியங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. பெயருக்கும் வினைக்கும் அடை மொழியாக வரக்கூடிய தொடர்கள் பெருகிப் பெருகி ஒரு நீண்ட கவிதையாக உருவாகின்றன.

பனிக்கால நிகழ்வுகளையெல்லாம் வருணிப்பதாக, “வையகம் பனிப்ப வலன் ஏர்பு” என்று தொடங்கி, “கூதிர் நின்றன்றால் போதே” என்று முடிவது ஒரு வாக்கியம் (முதல் 72 அடிகள், சரியாகச் சொன்னால், 72ஆம் அடியின் மூன்றாம் சீர்வரை). இதன் எழுவாயும் பயனிலையும் சேர்ந்தே உள்ளன. “போது கூதிர் நின்றற்றால்” என்று கூட்டவேண்டும். பிற யாவும் இவ்வாக்கியத்திற்கு வரும் அடைகள்.

இன்னொரு வாக்கியம், 72ஆம் அடியின் நான்காம் சீராகிய “மாதிரம்” என்பது தொடங்கி, இறுதியடியின் “பாசறைத் தொழிலே” என முடிகிறது. இவ்வாக்கியத்தின் எழுவாய் தனியாகவும், பயனிலை தனியாகவும் பிரிந்து நிற்கின்றன. “பாசறைத் தொழிலே” (அடி 188)-“இன்னே முடிகதில் அம்ம” (அடி 165) எனக் கொண்டு கூட்டவேண்டும். அதாவது “பாசறைத்தொழில் இனிதே முடிவதாக” என்று பொருள்.

இந்தத் தொடரில், அம்ம என்ற சொல் அசைநிலையாக இங்கே கொள்ளப்படு கிறது. (“அம்ம கேட்பிக்கும்” என்பது தொல்காப்பியம்). இதனைத் தோழி ஒருத்தி இன்னொருத்தியிடம் கூறும் கூற்றாகக் கொண்டு, “அம்ம” என்பது விளி என்கிறார் நச்சினார்க்கினியர். இவ்வாறு கொண்டாலும், வாக்கிய அமைப்பில் மாற்றமில்லை. (விளியைத் தனிவாக்கியமாகக் கொள்ள முடியாது.)

பத்துப்பாட்டுச் செய்யுட்களின் அமைப்பு தன்னிச்சையானதல்ல. நெடுநல் வாடையிலும் அப்படியே. “கூதிர் நின்றற்றாற் போதே” என முதல்வாக்கியத்தையும், “பாசறைத் தொழில் இன்னே முடிகதில் அம்ம” என இரண்டாவது வாக்கியத்தையும் கொண்டு இதனை இரு பகுதிகளாக நக்கீரர் பிரித்துவிடுகிறார்.

முதல் வாக்கியம் முழுவதும் ‘நெடியவாடை’யின் இயல்புகளை எடுத்துரைப்பது. இரண்டாவது வாக்கியம் முழுவதும் ‘நல்வாடை’ என்பதற்கான காரணத்தை முன் வைப்பது. இன்னும் தெளிவாகச் சொன்னால், முதல் வாக்கியம் கூதிர்காலப் பின்னணியைத் தருகிறது (முதல், கரு). இரண்டாவது வாக்கியம் தலைவி தலைவனின் செயல்களைச் சொல்கிறது (உரி).

“வானம் மழை பொழிய, போது கூதிர் நின்றது; புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு, இன்னா அரும்படர் தீர, விறல்தந்து வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழில் இன்னே முடிக” என்பது பாட்டின் செய்தி.

இதனை யார் கூறுவதாகக் கொள்ளலாம்?

யாவற்றையும் நோக்குகின்ற ஒரு அந்நியன் (an omnipotent voyeur or zero focalizer) கூறுவதாகக் கொள்ள இயலும். அவன் எங்கும் குளிர்காலம் பரவிக் கிடப்பதையும் காண்கிறான், வேந்தன் பாசறையில் உறங்காமல் செயல்படுவதையும் காண்கிறான், அரசி அரண்மனையில் உரோகிணியை நோக்கிய வண்ணம் பெருமூச்செறிந்து இருப்பதையும் செவிலியர் தேற்றுவதையும் காண்கிறான். அவனது நோக்கிலேயே பாட்டு சொல்லப்படுகிறது.

நெடுநல்வாடைப் பாட்டிலுள்ள முறையிலேயே அதன் அமைப்பினைக் காண்பது பின்னர் அதனை விளக்கமாக ஆராய உதவும். எனவே நெடுநல்வாடையின் தொடர்முறையை முதலில் காண்போம். நெடுநல்வாடை இரண்டு வாக்கியங்களில் இருபத்தாறு அர்த்தக்கூறுகளை (லெக்சியாக்களை)க் கொண்டிருக்கிறது. முதல் வாக்கியத்தில் பன்னிரண்டு லெக்சியாக்களும் இரண்டாவது பகுதியில் பதினான்கு லெக்சியாக்களும் அமைந்துள்ளன.

நெடுநல்வாடை அமைப்பு-முதல் வாக்கியம்

1. பருவம் பொய்யாமல் பெய்கின்ற மேகம், உலகமெல்லாம் குளிரும்படியாக, தான் கிடந்த மலையை வலமாக வளைத்து எழுந்து கார்ப்பருவத்திலே மழையைப் பொழிந்தது. அங்ஙனம் பெய்த மழையினால் வெள்ளம் பெருகியது.
அந்த வெள்ளத்தை வெறுத்த கொடிய (வளைந்த) கோலினை உடைய கோவலர்கள் ஏற்றையுடைய இனங்களையும் பசுக்களையும் மேட்டுநிலமாகிய முல்லைநிலத்தே மேயவிட்டனர்; தாம் பழகிய இடத்தைவிட்டு நீங்குவதால் வருத்தம் எய்தினர். காந்த ளின் நீண்டஇதழ்களால் கட்டிய கண்ணி நீர் அலைத்தலினால் கலக்கம் எய்தினர். தம் உடம்பினில் கொண்ட பெருங்குளிர் வருத்துவதால் பலரும் ஒருங்கு கூடிக் கையில் நெருப்பினை உடையவராய்த் தம் பற்கள் பறைகொட்ட நடுங்கினர்.

2. விலங்குகள் மேய்வதை விட்டு ஒடுங்கினன, குரங்குகள் குளிர்கொண்டு வருந்தின, மரங்களில் உறையும் பறவைகள் காற்று மிகுதியால் நிலத்தில் விழுந்தன, பசுக்கள் குளிர் மிகுதியால் கடுமையாக உதைத்துக் கன்றுகளைப் பாலுண்ணாதபடி தவிர்த்தன. மலையையும் குளிர்ச்சி செய்வது போன்ற இப்படிப்பட்ட கூதிர்க்காலத்தின் நடுயாமத் தில்,

3. புல்லியகொடியினை உடைய முசுட்டையின் திரண்ட புறத்தையுடைய வெண்மலர் கள் பொன்னிறமான நிறத்தையுடைய பீர்க்க மலரோடு புதல்கள் தோறும் மலர்ந்தன. பசுமையான கால்களையுடைய கொக்குகளும், நாரைகளும் வண்டலிட்ட சேறுபரந்த ஈரத்தினையுடைய வெண்மணற் பரப்பிடத்தே இருந்து நீரின் போக்கினை எதிர்த்து வரும் கயல்மீன்களைத் தின்றன. மிகுதியாக மழைபொழிந்தமையால் நீர் உயர்ந்து எழுந்தது. மேகங்கள் அகன்ற பெரிய ஆகாயத்தில் சிறுசிறு நீர்த்துளிகளை மெல்லத் தூவக் கற்றன. இப்படிக் கூதிர் நிற்கின்ற போதிலே,

4. அழகிய இடத்தையுடைய அகன்ற வயல்களில் நிறைந்த நீரால் மிக்கெழுந்த வளமையான தாள்களையுடைய நெல்லினின்றும் புறப்பட்ட கதிர்கள் முற்றி வளைந் தன. பெரிய அடிகளை உடைய கமுகினது நீலமணியை ஒத்த கழுத்திலிருக்கும் கொழுத்த மடலிடத்தில் விரிந்த தாறுகளில் உள்ள பசுமையான காய்கள் நுண்ணிய நீர் நிற்கும்படியாகத் திரண்டு, இனிமை உண்டாகுமாறு முற்றின. செறிந்த மலை யுச்சியில் பலநிற மலர்களையுடைய அகன்ற பொழில்களில் உள்ள மரக்கிளைகளில் மழைத்துளிகள் நிறம்பெற்று விழுந்தன.

5. மாடங்கள் உயர்ந்த, வளமான பழைய ஊரின்கண் இருக்கும் ஆறுகிடந்தாற்போன்ற அகன்ற தெருக்களில், தழைவிரவிய மாலையை அணிந்த பருத்த அழகிய வலிமை யுடைய இறுகிய தோள்களையும் முறுக்குண்ட உடலினையும், நிரம்பிய வலிமையையும் உடைய மிலேச்சர், வண்டுகள் மொய்க்கும் கள்ளையுண்டு, மகிழ்ச்சிமிக்கு, சிறுது£ற லாகப் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல், முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினை உடையவராய், பகல்கழிந்த பொழுதிலும் தம் மனம்போன இடங்களில் திரிந்துகொண்டிருந்தனர்.

6. வெண்மையான சங்குகளை அணிந்த முன்கைகளையும், பணைபோன்ற தோள்க ளையும், மெத்தென்ற சாயலையும், முத்துப்போன்ற பற்களையும், பொலிவுடைய மகரக்குழையிட்ட அழகிற்குப் பொருந்தி உயர்ந்து தோன்றுகின்ற அழகிய குளிர்ந்த கண்களையும், மடப்பத்தையும் உடைய மகளிர், தாங்கள் பூந்தட்டிலே இட்டுவைத்த பசுங்கால்களையுடைய, மலரும்செவ்வியிலுள்ள பிச்சிப் பூக்களின் அழகிய இதழ்கள் விரிந்து மணப்பதால், அது அந்திக்காலம் என அறிந்து, இரும்பால் செய்த தகளியில் நெய்தோய்ந்த திரியைக் கொளுத்தி, நெல்லையும் மலரையும் து£வி, இல்லுறை தெய்வத்தை வணங்கி, வளம்மிக்க அங்காடித் தெருக்களில் மாலைக்காலத்தைக் கொண்டாடினர்.

7. இரவும் பகலும் தெரியாமல் மயங்குகையால் மனையிலிருக்கும் புறாக்களின் செங்காற் சேவல்கள், தாம் இன்புறுகின்ற பெடையோடு மன்றிலே சென்று இரைதேடி உண்ணாமல் மயங்கிச் செயலற்று, கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் (பறக்காமல்) அமர்ந்து, கடுத்த கால் ஆறும்படி மாறி மாறி வைத்தவாறிருந்தன.

8. காவலை உடைய அகன்ற மனைகளில் குற்றேவல் இளைஞர், கருங்கொள்ளின் நிறத்தைக் கொண்ட நறிய சாத்தம்மியில் கஸ்து£ரி முதலிய பசுங்கூட்டினை அரைக்க,
வடநாட்டவர் தந்த வெண்மையான சிலாவட்டம் தென்திசையில் தோன்றிய சந்தனத் தோடு பயன்படாமல் கிடக்க, மகளிர் குளிர் மிகுதியால் கூந்தலில் மாலையிட்டு முடிக்காமல் மங்கலத்திற்காக ஒரு சில மலர்களை இட்டு முடித்து, தண்ணிய நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகில் நெருப்பை உண்டாக்கி, அதில் கரிய அகிலோடு கண்டசர்க்கரையையும் கூட்டிப் புகையெழுப்பினர்.

9. புனைதல் வல்ல கம்மியனால் அழகுழறச்செய்யப்பட்ட சிவந்த ஆலவட்டம் உறையிடப்பட்டு, சிலந்தியின் நூலால் சூழப்பட்டு, பயனின்றி, வளைந்த முளைக் கோலில் தொங்க, வானைத் தொடுமாறு உயர்ந்த மாடங்களில், இளவேனிற் காலத்தில் துயிலும் படுக்கைக்குத் தென்றல் காற்றைத் தரும் பலகணிகளின் கதவுகள் நன்கு பொருத்தித் தாளிடப்பட்டுக் கிடந்தன.

10. கல்லென்னும் ஓசையுடைய சிறுதூறலை வாடைக்காற்று எங்கும் பரப்புவதால், இளையோரும் முதியோரும் குளிர்ந்த வாயையுடைய குடத்திலுள்ள நீரைக் குடிக்காமல், அகன்றை வாயையுடைய இந்தளத்திலிட்ட நெருப்பின் வெம்மையை நுகர்ந்தனர்.

11. ஆடல் மகளிர், தாம் பாடுகின்ற பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூட்ட முயன்று, கூதிர்க்காலத்துக் குளிர்ச்சியால் அது நிலைகுலைந் திருப் பதால், அதன் இனிய குரல்நரம்பைத் தம் பெரிய மார்பின் வெப்பத்தில் தடவி, கரிய தண்டினையுடைய சீறியாழைப் பண்நிற்கும் முறையிலே நிறுத்தினர்.

12. கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தினர். இங்ஙனம் காலமழை செறிந்து கூதிர்க் காலம் நிலைபெற்றது.

நெடுநல்வாடையின் அமைப்பு-இரண்டாம் வாக்கியம்

13. வானத்தில் விரிந்த கதிர்களைப் பரப்பும் ஞாயிறு மண்டிலம், மேற்கு திசையில் சென்றது. இரண்டு இடங்களிலே நாட்டிய கோல்களினால் ஒருபக்கமும் சாயாத நிழல் கொண்ட எல்லையையுடைய நாளைத் தேர்ந்தெடுத்தனர். அந்த நாளில், நூலறி புலவர் கூறியபடி, கயிறிட்டு, நுட்பமாக அளந்து, இடத்தைக் குறித்து, பிறகு தெய்வத்தை நினைத்து, பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனுக்கு ஏற்ற மனை வகுத்தனர். அதனைச் சுற்றி உயர்ந்த வாயில் அமைத்தனர்.

14. அவ்வாயிலின் நெடுநிலை மாடக் கதவுகளை பாரிய இரும்பாலமைத்து, சாதி லிங்கம் வழித்து, இரண்டுபுறமாக அமைந்த மாட்சிமைப்பட்ட செருகுதல் அமைந்த உத்தரத்திலே குவளை மலர் உருக்களையும், புதிய பிடிகளையும் பொருத்தினர். தாழ்க் கோலோடு சேர்வதற்கான பொருத்துவாய் அமைத்து, தொழில் வல்ல தச்சன் முடுக்கு வதால் இடைவெளி சிறிதும் இல்லாமல் சிறுவெண்கடுகு அப்பிய நெய்யணிந்த நெடிய நிலையினை உடையதாக அரசனின் கோயில் அமைந்திருந்தது.

15. வெற்றிகுறித்து உயர்த்திய கொடிகளையும், யானைகள் சென்று புகும்படி உயர்ந்த, மலையை நடுவே வெளியாகத் திறந்தாற்போன்ற கோபுரவாயில்களையும், திருமகள் நிலைபெற்ற மணல்பரந்த அழகிய முன்றிலையும் உடைய, அந்த அரசனது கோயிலில், வாயில் முன்னிடங்களில் கவரிமான் ஏற்றைகள், குறுகிய கால்களை உடைய அன்னத் தோடு தாவித்திரிந்தன. பந்தியில் நிற்பதை வெறுத்த, பிடரி மயிரினையுடைய குதிரை கள் பல, புல்லுணவைக் குதட்டும் ஒலியைச் செய்தன. நிலாவின் பயனை அரசன் அடையுமாறு நெடிய வெள்ளிய நிலாமுற்றத்தில் மகரவாய் போன்று பகுக்கப்பட்ட வாயினை உடைய நீர்ப்பத்தல் நிறைவதனால், கலங்கிவிழும் அருவியின் ஓசை செறிந்தது. அதனருகில் தழைத்த நெடிய பீலிகொண்ட மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும் இனிய ஓசை செறிந்தது. இவற்றால் மலையின் ஆரவாரம் போன்ற ஆரவாரம் நிறைந்தது.

16. அப்படிப்பட்ட அரசனது இல்லத்தில்,
யவனரால் செய்யப்பட்ட பாவை தன் கையில் ஏந்தியிருக்கும் தகளி நிறையும்படி நெய் பெய்யப்பட்டு, பெரிய திரிகளைக் கொண்டு எரிகின்ற விளக்குகளில் நெய் வற்றியபோது நெய்யிட்டும், ஒளிமங்கியபோது து£ண்டியும் பல இடங்களிலும் பரந்துள்ள இருள் நீங்கியது. பெருமை பொருந்திய பாண்டிய மன்னனைத் தவிர, சிற்றேவல் புரியும் ஆண்மக்களும் அணுகமுடியாத காவலையுடையது அந்தப்புரம்.

17. மலைகண்டாற்போன்ற தோற்றத்தையும், அம்மலையிடத்தே கிடந்தாற்போன்ற பன்னிறக் கொடிகளையும், வெள்ளியைப் போன்று விளங்கும் சுதை தீட்டப்பெற்ற சுவர்களையும், நீலமணிபோன்ற நிறத்தையும் திரட்சியையும் உடைய து£ண்களைக் கொண்ட. தொழில்திறம் அமைந்த சுவரில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியமாகப் பொறிக்கப்பெற்ற இல்லம் அது.

18. நாற்பதாண்டுகள் நிரம்பி, முரசென்று மருளும் பெரிய கால்களையும், புகர்நிறைந்த நெற்றி யினையும் கொண்ட, போரில் வீழ்ந்த யானையின் தாமே வீழ்ந்த கொம்புகளை இரண்டுபக்கங்களிலும் சேர்த்தமைத்து, தொழில்திறன் மிக்க தச்சனால், கூரிய சிற்றுளி கொண்டு செய்த இலைத்தொழிலை இடையிடையே இட்டு, சூல்முற்றிய மகளிர் மார்புபோலப் புடைதிரண்டிருக்கும் குடத்தையும், குடத்திற்கும் கட்டிலுக்கும் இடை யிலுள்ள பகுதி மெல்லியதாய் ஒழுகித் திரண்ட உள்ளியைப் போன்ற கால்களையும் கொண்ட பாண்டில் என்னும் பெயரையுடைய கச்சுக்கட்டில் இருந்தது.

19. அதில், மூட்டுவாய் மாட்சிமைப்பட்டு, நுண்ணிய நூல் அழகுபெறும்படி தொடுத்த தொழிலால் சிறந்து, முத்துக்களால் செய்த தொடர்மாலைகள் தொங்கவிடப்பட்டு, உருக்குதல் தொழிலால் புலியின் வரிகள் குத்தப்பட்டு, அழகிய தட்டுப்போன்ற தகடு களால், கட்டிலின் உள்ளிடத்தில் குற்றமில்லாத நிறம் ஊட்டப்பெற்ற பன்னிற மயிரையும் உள்ளே அடக்கி, அதன்மேல் அரிமா வேட்டையாடுவதுபோன்ற உருவம் பொறிக்கப்பட்டு, காட்டிலே மலரும் பல்வேறு மலர்கள் போன்று ஓவியம் வரையப்பெற்ற மெல்லிய போர்வை போர்த்தியிருந்தது.

20. அன்னத்தின் சிறகுகளை இணைத்து இயற்றிய இருக்கைகள் மேலே விரித்து, அதன் மேல் தலையணை சாயணை முதலியவற்றை இட்டுக் கஞ்சியிட்டு மணம் ஏற்றித் தூய மடியினை விரித்த படுக்கையின் மேலிருந்தாள் பாண்டிமாதேவி.

21. மன்னன் உடனிருந்தபோது முத்தால் செய்த கச்சுக்கிடந்த மார்பிடத்தே இப்போது பின்னி விட்ட நெடிய கூந்தல் மட்டுமே வீழ்ந்து கிடக்க, தனது துணைவனைத் துறந்த அழகிய நெற்றியிடத்திலே கையிட்டு ஒதுக்காமல் உலறிக்கிடந்த சிறிய மெத்தென்ற மயிரையும், நீண்ட தன்மையுடைய மகரக்குழையைக் களைந்துவிட்டதால் வறிதாகத் தாழ்ந்த காதினையும், முன்பு பொன்வளைகள் கிடந்து அழுந்திய தழும்பினைக் கொண்ட மயிர்வார்ந்த முன்கையில் வலம்புரியால் செய்த வளையை இட்டு, காப்பு நூல் கட்டி, வளையினது பிளந்த வாய் போன்ற வளைவை உண்டாக்கி, சிவந்த விரலில் அணிவித்த நெளி என்னும் மோதிரத்தையும் முன்பு பூ வேலைப்பாடு கொண்ட துகில் கிடந்த வளைந்த இடையில் இப்போது மாசேறி யிருக்கின்ற நூற்புடவையையும் கொண்டு, ஒரு கோட்டுச்சித்திரம்போல் காணப்பட்டாள்.

22. கோப்பெருந்தேவியின் ஒப்பனை செய்யப்படாத நல்லடியையும், தளிர்போன்ற மேனியினையும், பரந்த சுணங்கினையும் அழகிய மூங்கில்போன்ற தோளினையும், தாமரை முகை போன்ற மார்பினையும், நுடங்கும் இடையினையும் உடைய சிலதியர் வருட, நரைவிரவிய கூந்தலையும், சிவந்த முகத்தையும் உடைய செவிலியர் தேவியின் ஆற்றாமை மிகுவதைக் கண்டு, பலரும் திரண்டு, குறுகியனவும் நீண்டவுமாகிய மொழிகள் பலவற்றைக் கூறி, இப்பொழுதே உனக்கினிய துணைவர் வருவார் வருந்தாதே என்று உகந்ததுகூறித் தேற்றினர்.

23. இவற்றால் ஆறுதல் கொள்ளாத தேவி கலங்கி, நுண்ணிய சாதிலிங்கம் பூசிய வலிய நிலையையுடைய கால்களைக் குடம் அமைந்த கட்டில் காலருகே நிறுத்தி, அவற்றின்மேல் கட்டிய மெழுகுவழித்த புதிய மேற்கட்டியாகிய கிழியின் மேல் எழுதப்பட்ட, ஞாயிற்றோடு மிகமாறுபாடு உடையதும், திங்களின் ஓவியத்தோடு நிறைந் துள்ளதுமாகிய உரோகிணியின் ஓவியத்தை நெடிதுநோக்கி, யாரும் “இவளைப்போன்று காதலனோடு பிரிவின்றி உறையும் பேறு பெறவில்லை” என்று கருதியவளாய், இமைகளில் தேங்கிநின்ற கண்ணீர்த்துளிகளைத் தன் விரல்களால் துடைத்துத், தனிமையில் வருந்தும் நலங்கிளர் அரிவை அவள். (அவளது “இன்னா அரும்படர் தீர விறல்தந்து வேந்தன் வினை இன்னே முடிக” எனப் பின்னர் இவ் வாக்கியம் முடிவு பெறும்).

24. ஒளிவிளங்கும் முகபடாத்தொடு போர்த்தொழிலைப் பயின்ற பெரிய யானைகளுடைய நீண்டு திரண்ட பெரிய கைகள் அற்று நிலத்தே வீழ்ந்து புரள,
அவற்றை முன்னர்க் கொன்று, பின்னர் பகைவருடைய ஒளியுடைய வாள் ஊடுருவியதால் சீரிய புண்பட்ட வீரருடைய புண்ணைக் குணமாக்கும் பொருட்டு,
(அரசன்) வெளியே வந்தான்.

25. வாடைக்காற்று வீச, அதனால் பாண்டிலின்கண் எரியும் விளக்குகளின் பருத்த சுடர்கள் அசைந்து தெற்குநோக்கிய தலையினை உடையனவாய்ச் சாய்ந்து எரிந்தன.

26. வேப்பந்தாரைத் தலையில் சூட்டிய வலிய காம்பினையுடைய வேலொடு முன்செல்லும் வீரன், புண்பட்ட மறவர்களைக் காட்டிச்சென்றான்.
மணிகளை அணிந்த யானைகளும், கவசம் களையப்படாத குதிரைகளும் தெருவில் ஏற்படுத்திய சேறு அரசன்மேல் பட்டது.
அதனைப் பொருட்படுத்தாமல்,
இடத்தோளினின்றும் நழுவிவீழ்கின்ற மேலாடையை இடப்பக்கத்தில் ஒரு கையால் அணைத்துக்கொண்டு,
வலக்கையினால் வாளேந்தும் வன்மறவர்களின் தோளைத் தடவி,
விழுப்புண் பட்ட வீரர்களைத் தன் செய்ந்நன்றியறிதலும் அன்பும் தோன்ற நோக்கிப் பரிகரித்து,
நடுயாமத்தும் பள்ளிகொள்ளானாய்ப்,
படைமறவர் சிலர் சூழ, பாசறைக் கண் இயங்கும் அரசனது போர்த்தொழில் இனிமையாக உடனே முடிவதாக.
இவ்வாறு நெடுநல்வாடை அமைந்துள்ளது.

முதல் அர்த்தக்கூறு, “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ” என்று தொடங்கு கிறது. அக்காலக் கவிஞர்கள் பாக்களைத் தொடங்கும்போது “உலகம்” என்று தொடங்குவதை மரபாகக் கொண்டிருந்தனர். அதனை மங்கலச் சொல்லாகக் கருதினர் என்பர் புலவர். ஆனால் அது தமிழ் மக்களின் உலக நோக்கைக் குறிப்பதாகும். தமிழ் இலக்கியங்கள் எதிலும், இலக்கணங்கள் எதிலும் எங்கும் இவை தமிழ் மண்ணிற்கு மட்டுமே, தமிழினத்திற்கு மட்டுமே உரியவை என்ற சொற்கள் தென்படவில்லை என்று இக்கால அறிஞர்கள் அறிவர். தமிழர்களின் சிந்தனைகள் உலகிற்கே உரியவை என்பதை அக்காலப் புலவர்களும் நன்கறிந்திருந்தனர் ஆகலாம். இம்மரபிற்கேற்ப நெடுநல்வாடையும் வையகம் என்ற சொல்லோடு தொடங்குகிறது. இவ்வாறு தொடங் குதல், தலைவன் தலைவியரின் உணர்வில் இயற்கையே பங்கு கொள்வதாகவும் காட்டுகிறது.

இந்த முதல் அர்த்தக்கூறு, ஒரு சிலேடையாக அமைந்து, பாண்டிய மன்னன், இந்த வையகம் நடுங்குமாறு (பனித்தல் என்பதற்கு வருந்துதல் என்ற பொருளும் உண்டு) உலகத்தை வலமாக வளைத்து (வானத்தை மேகங்கள் சூழ்வது போல)ப் பகைவர் நாட்டைச் சூழ்கிறான் என்ற கருத்தைப் பொதிந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே கொடுங்கோற் கோவலர் என்ற அடுத்த அடித் தொடரைக் காணவேண்டும். கோவலன் என்பது அரசனையும் குறிக்கும் சொல். இவன் பகை மக்களைப் போரினால் வருத்துவதால் கொடுங்கோல் என்ற அடைமொழி பொருத்தமாக அமைகிறது. கோவலர் என்ற சொல்லும் சிலேடைச் சொல்தான். அது மன்னனைக் குறிக்கும்போது உலகத்தை வளைத்துத் துன்புறுத்துகிறான் என்பதையும், இடையரைக் குறிக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்து தங்கள் பொருள்களை இழந்து இயற்கையால் தாக்குண்டு துன்பம் எய்துகிறார்கள் என்பதைக் காட்டுவதாக அமைகிறது. வானம் மழைபொழிவதால் கோவலர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். தலைவனின் செயலால் பகைவரும் தங்கள் நிலபுலங் களை இழந்து வேற்றுப்புலத்தை நாடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதுபோலவே பிற அர்த்தக்கூறுகளையும் விரித்துரைக்க வேண்டியது கடமை. ஆனால் விரிவஞ்சி வாசகர்களே அதைச் செய்துபார்த்துக்கொள்ள விடுக்கிறேன்.

முதல் வாக்கியத்திற்குரிய உட்காட்சிகள்
1. மழைபொழிதலும் கோவலர் நடுங்குதலும்
2. குன்றும் குளிரும் நடுயாமம்
3. மேகங்கள் நீர்த்துளிகளை மெல்லத்தூவுதல்
4. மழைத்துளிகள் நிறம்பெற்று விழுதல்
5. மிலேச்சரின் தோற்றமும் செயல்களும்
6. மகளிர் செயல்
7. சேவல் கடுத்தகால் மாற்றியிருத்தல்
8. மகளிரின் குளிர்காலக் கோலம்
9. தாழிடப்பட்ட கதவுகள்
10. நெருப்பின் வெம்மையை நுகர்தல்
11. ஆடல்மகளிரும் யாழும்
12. கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தம்

இரண்டாம் வாக்கியத்தின் உட்காட்சிகள்
1. மன்னன் அரண்மனைக்கு மனை வகுத்தல்
2. மாடக்கதவுகளைப் பொருத்துதல்
3. ஆரவாரம் நிறைந்த அரண்மனை
4. கோப்பெருந்தேவியின் கருப்பக்கிருகம்
5. ஓவியம் பொறித்த இல்லத்தின் சுவர்
6. கச்சுக்கட்டிலின் தொழில் வேலைப்பாடு
7. கட்டிலின் ஒப்பனை
8. கோப்பெருந்தேவியின் கோலம்
9. சிலதியரின் தோற்றமும் செயலும்
10. செவிலியர் தோற்றமும் செயலும்
11. தனிமையில் வருந்தும் கோப்பெருந்தேவி (நெடிய வாடைப் பகுதி)
12. பாசறைக் காட்சி
13. வாடைக்காற்று வீசுதல்
14. மன்னன் மறவர்க்கு ஆறுதல் அளித்தல் (நல்ல வாடைப் பகுதி)

இவற்றை இன்னும் சிறுசிறு கூறுகளாகப் பகுத்துநோக்கமுடியும்.

நெடுநல்வாடை கூதிர்காலத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலையை முதன்மையாகவும், பாசறையில் தன் கடமையைச் செய்யும் தலைவனின் நிலையை இரண்டாவதாகவும் சித்திரிக்கிறது. இந்த இரு கருத்துகளும் தம்முள் விரிவு பெற்று இலக்கியமாக மலர்ந்திருக்கின்றன.

நெடுநல்வாடையின் முதல்வாக்கியத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு காட்சிகளும் கூதிர்காலத்தை வருணிப்பனவாக இருக்கின்றன. கூதிர்காலத்தில் பெருமழை பொழிந்து வாடைக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாக்கியத்தில் இயற்கை-செயற்கை என்னும் அமைப்பு செயல்படுகிறது. தலைவன்-தலைவி ஒன்றாக வாழ்வது (அக்காலக் கவிஞர் நோக்கில்) இயற்கை. போர் மனிதனை மனிதன் அழிக்கும் செயற்கை.

முதல் வாக்கியத்தில் அணிகள் மிகுந்து கவித்தன்மை ஓங்கியதாக உள்ளது. யாகப்சனின் முறைப்படி கூறினால், இது நெடுநல்வாடைக் கவிதையின் உருவகப் பகுதி. இரண்டாம் பகுதி எடுத்துரைப்பிற்கு, சம்பவ வளர்ச்சிக்கு முதன்மை தருகிறது. ஆகவே அதில் முன்வாக்கியம்போல வருணனைகளும் அணிகளும் மிகுதியாக இல்லை. யாகப்சனின் முறைப்படி கூறினால், இது நெடுநல்வாடையின் சினையெச்சப் பகுதி. இந்தப் பகுதியை வைத்து நாம் அர்த்தத்தை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாடைக்காற்று தலைவிக்கு நெடியதாகவும், தலைவனுக்கு நல்லதாகவும் இயங்குகிறது. மனித இயற்கையான காதல், நெடிய பெருமூச்சு விடுகிறது. செயற்கையான போர், நல்லதெனப் படுகிறது.

இயல்பான பல செயல்கள் கூதிர்காலத்தில் நடைபெறவில்லை. செயற்கையான செயல்கள் பல நடைபெறுவதற்கு இக்காலம் வழிவகுக்கிறது.

“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென” என இந் நூல் தொடங்குகிறது. இதிலேயே ஆண்பெண் எதிர்நிலை இருக்கிறது. வையகம்-பூமி என்பது பெண்ணையும், வானம்-மேகம் என்பது ஆணையும் குறிக்கும் அடையாளங்கள். இது கவிதை மரபும் தொன்ம மரபும் ஆகும். பொய்யா வானம் என்பது தலைவனின் பொய்க்காத அன்பை எடுத்துக்காட்டும் தொடர். மழை என்பது வானத்தையும் பூமியையும் இணைப்பது. அது எல்லாவற்றையும் தழுவிக்கொள்கிறது, நனைக்கிறது. அதுபோலத்தான் அன்பும்.

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தது என்பது முன்னுணரவைத்தல் என்னும் இலக்கியக் கருவி. தலைவன் பாசறைத் தொழிலை முடித்துவிட்டபின் தலைவிமீது பேரன்பைச் செலுத்தத் தொடங்குவான் என்பதை முன்னுணர்த்துவது. இப்படி ஒரு நம்பிக்கையூட்டும் தொனியில் இக்கவிதை தொடங்குகிறது.

இரண்டாவது காட்சியில் விலங்குகள், பறவைகள் நிலை கூறப்படுகிறது. இவை இயல்பாகத் தாங்கள் செய்யும் பணியைச் செய்யமுடியவில்லை. இதுபோலத் தலைவியும் தன்னை அலங்கரித்துக்கொள்ளவில்லை. ஆனால் போர் இயற்கைக்காகக் கவலைப்படுவதல்ல. அது தொடர்ந்து நிகழ்கிறது.

“பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பில் துவலை கற்ப” என்பதும் பாண்டியன் குறித்த செய்தியே. பெருமழை ஓய்ந்துவிட்டது. இப்போது சிறுது£றல் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது என்பது, தலைவன் முக்கியமான பெரிய போரினை முடித்துவிட்டான், இப்போது இறுதியாக, இன்னும்

ஒருசிலநாட்களே செய்யக்கூடிய எஞ்சிய சிறுசிறுசண்டைகள் மட்டுமே அவனுக்கு இருக்கின்றன என்பதற்கு இது உருவகம். வாடைக்காற்றும் சிறுதூறலும் நிற்கும்போது போரும் முடிந்துவிடும், தலைவன் தலைவி இணைவும் நிகழும். யாவும் ஒருங்கிசைவில் (harmonyயில்) முடியும் என்பது பாட்டின் கருத்து.

புதல்கள் போன்றவை மலர்ந்திருக்கும் செய்தி, பெரும் அளவிலான இயற்கை யின் சிறுசிறுபணிகள் என்றும் தடைப்படாமல் நிகழ்ந்துகொண்டே யிருக்கும் என்ப தைக் குறிக்கிறது. எந்தத் துயரமாயினும் பேரின்பமாயினும் அடிப்படைச் செயல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

மிலேச்சர்கள், சிறுது£றலுக்கும் அஞ்சாமல், கள்ளுண்டு சூடேற்றிக்கொண்டு தங்கள் கடமைகளைச் செய்கின்றனர். இதுவும், மகளிர் காலத்தை அறிதலும், யாழுக்கு எப்படியேனும் வெப்பமுண்டாக்கி இசைக்கவேண்டும் என்று நினைப்பதும் செயற் கைகள். இவ்வாறு இயற்கை செயற்கை என்னும் முரண் இப்பாட்டில் தொடர்ந்து வருகிறது. செயற்கையாக முயன்று செய்யும் பல செயல்கள் நடைபெறுகின்றன, இயற்கையான செயல்கள் பல தடைக்குள்ளாகின்றன, புறாவின் சேவல் தன் பெடை யோடு இன்புற முடியவில்லை, உணவுதேட முடியவில்லை, கால்களை மாற்றிமாற்றி வைத்துத் தன் இடத்தில் அமைதியின்றி இருக்கிறது. மகளிர் தங்களை அழகுபடுத்திக் கொள்ள முடியவில்லை, தங்களை வெப்பமுறுத்திக்கொள்ள நறுமணப்புகைகளை உண்டாக்குகின்றனர். வழக்கமான செயல்களைச் செய்யமுடியாமல், பாடியும் யாழி சைத்தும் ஆடல்செய்தும் பொழுதினைக் கழிக்கின்றனர்.

கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தினர் என முதல்வாக்கியத்தின் இறுதியில்-பன்னிரண்டாம் அர்த்தக்கூறில் ஆசிரியர் வைப்பது, பாண்டிமாதேவியின் பிரிவுத் துயரத்தினைச் சொல்வதற்குத் தோற்றுவாயாக அமைகிறது. தலைவனைப் பிரிந்த பாண்டிமாதேவி, தனது உள்ளில் அமர்ந்து திங்கள் ரோகிணியோடு கூடியிருக்கும் ஓவியத்தைக் கண்டு தனிமையில் வருந்திக்கொண்டிருக்கிறாள்.

மழை போன்ற உற்பாதங்களால் பாதிக்கப்படாமல், ரோகிணி திங்களை என்றும் கூடியிருத்தல் நிகழ்கிறது. இதுபோன்றதே தலைவன் தலைவி உறவும். நிலவு-ரோகிணி உறவு என்பது தலைவன்-தலைவி உறவுக்குப் பின்னணி. பாண்டிய மன்னன் சந்திர வம்சத்தில் வந்தவன் என்பது வழிவழிச் செய்தி. நிலவு ரோகிணியைப் பிரியாதிருப்பது போலத், தலைவனும் தலைவியைப் பிரியான் என்பது குறிப்பாயினும் இன்னுமொரு குறிப்பும் கவிஞரை அறியாதே இடம் பெற்றுவிடுகிறது.

நிலவு-ரோகிணி இங்கே பாண்டிய மன்னனுக்கும் அரசிக்கும் உருவகங்கள். நிலவுக்கு ரோகிணி மட்டுமே மனைவியல்ல. நமது மரபில் கூறும் இருபத்தேழு நட்சத்திரங்களும் நிலவின் இருபத்தேழு மனைவியர். ஆனால் அவர்களில் சந்திரன் (புராணக் கதைப்படி) அதிக ஆசை வைத்ததும் முதன்மையான மனைவியாகக் கருதிய தும் ரோகிணியைத்தான். அதனால் தான் அவன் தட்சனிடம் சாபம் பெற்று தேய்த லுக்கு ஆளானான் என்றும் சிவபெருமான் தலையீட்டினால் வளரும் நிலையைப் பெற்றான் என்பதும் கதை. அதனால் பாண்டிய மன்னர்கள் சிவபெருமானிடம் தனிப் பற்றுடையவர்கள்.
இந்தக் குறிப்பு, ரோகிணி நட்சத்திரம் அரசியைக் குறித்தாலும், பட்டத்தரசி என்னும் சிறப்பிடம் அரசிக்கு இருந்தாலும், பிற நட்சத்திரங்கள் போல அரண் மனையில் பாண்டிய மன்னனுக்குப் பல உரிமைப் பெண்டிர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சங்க இலக்கியப் பாக்கள் அனைத்துமே ஆண் ஆதிக்கப் பிரதிகள் என்னும் கருத்திற்கும் இது ஆதரவாக நிற்கிறது.

மகளிர் தங்கள் கணவரைப் பிரிந்துவருந்தும் தொடருக்கும், தலைவி வருந்தும் காட்சிக்கும் இடையில் அரண்மனை எவ்விதம் அமைக்கப்பட்டது என்பதைப் பற்றிய நீண்ட வருணனை வருகிறது. அதன் விசாலமான முற்றங்கள், அங்கு எழும் ஆரவாரம் ஆகியவை சொல்லப்படுகின்றன. இவை யாவற்றிற்கும் இடையில்-இவ்வளவ அழகான பின்னணியில் தலைவி புனையா ஓவியம்போல-ஒரு கோட்டோவியம் போல-இருக்கிறாள். இம்மாதிரி அழகான எதிர்நிலைப் பின்னணியில் தலைவி இருப்பை வருணிக்கிறார்.

நல்லநாள் பார்த்து, நிழல் ஒருபக்கமும் சாயாத, சூரியன் உச்சியிலிருக்கின்ற நாள் பார்த்துத்தான் (equinox) என்பதைக் கண்டறியும் முறை இது) அரசனது அரண்மனையை வகுக்கின்றனர். ஆனால் இவை யாவும் அரசனின் பிரிவையோ, தலைவியின் பிரிவுத்துயரையோ மாற்ற இயலவில்லை.
ஆசிரியர் இன்னொரு ஒப்புமையையும் காட்டுகிறார். தலைவி தனது பள்ளி யறையில் இருக்கிறாள். ஆண்கள் புகமுடியாத, ஆடம்பரமான, பெரிய அரண்மனை இது. அங்கே எளிமையின் உருவமாக அமைந்திருக்கிறாள் தலைவி. அமைதியின்றித் தவிக்கிறாள்.

அரசனும் எளிமையாகத்தான் இருக்கிறான். தன் வீரர்களால் அமைக்கப்பட்ட பாசறைப் பள்ளி அறையில் இருக்கிறான். அவனும் நள்ளிரவிலும் பள்ளிகொள்ளாது அமைதியின்றித்தான் இருக்கிறான். ஆனால் அவனது அமைதியின்மைக்கான காரணம் வேறு. வீரர்கள் புண்பட்டிருப்பதே அவன் அமைதியின்மைக்குக் காரணம்.

பாண்டிமாதேவியைச் செவிலியர் ஆறுதல்மொழி கூறித் தேற்றுகின்றனர். அரச னோ, புண்பட்ட வீரர்களைத் தான் தேடிச் சென்று ஆறுதல் கூறுகிறான். கோப்பெருந் தேவிக்குப் பிறர் பணிபுரியவும், அவள் தேறாது இருக்கிறாள். ஆனால் அரசனோ, பாசறையில், பிறருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறான்.

தலைவி மாடமாளிகையில் மனநிறைவின்றி இருக்கிறாள். அரசனோ, பாசறை யில்-எளிமையான இடத்தில் மனநிறைவுடன் இருக்கிறான்.
தலைவி பல சுகபோகங்களுக்கிடையில், தலைவனைப் பிரிந்ததனால் வருந்து கிறாள். தலைவன், வசதிகளற்ற இடத்திலும், இறுதி வெற்றியைப் பெறாத நிலையிலும், தன் வீரர்கள் புண்பட்டதற்காக வருந்துகிறான்.

தலைவனின் வருத்தம் இங்கே பொதுநோக்கம் கொண்டதாக, நாட்டைப் பற்றியதாக, வீரர்களைப் பற்றியதாக அமைகிறது. தலைவியின் வருத்தமோ, சுயஇரக்கமாக, தன்னைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஆகவேதான் தலைவிக்கு நெடியவாடை, தலைவனுக்கு நல்ல வாடையாக அமைந்திருக்கிறது.
“பலரொடு முரணிய பாசறைத்தொழில்” என்பது இருவரையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. அந்த முரண் முடிந்தால், தலைவன்-தலைவி நேசம் நிறைவுபெறும். ஆகவே போர் முடியவேண்டும், தலைவன் தலைவியோடு சேர வேண்டும் என்று இப்பாட்டைக் கூறுபவன் சொல்வதாக நிறைவுபெறுகிறது.

வாடையின் வரவினால் நிகழும் காட்சிகளை முதல்வாக்கியத்தில் ஆசிரியர் ஓர் எழில் ஓவியமாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார். இரண்டாவது வாக்கியத்தில் இயற்கை ஓவியத்தைவிட, அரசியின் நிலை, அரசனின் நிலை ஆகிய செயற்கை நிலைகள் முதலிடம் பெறுகின்றன. இங்கும் இயற்கை-செயற்கை என்ற முரணை அமைக்கிறார். இயற்கையைவிடச் செயற்கைக்கு மிகுதியான இடம் தருகிறார். (72 அடி, 116 அடி). ஒருவகையில் பெண்மை இயற்கை, ஆண்மை செயற்கை. தலைவி அன்பை மட்டுமே நினைப்பவள். அரசன் போர்மீது காதல்கொண்டவன். அவன் வீரரையும் போரினை யும் நினைக்க, இவள் அவனை மட்டுமே நினைக்கிறாள்.

“வினையே ஆடவர்க்குயிரே, வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறுந்தொகை 135) என்னும் அக்கால ஆணாதிக்கக் கருத்தியலை இப்பாட்டு முற்றி லும் வலியுறுத்துவதாக அமைகிறது. இயற்கை-செயற்கை, வானம்-பூமி, குளிர்-வெம்மை, ஆண்மை-பெண்மை இப்படிப் பல துருவ முரண்களை ஆசிரியர் படைத் துக்காட்டி, அவற்றில் செயற்கையைப்-போரைப் பாராட்டுபவராகச் செயல்பட்டிருக் கிறார் ஆசிரியர். அதனால் நெடிய வாடையை நல்ல வாடையாகக் காட்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். போரைப் போல வாடையும் துன்புறுத்துவது. ஆனால் இது தலைவனுக்கு வெற்றியைத் தரும் நல்ல வாடை!

—–

 


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 5 (இறுதிக்காட்சி)

ஈடிபஸ் அரசன் நாடகம்காட்சி 5 (இறுதிக்காட்சி)

புதிய தூதன்: தீப்ஸ் நாட்டு முதியவர்களே, நாட்டின் பெருமை வாய்ந்தவர்களே! எத்தனை பயங்கரமானவற்றை இப்போது பார்த்தீர்கள்… கேட்டீர்கள்… கால மெல்லாம் நாம் எத்தனை விசனப்படவேண்டி வந்துவிட்டது. தீப்ஸ் நாட்டு எல்லைக் கோட்டையும் புனிதமாகக் கருதும் பெரியோர்களே, இந்த நாட்டில் ஓடும் நதிகள்கூட இந்தப் பாவத்தை இனி கழுவ முடியாது….தெரியாமல் செய்த பாவங்கள் போனால் போகட்டும்! வீம்பாய்ச் செய்த பாவங்கள் இப்போது வீதிக்கு வருகின்றன….மிகப் பெரிய துயரங்கள் எவை என்றால், நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் துயரங்கள்தான்….

பா.கு.தலைவன்: நிச்சயம், நண்பரே, நிச்சயம். நாம் இதுவரை பட்ட துயரங்கள் போதும். நீ இப்போது எந்தத் துயர் பற்றிப் பேசுகிறாய்?

தூதன்: அரசியார் இறந்துவிட்டார்.

பா.கு.தலைவன்: பரிதாபத்துக்குரிய அரசி! யார் கொன்றார்கள் அவளை?

தூதன்:  தன்னைத்தானே கொன்றுகொண்டார். நடந்தது ஒன்றும் உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு? நேரில் பார்த்த எனக்கு எப்படியிருக்கும்? எங்களைவிட் டுச் சென்றபோது துக்கம் தாளாத மனத்துடன் கூந்தலைத் தன் கைகளால் இறுகப் பற்றியவாறு அமைதியாக அறைக்குள் ஓடினார்… தாளிட்டுக்கொண்டார் அறையை…. அது ஈடிபஸ் பிறந்த அறை… தன் தந்தையைக் கொலைசெய்யப் பிறந்த குழந்தை இருந்த அறை…. லேயஸ் இறந்தபின்னும் அரசி கதறியழுத அறை… தன் கணவனால் ஒரு கணவன் கொடுக்கப்பட்ட அறை… ஈடிபஸ் அழுது கதறியவண்ணம் எங்களுடனே இருந்தார்… திடீரென்று அரசியின் அறையிலிருந்து சத்தம்…. எங்களில் ஒருவருடைய கத்தியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினார் அரசியின் அறையை நோக்கி… மனைவி! அவருடைய குழந்தைகளையும் அவரையும் வயிற்றில் தாங்கியிருந்த மனைவி. அங்கு இதயத்தைப் பிளக்கும் குரல் கேட்டது. கதவின் தாள்கள் முறிபட்டன. அறையில் அரசி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். கயிற்றின் முடிச்சைத் தளர்த்தி பூமியில் இறக்கியபோது மாபெரும் விம்மல் வெடித்தது அவரிடம்.

அடுத்து நடந்தவற்றை நான் மறந்துபோக முடியுமானால் நான் பேறுபெற்றவன். அரசியின் அங்கியிலிருந்து இரண்டு தங்க ஊசிகளைச் சரக்கென்று பிடுங்கித் தன் கண்களில் பாய்ச்சிக்கொண்டார் ஈடிபஸ்.

“சுற்றியிருக்கும் துயரங்களை நீ பார்த்தது போதும். என் செயலால் விளைந்த கொடுமைகள் இவை. நீ பார்க்கக்கூடாத முகங்களைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தாய். தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய முகங்களைப் பாராமல் குருடனாய் இருந்தாய். இந்த நேரத்திலிருந்து நீ இருண்டுபோ……” என்று சொல்லிக்கொண்டே ஒரு முறை அல்ல, பல முறை தன் கண்களில் குத்திக்கொண்டார். முகத்தில் ரத்தம் வழிந்து சொட்டியது. சிவப்பு ஊற்றாகக் கண்களிலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டி ருந்தது.

இருவரின் சோகத்திலிருந்தும் ஆண்பெண் இருபாலார் மேலும் சாபம் படர்ந்துவிட்டது. தீமை எழுந்தது. லாப்டகோஸ் வம்ச அரண்மனையில் எப்போதுமே ஆனந்தம் கூத்தாடும்…. இன்று அந்த ஆனந்தம் எங்கே போய்விட்டது? இன்று அழுகை, புலம்பல், அழிவு, அவமானம், துயரம், மரணம்…. மனித குலத்தின் துயரங்கள் அத்தனையும் மொத்தமாக அவர்கள் சொத்தாகிவிட்டது…

பா.கு.தலைவன்: இன்னும் அரசரின் துயரத்துக்கு விடிவில்லையா? துயரத்தோடுதான் இருக்கிறாரா?

தூதன்: காவலாளியைக் கூப்பிட்டுக் கதவுகளை முழுதாகத் திறந்துவைக்குமாறு சொன்னார். தன்னுடைய தந்தையைக் கொலைசெய்தவனை – தாயை… இல்லை, இல்லை – என்னால் அதைச் சொல்லமுடியாது – எல்லாரும் பார்க்கும்படி இருக்கட்டும் என்றார். தீப்ஸை விட்டே செல்லப்போகிறார்.
தன் வீட்டைச் சுற்றியிருக்கும் சாபம் விலகட்டும் என்று தானே விதித்துக்கொண்ட தண்டனை இது.
பலவீனமாக இருக்கிறார். அவரை அழைத்துச் செல்லவும் ஒருவருமில்லை. துயரக் கடலில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டு…

அதோ பார்… கதவுகள் திறக்கின்றன… சில நொடிகளில் கல்லையும் உருக்கும் காட்சியைக் காண்பாய்…
(நடுக்கதவு திறக்கிறது. ஈடிபஸ் குருடனாக வருகிறான்)

பா.கு.தலைவன்: கடவுளே, மனிதர்கள் பார்க்கவே பயங்கரமான காட்சி… இதைப் போன்ற காட்சியை என் கண்கள் கண்டதே இல்லை…ஈடிபஸ், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?

மனிதன் சுமக்கவே முடியாத துயரங்களை உன் தலையில் எந்த வேதாளம் ஏற்றி வைத்தது? நீயே உன்னைப் பார்த்துக்கொள், அழிந்துபோய் நிற்கிறாய் நீ. என்னால் முடியுமானால்… பேச, கேள்வி கேட்க. சிந்திக்க… முடியும். ஆனால் உன்னைப் பார்க்க எல்லையில்லா நடுக்கம்தான் உண்டாகிறது.

ஈடிபஸ்: கடவுளே, கடவுளே…இதைவிடக் கொடிய சோகம் இருக்கிறதா? நான் எங்கு போய்ப் புகலிடம் தேடுவேன்? என் குரல் எங்கேயோ எட்டாத இடத்தில் சென்று தேய்கிறது… கடவுள் ஏன் என்னை இப்படிச் செய்துவிட்டான்?

பா.கு.தலைவன்: சிந்தித்துப் பார்க்கவும் முடியாத துயரம்.

ஈடிபஸ்: இரவு மேகங்களே! எங்கேயும் போய்விடாதீர்கள்… இரவு வருகிறது… அதை எப்படி நான் காணமுடியும்… சல்லாத்துணிபோல் மெல்ல வருகிறது… தென்றல் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தது. கண்கள் இருந்த இடத்தில் ஊசிகள் பாய்ந்த வலி. வெள்ளமாய்ப் பாயும் நினைவுகள் தரும் வேதனை.

பா.கு.தலைவன்: இது அதிசயமல்ல. இரட்டிப்பாக அனுபவிக்கிறாய் நீ. வலியினால் துன்பமும், துன்பத்தினால் வலியும்.

ஈடிபஸ்:  நண்பரே, இன்னும் என்னிடம் நீராவது நன்றியுடன் இருக்கிறீர்… என்னருகில்தானே நின்றுகொண்டிருக்கிறீர்… இந்தக் குருடன்மேல் இரக்கம் வைத்துப் பொறுமையாய் இங்கே இருப்பீரா?

குருடன்! என்னுடன் யார் இருக்கிறார்கள் என்பதைக் குரலால் மட்டுமே அறியக்கூடிய குருடன். எனக்கு வந்த புதிய இருட்டு என் நண்பரை மறைத்தாலும் அறியக்கூடிய குருடன்.

பா.கு.தலைவன்: கொடிய காரியம்! என்றைக்குமே இரவாகப் போகும்படி இதை உன்னைச் செய்யும்படி தூண்டியது எந்தக் கடவுள்?

ஈடிபஸ்: அப்போலோ! அப்போலோ! குழந்தைகளே, அந்தக் கடவுள் அப்போலோ. வியாதிபிடித்த விதியை என்மீது ஏவினான். ஆனால் என் கண்களைக் குருடாக்கிக் கொண்டது என்னமோ என் கைதான். கண்கள் முன்னால் எல்லாமே பயங்கரமாக இருக்கும்போது நான் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

பா.கு.தலைவன்: எல்ல இடங்களிலுமே பயங்கரம்… உண்மைதான்.

ஈடிபஸ்: இப்போது எஞ்சியிருப்பது என்ன? நிழல்கள்? அன்பு? புலன்களுக்கு இனிக்கும் வாழ்த்துகள்? இன்னும் ஏதாவது இருக்கிறதா? ஆ!… இல்லை, நண்பரே… என்னைக் கூட்டிச் செல்லுங்கள். தீப்ஸிலிருந்து என்னைக் கூட்டிச் செல்லுங்கள். கடவுளே கண்டு வெறுக்கும் அழிவையும் அவலத்தையும் தாங்கிநிற்கும் ஈடிபஸை இங்கிருந்து கூட்டிச் செல்லுங்கள்.

பா.கு.தலைவன்: உனது துயரம் மகத்தானது. உண்மையை நீ அறியவே இயலாதவாறு கடவுள் செய்திருந்தால்…

ஈடிபஸ்: மலைப்பாறையில் என்னைக் காப்பாற்றி எனக்கு உயிர் கொடுத்தவன் மாண்டு போகட்டும்! என்ன வாழ்க்கை! நான் அன்றே இறந்திருந்தால்… இந்தப் பெரு நாசத்தின் சுமை என்னையும் என் கண்மணிகளையும் வீழ்த்தியிருக்காது…

பா.கு.தலைவன்: அப்படியே நடந்திருந்தால் நல்லது.

ஈடிபஸ்: என் தந்தையின் ரத்தம் பூசிய கைகளோடு இங்கே வந்து என் தாய்க்கே கணவனாகி… ஐயோ, சபிக்கப்பட்டவனே! தீமையின் குழந்தையே! நீயும் அந்தக் கட்டிலுக்குப் போனதுதான் கொடிய பாவம்… அதுதான் என்மேல் வீழ்ந்தது.

பா.கு.தலைவன்: உனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை… இப்படிக் குருட னாக உயிருடன் திரிவதைவிட மாண்டுபோயிருக்கலாம் நீ…

ஈடிபஸ்: அறிவுரை போதும். நானே எனக்குக் கொடுத்துக்கொண்ட இந்தத் தண்டனை நியாயமானதே. எனக்குக் கண்கள் இருந்தால் இறந்தவர் உலகில் தோன்றும் என் தந்தையையோ தாயையோ எப்படிப் பார்ப்பேன்? இருவர்க்கும் பழிசெய்தவன் நான். இறந்துவிடடால் சுலபமாகப் போய்விடும் என்பதால்தான் நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

பிறந்தபோது இருந்ததுபோல் என் குழந்தைகள் இப்போது என் கண்களுக்கு இனிமை யாகக் காட்சி தருவார்களா? உயர்ந்த மதில் சூழ்ந்த நகரமும் கடவுளர் சிலைகளும் முன்போல் அழகாகத் தோன்றுமா?

ஈடிபஸ்… காட்மோஸின் நகரில் பெருமை வாய்ந்த மனிதருள் முதன்மையாக இருந்தவன்… இன்று அவனது தீவினையால், லேயஸ் வீட்டின் பாவச்சின்னம் என்று முததிரையிடப்பட்டு அதல பாதாளத்தில் கிடக்கிறான். நான் புரிந்த குற்றங்களை நானே வெளிக்கொண்டு வந்தபின் என்னால் மனிதர்களை எப்படி நேருக்குநேர் பார்க்கமுடியும்?

என் கேட்கும் சக்தியையும் இழந்துவிடமுடியுமானால், துயரின் உருவமான இந்த உடலை ஒளியும் ஒலியும் பாதிக்காத கருவாய்ச் சுருட்டி வைத்துவிடுவேன். அப்போது என் மனம் தீயவைகளைத் தேடிப்போகாது. மனம் அமைதியாக இருக்கும்…

ஆ! கீதெய்ரான் மலையே! நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய்? உன்மீது என்னைக் கிடத்தியபோது ஏன் நான் இறந்துபோகவில்லை? இறந்திருந்தால் இந்தப் பாழாய்ப் போன ஜென்மம் இந்த உலகிற்குள் வந்திருக்காதே? ஆ! பாலிபஸ்! காரிந்த் என் மூதா தையர் நகரம் என்று நம்பியிருந்தேன். நான் உங்கள் குழந்தை என இருந்தேன். அங்கேயே தீமை புற்றாக எனக்குள் வளர்ந்துவந்திருக்கிறது…
நான் வியாதியுள்ளவன்… எனது இருப்பில்… எனது பிறப்பில்… ஆரம்பத்திலேயே வியாதியுள்ளவன்.

அந்த மூன்று சாலைகள்! முச்சந்தி! அடர்ந்த காடுகள்! சமவெளி! என் தந்தையின் ரத்தத்தைக் குடித்த இடங்கள். பேசக்கூடாத செயல்களைச் செய்த இடம். அங்கிருந்து ஆரம்பித்து நான் மற்ற காரியங்கள்! ஐயோ, திருமணம்… திருமணம்… என்னைக் குழந்தையாய் உருவாக்கிய செயல்… மகன் அதே படுக்கையிலே செய்த அந்தக் காரியம்… முறை தவறிய உறவு பின்னிய வலை…
தந்தையர், சகோதரர், மகன்களை அன்னையர், மனைவிகள், சகோதரியரோடு கூட்டிவிடும் இடம்…
மனிதர் அறிந்ததிலேயே மிகப் பாவமான செயல். நாவால் இவ்வளவு கொடியதென விளக்கமுடியாத செயல்.

(பாடற்குழுவினரை நோக்கி) இல்லை, என்னை தீப்ஸ் மக்கள் கண்களில் தோன்றாமல் எங்காவது மறைத்துவைத்து விடுங்கள். இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுங் கள். இல்லாவிட்டால் என்னைக் கடலில் உருட்டித் தள்ளிவிடுங்கள். வாருங்கள். என்னைக் கூட்டிச் செல்லுங்கள்… என்னைத் தொடுவதற்கு பயப்படவேண்டாம். இவ்வளவு குற்றங்களையும் தாங்கும் மனிதன் நான் ஒருவன்தான்.

(கிரியோன் வருகிறான்)

பா.கு.தலைவன்: கிரியோன் வந்துவிட்டார். நீ அவரிடம் சொன்னால், என்ன செய்வதோ அவர் பொறுப்பு… உன் இடத்தில் இருந்து இந்த நகரத்தைக் காப்பாற்ற அவர் ஒருவரே எஞ்சியிருக்கிறார்…

ஈடிபஸ்: நான் அவனிடம் எப்படிப் பேசுவேன்? பெரிய கொடுமையை அவனுக்குச் செய்துவிட்டு அவனிடம் மரியாதையை எதிர்பார்க்க என்ன யோக்கியதை இருக்கிறது?

கிரியோன்: உன்னை கேலிசெய்யவோ வசைமாரி பொழியவோ வரவில்லை ஈடிபஸ்! (சேவகரிடம்) மனித கௌரவத்தின்மேல் உங்களுக்குச் சற்று மதிப்பிருந்தால்-
சூரியனின் கிரணங்களை நீங்கள் தூய்மையாக்கிவிட விரும்பினால்-
இந்தப் பாவக்கடலை இந்த உலகிற்குக் காட்டாதீர்கள். மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவன் துயரத்தைப் பார்ப்பதே சரி.

ஈடிபஸ்: எதிர்பார்த்தற்குமேல் என்மீது கருணை காட்டிவிட்டாய் கிரியோன். கடவுள் பெயரால் ஒன்று கேட்கிறேன். எனக்காக அல்ல, உனக்காக. நான் கேட்பதைக் கொடு.

கிரியோன்: எதற்காக என்னிடம் பிச்சை கேட்கிறாய்? நீ கேட்பது என்ன?

ஈடிபஸ்: மனிதர்கள் குரலே கேட்காத ஓரிடத்திற்கு என்னை அனுப்பிவிடு, சீக்கிரம்.

கிரியோன்: நீ கேட்பதற்கு முன்னரே நான் இதைச் செய்திருக்கவேண்டும். உம்.., கடவுளின் சித்தம் எனக்கு முழுமையாகப் புலப்படவில்லை.

ஈடிபஸ்: இப்போது கடவுளின் உத்தரவு தெளிவாக இருக்கிறது. பெற்றவர்களுக்குப் பழி செய்தவன் அழிக்கப்படவேண்டும், கிரியோன்.

கிரியோன்: தெளிவான விஷயந்தான். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை நான் யோசித்துத்தான் முடிவுசெய்யவேண்டும்.

ஈடிபஸ்: என்போன்ற மனிதனைப் பற்றி இன்னும் என்ன தெரியவேண்டும்?

கிரியோன்: நீ இப்போது கடவுள் சித்தப்படி நடக்கத் தயாராகிவிட்டாய்…

ஈடிபஸ்: ஆம். ஆனால் உன் உதவியோடுதான் அது நடைபெற வேண்டும். இதோ…. உள்ளே கிடக்கிறாளே…அந்தப் பெண்மணியைத் தக்கபடி அடக்கம் செய். அவள் உன் சகோதரி. என்னைப் போகவிடு கிரியோன். என் தந்தையின் நாடான தீப்ஸ் மக்களுக்கு நான் இழைதத பாவங்களைக் கழுவும் வகையில் நான் போகிறேன். என்னால் பெயர்பெற்றுவிட்ட கீதெய்ரான் மலைக்குப் போகிறேன். என் தாய் தந்தை எனக்காகத் தேர்ந்தெடுத்த அந்தக் கல்லறையில் உயிர்விடுகிறேன்.

ஆனால் எந்த வியாதியினாலும் நான் மடியமாட்டேன். எனக்கு இயற்கையான மரணம் கூட இல்லை. என்னை ஏதோ நினைக்கமுடியாத ஒன்றுக்காக விதி காப்பாற்றி நிற்கிறது.

என் மகன்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆண்கள். எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள்.
ஆனால் பாவம் என் புதல்விகள். என்னுடன் சேர்ந்து வருந்தவேண்டும். என்னை விட்டுப் பிரிந்து அறியாதவர்கள். அவர்களைக் காப்பாற்று, கிரியோன். நான் அவர்களைக் கையால் தொடவிடு. கடைசி தரம். எங்களைச் சேர்ந்து அழ அனுமதிப்பாயா?
இரக்கமாயிரு மன்னனே! கருணை காட்டு.

நான் அவர்களைத் தொட்டுவிட்டால் என் கண்களிருந்தபோது இருந்தாற்போல உணர்வேன் நான்.
(ஆண்டிகனி, இஸ்மீன் வருகின்றனர், சேவகர் சூழ)

கடவுளே, நான் கேட்பது என் அருமைக் குழந்தைகளின் அழுகையையா? கிரியோன் இரக்கப்பட்டு என் குழந்தைகளை என்னிடம் அனுப்பிவிட்டானா?

கிரியோன்: ஆமாம் ஈடிபஸ். அறிந்த நாள் முதல் அவர்கள் உன் செல்வக் குழந்தைகள். இன்னும் அவர்கள் உன் கண்மணிகள்தான்.

ஈடிபஸ்: (கிரியோனிடம்) கடவுள் இதற்காக உன்னை ஆசீர்வதிப்பார்… என்னைவிட இவர்களிடம் நேசமாயிரு… குழந்தைகளே! எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்…. சீக்கிரம் என் கைக்கு வாருங்கள். இந்தக் கைகள் உங்கள் சகோதரனின் கைகள்… உங்கள் தந்தையின் கண்களைப் பழுதாக்கிவிட்ட கைகள்.

என் பிரியங்களே, எனக்கு அப்போது அறிவுமில்லை, பார்வையுமில்லை. அதனால் உங்கள் அன்னையின் குழந்தையாயிருந்தவன் அவளுக்கே கணவன் ஆனேன். உங்களைப் பார்க்கும் சக்தி இயலாதவனாக, உங்களைப் பார்ப்பவர் இழிவாக உங்களைப் பேசுவார்களே என்பதை நினைத்து அழுகிறேன். எந்த விழாவுக்கும் நீங்கள் சென்றால் அழுகையின்றித் திரும்பமுடியுமா? உங்களுக்குத் திருமண வயது வரும்போது எந்த ஆடவன் மணம் முடிப்பான்? இன்னும் என்ன தீவினை பாக்கி யிருக்கிறது?

உங்கள் தந்தை அவனுடைய தந்தையைக் கொன்றவன்; தன்னைப் பெற்ற வயிற்றுக்கே கருவைக் கொடுத்தவன்; தான் உதித்த ஊற்றிலேயே உங்களை உதிக்கச் செய்தவன்… இப்படியெல்லாம் உங்களைப் பழிப்பார்களே, பிறகு யாரை நீங்கள் திருமணம் செய்ய முடியும்? வாழ்நாள் முழுவதும் சாய்ந்து கனவுகண்டே உதிர்ந்துபோக வேண்டியது தானா?

கிரியோன், இவர்களுக்கு இனி நீதான் தந்தை. அவர்கள் உன் ரத்தம்…. அவர்களை இரந்துண்ண விட்டுவிடாதே… தனிமையில் வாட விட்டுவிடாதே… என்னுடைய அவலங்கள் அவர்களை நெருங்காமல் பார்த்துக்கொள். அவர்கள் மேல் கருணை காட்டு. உன்னையன்றி யாரும் இப்போது அவர்களுக்கு உறவு இல்லை… எனக்குச் சத்தியம் செய்துகொடு. அரசனே, உன் கையால் எனக்குச் சத்தியம் செய்.

(கிரியோன் சத்தியம் செய்கிறான்)

குழந்தைகளே, என்னால் இதுமட்டும்தான் சொல்லமுடியும். எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனைதான். எங்கு வாழமுடியுமோ அங்கே வாழுங்கள். உங்களால் முடிந்த மட்டும் சந்தோஷமாக இருங்கள்.

கிரியோன்: போதும், அழுததெல்லாம் போதும். உள்ளே போ.

ஈடிபஸ்: போகத்தான் வேண்டும். ஆனால் துக்கமாக இருக்கிறது.

கிரியோன்: காலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும், ஈடிபஸ்.

ஈடிபஸ்: அப்படியானால், என் மனத்தில் இருக்கும் ஆசையைச் சொல்லவா?

கிரியோன்: என்ன ஆசை அது?

ஈடிபஸ்: தீப்ஸை விட்டு என்னை அனுப்பிவிடு.

கிரியோன்: கடவுள் அந்த வரத்தைத் தருவார்.

ஈடிபஸ்: கடவுள்தான் என்னை வெறுக்கிறாரே!

கிரியோன்: இல்லை, அவர் நிச்சயம் உன் ஆசையை நிறைவேற்றுவார்.

ஈடிபஸ்: சத்தியமாக?

கிரியோன்: எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: அப்படியானால், என்னை உள்ளே அழைத்துப்போங்கள்.

கிரியோன்: குழந்தைகளை விட்டு வா…

ஈடிபஸ்: ஐயோ, முடியாது… என்னை அவர்களிடமிருந்து பிரித்துவிடாதே.

கிரியோன்: இப்போது நீ அரசன் இல்லை, கட்டளையிடுவதற்கு. தெரிந்துகொள். நீ அரசனாக இருந்தபோது ஏற்பட்டுவிட்ட அழிவை எண்ணிப்பார்.

(பாடற்குழுவினரைத் தவிர அனைவரும் உள்ளே செல்கின்றனர். பாடற்குழுத் தலைவன் பார்வையாளருக்கு நேர் நின்று அவர்களைப் பார்த்துப் பேசுகிறான்)

பா.கு.தலைவன்:  தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது! ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!

செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம். மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால், அவன் தன் நல் அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!

-திரை-


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 4

ஈடிபஸ் அரசன்  நாடகம் – காட்சி 4

(ஜொகாஸ்டா வருகிறாள்)

ஜொகாஸ்டா: தீப்ஸ் மக்களே, ஆலிவ் கிளைகளைக் கைகளில் ஏந்தி நறுமணப் பொருள்களோடு கடவுளை வணங்கிவரலாம் என்று நினைக்கிறேன்.
(தனக்குள்)
இப்போது அரசர் அவராக இல்லை. அவர் மனம் விபரீத கற்பனைகளால் இருண்டு போயிருக்கிறது. பழைய ஜோசியங்களுக்குப் புதிய விளக்கங்களைத் தேடி நிற்கிறார். கொடுமையை உரைக்கும் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கிறார். நான் சொல்லும் அறிவுரைகளை அவர் கேட்பதே இல்லை.

(கடவுள் முன்னால்)
அப்போலோ தேவனே! என் கைகளுக்கருகில் நிற்பவன் நீ. இந்தக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, கலங்கிப்போய் நிற்கும் எங்கள் மன்னனுக்கு விமோசனம் தா. குழம்பிப்போன கப்பல்தலைவனைக் கவலையுடன் பார்க்கும் பிரயாணிகளாய் நாங்கள் இருக்கிறோம்.

(தூதுவன் ஒருவன் வருகிறான்)
தூதுவன்: (பாடற்குழுவினரைப் பார்த்து) நண்பர்களே, யாராவது ஈடிபஸ் அரசனது அரண்மனைக்கு வழிகாட்டுங்கள். மன்னரை நான் எங்கு காணமுடியும்?

பா.கு.தலைவன்: இதே இடம்தான் புதியவரே! அரசர் உள்ளே இருககிறார். இவள் அரசருடைய மனைவி. அவருடைய குழந்தைகளுக்கு அன்னை.

தூதுவன்: இந்த இல்லத்தில் இன்பம் பொங்குமாக! வணக்கம் அரசி!

ஜொகாஸ்டா: நானும் அதையேதான் விரும்புகிறேன். நீ யார்? வந்திருக்கும் காரணம்?

தூதுவன்: நல்ல செய்திதான் அரசி, உங்கள் இல்லத்திற்கும், உங்கள் அனைவருக்கும்.

ஜொகாஸ்டா: என்ன செய்தி? யார் உன்னை அனுப்பியது?

தூதுவன்: நான் காரிந்த் நகரிலிருந்து வருகிறேன். என் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதேசமயம் அதில் துயரமும் இருக்கிறது.

ஜொகாஸ்டா: என்ன புதிர் இது? சந்தோஷமான செய்தி, ஆனால் துன்பம் கலந்தது?

தூதுவன்: காரிந்து நாட்டு மக்களுக்கும் இன்றிலிருந்து ஈடிபஸ் அரசராகிறார்.

ஜொகாஸ்டா: அங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர் பாலிபஸ் என்ன ஆனார்?

தூதுவன்: மரணம் அவரைக் கல்லறையில் உறங்கவைத்துவிட்டது.

ஜொகாஸ்டா: என்ன சொல்கிறாய்? பாலிபஸ் இறந்துவிட்டாரா?

தூதுவன்: ஆம், உண்மை. இல்லையெனில் என்னைத் தண்டிக்கலாம் நீங்கள்.

ஜொகாஸ்டா: (சேவகனிடம்) போ, உடனே இதை மன்னரிடம் சொல்.
(தனக்குள்) கடவுள் சித்தத்தை அறியாது புதிர் போடுபவர்களே, இப்போது எங்கே போனீர்கள் நீங்கள்?
நீண்ட நாட்களுக்கு முன்னர் மன்னர் ஈடிபஸ் இன்று இறந்துபோனவருக்காக, எங்கே அவரைக் கொன்றுவிடுவோமோ என்று பயந்து இங்கே ஓடிவந்தார். இன்று அது பொய்யாகிவிட்டது.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: என்னருமை ஜொகாஸ்டா, எதற்காக என்னைக் கூப்பிட்டனுப்பினாய்?

ஜொகாஸ்டா: இந்தத் து£துவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேள். பிறகு புனிதமான ஜோசியர்களின் கதி என்ன என்று சொல்.

ஈடிபஸ்: யார் இவன்? எனக்கு என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறான்?

ஜொகாஸ்டா: காரிந்திலிருந்து உன் தந்தையின் மரணச் செய்தி.

ஈடிபஸ்: இது மெய்தானா து£துவனே? எங்கே, உன் வாயால் சொல்.

தூதுவன்: இன்னும் தெளிவாக எப்படிச் சொல்வது? மன்னர் பாலிபஸ் இறந்து விட்டார்.

ஈடிபஸ்: எப்படி இறந்தார்? சதியா, உடல்நலக் குறைவா, ………

தூதுவன்: முதுமை அடைந்தோ இறப்பது எளிது.

ஈடிபஸ்: அப்படியானால், உடல்நலமில்லாமல் இருந்தாரா?

தூதுவன்: ஆம், பல வருடங்களாக.

ஈடிபஸ்: ஆ, டெல்ஃபியை இனி ஏன் மதிக்கவேண்டும்? இனி ஜோசியப் பறவைகளை யாரும் நம்பத்தேவையில்லை. நான் பாலிபஸைக் கொல்வேன் என்று ஜோசியம் சொல்லிற்று. என் விரல்கூட அவர்மேல் பட்டதில்லை. என் பிரிவுத் துயர் தாங்காது அவர் இறந்திருந்தால் ஒருவேளை என்னால் அவர் இறந்தார் என்று சொல்லலாம். அதுவும்கூட இல்லை. பாலிபஸின் மரணம் அசரீரி வாக்கைப் பொய்யாக்கிவிட்டது.

ஜொகாஸ்டா: நான் சொன்னேன், பார்த்தாயா?

ஈடிபஸ்: ஆமாம், நீ சொன்னாய். ஆனால் என் பலவீனமான இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது.

ஜொகாஸ்டா: இனிமேல் ஒருபோதும் அவற்றை நினைத்தும் பார்க்கவேண்டாம்.

ஈடிபஸ்: இன்னும் அந்த ஜோசியம் பாக்கியிருக்கிறதே! என் அன்னையின் படுக்கை யறை என்னை பயமுறுத்துகிறதே!

ஜொகாஸ்டா: விதிப்படி யாவும் நடக்கும்போது இந்த உலகில் ஒருவர் ஏன் பயப்பட வேண்டும்? ஒவ்வொருவனும் அன்றைய நாளை வாழ்ந்தால் போதும். உன் அன்னையின் பள்ளியறை பற்றி பயம் வேண்டாம். எத்தனை மனிதர்கள் கனவில் தம் அன்னையரோடு கட்டிலில் கிடக்கிறார்கள்? விவேகம் உள்ளவர்கள் அதற்காகக் கலங்கிவிடப் போவதில்லை.

ஈடிபஸ்: உண்மைதான். ஆனால் இன்னும் அன்னை உயிரோடு இருக்கிறாரே! பயப்படாமல் இருக்கமுடியவில்லையே.

ஜொகாஸ்டா: உன் தந்தையின் மரணச்செய்தி ஆச்சரியமான விஷயம்தான்.

ஈடிபஸ்: ஆனால் உயிருடன் இருக்கும் அவளைக் கண்டல்லவா பயப்படுகிறேன்.

தூதுவன்: நீங்கள் யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள்?

ஈடிபஸ்: மெரோபே. மன்னர் பாலிபஸின் மனைவி. என் தாய். அவளைக் கண்டு.

தூதுவன்: அவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?

ஈடிபஸ்: கடவுளின் அசரீரி. பயங்கரமான செய்தி.

தூதுவன்: சொல்லக்கூடியதென்றால், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் அரசே.

ஈடிபஸ்: சொல்கிறேன். அப்போலோ தெய்வத்தின் அசரீரி சொல்லியது-நான் என் தந்தையை அழிப்பேன், என் தாயை மணப்பேன்-என்று. இதற்காக பயந்து காரிந்த்தை விட்டு ஓடிவந்தேன். பெற்றோர்களைக் காண மனம் துடித்தது, இருந்தும்.

தூதுவன் : இந்த பயத்தாலா இங்கே வந்து இருந்தீர்கள்?

ஈடிபஸ்: நான் அங்கிருந்தால்…. என் தந்தை என்னால் மரணமுற நேர்ந்தால்?

தூதுவன்: உங்கள் பயம் வீணானது.

ஈடிபஸ்: வீணானதா? எப்படி என்று நிரூபித்தால் பரிசளிப்பேன்.

தூதுவன்: பாலிபஸ் உங்கள் தந்தை அல்ல. மெரோபெ உங்கள் தாயும் அல்ல.

ஈடிபஸ்: அவர்கள் என்னை அன்போடு மகனே என்றுதானே அழைத்தார்கள்.

தூதுவன்: நீண்ட நாட்களாக அவர்களுக்கு குழந்தை இல்லை. என்னிடம் குழந்தையாக இருந்த உங்களை அவர் பரிசாகப் பெற்றுச் சென்றார்.

ஈடிபஸ்: ஈடு இணையற்று என்னை நேசித்தாரே?

தூதுவன்: இருக்கலாம். குழந்தைகள் இல்லாதவர். அதனால் உங்கள்மேல் அன்புமழை பொழிந்திருக்கலாம்.

ஈடிபஸ்: அப்படியானால் நீ யார்? என்னை எங்கு பெற்றாய்? விலைக்கு வாங்கினாயா? கண்டெடுத்தாயா?

தூதுவன்: கீதெய்ரான் காட்டில் கண்டெடுத்தேன். ஆடுமேய்ப்பவன் நான்.

ஈடிபஸ்: ஆடு மேய்ப்பவனா?

தூதுவன்: ஆம், ஆடு மேய்ப்பவன்தான். ஆனால் அன்று உங்களைக் காப்பாற்றியவன்.

ஈடிபஸ்: எதிலிருந்து காப்பாற்றினாய்?

தூதுவன்: உங்கள் கணுக்கால் சொல்லும் அதை.

ஈடிபஸ்: தூதுவனே, குழந்தைப் பருவ வலியை இப்போது ஏன் கிளறுகிறாய்?

தூதுவன்: உங்கள் இரு கணுக்கால்களையும் இணைத்திருந்த கூரம்பைப் பிடுங்கி உங்களைச் சாவிலிருந்து காத்தேன்.

ஈடிபஸ்: ஆம். என் கணுக்கால்களில் அத் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன.

தூதுவன்: குழந்தையாக இருந்த உங்களுக்குப் பெயரே அதனால்தானே வைத்தேன்? ஈடிபஸ் என்ற பெயருக்கு அதுதான் அர்த்தம்.

ஈடிபஸ்: கடவுளே, என் தாய் தந்தையர் ஏன் அப்படிச் செய்தார்கள் என்னை?

தூதுவன்: அது எனக்குத் தெரியாது. உங்களை என்னிடம் கொடுத்தவன் ஒருவன்ந. அவனுக்கு ஒருவேளை அது தெரிந்திருக்கும்.

ஈடிபஸ்: யார் அவன்? சொல்லுங்கள், யார் அவன்?

தூதுவன்: லேயஸ் மன்னரின் ஆட்களில் ஒருவன் அவன்.

ஈடிபஸ்: நீண்ட நாட்களுக்கு முன் இந்த ஊரை ஆட்சி செய்துவந்த லேயஸ் மன்னரா?

தூதுவன்: ஆமாம். மன்னரின் ஆட்டுமந்தையை மேய்க்கும் ஒருவன்தான் அவன்.

ஈடிபஸ்: அவர் இப்போது உயிரோடு இருக்கிறாரா? அவரைப் பார்க்க முடியுமா?

தூதுவன்: அது இங்குள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

ஈடிபஸ் (பாடற்குழுவினரை நோக்கி) இவர் இப்போது சொன்ன இடையன் பற்றி இங்குள்ளவர்களில் எவருக்காவது தெரியுமா? தெரிந்திருந்தால் சொல்லுங்கள். விஷயங்கள் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது.

பா.கு.தலைவன்: நீ முன்பே பார்க்கவேண்டும் என்று சொன்ன அதே இடையன்தான் ஈடிபஸ்! ஜொகாஸ்டாவுக்கு ஒருவேளை அவனது இருப்பிடம் தெரியும்.

ஈடிபஸ்: (ஜொகாஸ்டாவிடம்) பெண்ணே, உனக்கு அவனைப் பற்றித் தெரியுமா? நாம் கூப்பிட்டு அனுப்பச் சொன்ன ஆள் அவன்தானா? இந்தத் தூதுவன் சொல்லுவது அவனைத்தானா?

ஜொகாஸ்டா: நீ அவனைப் பற்றி நினைக்கவேண்டாம் ஈடிபஸ். அந்த இடையன் விஷயத்தை மறந்துவிடு. இந்தத் தூதுவன் சொன்னவற்றையும் மறந்துவிடு. இந்தப் பேச்சுகளால் நேரம்தான் வீணாகிப் போகும்.

ஈடிபஸ்: அவ்வாறு எவ்விதம் நீ சொல்லமுடியும்? ஒரே ஒரு துப்புக் கிடைத்தாலும் உண்மை வெளியாகலாம்.

ஜொகாஸ்டா: கடவுளே, கேள்விகள் போதும். தெரிந்த உண்மைகளும் போதும். உன் வாழ்க்கை உனக்குப் பெரிதில்லையா ஈடிபஸ்? நான் ஏற்கெனவே தாங்கிநிற்கும் வேதனைகளே என்னைக் கொல்லுகின்றன.

ஈடிபஸ்: கவலைப்படாதே. நான் யாரோ ஒரு அரண்மனை அடிமையாயிருக்கலாம் என்றுதானே கவலைப்படுகிறாய். நான் ஓர் அடிமையின் மகன் என்று தெரியவருவதால் உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.

ஜொகாஸ்டா: நான் சொல்வதைக் கேள், ஈடிபஸ். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலையை இதோடு விட்டுவிடு.

ஈடிபஸ்: கேட்கமாட்டேன். உண்மை எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஜொகாஸ்டா: உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: என் நல்லது! என் பொறுமையைச் சோதிக்கிறது.

ஜொகாஸ்டா: நீ நினைப்பது முற்றிலும் தப்பு. நீ யார் என்று உனக்குத் தெரியாமல் போவதே நல்லது.

ஈடிபஸ்: எங்கே… யாராவது ஒருவர் சென்று அந்த இடையனை அழைத்து வா. அரச வம்சத்தைப் பற்றித் தற்பெருமைத் தம்பட்டமடித்துக்கொண்டு இவள் தனியே இருக்கட்டும்.

ஜொகாஸ்டா: ஐயோ, மாளாத் துயரம்… மாளாத் துயரம் வந்ததே! இதைவிடச் சொல்வதற்கு எனக்கு இனி ஒன்றுமில்லை.
(போகிறாள்)

பா.கு.தலைவன்: அவள் ஏன் நம்மைவிட்டுப் போகிறாள் ஈடிபஸ்? அவள் எல்லை யில்லா வருத்தப்படுவதற்கு என்ன நேர்ந்தது? அவளது இந்தத் துன்பம் எனக்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஏதோ பயங்கரமான ஒன்று நடக்கப்போகிறது.

ஈடிபஸ்: நடக்கட்டும். எத்தனை இழிந்த பிறப்பென்றாலும் நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.
அரசியும் ஒரு பெண்தானே…. நான் அடிமைக் குலத்தைச் சேர்ந்தவன் என்றால் அவள் அளவிட முடியாத துன்பம் அடைவாள்.
ஆனால் நான் அதிர்ஷ்டத்தின் செல்லப்பிள்ளை… எந்த அவமானமும் எனக்கு நேராது. அதிர்ஷ்டம்தான் என் தாய்! ஏழ்மையும் செல்வமும் என் வாழ்க் கையில் மாறி மாறி வந்திருக்கின்றன…. இப்படியும் ஒரு சேதி வந்துவிட்டுப் போகிறது… நான் ஏன் கவலைப்படவேண்டும்?

கோ1- ஈடிபஸைக் கண்டெடுத்த கீதெய்ரான் மலையில் கூத்தும் கும்மாளமும!

கோ2– காக்கும் கடவுள் அப்போலோ-நம்மை அம்மலைக்குக் கூட்டிச்செல்லட்டும்.

கோ3– கடவுளால் விதிக்கப்பட்ட அற்புதக் குழந்தையே!

கோ4– கீதெய்ரான் மலையில் கண்டெடுக்கப்பட்ட அரசனே! ஈடிபஸ் குழந்தையே!

கோ5– டயனீசியஸ் தேவனோ உன்னைக் கண்டெடுத்தான், அன்று?

கோ6– நீ விதியைப் பார்த்துச் சிரிப்பதற்காக உன்னைத் தன் கரங்களில் ஏந்தினானா?

ஈடிபஸ்: (பாடற்குழுவினரைப் பார்த்து) ஐயா, இதோ வருகிறான் அந்த இடையன். இவன்தானே நான் தேடும் அந்த ஆள்? எனக்கு இவனைத் தெரியாது. இருந்தாலும் இவன்தான் என்று நினைக்கிறேன். காரிந்த்தின் து£தன் போலவே இவனும் மூத்துத் தளர்ந்திருக்கிறான். நீங்கள் இவனை முன்னால் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.

(இடையனைச் சேவகர்கள் அழைத்துவருகின்றனர்)

பா.கு.தலைவன்: தெரியும் இவனை. லேயஸின் ஆள்தான்… நீங்கள் நம்பலாம் இவனை.

ஈடிபஸ்: காரிந்த்திலிருந்து வந்திருக்கும் து£துவரே, நாம் பேசிக்கொண்டிருந்தது இவனைப் பற்றித்தானா?

தூதுவன்: இவனே, இதே ஆள்தான்.

ஈடிபஸ்: (இடையனிடம்) இங்கே வா… இல்லை… என்னைப் பார். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். நீ லேயஸின் ஆள்தானே?

இடையன்: ஆம். அவருடைய அடிமையாகப் பிறந்தது அவர் வீட்டிலேயே வளர்ந்தவன்.

ஈடிபஸ்: அவர் வீட்டில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாய்?

இடையன்: அவருடைய ஆடுகளை மேய்பபவன் நான்.

ஈடிபஸ்: ஆடுகளை வழக்கமாக எங்கே கொண்டு மேய்ப்பாய்?

இடையன்: வழக்கமாக கீதெய்ரான் மலைக்கு. சிலசமயம் பக்கத்திலுள்ள குன்றுகள்.

ஈடிபஸ்: இதோ இங்கே நிற்கும் இந்த மனிதரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இவனா? இவன் இங்கே என்ன செய்கிறான்?

ஈடிபஸ்: இவரேதான். உன் எதிரில் நிற்பவர். முன்னால் இவரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இல்லை… ஞாபகமில்லை.

தூதுவன்: ஆச்சரியமில்லை. பல வருஷங்கள் ஆகிவிட்டன அல்லவா? ஆனாலும் நினைவிருக்க வேண்டுமே? ஒவ்வொரு வருடமும் ஒன்பது மாதங்கள் நாங்கள் ஒன்றாக ஆடுமேய்த்தோம். இவனிடம் இரண்டு கிடைகள். என்னிடம் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இலையுதிர் காலத்தில் நான் என் வீட்டுக்குத் திரும்புவேன். இவன் லேயஸ் அரண்மனைக்குத் திரும்புவான்.

ஏன் ஐயா, நான் இப்போது சொன்னதெல்லாம் உண்மைதானா? ஞாபகத்துக்கு வருகிறதா?

இடையன்: ஆமாம், இதெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.

தூதுவன்: அப்படியானால், இது ஞாபகமிருக்கிறதா? ஒரு குழந்தையை ஒருநாள் என்னிடம் நீ வளர்க்கக் கொடுத்தாயே?

இடையன்: கொடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போது?

தூதுவன்: அரசர் ஈடிபஸ்தான் அந்தக் குழந்தை.

இடையன்: நீ பாழாய்ப்போக. நாக்கை அடக்கிப் பேசு.

ஈடிபஸ்: போதும், போதும். நீதான் நாக்கை அடக்கிப் பேசவேண்டும்.

இடையன்: மகாராஜா, நான் என்ன தப்புப் பண்ணினேன்?

ஈடிபஸ்: குழந்தையைப் பற்றி அவன் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில்சொல்லவில்லை.

இடையன்: இவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைத் தொந்தரவில் மாட்டிவிடுகிறான். எனக்கு ஒன்றும் தெரியாது.

ஈடிபஸ்: மறைக்காமல் சொல். இல்லாவிட்டால் நீ கஷ்டப்படுவாய்.

இடையன்: கடவுள்மீது ஆணையா…என்னை ஒன்றும் துன்புறுத்தாதீர்கள். இந்தக் கிழவன்மீது பரிதாபப் படுங்கள்.

ஈடிபஸ்: யாரங்கே… இந்தக் கிழவன் கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டுங்கள்.

இடையன்: ஏற்கெனவே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் ராஜாவே, இன்னும் ஏன் மனத்தை வாட்டிக்கொள்ள முற்படுகிறாய்?

ஈடிபஸ்: நீ இவனுக்கு… இந்த ஆளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தது உண்மையா?

இடையன்: கொடுத்தேன்… நான் அன்னிக்கே செத்துப்போயிருந்தா நல்லாயிருக்கும்.

ஈடிபஸ்: உண்மையைச் சொல்லாவிட்டால் நீ இன்னிக்கே செத்துப்போவாய்… உண்மையைச் சொல்.

இடையன்: உண்மையைச் சொன்னா, சாவதைவிட மோசமான நிலைக்கு நான் ஆளாயிடுவேன்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) எதுவும் சொல்லாமல் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறான்.

இடையன்: அந்தக் குழந்தையைக் கொடுத்ததைத்தான் சொல்லிவிட்டேனே.

ஈடிபஸ்: அது எங்கே கிடைத்தது? யார் வீட்டில் எடுத்தாய்?

இடையன்: ஒரு மனிதன்தான் கொடுத்தான்.

ஈடிபஸ்: அந்த மனிதர் இங்கிருககிறாரா? அவர் எந்த வீட்டைச் சேர்ந்தவர்?

இடையன்: கருணை காட்டுங்க மகாராஜா. இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதீங்க.

ஈடிபஸ்: சொல், அந்தக் குழந்தையை எங்கிருந்து கொண்டுவந்தாய்? இதற்குமேல் நீ எதுவும் சொல்லவேண்டாம்.

இடையன்: அந்தக் குழந்தையை லேயஸ் அரண்மனையிலிருந்துதான் கொண்டு வந்தாங்க.

ஈடிபஸ்: அது யாருடைய குழந்தை? அடிமைகளுடைய குழந்தையா?

இடையன்: அது பயங்கரமான ரகசியம் மகாராஜா. நான் எப்படிச் சொல்வேன்?

ஈடிபஸ்: எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும் நான் கேட்கத் தயார். சொல்.

இடையன்: ஐயோ, சொல்லித்தான் ஆகணுமா? சரி… அது லேயஸ் மகாராஜாவோட குழந்தைன்னுதான் சொன்னாங்க…. ராணி அம்மாவைக் கூப்பிட்டுக் கேளுங்க…. அவங்க எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லுவாங்க.

ஈடிபஸ்: என் மனைவி… அவளா அந்தக் குழந்தையை உன்னிடம் கொடுத்தாள்?

இடையன்: ஆமாம் மகாராஜா… அவங்கதான் கொடுத்தாங்க.

ஈடிபஸ்: ஏன்னு உனக்குத் தெரியுமா?

இடையன்: குழந்தையை எப்படியாவது கொன்னுடச் சொன்னாங்க.

ஈடிபஸ்: கடுகளவும் கருணையற்ற இதயம்….

இடையன்: ஜோசியர்கள் சொன்னதுக்கு பயந்துபோய்….

ஈடிபஸ்: சொல், உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்.

இடையன்: இந்தக் குழந்தை அவங்க அப்பாவைக் கொன்னுடும்ன்னு ஜோசியம்.

ஈடிபஸ்: பிறகு ஏன் அந்தக் குழந்தையை இவரிடம் கொடுத்தாய்?

இடையன்: குழந்தையைப் பாத்து… அந்தப் பச்சை மண்ணைப் பார்த்து மனசு இளகிடுச்சு மகாராஜா…. கொல்ல மனசு வரல்லே… இந்த ஆள்கிட்ட கொடுத்தேன், அவன் காட்டுக்கு எடுத்துப்போய் வளப்பான்னு நெனைச்சி….காப்பாத்தினான்….ஆனா விதி எப்படி விளையாடியிருக்கு….இவன் சொல்லும் அந்தக் குழந்தை நீங்கதான்னா, ஈடிபஸைவிட மோசமானவன் இநத உலகத்திலேயே கிடையாது….

ஈடிபஸ்: கடவுளே, அது உண்மைதான்… எல்லா ஜோசியர்களுமே சொன்ன உண்மை. இப்பொழுது எல்லாம் வெட்ட வெளிச்சம்.
வெளிச்சமே! உன்னை இப்போது கடைசியாகப் பார்த்துக்கொள்கிறேன். ஈடிபஸ்! பிறக்கும்போதே சபிக்கப்பட்டுவிட்ட ஈடிபஸ்!
ஐயோ, ஐயோ! நாசமாய்ப் போன திருமணம்!…. நாசமாய்ப்போன உறவு!….தான் கொன்ற ரத்தத்தில் மிதந்து, சபிக்கப்பட்ட ஈடிபஸ்! ஐயோ,…ஈடிபஸ்!

கோ1– பாவப்பட்ட சந்ததிகள்… வெற்றிடத்தில் குடியேறிவிட்ட பாவப்பட்ட சந்ததிகள்…

கோ2– இருந்தும் இல்லாத பாவப்பட்ட சந்ததிகள்…

கோ3– அவர்களுக்கு நாம் என்ன கொடுக்கமுடியும்?

கோ4– நிழல்களை மாற்றிக்கொண்டு செல்லும் சூரியஒளியைக் கண்டு யார் மகிழ்ச்சி அடைகிறார்கள்?

கோ5– ஓடுகின்ற காலத்தைப் பார்த்து உவகை கொள்ளும் மனிதன் யார்?

கோ6– உன் பெருமை சீரழிந்துவிட்டது ஈடிபஸ்.

கோ1– கோபமும் அழுகையும் பொங்கும் விழிகளோடு ஈடிபஸ்.

கோ2– எல்லாம் மாறிவிட்டது. எல்லாம் அழிந்துபோயிற்று.

கோ3– ஈடிபஸின் உன்னதமான நாட்கள் சிறிதுசிறிதாக மங்கிக் காணாமல் போய் விட்டன.

கோ4– உன் மனம் திடமான வில்லாக இருந்தது அப்போது.

கோ5– அதில் நாணேற்றிப் புகழைக் கைப்பற்றினாய்.

கோ6– சிங்கத்தின் நகங்களோடு கூடிய அந்தக் கன்னியை வெற்றிகொண்டாய்.

கோ1– தீப்ஸ் மக்களின் கவலையைப் போக்கும் காவற்கோட்டை ஆனாய்.

கோ2– ஈடு இணையற்ற புகழோடு விளங்கினாய்.

கோ3– மனிதனின் கதை துயரமானது.

கோ4– அக்கதைகள் எல்லாவற்றிலும் உன்கதை துயரமானது….

கோ5– உன் அதிர்ஷ்டம் அடியோடு மாறிவிட்டது…

கோ6– நாடு கேவலமான அடிமைகளின் இருப்பிடமாய்ப் போனது…

கோ1– திறந்த கதவிலிருந்து உன்னை வெளியேற்றிய அந்த ஒளி…

கோ2– இரவில் கிடைத்த அந்த ஒளி….அது மன்னனை அடைந்தது…

கோ3– தந்தையிடமிருந்து மகனுக்குக் கிடைத்தது….

கோ4– எல்லாம் காலம் தாழ்த்தியபின்னர்தான் தெரியவந்தது….

கோ5– லேயஸ் மன்னன் வெற்றிகொண்டு கைப்பற்றிய அந்த அழகுப் பூந்தோட்டம்…

கோ6– அவள் எப்படி அமைதியாக இருந்தாள், அந்தக் காரியம் நடந்தபோது?

கோ1– காலத்தின் கண்கள் முன்னால்….

கோ2– நம் கண்கள் பழுதாகிவிடுகின்றன.

கோ3– நம் எல்லாச் செயல்களுக்கும்

கோ4– நீதி வழங்கப்பட்டுவிடுகிறது

கோ5– துயரம் அதிகமோ குறைவோ விருப்பம் உண்டோ இல்லையோ

கோ6– உன் சகல கணக்குகளும் புத்தகத்தில் ஏறிவிடுகின்றன.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 3

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 3

கிரியோன்: தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸ் என்மேல் குற்றச்சாட்டுகளை மழையாகப் பொழிந்து வருகிறான். இவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கநான் கோழை அல்ல. என் கௌரவம் பாதிக்கப்படும்போது கத்தி உறையில் உறங்கிக் கொண்டிருக்காது. அரசுக்கு, சக மனிதர்களுக்கு, என் நண்பர்களுக்கு, நான் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.

பா.கு.தலைவன்:  இவை கோபத்தில் சொன்னதாக இருக்கலாம். உதட்டிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள். உள்ளத்திலிருந்து அல்ல.

கிரியோன்: பூசாரியைப் பொய்சொல்லச் சொன்னது நான் என்று ஈடிபஸ் குற்றம் சாட்டியது உங்கள் காதில் விழவில்லை?

பா.கு.தலைவன்:  விழுந்தது. ஆனால் அது கடுமையாகச் சொல்லப்பட்டதல்ல.

கிரியோன்: அவன் கண்களை நீ கவனித்தாயா? குழப்பத்தில் தவித்துக்கொண்டு பைத்தியக்காரன் போல் இல்லையா?

பா.கு.தலைவன்: தெரியவில்லை. பெரியோர்களின் நடத்தையை எடைபோடக்கூடிய தகுதி எனக்கில்லை. அதோ அரசர் வருகிறார்.

(ஈடிபஸ் நுழைகிறான்)

ஈடிபஸ்:  திரும்பி இங்கே நுழைய உனக்கு என்ன தைரியம்? கொலைகாரா! வெட்க மில்லாமல் என் வீட்டுக்கு வருகிறாய். சதி செய்து என்னைக் கொன்று அரியணையை நீ கைப்பற்ற நினைப்பது எனக்குத் தெரியாதா? உன் மாய்மால ஜாலங்களைப் புரிந்து கொள்ளாமல் போக நான் என்ன மடையனா? என்னால் அரியணைகளை வெற்றி கொள்ளமுடியும். விலைக்கு வாங்கவும் முடியும். உன்னால் இந்த இரண்டுமே முடியா தவை.

கிரியோன்:  நீ பேசி முடித்துவிட்டாய் அல்லவா? நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உண்மை என்ன என்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.

ஈடிபஸ்:  நன்றாகப் பேசுகிறாய். ஒரே ஒரு உண்மைதான் உண்டு. அதை உன் போன்ற எதிரியிடமிருந்து அறிந்துகொள்ள முடியாது.

கிரியோன்:  இதை நான் அல்லவா சொல்ல வேண்டும்!

ஈடிபஸ்:  என் குற்றச்சாட்டை உன்னால் மறுக்கவியலாது.

கிரியோன்:  அறிவுக்கு எதிராகப் பிடிவாதமாக இருப்பது என்று தீர்மானித்துவிட்டாய்.

ஈடிபஸ்:  உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாம், ஆனால் தண்டிக்கப்படக்கூடாது என்று நினைத்தால் நீ முட்டாள்.

கிரியோன்: சரியாகச் சொல், நான் என்ன துரோகம் செய்தேன்?

ஈடிபஸ்:  அந்த சூனியக்காரப் பூசாரியை அழைத்துவந்தாய்.

கிரியோன்:  ஆம், அவர் வந்தது நல்லதுதான்.

ஈடிபஸ்: சரி, இப்போது லேயஸ் பற்றிச் சொல். லேயஸ் எப்போது…..?

கிரியோன்: லேயஸ் பற்றி இப்போது எதற்கு?

ஈடிபஸ்: லேயஸ் மறைந்துபோய் எவ்வளவு நாளாகிறது?

கிரியோன்: நீண்ட நெடுங்காலம்.

ஈடிபஸ்:  இந்தப் பூசாரி அப்போதும் இருந்தானா?

கிரியோன்:  இருந்தார், அப்போதுமே பெருமை மிக்க ஞானியாய்.

ஈடிபஸ்:  அப்போது என்னைப் பற்றி அவன் என்ன சொன்னான்?

கிரியோன்:  எதுவுமே சொல்லவில்லை. அதுவும், என்னிடம்.

ஈடிபஸ்:  லேயஸ் இறப்புப் பற்றி நீ ஒரு விசாரணை நடத்தினாயாமே?

கிரியோன்: ஆனால் அதில் ஒன்றும் தெரியவரவில்லை.

ஈடிபஸ்:  என்னைப் பற்றி அப்போது எதுவும் பேசாத பூசாரி, இப்போது மட்டும் ஏன் உளறுகிறான்?

கிரியோன்: தெரியாது. நான் தெரியாத விஷயங்களில் தலையிடுவதில்லை.

ஈடிபஸ்:  உனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும், அதை மட்டும் சொல்லிவிடு.

கிரியோன்:  என்ன அது? எனக்குத் தெரிந்த விஷயம் உனக்கும் உரியதுதான்.

ஈடிபஸ்:  அந்தப் பூசாரி உன்னைச் சேர்ந்தவன் இல்லை என்றால், லேயஸைக் கொன்றவன் நான் என்று குற்றம் சாட்டமாட்டான்.

கிரியோன்:  அப்படி அவர் சொல்வதன் நியாயம் உனக்குத்தான் தெரியும், என்னைவிட. இப்போது நான் சில கேள்விகளைக் கேட்கலாமா?

ஈடிபஸ்:  கேள், நான் ஒன்றும் கொலைகாரன் இல்லை.

கிரியோன்:  அப்படியானால், இதோ என் கேள்விகள். நீ என் சகோதரியை மணந்தாய் அல்லவா?

ஈடிபஸ்:  உண்மைதான்.

கிரியோன்: அவளோடு சேர்ந்து இந்த நாட்டை ஆள்கிறாய் அல்லவா?

ஈடிபஸ்:  அவளது தேவைகளுக்கு நான் என்றுமே குறைவைத்ததில்லை.

கிரியோன்:  இந்த நாட்டில் உனக்கும் அவளுக்கும் அடுத்தநிலையில் இருப்பவன் நான்தானே? பிறப்பால், தகுதியால், உங்களிருவருக்கும் சமமானவன்தானே? சந்தேகமில்லையே?

ஈடிபஸ்:  அதனால்தான் நீ சதிகாரன் ஆனாய் என்கிறேன்.

கிரியோன்:  இல்லை. எனது கோணத்திலிருந்து சற்றே சிந்தித்துப் பார். என்னைப்போல் சக்திபடைத்தவன் எவனாவது பதவி வெறிபிடித்து, து£க்கத்தை இழப்பதற்கு அலைவானா? எனக்கு உன்னளவு மதிப்பும் அதிகாரமும் உள்ளது. ஆனால் பொறுப்புகள் எதுவுமே இல்லை. நான் ஏன் உன்னை அழிக்கவேண்டும்?  பொறுப்புகளற்ற, தொல்லை கலவாத இன்பம் எனக்கிருக்கிறது. நான் பைத்தியக்காரனல்ல, அவற்றை இழக்க.
இப்போதுள்ளதைவிட, எனக்கு கௌரவங்கள் எதுவும் தேவையில்லை.
என்னை யாவரும் போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள்.
உன்னிடம் காரியம் ஆகவேண்டியவர்களும் என்னையே அணுகுகிறார்கள்.
இந்தக் கவலையற்ற இன்பத்தைவிட்டு, அரசனாகி, உன்போல் அவதிப்படவா விரும்பு வேன் நான்?
மேலும் ஒன்று – தெளிந்த உள்ளம் தீமை செய்யாது. நான் கலகக்காரனல்ல.
நான் சொல்பவற்றை நீ வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்.
டெல்ஃபியின் செய்தியை நான் சரியாகத்தான் தந்தேனா என்று கேட்டுக்கொள்.
டைரீசியஸுடன் சேர்ந்து சதிசெய்ததாக ருசுவானால், எனக்கு மரண தண்டனையே விதி. ஆனால் அதற்குமுன் சான்றுகளோடு நிரூபி.
நல்லவர்களைப் புரிந்துகொள்ள நாட்கள் பல ஆகும். சதி புரிபவர்கள் இரண்டொரு நாட்களில் பிடிபடுவார்கள்.

பா.கு.தலைவன்:  நன்றாகச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவெடுப்பது புத்திசாலித் தனமல்ல.

ஈடிபஸ்:  ஈடு இணையற்ற இரட்டை வேடம். இவன் என்னைவிட்டுத் தொலைந்தால் நல்லது. இங்கு நின்று என் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள வேண்டுமா?

கிரியோன்:  சரி, உனக்கு என்னதான் வேண்டும்? என்னை நாடுகடத்த வேண்டுமா?

ஈடிபஸ்:  இல்லை, எனக்குத் தேவை உன் மரணம். ராஜத் துரோகத்தின் பரிசு என்ன என்று மக்கள் அறியவேண்டும்.

கிரியோன்:  என்மேல் நம்பிக்கை இல்லையா?

ஈடிபஸ்:  எதற்காக நம்புவது உன்னை?

கிரியோன்:  அப்படியானால் நீ ஒரு முட்டாள். நியாயம் என்பதை நினைத்துப் பார்க்காதவன்.

ஈடிபஸ்: பரவாயில்லை. ஆனால், நீ தீமையின் முழுவடிவம்.

கிரியோன்: நீ சொல்வது தவறாக இருந்தால்?

ஈடிபஸ்: அப்போதும் அரசன் நான்தான்.

கிரியோன்: மோசமாக ஆட்சிசெய்பவனை விலக்கிவிடலாம்.

ஈடிபஸ்:  ஐயோ, இது என் நகரம். நகரம் என்னவாகும்?

கிரியோன்:  இது என்னுடைய நகரமும்தான்.

பா.கு.தலைவன்:  மேன்மை தாங்கிய அரசர்களே! சற்று அமைதியாக இருங்கள். அரசி ஜொகாஸ்டா அந்தப்புரத்திலிருந்து வருகிறாள். உங்களிருவரையும் தேடித்தான். உங்கள் சண்டை அவளால் தீரும்.

(ஜொகாஸ்டா வருகிறாள்)

ஜொகாஸ்டா:  அறிவு குழம்பிய மனிதர்களே! இதென்ன கூச்சலும் குழப்பமும்? நம் தீப்ஸ் நாட்டை நரகம் விழுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, சொந்தப் பிரச்சினைக் காகச் சண்டையும் சச்சரவும்!

(ஈடிபஸிடம்) வா, உள்ளே போகலாம்.

(கிரியோனிடம்) கிரியோன், நீ போ. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இப்படி ஒரு உலக மகா யுத்தம் வேண்டாம்.

கிரியோன்:  ஒன்றுமில்லாததா? சகோதரி, உன் கணவன் என்னை நாடுகடத்த அல்லது சாகடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.

ஈடிபஸ்:  பெண்ணே, அவன் சொல்வது சரிதான். என்னைக் கொலைசெய்யும் முயற்சி யில் அவன் பிடிபட்டுச் சரியாக மாட்டிக்கொண்டிருக்கிறான்.

கிரியோன்:  இல்லை, உண்மையில் உனக்கு நான் கெடுதல் நினைத்திருந்தால் எனக்குக் கொடுமையான சாவு வரட்டும்!

ஜொகாஸ்டா:  ஈடிபஸ், இவனை நம்பு. இவன் இட்ட சத்தியத்தை நம்பு. எனக்காக, இந்த மக்களுக்காக.

பா.கு.தலைவன்:  மன்னா, உன் அரசி சொல்வதைக் கேள். உன் மனத்தை அவளுக்குச் சொல்.

ஈடிபஸ்:  நான் இப்போது என்னதான் செய்ய?

பா.கு.தலைவன்:  கிரியோனை மதி, நம்பு. அவர் என்றும் முட்டாள்தனமாகப் பேசிய தில்லை. இப்போதோ சத்தியமே செய்திருக்கிறார்.

ஈடிபஸ்:  நீங்கள் கேட்பதன் விளைவென்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

பா.கு.தலைவன்: தெரியும்.

ஈடிபஸ்: அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

பா.கு.தலைவன்:  இந்த அளவு சத்தியம் செய்யும் நண்பனை, வெறுப்பினால், ஆதாரமின்றி, தண்டிக்கலாகாது.

ஈடிபஸ்:  உங்கள் இந்த முடிவு, எனக்குத் தீமையைத்தான் உண்டாக்கும்.

பா.கு.தலைவன்:   உனக்கு நாங்கள் தீமை நினைத்தால் வானில் எரியும் கதிரவன் சாட்சியாக நாங்கள் அழிந்துபோவோமாக! தீப்ஸ் நாட்டு வறண்ட நிலங்கள் எங்கள் உள்ளங்களை வலிவிழக்கச் செய்திருக்கின்றன. இப்போது உங்கள் இருவர் கெட்ட ரத்தமும்.

ஈடிபஸ்:  சரி, போகட்டும். உங்கள் வருத்தத்திற்காக அவனை நான் விட்டுவிடுகிறேன். சாக வேண்டுமெனில் நானே சாகிறேன். அல்லது தீப்ஸை விட்டுப் போகிறேன். உங்கள் வருத்தமே அவனது பேச்சைவிட என்னை பாதிக்கிறது.

கிரியோன்: கோபத்தில் கோரம். விட்டுக்கொடுப்பதில் அதைவிட மகா கோரம்.

ஈடிபஸ்:  இங்கிருந்து போகிறாயா, இல்லையா?

கிரியோன்:  உனக்குத்தான் உண்மை தெரியவில்லை. இந்த நகரம், இந்த மக்கள் என்னை நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் நான்நேர்மையானவன். நீ மட்டும்தான்….

(கிரியோன் போகிறான்)

பா.கு.தலைவன்: அரசியே, நீ ஈடிபஸை உள்ளே போகச் சொல்லவில்லையா?

ஜொகாஸ்டா: முதலில் என்ன நடந்தது இங்கே என்று சொல்லுங்கள்.

பா.கு.தலைவன்: சாட்சியங்களின்றி, மனத்தில் சந்தேகம். முடிவு, பொய்யான குற்றச் சாட்டுகள்.

ஜொகாஸ்டா:  இருவர் பக்கத்திலுமா?

பா.கு.தலைவன்: இருவர் தரப்பிலும்தான்.

ஜொகாஸ்டா:  என்ன பேசிக்கொண்டார்கள்?

பா.கு.தலைவன்:  நடந்தது நடந்துபோயிற்று. நாம் பட்ட துன்பங்கள் போதாதா?

ஈடிபஸ்:  இந்த உங்கள் அமைதி எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது நாட்டை?

பா.கு.தலைவன்:  நாங்கள் உன்னை மதிக்காவிட்டால் எங்களைப் பைத்தியங்கள் என்றே கருதவேண்டும். முன்பு ஒருமுறை புயல்வீசியபோது உன் வலிமை எங்களைக் காப்பாற்றியது. இப்போதும் அடிக்கும் புயலிலிருந்து எங்களைக் காப்பாற்று.

ஜொகாஸ்டா:  கடவுள் சாட்சியாக எனக்குச் சொல், ஈடிபஸ். ஏன் இந்த ஏராளமான கோபம்?

ஈடிபஸ்:  இந்த ஜனங்கள்மேல் நம்பிக்கை வைத்துப் பயனில்லை. நீ ஒருத்திதான் என் நம்பிக்கைக்கு உரியவள். அதனால் சொல்கிறேன். கிரியோன் எனக்கு எதிராகச் சதி செய்கிறான்.

ஜொகாஸ்டா: விளக்கமாகச் சொல்லேன்.

ஈடிபஸ்:  லேயஸைக் கொன்றவன் நான் என்று பழிபோடுகிறான்.

ஜொகாஸ்டா: ஆதாரம் இருக்கிறதா? அல்லது வெறும் செவிவழிச் செய்திதானா?

ஈடிபஸ்:  யாரோ ஒரு பாழும் பூசாரியைக் கொண்டுவந்து ஏதோ ஒரு கதைகட்டுகிறான்.

ஜொகாஸ்டா:  அமைதியாக இரு ஈடிபஸ். இதற்கு அலட்டிக்கொள்ளாதே. ஜோசியத் துக்கு அவ்வளவு மதிப்பு ஒன்றும் இல்லை. பலவேளைகளில் ஜோசியம் பொய்தான். ஓர் ஆதாரம் சொல்கிறேன் கேள்.
லேயஸுக்கு அசரீரி ஒன்று கேட்டது. தனது மகனாலேயே கொல்லப்படுவான் என்று. ஆனால் நடந்தது என்ன?
லேயஸ் ஒரு முச்சந்தியில் யாரோ முகம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார். அவரது குழந்தையோ பிறந்த மூன்றாம் நாளே கணுக்கால்களில் துளையிடப்பட்டு தனியாக மலைப்பகுதியில் சாகுமாறு விடப்பட்டது.
ஆக, அப்போலோ சொன்ன மாதிரி, அசரீரி சொன்ன மாதிரி, தன் குழந்தையால் லேயஸ் இறக்கவில்லை. இதுதான் ஜோசியம், இதுதான் பூசாரியின் தகுதி!
இவர்களுக்குப் போய் நாம் பயப்படவேண்டாம். கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்ச வேண்டும்.
(ஈடிபஸை உற்றுநோக்கி)   ஆமாம், ஏன் இப்படி முகம் வியர்க்கிறாய் நீ?

ஈடிபஸ்:  இரு இரு. நிழலாடும் ஏதோ நினைவுகள் என்னை வழிமறிக்கின்றன. நீ இப்போது சொன்னவை என் இதயத்தை உறைய வைக்கின்றன.

ஜொகாஸ்டா:  எந்த நினைவுகளைச் சொல்கிறாய் நீ, ஈடிபஸ்?

ஈடிபஸ்:  லேயஸ் மூன்று சாலைகள் கூடுமிடத்தில்-முச்சந்தியில் கொல்லப்பட்டார் என்றா சொன்னாய்?

ஜொகாஸ்டா: ஆம், அப்படித்தான் மற்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அதுதானே எனக்குத் தெரியும்?

ஈடிபஸ்:  இது நடந்தது எங்கே?

ஜொகாஸ்டா:  அந்த இடத்தை ஃபோகிஸ் என்கிறார்கள். டெல்ஃபிக்கும் டாலியாவுக்கும் தீப்ஸ் நகரச் சாலை பிரியும் இடம்.

ஈடிபஸ்: எப்போது நடந்தது?

ஜொகாஸ்டா:  நீ இங்கு வந்து அரியணையில் அமர்வதற்குக் கொஞ்சகாலம் முன்னால்.

ஈடிபஸ்:  ஆஹா, கடவுள் பின்னும் வலை விநோதமானது.

ஜொகாஸ்டா:  நீ ஏன் அதற்கு வருத்தப்படுகிறாய், ஈடிபஸ்?

ஈடிபஸ்:  இரு இரு சொல்கிறேன். கொலை நடந்தபோது அவருக்கு என்ன வயது? பார்க்க எப்படி இருப்பார் அவர்?

ஜொகாஸ்டா:  நல்ல உயரம் அவர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையில் வெள்ளைமுடி தோன்றியிருந்தது. உருவத்தில் உனது சாயலும் இருந்தது.

ஈடிபஸ்:  எனது அறியாமைக்காக நான் சபிக்கப்பட வேண்டும்!

ஜொகாஸ்டா: என்ன என்னவோ பேசுகிறாயே, உன்னைப் பார்க்கவே என் உடல் நடுங்குகிறது அரசே!

ஈடிபஸ்:  குருட்டுப் பூசாரி குருடன் இல்லையென்று தோன்றுகிறது. எனக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியவேண்டும்….

ஜொகாஸ்டா:  என்ன தெரியவேண்டும்? என்றாலும் நீ கேட்பது பயமாக இருக்கிறது.

ஈடிபஸ்: லேயஸுக்குப் பாதுகாப்பாக எத்தனைபேர் சென்றார்கள்? கொஞ்சம் பேர்தானா?

ஜொகாஸ்டா:  ஐந்துபேர் போனார்கள். அதில் ஒருவன் தண்டோரா போடும் அறிவிப்பாளன். தன் ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றார் அவர்.

ஈடிபஸ்:  ஐயோ, எனக்கு இப்போது புரிகிறது எல்லாம். இப்படி நடந்த செய்தி உனக்கு எவ்வாறு கிடைத்தது?

ஜொகாஸ்டா: தப்பிவந்த சேவகன் ஒருவனால். தப்பிவந்தது அவன் ஒருவன்தான்.

ஈடிபஸ்: இன்னும் அவன் இங்கு இருக்கிறானா?

ஜொகாஸ்டா:  நீ அரசனாகப் பதவி ஏற்ற சமயம்தான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. உன்னைப் பார்த்துவிட்டு அவன் என்னிடம் ஓடிவந்தான். என் கைகளைப் பற்றி அழுதான். தன்னை எங்காவது தொலைது£ரத்திற்கு அனுப்பிவிடுமாறு மன்றாடி னான். நானும் கருணையினால் அவன் கேட்டதை நிறைவேற்றினேன்.

ஈடிபஸ்: அவனை இப்போது உடனே அழைக்கமுடியுமா?

ஜொகாஸ்டா: முடியும். ஆனால் எதற்காக?

ஈடிபஸ்:  எதையும் யோசிக்காமல் நான் என்னென்னவோ செய்திருக்கிறேன். அவனோடு கொஞ்சம் பேசவேண்டும்.

ஜொகாஸ்டா:  உனக்குத் தேவையென்றால் வரச்சொல்கிறேன். ஆனால் உனது பயம் என்ன? எனக்குச் சொல்லக்கூடாதா?

ஈடிபஸ்:  உன் உரிமையல்லவா அது? ஆனால் இப்போது தீய சகுனங்கள் புலப்படு கின்றன. நான் மனக்கிளர்ச்சியின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறேன். யாரோடாவது நான் பேசித் தெளிவு பெற்றாகவேண்டும்.

காரிந்த் அரசர் பாலிபோஸ் என் தந்தை. தாய் டோரிய இனம். மெரோபே என்று பெயர். ஒருநாள் ஒரு விசித்திரம் நடந்தது. என் அரண்மனை விருந்தில் ஒரு குடிகாரன், “நீ உன் தந்தையின் மகன் அல்ல” என்று ஏளனம் செய்தான். கோபம் குமுறும் நெஞ்சத்தோடு என் பெற்றோர்களை இதுபற்றிக் கேட்டேன்.
“போடா முட்டாள்!” என்று கேலி செய்தார்கள் என்னை.

எனினும் மனதின் ஒரு மூலையில் இந்தச் சந்தேகம் உறுத்திக்கொண்டே இருந்தது. கொந்தளிப்பு அடங்காமல் ஒருநாள் டெல்ஃபி கோயிலுக்குச் சென்றேன். என் கேள்விக்குப் பதில் சொல்லாத கடவுள், அந்த அசரீரி, வேறு எதையோ உளறிக்கொட் டிற்று. “என் தந்தையை நானே கொல்வேன்….” “என்னுடைய தாயுடன் நான் மலர் மஞ்சத்தைப் பகிர்ந்துகொள்வேன்…” “எவரும் வெறுக்கும் பிள்ளைகளைப் பெறு வேன்…,” இப்படி.

ஜொகாஸ்டா: அப்புறம்?

ஈடிபஸ்:  காதைப் பொத்திக்கொண்டு இத்தீமைகள் நிகழமுடியாத எந்த நாட்டிற்குப் போகலாம் எனத் தவித்து ஓடினேன். தீப்ஸின் வரவேற்கும் கை வானில் தெரிந்தது. வழியில் நடந்ததைச் சொல்கிறேன் கேள்.

மூன்று சாலைகள் சந்திக்கும் ஓரிடத்தில், தண்டோரா போடுபவன் ஒருவன் ரதத்தின் வருகையை அறிவித்தான்.
ரதத்தில் நீ கூறிய அதே தோற்றமுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவருடைய குதிரைக்காரன் இழிவான மொழிபேசி என்னை ஒதுங்கச் சொன்னான். கோபமுற்று எழுந்த நான், கையிலிருந்த கழியால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனையும், ரதத்தில் அமர்ந்திருந்தவரையும், மற்றவர்களையும் அடித்து சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரதத்தில் வந்தது லேயஸாக இருந்தால்…?
என்னைவிட மனம் மறுகுபவன் வேறு யார்?
அத்தனை கடவுள்களும் என்னைச் சபிக்கும்.
இது உண்மையான பட்சத்தில் யாவரும் என்னை வெறுத்து ஒதுக்குவார்கள்.
இது நானே எனக்கு வருவித்துக்கொண்ட தீமை.
நினைத்துப் பார், ஜொகாஸ்டா.
உன் கணவரைக் கொன்ற கைகளினாலேயே உன்னைத் தொட்டிருக்கிறேன்.
என்ன அவலம் இது? நான்தான் தீமையின் உருவம். ஐயோ, என் தந்தையைக் கொல்லக்கூடாது, தாயை விட்டு ஓடிப்போகவேண்டும் என்று நினைத்து வந்து இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேனே….
என்னைப் படைத்த கடவுள், எனக்கு இப்படி விதித்த கடவுள்…. கொடுமையானவன்.
கடவுளே, நான் தண்டனை பெறும் நாளை என் கண்ணில் காட்டிவிடாதே. மாறாக என்னை மனித குலமே காணாமல் போக்கிவிடு.

பா.கு.தலைவன்:  அரசே, இந்தச் செய்தி கேட்டு நாங்களும் துயரம் கொள்கிறோம். எனினும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. தப்பிவந்த சேவகனைக் கேட்கவேண்டியது பாக்கியிருக்கிறதே.

ஈடிபஸ்:  எனக்கும் அது ஒன்றைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை.

ஜொகாஸ்டா:  அவன் வந்தால் என்ன? அதனால் உன் நம்பிக்கை எப்படி பலம்பெறும்?

ஈடிபஸ்:  இந்தக் கொலையைப் பற்றி நீ சொன்னதும் அவன் சொன்னதும் ஒத்திருந்தால் நான் தொலைந்தேன். இல்லையென்றால்….

ஜொகாஸ்டா: கொலையைப் பற்றி நான் என்ன சொன்னேன்?

ஈடிபஸ்:  யாரோ முகம் தெரியாதவர்கள் பலரால் லேயஸ் கொல்லப்பட்டார் என்றாய். அந்த இடையனும் அதையே சொன்னால் அரசரைக் கொன்றவன் நானல்ல. ஆனால் ஒரே ஒருவன்தான் எல்லோரையும் தாக்கிக் கொன்றான் என்று அவன் சொன்னால் சாட்சியம் என்னைப் பார்த்து விரல் நீட்டும்….

ஜொகாஸ்டா:  நிச்சயம் அவன் பலபேர் என்றுதான் சொன்னான். ஆனால் அவனுக்கு இப்போது அதெல்லாம் ஞாபகம் இருக்குமா? செய்திகளைச் சற்று மாற்றிச் சொல்லி விட்டால்….?

அப்போதும் ஜோசியம் பொய்யே. தன் குழந்தையாலேயே லேயஸ் இறப்பார் என்ற அசரீரி வாக்கு அபபோதும் நிரூபிக்கப்படாது. யாரோ ஒருவனான…காரிந்த் நகரத்தவ னான நீ…லேயஸைக் கொன்றாய் என்றுதானே ஆகிறது?
பாவம்…என் முதல் குழந்தைதான் செத்துப்போயிற்று.
இனிமேல் நான் ஒருகணமும் ஜோசியம், குறி, அசரீரி இவற்றை நம்பமாட்டேன்.

ஈடிபஸ்:  நீ சொல்வது சரிதான். என்றாலும் யாராவது போய் அந்த உன் பழைய சேவகனை-ஆடுமேய்ப்பவனை அழைத்துவந்தால் இந்த விஷயம் முடிந்துவிடும்.

ஜொகாஸ்டா:  இதோ யாரையாவது அனுப்புகிறேன். உன் சஞ்சலங்களில் குறுக்கிட்டு நான் அதிகப்படுத்த மாட்டேன். நிச்சயமாக இந்த விஷயத்தில் உன் எண்ணப்படிதான் நடக்கும்.
(இருவரும் அரண்மனைக்குள் போகின்றனர்)

கோ1– நாம் பயணம் செய்யும் பாதை தனிவழிப்பாதை

கோ2– சரியான வழிகள் இங்கே வணங்கப்படுமாக

கோ3– பிரபஞ்சத்தின் நியாயங்கள் சொர்க்கத்திலிருந்து கிடைத்தவை

கோ4– அவை வெறும் ஞாபகங்களின் அடிமை அல்ல

கோ5– அவை து£க்கத்தில் தொலைந்துபோய்விடுபவை அல்ல

கோ6– காலத்தைக் கடந்து நிற்பவை, மறைவானவை

கோ1– தற்பெருமையில் பிறப்பதுதான் கொடுங்கோல்

கோ2– பொறுப்பில்லாத்தனம் கொடுங்கோலனின் இலக்கணம்

கோ3– படாடோபம் அவன் நம்பிக்கைக்கு உருத்தருவது

கோ4– அப்படிப்பட்டவன் உண்மையில் பலசாலி அல்ல:

கோ5– அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி எழும்

கோ6– நாட்டிற்குப் போராடுபவரைக் கடவுள் காத்து நிற்பார்

கோ1– வெறுப்பும் அடங்காமையும் பணிவின்மையும் உலகில் மிகுந்தன

கோ2– அவை கடவுளின் புனித சட்டத்தைக் குலைக்கின்றன

கோ3– தன்னிடமே அனைத்துச் சக்திகளும் இருப்பதாகக் கருதுகிறார்கள்

கோ4– அந்த மனிதர்கள் விதியின் வலையில் வீழ்ந்து துன்புறுவார்கள்

கோ5– புனிதமான விஷயங்களில் எவரும் குறுக்கிடாமல் இருப்பாராக!

கோ6– இல்லையெனில் கடவுளின் வீழ்த்தும் இடி அவர்களைக் கொல்லும்

கோ1– டெல்ஃபியின் மந்திரச் சொற்கள் பொய்யாகிப் போகுமா?

கோ2– கடவுளர்கள் இனிமேல் புகழப்படப் போவதில்லையா?

கோ3– நீ உலகுக்குத் தலைவன் எனில், கடவுளே! உன் தராசில் இதை எடையிட்டுப் பார்!

கோ4– எங்கள் தலைவர்கள் உன் ஆணையை, டெல்ஃபியின் தீர்க்கதரிசனத்தை இகழ்கிறார்கள்

கோ5– அவர்களது இதயங்கள் அறியாமையில் மூழ்கியிருக்கின்றன

கோ6– கடவுளர்மீது மரியாதை செத்துப்போனது.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

[குழுப்பாடகர்கள் ஆறுபேர் (கோரஸ் எனப்படுவோர்) இரண்டு கதவுகள் வழியாகவும் வருகின்றனர்]

கோ1– தங்கமும் நிழலும் பூரணமாகத் ததும்பும் டெல்ஃபி நாட்டில் கடவுள் பாடும் பாடல்தான் என்ன?

கோ2– சூரிய ஒளிக்கற்றை வீசும் நாடு தீப்ஸுக்கு அசரீரி சொன்னதுதான் என்ன?

கோ3– பயம் என்னைப் பல கூறுகளாக்குகிறது. இதயத்தின் வேர்கள் விதிர்விதிர்க்கின்றன.

கோ4– ஓ குணமாக்கும் கடவுளே, உன் சக்தி என் நினைவுக்கு வருகிறது. உன் தண்டனை எவ்விதம் வரும்?

கோ5– சட்டென மாறும் மேகம் போலவா? இல்லை, நீடித்த இரவின் இருள் போலவா?

கோ6– சொல், எங்களிடம் சொல், நன்னம்பிக்கையின் குழந்தையே, அசரீரியே, தங்கக் குரலே, சொல்.

கோ1– அறிவுக் கடவுள் அதீனாவைப் பிரார்த்திப்போம். அவளது சகோதரி ஆர்ட்டெமிஸை வணங்குவோம். அப்போலோவையும் துதிப்போம்.

கோ2– எங்கள் துயர்களுக்கு எதிராகப் பாய்ந்து இருளை அகற்றி விரைவில் அமைதியைக் கொடுங்கள்.

கோ3– எங்கள் கஷ்டங்களுக்கு எல்லை எல்லாமல் போய்விட்டது.

கோ4– பாதிக்கப்பட்ட எம்மை உறவினர்கள், எம் மக்கள் பாராமலே போகின்றனர்.

கோ5– மரணத்தோடு போராடுபவன் எந்தச் சுயநினைவுமே இல்லாமல் ஆகிவிடுகிறான்.

கோ6– செழுமையான நிலங்களில் விளைச்சலே இல்லை.

கோ1– தாங்க முடியாத வலியால் துடிக்கிறது தாய்க்குலம்.

கோ2– நெருப்புத் துண்டங்களிலிருந்து பறக்கும் பொறிகள்போல், வானில் சிறகடித்துப் பறக்கம் பறவைகள்போல், எங்கள் வாழ்க்கை மரணத்தில், மாலைக்கடவுள் நாட்டின் விளிம்பில், நிற்கிறது.

கோ3– கொள்ளை நோய் தீயாய்க் கொழுந்துவிட்டு எரிகிறது.

கோ4– கல்லில் அடித்த சிலைகளாக இறந்து கிடக்கும் குழந்தைகள்.

கோ5– மாரடித்துப் பிலாக்கணம் சொல்லிக் கதறியழும் கிழவிகள்.

கோ6– கடவுளின் பொன்னிறக் குழந்தையே! சூரிய தேவனே! நீயேனும் எங்களுக்குக் கருணை காட்டு.

கோ1– கத்தியின்றி நடக்கும் யுத்தம் இது. நாங்களோ கேடயமின்றி இருக்கிறோம்.

கோ2– அழுகைக்குரல் மட்டும் என்றைக்கும் அடங்குவதே இல்லை, கடவுளே!

கோ3– எங்களைக் கொள்ளையிடும் முற்றுகையால் முழுகடிப்பவனை அப்படியே தூக்கிக் கடலில் எறி, கடவுளே!

கோ4– இடிக்கடவுளே, எங்கள எதிரியின் தலையில் ஆயிரம் இடிகளைச் செலுத்து.

கோ5– சூரிய தேவனே, உன் ஒளிக்கணைகளை எங்கள் எதிரிமேல் செலுத்து.

கோ6– ஆர்ட்டெமிஸ் தேவியே, உன்னால் அவன் வேட்டையாடப் படட்டும். எங்கும் மகிழ்ச்சி பிறக்கட்டும்.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: இதுதான் உங்கள் பிரார்த்தனை என்றால் நிறைவேறட்டும், அது. நான் சொல்வதற்குச் சற்றுச் செவிசாயுங்கள். இந்த நெருக்கடிகள், தீமைகள், விரைவில் தீரப்போகின்றன. இதுவரை நடைபெற்ற கதைகள் எனக்குத் தெரியாதது போலவே குற்றங்களும் எனக்குத் தெரியாமல் போய்விட்டன. கொலையாளியைக் காட்டும் துப்பு சீக்கிரம் துலங்கிவிடுமா? நண்பர்களே, இவையெல்லாம் நடந்து முடிந்தபின் வந்தவன் நான். இதன்மூலம் தீப்ஸ் நாட்டு மக்கள் எல்லோருக்கும் நான் அறிவிக்கிறேன்: “லேயஸ் எப்படி இறந்தார் என்பது தெரிந்தவர் எவராயினும் பயமில்லாமல் தபன்வாரிசு இல்லாமல் போயிற்றே!

நான் லேயஸுக்கு மகனாக இருந்து பழிவாங்குவேன். அவருக்காகப் போராடுவேன். இந்தப் போராட்டத்தில் என்னோடு சேர்ந்துகொள்ளாத சிறிய உள்ளங்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க முடியாது. அவர்களும் பிள்ளையின்றித் தவிப்பவர்கள் ஆகட்டும்! பெருந்துயரில் விழுந்து மீளாது அவர்கள் துனபுறட்டும்!

பாடற்குழுத் தலைவன்: மன்னா, சத்தியப் பிரமாணம் எடுத்தவன் நான். மன்னரின் மரணத்திற்கு நான் காரணமில்லை என்பதால் மன்னரைக் கொலைசெய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது.
தேடு என விதித்தான் கடவுள். ஏன் கொலைசெய்தவனின் பெயரை அவன் தெரிவிக்கவில்லை?

ஈடிபஸ்: நல்ல கேள்வி. ஆனால், கடவுள், மனிதனுக்கு இவ்வளவுதான் என்று கருணையைப் படியளக்கிறான். அதற்குமேல் ஒரு துளிகூட நம்மால் அடையமுடியுமா?

பா.கு.தலைவன்: இதற்கு இன்னொரு வழி இருக்கிறதே.

ஈடிபஸ்: சொல் உடனே. எந்த வழியானாலும் சரி.

பா.கு.தலைவன்: அப்போலோவின் கோவிலில் முக்காலமும் அறிந்த ஞானி, ஜோசியம் சொல்லுபவர், கடவுளின் பூரண அருள் பெற்றவர் டைரீசியஸ். அவரை அணுகினால் அனைத்து விஷயமும் தெரிந்துவிடும் ஈடிபஸ்.

ஈடிபஸ்: இது தெரியாமல் நான் நேரத்தை வீணடிக்கவில்லை. கிரியோன் இதைப்பற்றிச் சொன்னான். டைரீசியஸை அழைத்துவர நான் ஆட்களை அனுப்பி யிருக்கிறேன். இரண்டு முறை. ஆச்சரியம், அவர் இன்னும் வந்து சேரவில்லை.

பா.கு.தலைவன்: அப்படியானால், அந்த இன்னொரு செய்தி-பழைய செய்தி-இனிமேல் பயனற்றது.

ஈடிபஸ்: என்ன செய்தி அது? நான் எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

பா.கு.தலைவன்: மன்னர் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி.

ஈடிபஸ்: தெரியும், ஆனால் அதற்குச் சாட்சி இல்லை.

பா.கு.தலைவன்: கொலை செய்தவனுக்குத் துளி பயமிருந்தாலும், இத்தனை நேரம் உன் சாபங்கள் அவனைச் சரணடைய வைத்திருக்கும்.

ஈடிபஸ்: இந்தப் படுகொலையைச் செய்தவன் சாபங்களுக்குப் பயப்படுவான் என்று எனக்குத் தோன்றவில்லை.

(குருட்டு ஞானி டைரீசியஸைக் காவலாளி ஒருவன் அழைத்துவருகிறான்)

பா.கு.தலைவன்: மனிதர்களிலே மனத்தில் உண்மை ஒளி கொண்டவன், புனிதமான ஞானி, டைரீசியஸ். இவரால் மட்டுமே மன்னரைக் கொன்ற குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியும்.

ஈடிபஸ்: டைரீசியஸ்! மண்ணுலகம், விண்ணுலகம் இவ்விரண்டின் இரகசியங்களையும் அறிந்து கற்றடங்கிய மெய்ஞ்ஞானியே! உங்கள் கண்கள் பழுதுபட்டிருந்தாலும் இந்த நகரம் கொள்ளை நோயால் நாறிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கொள்ளை நோயிலிருந்து எங்களை உங்களால் மட்டுமே காக்க முடியும்.

தூதுவர்கள் சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லேயஸ் மன்னரைக் கொன்றவனைக் கண்டுபிடித்து தண்டித்தால் நாட்டைப் பீடித்த கறை நீங்கும் என்று அப்போலோ கோயில் அசரீரி சொன்னது.

பறவைகளை வானில் பறக்கவிட்டோ, வேறு எந்தத் தீர்க்கதரிசனத்தாலோ, இந்த நாட்டைக் கொள்ளைநோயிலிருந்து காப்பாற்ற முடியுமா?
எங்களை நான் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டேன். துயரில் துவண்டு கிடப்பவர்க ளுக்கு உதவிசெய்வதைவிட வேறு ஒரு பெரிய கடமை இருக்கிறதா?

டைரீசியஸ்: உண்மையை அறிவதால் உதவியற்றபோது, அவ்வுண்மையின் ஒளி பயங்கரமாகவே தெரியும். அதனால்தான் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உம்…. நான் வந்திருக்கவே கூடாது.

ஈடிபஸ்: நீங்கள் ஏன் இப்படி வருத்தம் கொள்கிறீர்கள்? உங்கள் கண்கள் ஏன் இப்படி இரக்கமற்றுப் போகவேண்டும்?

டைரீசியஸ்: என்னைத் திரும்பிப் போகவிடு…. உன் விதியை நீ அனுபவி. என் விதியை நான் அனுபவிக்கிறேன். அதுதான் நல்லது. நான் சொல்வதை ஏற்றுக்கொள்.

ஈடிபஸ்: உங்கள் நாட்டின்மீது இரக்கம் அற்றிருக்கிறது உங்கள் செய்கை. பேசமாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

டைரீசியஸ்: பேச்சு என்று வந்தால்-உன் பேச்சுதான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும் இல்லை, மென்மையாகவும் இல்லை. இருந்தாலும் நான் தெளிவோடு இருக்க விரும்புகிறேன்.

ஈடிபஸ்: கடவுளின் பெயரால் நாங்கள் உங்களிடம் மன்றாடுகிறோம்….

டைரீசியஸ்: நீங்கள் அனைவரும் அறியாமையில் உழல்பவர்கள். நான் அறிந்ததை உங்களிடம் சொல்லக் கூடாது. என் மனத்தில் கிடந்து என்னை வாட்டும் அது அப்படியே இருக்கட்டும்.

ஈடிபஸ்: என்ன! உங்களுக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டீர்களா? நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று போய்விடுவீர்களா?

டைரீசியஸ்: என்னை வருத்திக்கொள்வதோ, உன்னையும் வருத்துவதோ என் விருப்ப மல்ல. ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறாய்? உன்ன என்னை வற்புறுத்த இயலாது.

ஈடிபஸ்: பொல்லாத கெட்ட கிழவர் நீங்கள்! உங்கள் மனம் கல்லைவிட இறுகிப் பாறையாகக் கிடக்கிறது. கல்லும் இளகும், மனத்தில் உங்களுக்கு உணர்ச்சிகளே இல்லையா?

டைரீசியஸ்: என்னை உணர்ச்சிகள் அற்றவன் என்கிறாய், உன் உணர்ச்சிகளை நீ அறிந்தால்…..

ஈடிபஸ்: ஏன், என்னைப்போல யார் மக்களுக்காக உணர்ச்சியில் தத்தளித்து அழுவார்கள்? நகரம் நாறிக் கொண்டிருக்கிறது, நீங்கள் தலைக்கனம் பிடித்து ஆடுகிறீர்கள்!

டைரீசியஸ்: நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒன்று நடந்தே தீரவேண்டும் எனில் அது ஆகவேண்டியதுதான்…. நான் சொல்லாவிட்டால்தான் என்ன?

ஈடிபஸ்: உண்மையை நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

டைரீசியஸ்: இல்லை, நான் சொல்லுவதற்கில்லை. நீ எவ்வளவு கோபம் கொண்டாலும் சரி.

ஈடிபஸ்: கோபம் கொள்வதா? கோபம் வராமல் என்ன செய்யும்? எனக்கு இப்போது புரிகிறது…. நீங்கள்தான் இதை திட்டமிட்டுச் செய்தீர்கள். நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்த ஆள். அல்லது இந்தக் கொலையைச் செய்ய வைத்தீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டின் மாசு, விஷம், பாவமூட்டை…..

டைரீசியஸ்: அப்படியா, மிகவும் சரி. நான் உண்மையைச் சொல்வதானால், நீ உன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். இன்றுமுதல் நீ என்னுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது….. சரி, சொல்லிவிடுகிறேன்…. இந்த நாடு இப்படி நாறிக் கொண்டிருப்பது உன் செயலினால்தான்.

ஈடிபஸ்: என்ன துணிச்சல் உனக்கு? இப்படித் துடுக்குத் தனமாகப் பேசிவிட்டு நீ தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறாயா?

டைரீசியஸ்: நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். ஆனால் உண்மைதான் என்னை இந்நேரம் இங்கே கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஈடிபஸ்: உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் முட்டாள் தந்திரமில்லையா இது?

டைரீசியஸ்: என்னைப் பேசவைத்தது நீ. நான் சொல்லவே கூடாது என்றுதான் இருந்தேன்.

ஈடிபஸ்: அதற்காக, என்ன சொல்லுகிறீர்கள்? சொல்வதை இன்னும் ஒருமுறை தெளிவாகச் சொல்லுங்கள்.

டைரீசியஸ்: ஏற்கெனவே சொன்னது தெளிவாக இல்லை? மறுபடியும் வேறு சொல்ல வேண்டுமா?

ஈடிபஸ்: புரியவில்லை எனக்கு. சொல்லுங்கள் இன்னொரு முறை.

டைரீசியஸ்: நான் சொல்கிறேன், நாம் தேடிக்கொண்டிருக்கிற அந்தக் கொலைகாரன் நீதான்.

ஈடிபஸ்: இருமுறை அவமானப் படுத்திவிட்டீர்கள். அதற்கு தண்டனை இல்லாமல் போகாது.

டைரீசியஸ்: நீ இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பேசு. கோபம் கொள்ளும் அளவுக்குத் துணிவிருக்கிறதா உனக்கு?

ஈடிபஸ்: நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லை.

டைரீசியஸ்: உனக்கு நெருக்கமானவர்களோடு மகா பாவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடிபஸ்! தீமையை உன்னால் காணமுடியவில்லை….

ஈடிபஸ்: உங்களால் எவ்வளவு நேரம் இப்படி உளறிக் கொண்டிருக்க முடியும்?

டைரீசியஸ்: உண்மைக்குச் சக்தி இருக்குமானால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்.

ஈடிபஸ்: உண்மைக்குச் சக்தி இருக்கிறது, ஆனால் உங்களுக்கு இல்லை. உங்களுக்குப் பார்வையில்லை, அறிவில்லை, புத்தியில்லை, பைத்தியக்காரக் கிழவர் நீங்கள்.

டைரீசியஸ்: நீதான் பைத்தியக்காரன். என்னை நீ சபிக்கிறாற்போல், உன்னை வெகுசீக்கிரம் எல்லாரும் சபிக்கப்போகிறார்கள்.

ஈடிபஸ்: அமாவாசையில் பிறந்தவரே! உம்மை நான் தண்டிக்காமல் விடுகிறேன். இந்தச் சூரியனறிய, பூமியறிய உம்மை ஒரு நாய்கூடச் சீண்டாது.

டைரீசியஸ்: சரிதான், நீ எனது விதியைச் சமைப்பவன் அல்ல. என் வாழ்வு உலகை ஆட்டுவிக்கும் அப்போலோ விதிக்கும் விதி.

ஈடிபஸ்: சொல்லும்! நீர் இப்போது சொன்ன அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணகர்த்தா யார்? கிரியோனா, அல்லது வேறு யாராவதா?

டைரீசியஸ்: கிரியோனைக் கண்டு நீ பயப்படத் தேவையில்லை. உனது அழிவை நீயே பின்னிக்கொண்டிருக்கிறாய்.

ஈடிபஸ்: செல்வம், பலம், அரசதந்திரம், அரியணை! இன்றைக்கு எல்லாரும் கண்டு ஆசைப்படுகிறார்கள். ஒரு காலத்தில் அரியணை நான் கேட்காமலே எனக்குக் கிடைத்தது. ஆனால் இன்று இதற்காகப் போட்டி, பொறாமை. கிரியோன் பதவிக்காக என்னை அழிக்கப் பார்க்கிறான். ஒரு உதவாக்கரை ஜோசியனை, காசு பொறுக்கியை, நயவஞ்சகப் பூசாரியை, என்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான் கிரியோன். இவனைவிட என்னால் நல்லபடியாகவே ஜோசியம் சொல்லமுடியும்.

சொல்லும், உம் உதடுகள் முணுமுணுக்கும் மந்திரங்கள் எப்போதேனும் உண்மையை நெருங்கியிருக்கின்றனவா? ஸ்பிங்ஸ் இந்த நாட்டைச் சின்னாபின்னம் செய்துகொண்டி ருந்தபோது நீர் எங்கிருந்தீர்? ஸ்பிங்ஸின் புதிர்கள் எவனோ ஒரு வழிப்போக்கனால் தீர்க்கப்படுவதற்கு உரியவை அல்ல. அதற்கு ஆற்றல் வாய்ந்த நான் தேவைப்பட்டேன்.

உம்முடைய பறவைச் சகுனமும், பயனற்ற மந்திரங்களும் அதை அசைக்கக்கூட முடியவில்லையே!

அந்த நேரம் ஈடிபஸ் என்ற எளிய மனிதன் நான் வந்தேன். பறவைகள் மந்திரங்கள் எவையுமே இல்லாமல், ஸ்பிங்ஸை வெற்றிகொண்டேன். என்னைநீரும் உம் தோழன் கிரியோனும் அழிக்கப் பார்க்கிறீர்கள். நீர் வயதானவர் ஆனதால் உம்மை விட்டுவிடு கிறேன்.

பா.கு.தலைவன்: இருவர் பேசியவையும் கோபத்தில் எழுந்த வார்த்தைகள். கோபம் நமக்குத் தேவையில்லை, ஈடிபஸ்! கடவுள் சித்தத்தை நாம் நிறைவேற்றுவது எப்படி? அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

டைரீசியஸ்: நீ அரசன். ஆனால் விவாதம் என்று வந்தபிறகு நானும் மனிதன்-நீயும் மனிதன். நான் கடவுள் அப்போலோவின் அடிமை. உன் கூலியாள் அல்ல. எனக்குக் கிரியோனும் தேவையில்லை, எவனும் தேவையில்லை. கேள்:

நான் குருடன் என்று கிண்டல் செய்கிறாய். இரண்டு கண்ணிருந்தும் நீதான் குருடன். உன் வாழ்வின் அவலத்தை அறிய உன்னால் இயலவில்லை. யார் வீட்டில் யாரோடு வாழ்கிறாய் என்ற அவலத்தை அ றிய உன்னால் முடியவில்லை. உன் தந்தை யார்? தாய் யார்? சொல்ல முடியுமா? நீ அவர்களுக்குச் செய்த குருட்டுத்தனமான பாவங்கள் சாட்டைகளாக மாறி உன்னை உயிருள்ளவரை அடித்துக் கொல்லும்.
அப்போது நீ அழும் கூக்குரல் ஒலி உலகமுழுவதும் கேட்கும்.

நீ குழந்தையாகத் தவழ்ந்த கீதெய்ரான் மலை அந்தக் கூக்குரலை எதிரொலிக்கும்.

நீ தீப்ஸுக்குள் நுழையும்போது பாடினார்களே, திருமணப்பாடல்-அதன் அர்த்தத்தை நீ அப்போது அறிவாய். இன்னும் இனிமேல் நீ அறியப்போவது-இப்போது புரிந்து கொள்ள முடியாதது-உன்னை உன் குழந்தைகளின் மத்தியிலே ஒருவனாகக் கொண்டு நிறுத்தும்.
சபி. கிரியோனைச் சபி. என்னைச் சபி. வெகு சரி. கோபப்படு. உயரத்திற்குச் சென்று விட்ட நீ அதல பாதாளத்தில் தூக்கி எறியப்படப் போகிறாய்.

ஈடிபஸ்: உன்னிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க வேண்டுமா? அழிந்து போ! இந்த இடத்தைவிட்டுப் போய்விடு! என் கண் முன்னால் நிற்காதே.

டைரீசியஸ்: நீ கூப்பிட்டாய், நான் வந்தேன். இல்லாவிட்டால் நான் வந்தே இருக்க மாட்டேன்.

ஈடிபஸ்: கூப்பிட்டேன், ஆமாம். இப்படிப் பிதற்றிக் கொட்டவா? இப்படி உளறி நீ என்னையும் உன்னையும் முட்டாளாக்கவா?

டைரீசியஸ்: முட்டாளா? உன் பெற்றோர் என்னைப் பற்றி மிக உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்.

ஈடிபஸ்: மறுபடியும் என் பெற்றோர்கள்! நில்லும், என் பெற்றோர்கள் யார்?

டைரீசியஸ்: இன்று உனக்கு ஒரு தகப்பனார் கிடைப்பார். இதே நாள் உன் இதயத்தையும் உடைத்தெறியும்.

ஈடிபஸ்: சிறுபிள்ளைத்தனமான புதிர்கள். மீண்டும் அர்த்தமற்ற உளறல்கள்.

டைரீசியஸ்: ஒரு காலத்தில் புதிர்களுக்கு விடை காண்பதில் ஈடு இணையற்றவனே நீதானே!

ஈடிபஸ்: உம் விருப்பப்படி கேலி செய்யும், ஆனால் உண்மை என்னவோ அதுதான்.

டைரீசியஸ்: உண்மை! அதுதான் உன் அழிவைக் கொண்டுவருவது.

ஈடிபஸ்: உண்மை-அதுதான் இந்த நகரத்தைக் காப்பாற்றக்கூடும் என்றால்?

டைரீசியஸ்: (சேவகனிடம்) தம்பி! கொஞ்சம் கையைக்கொடு. போகலாம்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) ஆமாம், இந்த ஆளைக் கூட்டிப்போ.
(டைரீசியஸிடம்) நீர் இங்கிருக்கும்வரை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. போம்! எங்களை அமைதியாக இருக்கவிடும்!

டைரீசியஸ்: சொல்லவந்ததைச் சொல்லிவிட்டுத்தான் போவேன் நான். உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?
(பாடற்குழுவை நோக்கி) நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் இந்த மனிதன்-மகா பாவி, லேயஸைக் கொன்றவன், தீப்ஸில்தான் இருக்கிறான். நீங்கள் வேறுநாட்டவன் எவனோ என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் அவன் தீப்ஸைச் சேர்ந்தவனே என்பது தெரியவரும்.
தெரியவரும் விஷயத்தால் உங்கள் மனம் இன்னும் அல்லல்படும்.
இன்று பார்வையுள்ளவன் அவன், ஆனாலும் அவன் குருடாகப் போவான்.
பணக்காரன் இன்று அவன். ஆனால் பரம தரித்திரனாகப் போவான்.
இந்த விநோத உலகத்தைக் கைத்தடியால் தட்டித்தட்டிச் சப்தம் எழுப்பியவாறே வளையவரப் போகிறான்.
தன்னைப் பெற்றவளுக்கே கணவனாகவும் ஆகப்போகிறான்.
கைகளில் தந்தையின் ரத்தத்துடன் அவள் படுக்கைக்கே வந்தவன் அவன்.

இவை போதும். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் கூறியவற்றில் தவறு கண்டால் எனக்கு தீர்க்கதரிசனம் இல்லை என்று நீங்கள் இகழலாம்.

(சேவகன் முன் செல்ல, டைரீசியஸ் வெளியேறுகிறான். ஈடிபஸ் அரண்மனைக்குள் செல்கிறான்.)

கோ1– டெல்ஃபி நகர மலைப் பாறைகள் என்றோ நடந்த அரசப் படுகொலையை இன்று கிளறுகின்றன. ரத்தம் படிந்த கையை இன்னும் மறந்துவிடவில்லை.

கோ2– கொலையாளியின் நேரம் வந்துவிட்டது. இடிமுழக்கங்களோடு, மின்னல்களின் சாட்டையோடு, பெருங்காற்றுகளோடு. அப்போலோ அவனைத்துரத்துகிறான்.

கோ3– ஐயோ, பெருங்காற்றுகள்! ஓலமிடும் காற்றுகள் அவனைத் தேடுகின்றன.

கோ4– பார்னாசஸ் மலையில் பனிப்புயல் தொடங்கிவிட்டது. அது அந்த ரகசிய மனிதனின் கண்களை வேட்டையாடுகிறது.

கோ5– அவன் காட்டில் அலைந்தாலும், எல்லாம் அவனைத் துரத்துகின்றன. பேரழிவு அவனைத் தேடுகிறது. ஓடுவது எதற்கு உதவும்?

கோ6– பூசாரியின் பறவைகள் சொல்லிய உண்மை….

கோ1– குருட்டு ஞானி சொல்லிச் சென்றவை….

கோ2– கறைபடிந்த கையைக் கழுவுவது எங்கே….

கோ3– கழுவினால் ஆறுகள்கூட அசுத்தமாகிவிடுமே….

கோ4– எங்கள் மனங்கள் கலங்குகின்றன….

கோ5– ஆன்மாக்கள் வழிதவறிய பறவைகள் போல….

கோ6– நியாயமும் அறியாது நிலையும் தெரியாது கலங்குகின்றன….

கோ1– சொல்லப்பட்ட கதைகளின் உண்மையைக் கடவுளர்கள் மட்டுமே அறிவர்.

கோ2– இந்த ஞானி ஒளியை தரிசித்தாலும் இருட்டையே உரைக்கிறான்.

கோ3– அறியப்படாத நெருடல்களுக்கு நீதி வழங்குவது எங்ஙனம்? அவன் கூறிய வற்றில் நம்பிக்கை வைப்பது எங்ஙனம்?

கோ4– ஞானிகளின் கைகள் ஊடாகவே ஞானம் மாறிமாறிச் சென்று கண்ணாமூச்சி காட்டுகிறது.

கோ5– இந்த ஞானி சொல்லிவிட்டதால் எங்கள் தலைவன் குற்றவாளி என நாங்கள் நம்பவேண்டுமா?

கோ6– எங்கள் தலைவன் அந்தப் பிணப்பாடகியை எதிர்கொண்ட விதம் அறிவோம். இவன் கூறுவதெல்லாம் பொய்கள்.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 1

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 1

[ஈடிபஸின் அரண்மனை வாயில். வாயிலுக்கு எதிரில் சீயூஸ் தெய்வத்தின் பலிபீடம். இருபுறமும் மேடைகள், ஒன்றில் கடவுளரின் சிலைகள் இருக்கலாம். இன்னொன்றில் மூன்று வாயில்கள். இருபுறமும் இரு வாயில்கள். நடுவாயில் தான் அரண்மனை வாயில். இருபுற வாயிற்படிகளில் ஆலிவ் கிளைகளை ஏந்தி இரங்கிநிற்கும் மக்கள். துக்கத்தின் பாதிப்பில் பலநிலைகளில் படிகளில் சாய்ந்து ஓய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். நடுவாயிலின் வழியே ஈடிபஸ் வருகிறான்.]

ஈடிபஸ்: குழந்தைகளே, என் செல்வங்களே! காட்மோஸ் மன்னனின் வழிவந்த கருணை உள்ளங்களே! ஏன் கடவுளின் சிலை முன்னர் ஆலிவ் கிளைகளை ஏந்தித் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் மலர்மாலைகள், பூச்செண்டுகள். மாலைகளிலிருந்து எழும் நறுமணம், நகரத்தின் நான்குபக்கமும் பிரார்த்தனைக ளாகவும், ஒப்பாரிகளாகவும் உலாவுகிறது!

ஈடிபஸ்-இந்தப் புகழ்வாய்ந்த பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கும் நான் உங்களோடு நேரடியாகப் பேசவே விரும்பி வந்திருக்கிறேன். தூதர்கள் மூலம் உங்களோடு பேசவிரும்பவில்லை.

(பூசாரியிடம்) ஆ, இங்குள்ளவர்களில் வயதுமுதிர்ந்தவர் நீங்கள்தான். இவர்களுக்காக என்னிடம் பேசுங்கள். உங்களைப் பிய்த்தெடுக்கும் துயரம்தான் என்ன? பயந்துபோய் வந்தீர்களா, அல்லது என்னிடம் ஆசிகள்பெற என்னை அணுகினீர் களா? என்னால் இயன்ற அளவில் உங்களுக்கு உதவி செய்வேன். சொல்லுங் கள். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். இரங்கிவந்தோர்க்கு நெகிழாவிட்டால் எனக்கு இதயம் என்ற ஒன்று எதற்கு?

பூசாரி: ஈடு இணையற்ற ஈடிபஸ்! பராக்கிரமும் பலமும் மிக்க தீப்ஸ் நாட்டு மன்னனே! இன்று குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை உன் அரண்மனை வாயிலில் பழியாகக் கிடக்கிறார்கள். நிற்கக்கூட இயலாத சின்னஞ்சிறு குழந்தை கள், முதுமை எய்தித் தளர்ந்துபோன என்னைப் போன்றவர்கள், இல்லற வாழ்வு எய்தாதவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோடு வந்திருக்கும் இளைஞர்கள். இன்னும் பலர். தீப்பொறிகளில் கனன்று பேசும் அப்போலோ தெய்வம் வாழும் பல்லாசின் இரு பலிபீடங்களிலும் ஆலிவ் மரக்கிளைகளை ஏந்திநிற்கும் இன்னும் ஆயிரக்கணக்கானோர்.

உன் கண்களே உனக்குச் சொல்லும்-மரணக்கடலில் வீழ்ந்து தவிக்கிறது தீப்ஸ் நாடு. மரண அலைகளிலிருந்து தலையைத் தூக்க முடியாமல் மயங்கிக்கிடக்கிறது. பூமியில் மலர்ந்துள்ள மொட்டுக்களையும் பழங்களையும் ஒரு ராட்சஸப் புழு கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. கால்நடைகள் வியாதியால் கஷ்டப்படுகின் றன. குழந்தைகள் பிறவாமலே வயிற்றில் உயிர்விடுகின்றன. இங்கே பிள்ளைகளைச் சுமத்தலே வீணாகிப்போனது. கொள்ளை வியாதியும் சிதைநெருப்பும் கொடிய மின்னல்களாக நகரத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. காட்மோஸின் நகரத்தில் இன்று வீடுகளில் எல்லாம் இருள் சூழ்ந்துள்ளது. இந்தத் துயரம் மிகுந்த தீப்ஸில் சாவு ஒன்று தான் சந்தோஷமாயிருக்கிறது.

நீ மரணத்தை வென்ற கடவுளல்ல, தெரியும் எங்களுக்கு. நிலையான முறைகளில், மனிதனின் அறிவு மிக்க வழிகளில் தேர்ந்தவனும், கடவுளின் வழிகளில் ஞானம் நிரம்பியவனும் நீ. கடவுளின் வரப்பிரசாதம் பெற்றவன் நீ.

அன்று கனல் உமிழும் கொடிய பாடகி ஸ்பிங்ஸிடமிருந்து, அவளுக்கு நாங்கள் செலுத்திவந்த கொடும் திறையிலிருந்து எங்களைக் காப்பாற்றினாய். எனினும் நீ எங்களைவிட எல்லாம் அறிந்தவனும் அல்ல. ஏதோ தெய்வந்தான் எங்களுக்கு உதவ உன்னை அனுப்பி வைத்தது போலும்!

ஆகவே, அதிபராக்கிரம ஈடிபஸ், நாங்கள் தஞ்சமாக உன்னிடம் வந்துள்ளோம். கடவுள்களின் அறிவுரையை ஏற்றோ, அல்லது மனிதர்களின் வழியாகவோ, எங்களுக்குப் பாதுகாப்பைத் தா. பரிகாரத்தைத் தா. நிரூபிக்கப்பட்ட ஞானம் வாய்ந்த மன்னன் நீ. எங்கள் கஷ்டகாலத்தில் எங்களுக்காகச் செயல்படு. இறந்து கிடக்கும் உன் நகரத்திற்கு உயிர்கொடு.

அன்று எல்லோரும் உன்னை ‘நாட்டிற்கு விமோசனம் அளித்தவன்’ என்று போற்றினார்கள். இன்னும் அதை யாரும் மறந்துவிடவில்லை. “நாங்கள் எழுச்சி பெற்றோம், ஆனால் உடனே வீழ்ந்துவிட்டோம்” என்று அவர்கள் சொல்லும்படி ஆகிவிட வேண்டாம். இந்தப் புயலில் நாடு அழிந்துவிடாமல் காப்பாயாக!
பலவருடங்களுக்கு முன்பு இந்த நாட்டின் நல்ல நிமித்தமாக, எங்களுக்கு ஈடிணையற்ற செல்வமாக வந்தவன் நீ. இன்றும் அப்படியே நீ இருப்பாயாக. உன் சக்தியை இன்று எதிர்க்கும் துணிவு பெற்றவன் யாரும் இல்லை. ஆனால் மக்களை ஆட்சிசெய்! மரணத்தால் அழிந்த நகரத்தை ஆட்சி செய்ய வேண்டாம். மனிதர்கள் நடமாடாத போது கப்பல்கள் வெறும் தகரக்கூடுகளே. காவல் மதில்கள் வெறும் குட்டிச் சுவர்களே!

ஈடிபஸ்:  என் அருமை மக்களே, நீங்கள் இங்குவர ஆசைப்பட்ட காரணங்கள் அனைத் தையும் அறிவேன் நான். மரணத்தை விளைவிக்கும் வியாதிகளால் துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைவிட அதிகமான மனத்துயரத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். அவரவ ருடைய கஷ்டங்களிலும் கவலைகளிலும் மூழ்கி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள். என் ஆத்மாவோ, இந்த நகரத்திற்காக, எனக்காக, உங்களுக்காக முனகிக் கொண்டிருக்கிறது. நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை எழுப்பவுமில்லை. என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைப் பாதைகள் எண்ணிலடங்கா. தேடித் தேடி ஒரு தீர்வைக் கண்டுபிடித்தேன். என்னுடைய எந்தச் செயலால், அல்லது சபதத்தால் இந்த நாட்டினைக் காக்க முடியும்-இதை அப்போலோவிடமிருந்து அறிந்துவர என் மைத்துனன்-அரசி ஜொகாஸ்டாவின் சகோதரன்-கிரியோனை டெல்ஃபிக்கு அனுப்பி யிருக்கிறேன். சென்றவன் எப்போது திரும்பி வருவான் என்று நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருக்கிறேன். சென்றவன் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறான்? இத்தனை நாட்கள் அங்கு என்ன வேலை அவனுக்கு? திரும்பிவந்தவுடன் கடவுள் ஆணையிட்ட எந்தச் செயலையும் செய்வதில் நான் குறைவைக்க மாட்டேன்.

பூசாரி: காலத்தினால் செய்த உதவி! கிரியோன் வந்துகொண்டிருப்பதாகச் சொன் னார்கள்.

ஈடிபஸ்: அப்போலோ தெய்வமே! ஒளிவீசும் அவன் முகம்போல அவன் கொண்டு வரும் செய்தியும் ஒளியைக் கொண்டுவரட்டும்.

பூசாரி: புன்னை மகுடம் அணிந்து வருகிறார் அவர். பலிபீடங்கள் பழங்களால் நிறைந் துள்ளன. நல்ல செய்தி கொண்டுவருகிறார் என்றே நினைக்கிறேன்.

ஈடிபஸ்: சீக்கிரமே தெரிந்து போகும்.

(கிரியோன் வருகிறான்)

ஈடிபஸ்: மைத்துனனே, கடவுளிடமிருந்து நீ கொண்டுவந்த செய்தி என்ன?

கிரியோன்:  அழுத்தமான செய்தி. நல்லபடியாக நிறைவேற்றினால் துயரங்கள் தூர ஓடிப்போகும்.

ஈடிபஸ்:  அசரீரி என்ன சொல்லிற்று? அதன் மறைமுகமான வார்த்தைகள் எப்போதுமே பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் என்னை ஊசலாட வைத்துள்ளன.

கிரியோன்: இத்தனைபேருக்கும் மத்தியில் நான் அதைச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறாயா?

ஈடிபஸ்: எல்லோரிடமும் அதைக் கூறு. எனக்காக உழல்வதைவிட நான் அவர்களுக்காக ஆயிரம் மடங்கு கவலையில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

கிரியோன்  (மக்களை நோக்கி) : அப்படியானால், நான் டெல்ஃபியில் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். தெளிவான சொற்களில், செய்தி இதுதான்: இந்த தீப்ஸ் நாட்டில் நாம் ஒரு கொடிய விஷத்தை, ஒரு பெரிய பாவமூட்டையைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதனை உடனே வெளியேற்றுமாறு கடவுள் கட்டளை இட்டார்.

ஈடிபஸ்: என்ன விஷம் அது? என்ன பாவமூட்டை? எப்படி அதிலிருந்து விடுபடுவது?

கிரியோன்: ஒரு கொலைபாதகம்தான் நாட்டை இந்தக் கதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கொள்ளைநோயைக் காற்றில் உலவவிட்டிருக்கிறது. கொலைசெய்த குற்றவாளியை நாட்டைவிட்டுக் கடத்த வேண்டும் அல்லது கொன்றுவிடவேண்டும்.

ஈடிபஸ்: யார், யாரைக் கொலைசெய்தார்கள்? கடவுள் கொலைகாரனின் பெயரைக் கட்டாயம் சொல்லியிருக்க வேண்டுமே?

கிரியோன்: மன்னா, நீ இந்த நாட்டை ஆளும் முன்பு லேயஸ் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.

ஈடிபஸ்: தெரியும் அது எனக்கு. அவரைப் பற்றிப் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். பார்த்ததில்லை.

கிரியோன்: அவர் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவனைப் பழிக்குப் பழிவாங்க உத்தரவிடுகிறது அப்போலோ தெய்வம்.

ஈடிபஸ்: யார் அவரைக் கொன்றவன்? எங்கிருக்கிறான் அவன்? இத்தனை வருடங்கள் கழித்துக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆதாரங்களுக்கு எங்கே போவேன் நான்?

கிரியோன்: அந்தப் படுகொலை இந்த நாட்டில்தான் நடந்தது. “கவனக்குறைவால் பார்வைக்குத் தப்பியவை எல்லாம் கடுமையான தேடலால் கைக்குள் வரக்கூடும்” என்று அசரீரி சொன்னது.

ஈடிபஸ்: சொல் கிரியோன், லேயஸ் எங்கு கொலை செய்யப்பட்டார்? வீட்டிலா? வயல் வெளியிலா? காட்டிலா? அல்லது, அயல்நாட்டிலா?

கிரியோன்: கடவுள்கள் வாழும் க்ஷேத்திரங்களைக் காணத் திட்டமிட்டுப் புறப்பட்டார் அவர். சென்றவர் திரும்பவேயில்லை.

ஈடிபஸ்: என்ன நடந்தது என்று சொல்லச் சாட்சிகள்-உடன் சென்றவர்கள் – ஒருவரேனும் இல்லாமலா போனார்கள்?

கிரியோன்: சென்றவர்கள் யாவரும் கொல்லப்பட்டார்கள், ஒருவனைத் தவிர. அந்த ஒருவனும் அரண்டுபோய் மனம் பேதலித்துப்போனான். அவனுக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவில் இருந்தது.

ஈடிபஸ்: என்ன, அந்த ஒன்று? ஒரே ஒரு விஷயம், பலவற்றிற்குத் திறவுகோல் ஆகலாம், நாம் அதைச் சரிவரப் பயன்படுத்தினால்.

கிரியோன்: வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் சிலர் எல்லோரையும் சூழ்ந்துகொண்டு தாக்கினார்களாம். எண்ணிக்கையில் அவர்கள் பலராக இருந்ததால், மன்னர் அவர்கள் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மாண்டுபோனார் என்று அவன் சொன்னான்.

ஈடிபஸ்: ஆச்சரியம்! கொள்ளைக்காரர்கள் மன்னரைத் தாக்குவதா? யாராவது லஞ்சம் கொடுத்துத் தூண்டியிருக்க வேண்டும்.

கிரியோன்: அப்படித்தான் நினைத்தோம். மன்னர் மரணத்திற்குக் காரணமானவர் களைக் கண்டுபிடித்துப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கும் முன்பாக, புதிய துயரங்கள் எங்களுக்குச் சுமை ஏற்றிவிட்டன. பழிவாங்க ஆளில்லை.

ஈடிபஸ்: புதிய துயரங்களா?

கிரியோன்: ஆம், புதிய துயரங்கள்தான். புதிர்போடும் ஸ்பிங்ஸின் பழிவாங்கும் பாடல்கள். அவை காதில் விழுந்தபின் பழைய துனபம் எதையும் அது காதில் விழாது அடித்துச்சென்றுவிட்டது.

ஈடிபஸ்: முதல்முறை உங்களை ஸ்பிங்ஸிடமிருந்து மீட்டேன். இரண்டாவதாக இப்போது நான் இருள் சூழ்ந்து கிடக்கும் இந்நாட்டிற்கு ஒளியூட்டுவேன். அப்போலோ வின் தீர்ப்பினால், இறந்தவர் நம் நெஞ்சை உறுத்தியிருக்கிறார்.

நான் என்றென்றைக்கும் உங்களைக் காத்து நிற்பேன். உறுதி இது. கண்காணா ஒரு நண்பரின் மரணத்திற்குப் பழிவாங்குவது மட்டுமல்ல, இந்நாட்டை அலைக்கழிக்கும் தீ வினையைப் பனியாய் உருகிப்போகச் செய்யும் செயல் இது. லேயஸ் மன்னரைக் கொன்றவன் யார்? யாருக்குத் தெரியும்? அவனது குரூரமான கைகள் என் கழுத்தைத் தேடிக்கூட விரைவில் நகரலாம்.

நான் அவனைப் பழிவாங்கியே தீருவேன். இறந்த மன்னருக்காகச் செயல்படுவதில் என் சுயநலமும் கலந்தே இருக்கிறது, பாருங்கள்! செல்வங்களே,

ஆலிவ் கிளைகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். உங்களில் ஒருவர் நமது பிரஜைகளை அழைத்து, இங்கு எல்லோரையும் கூட்டிவைத்து, என்னால் இயன்றதை அவர்களுக்குச் செய்வேன் என்பதைச் சொல்லுங்கள்.

(ஒரு காவலாளி வெளியே செல்கிறான்)

கடவுள் கருணை உதவியால் நாம் காப்பாற்றப்படுவோம். இல்லாவிட்டால் நாம் காணாமற் போய்விடுவோம்.

பூசாரி: எழுந்திருங்கள் மக்களே, நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. மன்னர் நமக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டார். அப்போலோ தெய்வமும் அசரீரி மூலம் செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது. அந்தக் கடவுளே வந்து இந்தக் கொள்ளை நோயை விரட்டியடிப்பார்.

[ஈடிபஸ், கிரியோன் இருவரும் நடுக்கதவு வழியாக வெளியேறுகின்றனர். பூசாரியும் இரங்கிநின்றவர்களும் இடது வலது கதவுகள் வழியாக வெளியேறுகின்றனர். சிறிது நேரத்திற்குப் பின் கோரஸ் (குழுப்பாடகர்கள், தீப்ஸ் நகர மக்கள்) வரவேண்டும். குழுப்பாடகர்கள் மீதி நாடகம் முழுவதும் மேடையிலேயே இருப்பார்கள்.]


ஈடிபஸ் அரசன் – சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்

ஈடிபஸ் அரசன்

(சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்)
“தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது!
ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!
பதவியால், செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம்.
மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால்,
அவன் தன் நல்அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!” (நாடகத்தின் இறுதி வரிகள்)

ஈடிபஸ் அரசன் –  நாடகம்

ஆங்கிலவழித் தமிழாக்கம்:  க. பூரணச்சந்திரன்; உதவி-திருச்சி நாடகச்சங்கம் ஜம்புநாதன்

காட்சியமைப்பு, பிற பணிகள், இசை, இயக்கம்: க. பூரணச்சந்திரன்
இயக்கத்தில் உதவி: நாடகச் சங்க நண்பர்கள் கோவிந்தராஜ், மனோகர்.

[இந்த நாடகம், 2007ஆம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முத்தமிழ் விழாவின் போது மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
அதில் நடித்தவர்களுக்கு-தமிழ் முதுகலை மாணவர்களுக்கும், குறிப்பாக ஈடிபஸாக நடித்த நவசக்திவேலுக்கும், அரசி ஜொகாஸ்டாவாக நடித்த மோகனப்ரியாவுக்கும் என் நன்றிகள் உரியன.

அந்த ஆண்டு நான் தமிழ்த்துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்டு. அதற்கென என் மாணவர் (இன்று மிகப் பிரபலமாக விளங்கும்) இயக்குநர் திரு. ஏ.ஆர். முருகதாஸ் நாடக விழாவில் பங்குகொள்ளவும், முத்தமிழ்விழாவின் இறுதி உரையாற்றவும் வந்து பங்கேற்றார்.]

நாடக அறிமுகம்

கிரேக்க மொழியில் மிகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சோஃபோக்ளிஸ் எழுதிய பிரசித்தமான அவல நாடகம் (tragedy) இது. உளப்பகுப்பாய்வில் (சைக்கோ-அனாலிசிஸில்), இக்கதையின் அடிப்படையில்தான் ‘ஈடிபஸ் சிக்கல்’ என்ற சொல்லை உருவாக்கினார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு. உலகின் முதன்மையான, தலைசிறந்த நாடகங்களில் இது ஒன்று. அழுத்தமான, செறிவான கதையமைப்பும், சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் கொண்ட இந்த நாடகம் உலகமொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் கதையை உலகின் எத்துறை சார்ந்த அறிஞர்களும் அறிவர்.

நாடகக் கதைமாந்தர்

ஈடிபஸ் -தீப்ஸ் நாட்டு அரசன்
ஜொகாஸ்டா -ஈடிபஸின் மனைவி
கிரியோன் -ஜொகாஸ்டாவின் சகோதரன்
டைரீசியஸ் -குருட்டு ஞானி; அப்போலோ கோவிலின் பூசாரி
பாடற்குழு (கோரஸ்)த் தலைவன்
ஆண்டிகனி -ஈடிபஸின் மகள்
இஸ்மீன் -ஈடிபஸின் மற்றொரு மகள்
தூதன் 1
தூதன் 2
ஆடுமேய்ப்பவன்
கோரஸ் (பாடற்குழுவினர்)- ஆறுபேர். இவர்கள் தீப்ஸ் நகரப் பிரதிநிதிகள்.
இரங்கிநிற்போர் -தீப்ஸ் நகர மக்கள்
காவலாளிகள்
சேவகர்கள்


பிள்ளைத் தமிழ் இலக்கியம்

pillaiththamilதமிழ்ச் சிற்றிலக்கியங்களிலே தலையாயது பிள்ளைத் தமிழ் என்பர். பிள்ளைத் தமிழ் இலக்கியம் தமிழுக்கே உரியதென்றும், இது பிறமொழிகளில் காணப்படாத ஓர் இலக்கியவகை என்றும் இதன் தனிப்பெருமையை எடுத்துரைப்பார் அறிஞர் மு. வரதராசனார். பிற சிற்றிலக்கிய வகைகளைவிட எண்ணிக்கையிலும் இப் பிரபந்தம் மிகுதியாகவே காணப்படுகிறது. இன்று கிடைக்கக்கூடிய பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைக் கணக்கிட்டால் ஐநூறுக்கும் மேல் இருக்கலாம்.

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமும் தொல்காப்பியத் தில் காணப்படுகிறது என்பர். தொல்காப்பியத்தில் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்னும் நூற்பா இடம்பெற்றுள்ளது. இதற்குச் “சிறுபிள்ளைகளும் பாட்டுடைத் தலைவராக அமைவர்” என்பது பொருள். சிற்றிலக்கியங்களில் ‘குழமகன்’ என்னும் இலக்கியமும் ஒன்று. ‘குழமகன்’ என்றால் சிறுவன் எனப் பொருள்படும். ஆனால் அவ்விலக்கியம் பிள்ளைத் தமிழ் போல் பெருவரவாக இல்லை.

தமிழின் பல்வேறு இலக்கியங்களில் பிள்ளைத் தமிழ்க்கூறுகள் காணப்படுகின்றன என்று கூறினாலும், உண்மையில் பெரியாழ் வாரின் திருமொழியிலேதான் அதன் பூரணமான இயல்பைக் காண முடிகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்திலே பெரிதும் ஈடுபட்ட பெரியாழ்வார், தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல் முதலிய பல பருவங்களாகக் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்தை வகுத்து, அவனுடைய திவ்ய குணங்களைப் பாராட்டு கின்றார். பெரியாழ்வார் திருமொழி, பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் நிற்கிறது. செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், நீராடுதல், காப்பிடுதல் போன்ற பலவற்றையும் அவர் பாடியுள்ளார். அவருடைய திருப்பாசுரங்களில் ஒன்றைக் காண்போம்.

பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாண் எத்தனையும் இலாதாய் நப்பின்னை காணிற் சிரிக்கும்

மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்.

இது கண்ணனை நீராட அழைக்கும் பாட்டு.

தூநிலா முற்றத்தே போந்து விளையாட

வானிலா அம்புலீ சந்திரா வாவென்று

நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம்

கோநிலாவைக் கொட்டாய் சப்பாணி

குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

இதில் சப்பாணி கொட்டுதலன்றி நிலவை அழைத்தலும் இடம் பெறுகிறது.

இவ்வாறே ஆண்டாளும் “சிற்றில் சிதைக்காதே” என்று கண்ணனை வேண்டுவதாகப் பாடியுள்ளார்.

பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன்

பேச்சும் செய்கையும் எங்களை

மையலேற்றி மயக்க உன்முகம்

மாய மந்திரந்தான் கொலோ

நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை

நோவ நாங்கள் உரைக்கிலோம்

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்

சிற்றில் வந்து சிதையேலே.

தமிழில் முதன் முதல் எழுந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம், சோழர்காலப் பெரும்புலவரான ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் ஆகும். ஏறத்தாழ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் இது. இதற்குப்பின் வந்த இலக்கண நூல்களிலும் பாட்டியல் நூல்களிலும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இலக்கணம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘கடவுளரையேனும் ஆசிரியரையேனும் உபகாரிகளையேனும்’ குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப்பருவங்கள் அமைத்து ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையால் பாடுவது பிள்ளைத் தமிழ் ஆகும். அது ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படுகிறது.

pillaiththamil1-775x1024பிள்ளைத் தமிழில் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை அல்லது வாரானை, அம்புலி ஆகிய பருவங்கள் இரு பாலார்க்கும் பொதுவானவை. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதியாக, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் காணப்படும். பெண்பாற் பிள்ளைத் தமிழாயின், கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் காணப்படும். செங்கீரை, சப்பாணி போன்ற சொற்களுக்குப் பலவித அர்த்தங்கள் தரப்படுகின்றன.

ஒவ்வொரு பருவமும் குழந்தையின் எந்தக் காலப்பகுதியில் அல்லது வயதில் அமைவது என்பதற்கும் விதிகள் பலவாகச் சொல்லப்படுகின்றன. பொதுவாகக் காப்பு என்பது பிறந்தவுடனும், தால், சப்பாணி போன்று அடுத்துவரும் பருவங்கள், 3, 5, 7, 9, 11, 13 போன்ற மாதங்களுக்கும் இறுதிப்பருவங்கள் மூன்றாம், ஐந்தாம், ஏழாம் ஆண்டிற்கும் உரியவை எனக் கருதப்படுகிறது. மூன்றாம மாதமுதல் 21ஆம் மாதம்வரை பாடப்படுவது என்ற கருத்தும் உண்டு. குழந்தை ஆணாயின் திருமணமுடியும் வரையிலும், பெண்ணாயின் பூப்பெய்தும் வரையிலும் பாடலாம் என்றும் விதிகள் சொல்கின்றன.

ஒரு பருவத்திற்குப் பத்துப்பாட்டுகளாக நூறுபாக்கள் கொண்டதாக அமைப்பது மரபு. ஆனால் இந்த மரபைப் பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பின்பற்றவில்லை. உதாரணமாக, சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் என்ற நூலில் ஒரு பருவத்துக்கு 7 பாட்டுகளே காணப்படுகின்றன. கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழில் ஒரு பருவத்துக்கு 5 பாட்டுகள் வீதம் உள்ளன. பழனிப் பிள்ளைத் தமிழில் ஒரு பருவத்துக்கு 3 பாட்டுகள் உள்ளன. கலைஞர் பிள்ளைத் தமிழில் பருவத்துக்கு ஒரு பாட்டு வீதமே உள்ளது. ஆண்டாள் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு பருவத்துக்கும் பாட்டுகள் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.

பருவங்களின் எண்ணிக்கையும் பிள்ளைத் தமிழ் நூல்களில் மாறு படுகிறது. ஆண்டாள் பிள்ளைத் தமிழில் 11 பருவங்கள் உள்ளன. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழில் 12 பருவங்கள். சாலை முருகன் பிள்ளைத் தமிழில் 13 பருவங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் கதிர்காமத் தலத்திலுள்ள முருகன் மேல் இயற்றப்பட்ட கதிர்காமப் பிள்ளைத் தமிழ் என்ற நூல் உண்டு. அதனை இயற்றியவர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவங். கருணாலய பாண்டியன் என்னும் புலவர். அவரது பிள்ளைத் தமிழ் நூலில் செந்தமிழ்க் காப்பு, செங்கீரை, மொழிபயில் பருவம், உண வூட்டல், தாலாட்டல், சப்பாணிகொட்டல், முத்தம் தருதல், வருகை, நிலாவழைத்தல், சிறுபறைமுழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் என 14 பருவங்கள் காணப்படுகின்றன. மேலும் காப்புப் பருவத்தில் 4 பாக்களும், பிற எல்லாப் பருவங்களிலும் மும்மூன்று பாக்களும் ஆக மொத்தம் 43 பாக்கள் உள்ளன.

பிள்ளைத் தமிழில், அம்புலிப்பருவம் இயற்றுவதே மிகக் கடினம் என்பார்கள். காரணம், பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி யோடு நிலவை விளையாட வருமாறு அழைக்கும்போது சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வகை உத்திகளையும் கொண்டு அதை அழைக்கவேண்டும். சாமம் என்பது இனிய சொற் களைக் கூறி யழைத்தல். பேதம் என்பது, “உனக்கும் இத் தலைவனுக்கும் இடையில் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, உன்னைவிட இவன் உயர்ந்தவன், ஆகவே விளையாட வா” என்பது. தானம் என்பது “இன்னின்ன பொருள்களைத் தருவான், வா என்றல். தண்டம் என்பது நீ வராவிட்டால் உன்னை இவ்விதமாகத் தண்டிப்பான், ஆகவே வந்துவிடு” என்று கூறுதல்.

குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், அம்புலிப்பருவத்தில், “நிலவு உன்னிடம் வர நாணமும் அச்சமும் கொள்கிறது, உன் முகத்துக்கு முன் வர வெட்கப்படுகிறது, உன் கணவன் அணிந்துள்ள பாம்பினைக் கண்டு அஞ்சுகிறது” என்று தோழியர் பலவாறாக அம்புலி வராமைக்குக் காரணங்கள் கூறி சமாதானப்படுத்துவதாக அமைக்கிறார்.

“நிலவே, நீ வானத்தில் இருந்தால் பாம்பு விழுங்கிவிடும். சூரிய மண்டலத்திற்குச் சென்றால் ஒளி குன்றிப்போவாய், சிவன் சடைமுடிக்கே சென்றாலும் அங்குள்ள பாம்பு அச்சுறுத்தும், எனவே நீ உன்னைக்காத்துக்கொள்ள மீனாட்சி அம்மையிடம் வந்துவிடு” என்று தோழியர்கள் நிலவை அழைக்கின்றனர்.

இன்னும் ஒரு பாட்டில் சிலேடை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அளவறிந்து வாழத் தெரியாதவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி மண்கலத்தில் பிறர் இடும் கூழுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது. இதனை நிலவோடு பொருத்திப் பாடுகிறார் குமரகுருபரர். நிலவும் அளவறியாது வாழ்ந்த காரணத்தினால் தன் அமுதத்தையும் கலையையும் (ஆடையையும்) இழந்து மண் கலத்தில் (பூமியில்) இடும் கூழுக்கு (பயிர்களுக்கு) இரவுபூண்டு (இரவு நேரத்தில்) நிற்கிறது என்று சிலேடையாகக் கூறுகின்றார் குமரகுருபரர்.

பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி பெயரிலேயே காணப்படும். ஊர்ப்பெயர்கள் தலைவன் அல்லது தலைவி பெயருக்குமுன் காணப்படும். இதற்கும் விதிவிலக்குள் உள்ளன. ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார். சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ் என்பதை எழுதியுள்ளார். அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத் தமிழ் என்பதை எழுதினார். பரசமய கோளரியார் என்றால், பிற சமயங்களின் கொள்கைகளை எதிர்க்கும் சிங்கம் போன்றவர் என்று பொருள். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை எழுதினார். வாகடம் என்றால் மருத்துவ நூல். ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத் தமிழ் என்பது அமைந்துள்ளது.

பெருமரபுத் தெய்வங்களே அன்றி சிறுமரபு சார்ந்த நாட்டார் தெய்வங்களும் பிள்ளைத் தமிழ் பெற்றுள்ளனர். கடவுளர்களே அன்றி, சைவசமய குரவர் நால்வரும் பல பிள்ளைத் தமிழ் நூல்களுக்குப் பாட்டுடைத் தலைவர்களாகியுள்ளனர். இவர்க ளிலும் திருஞான சம்பதருக்குரிய பிள்ளைத் தமிழ் நூல்களே மிகுதி.

பேராசிரியர் அ. சீநிவாசராகவன், தமது ‘வெள்ளைப் பறவை’ என்னும் கவிதை நூலில், ‘குப்பன் பிள்ளைத் தமிழ்’ என்பதை நகைச்சுவைக்கெனச் சேர்த்துள்ளார்.

தனியொருவர் பாடுவதாக இல்லாமல், தொகுப்புப் பிள்ளைத் தமிழ் நூல்களும் இருபதாம் நூற்றாண்டில் எழுந்துள்ளன. உதாரணமாக, அ. அருணகிரி என்பவர் தொகுத்த கம்பன் பிள்ளைத் தமிழ் என்ற நூலில், பத்துப் பருவங்களையும் பத்துக் கவிஞர்கள் பாடியுள்ள னர். கம்பராமன், சித்தன், தங்க. அன்புவல்லி, தமிழவேள், பெரி. சிவனடியான், இரா. திருமுருகன், அப்துல் காதர், சொ.சொ.மீ. சுந்தரம், இளந்தேவன், மரியதாசு என்பவர் அக்கவிஞர்கள். இவ்வாறே அரு. சோமசுந்தரன் தொகுத்த திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலிலும் பத்துக் கவிஞர்கள் பத்துப்பருவங் களைப் பாடியுள்ளனர்.

சைவத்துக்கும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்துக்கும் தொடர்பு மிகுதி. ஏறத்தாழ 300 பிள்ளைத் தமிழ் நூல்களைக் குறிப்பிடும் ஓர் ஆசிரியர், அவற்றில் 218 சைவத்தைச் சேர்ந்தவை, 33 வைணவத்தைச் சேர்ந்தவை என்கிறார். சைவத்திலும் முருக னைப் பாடும் பிள்ளைத் தமிழ் நூல்களே மிகுதி. அடுத்தநிலையில் உமையம்மையைப் பாடும் நூல்கள் உள்ளன. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பிள்ளைத் தமிழ் நூல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. எந்த நூற்றாண்டையும் விட இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைத் தமிழ் நூல்கள் மிகுதி.

பிள்ளைத் தமிழ் என்றவுடனே தமிழறிந்த யாவர் மனத்திலும் தோன்றக்கூடியது மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். இதனையும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழையும் வரைந்தவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார். அவருடைய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் பலரும் பாராட்டுகின்ற ஓர் அழகியபாட்டு. இது. வருகைப் பருவத்தில் அமைந்துள்ளது.

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே

நறைபழுத்த துறைத் தீம்தமிழின் ஒழுகுநறும் சுவையே

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே

வளர் சிமய     இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத் தில் அழகு    ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம் வாய்மடுக்கும் குழற்காடேந்தும் இள வஞ்சிக்கொடியே வருகவே

மலயத் துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே

இதில் மீனாட்சியம்மையைப் பழம்பாடலாகிய இலக்கியத்தின் பயனாகவும், தமிழின் சுவையாகவும், தொண்டர் தமது உள்ளக் கோயில் ஏற்றுகின்ற விளக்காகவும் காணுகின்றார் கவிஞர். பிறகு இமயமலையில் விளையாடுகின்ற பெண் யானையாகவும், இறைவன் எழுதிப்பார்க்கும் உயிரோவியமாகவும், வண்டுகள் மொய்க்கும் கூந்தற் காடு கொண்ட வஞ்சிக்கொடியாகவும், மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வாகவும் கவிஞர் வருணிப்பது மிகச் சிறப்பாக உள்ளது. அருவ உருவ உருவகங்கள் மிகச் சிறப்பாக இயைபு பெற்ற கவிதை இது. ஐம்புலன்களின் நுகர்வாக இறைத் தன்மையைக் காணுகின்ற தன்மை இது. “எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிரோவியமே” – என்ன அற்புதமான வரி?

‘அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானம் ஒன்றிருந்ததில்லை’ என்று இந்தப் பாட்டினை பாரதிதாசன் பாராட்டுகின்றார். மேலும் குமர குருபரரிடம், ‘பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராபரச் சிறுமி (மீனாட்சியம்மை) நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள்’ என்று பாரதிதாசன் எதிர்பாரா முத்தம் என்னும் நூலில் பாராட்டுகின்றார்.

பிள்ளைத்தமிழ் என்னும் பெயரிலேயே தமிழ் என்பது அமைந் துள்ளது. எனவே பிள்ளைத்தமிழ் பாடுகின்ற கவிஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழின் அருமை பெருமைகளைப் போற்றியுள்ளனர். சான்றாக முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத் தமிழில் முருகன் தமிழ் வாழவே தோன்றினான் என்றும் அவன் வாயில் தமிழ் மணக்கின்றது என்றும் பாடுகிறார்.

“கலைப்பால் நிறைந்த முதுக்குறைவில் கல்விச் செல்வர் கேள்வி நலம் கனியக்கனிய அமுதூறும் கடவுள் மறையும் முதற்சங்கத் தலைப்பாவலர் தீஞ்சுவைக் கனியும், தண்தேன் நறையும் வடித் தெடுத்த சாரம் கனிந்து ஊற்றிருந்த பசும் தமிழும் முருகன் வாயில் மணக்கிறது” என்கிறார்.

கலைமகள் அகம் புறமென்னும் துறைகள் நிறைந்த தமிழாகிய ஆற்றில் மூழ்கித் திளைத்தவள் என்கிறார். தமிழ் மீது கொண்ட காதலினால் திருமால் தமிழ்ப் பாடலைப் பின்தொடர்ந்து செல்கிறார். அப்படி “அவர் தமிழின் பின்னால் செல்வது முறையோ முறையோ” என்று கூக்குரலிட்டுக் கொண்டு வடமொழி வேதங்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனவாம். “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் வருணிக்கின்றார் குமரகுருபரர்.

இதனால் குமரகுருபரர் வடமொழிமீது வெறுப்புக் கொண்டவர் என்பது பொருளன்று. வடகலையல பலகலையோடு தமிழ் வளரும் கூடல் என்று மதுரையையும் தென்கலைக்கும் பழைய வடகலைக்கும் தலைவன் என இறைவனையும் வருணிப்பவர் அவர்.

இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரை வரைகின்ற உ. வே. சுவாமி நாதையர், “தமிழினிடத்தே இப்புலவர் தெய்வத்தன்மையைக் கண்டவர். அதனைத் தெய்வத் தமிழ் என்றே பாராட்டுகின்றார். தாம் பாராட்டுகின்ற தெய்வங்களையெல்லாம் தமிழ்த் தொடர்பும் தமிழின்பால் வேட்கையும் உடையவர்களாகக் கூறுகின்றார்” என்று குமரகுருபரர் பற்றிக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பகழிக்கூத்தர் செய்த திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழும் செறிவானது. முருகனை ‘முத்தம் தா’ என அழைக்கும் பகழிக்கூத்தரின் பாடல் ஒன்றைக் கண்டுமேற்செல்வோம்.

கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்ற மணிக்கு விலையுண்டு

தத்தும் தரடவிகடதட தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை

தரளம் தனக்கு விலையுண்டு,

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் குளிர்முத்தினுக்கு விலையுண்டு

கொண்டல் தருநித்திலம் தனக்குக் கூறும் தரமுண்டு

உன் கனிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை,

முருகா முத்தம் தருகவே

முத்தம் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே.

உலகிலுள்ள எல்லா வகை முத்துகளுக்கும் விலைமதிப்புண்டு. உன் வாய் முத்தத்திற்கு விலையேயில்லை என்கிறார் கவிஞர். மேலும் முருகன் இருக்கும் தலமே முத்தம் சொரியும் கடல் அலைவாய் (திருச்செந்தூர்) ஆக உள்ளது. அந்தக் கடல் போலவே அவனும் முத்தம் தர வேண்டியவன்தானே என்னும் குறிப்பும் தொனிக்கிறது.

சிவப்பிரகாச சுவாமிகள் தமது குருநாதர் பேரில் சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றியுள்ளார். அதன் செங்கீரைப் பருவப் பாடல் ஒன்று-

கம்பநகர் வாழிறைவ செங்கோ செங்கீரை

கங்கை சுமவாத பர செங்கோ செங்கீரை

செம்பொன்முடி தாழ்சரண செங்கோ செங்கீரை

செங்கைமணி நேர்தலைவ செங்கோ செங்கீரை

இம்பர் வரும் ஆரமுத செங்கோ செங்கீரை

எங்கள் மலநாச ஒளி செங்கோ செங்கீரை

நம்புமடியார் துணைவ செங்கோ செங்கீரை

நங்கள் சிவஞான முனி செங்கோ செங்கீரை.

செங்கோ செங்கீரை என்னும் தொடர் ஒலிச் சிறப்போடு இருப்பதால் பிற்காலப் பிள்ளைத் தமிழ் நூல்கள் சிலவற்றில் பின்பற்றப்பட்டுள்ளது.

சிவஞான முனிவர் திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ் என்னும் இரு முக்கிய நூல்களைச் செய்துள்ளார். கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழின் ஒரு சிறந்த பாட்டு இது-

உருகும் அடியார் அள்ளூற உள்ளே ஊறும் தேன் வருக

உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக

புலன் வழிபோய் திருகும் உளத்தார் நினைவினிக்கும் சேயோய் வருக

எமையாண்ட செல்வா வருக

உமையீன்ற சிறுவா வருக

இணைவிழியால் பருகும் அமுதே வருக

உயிர்ப் பைங்கூழ் தழைக்கக் கருணைமழைபரப்பு முகிலே வருக நறும்பாகே வருக

வரைகிழித்த முருக வேட்கு முன் உதித்த முதல்வா

வருக வருகவே

மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

கச்சியப்ப முனிவர் சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பாக்களில் இடம் பெறும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற படிமங்கள் படைப்புத் திறன் குறை பாட்டைக் காட்டுவதோடு படிப்பவர்க்குச் சலிப்பையும் ஊட்டு கின்றன என்பது ஒரு முக்கியக் குறை. எதுகை மோனைக்காக அவற்றில் கடினமான சொற்களும் கடும் சந்தி விதிகளும் இடம் பெறுவது இன்னொரு குறை.

சைவவைணவக் கவிஞர்களே அன்றி முஸ்லிம்கள் கிறித்துவர்கள் போன்றோரும் பிள்ளைத் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர். மு. சண்முகம் என்பவர் நபிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியுள்ளமை பாராட்டுக்குரியது. இவ்வாறே கவிமணி இல்லம் என்பதிலிருந்து ஏசுநாதர் பிள்ளைத் தமிழ் வெளி யிடப்பட்டுள்ளது. பண்ணை சண்முகம் என்பவர் வீரமாமுனிவர் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார். இவை பாராட்டப்பட வேண்டிய மனப்பான்மைகள்.

சவ்வாதுப் புலவர் முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் இயற்றினார். பிற முஸ்லிம் புலவர்கள் இயற்றிய நூல்களாக, பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் போன்றவை உள்ளன. அப்துல்காதர் என்பார் உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ், காரணப் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ் என்பதை கவி கா.மு. ஷெரீப் இயற்றியுள்ளார். கேசிஎம் பிள்ளைத் தமிழ் என்பதை நாஞ்சில் ஆரிது என்பவர் இயற்றியுள்ளார்.

கிறித்துவசமயநோக்கில், இம்மானுவேல் பிள்ளைத் தமிழ் (ஜே,பி. மனுவேல்), இயேசுபிரான் பிள்ளைத் தமிழ் (அருள். செல்லதுரை), மரியன்னை பிள்ளைத் தமிழ் (சூ. தாமஸ்), தொன்போஸ்கோ பிள்ளைத் தமிழ் (தில்லை எழிலன்) போன்ற நூல்கள் உள்ளன.

17ஆம் நூற்றாண்டிலேயே அமுதபாணி என்பவர் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார்.

இனி அண்மைக்காலத்தில் தமிழ்க்கடல் ராய. சொ. காந்தி பிள்ளைத் தமிழ் என்பதையும், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் என்பதையும் இயற்றியுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த பிள்ளைத் தமிழ்கள் பல, தமிழ்ப்பற்று, அரசியல் ஆகிய இரு காரணங்களால் தூண்டப்பட்டவை. தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ் என இரண்டு உள்ளன. கம்பன் பிள்ளைத் தமிழ் என மூன்று உள்ளன. மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் என மூன்று கிடைக்கின்றன. திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் எனக் குறைந்தது மூன்று உள்ளன. பாரதிபற்றி எழுதப்பட்ட பிள்ளைத் தமிழ் என நான்கு நூல்கள் கிடைக்கின்றன. காந்தியடிகள் பற்றி மூன்று பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. கிருபானந்தவாரியாரைப் பற்றி இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. பெரியார் பற்றி இரு பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்கள் இரண்டு உள்ளன.

அண்ணா பிள்ளைத் தமிழ், கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், பாவேந்தர் பிள்ளைத் தமிழ், வள்ளலார் பிள்ளைத் தமிழ், பண்டிதமணி பிள்ளைத் தமிழ் என்று பிற பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன.

சிந்துப்பாவலர் சுமாச என்பவர் சென்ற நூற்றாண்டில் 1986 வரை குறைந்தது 37 பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. இவர் இயற்றிய நூல்களில் அண்ணா பிள்ளைத் தமிழ், கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழ், எம்ஜிஆர் பிள்ளைத் தமிழ், காந்தியண்ணல் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் எனப் பல அடக்கம். அந்தந்தப் பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவர் செய்த சாதனைகள் அவ்வவற்றில் இடம் பெறுகின்றன. சான்றாக, காமராசர் பிள்ளைத் தமிழில் அவர் செய்த கல்விப்பணி விதந்து பாராட்டப் பட்டிருக்கிறது.

ஒரு கல்லூரி மறைமலையடிகள் பற்றிப் பிள்ளைத் தமிழ் எழுதவேண்டும் என ஒரு போட்டியே நடத்தியுள்ளது. அதன் வாயிலாக மட்டும் 13 பிள்ளைத் தமிழ் நூல்கள் கிடைத்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டுப் பிள்ளைத் தமிழ் நூல்களிலும் பிற சமயப் பிள்ளைத் தமிழ் நூல்களிலும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், எப்படிக் காப்புப் பருவத்தை இயற்றுவது என்பது பற்றியது. சைவ, வைணவப் புலவர்கள் என்றால் அவரவர் தெய்வங்களைக் காக்க என்று கூறிப் பாடிவிடுவார்கள். மரபுமாறாத கம்பன் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளது. கம்பன் பிள்ளைத் தமிழ் பாடிய கனகராஜ ஐயர் என்பவர், விநாயகர், இராமன், சீதை, இளையபெருமாள், பரதாழ்வார், சத்ருக்கனன், வால்மீகி, நம்மாழ்வார் ஆகியவர்களைக் காப்புக்கடவுளராக வைத்துப்பாடியுள்ளார்.

முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பலதெய்வங்கள் இல்லை. அதனால் பிரச்சினை தீவிரமாக நேர்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற சுயமரியாதைத் தலைவர்களைப் பாடும்போது தெய்வங்களைக் காப்புக்கெனப் பாடஇயலாது. அவ்வாறாயின் என்ன செய்வது? இப்பிரச்சினையைப் பலவிதமாகத் தீர்த்துள்ளனர் கவிஞர்கள்.

பெரியார் பிள்ளைத் தமிழ் பாடிய மாவண்ணா தேவராசன் என்பவர், பெற்றவர் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டு வாழ்த்து, பெரியார், ஆசிரியர், சுதந்திரதேவி ஆகியோர் வாழ்த்துகள், தமிழர் இயக்கங்கள் வாழ்த்து ஆகியவற்றை முதற்கண் அமைத்துள்ளார். பின்னர் காப்புப் பருவத்தில், விஞ்ஞா னக் கலைஞர், நடுநிலையறிஞர், சமதர்மவாதிகள், அறநெறிமறத் தமிழர், நீதிக்கட்சியினர், ஏழைத் தொழிலாளர், பொதுமையச் சித்தர்கள், உண்மைக் கவிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் காக்க என வேண்டுவதாக உள்ளது. இடையில் பெண்ணுக்குக் காப்பு என்பது இடம்பெறுகிறது. இந்நூலின் பாக்களிலிருந்து ஒரு சிறு பகுதியைக் காண்போம்.

பார்ப்பன இதழ்கள் கொல் வலிமையினால் பாரினில் பொய்யினை மெய்யாய்ப்

பகர்ந்துநம் நீதிக் கட்சியைக் குலைத்த படிற்றினைப் பறையடித் துலகில்

தீர்ப்புற மீண்டும் உயிர்கொடுத்தினிதே தேற்றினர் நமையெலாம் பெரியார்.

இப்பிள்ளைத் தமிழில் வழக்கமான பருவங்களோடு நான்கு பருவங்கள் சேர்ந்து 14 பருவங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதி நான்கு பருவங்களாக வாழ்த்துப் பருவம், கூர்ந்துணர் பருவம், வினாவுறு பருவம், கதைகேள் பருவம் ஆகியவை உள்ளன. இவ்வாறே சொசொமீ சுந்தரம் இயற்றியுள்ள பண்டிதமணி பிள்ளைத் தமிழிலும் இறுதி மூன்று பருவங்களாக அவர் திருநீற்றுப்பருவம், திருவாசகப் பருவம், சன்மார்க்க சபைப் பருவம் ஆகியவற்றைச் சேர்த்துள்ளார். இவ்வாறு தக்கவிதத்தில் பருவங்களின் பெயர்களையும் இக்கால ஆசிரியர்கள் மாற்றிக் கொள்கின்றனர்.

இன்னொரு பெரியார் பிள்ளைத் தமிழைச் சிங்காரவேலன் என்பார் இயற்றியுள்ளார். அது அண்ணா வணக்கத்துடன் தொடங்குகிறது. காப்புப்பருவத்தில் தமிழ், ஞாயிறு, திங்கள், மழை, விண்மீன், வள்ளுவர், இயற்கை, மானுடம், பகுத்தறிவு ஆகியவை காக்க வேண்டும் என்று உரைக்கின்றார்.

சுமாச இயற்றிய அறிஞர் அண்ணா பிள்ளைத் தமிழில், இயற்கை, தமிழ்த்தாய், திருவள்ளுவர், பேரறிஞி ஒளவை, திருவிக, ஆகிய வர்கள் காப்பு எனப்பாடப்படுகிறது. பிள்ளைத் தமிழ் நூல்களில் பொதுவான காப்புக்கடவுள் திருமால். இங்கு காப்புக்கடவுளாக மறைமலையடிகள் இடம்பெறுகிறார்.

வருகைப் பருவத்திலிருந்து ஒரு பாடல்.

பெரியாரின் திருமணமோ பேதைமையை விதைக்க,

பெரிதான விரிவதுவோ பேரிடியாய்த் தாக்க,

எரியீட்டி உள்ளமுடன் இளைஞரினம் வதைய

எதுவழியோ என்ற நிலை எரிச்சலினை ஊட்ட

தெரிவதுவோ புரிவதுவோ தெளிவதனை உயர்த்த

தேவையதும் உறுதியதே என்றுணர்ந்து நிமிர்ந்தே

அரிதான திமுகவையே ஆரம்பித்த தலைவ

என அண்ணாவை விளிக்கிறார் இவர்.

எம்ஜிஆர் பிள்ளைத் தமிழில் காப்பாக தமிழ், நீதி, தர்மம், சத்தியம், வீரம், புகழ், நல்லோர் உள்ளம், இயற்கை ஆகியவை வேண்டப்படுகின்றன. இதனை இயற்றியவர் திரைப்படப் பாடலாசி ரியராகப் புகழ்பெற்ற புலமைப்பித்தன்.

சுமாச எழுதிய கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழில், அண்ணா, இயற்கை, தமிழ்த்தாய், திருவள்ளுவர் ஆகியோர் காப்புக்கென வேண்டப்படுகின்றனர்.

இக்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் அரசியல் கொள்கைகள் வெளிப்படையாகவே கூறப்படுகின்றன. சான்றாக, சுமாச இயற் றிய திருவள்ளுவர் பிள்ளைத் தமிழில்,

தெளிகுறளை யாத்திட்ட வள்ளுவ மாமுனிவா

சான்றாட்சி தமிழீழம் தருகின்ற நோக்கில்

தலையெழுச்சி ஒற்றுமைக்கே சிறுபறையை முழக்கு

என்ற பகுதி இடம்பெறுகிறது. இதுபோலவே, பழ. வெள்ளியங்கிரி என்பார் இயற்றிய பாரதி பிள்ளைத் தமிழில்,

கங்கைக் கரைவிரியப் பொங்கிவருநீரை எங்கள் வளநதியாம்

காவிரி நதியுடன் கலந்திட அன்றே உரைத்தாய் என்றாலும்

எங்கள் நிலைமை எண்பதினாண்டிடை ஏங்கிட வைக்கிறதே

இன்றியமையாது எனும் குடிநீருக்கு அண்டையில்

ஏங்கிட வைக்கிறதே.

என்னும் பகுதி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

மறைமலையடிகள் பிள்ளைத் தமிழைப் பாடியவர் தமிழண்ணல். மறைமலையடிகள் பிள்ளைத் தமிழை இயற்றிய அரு. சோமசுந்தரன், காப்புப்பருவத்தில் ஆங்கிலச் செவிலித்தாயும் காப்பு என்பது வேடிக்கையாக உள்ளது. இன்னொரு மறைமலையடிகள் பிள்ளைத் தமிழை மலேசியக் கவிஞர் அன்பானந்தம் இயற்றியுள்ளார்.

இக்காலப் பிள்ளைத் தமிழ் நூல்களில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. உதாரணமாக, வள்ளலார் பிள்ளைத்தமிழ் எழுதிய மா.க. காமாட்சிநாதன் என்பார், அம்புலிப்பருவத்தில், நிலவை வள்ளலாராகிய குழந்தையுடன் விளையாடக் கூப்பிடும்போது, “விண்வெளி வீரர்களெல்லாம் வந்து உன்னை மிதிப்பார்கள், அதனால் வள்ளலார் கருணையை நாடி விளையாட வருவாயாக” என்பது நல்ல நகைச்சுவை.

ஆல்டிரின் எட்வினீஸ் ஆம்ஸ்டிராங்கு மைக்கல்போல் அன்பர் பலர் உன்னிடம் பாய்ந்து

அடிகொடு மிதித்திடுவர் கொடிகொண்டு குத்திடுவர் அள்ளுவார் கல்லும் மணலும்

ஆல்தரும் ஒற்றி வடிவாம்பிகைக் கினியனுடன் அம்புலீ ஆடவாவே

ஆரருட் சோதியெம் பேரருட் கருணையனோடு அம்புலீ ஆடவாவே.

பிள்ளைத் தமிழ் போன்ற அதே அமைப்பில் முதுமைத்தமிழ் என்ற ஒன்றையும் இக்காலத்தில் உருவாக்கியுள்ளனர். மருத்துவர் மறையரசன் (வேதராசன்) என்பவர் இயற்றிய நூல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ். முதுமை வரை வாழ்பவர்களுக்கு இயற்றப்படுவது பிள்ளைத் தமிழ். இளமையிலேயே மறைந்தவர்களுக்கு இயற்றப்படுவது முதுமைத் தமிழ். இதில் காப்புப் பருவம், பிள்ளைக் கனியமுதுப் பருவம், வருகைப்பருவம், நரைமுடிப்பருவம், கண்ணாடிப்பருவம், பேரர் மகிழ் பருவம், வழுக்கைத் தலைப்பருவம், பொக்கை வாய்ப்பருவம், கைத்தடிப் பருவம், கைக்கொட்டுப் பருவம் எனப் பத்துப்பருவங்கள் புதுமையாக உள்ளன. காப்புப்பருவத்தில், இளங்கோ, வள்ளுவர், கம்பன், காளமேகம், பாரதி, பாவேந்தர், பரிதிமாற்கலைஞர், புதுமைப்பித்தன், கண்ணதாசன், தமிழ் ஒளி ஆகியோர் காப்புக் கடவுளராக உள்ளனர். பாவேந்தரும் புது மைப்பித்தனும் தாங்களும் கடவுளாவோம் என்று கருதியும் பார்த்திருக்க மாட்டார்கள்!

காலங் கடந்த உன் ஞான விழிகளில் கண்ணாடி பூண்டருளே

கண்ணின் ஒளிக்குறை எண்ணக் குறை ஆமோ கண்ணாடி பூண்டருளே

என்பது கண்ணாடிப்பருவத்தின் ஒரு சிறுபகுதி. அதுபோல,

முடியில்லை என்பதனால் உன் எண்ணக் குமுறலுக்கு முடிவில்லை என்றாகுமோ

முடியில்லாத் தலைவழுக்கை நாவழுக்கச் செய்யுமோ பா முடி கொண்டு அரசாள வா

என்பது வழுக்கைப்பருவத்தில் வருகிறது.

பிள்ளைத் தமிழ் இலக்கியம் என்பது மிகவும் இரசமானதோர் இலக்கியம். பழங்காலத்தில் கவிஞர்கள் அதன் சுவையைக்கூட்ட மிகையான கற்பனையைக் கையாண்டனர்.

ஓலைச்சுவடிகளிலும், அச்சுப்பதிப்பிலும், கையெழுத்துப்படிகளிலும் கிடைக்கின்ற அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களையும் கொண்டு இதுவரை எந்த ஆய்வு நூலும் வெளிவரவில்லை. ஒருசில நூல்களைப் பார்த்தே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய பிள்ளைத்தமிழ் நூல்களைத் தேடும்போது புதுப்புதுக் கவிஞர்கள் பலர் அறியவருகின்றனர். அவ்வாறே புதுப்புதுத் தலைப்பிலான நூல்களும் கிடைக்கின்றன. இவ்வகையான சரித்திர அறிவுக்காக வே சிற்றிலக்கிய ஆய்வில் ஈடுபடலாம்.

அண்மைக்காலக் கவிஞர்கள் மிகைக் கற்பனையைக் கையாளுவதில்லை. மாறாக, அரசியல் கருத்துகளையும் சிந்தனைகளையும் தமது பாட்டுடைத் தலைவர்கள் செய்த அரும்பணிகளையும் கொண்டு கவிதை படைக்கின்றனர். எனவே பிள்ளைத் தமிழ் இலக்கியம், காலப்போக்கிற்கேற்றவாறு புதுமைச் சிறப்புடன் தனித்தன்மையுடன் தனதுபோக்கில் வளர்ந்துவருகிறது. மரபினின்றும் வழுவாது, ஆனால் புதுமையையும் மரபுக்கேற்றவகையில் இணைத்துக்கொண்டு படைக்கும் இக்கவிஞர்களின் திறமை பாராட்டுக்குரியது. மரபில் கால்கொண்டு, புதுமைவானில் பறக் கின்ற முறையில இவை அமைகின்றன.


தொல்காப்பியக் குறிப்புரை

tholkaappiyam1(பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாரின் ‘தொல்காப்பியக் குறிப்புரை’ என்னும் நூல் பற்றிய கருத்துரை)

தமிழின் தொடக்ககால மொழிநூல் வல்லுநர்களில் முக்கியமான ஒருவர் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி சுப்பிரமணிய சாஸ்திரி ஆவார். ‘பிசாசு’ எனத் தம்மை அறிந்தவர்களால் ‘அன்போடு’ அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சாஸ்திரியாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பிருப்பதனால்தான் அவரது தொல்காப்பியக் குறிப்புரை பற்றிச் சில சொல்லலாம் எனக் கருதுகிறேன். இருப்பிடரீதியாக ஒன்றுபட்டவர்கள் என்பதற்கு அப்பால், வெவ்வேறு காலங்களில் என்றாலும், ஒரே கல்லூரியின் ஆசிரியர்கள் நாங்கள் என்னும் ஒற்றுமையும் இருக்கிறது.

முதன் முதலில் வெளிவந்தது, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்புதான். 1930ஜூலையில் இது வெளிவந்துள்ளது. இதில் அவருடைய பெயருக்குக்கீழ் Professor of Oriental Studies, Bishop Heber College, Trichinopoly (on leave), now Assistant Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. தமது முகவுரையிலும் அவர் சொல்கிறார்: “திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் காலேஜில் படிக்கும் பி.ஏ. மாணவர்க்கு கால்ட்வெல் துரை எழுதிய திராவிட பாஷையிலக்கணம் கற்பிக்க முதன்முதல் 1919-ம் வருஷத்தில் எனக்கு நேர்ந்தது. அவர் தமிழ்மொழியைப் பற்றிக் கூறுவன தமிழிலக்கண நூல்களிற் கூறியனவாறே உள்ளனவா என்பதை ஆராய 1920-ம் வருஷத்தில் தொடங்கினேன். நன்னூலில் இனவெழுத்து, சார்பெழுத்து முதலியவற்றைப் பற்றிய விஷயங்கள் ஒலிநூல்களுக்கு ஒத்திராமையின், தொல்காப்பியத்தில் எவ்வாறு கூறப்பட்டன என்று அறிந்துகொள்ளத் தொல்காப்பியம் படிக்கத் தொடங்கி எழுத்ததிகாரத்தைப் படித்து அதனில் எனக்குத் தோன்றிய விஷயங்களை பிஷப் ஈபர் காலேஜ் பத்திரிகையில் வெளியிட்டேன்…….சொல்லதிகாரத்தில் உள்ள விஷயங்களை செந்தமிழ்ப் பத்திரிகையில் 1927-ம் வருடமுதல் வெளியிட்டேன்” என அவர் கூறும்போது பிஷப் ஈபர் கல்லூரியில் பணிபுரிந்த செய்தி மட்டுமல்ல, எதற்காகத் தொல்காப்பிய ஆராய்ச்சியைத் தொடங்கினார், அதன் நோக்கம் என்ன என்னும் செய்திகளையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கழித்து (பிஷப் ஈபர் கல்லூரி மூடப்பட்டபிறகு) 1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ‘தொல்காப்பிய எழுத்ததிகாரம்-குறிப்புரையுடன்’ நூலிலும், “இவ்வுரை எழுத எனக்கு உதவியோர் பலர். அவர்கள் பிஷப் ஹீபர் காலேஜில் கால்ட்வெல் இலக்கணம் படிப்பிக்க இடம்கொடுத்த அக்காலேஜ் பிரின்ஸ்பல் Rev.Allan F.Gardiner அவர்களும்…” எனச் சொல்கிறார். தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரை நூலில் அவரது பெயருக்குக்கீழ், Principal, Raja’s College of Sanskrit and Tamil Studies, Tiruvadi and Formerly Professor of Oriental Studies, Bishop Heber College, Tirchinopoly and Asst.Editor, Tamil Lexicon, University of Madras என்ற குறிப்பு காணப்படுகிறது. இதன் வாயிலாக அவர் பிஷப் ஹீபர் கல்லூரி மூடப்பட்ட பிறகு திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார் என்பதையும் அறியமுடிகிறது.

இவ்வாறு ஒரே நிறுவனத்தின் ஆசிரியர்கள் என்ற தொடர்பு மட்டுமல்லாமல் வேறொரு தொடர்பும் இருக்கிறது. நான் பிஎச்.டி ஆய்வு செய்ய மேற்கொண்ட தலைப்பு ‘தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு’. 1925ஆம் ஆண்டு முதலாக ஐம்பதாண்டுத் தமிழ்ப்பொழில் இதழ்களை நான் ஆராய முனைந்தபோது அதன் ஒன்பதாம்ஆண்டு இதழ்களில் மன்னார்குடி நா.சோமசுந்தரம் பிள்ளை என்பார் முனைவர் பி.எஸ்.சாஸ்திரியாருடைய தொல் காப்பியக் குறிப்புரைக்கு ஒரு விரிவான மறுப்புரை – ஏறத்தாழ ஓராண்டுக்காலம் எழுதியதனைக் காண நேர்ந்தது. அவற்றைப் படித்த அனுபவமும் இந்நூல்கள் பற்றிக் கட்டுரைக்குக் காரணமாக அமைந்தது.

இவ்விரண்டு நூல்களிலுமே தமது பாரம்பரியத்தைப் பற்றிய குறிப்பினை நூல் இறுதியில் சுப்பிரமணிய சாஸ்திரியார் தரும் முறை இன்றைய நோக்கில் சற்றே விசித்திரமானது. தொல் காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பின் இறுதியில், “கௌசிககுல திலகரும், வடமொழியில் பாஷ்யரத்நாவளி முதலிய நூல்கள் இயற்றியவரும், சப்ததந்த்ரஸ்வதந்த்ரருமான சொக்கநாத சாஸ்திரிகளின் புத்திரரும், ராமபத்ர தீக்ஷிதரின் மைத்துனரும், சாப்திகர க்ஷா என்ற உரைநூல் இயற்றியவருமான த்வாதசாஹயாஜி பால பதஞ்சலியின் பேரனுக்குப் பேரனும், பின்னங்குடி ஸ்வாமிநாத சாஸ்திரிகளின் மூத்தகுமாரனுமான சுப்பிரமணிய சாஸ்திரியால் எழுதப்பெற்ற தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு முற்றும்” என்ற வாசகம் காணப்படுகிறது.

தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரையின் இறுதியில் இதேபோல, “கௌசிககுலதிலகரும் சப்ததந்த்ரஸ்வதந்த்ரரும் பாஷ்ய ரத்நாவளீ, சப்தகௌமுதீ, தாதுரத்நாவளீ என்ற நூல்கள் இயற்றியவருமான சொக்கநாதமகிகளின் வழித்தோன்றலும், மங்களாம்பிகை ஸ்வாமிநாத சாஸ்திரிகள் இவர்தம் புதல்வனுமான வித்தியாரத்தினம் டாக்டர் சுப்பிரமணிய சாஸ்திரியால் இயற்றப்பட்ட குறிப்புரை முற்றும்” என்று உள்ளது.

சற்றே வித்தியாசமான இந்தக் குறிப்புகளால், மிகப் புகழ்பெற்ற வடமொழி நூலாசிரியரான சொக்கநாததீட்சிதர் அல்லது சொக்கநாதமகி என்பவரின் பாரம்பரியத்தில் வந்தவர் இவர், இவரது தாயார் பெயர் மங்களாம்பிகை, தந்தையார் ஸ்வாமிநாத சாஸ்திரிகள் என்பதை அறிந்துகொள்கிறோம்.

எழுத்ததிகாரக் குறிப்புரை நூலின் பின்னால் சேர்க்கப்பட்டுள்ள Works of Dr.P.S. Subrahmanya Sastri என்ற இணைப்பிலிருந்து அவர் History of Grammatical Theories in Tamil, Tolkappiyam Vol.1 Eluttatikaram with English Commentary, Tolkappiyam Vol.2 Part I Collatikaram with an Elaborate English Commentary, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் குறிப்புரை யுடன், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, தமிழ்மொழிநூல், தமிழ்மொழியிலக்கணம், திருக்குறட்குறிப்பு (Part I) ஆகிய நூல் களை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. ஒருவேளை இவற்றிற்குப் பின்னும் வேறு நூல்கள் எழுதியிருக்கலாம். அவை எனக்குத் தெரியவில்லை. மேலும் தொல்காப்பியத்தை சாஸ்திரியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்றும் அறிகிறோம்.

இந்நூல்களை அக்கால அறிஞர்கள் எப்படி மதித்துள்ளனர் என்பதற்குச் சில குறிப்புகளும் காணப்படுகின்றன. உதாரணமாக History of Grammatical Theories in Tamil நூலுக்கு லண்டனிலுள்ள பேராசிரியர் ஆர்.எல்.டர்னர், ‘Very valuable work’ என்று பாராட்டியிருக்கிறார். பாரிஸிலுள்ள பேராசிரியர் ஜூல்ஸ் பிளாக்கும் பாராட்டியிருக்கிறார். சிகாகோவின் மொழியியல் பேராசிரியர் லெனார்ட் புளூம்ஃபீல்டு, கோபன்ஹேகனிலிருந்த பேராசிரியர் ஹோல்கர் பெடர்சன் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். அதேபோலத் தொல்காப்பியம் ஆங்கில விளக்கவுரை நூலினையும் நார்வேயிலிருந்த பேராசிரியர் ஸ்டென் கோனோவும், எடின்பர்கிலிருந்த ஏ.பி.கீத்-உம் பாராட்டியிருக்கின்றனர். இவற்றால் அவருடைய நூல்கள் உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்களால் எப்படி மதிக்கப்பட்டன என்று தெரியவருகிறது.

tholkaappiyam2இங்கு எடுத்துக்கொண்ட நூல்களின் பெயரும் ‘தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்றும் ‘தொல்காப்பியம் எழுத்ததி காரம்-குறிப்புரையுடன்’ என்றும் சற்றே மாறுபட்டுள்ளன. குறிப்பு என்பதும் குறிப்புரை என்பதும் இக்கால நோக்கில் நோட்ஸ் என மதிப்பின்றிக் கருதப்பட்டாலும்,இக்குறிப்புரை அவ்வாறானதல்ல. சொல்லதிகாரக் குறிப்பின்கீழ் அவர் A critical Study of Collatikaram with all the available Commentaries என்று கூறுவதும், எழுத்ததிகாரக் குறிப்புரையின்கீழ், with an elaborate commentary என்றிருப்பதும் மிகப் பொருத்தமானவை. காரணம், தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, நிசசயமாகவே ஒரு சிறந்த ஆய்வுநூலாகத் திகழ்கிறது; எழுத்ததிகாரக் குறிப்புரை முன்னூலின் அளவுக்கு ஆய்வுச் சிறப்புடன் அமையவில்லை என்பதோடு அவரே சொல்வது போல ஒரு விரிவான உரையாக அமைந்துள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில் வடமொழி மேற்கோள்களை தேவநாகரி எழுத்தில் தந்துள்ளார். எழுத்ததிகாரக் குறிப்பிலுள்ள வடமொழி மேற்கோள்கள் கிரந்த எழுத்தில் தரப்பட்டுள்ளன. இவற்றையும் நாகரி எழுத்திலேயே தந்திருப்பின் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

இவ்வாறே, சொல்லதிகாரக் குறிப்பில் பின்னிணைப்பாகச் சில குறியீடுகளின் விளக்கம் என்ற தலைப்பில் அதிவியாப்தி, அவ்வியாப்தி, அன்னியோன்னியாச்சிரயம், உத்தேசியம், விதேயம், வாக்கியபேதம், பிரவிருத்திநிமித்தம், அநுவாதம், புரோவாதம், யோகவிபாகம், ஸங்கதி, கிருதி, அதிகார சூத்திரம், நியம சூத்திரம், வாசகம், துயோதகம் என்ற சொற்களின் அர்த்தங்களை எடுத்துரைத்துள்ளார். இவை படிப்போர்க்கு மிக்க பயன்தருவனவாக அமைந்துள்ளன. எழுத்ததிகாரக் குறிப்புரையில் ஏனோ இவ்வாறு செய்யவில்லை.

தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்புரை எழுதிய நோக்கத் தினை சாஸ்திரியாரே தமது முகவுரையில் குறிப்பிடுகின்றார்: “இரண்டு உரைகள் இருக்க இக்குறிப்புரை எற்றுக்கு என எண்ணம் வரல் தகும். அவ்வுரைகாரர்கள் நூலாசிரியர் எக்காலத்துக்குமுள்ள மொழிக்கு இலக்கணம் கூறுகின்றாரென நினைத்து, சூத்திரக்காரருக்குப் பின்னர் வந்த வழக்குகளையும் அச்சூத்திரங்களில் சிலவற்றை மிகையெனக் கொண்டு அவற்றாற் கொள்ளுகின்றனர். சிற்சில விடங்களில் நூலாசிரியர் கருத்துக்கு மாறுபாடாகப் பொருள்கூறுகின்றனர். சில விடங்களில் மொழிநூல் வல்லோர் கொள்கைக்கும் அவரது கொள்கைக்கும் மாறுபாடுகள் உள”.

இக்குறிப்புரையில் முன்பின் சூத்திரங்களுக்கு இயைபு கூறுதலும், முன்னருள்ள சூத்திரங்களிலிருந்து எவை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுதலும், சூத்திரத்திற்குச் சூத்திரப்போக்கை யொட்டியும் மொழிநூல்வல்லோரின் கொள்கைக்கு மாறுபாடின்றியும் பொருள் கூறுதலும், முடிந்தவரை மிகையாற் பொருள் கொள்ளாது ஆசிரியர் வழக்காலும், உலகநியாயங்களாலும் பொருள்கொள்ளுதலும், உதாரணங்கள் முடிந்தவரை இந்நூலிலிருந்தும், சங்கச் செய்யுள்களிலிருந்தும் காட்டுதலும், உரைகாரர்களின் கொள்கையை யாய்தலும், வடமொழி நூலோடு ஒற்றுமை காட்டுதலும் ஆகிய பலவற்றைக் காணலாம். இவ்வுரை எழுதியதற்குக் காரணம்,

“எளிதில் எல்லோரும் தொல்காப்பியத்தைப் படிக்கவேண்டுமென்பதும், மாணாக்கர்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்பதும், நூலாசிரியர் அழகாக முற்கூறியதைப் பிற்கூறாது சாஸ்திரீய முறையிற் சூத்திரங்கள் இயற்றியதைக் காட்டவேண்டும் என்பதும், அவரது அறிவுமுதிர்ச்சியைப் பிறர்க்கு உணர்த்தவேண்டு மென்பதும் போன்றனவாம்.”

என்பதிலிருந்து ஆசிரியர் உரை எழுதிய நோக்கமும், காரணங்களும் தெளிவாகின்றன. இவற்றையே சொல்லதிகாரக் குறிப்பு வரைந்ததற்கான காரணங்களாகவும் கொள்ளலாம். சொல்லதிகாரக் குறிப்பில்,

“பண்டைநூல்கள் இயற்றிய நூலாசிரியரிடமும், உரைகள் இயற்றிய உரைகாரர்களிடமும் மிக்க பக்தியுடனும், கௌரவ புத்தியுடனும் இருக்கவேண்டும் என்பதோடு, அவர்கள் கொள்கையைத் தொல்காப்பியம் படிப்போர் நன்கு ஆராய்தல் வேண்டும் என்பதையும் அறிவிக்கவே இச்சிறுநூல் எழுதப்பட்டது”

என்கிறார். எழுத்ததிகாரக் குறிப்புரையில் கூறிய “எளிதில் எல்லோரும் தொல்காப்பியத்தைப் படிக்கவேண்டும், மாணாக்கர்களின் அறிவை வளர்க்க வேண்டும்” என்னும் பயன்வழிக் கருத்துகளை விட்டுப் பிறஅனைத்தையும் நாம் ஓர் ஆய்வுக்கான திட்டங்களாகவே கொள்ளலாம். இருநூல்களிலும் இவை அனைத்தையும் சாதித்திருக்கிறார் என்பதையும் நாம் காண இயலும்.

சொல்லதிகாரக் குறிப்பின் தொடக்கத்தில் ரா.ராகவையங்காரின் பாயிரம் அமைந்துள்ளது. இரண்டிலுமே ஆசிரியரின் முகவுரை இடம் பெற்றுள்ளது. சொல்லதிகாரக் குறிப்பின் முகவுரையில், தொல்காப்பியர் வடமொழி ப்ராதிசாக்ய நூல்களையும், யாஸ்கரது நிருக்தத்தையும் பிற இலக்கண நூல்களையும் நன்கறிந்தவர், தொல்காப்பியருக்கு முன்னால் தமிழிலக்கண ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கவேண்டும், தமிழ்மொழி வடமொழி இரண்டையும் நன்கு ஆராய்ந்து முன்னிருந்த இலக்கணங்களினும் சிறந்ததோர் இலக்கணம் எழுத முனைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறிப், பிறகு தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள வேற்றுமை களைப் பட்டியலிடுகின்றார். பின்னர் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கூறுகிறார். பிறகு தொல்காப்பியனார் சூத்திரஞ்செய்த முறை, சொல்லதிகாரச் சூத்திரங்களில் வழங்கப்பட்ட வடமொழிச்சொற்கள், அச்சொற்களின் மொழி பெயர்ப்பு, உரைகாரர்களைப் பற்றித் தோற்றிய செய்திகள் ஆகியவற்றைக் கூறுகின்றார். முப்பது பக்க அளவில் இம்முகவுரை சிறப்பாக அமைந்துள்ளது.

எழுத்ததிகாரக் குறிப்புரையின் முகவுரையில் தொல்காப்பியர் வரலாறு, எழுத்ததிகார உரையாசிரியர்கள் வரலாறு ஆகியனவே காணப்படுகின்றன. தொல்காப்பியர் வரலாறு கூறும்போது, அவரைப் பற்றிய சில கதைகளைக் கூறி அவை பொருந்தாமையைச் சொல்லிவிட்டு, “ஆசிரியர் தொல்காப்பியனாரைப் பற்றி இந்நூலிலிருந்து அறியப்படுவன ஈண்டுக் கூறப்படும்” என ஆய்வுமுறைப்படி செல்கிறார். சொல்லதிகாரக் குறிப்பில் சில குறியீடுகளின் விளக்கம், பொருட்குறிப்பு (Index) என்பன இறுதியில் காணப்படுகின்றன. எழுத்ததிகாரக் குறிப்புரையின் இறுதியில், சூத்திர முதற்குறிப்பகராதி, சூத்திரச் சொல்லகராதி, உரைச்சிறப்புச் சொல்லகராதி என்பன சிறப்பாக அமைந்துள்ளன.

உரையாசிரியர்தம் கொள்கைகளை ஆராய்தல் என்பதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் சுப்பிரமணிய சாஸ்திரியார். சான்றுக்கு ஓரிரண்டைக் காணலாம். கிளவியாக்கத் தொடக்கத் தில், ‘ஒவ்வோர் ஓத்துள்ளும் உணர்த்திய பொருள்’ எனப்பார்க்கும்போது, உரையாசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார் மூவர் கூற்றுகளையும் ஆராய்ந்து, “இவற்றுள் தெய்வச் சிலையார் கூற்றே மிகப் பொருந்தும்” என்று எடுத்துக் காட்டுகிறார். இருநூல்களிலுமே, நூல், உரைகள் இவற்றிலுள்ள பாடபேதங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார். உரைகளை ஆராய்ந்து செல்லும்போது ஆங்காங்குத் தம் கருத்துகளையும் சுட்டிச் செல்கின்றார். உதாரணமாக, குற்றியலுகரப் புணரியலின் ‘உயிரும் புள்ளியும்’ என்ற நூற்பாவின் உரையில்,

“குறிப்பினும் பண்பினும் இசையினும்தோன்றி நெறிப்படவாராக் குறைச்சொற் கிளவி என்றது உரிச்சொல்லைக்குறிக்கும் என்பது சொல்லதிகாரத்து உரியியல் முதற்சூத்திரத்தான் விளங்கும். குறைச்சொல் என்றதனால் பெயர், வினை இவற்றின் பகுதியே உரிச்சொல்லாம்”

எனத் தம் கருத்தைச் சொல்கிறார்.

இவ்வாறு தமது கருத்துரைக்கும் இடங்கள் பல நமது ஆராய்ச்சிக்குரியன. உதாரணமாக, இரண்டாம் நூற்பாவின் உரையில்,

“பண்டைக்காலத்தில் ஆய்தமென்றது ஓரிடத்திற் பிறவாது ஆறு இடங்களிற் பிறந்தது என்பதும், அக்காரணம் பற்றி அறுவகைப்பட்டது என்பதும் வெளிப்படை. அவ்வாறே குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அவற்றின் பற்றுககோடு பிறந்த இடங்களிற் பிறந்து பல்வகைப்பட்டன என்பதும வெளிப்படை” என்கிறார். இது ஆராயத்தக்கது. அதேபோல அளபெடை பற்றிக் கூறும்போது, “ஆசிரியர் தொல்காப்பியனார் ஆஅ, ஈஇ, ஊஉ என்றவிடத்தில் அ, இ, உ இவற்றையே அளபெடை என்ற குறியாற்கொண்டனர் என்பதும், அவற்றைத் தனியலியெழுத்தாகக் கொண்டனர் எனபதும் விளங்கும்” என்பதும் ஆராயத்தக்கது.

இதேபோலச் சொல்லதிகாரக் குறிப்புரையில், 66ஆம் நூற்பா (பெயரப்பயனிலை பற்றியது)வுரையில், இச்சூத்திரத்தானும் முற்சூத்திரத்தானும் உருபேற்றல், பயனிலை கோடல் என்பன பெயர்க்கு இலக்கணம் என்பது பெறப்பட்டது என்பர் உரைகாரர்கள். எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே (சொல்.155) என்று ஆசிரியர் சொல்லிலக்கணம் கூறினமை யானும், பெயர்ப்பொருளைக் குறிப்பதே பெயர் என்பது அக் குறியீட்டாற் பெறப்படுதலானும், பெயரியலிற் கூறிய பெயர்ச் சொற்கள் அனைத்தும் பெயர்ப்பொருளையே உணர்த்துகின்றமை யானும் அவ்வாறு கொள்ளவேண்டியது கடப்பாடின்று”என்கிறார். அதாவது உருபேற்பது பெயர்ச்சொல்லமைப்பிற்குக் கட்டாயமில்லை என்கிறார். இப்பகுதியை எழுதும்போதே அடிக்குறிப்பில், “உருபேற்றல் பெயருக்கு இலக்கணம் அன்று. இலக்கணமாயின், ஒருசொல், உருபேற்பின் பெயராகும் பெயராயின் உருபேற்கும் எனக் கூற வேண்டிவரும். அப்போது அன்னியோன்னிய யாச்சிரயம் எனும் குற்றம் வரும். ஆயினும் அவ்வாறு உரைகாரர்கள் கூறியது சுபந்தம் என்பதைப் பெரும்பான்மையும் பெயராக வடமொழியிலக்கணக்காரர் வழங்குவதை ஒட்டிப்போலும்; ப்ராதிபதிகமே உருபேற்றலால் வடமொழி யிலக்கணக்காரர்க்கு அக்குற்றம் வராது”என விளக்குகிறார். ஆயினும் இவ்விளக்கம் ஆராயப்பட வேண்டியதே.

இதேபகுதியில், பெயர்ப்பொருளைக் குறிப்பதே பெயர் என்னுமிடத்தில், அடிக்குறிப்பாக,

“மேற்கூறிய இலக்கணமும், த்ரவ்யாபிதாயகம் நாம் என்ற ருக்வேத ப்ராதிசாக்கிய வாக்கியமும் ஒப்பிடத்தக்கன”

என ஒப்பீடும் காட்டுகிறார்.

எழுத்ததிகாரக் குறிப்புரை இவ்விதம் அமையவில்லை. அதில் ஒரு நூற்பாவினைத் தந்தபிறகு, ‘பொருள்’ என்பதில் தாம் எவ்விதம் பொருள்கொள்கிறார் என்பதை அன்வயப்படுத்தல் வாயிலாகவும் பொழிப்புரை வாயிலாகவும் தந்துவிடுகிறார். பிறகு தக்க உதாரணங்கள் தருகிறார். அதற்குப் பிறகு தம்முடைய விளக்கம் ஏதும் தேவைப்படின் தருகிறார். இதன்பிறகு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரது உரையையும் சுருக்கமாகச் சொல்லி, அவற்றின்மீது தமது கருத்துரையையும் சுருக்கமாகக் கூறிச் செல்கிறார். இதனால் குறிப்புரை என்ற பெயர் இதற்குப் பொருந்துகிறது். கடைசியாக, உரைகளில் பாடபேதம் ஏதாவது இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். எனவே முற்கூறியபடி, எழுத்ததிகாரக் குறிப்புரை என்பது உரைவிளக்கமாகவும், சொல்ல திகாரக் குறிப்பு என்பது ஆராய்ச்சிக்கட்டுரை போன்ற அமைப்பி லும் உருவாகியிருக்கின்றன.

உரையாசிரியர்கள் கருத்தை ஆராயும் முறைக்கு ஒரு சான்றினைக் காணலாம். கிளவியாக்கம் சூத்திரம் 34 “மன்னாப்பொருளும் அன்னவியற்றே”. இதில் வரும் ‘மன்னாப் பொருள்’ என்ற சொல்லை ஆராய்கிறார் சாஸ்திரியார். “உரையாசிரியரும் சேனாவரையரும் மன்னாப்பொருள் என்பதற்கு இல்லாத பொருள் என்று பொருள்கொண்டனர். நச்சினார்க்கினியர், உலகத்து நிலையில்லாத பொருள் என்று பொருள்கொண்டு, அப்பொருள் கொண்ட ‘மன்னுக பெரும நிலமிசையானே’ ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ ‘மன்னாப்பொருட்பிணி முன்னிய’ என்ற மூன்று மேற்கோளும் அதற்கு யாக்கையும் நில்லாது என்ற உதாரணமும் காட்டிப் பிறகு ‘இல்லாப் பொருள்களும் எச்சவும்மை பெற்றவாறு காண்க’ என்று கூறினார். தெய்வச்சிலையார் நிலையாத பொருள் என்றே பொருள் கொண்டனர். எல்லாவுரையும் நோக்கின் மன்னாப்பொருள் என்பதற்கு நிலையாத பொருள் என்ற பொருளே பொருத்தமாகத் தோன்றுகிறது. உம்மையால் இல்லாப்பொருளை நச்சினார்க் கினியர் கொள்ளுவது சூத்திரப் போக்குக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை”.

இப்பகுதியில் அவரது தர்க்கரீதியான சிந்தனையையும் எளிய நடைப்போக்கினையும் காணஇயலும்.

இப்படி ஆராய்ந்த பிறகு தமது கருத்தினைச் சொல்லுகிறார்: “இச்சூத்திரக் கருத்துயாதெனின் ‘இவ்வுலகத்தில் ஒருவர் செல்வம் நிலையாது’ என்று சொல்லுமிடத்து, ஒருவர் செல்வமும் என்று செல்வம் என்பதற்குப்பின் உம்மை கொடுக்கவேண்டும் என்பதே. இவ்வாறு கொள்ளின் ‘அன்னவியற்றே’ என்பதற்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் என்பதே பொருளாகும்”.

சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய நடை பொதுவாக நல்ல தமிழ் நடையும், ஆங்காங்கு வடசொற்கள் இசைதலும் ஒருங்கே பெற்றிருப்பது ஆகும்.

பொதுவாக சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய சொல்லதிகாரக் குறிப்புரை பின்வருமாறு அமைகிறது. சூத்திரத்திற்குக் கீழ் முதலில் பாடபேதம் இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். பிறகு அச் சூத்திரத்தின் பொருளைப் பொதுவாக விளக்குமுகத்தான் அவதாரிகை என்ற பகுதியை ஒரு சில சூத்திரங்களுக்கு மட்டும் வைக்கிறார். பிறகு வரிசையாக உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், தெய்வச்சிலையார் போன்றோர் கருத்துகள் எடுத்துரைக்கப்படுகின்றன. அடுத்து ஒவ்வொரு உரையாசிரியரின் கருத்து வன்மை மென்மைகளும் ஆராயப்படுகின்றன. அவற்றிற்குள்ளும் பாடபேதம் இருப்பின் சுட்டிக்காட்டுகிறார். கடைசியாகத் தமது கருத்துகளை ஆதாரங்களுடனும் உதாரணங்களுடனும் சொல்லி முடிக்கிறார். தேவையான இடங்களில் அடிக்குறிப்புகளை மேற்கொள்கிறார்.

உதாரணமாக 11ஆம் நூற்பாவின் விளக்கத்தில்

“மயங்கல்கூடா, தம்மரபினவே என்ற இரண்டனுள் ஒன்றே போதும் என்று சேனாவரையர் வினாவெழுப்பிச் ‘சொல்லில் வழியது உய்த்துணர்வது’ என்று விடைகூறினர். இதன் கண் அடங்காத மரபினையும் அடக்கவேண்டி ‘தம்மரபினவே’ என்பதை யோகவிபாகம் செய்து பயன் கூறியிருக்கின்றனர்”

என சேனாவரையர் உரைகொள்ளும் முறை பற்றி எழுதும்போது, யோகவிபாகம் என்ற இடத்தில் அடிக்குறிப்பிட்டு “யோகவிபாகம் என்பது ஒரு சூத்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் நூற்புணர்ப்பு வகை” என விளக்கம் தருகிறார்.

சொல்லதிகாரக் குறிப்பிலும், எழுத்ததிகாரக் குறிப்புரையிலும் அவர் ஆண்ட நூற்களின் பட்டியலைச் சிறிது நோக்கலாம். சொல்லதிகாரக் குறிப்பில், வழக்கமான உரையாசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிஆயார், கல்லாடனார் உரைப் பதிப்புளோடு, வீரசோழியம், நன்னூல்,(மயிலைநாதர் உரை, விருத்தி யுரை, காண்டிகையுரை) ஆகியவையும் உள்ளன. இலக்கண விளககம, பிரயோகவிவேகம், தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி, கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் ஆகியவையும் சுட்டப்படடுள்ளன. கையாண்ட வடமொழிநூல்களாக, மூன்றுவேத ப்ராதிசாக்கியங்கள், யாஸ்க நிருக்தம், பாணினி அஷ்டாத்யாயீ, பாணினி சிக்ஷை, பர்த்ருஹரி வாக்கியபதீயம், ஹேலாரா ஹாராஜீயம் ஆகிய நூல்களையும் திருக்கோவையார், கம்பராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களையும் காணமுடிகிறது. எழுத்ததிகாரக் குறிப்புரையில் தமிழ்நூல்களில் நேமிநாதம், யாப்பருங்கல விருத்தி, இவை சேர்ந்துள்ளன. இவற்றோடு, செந்தமிழ்-புறநானூற்றுக் குறிப்பு, செந்தமிழ் தொகுதி 25 ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத நூல்களில் ருக்வேத சம்ஹிதை, தைத்திரீய சம்ஹிதை, பகவத் கீதை, மஹாபாஷ்யம், காமசூத்ரம், மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி, நாட்டிய சாஸ்திரம், வாமந காவ்யாலங்காரம், உத்தர ராமசரிதம், வாசஸ்பத்தியம் ஆகியவை மேலதிக நூல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், Philological works என்னும் தலைப் பில், Caldwell-comparative Grammar of Dravidian Languages, Burnell-On Aindra School of Grammarians, P.S.Subrahmanya Sastri – History of Grammatical Theories in Tamil. South Indian Inscriptions, Bishop Heber College Magazine 1925, Mac Donell’s Vedic Grammar ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய சமஸ்கிருத அறிவு தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே மொழிப்பயன்பாட்டினை அறிந்துகொள்ளப் பல இடங்களில் பயன்படுவதனைக் காணலாம். உதாரணமாக, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பில், 111ஆம் நூற்பாவுக்கு (எனையுருபும் அன்னமரபின மானமிலவே சொன்முறையான) உரையெழு தும்போது,

“இச்சூத்திரத்தில் மானம் என்பதற்குக் குற்றம் என்று எல்லாவுரை களிலும் பொருள்கூறப்பட்டுள்ளது. மானம் என்பதற்குப் பிரமாணம் என்று பொருளேயன்றிக் குற்றமென்று பொருள் இருப்பதாகத் தெரியவில்லை; ஹாநம் என்ற வடமொழியின் தற்பவமாகிய ஆனம் என்பதற்கு, குற்றமென்று பொருளாம். ஆகவே ‘மெல்லெழுத்து மிகினுமானமில்லை’ (எழுத்.341) என்னுமிடத்து மெல்லெழுத்து மிகினும் மானமில்லை என்று பிரித்துப் பொருள்கொண்ட அச்சிட்டோர் இங்கும் ஆனம் என்று ஏட்டிலிருந்ததை மானம் என்று திருத்திக்கொண்டனரோ என்று கருதவேண்டியதாக இருக்கிறது” எனக்கூறி, அதற்கு அடிக்குறிப்பாக,

“சூடாமணி முதலிய நிகண்டுகளில் மானம் என்பதற்குக் குற்றம் என்ற பொருளிருக்கிறது எனச் சிலர் எண்ணலாம். அந்நிகண்டு களில் வடமொழிச் சந்தியைத் தவறாகப் பிரித்து வழங்கிய வேறு சொற்களும் காணப்படுதலின் அஃதொரு காரணமாகாதென்க” என்கிறார்.

இதனையே பின்னர் எழுத்ததிகாரக் குறிப்பிலும் வற்புறுத்தி, 32ஆம் நூற்பா (தம்மியல் கிளப்பின் எல்லாவெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மானமில்லை) உரையில்,

“மயக்கமானமில்லை என்றவிடத்து மயக்கம் மானம் இல்லை எனப் பதப்பிரிவு காட்டியுள்ளார் பதிப்பித்தோர். பிற்காலத்து நிகண்டுகளில் மானம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளிருத்தலின் அவ்வாறு செய்தனர் ஆகும். ஆனால் ‘மயக்கம் ஆனம் இல்லை’ என்ற பதப்பிரிவே தக்கதாகும். ஏனெனில் மானம், ஆனம் என்பன மாநம், ஹாநம் என்ற வடமொழிச் சொற்களின் தற்பவமாகும்; வடமொழியில் மாநம் என்றதற்குக் குற்றம் என்ற பொருளில்லை; ஹாநம் என்றதற்கே அப்பொருள் உண்டு”

எனக் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியத்தில எங்கெங்கெல்லாம் மானமில்லை என வருகின்றதோ அங்கெல்லாம் பிறழ் பிரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் அறிகிறோம். இம்மாதிரி வெளிச்சமூட்டும் இடங்கள் பலப்பல.

சொல்லதிகாரக் குறிப்பு நூலுக்கு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை எழுதிய மறுப்புகளைப் படிக்கும்போது அவை பெரும்பாலும் வெறுப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்பட்டனவாகவே எனக்குத் தோன்றியது. முதல் இருபது பக்கங்களைமட்டும் ஆராய்ந்து அவர் தந்திருந்த இருபது மறுப்புகளில் ஒன்றே ஒன்று மட்டுமே எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. “வினைக்கு வேற்றுமையுருபைச் சேர்ப்பின் அது பெயராய்த் தமிழில் ஆகின்றது; அவ்வாறு வடமொழியில் இல்லை” என்பதற்கான மறுப்புரைதான் அது. அநேகமாகப் பிற குறைகளெல்லாம் சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய நடை பற்றியனவே.

இவ்வாறு பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பும், எழுத்ததிகாரக் குறிப்புரையும் வளம் நிறைந்த, ஆழ்ந்த இலக்கண ஆய்வுக்குத் துணைசெய்யக் கூடிய சிறந்த படைப்புகளாக அமைந்துள்ளன. குறிப்பாக, சமஸ்கிருத இலக்கணக் கருத்துகளையும், தமிழ் இலக்கணக் கருத்து களையும் ஒப்பிட்டு ஆராய விரும்புவோர்க்கு இவை மிகச் சிறப்பான கையேடுகளாக உதவக்கூடியவை எனலாம்.

அதே சமயம் சாஸ்திரியார் சொல்லக்கூடிய எல்லாக் கருத்து களும் இன்றைய மொழியியல் நோக்கில்கூட ஒப்புக்கொள்ளத்தக்கவை அல்ல. அன்றன்றைய கருத்துவளர்ச்சியோடு இணைத்து நோக்கி நூல்களை மேம்படுத்தி நோக்கும் பணி இடையறாது நடக்க வேண்டிய ஒன்று. தமது காலத்தில் அதனை சாஸ்திரியார் நிறைவேற்றியிருக்கிறார். சாஸ்திரியாரது காலத்திற்குப் பின்னர் ஒப்பியல் மொழிநூலிலும், மொழியியலிலும், வரலாற்று மொழியியலிலும், ஏற்பட்ட கருத்து மாற்றங்களைக் கணக்கில்கொண்டு இன்றும் மொழி வல்லுநர்கள் இப்படிப் பட்ட குறிப்புரைகளை அல்லது விரிவான உரைகளை எழுத இயலும்.


தமிழில் அற இலக்கியங்கள்

tamilil-ara-ilakkiyam1“நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் சிந்தனையில் புருஷார்த்தங்களாவது பொருட்பேறுகள் என்ற கருத்து உண்டு. மனிதன் வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் என்பது இதன் கருத்து. இப் புருஷார்த்தங்களே இறுதி இலக்குகள் (ends). இவற்றை அடையப் பிற யாவும் கருவிகள் (means). எனவே இலக்கியங்களும் இந்த நான்கையும் அடைய உதவும் கருவிகளே ஆகும்.

தமிழ்ச் சிந்தனைக்கும் இந்தியப் பொதுச்சிந்தனைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்தியச் சிந்தனை மரபின்படி அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் அடையவேண்டியவை. தமிழ்ச் சிந்தனை மரபில் தொல்காப்பியர் காலந்தொட்டே அறம் பொருள் இன்பம் என்ற கருத்து மட்டுமே உண்டு. வீடு பற்றிய கருத்து கிடையாது. அறம் பொருள் இன்பம் என்று நிலைபெற்ற மூன்றினுள், நடுவணது (நடுவிலுள்ளது-அதாவது பொருள்) எய்த இருதலையும் (அதாவது அறம், இன்பம் ஆகிய இரண்டும்) எய்தும் என்பது நாலடியார். ஆயினும் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை ஜி. யூ. போப் போன்ற பிறநாட்டு அறிஞர்களும் கண்டறிந்து பாராட்டியுள்ளனர்.

உண்மையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை யாவற்றின் அடிச்சரடும் அறம் என்பதே. சான்றாக, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டாகக் கபிலர் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: சமஸ்கிருத மரபில் எண்வகை மணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் யாழோர் மணமாகிய காந்தர்வத்தை ஒத்தது தமிழர்களின் களவு. ஆனால் இரண்டிற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. சமஸ்கிருத மணமாகிய காந்தர்வத்தில், கற்பு வாழ்க்கை என்பது இல்லை. ஆசையிருக்கும் வரை சிலநாள் கூடியிருந்து பிரிந்துவிடும் வாழ்க்கை அது. அங்கே திருமணம், கற்பு வாழ்க்கை என்பது இல்லை. ஆனால் தமிழின் களவு மணமோ முறைப்படி, கற்பாகிய திருமண வாழ்க்கையிலே நிறைவெய்த வேண்டும் என்கிறார். இதனை உணர்த்துவதற்காகவே குறிஞ்சிப்பாட்டு என்ற அற்புதமான இலக்கியம் அவரால் படைக்கப்பட்டது. எனவே சங்க இலக்கியங்களும் அறம் உணர்த்துவனவே என்பதை நம்மால் காணமுடிகிறது.

காப்பியங்களும் இவ்வாறே அமைந்திருக்கின்றன. அரசியலில் தவறு செய்தவர்களுக்கு அறமே கூற்றாகும் (எமனாக அமையும்), கற்பிற் சிறந்த பெண்களைப் பலரும் போற்றி வணங்குவர், ஊழ்வினை தவறாமல் தனது பலனை அளிக்கும் என்ற மூன்று அறக்கருத்துகளை உணர்த்தவே இயற்றப்பட்டது சிலப்பதிகாரம் என்று அதன் பாயிரம் கூறுகிறது. அறம் வெல்லும்-பாவம் தோற்கும் என்ற அடிப்படைக் கருத்தினை உடையது கம்பர் எழுதிய இராமாயணம். இவ்வாறு நுணுகி நோக்கும்போது தமிழ் இலக்கியங்கள் யாவுமே அற இலக்கியங்கள் என்பதை நாம் உணரலாம்.

image descriptionஇன்றைய தமிழ்நாட்டிலும், சென்னைக் கடற்கரையில் சிலப்பதிகாரக் கற்பிற்கு எடுத்துக்காட்டான கண்ணகி சிலை அமைந்திருக்க, குமரிமுனையிலே நம் தலைசிறந்த அறநூலின் ஆசிரியரான வள்ளுவரின் சிலை அமைந்துள்ளது. ஆனால் நிகழும் நிகழ்வுகள்தான் தமிழ்நாடு அறத்தை இன்று அடியோடு மறந்து விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

எல்லா இலக்கியங்களுமே அறநூல்கள் என்று கூறப்படும் தன்மை வாய்ந்தவை என்றால் சில நூல்களை மட்டும் அற இலக்கியங்கள் என்று கூறுவதற்குக் காரணம் என்ன? காரணம், இவை பிற நூல்களைப் போலன்றி, பெரியோர் தமது இளையோர்க்குக் கூறுவன போல, இதைச் செய், இதைச் செய்யாதே என்று நேராகவே அறிவுரை கூறும் முறையில் அமைந்துள்ளன.

அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் அறநூல்கள் இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. இலக்கியம் என்பது மானிட அனுபவங்களை உரைப்பதாக இருக்கவேண்டும், வெறுமனே போதனை செய்வதாக இருக்கலாகாது என்பது இதற்குக் காரணம். சொல்லுதல் யார்க்கும் எளியவாம், அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்று வள்ளுவரே கூறியதுபோல, போதனை செய்வது சுலபம், வாழ்ந்து காட்டுவது கடினம். வாழும்போது வரும் சோதனைகளையும் அவற்றை வென்ற சாதனைகளையும் காட்டுவதாக இலக்கியம் அமைய வேண்டும். இது ஐரோப்பிய மரபு. இந்திய மரபு இதிலிருந்து வேறுபட்டது. நாம் ஐரோப்பிய மரபினை ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

போதித்தல் என்ற செயலே, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற வேறுபாட்டினைக் காட்டுகிறது. உயர்ந்தோர்தானே போதிக்கமுடியும்? தாழ்ந்தோர் பிறருக்கு போதிக்க இயலாது. இவ்வாறு சமூகத்தை இரண்டாகப் பிரித்துக்காட்டுவதாலும், அற நூல்கள் மேற்கத்திய மரபில் இலக்கியமாக ஏற்கப்படுவதில்லை. கொள்கை அளவிலேனும் ஐரோப்பிய மரபு ஜனநாயக மரபு.

மேலும் அறங்களையும் நீதிகளையும் போதிக்கும் தேவை எப்போது எழுகிறது? அவை சீர்கெட்டிருப்பதனால்தானே? இப்படி நோக்கும்போது நாம் அறநூல்களைப் பற்றிப் பெருமைப்படக் காரணம் இல்லை.

தமிழில் உள்ள அற நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே காணப்படுகின்ற அறநூல்கள். இவை எண்ணிக்கையில் பதினொன்று. இவற்றில் திருக்குறளும் அடங்கும்.

2. பிற்கால அறநூல்கள். இவற்றுள், பிற்கால ஒளவையார், சிவப்பிரகாசர், குமர குருபரர் போன்றோர் எழுதிய அறநூல்கள் அடங்கும்.

கீழ்க்கணக்கு நூல்கள் அடிநிமிர்பில்லாத-அதாவது நீண்டு செல்லாத-வெண்பா என்ற யாப்பில் பெரும்பாலும் அமைந்துள்ளன. அடிநிமிர்ந்த-அதாவது நீண்டு செல்லக்கூடிய செய்யுள்கள், ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்பவை. அவற்றால் ஆன நூல்கள் மேற்கணக்கு எனப்பட்டன.

முன்னரே கூறியபடி கீழ்க்கணக்கின் பதினொரு அறநூல்கள் இவை-நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி. இவற்றுள், அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளையும் கூறும் நூல்கள் திருக்குறள், நாலடியார் இரண்டு மட்டுமே. அதனால் இவையிரண்டும் பழங்கால முதலாகவே பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளன. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி போன்ற பழமொழிகளை நினைக்கலாம்.

வெறுமனே அனுபவங்களை எடுத்துரைத்தல் மட்டும் இலக்கியத்தின் பணி அல்ல. இதைவிட வேறொரு முறையில் சொல்லவே இயலாது என்ற நிலையில் மொழியைத் தனித்தன்மையோடு கையாளுதலும், சுருங்க உரைத்தலும், பொன் மொழிபோல நினைவிற் கொள்ளுமாறு உரைத்தலும் இலக்கியத்திற்குரிய பண்புகளே ஆகும். இவ்வகையில், மிகுந்த தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்த இலக்கியம் திருக்குறள். அதைப் பிற நீதிநூல்களோடு ஒப்பவைத்து நோக்க முடியாது. இதனைப் புரிந்துகொள்ளாமையால், ஐரோப்பிய மரபில் கல்வி கற்ற கமில் சுவலபில் போன்ற அறிஞர்களும், திருக்குறள் இலக்கியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினர். இன்று மொழிபெயர்ப்பில் திருக்குறளைப் பயிலும் இந்தியாவின் பிறமொழிக்காரர்களும், இத்தகைய கேள்வியை எழுப்புவதைக் கண்டிருக்கிறேன். இலக்கியத் தன்மைகள் பலவும் மொழிபெயர்ப்பில் காணாமற் போய்விடுகின்றன என்பதும் இதற்கு ஒரு காரணம்.

tamilil-ara-ilakkiyam4இலக்கியத்திற்குரிய பண்புகளாக இழுவிசை, பல்பொருள் தன்மை, சிற்பம் போல செதுக்கி அமைத்தல் என எத்தனையோ பண்புகளை அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். அப்பண்புகள் யாவும் திருக்குறளில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆகவே நீதிநூல்கள் இலக்கியமல்ல எனக்கூறும் அதே ஐரோப்பிய-அமெரிக்க அளவுகோல்களைக் கொண்டே திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என்ற முடிவுக்கும் வர இயலும்.

சங்ககாலத்திற்குப் பிந்திய சங்கமருவிய காலத்தில் திருக்குறளும் பிற பத்து அற நூல்களும் இயற்றப்பட்டிருக்கலாம். எனவே இக்காலத்தை அறநூல்களின் காலம் என்றே பலரும் பகுத்துள்ளனர். இதனை வரலாற்றில் களப்பிரர் காலம் என்பர்.

திருக்குறள் மூன்று பால்களைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். அறத்துப்பாலில் 380 குறள்களும், பொருட்பாலில் 700 குறள்களும், காமத்துப்பாலில் 250 குறள்களும் உள்ளன. எனவே நாலடியார் கூறுவதுபோல, நடுவணது (பொருள்-700 பாக்கள்) எய்த இருதலையும் (அறம், இன்பம்-630 பாக்கள்) எய்தும் என்று வள்ளுவரும் ஒருவேளை கருதியிருக்கலாம்!

tamilil-ara-ilakkiyam3திருக்குறள் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர், டாக்டர் கிரால் இருவரும் பெயர்த்தனர். ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழிகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் ஜி.யு. போப், கிண்டர்ஸ்லி, எல்லிஸ், ட்ரூ, கோவர், ராபின்சன், லாசரஸ், ஸ்காட், பாப்லி போன்ற ஐரோப்பியர் பலரும், ராஜாஜி, வ.வே.சு. ஐயர் போன்ற தமிழர் பலரும் மொழிபெயர்த்துள்ளனர். இந்திய மொழிகளில் அநேகமாகத் திருக்குறள் பெயர்க்கப்பட்டுவிட்டது. (அவை சிறந்த மொழிபெயர்ப்புகளா என்பது வேறு கேள்வி.)

திருக்குறளுக்கு எழுந்துள்ள புகழுரைகளைச் சொல்லத் தேவையில்லை. திருக்குறளுக்குப் பழைய உரைகள் ஐந்து கிடைக்கின்றன. பிற்கால உரைகளுக்குக் கணக்கே இல்லை. இன்றைய ஜனரஞ்சக எழுத்தாளர் சுஜாதா, பட்டிமன்றப் பேராசிரியர் பாப்பையா வரை குறளுக்கு உரை எழுத முயலாதவர்களே இல்லை. இன்றைய உரைகளே இருநூறுக்கு மேலிருக்கும் என்றால், அதன் இலக் கியப் பெருமையை விளக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள் ளன. வள்ளுவனால் வான்புகழ் கொண்டது தமிழகம் என்று மட்டும் கூறிப் பிற நூல்களுக்குச் செல்லலாம்.

சமண முனிவர் பலர் இயற்றிய வெண்பாக்களுள் 400 வெண்பாக்களை மட்டும் பதுமனார் என்பவர் தேர்ந்தெடுத்து அவற்றை நாலடியார் என்னும் நூலாகத் தொகுத்தார். 40 அதிகாரங்கள் கொண்டது இந்நூல். எனினும் திருக்குறளின் பெருமைக்கு இது ஒப்பாகாது. துறவறத்தை மட்டும் போற்றி, பிற ஒழுக்கங்களை இழித்துரைக்கிறது இந்நூல். என்றாலும், இந்நூலின் உவமைகள் சங்க காலத்து உவமைகளைப் போலச் சிறப்புடையனவாகவும், பொருளைத் தெளிவாகப் புலப்படுத்துவனவாகவும் உள்ளன. செய்யுட்களும், படிப்போர் உள்ளத்தில் நன்கு கருத்துப் பதியுமாறு சுருங்கிய சொற்களிலே தெளிவாகக் கூறுகின்றன. நாலடியார் செய்யுட்கள் எவ்வாறிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

கல்வியின் சிறப்பை விளக்குவதாக அமைந்த இச்செய்யுளில் உவமையோ பிற இலக்கியச் சிறப்புகளோ அமையாவிட்டாலும், கூறுவதைச் செறிவாக, சிறப்பாகச் சொல்லும் தன்மை அமைந்திருப்பதைக் காணலாம்.

பிற ஒன்பது அறநூல்களும் மக்கள் நல்வாழ்வுக்கு உதவக்கூடிய ஒழுக்க நெறிகளையும் ஆசாரங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முன்பே கூறியதுபோல, அக்கால்ச சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய தேவை இருந்ததனால் போலும், புலவர்கள் இந்நூல்களை இயற்றினர்.

ilakkiyam1திருக்குறள், நாலடியாருக்குப் பிறகு மூன்றாவதாக வைக்கக்கூடிய அற நூல் பழமொழி என்பது. நானூறு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு பழமொழி அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். தம் காலத்தில் வழங்கிய பழமொழிகளைக் கருவியாகக் கொண்டு தமது அனுபவங்களைப் புலப்படுத்தியிருக்கும் வகையினை நோக்கும்போது அவர் ஒரு பெரும்புலவர் என்பது தெரிகிறது. இந் நூலின் பழமொழிகளின் உதவிகொண்டு, இந்நூல் எழுந்த காலத்தில் தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையினை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். இந்நூல் செய்யுள்களுக்கு உதாரணமாக ஒன்றைக் காணலாம்.

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதை தன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும் தன் வாயால் கெடும்.

தவளையும் தன் வாயாலே கெடும் என்ற பழமொழி இங்கு அமைந்துள்ளது.

அறநூல்கள் எழுந்த சங்கமருவிய காலத்தில் தமிழிலக்கியத்தில் வடமொழியின் சாயல் மிகுதியாகப் படியத் தொடங்கியது. இதனைப் பிற அற நூல்கள் காட்டுகின்றன. மேற்கண்ட மூன்று அறநூல்களுக்கும் பிற அற நூல்கள் இணையாக மாட்டா என்பதில் ஐயமில்லை.

இவற்றினுள், ஆசாரக்கோவை என்னும் நூலை எழுதியவர் பெருவாயின் முள்ளியார் என்பவர். ஆசாரம் என்பது ஒழுக்கம். ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறும் நூல் என்பது இதற்குப் பொருள். இவர் கூறும் ஆசாரங்கள் பல வடமொழி மரபைத் தழுவியவையாகவும், இன்றைக்குப் பொருந்தாதவையாகவும் உள்ளன.

அறநூல்-நீதிநூல் என்ற வேறுபாடு இங்குதான் எழுகிறது. அறங்கள் எல்லாக் காலத்திற்கும் உலகினர் யாவர்க்கும் பொதுவாகப் பொருந்தும் கருத்துகளைக் கூறுபவை. நீதிநூல்கள் சிலர் பின்பற்றவேண்டிய அந்தந்தக்கால, இட ஒழுக்கங்களைக் கூறுகின்றன. சான்றாக, மக்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பது அறக்கருத்து. ஆனால் காலை ஐந்து மணிக்குத்தான் எழவேண்டும் என்பதோ கிழக்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்பதோ அறக்கருத்து அல்ல, சிலருக்குரிய ஒழுக்கம்-அதாவது நடத்தைமுறை.

பதினெண்கீழ்க்கணக்குக் காலப்பகுதிக்குப் பின் தோன்றிய நூல்களை அற நூல்கள் என்பதில்லை. நீதிநூல்கள் என்பதே வழக்கு.

பிற்காலத்தில் வாழ்ந்த ஒளவையார் ஒருவரோ, அப்பெயருடைய சிலரோ, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இவை 1950கள் வரை சிறுவர்க்குத் தொடக்கத்தில் சொல்லித் தரப்படுபவையாக அமைந்திருந்தன.

ஆத்திசூடி என்ற நூல், நூலின் முதல் தொடரால் பெயர்பெற்றது. “ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்பது அத்தொடர். ஆத்திசூடி என்றால் ஆத்தி மாலையைச் சூடிய சிவபெருமான் என்பது பொருள். தனித்தனி ஒற்றை அடிகளாக அமைந்த 109 பாட்டுகள் இதில் உள்ளன. அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் எனப் பெரும்பாலும் அகரவரிசைப்படி இவ் ஓரடிச் செய்யுள்கள் அமைந்துள்ளன. இந்நூல் பெற்ற பெருவரவேற்பால் பிற்காலப்புலவர்கள் பலரும் அவரவர் பாணியில் புதிய ஆத்திசூடிகளை இயற்றியுள்ளனர். குறிப்பாக, பாரதியாரும், பாரதிதாசனும் இயற்றிய புதிய ஆத்திசூடிகள் புகழ்பெற்றவை.

கொன்றைவேந்தன் என்ற நூலும் முதல் தொடரால் பெயர்பெற்ற நூலே. “கொன்றைவேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” என்பது இதன் முதல் செய்யுள். கொன்றை வேய்ந்தவன் என்ற தொடர் கொன்றை வேந்தன் ஆகிறது. சிவபெருமானைக் குறிக்கும். இந்நூலிலும் 91 ஓரடிப்பாக்கள் உள்ளன. சந்தத்தோடு சிறுவர் சிறுமியர் தமிழையும் ஒழுக்கத்தையும் கற்பதற்கு உகந்த நூல் இது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

இல்லறம் அல்லது நல்லறம் அன்று

என இப்பாக்கள் செல்கின்றன. திருக்குறளின் பிரதிபலிப்பாக அதிகமும் இவ் ஓரடிச் செய்யுட்கள் அமைந்துள்ளன.

மூதுரை என்ற நூலின் பிரபலமான பெயர், வாக்குண்டாம் என்பது. இதுவும் முதற்செய்யுளான “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கும் பிள்ளையார் வாழ்த்தின் முதல்தொடரைக் கொண்டு அமைந்தது. இதில் 91 வெண்பாக்கள் உள்ளன.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

என்பது இதில் ஒரு செய்யுள். அதாவது குளத்தில் நீர் அற்றவுடனே பறந்துபோய் விடுகின்றனவே, அப்படிப்பட்ட பறவைகள் போன்றவர்கள் உறவினர் ஆகமாட்டார்கள். நீர் அற்றாலும் அந்தக் குளத்திலேயே இருக்கின்றனவே, கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்கள், அப்படிப்பட்டவர்கள்தான் நல்ல உறவினர்கள்.

நல்வழியில் கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் உள்ளன.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்துபோம்.

என்பது இதிலுள்ள ஒரு செய்யுள். பசிவந்தால் மேற்கண்ட பத்தும் இருக்காதாம்!

அருங்கலச் செப்பு என்ற நூல் சமணர் ஒருவரால் இயற்றப்பட்டது எனத் தெரிகிறது. இதில் அருகன் துதி உட்பட 182 குறள் வெண்பாக்கள் உள்ளன. இதுவும் நல்லதோர் அறநூலாகும்.

மெய்ப்பொருள் காட்டி, உயிர்கட்கு அரணாகித்

துக்கம் கெடுப்பது நூல்

என்பது இதிலுள்ள ஓர் குறட்பா. ஒரு நல்ல நூல் என்பது மெய்ப்பொருளை விளக்குவதாகவும், உயிர்களுக்கு உறுதிப் பொருளை உணர்த்துவதாகவும், துக்கத்தைக் கெடுப்பதாகவும் அமையவேண்டும் என்பது கருத்து.

அறநெறிச்சாரம் என்பது முனைப்பாடியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் மொத்தம் 266 வெண்பாக்கள்.

பலகற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்.

என்பது இதிலுள்ள ஒரு செய்யுள்.

பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை என்னும் நூலை எழுதினார். இதற்கு நறுந்தொகை என்றும் பெயர். இதில் ஓரடி அறிவுரைகளாக 82 உள்ளன.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

கல்விக்கழகு கசடற மொழிதல்

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்

போன்ற நல்ல அறிவுரைகள் இதில் உள்ளன. சில அறிவுரைகள் இரண்டு அடிகளாகவும் அமைந்துள்ளன. சான்றாக,

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும

அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே, மெய்போலும்மே.

உயர்ந்த அறிவுரைகள் அடங்கிய நூல் இது.

காசிக்குச் சென்று மடம் அமைத்துத் தமிழ்பரப்பிய குமரகுருபரர் இயற்றிய நூல் நீதிநெறி விளக்கம் ஆகும். கடவுள் வாழ்த்து உட்பட 101 வெண்பாக்கள் இதில் உள்ளன.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்.

என்பது இதிலுள்ள நன்கு அறியப்பட்ட செய்யுள்.

 வீரசைவத் துறவியான சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல் நன்னெறி. கடவுள் வாழ்த்துடன் 41 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

பிற்காலப் புலவரான உலகநாத பண்டிதர் என்பார் இயற்றிய நூல் உலகநீதி. 13 விருத்தப்பாக்களை உடைய நூல் இது. வேண்டாம் என எதிர்மறையாகவே அறிவுரை புகலும் நூல் இது. எல்லாப் பாடல்களும் முருகனை வாழ்த்துபவை.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் சொல்வாரோடு இணங்கவேண்டாம்

போகாத இடந்தனிலே போகவேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

பல சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் இது.

நீதிவெண்பா என்ற நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அதில் சிறந்த கருத்துகளை உடைய செய்யுள்கள் பல உள்ளன.

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் – நன்மொழியே

ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான்

ஏது அபராதம் செய்ததின்று.

(கர்த்தபம்-கழுதை, அபராதம்-தீமை)

என்பது இந்நூலிலுள்ள ஒரு பாட்டு. இனிமையாகப் பேசுவதின் நன்மையை இது சொல்லுகிறது. இன்னொரு பாட்டு சாதியால் இழுக்கில்லை என்பதை உணர்த்துகிறது. தாமரை, முத்து, கோரோசனை, பால், தேன், பட்டு, புனுகு, சவ்வாது, அழல் ஆகியவை எங்கே பிறந்தன என்று யாரும் நோக்குவதில்லை, எள்ளுவதில்லை. ஆகவே “நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் என்?” என்று கேள்வி எழுப்புகிறது.

இவற்றைத் தவிர சிறந்த நீதி ஒழுக்கங்கள் அடங்கிய நூல்கள் இன்னும் பல உள்ளன. சான்றாக

முத்துராமலிங்க சேதுபதி இயற்றிய நீதிபோத வெண்பா

செழியதரையன் என்பார் இயற்றிய நன்னெறி

திருத்தக்க தேவர் இயற்றிய நரிவிருத்தம்

கபிலர் அகவல்

இராசகோபால மாலை

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூல், பெண்மதி மாலை

ஆத்திசூடி வெண்பா

ஆத்திசூடி புராணம்

போன்ற பல நூல்களைக் குறிப்பிடலாம்.

இடைக்காலத்தில் இவை தவிரச் சதகங்கள் எனப்படும் நூல்கள் எழுந்தன. சதகம் என்றால் நூறுபாடல்களைக் கொண்டது என்று பொருள். சதகங்களின் பாடல் ஒவ்வொன்றும் இறைவனைப் போற்றுவதாக இருந்தாலும், அது இறுதி அரையடியில் மட்டுமே இடம்பெறும். பிற மூன்றரை அடிகளும் பல அறக்கருத்துகளையும் நீதிக்கருத் துகளையும் உணர்த்தும்.

குருபாத தாசர் இயற்றிய குமரேச சதகம்

அம்பலவாண கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்

சேலம் சிதம்பரப் பிள்ளை இயற்றிய கயிலாசநாதர் சதகம்

திருச்சிற்றம்பல நாவலர் இயற்றிய திருவேங்கட சதகம்

படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலையார் சதகம்

நாராயண பாரதியார் இயற்றிய கோவிந்த சதகம்

முத்தப்ப செட்டியார் இயற்றிய செயங்கொண்டார் சதகம்

யோகீச்வர ராமன் பிள்ளை இயற்றிய நம்பி சதகம்

வித்வான் கே. அருணாசலம் இயற்றிய திருவேரக சதகம்

பொன்னுசாமி சோதிடர் இயற்றிய கரிவரதப் பெருமாள் சதகம்

எனப் பல சதக நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றில் நீதிசதகம், குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் ஆகியவை அதிகம் பாராட்டப்பட்ட நூல்கள்.

மேலே சாதியில்லை என்றுரைத்த நீதி வெண்பாவின் கருத்தையே கூறும் குமரேச சதகப் பாடல் ஒன்றினை இங்குக் காணலாம்.

சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது திருமுடியின் மேலிருக்கும்

திகழ் சிப்பியுடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேலிருக்கும்

போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும்

புகலரிய வண்டெச்சிலான தேன் தேவர்கொள் புனித அபிடேகமாகும்

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவ்வாது புனுகு அனைவர்க்குமாம்

சாதி ஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல் வட்டமன்றோ

மாற்றிச் சரத்தினை விபூதியால் உடல்குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே

மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலைமேவு குமரேசனே.

தனிப்பாடல் திரட்டிலும் நீதிக்கருத்துகள் கொண்ட செய்யுள்கள் பல உள்ளன. சான்றாகப் பிற்கால ஒளவையார் ஒருவர் பாடிய வெண்பா இது.

நிட்டூரமாக நிதி திரட்டும் மன்னவனும்

இட்டதனை மெச்சா இரவலனும் – முட்டவே

கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய

வேசியும் கெட்டுவிடும்.

இவற்றைத்தவிர, பிறமொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்பு நீதி நூல்கள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை-

வீரமார்த்தாண்ட தேவர் இயற்றிய பஞ்சதந்திரச் செய்யுள்

செழியதரையன் பஞ்சதந்திரம்

சாணக்கிய நீதிவெண்பா

நன்மதி சதகம் அல்லது சுமதி சதகம்

மனுநீதி சதகம்

மனுநீதி சாத்திரம், விதுரநீதி, பீஷ்மநீதி, சுக்கிரநீதி,

அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம்,

பர்த்ருஹரி நீதி சதகம், நீதிசாரம்

ஆகியவை. இவையே அன்றித் தமிழில் தொகை நூல்கள் (அதாவது பிற நூல்களிலிருந்து பாக்களை எடுத்துத் தொகுக்கப்பட்ட நூல்கள்) பல உண்டு. இம்மாதிரி நீதித் தொகை நூல்களாக, விவேக சிந்தாமணி, தனிப்பாடல் திரட்டு, நீதித் திரட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். விவேக சிந்தாமணியின் ஒரு பாட்டு இது.

கற்பூரப் பாத்தி கட்டி கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி

பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்

சொற்பேதையர்க்கு இங்கு அறிவு இனிதாக வருமெனவே சொல்லினாலும்

நற்போதம் வாராது அங்கவர் குணமே மேலாக நடக்குந்தானே.

இவ்வாறே, சித்தர் பாடல்கள், திருமூலரின் திருமந்திரம், தாயுமானவர், வள்ளலார், மஸ்தான் சாகிபு போன்ற பல கவிஞர்களின் பாடல்களையும் நோக்கும் போது அவற்றுள் அறக்கருத்துகள் நிறைந்து கிடப்பதனைக் காணலாம். அதனால்தான் முன்பு தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதுமே அறநூல்களால் நிறைந்துள்ளது என்று சொல்லப்பட்டது. அறநூல்களைப் பயிலுவதும் பாடமாக வைப்பதும் பயன்படுத்து வதும் இன்று குறைந்துவிட்டது என்பது வருந்தத்தக்கது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை இந்த நூல்கள். பழைய அனுபவங்களின் சாரங்கள். தமிழர்கள் இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், வெறும் வாழ்க்கைப் பயனும் பணமும் கருதி ஆங்கிலத்தை மட்டுமே கற்பிக்காமல், நம் தமிழ்ச் சிறுவர்சிறுமியர்க்கு இவற்றைக் கட்டாயம் கற்பிக்கவேண்டும், தொகுதியாக்கி வெளியிட்டுக் காப்பாற்ற வேண்டும்.