ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் மூன்றாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது இறுதிப்பகுதி.)

மாற்றுக் கலாச்சாரம்

எந்தக் கலாச்சாரமும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதன் சுதந்திரமாக வாழ இயலாத ஒரு சமூகத்தில், அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத ஒரு சமூகத்தில், என்ன விதமான கலாச்சாரம் மலரமுடியும்? ஆகவே இன்றைய ஆதிக்கக் கலாச்சாரம், மக்களின் சமத்துவத்தை அங்கீகரிக்காத கலாச்சாரம், பலரை ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மூடர்களாகவும் வைத்திருக்க முனையும் ஒரு கலாச்சாரம் – சிறுபான்மையினருக்கே எல்லாச் செல்வமும் என்று சேகரிக்கும் கலாச்சாரம் – பணத்தின் பெயரால் மனிதனைப் பேயன் ஆக்கும் கலாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு இன்று தேவை ஒரு மாற்றுக் கலாச்சாரம்.

இன்றைய ஆளும் கலாச்சாரத்திலுள்ள, அதாவது வணிகக் கலாச்சாரத்திலுள்ள குறைகளையெல்லாம் போக்கி, யாவருக்கும் சம வாழ்வும் சந்தோஷமும் அளிப்பதற்கான அடிப்படை கொண்டதாக அது இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாற்றுக் கலாச்சாரம் ஒரு சில நாட்களில், ஆண்டுகளில்கூட உருவாகிவிட முடியாது. பல ஆண்டுகளாகச் சேர்த்த தீமைகளை ஒருசில நாட்களில் அழித்துவிட முடியாது. மனித மனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றம் அடையும்.

ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால், அதாவது இப்போதுள்ள மதிப்புகள் அடியோடு மாறவேண்டுமானால், முதல் உலக, இரண்டாம் உலக நாடுகளின் இருவித பாதிப்புகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். ஒன்று, அவற்றின் பொருளாதார பாதிப்புகள். இரண்டு, அவற்றின் கலாச்சார மதிப்புகள். மேற்கத்திய கலாச்சார மதிப்புகளுக்குப் பதிலாக நமது சொந்தமான கலாச்சார மதிப்புகளில் பயன் உள்ளவற்றை நாம் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கான கல்வி ஆயத்தம், மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், இரு தளங்களில் செயல்பட வேண்டும். பெரும்பாலான மக்கள் கல்வியறிவும் சிந்தனா சக்தியும் பெறும்போது அவர்களை ஏமாற்ற, ஒடுக்க எவராலும் இயலாது. அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி நல்கும் முயற்சிகள் பெருமளவில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் நடைபெற்று வர வேண்டும்.

இன்னொரு தளத்தில் ஆள்வோருக்கு அறிவு புகட்டலையும் அவர்களது ஆதிக்க முயற்சிகளுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு வருதல் வேண்டும். ஆள்வோரும் மக்களே. அவர்களது மனமாற்றமும் இன்றியமையாதது. உதாரணமாக இன்று சர்வதேச அரங்கில் போரின்றி இருத்தல், சிறுபான்மை இனங்களை மதித்தல் போன்ற வற்றைச் செய்ய மக்களின் விழிப்புணர்ச்சி மட்டும் போதாது. இந்திய மக்கள் எவ்வளவுதான் இராணுவச் செலவைப் பற்றி வருந்தினாலும், ஆட்சியிலுள்ளவர்கள், பாகிஸ்தான் படை பலத்தைப் பெருக்குகிறது, சீனா பெருக்குகிறது என்பது போன்ற காரணங்களைக் காட்டித் தங்கள் படைபலத்தைப் பெருக்கவே செய்வர். அமெரிக்கா போன்ற ஆயுதவளர்ச்சி நாடுகள் இம்மாதிரிப் போக்கை ஒவ்வொரு நாட்டிலும் தூண்டிவிடத் தான் செய்யும். ஆகவே இதற்கு சர்வதேச அரங்கில், அனைத்து ஆள்வோருக்கும், குறிப்பாக முதல் உலக ஆள்வோருக்கும் விழிப்புணர்ச்சி இன்றியமையாதது. அனைவருமாகச் சேர்ந்துதான் படைக்கலங்களும் இராணுவமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வரமுடியும். இப்படி ஆள்வோர் தாமாக முடிவெடுக்கும்போது அவர்களுக்குச் சொந்த நலனைவிட நாட்டுநலன் முக்கியம் என்னும் விழிப்புணர்ச்சி அவசியமானது. இதற்கு மாற்றுக் கலாச்சாரச் சாதனங்கள், வெகுஜனச் சாதனங்கள் மிக முக்கிய மானவை. வெகுஜனச் சாதனங்களை மாற்றுக் கலாச்சாரத்தினர் கைப்பற்றினாலொழிய இன்று தேவைப்படும் மாற்றங்கள் நிறைவேறுவதற்கு வழியில்லை.

அழிந்துவரும் கலைகள்

ஒரு வணிக, மேற்சாதிக் கலாச்சாரக் கும்பல் மக்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம். இதனால் ஏற்பட்ட சீரழிவு, வாழ்க்கையின் அத்தனை துறைகளையும் பாதித்திருக்கிறது. மரபுரீதியாக வந்த பழக்க வழக்கங்கள், கலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு கள், மருந்துகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்தும் இன்றைய வணிகக் கலாச்சாரத் தின் கீழ் நொறுங்கிவிட்டன. மாற்றாக நமக்கு எதிரில் முன்வைக்கப்படுவன அமெரிக்க முன்மாதிரிகள் அல்லது ரஷ்ய முன்மாதிரிகள். நமக்கென ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் காப்பாற்றியிருக்கவேண்டியது காலனி யாதிக்கத்திலிருந்து நம்மை விடுபடத் து£ண்டிய தலைமை. ஆனால் இவர்கள் வெளிநாட்டு முன்மாதிரிகையே சார்ந்து விட்டார்கள். நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் அநேகமாக அழிந்துவிட்டன. நாட்டுப்பாடல்களைத் தேடி கிராமம் கிராமமாக அலைந்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது. தாலாட்டுப்பாடித் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைத்த தாய்மார்வம்சம் இன்று டேப்ரிகார்டரில் சினிமாப்பாட்டுகளைப் போட்டுக் குழந்தைகள் அழுகையை அடக்கும் காலமாக மாறிவிட்டது.

நமது பாரம்பரிய விளையாட்டுக்கலைகள்-சிலம்பம், வர்மக்கலை போன்றவை அழிந்து வருகின்றன. அதற்கு பதிலாக கராத்தேவையும் குங்ஃபூவையும் இரவல் வாங்கி அலைகிறோம். அவையும் திரைப்படங்களில் கவர்ச்சியோடு புகுத்தப்பட்டதனால். நம் கிராமங்களில் உடலுழைப்புக்கேற்ற கூழ் களி போன்ற சத்துள்ள உணவு வகைகள், நீராகாரம் உண்ணுதல் போன்ற பழக்கங்கள், ஒரு தலைமுறைக்குமுன் இருந்தவை இன்று கேவலமாகக் கருதப்படுகின்றன. எவையெல்லாம் நம் உடல் வளத்துக்கு இசைய நல்ல பண்புகளாக இருந்தனவோ அவறைறயெல்லாம் இழந்துவிட்டு, காப்பி, டீ, புகையிலை, சிகரெட், குடி போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டு அலைகிறோம். மேகி, ரஸ்னா கலாச்சாரம் நம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது. நம் இளைஞர்கள் போதை மருந்துகளைத் தேடிச் செல்கிறார்கள்.

————————————
மேற்குப் பண்பாட்டின் ஆதிக்கமானது மூன்றாம் உலக மக்கள், தங்கள் சொந்தப் பண்பாடிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முகம் திருப்பிக்கொள்ளுமாறு செய்திருக்கிறது. மேற்கு நாட்டுச் செல்வாக்குள்ள புத்தகங்களும் பத்திரிகைகளும் சந்தையில் குவிந்துள் ளன. ஒரு வலுவான பண்பாட்டு மரபின் இடத்தை ஒரே முகம் கொண்ட, நுகர்வை யே நோக்கமாகக் கொண்ட ஒரு பண்பாடு பிடித்துள்ளது.
———————–

நமது சொந்தமான இசை மரபுகள், நாட்டியம், கூத்து ஆகியவையும் வறண்டு விட்டன. கர்நாடக இசை ஒரு சிறு மேற்குழுவிடம் சேர்ந்ததன் காரணமாகத் தெலுங்கு இசையாக மாறிவிட்டது. இதனால் அது பரவலாகக் கூடிய அரிய வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்குப் பாடல்களை அர்த்தமற்றுப் பாடும் வித்வான்களிடம் தன் ஜீவனை வெறும் தொழிலாகிவிட்டது. இதற்கும் மேலாக வாய்பாடுகள் போல ஸ்வரக் கோவைகளை உதிர்த்தல், குரல் வளமின்மை போன்ற கோளாறுகள் காரணமாகவும், சமூகச் சார்பின்மை காரணமாகவும் தேய்ந்து வருகின்றன. மாற்றுநிலையில், நமது மக்கள் திரைப்படப் பாடல்களுக்கு ஒரேமூச்சாக அடிமைப்பட்டுவிட்டனர். நாட்டார் பாடல்களோ கேவலம் எனக் கருதப்பட்டு வெகுஜனச்சாதனங்களில் இடம் பெறுவது அரிதாகிவிட்டது. நாட்டியம் இசையின்றி இயங்கமுடியாத துறையாக இருப்பதால், இசையை அடிமை கொண்டவர்களுக்கே தானும் அடிமையாகிவிட்டது. இன்று பரத நாட்டியம் வெறும் உடற்பயிற்சிபோல அர்த்தமற்று நிகழ்த்தப் படுகிறது. மேலும் கடவுளைப்பாடுதல், காமத்தை அபிநயித்தல் என்ற துறைகள் தவிர (பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே) வேறு பரதநாட்டியத் துறைகள் அறவே இல்லை. ஆகவே பரதநாட்டியம் இன்று வெறும் காம அங்க அசைவுகளை மட்டுமே கொண்ட ஒரு செயற்கையான பயிற்சியாகிவிட்டது.
இந்தக் கலைகளின் நலிவைப் பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் ஏதோ உன்னதம் போல செயற்கையாக வானொலி, தொலைக்காட்சி, (ஜனரஞ்சகமான முறையில்) திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன. இவற்றைப் பற்றிய கவலையையும் முதலாளித்துவ நச்சுவளையம் கவர்ந்துகொண்டு விட்டது.
இலக்கியமும் இன்றைய கலாச்சார நலிவிலிருந்து தப்பிக்கவில்லை. வெகுஜனச் சாதனங்களின் ஆதிக்கம் கவியரங்குகள், பட்டிமன்றங்கள் என்று மக்களைக் கவரும் விஷயங்களாக மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்பே பிரதானம் என்றும், பணமே முக்கியம் என்றும் கருதும் வணிகக் ‘கவிஞர்கள்’ பலர்-மேத்தா, வைரமுத்து என்று உருவாகி விட்டனர். மரபின் அழிவுக்கு எதிராகக் கொடிபிடித்த புதுக்கவிதை வெறும் அலங்காரச் சொற்குவியலாக, துதிபாடுவதாகத் தேய்ந்துவிட்டது. இதை எதிர்க் கும் வன்மை மிகச் சிறுபான்மையாக உள்ள கலாச்சார விழிப்புக் கொண்டோரிடம் இல்லை. இன்றைய மாணவர்களோ நாவல்கள் என்றால் ராஜேஷ்குமார் முதல் அனுராதா ரமணன் வரை பல பெயர்களைச சொல்கிறார்கள், தப்பித் தவறிக்கூடி நல்ல நாவலாசிரியர்கள் பெயர்கள் அவர்கள் கண்ணிலும் காதிலும் படுவதில்லை. நாடகமோ சபாக்காரர்களிடம் தஞ்சமடைந்து வெறும் துணுக்குத் தோரணங்கள் ஆகி விட்டது.

மாற்றுக் கலாச்சாரக் கூறுகள்

சுயநலம், பொருளாசை, சிந்தனையை மழுங்கடிப்பது, மற்றவர்களை அடிமைப்படுத்துவது-இவை ஆதிக்கக் கலாச்சாரத்தின் பண்புகள். இவற்றுக்கு எதிரானவை மாற்றுக் கலாச்சாரக் கூ.றுகள். அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் மாற்றுக் கலாச்சாரப் பண்புகளை அதிகம் காணமுடியும். எனவே மாற்றுக் கலாச்சாரம் என்பதை அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்திலிருந்து தொடங்கவேண்டும். இந்தக் கலாச்சாரக் கூறுகளும் அழிந்து கொண்டிருந்தாலும், ஒரு சில இடங்களிலேனும் இவற்றை இன்னும் காணமுடிகிறது.

குழுச்செயல்பாடு

மக்கள்-குறிப்பாக அடித்தட்டு மக்கள்-தனித்தனி குடும்பமாக வாழ்ந்தாலும் தாங்கள் வாழும் கிராமத்தில் அல்லது பகுதியில் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர். ஒரு வீட்டில் திருமணம் என்றால் சுற்றியிருப்பவர்கள் தங்கள்வீட்டுத் திருமணமாக அதை நினைத்து உதவுகின்றனர். திருமண வீட்டை அலங்கரிப்பது, உணவு தயாரிப்பது, பரிமாறுவது, திருமணத்திற்கு வருபவர்கள் தங்கவும் உணவுகொள்ளவும் தங்கள் வீடுக ளை ஒதுக்கித் தருவது எனப் பலவகைகளில் தங்களையும் அவர்களோடு இணைத்துக் கொள்கின்றனர்.
சாவுபோன்ற துக்கக் காரியங்களில் சுற்றி உள்ளவர்கள் அந்த இழப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். தகவல் கொடுப்பது, இறுதிச் சடங்கு ஏற்பாடு, சாவு நிகழ்ந்த வீட்டில் வந்தவர்களுக்கு உணவு தயாரித்துவந்து கொடுப்பது இவ்வாறு துக்கத்தில் உள்ளவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். ஆலய விழாக்களை ஊரே கூடி ஊர்த்திருவிழாவா கக் கொண்டாடுகின்றனர். திருவிழாவுக்கான செலவுகளையும் வரிசெலுத்திப் பகிர்ந்து கொள்கின்றனர். திருவிழா அன்று ஒரே இடத்தில் ஊர்முழுவதற்கும் சமையல் செய்து சமபந்தியாக அனைவரும் உண்கின்றனர். (உதாரணம், முத்தழகுப்பட்டி செபஸ்தியார் திருவிழா).

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் பதிலாள்முறை பின்பற்றப்படுகிறது. ஒருவருடைய வயலில் நாற்றுநடுதல் அல்லது அறுவடை போன்ற வேலைகள் இருக்கும்போது மற்றவர்கள் அவர் வயலில் வேலைசெய்வார்கள். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் வயல்வேலைகள் இருக்கும்போது மற்றவர்போய் அங்கு வேலை செய்வது வழக்கமாக உள்ளது. இம்மாதிரியான குழுச் செயல்பாடுகளில் பொதுநலம் காணப்படுகிறது. மற்றவர்களை மனிதனாக மதிக்கும் சமத்துவநோக்கும், ஜனநாயகப் பண்பும் அதிகம் இடம்பெறுகின்றன. சாதி சமய பொருளாதார வேறுபாடுகள் பின்தள்ளப்படுகின்றன. மக்கள் சக்தியின் பலம் வெளிப்படுகிறது.

கலைகள்
அடித்தட்டு மக்களின் கலைகள் எளியவை, அனைவரும் பங்கேற்கக்கூடியவை. இதற்கு உயர்கலைகள் போல் வருடக்கணக்கான தனிப்பயிற்சி தேவையில்லை. மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி யதார்த்தமாகவும் உள்ளன. கும்மி, ஒயிலாட்டம் போன்றவை எல்லா மக்களும் கலந்துகொள்ளும் எளிய வடிவங்கள். திருமணச் சடங் கின்போது பாடப்படும் பாடல்கள், ஒப்பாரி, வயல்களில் வேலைசெய்யும்போது பாடும் பாடல்கள் போன்றவை குழுவாக அனைவரும் சேர்ந்து பாடுகின்றவை. தங்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையிலும் உள்ளன. மக்களுக்குத் தீங்கு செய்பவர்களையும் ஆதிக்க சக்திகளையும் ஒழிக்கவேணடும் என்ற கருத்துடைய மதுரைவீரன் கதை அண்ணன்மார் கதை போன்றவை கூத்தாகவும் நாடகமாகவும் நடத்தப்படுகின்றன.

அடித்தட்டு மக்களின் கலைவடிவங்களுக்கு அதிக பொருட்செலவும் நீண்ட பயிற்சியும் தேவையில்லை எனவே எல்லா மக்களும் இக்க¬ல் வடிவங்களில் பங்கேற்கவும் இவற்றைச் சொந்தமாகக் கொள்ளவும் முடிகிறது. வட்டமாக நின்று பலசமயங்களில் நிகழ்த்தப்படுவதால் இவற்றில் யாருக்கும் கூடுதல் மதிப்பு கிடையாது, சம மதிப்புதான் உண்டு. மக்கள் அனைவரும் கூடிப் பார்வையாளர்களாக இருந்தாலும் அவர்கள் பங்கேற்கவும் முடியும். தனிமனிதவாதம் இவற்றில் இல்லை. கலைகளில் உள்ளடக்கம் யதார்த்தமாக இருப்பதால் மூளையை மழுங்கடிப்பதில்லை. மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை எழுப்புகின்றன. நடத்துவோரும் பார்வையாளரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் இக்கலைகள் ஜனநாயக வடிவங்களாக உள்ளதைக் காணமுடிகிறது.

நகர்ப்புற நடுத்தர வர்க்கச் சிந்தனையாளர்கள் சிலரால் அடித்தட்டு மக்களின் கலை வடிவங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, கூத்தாகவும், பூமிநாடகமாகவும் விழிப்புணர்வுப் பாடல்களாகவும் மறுவடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு மக்களன் கலாச்சாரத்தில் அடிமைத்தனக் கூறுகளும் சில உள்ளன. அவற்றை நீக்கிவிட்டு சமத்து வமன சமுதாயத்தை உருவாக்குவதற்கான கலாச்சார அம்சங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுக் கலாச்சாரத்தை வலியுறுத்தக்கூடிய, அதற்குத் தேவையான கருத்துகளை அளிக்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் தோன்றி வருகின்றன. சோதனை முயற்சியாக நாடகங்கள், திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஊக்குவிக்க வேண்டும். சமபங்கீடு இல்லாததால் காணப்படும் ஏற்றத்தாழ்வான, அநீதியான சமூக அமைப் பைக் கட்டிக்காக்கும் கலாசசாரக் கூறுகளான மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஏற் றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும்படி மாற்றப்பட வேண்டும்.

சமய இயக்கங்கள்

பொதுவாக மதங்கள், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம், சித்தர் வழிமரபு, தமிழ்ச் சைவம், தமிழ் வைணவம், வீரசைவம், காஷ்மீர சைவம், அய்யாவழி போன்றவை-அன்றன்றைக்கு இருந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தோன்றியவையே. இவற்றை உண்மையில் மக்கள் இயக்கங்களின் தொடக்கம் என்று கூறலாம். நாளடைவில் இந்த இயக்கங்கள் ஆதிக்க அமைப்புகளால் சிறைப்பிடிக்கப்பட்டு, சாரம் அற்றுப் போயின. ஆனால் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டன என்று சொல்லமுடியாது. சான்றாக ஒரு சில மதங்களின் தோற்றங்களைக் காணலாம்.

பௌத்தம்: வேதகாலத்தில் சாதியும் யாகச்சடங்குகளும் பெரிய அமைப்புகளாக உருவெடுத்தன. சாதி அமைப்பிற்கும் சடங்கு வழிபாட்டு முறைக்கும் எதிராகத் தோன் றியது பௌத்தம். சமூகக் கொடுமையான சாதியை எதிர்த்து சகோதர உணர்வை வலி யுறுத்தியது. பௌத்த இயக்கத்தில் வழிபாடோ குருக்களோ இல்லை. அன்பு முதன்மை யாக்கப்பட்டது.
ஆனால் வேதங்களுக்கு எதிராக எழுந்த பௌத்த இயக்கம் பிற்காலத்தில் உபநிடதங்க ளால் உள்வாங்கப்பட்டது. பொருளாதார அமைப்பு நிலவுடைமை சார்ந்ததாக மாறிய தால் வணிகரின் சமயமான இது மழுங்கிப்போயிற்று. புத்தர் கடவுளாக்கப்பட்டு விஷ்ணுவின் அவதாரம் ஆனார்.

இஸ்லாம்: மெக்கா வியாபார மையமாகியது. அங்கிருந்த மக்கள் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்பட்டனர். ஏழை பணக்காரன் வேறுபாடு கூர்மையாகியது. இந்தக் காலத் தில் தோன்றிய நபி, ஏற்றத்தாழ்வைக் கடவுள் எதிர்க்கிறார் என்றும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். சகோதரத்து வத்தை முக்கியமாக அவர் வலியுறுத்தினார். பின்னர் வந்தோர் இதை நிறுவனச் சமய மாக மாற்றியதோடு தீவிரவாதத் தன்மையை இணைத்துவிட்டனர்.

கிறித்துவம்: மதத்தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் போன்றவர்களால் இரட்டை ஒடுக்கு முறை நிலவி வந்த காலத்தில் இயேசு தோன்றினார். இந்த இரு ஒடுக்கு முறைகளை யும் எடுத்தெறிந்து சமத்துவ சமுதாயத்தை (இதை இறையரசு என்றார்) உருவாக்க முயற்சி செய்தார். இயேசுவுக்குப் பின்னும் அவரது இயக்கம் ஏழைகளின் இயக்கமாக வே இருந்தது. ரோமில் அடிமைகளின் இயக்கமாகவும் இருந்தது. நான்காம் நு£ற்றாண் டில் கான்ஸ்டான்டின் பேரரசன் கிறித்துவனாகியபோது கிறித்துவமும் ஆதிக்க மதம் ஆகியது.
இன்று இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாம் காணும் கலாச்சாரங்கள் நம் மீது திணிக்கப்பட்டவையே. ஆரியர், பிராமணர், கிரேக்கர், ரோமானியர், அராபியர், இஸ்லாமியர், ஐரோப்பியர் ஆகியோரது பண்பாட்டுப் படையெடுப்புகள் நமது பண்பாட்டைச் சீரழித்து ஆதிக்க சக்திகளுக்கு உதவியாக மாற்றியுள்ளன. நாம் இழந்த மாற்றுக் கலாச்சாரக் கூறுகளைத் தமிழ்ப்பண்பாட்டிலிருந்தே தேடி எடுத்துப் பெற்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம், மக்கள் கலாச்சாரத்தைக் காப்போம்.


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது மூன்றாவது பகுதி. திரைப்படங்கள் முதல், ஆதிக்கக் கலாச்சாரத்தின் பொருளாதாரக் கூறுகள் வரை இதில் இடம்பெறுகின்றன. நான்காம் இறுதிப்பகுதி மாற்றுக் கலாச்சாரம் பற்றியது.)

திரைப்படங்கள்
—————
வெகுஜனச் சாதனங்கள், குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டும்-போலியான தேவைகளை உருவாக்குகின்றன. ஒற்றைப் பரிமாணச் சிந்தனையை உருவாக்குகின்றன. மக்களை இயல்பாகத் தங்கள் பணிகளிலும் சமூக உறவுகளிலும் ஈடுபடமுடியாதவாறு செய்கின்றன. இன்றைய சமூகம், மனிதத்தன்மையை அற்றுப் போகச் செய்து, மனிதர்களை அந்நியப்படுத்துகின்றன. நவீன தொடர்புச் சாதனங்கள் மக்கள் வாழ்க்கையிலுள்ள குறைகளை மறைக்க அல்லது தங்களையே மறந்துபோக உதவி செய்கின்றன.
-ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஒற்றைப் பரிமாண மனிதன்.
————————————
திரைப்படம் போன்ற வெகுஜனச் சாதனங்கள், நமது யதார்த்த வாழ்வைவிட நாடகப் பாங்கானவையாகவும், உள்ளக்கிளர்ச்சி தருபவையாகவும் உள்ளன. மக்களை ஹீரோ அல்லது முக்கியப் பாத்திரத்துடன் எளிதில் ஒன்றிவிடச் செய்கின்றன. நமது சமூகத்தில் சினிமாவில் காட்டப்படுவது போன்ற கடற்கரையில், பூங்காக்களில் ஆடிப் பாடும் காதல், தீயவர்களை அடித்து நொறுக்கும் அடிதடிச்சண்டைகள் போன்றவை இல்லாதவை. திரைப்படங்களில் இவற்றை கனவாகக் கண்டு மக்கள் தங்களை மறக் கின்றனர். பெண்ணின் உடல் ஆணுக்கு அந்நியப்படுத்தப்பட்ட இந்தச் சமூகத்தில், திரைப்படங்களில் வரும் நெருக்கமான காதல்காட்சிகள் ஆட்டக் காட்சிகள் போன்றவை இரசிகர்களால் விரும்பப்படுவதில் ஆச்சரியமில்லை. பெண்ணின் தோழமை மறுக்கப்பட்டு, நுகர்பொருளாக்கப்பட்ட சமூகத்தில், பெண்மையத் திரைப்பட வியாபாரம் செழிப்பதில் வியப்பேது?
திரைப்படங்களின் அபாயம், அவை தரும் படிமங்களை மக்கள் உண்மை என நம்ப வைப்பதில் உள்ளது. எனவேதான் தி¬ப்படம் சார்ந்த எல்லாருமே தங்கள் இமேஜ் பற்றிக் கவலைப்படுகிறார்கள். (அந்த இமேஜைப் பின்னர் அரசியலிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்). திரைப்படங்கள் நமது புலனுணர்வுகளை உண்மையிலிருந்து பொய்யைப் பிரித்துக்காண முடியாத விதத்தில் குழப்பிவிடுகின்றன. நமது அரசியலை இத்தகைய பொய்ம்மை தீர்மானிப்பதில் பெரும்பங்கு கொள்கிறது. நம் திரைப்படங் கள் யதார்த்தம் என்ற பெயரில் மீயதார்த்தத்தை, கனவை வியாபாரமாக்குகின்றன. மற்றப்படி விளம்பரங்களுக்குச் சொன்ன அனைத்தும் திரைப்படங்களுக்கும் பொருந்தக்கூடியவையே. ஒளிந்திருந்து அல்லது மறைவிலிருந்து பார்க்கும் காட்சி-gaze என்ற முறையில் இதனை விரிவாக நோக்கவேண்டும். திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக, தனியாக வேறிடத்தில் பேசுவோம்.

போஸ்டர் கலாச்சாரம்

திரைப்பட, அரசியல் துறைகளோடு தொடர்புடைய, நம் கலாச்சாரச் சீரழிவை எடுத்துக்காட்டும் இன்னும் இரு சாதனங்கள் வீடியோக் காட்சிகளும் போஸ்டர்களும். போஸ்டர் கலாச்சாரம் உலகிலேயே, இந்தியாவிலேயே, தமிழகத்துக்குத்தான் அதிகம் உரியது. இங்குதான் அரசியல்வாதிகள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது முதற் கொண்டு திரைப்பட விளம்பரம் வரை போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பூப்படைந்தால் போஸ்டர், செத்துப்போனாலும் போஸ்டர், வெளிநாடு சென்றால் போஸ்டர், எல்லாவற்றிற்கும் போஸ்டர். பலவண்ண, ஆளுயர போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுகின்றன. இவற்றின் ‘முன்னேற்றம்’தான் கட்அவுட்டுகள் வைப்பது, அலங்கார வளைவுகள் வைப்பது முதலியவை. இவை பொதுமக்களுக்குத் தரும் இடைஞ்சலுக்கு அளவே இல்லை என்றாலும் சுரணையிருப்போரும் நமக்கெதற்கு வம்பு என்று ரௌடியிசத்திற்கு பயந்து சகித்துக்கொண்டு போகவேண்டியிருக்கிறது. இவர்களால் நாசமாகும் சாலைகளுக்கு அளவே இல்லை. போக்குவரத்து நெரிசல்களுக்குக் குறைவே இல்லை.

வீடியோக்களும் ஒலிபெருக்கிகளும்
வீடியோக்களுடன் சேர்ந்து பார்ககவேண்டியது ஒலிபெருக்கி. நமது கிராமங்களின் திருவிழாக்களிலும் இவை இரண்டுமே இப்போது நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டன. ஒரு காலத்தில், சமூக உறவுக்கு அடிப்படையாகத் திருவிழாக்கள் இருந்தன. திருவிழாக் களைப் பொறுத்தவரை, ஏறத்தாழ பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்புவரை, உயர்சாதியினர், மத்தியதரத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்று அனைத்து வகுப்பி னரின் பங்கேற்பும் திருவிழாவில் இருந்தது. திருவிழா நடக்கும் இரவுகளில் தெருக்கூத்து அல்லது நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறுவதும் இயல்பாக இருந்தது. இன்றோ திருவிழாக்களின் முந்திய நாட்களிலிருந்து முடிந்த மறுநாள் வரை ஓயாமல் ஒலிபெருக்கிகள் ஆபாசமான பாட்டுகளை அலறிக்கொண்டே இருக்கின்றன. இவற்றுடன் இரவுகளில் தெருக்கூத்து போன்ற கலைகளுக்கு பதிலாக ஆபாச நடனங் கள் வேறு.
இந்த ஒலிபெருக்கிகள் ஏதோ ஓரிடத்தில் இருந்தால் பரவாயில்லை. அனைவர் காதையும் மனத்தையும் கெடுத்துக்கொண்டு, திருவிழா நடக்கும் கோயிலிலிருந்து வரிசையாகத் தெருவுக்குத் தெரு எனப்பல தெருக்களில் கோடிவரை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் ஒலித்தொல்லையிலிருந்து எவரும் மீளமுடியாது. இம் மாதிரித் தொல்லைகளால் திருவிழாக்களில் அநேகமாக மேல்சாதியினர் பங்கேற்பு அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைந்துபோய்விட்டது. படித்தவர்கள் இம்மாதிரித் திருவிழாக்களைப் பொருட்படுத்துவதே இல்லை. முழு அளவுக்கு (சாதியி லும் பொருளாதாரத்திலும்) தாழ்ந்த மக்களுக்கெனவே என ஆகிவிட்ட இத்திருவிழாக் களின் முக்கிய அம்சம், ஆபாச நடனங்கள், திரைப்படப் பாடல்களின் மறு நிகழ்வுகள், தெருக்கள்தோறும் வீடியோக்காட்சிகள். ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் இரண்டு மூன்று படங்கள். மக்களின் பொதுப் பங்கேற்பைக் குறைத்து, கனவுத்தன்மையை வளர்ப்பனவாகவே இவையும் அமைகின்றன. வீடியோக்காட்சிகளின் ஒலிவடிவமும் ஒலிபெருக்கியில் இணைக்கப்பட்டு அது எல்லார் து£க்கத்தையும் கெடுத்துக்கொண்டு ஊர்முழுவதும் அலறவேண்டும்.
நகரங்கள் கிராமங்கள் என்ற வேறுபாடின்றி மத்தியதரவர்க்கத்தினரை வீடியோ பாதிக் கிறது. இவை வாயிலாக விடுமுறை நாட்களில் மூன்று நான்குக்குக் குறையாமல் திரைப்படங்கள். (மற்றக் குடும்பங்களிடம் கட்டணம் வசூலித்துக்கொண்டு அவர்களை யும் அனுமதிப்பதும் நடக்கிறது). இவை விற்கும் கனவுகளைப் பற்றிய கவலைகள் ஒரு புறம் இருக்க, அடியோடு மானிட உறவுகள் அற்றுப்போக இவை வகைசெய்கின்றன.
திரைப்படங்கள் மடடுமன்றி, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றின் போட்டிகளும் இடையறாது நமது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இப் போட்டிகளிலும், திரைப்படங்களிலும் காணக்கூடிய அதே அளவு சுவை, போராட்டம், ஒன்றுதல் ஆகியவை உள்ளன. ஒரு மசாலாத்தனமான திரைப்படம் தரும் ஒன்றுதலை விட ஒரு கிரிக்கெட் ஆட்டம் தரும் ஒன்றுதல் எவ்விதத்திலும் குறைவானதல்ல. செயலற்ற இரசிகர் கூட்டமொன்றை இவை உருவாக்கிவிடுகின்றன. ஒரு கிரிக்கெட் போட்டியின்போதோ ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தின்போதோ வீடியோ காட்சிக ளின்போதோ ஒலியும் ஒளியும் நடைபெறும்போதோ விருந்தினர் வந்துவிட்டால் அவ்வளவுதான். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடெல்லாம் பறந்துபோய் ஒலியும் ஒளியும் பண்பாடு நிலைத்துவிட்டது.

——————–
மக்களின் பங்கேற்பினை ஊக்குவிக்கின்ற, மகிழ்ச்சியையும் நேச உணர்ச்சியையும் வளர்க்கின்ற உள்நாட்டு விளையாட்டுகளை வளர்க்கவேண்டும். அதேசமயத்தில் மனித மதிப்புகளை முற்றாகப் புறக்கணித்து, போட்டியை மட்டுமே வலியுறுத்துகின்ற, வெற்றி கரமான விளையாட்டு வீரர்களை மட்டும் புகழுச்சியிலே வைக்கின்ற, தலைமை வழிபாட்டை வளர்க்கின்ற நவீன விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஊக்கம் தரக்கூடாது.
——————————————-

மந்தைச் சிந்தனை
வீடியோ, திரைப்படக் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயம், இரசிகர் சங்கங்கள். வேலையற்றுத் திரியும் படிக்காத கிராமத்து இளைஞர்களும், நகரங்களில் படித்தும் படிக்காமலும் வேலையற்றிருக்கும் இளைஞர்களும் இச்சங்கங்களின் ஆணி வேர்கள். ஆனால் இவற்றின் தலைவர்கள் நடிகர்களால் ஏவப்படும் சுயநலமிகள். பெரிய பெரிய கட்அவுட்டுகள் வைப்பது, மோசமான திரைப்படங்களையும் பாராட் டிப் போஸ்டர்கள் ஒட்டுவது, முதல் காட்சியைப் பார்ப்பது, விநியோகஸ்தரிடமிருந்தே பலத்த ஆரவாரத்தோடு படப்பெட்டியைக் கொண்டுவந்து பூசைபோடுவது, படம் நடக் கும்போது இஷ்ட தெய்வமான கதாநாயகனுக்குச் சூடம் சாம்பிராணி கொளுத்துவது, படம் கொஞ்சம் நன்றாக இருந்துவிட்டால் பட்டாசுகள் வெடித்து வெற்றிவிழா கொண்டாடுவது போன்றவை இவர்களது முக்கியச் செயல்கள். எந்தவிதமான ‘டீசன்சி’க்கும் அப்பாற்பட்ட விதத்தில் இவர்களது நடத்தை அமைகிறது. தங்கள் இஷ்ட தெய்வ நாயகனுக்காக எதிர்நாயகன்கள் போஸ்டர்கள்மேல் சாணி எறிவதிலிருந்து அந்த ரசிகர்களோடு சண்டையில் ஈடுபடுவதுவரை இவர்களது வீரச்செயல்கள் தொட ரும். இந்த ரசிகர் மன்றங்களே கட்சி அரசியலுக்கும் அடிப்படை. ஹீரோ ஒர்ஷிப் எனப்படும் நாயக வழிபாட்டின் பச்சையான வெளிப்பாடு இது. இம்மாதிரித் தனிநபர் வீரவழிபாடு, ஜனநாயகத்துக்கு வெகுமுரணானது. மந்தைச் சிந்தனையைத் து£ண்டக் கூடியது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் குறிப்பிடுவது இத்தகைய வீரவழிபாட்டு முறையினைத்தான். ஆனால் இதற்கு அடிப்படைக் காரணங் கள் நமது பாடப்புத்தகங்களும் பிற சாதனங்களுமே. சான்றாக, அவை “காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தார்” என்பதுபோன்ற விஷயங்களால் தனிநபர் வழிபாட்டையே வளர்க்கின்றன.

தனிநபர்களுக்காகக் கட்சி, தனிநபர்களுக்காகவே இரசிகர் மன்றங்கள், தனிநபர்களுக் காகவே அரசியல். நம் ஜனங்களைக் கேட்டாலே இந்த உண்மை புரியும். எந்தக் கட்சி எந்தக் கொள்கையைச் சொல்லுகிறது என்று பார்த்து ஓட்டுப்போடுவது கிடையாது. மாறாக, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டேன், கலைஞருக்குப் போட்டேன் போன்ற குரல் களைத்தான் கேட்க முடியும். ஆதிக்கக் கலாச்சாரத்தின் இன்னொரு அடிப்படை இது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை அல்லது மந்தைச் சிந்தனையை உருவாக்கி, தங்கள் பலத்தை வளர்த்துக் கொள்வது.
அரசியல் கட்சிகள் கும்பல்தனமான வாழ்க்கையை ஊக்குவிக்கின்றன. இப்போதெல் ல்£ம் கட்சிகளின் ஊர்வலங்கள் மறியல்கள் பேரணிகள் போன்றவற்றிற்கு ஆள் திரட்டுவதற்கென்றே கண்காணிகள் இருக்கிறார்கள். இவற்றில்வந்து கூச்சல்போட்டு விட்டு, லாரிகளில ஊர்வலம் போவோருக்குக் காசு, பிரியாணி கிடைக்கிறது. அதை யும் மீறி தங்கள் இதய தெய்வத்திற்கு, தலைவனுக்கு, தங்களால் ஆனதைச் செய்து விட்டோம் என்ற ஆத்மதிருப்தியும் கிடைத்துவிடுகிறது. மனிதனுக்கு வேறென்ன வேண்டும்?

——————————–
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு
கல்பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானு£று
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த
தீரத்தில் தேர்ந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்?
-பரிசில் வாழ்க்கை, ஞானக்கூத்தன் கவிதைகள்
———————————–
நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள், கல்வி, சாதி இவை ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாகவே இருந்து வருகின்றன. ஏற்கெனவே வெளிவந்துள்ள அன்னம் ஏடுகள் இவை பற்றி விரிவாகப் பேசியுள்ளன. எனவே சுருக்கமாக நிறுவனமயமாகி யுள்ள சமயங்கள், கல்வி, சாதி இவற்றிலுள்ள ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைக் காண்போம்.

சமயம்
இந்திய சமய நம்பிக்கை உடையவர்களை முழு அளவில் பெற்ற நாடு. சமய நம்பிக்கை அற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமயம் சமூக அமைப்பின் மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. கர்மவினை, விதி, மறுபிறப்பு, மோட்சம், இறைவன் செயல் என்றெல்லாம் கூறி அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனை அதேநிலையில் வைத்திருக்க சமயம் உதவுகிறது. விடுதலைக் கூறுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் இன்று மதம் கொள்கைகள், கோட்பாடுகள் அடிப்படையில் மக்களால் ஏற்கப்பட்ட ஒன்றல்ல. வெறும் உணர்ச்சிபூர்வ நிலையிலேயே மக்களால் மதம் கைக்கொள்ளப்படுகிறது.
ஐயப்பன், ஆதிபராசக்தி, வேளாங்கண்ணி, பரிசுத்த ஆவி போன்ற குழுவழிபாட்டு இயக்கங்கள் பெருகிவருகின்றன. ஒன்றாகச் சேர்ந்து வழிபடுதல், ஒரே கோஷம், ஒரே மாதிரி உடைகள் போன்ற கூட்டுச்செயல்பாடுகள் காணப்பட்டாலும், உணர்ச்சி வயப் பட்ட இயக்கங்களாகவே இவை உள்ளன. குழுவழிபாடு என்ற முறையில் மக்களை நெருங்கிவரச் செய்கின்றன. ஆனால் சிந்தனையைப் புறயதார்த்தங்களிலிருந்து திசை திருப்பி, தற்காலிகமான நிறைவுக்கு அல்லது போலிநிறைவுக்கு வழிசெய்வனவே இத்த கைய இயக்கங்கள். சிந்தனையைத் து£ண்டுபவையாகவோ, அதன்மூலம் மாற்றத்திற் கான செயல்பாட்டிற்கு ஊக்குவிப்பவையாகவோ இவை இல்லை. தப்பிப்பை ஊக்கு விப்பனவாக உள்ளன. தங்கள் சொந்தப் பிரச்சினையை மறக்கவும் அல்லது அவை ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சியால் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கவும் து£ண்டப் படுகின்றன. குழுச்செயல்பாடு என்னும் மாற்றுக் கலாச்சாரக் கூறு மத அமைப்புக ளால் ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாக்கப்பட்டுள்ளது.

கல்வி
இன்றைய கலாச்சாரப் பரப்பலின் அடித்தளமாக இருப்பது கல்வி. கல்வி என்ற பெயரால் முதலாளித்துவ மதிப்புகள் மட்டுமே நாட்டில் பரப்பப் படுகின்றன. சிந்த னையைச் சற்றும் வளர்க்காத மனப்பாடக் கல்விமுறை, தனிநபர் வழிபாட்டை உருவாக்குகின்ற கல்விமுறை. அண்மைக்காலத்தில் ஆங்கிலவழிக் கல்விமீது மக்களுக்கு ஆசை பொங்கிப் பெருகுவதைப் பார்க்கிறோம். பெருந்தொகைகளை சன்மானமாகக் கொடுத்து, ஆங்கிலவழிப் பள்ளிகளில் எல்கேஜியில் பிள்ளைகளைச் சேர்க்க அலையும் பெற்றோர்கள்தான் எங்கும் நிறைந்துள்ளனர்.
ஆங்கில வழிக்கல்வி சிந்தனையற்ற மூளைகளை உருவாக்குகிறது. ஆடம்பரமோகம், ஒரு தனிஉயர்வகுப்பினராக மாறும் அபாயம் நிறைந்த, பயனற்ற கல்விமுறை இது. கழுத்தில் இறுக்கமான டை, காலில் இறுக்கமான சாக்ஸ், ஷ¨க்கள், முதுகில் மூட்டை புத்தகங்கள், வீட்டில் வந்தாலும் மம்மி டாடி என்று அந்நிய பாஷையில் அழைக்கின்ற தன்மை-இவ்வாறு உருவாகும் இந்தக் குழுவினருக்குக் கிரிக்கெட் ஆடத் தெரியும், நுனிப்புல் விவரங்களை மனப்பாடம் செய்து குவிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தெரியும், மிக நவீன உடை உடுத்திக் கொள்ளத் தெரியும், இந்தியாவில் இருந்தாலும் பிற பொதுமக்களோடு தொடர்பின்றி இங்கிலாந்தில் பிறந்தவர்கள் போல உளறிக் கொள்ளத் தெரியும், பெரிய நிறுவனங்களில் காசு பண்ணும் கலாச்சாரம் இது. ஆனால் கண்ணெதிரில் நம் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள், உழைப்பாளி மக்கள் எவ்வித அவஸ்தைகளுக்கு ஆளாகித் தங்கள் வாழ்க்கைகளை இம்மாதிரிப் பெரிய மக்களுக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பன எல்லாம் தெரியாது. நாட்டிலுள்ள பிரச்சினைகளைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. இவர்களு டைய பார்வை எல்லாம் அமெரிக்கா ஆஸ்திரேலியா மீதுதான். ஆனால் மற்றவர் வரிப்பணத்தில் சொகுசான கல்வி மட்டும் இங்கே வேண்டும். மற்ற மனிதர்கள் மத்தி யில் தன்னை மட்டும் உயர்ந்தவனாக பாவித்துக்கொள்ளும் தற்பெருமையையும், மமதையையும் அளிக்கும் கல்விமுறை இது. இவ்வாறு தன்மகனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கனவுகண்டுதான் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படிப்பட்ட கல்விநிறுவனங்களில் சேர்க்கிறார்கள். பாவம், இம்மாதிரிக் கல்வி அளிப்பதில் கிறித்துவ நிறுவனங்களே முன்நிற்கின்றன.

சாதி
நம் கலாச்சாரம் பொருளாதாரத்துடன் பிணைந்துள்ளது. இந்தியச் சூழலில் என்றைக் குமே சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருந்துவருவ தைக் காணஇயலும். இங்கு உயர்சாதிக்காரர்களே உடைமை வர்க்கத்தினராகவும் பெரு முதலாளிகளாகவும் இருப்பதைக் காணமுடியும். தாழ்ந்த சாதிக்காரர்கள் உழைப்பாளி களாகவே இருக்கிறார்கள். சங்க காலத்திலேயே உடல் உழைப்பில் ஈடுபட்ட மக்களைக் கடையர் (சமூகத்தில் கடைசி நிலையில் உள்ளவர்கள்) என்று சொல்லியிருப்பதைக் காண்கிறோம். இடைக்காலத்தில் பிராமணர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் இருபதாயிரம் காசுகள் தண்டம் என்று குலோத்துங்க சோழன் அபராதமே விதித்திருப் பதைக் காண்கிறோம். பெயரளவில் இன்று மக்கள் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் சட்டம் மற்றும் நிர்வாக எந்திரங்கள் யாவும் உயர்சாதியினருக்கே உதவு கின்றன. இதற்குக் கீழ்வெண்மணிச் சம்பவம் ஒன்றே போதிய சான்றாகும். 44 தலித் மக்களைக் கொளுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலவுடைமைச் சாதியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாதிக்கும் இன்றைய அரசியலுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது சாதிக்கலவரங்கள் ஏற்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் மடிவதையும் காணமுடிகிறது. இதற்கும் அரசியல் து£ண்டலே முதன்மையான காரணமாக நிற்கிறது.

ஒழுக்கம்
சமயமும் கல்வியும் ஒழுக்கத்தை போதிக்கின்றன. ஆனால் ஒழுக்கமின்மையே பரவலா கக் காணப்படுகிறது. உண்மையில் ஆதிக்கக் கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்ட சமயமும் கல்வியும் ஒழுக்கக் கேட்டையே ஏற்படுத்திவருகின்றன.

ஒரு தலைமுறைக்கு முன்பிருந்ததுபோன்ற வாழ்க்கை இன்று இல்லை. முற்றிலும் மாறி விட்டது. விடியற்காலையில் எழுந்து து£ய பழக்கங்களுடனே தங்கள் தங்கள் வேலை களில் அன்று யாவரும் ஈடுபட முடிந்தது. இன்று காலை திரைப்படப் பாடல்கள் துயி லெழுப்ப, பெட் காபி வரும்வரை படுக்கையில் கிடந்து பிறகு அவசரஅவசரமாகக் கடமைகளை முடித்துவிட்டு யாவரும் எது எதையோ நோக்கி ஓடுகிறார்கள். கீழ்த்தட்டு மக்களோ நாள்முழுவதும் உழைத்துச் சம்பாதித்ததைக் கள்ளச் சாராயக் கடைகளில் செலவிட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். மத்திய தர மக்களுக்கு உடலுழைப்பு முற்றிலும் அருகிப்போயிற்று. நல்ல உணவு, நல்ல குடிநீர், ஏன் நல்ல காற்றுகூடக் கிடைக்காமல் இருக்கும்போது நோய்கள் பெருகுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

உழைக்காமலே வளமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெருகிவிட்டதால், லஞ்சம் ஊழல் போன்ற சமூக நோய்களும் பெருகிவிட்டன. ஒரு தலைமுறைக்கு முன்னர்கூட, லஞ்சம் வாங்குதல் மிகக் கீழான ஒழுக்கமாகக் கருதப்பட்டது. லஞ்சம் வாங்குபவன் கூனிக்குறுகி மேசைக்குக் கீழ் வாங்கினான். இப்போது லஞ்சமும் ஊழலும் வாழ்க்கை முறைகளாகவே மாறிவிட்டன. இதைப் பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.
இதனோடு தொடர்புடையது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள பேதம். மேடையில் ஏறினால் சங்கப் பண்பாடு, தமிழரின் உயரிய ஒழுக்கம் என்றெல்லாம் உளறுவதைக் கேட்க முடிகிறது. வாழ்க்கை முழுவதிலுமோ சொல்லமுடியாத ஒழுக்கக் கேடுகள். தர்ம சங்கடங்கள். பேச்சில் சங்ககாலத் தன்மானம், சுயமரியாதை. கணைக்காலிரும் பொறை தண்ணீரும் குடிக்காமல் உயிர்விட்டதைப் பாராட்டுவார்கள். ஆனால் உண் மையில், பணத்துக்காக எவன் முனனாலும் கைகட்டிப் பல்லிளிக்கும் கேவலம். சாக்கடையில் விழுந்து புரளும் பன்றிகள் போன்ற வாழ்க்கை. கேட்டால் இதுதான் பிழைக்கும் வழி என்பார்கள். பத்திரிகைகள் முதல் பட்டிமன்றங்கள் வரை தமிழ்க் கற்பு பேசப்படுகிறது. ஆனால் விபசாரம் இல்லாத இடமில்லை. ரெட்லைட் ஏரியா இல்லாத நகரமில்லை.

ஆதிக்கக் கலாச்சாரம்
மேற்கண்ட கலாச்சாரச் சீரழிவுகள் அனைத்திற்கும் பின்னாலிருப்பது ஆதிக்கக் கலாச்சாரம். ஆதிக்கக் கலாச்சாரம் என்பது செல்வத்தையும் அந்தஸ்தையும் அபகரித்துக்கொண்ட ஒரு சிறுபான்மைக் குழுவினர், பெரும்பான்மை மக்களுக்கு எதிராகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்று. பெரும்பான்மையினர் தாங்கள் செய்யும் ஏமாற்றுகளை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்றுதான் ஆதிக்கக் கலாச்சாரம். இதற்குத் துணையாக மதக்கொள்கைகள், புராணங்கள் தொடங்கி எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
விதி போன்ற கொள்கைகள் என்றென்றைக்கும் ஆண்டான் ஆண்டானாவும் அடிமை அடிமையாகவும் இருப்பதற்காகவே-இருக்கும் அமைப்பை அப்படியே கேள்விகேட்கா மல் நிலைநிறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. நீ ஏழையாக இருக்கிறாயா, அது உன் விதி. கீழ்ச்சாதியில் பிறந்து அவமானப்படுகிறாயா, அது உன் தலைவிதி. நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நாளெல்லாம் உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறாயா, அது உன் விதி. இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர்களை எந்தவித எதிர்ப்புக்கும், எந்தப் புரட்சிக்கும் து£ண்ட முடியாது. முதலாளி சரிவரக் கூலி கொடுக்கவில்லையா, அதற்கு எதிராகப் போராட முடியாது. ஏமாற்றுவது அவன் விதி, ஏமாறுவது நம் விதி.

விதியை நம்பாதோரும் தங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களிலேயே அமிழ்ந்து கிடந்து எந்தச் சமூக அக்கறையுமற்று சிந்தனையற்று வாழவேண்டும் என்றே ஆதிக்கக் கலாச்சாரம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. எட்டு மணி நேர உழைப்பு போதாது, பத்து மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, உற்பத்தியைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல. நாடு முன்னேறவேண்டும் என்பதற்காக அல்லவே அல்ல. ஓய்வு கிடைத்தால்தானே அறிவைப் பெருக்கிக் கொள்ளவோ, சிந்திக்கவோ முடியும்? அதுவே இல்லாமல் செய்து விட்டால்? யாருக்கும் எந்தச் சமூக அமைப்பையும் கட்ட முடியாது, சிந்திக்க நேரம் இருக்காது, எந்தச் சமூக இயக்கத் திலும் பங்குகொள்ள முடியாது. வீட்டுக்கு வந்தோமா, படுத்துத் து£ங்கினோமா, காலையில் மறுபடி வேலைக்கு அவசரஅவசரமாக ஒருவாய் அள்ளிப்போட்டுக் கொண்டு கிளம்பினோமா, மறுபடி திரும்பினோமா….ஓய்வற்ற எந்திர வாழ்க்கை. சிலபேர் தாங்கள் சொகுசாக இருப்பதற்காக பலப்பல கோடிப்பேரை எந்திரங்களாக்கி அவர்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாகச் செய்கிறது ஆதிக்கக் கலாச்சாரம்.

ஆகவே கலாச்சாரம் என்பது, நம் வாழ்க்கை என்பது அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்தது. கலாச்சாரம் பற்றிய எந்தப் பார்வையும் அரசியல், பொருளாதாரச் சார்பின்றி நிகழ்த்தப்பட முடியாது. பொருளாதாரம்-அரசியல்-சமூகம்-சமயம் ஆகிய அனைத்தும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
மூலகாரணங்கள்

பணம் ஒன்றே இன்று எதற்கும் அடிப்படை அளவுகோலாக ஆட்சிசெலுத்துகிறது. இப்படிப்பட்ட மதிப்பீட்டை உருவாக்கியது ஆதிக்கக் கலாச்சாரம். இன்று ஆதிக்கக் கலாச்சாரத்திற்குப் பின்னால் இருப்போர் பெரிய வணிக சக்திகள். பெருமுதலாளி கள். பழங்கால அரசர்களைப் போல. ஆதிக்க சக்திகள் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அரசியல் செய்பவர்களுக்குத் தங்களை நியாயப்படுத்த மதம் சார்ந்த, ஒரு கற்றறிந்த குழுவினர் வேண்டும், மதக்குழுவினர்க்குத் தாங்கள் சுகமாக வாழ அரசிய லின் துணை வேண்டும். கி.மு.விலேயே சந்திரகுப்தனும் சாணக்கியனும் சேர்ந்தது ஆதிக்கக் கலாச்சாரத்தின் அடிப்படையைத் தெளிவாக உணர்த்தக்கூடியது. ஆதிக்கம்-குயுக்தியான அறிவு இவற்றின் சேர்க்கை.

ஆதிக்கக் கலாச்சாரம் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அவர்கள் மற்றவர்க ளைத்தான் இனம், மொழி, சாதி, வர்ணம், நாடு, மதம் போன்ற எந்த அடிப்படையிலா வது பிரித்துவைப்பார்கள். அப்போதுதான் அவர்கள் கேள்வியின்றி வாழமுடியும். தங்களைப் பிறர் எதிர்க்காதவாறு சுயநலசக்திகள் எப்போதும் ஒன்றுசேர்ந்து கொள்ளும். இங்குள்ள பஜாஜ் அல்லது டாட்டா ஒரு அமெரிக்க முதலாளியோடு, அல்லது ஜப்பானிய முதலாளியோடு எளிதாகக் கூட்டுவைத்துக் கொள்ளமுடியும், அர சியலையே ஆட்டிப்படைக்கவும் முடியும்.
இன்றிருக்கும் அரசாங்கமும் இவர்கள் சார்பாகவே இருக்கிறது. காங்கிரஸ் அரசாயினும், ஜனதா தள அரசாயினும், அல்லது உள்ளூர்க் கட்சிகளுடைய அரசாயி னும் எதுவும் அந்நிய மூலதனச் சார்புடைய அரசாகவே உள்ளது.

பிறநாட்டு முதலாளிகள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்குவதற்கு என்ன அக்கறை? வளர்ந்த நாடுகளிலுள்ள பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்தான் நம் நாட்டில் தொழில்களைத் தொடங்குகின்றன. இவற்றிற்குத் தேவையான மூலப் பொருள்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன. மிக மலிவான உழைப்பாளிகள் கிடைக்கிறார்கள். நம் நாட்டையே அவர்களுக்குச் சோதனைக் கூடங்களாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
————————————
பூமியின் வறட்சியான பகுதிகளில் இருந்தும் வருகின்ற தண்ணீர், ஏற்கெனவே நீர் நிறைந்துள்ள கடலைநோக்கித்தான் ஓடுகிறது. அதேபோலத்தான், ஏழை மக்களிடமும் உள்ள செல்வமும், ஏற்கெனவே பணம் நிறையப் பெற்றுள்ள நாடுகளிடமும், பணக் காரர்களிடமும் செல்லுகிறது. -ஜூலியஸ் நைரேரே.
————————————–
பன்னாட்டு முதலாளித்துவத்தின் அடிப்படையான நவீன தொழில் நுட்பம், மனித உயிருக்கு எவ்வளவு அபாயம் விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு நம் நாட்டில் யூனியன் கார்பைடு போபாலில் விளைவித்த நாசமே நல்ல சான்றாகும். இது அமெரிக்க முதலாளி ஒருவனின் தொழிற்சாலை. இதில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு (1984) அபாயததினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர், பலநு£ற்றுக்கணக்கான பேர் குருடாயினர் என்பது ஒருபுறம் இருக்க, இன்னும் இதன் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நமது அரசாங்கத்தினால் இந்த முதலாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை. குற்றக்கூண்டிலும் நிறுத்த முடியவில்லை. இழப்பீடும் வாங்க முடிய வில்லை. ஆனால் இன்றுவரை யூனியன் கார்பைடின் எவரெடி செல்கள்தான் எங்கும் விற்பனையாகின்றன. அரசாங்கத்தினாலும் அசைக்கமுடியாதது அந்நிய முதலாளித் துவம்.
—————-
இந்தியாவில் மனித உறுப்புகள் மாமிசத்தைப் போல விலைபேசப்படுகின்றன. உயிருள் ளவர்களின் சிறுநீரகம் ரூ. 30,000. உயிருள்ளவர்களின் கண், ரூ. 80,000. இறந்தவரின் உடல் ரூ. 6,000. சிறுநீரக வியாபாரம் இன்று வருடத்திற்கு ரூ. 40 கோடிக்கு நடக்கிறது. ஒரு ஏழையின் ஆரோக்கியத்தைப் பறித்து ஒரு பணக்காரனுக்குக் கொடுக்கும் சூறையா டல் இது. -டாக்டர் கொலாபாலா, இந்தியா டுடே, 31-07-90
——————–

இந்த நிலையில் இந்தியாவில கூடங்குளங்கள் பெருகிவருகின்றன. முதுலாளித்துவம் மலிவாக, இன்னும் மலிவாக இன்பங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் மூல வளங்க ளைச் சுரண்டுகிறது. இந்த வளங்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளில் வாழும் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன. அதேசமயம், உலகில வறுமை பெருகிவருகிறது.
———————
தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கொடிய வறுமை நிலவுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவரிடையேயும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் வறுமை மிகுதியாகக் காணப்படுகிறது.
-1990ஆம் ஆண்டுக்கான உலக மேம்பாட்டு அறிக்கை, உலகவங்கி வெளியீடு, இந்து நாளிதழ், 16-07-90
—————————–
முதலாளித்துவம் மூல வளங்களைச் சுரண்டித்தான் பிழைக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பற்றிய கவலையின்றி அவை சுரண்டுகின்றன. உலகின் வளப்பகுதிகள் யாவும் மேற்கு நாடுகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மழை குறைதல், தேவையற்ற வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீர் கிடைக்காமை, உலக முழுவதும் பாலைவனப் பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இந்தியருக்கோ, பருவ மழையும் கிடைக்காமல், நிலத்தடி நீரும் வறண்டுபோய் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் திண்டாட்டம்.
சரியான பொருளாதாரக் கொள்கை இன்மையால், மூன்றாம் உலக நாடுகளில் நகர்ப்புறம் நோக்கி ஏழைகள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்தல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நகரப்புறங்களும் நகரைச் சார்ந்த சேரிகளும் விரைந்து வளர் கின்றன. உலகிலேயே மிகப் பெரிய சேரிப்பகுதி பம்பாய் நகரத்தில் இருக்கும் தாராவிப் பகுதி என்று சொல்லப்படுகிறது. நகர்மயமாதல், பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகமாக்குகிறது. நகரங்களின் மேம்பாட்டிற்கெனப் பொருளாதா ரத்தின் கணிசமான பகுதி செலவழிக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கும் விவசாயத்துக்கும் போகவேண்டிய பணம் நகரங்களுக்குப் போய்விடுகிறது. நகரங்கள், இன்று மனிதத்தன்மையற்ற வெறும் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. அவை சுற்றுச்சூழலையும் நாசமாக்குகின்றன. ஏராளமான குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவை நகரங்களினாலேயே வளர்கின்றன. (தொடரும்)


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2
(இந்தக் கட்டுரையின் முதல் பகுதி சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது பகுதி.)

விளம்பரங்கள்

“சிவப்பழகு பெறப் பயன்படுத்துங்கள் ஃபேர் அண்ட் லவ்லி கிரீம்” என ஒரு கம்பெனி விளம்பரப்படுத்துகிறது. “பொன்னிறமான அழகுக்கு ரெக்ஸோனா” என்று அந்த சோப் விளம்பரம் சொல்லுகிறது. இவை விளைவிக்கும் மனப்பாங்கு, இவற்றின் அடிப்படையிலுள்ள கருத்துருவம் என்ன? ஏன் சிவப்பழகு? ஏன் பொன்னிறமான உடல்? கருப்பு அழகில்லையா? இந்தியா போன்ற வெப்பமான ஒரு நாட்டில், உடலுழைப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மக்கள் எப்படி சிவப்பாக, பொன்னிறமாக இருக்க முடியும்? சிவப்பழகு என்பது ஒரு உடலுழைப்பற்ற மேல்தட்டு வர்க்கத்தின், பார்ப்பனீயத்தின் கருத்தாக்கம். இதன் அடிப்படையிலும் சாதியமைப்பே உள்ளது. அது தொலைக் காட்சி வாயிலாக, பத்திரிகைகள் வாயிலாக, வானொலி வாயிலாக எல்லார்மீதும் திணிக்கப்படுகிறது.
**********************************************************************
நான்கு சாதிகளுக்கும் நான்கு வர்ணங்கள் கற்பிக்கப்பட்டன. பிராமணர்களுக்கு வெள்ளை, சத்திரியர்களுக்கு மாநிறம், வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் கருப்பு. ஆரியர்கள் தூய வெள்ளையாக இல்லாவிட்டாலும, நல்ல நிறம் கொண்டவர்களே. தாசர்களும் தஸ்யூக்களும் கருப்பு நிறத்தவர்கள்.
-ரோமிலா தாப்பர், பாரம்பரியம் முதல் அரசு வரை, ப.44
——————————————-

ஏங்க, உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொல்றேன். போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னுதானே சொல்றேன்….
அப்படி என்னம்மா விசேஷம் இதயம் நல்லெண்ணெயிலே?
அதில காரல் இல்ல, கசப்பில்ல, கொலஸ்டிரால் இல்ல. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், ம், போய் வாங்கிட்டு வாங்க….
-இதயம் நல்லெண்ணெய், டிவி-வானொலி விளம்பரம்
************************************************************************************

இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தைச் சற்றே கவனிப்போம். அது என்ன சொல்கிறது? “ஏங்க உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொன்னேன்?” இந்தக் கேள்வியின் தொனி என்ன? ‘உங்களை என்ன பெண்கள் வேலை அல்லது அசிங்கமான வேலைகளையா செய்யச் சொல்கிறேன்?’ இதை ஒரு பெண் தன் கணவனிடம் சொல்வதாகக் காட்டுகிறது விளம்பரம். அப்படியானால், ஓர் ஆடவன் சமைத்தல், துணி துவைத்தல் முதலியவற்றைச் செய்வது ஏற்கப்படாத விஷயம். இப்படிக் கூறுவது ஆதிக்கக் கலாச்சாரம். மேலும் இந்தத் தொனி விளம்பரத்தின் கடைசிவரை (பொம்பளைங்க சமாச்சாரம்) வரை தொடர்கிறது.
வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் ஆண் (வண்ணான்), தெருவைச் சுத்தம் செய்யும் ஆண் (தோட்டி) தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்படுகிறான். இதே துணி துவைத்தல், சுத்தம் செய்தல் போன்றவற்றை வீட்டிற்குள் செய்யும் பெண்ணும் தாழ்த்தப்பட்டவளாக நடத்தப்படுகிறாள். துணிதுவைப்பது, சுத்தம் செய்வது போன்றவை, சாதி அல்லது பால் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலைகளாக்கப் பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளை ஆண்கள் செய்வது சகஜம். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில் பெண்மணிகள் போர்வீராங்கனைகளாக மாறியதைக் கண்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக விதித்துள்ள உயிரியல் சார்ந்த பொறுப்புகள் அன்றி வரையறுத்த பணிகளை விதித்தது யார்? இந்த விளம்பரம் பெண்ணின் வரையறுக்கப்பட்ட பணிகள் வீட்டில்தான் என்கிறது. இவ்வளவு படித்தவளாகக் காட்டப்படும் இந்தப் பெண்மணி (நல்லெண்ணெயில் கொலஸ்டிரால் இல்லை என்பதை அறிந்தவள்) தானே போய் அதை வாங்கிவரத் தெரியாதவளா? கணவனிடம்தான் வாங்கிவரச் சொல்லவேண்டும். அதுதான் பெண்ணுக்கு அழகு. பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடம். மேலும் இதயம் நல்லெண்ணெயில் என்ன குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்வதுகூட “பொம்பளைங்க சமாச்சாரம்”. (இதை ஒரு பெண்ணே கூறுகிறாள்). சமைத்துப் போட்டதை நாக்கை நீட்டிக்கொண்டு குற்றம் குறை சொல்லிவிட்டுச் சாப்பிட்டுப் போவதுதான் “ஆம்பளைங்க சமாச்சாரம்” போலும். (இந்த விளம்பரத்தில் ஒரு தவறான முன்வைப்பும் இருக்கிறது. இதயம் நல்லெண்ணெயில் மட்டும்தான் கொலஸ்டிரால் இல்லை என்பதில்லை, எந்த நல்லெண்ணெயிலுமே அது இல்லை.)

இவ்வளவு கலாச்சார வரையறைகளை-ஒரு நிலவுடைமைச் சமூகம் வரையறுத்த மதிப்புகளை-ஆண்மை வீட்டிற்கு வெளியே) பெண்மை (வீட்டிற்கு உள்ளே) என்பதற்கான கருத்துருவங்களைக் கொண்டிருக்கும் விளம்பரம் இது. எல்லாக் கலாச்சாரச் சாதனங்கள் வாயிலாகவும் தமிழ்நாட்டில் விஷம்போலப் பரப்பப் படுகிறது. இந்த நாட்டின் அரசாங்கம் உண்மையில் சமத்துவத்திலோ பெண்களின் முன்னேற்றத்திலோ நம்பிக்கை கொண்டதாக இருந்தால் இதனை எல்லா வெகுஜன சாதனங்களிலும் அனு மதிக்கலாமா? இதுபோன்றவற்றை அரசாங்கம் அனுமதிப்பதற்குக் காரணம், இவை தரும் பணம். வருமானம். அதாவது அரசாங்கம் ஒரு முதலாளியாகச் செயல்படுகிறது. பொதுமக்கள் நன்மையைவிட பணத்தையே பெரிதாகக் கருதுகிறது. தனக்குப் பணத்தை வாரி இறைக்கக்கூடிய முதலாளிகளின் சார்பில் நிற்கிறது. இவ்வாறு முதலாளிளின் சார்பாக, நிலவுடைமை மதிப்புகளின் சார்பாக, பெண்ணடிமைத் தனம், சாதி முதலியவற்றின் சார்பாக இயங்கும் இந்த அரசாங்கம், பெரும்பான்மை யோராக உள்ள ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது நேசமாக நடந்துகொள்ளும் என்று யார்தான் நம்பமுடியும்?

இன்னும் ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம். லியோ டாய்ஸ் விளம்பரம் இது. இதில் ஆண்குழந்தைகளுக்கு வேறு விளம்பரம், பெண் குழந்தைகளுக்கு வேறு.
ஆண்குழந்தைகளின் விளம்பரத்தில்: சுடுகின்ற வீரர்கள், தப்பிக்கும் வாகனங்கள், ஓடுகின்ற கார்கள், இப்படி சுமார் ஒரு நிமிட நேர விளம்பரத்தில் ஆறேழு கட் செய்யப்பட்டு துடிப்புடன் இணைக்கப்பட்ட காட்சிகள்.
பெண் குழந்தைகளுக்கான விளம்பரத்தில்: ஒரு அழகான பெண் பொம்மை, நன்கு அலங்கரிக்கப்பட்டு, ஆடம்பரமாக, கையில் ஒரு குழந்தை பொம்மையுடன், மெதுவாகத் தன் அழகுத் தோற்றத்தைக் காட்டுவதுபோலத் திரும்புகிறது. இதில் ஒரு கட் கூடக் கிடையாது. மென்மை இனிமை மெதுத்தன்மை. இந்த இரு விளம்பரங்களையும் பார்க்கின்ற சிறார் மனத்தில் என்ன விளைவுகளை இவை ஏற்படுத்தும்? ஆண்கள் என்றால் துடிப்பு, ஓட்டம், துப்பாக்கி, சண்டை, அட்வென்ச்சர். பெண்கள் எனறால் மென்மை, அலங்காரம், அழகு, கவர்ச்சி. இந்திய சினிமாவிலும் இதே மதிப்புகள்தான் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றில் கவனிக்க வேண்டியது இதுதான். எப்படி வெகுஜனக் கலாச்சார சாதனங்கள், விளம்பரங்கள், ஏற்கெனவே சமூகத்தில் ஏற்கப்பட்ட மதிப்புகளை இன்னும் ஆழமாக ஏற்கும் வகையில் மக்களிடம் பரப்புகின்றன என்பது. ஜனநாயகம் என்று சொல்லப்படும் போர்வையில் இவற்றால் வெளிப்படுத்தப்படுவன ஜனநாயக, சமத்துவ மதிப்புகள் அல்ல. முதலாளித்துவத்தின், சாதியத்தின், அதிகாரத்தின், பணபலத்தின் மதிப்புகள்தான் இவை. ஜனநாயகம் என்பது பணபலம், சாதிபலம், அதிகாரபலம் என்பதை மறைமுகமாக மக்களை ஏற்கவைக்கும் முறை இது. இவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மக்களுக்கு தேர்தல்சமயத்தில் புழங்கும் கருப்புப் பணமோ, தேர்தலில் பணக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் பெறுவதோ, ரௌடியிசம் இவற்றால் வலிமை பெறுவதோ எப்படித் தவறாகத் தோற்றமளிக்கும்? இதெல்லாம் இயற்கைதானே என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆதிக்கக் கலாச்சாரத்தின் மோசமான அம்சமே இதுதான். ‘நாம் பார்க்கும் உலகம்தான் இயற்கையானது’ என்ற கருத்துக்கு ஆட்படுவது. வாழ்க்கையில் நாம் காணும் ஏற்ற்த் தாழ்வுகள், வர்க்க வேறுபாடுகள், கொடூரங்கள் யாவும் இயற்கை நியதி, இவற்றை எதிர்த்து நாம் ஒன்றும் செய்ய இயலாது, ஏற்றுக் கொள்வது நம் தலைவிதி என்னும் மனப்பான்மையை ஆதிக்கக் கலாச்சாரம் உருவாக்குகிறது.
1. இதனால் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சமூகநீதிக்காகப் போராடும் குணம் அறவே அற்றுப்போகிறது.
2. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அதற்குப் பழமொழி சொல்வார்கள். பணக்காரன்தானே தேர்தலில் நிற்க முடிகிறது என்றால், ‘ஐந்து விரலும் ஒன்றாகவா இருக்கிறது, விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்’ என்பார்கள். லஞ்சம் வாங்குகிறார்களே எல்லாவற்றுக்கும் இது தவறல்லவா என்றுகேட்டால், ஆமாம், ‘தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா’ என்று அதையும் ஏற்றுக்கொண்டு ஒரு பழமொழி சொல்வார்கள்.

தகவலளிக்கும், பயனளிக்கும் விளம்பரங்களால் தீமையில்லை. வணிக விளம்பரங்க ளே அவற்றின் கவர்ச்சியாலும் மனத்தை பாதிக்கும் தன்மையாலும், நம்மால் ஆராயப் படவேண்டியவை. சாதாரணமாக, ஒரு வணிக விளம்பரம், விற்பனைப் பொருளைப் பற்றிய உண்மையைத்தான் கூறவேண்டும். ஆனால் இன்றைய வணிக விளம்பரங் களில் நியாயம் இலலை. முதலாளித்துவக் கருத்தியலே அவற்றில் வெளிப்படுகிறது என்பதோடு அவை விளம்பரம் செய்யும் பொருள்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையற்றவை.
வெகுஜனச்சாதனங்கள் விளம்பரங்களையே முற்றிலும் சார்ந்துள்ளன. தாங்கள் பிழைத்தாக வேண்டுமெனில், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முதலாளித்துவ நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் காசு அடிக்க வேண்டும், பொதுமக்களை அவற்றின் நுகர்வோராக மாற்றவேண்டும். இதற்குப் பத்திரிகைகளும் விதிவிலக்கில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை விளம்பரங்கள் வெகுஜனச் சாதனங்கள் ஊனமுறாது தாங்குவதற்குரிய அளவிலேயே பயன்படுத்தப்பட்டன. இன்று இந்த நிலை மாறி, விளம்பரங்கள் இல்லாமல் எந்த வெகுஜனச் சாதனமும் இயங்க முடிய்£து என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இவை நாடும் விளம்பர முதலாளிகளை எந்தப் பத்திரிகையும் தொலைக்காட்சியும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆகவே முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள், ஊடகங்கள் என்று அனைத்துமே ஒருசில முதலாளிகளுக்காக இயங்குபவை ஆகிவிட்டன. பொதுவுடைமை நாடுகளில் அரசாங் கத்தின் வாய்க்கருவியாக மட்டுமே ஊடகங்கள் இயங்குகின்றன என்று குறை கூறினார்கள் முன்பு. அரசாங்கத்தின் வாய்க்கருவியாக இயங்குவதே தவறு என்றால் சுயநலம் மிக்க ஒரு சில முதலாளிகளுக்காக இயங்குவது மட்டும் நியாயமா என்ற கேள்வியை அவர்கள் யோசித்துப்பார்க்கட்டும். ஒருசில முதலாளிகளின் கைப்பாவையாக அரசாங்கம் இயங்குவதைத்தான் இவர்கள் சுதந்திரம் என்கிறார்கள்.

——————————————
நம் நாட்டில் எந்த மோசமான திரைப்பட நடிகரும் நடிகையும் எந்த நிமிடத்திலும் ஒரு அரசியல் தலைவராகலாம். ஒரு பத்திரிகையும் நடத்தலாம். ஒன்று அல்லது சில தொலைக்காட்சிச் சேனல்களைத் தங்களுக்கெனத் தொடங்கி நடத்திக்கொள்ளலாம். அரசியல், திரைப்படம், பத்திரிகை உள்ளிட்ட பிற ஊடகங்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாமல், ஒரே நோக்கம் கொண்டு, சமூகத் தின் தாழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோ திகளின் கூட்டுச் செயல்பாடுதான் நம் அரசாங்கம் என்று சொல்லலாம். அதனால் அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிறர் தங்களை எதிர்க்காமல் இருக்கக் காவல் துறையை மட்டும் தங்கள் வயப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.
மனித மேம்பாடும் கலைத்தொடர்புப் பணியும் என்ற கட்டுரை.
———————————–

விளம்பரங்கள், மக்களின் நோக்கங்களையும் வாழ்க்கை மதிப்புகளையும் பெருமளவில் பாதிக்கின்றன. நமது வாழ்க்கையிலேயே விளம்பரப் பாணியிலான பேச்சு பழகிவிட்டது. பெரும்பத்திரிகைகளில் வரும் புனைகதைகள், நவீன விளம்பரத்தின் பாணியையும் தந்திரங்களையும் மிகுஉணர்ச்சியையும் பயன்படுத்துகின்றன. எந்தப் பொருளை அல்லது செயலை விவரிப்பதானாலும், கவர்ச்சியான, மேலோட்டமான, இனிமையான, கிளிப்பிள்ளை வாய்பாட்டுத் தொடர்களைப் பயன்படுத்திச் சொல்வது பழக்கமாகிவிட்டது. இவை திரும்பத்திரும்பப் பயன்படுத்தித் தேய்ந்துபோன சொற்களையும் தொடர்களையும் (அவற்றிற்கடியில் அதே அளவு தேய்ந்துபோன சிந்தனைகளையும்) கொண்டவை. அதனால் மக்களின் சிந்தனையை மழுங்கடித்துப் புதிய விதங்களில் சிந்திக்கவிடாமல் செய்துவிடுகின்றன.

இம்மாதிரி நடை அரசியலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேடைப்பேச்சு என்று கவர்ச்சியான ஒன்றாக மாறியதோ அன்றே சிந்தனைக்கு மோசம் வந்துவிட்டது. அரசியல் பேச்சுகளிலும் தாய்க்குலம், ரத்தத்தின் ரத்தம், உடன்பிறப்புகள், அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம், நீ கோடு போட்டால் நான் ரோடு போடுவேன் போன்ற வண்டவாளத் தொடர்களைக் காணலாம். திரைப்படப் பாடல்களிலும் இத்தகைய தேய்ந்துபோன விஷ(ய)ங்களே பயன்படுத்தப்படுகின்றன.

காதல், நட்பு, சகோதரத்துவம், தாய்மை, இன்பம், மகிழ்ச்சி, இனக்கவர்ச்சி போன்றவை பற்றிய சில விஷயங்களையே திரும்பத்திரும்பக் கூறி விளம்பரம் இவற்றைப் பொருள் களின்மீது திணிக்கிறது. குறிப்பிட்ட ஒரு ஆடையை அணிந்தால் கணவன் மனைவி அன்பு பெருகும்; குறிப்பிட்ட கடையில் பொன்னகை வாங்கினால் அவர்கள் நெருக்கம் மிகுதியாகும்; (இதற்கு ஏற்கெனவே வாழ்க்கையையும் பொன்னையும் சம்பந்தப் படுத்திச் சொல்லப்படும் கருத்துகள் அரணாக உள்ளன); குறிப்பிட்ட ஷேவிங் கிரீமை அல்லது செட்டைப் பயன்படுத்தினால்தான் மனைவியின் காதல் பெருகும்; குறிப்பிட்டதொரு பற்பசையைப் பயன்படுத்தினால்தான் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்; இதுபோல் எல்லாம் விளம்பரங்கள் மனித உறவுகளைச் சிறுமைப் படுத்துகின்றன. குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணம் வைப்பதற்காக ஒரு மனைவி கணவனை நேசிக்கிறாள் என்பதோ, ஒரு குறிப்பிட்ட கடையில் வாங்கிய சேலையை அணிந்ததற்காகக் கணவன் மனைவியை விரும்புகிறான் என்பதோ எவ்வளவு கேவலமானவை? இம்மாதிரி விளம்பரங்கள் காதல் கொஞ்சல்களுடன், ஆண்பெண் நெருக்கக் காட்சிகளுடன், அந்தரங்கமான பேச்சுகளுடன், பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்கி, மக்களின் ஆழ்மனத்தைச் சென்று அடைகின்றன. குழந்தைகளின் நாப்கின் (தேவையா?), சோப்பு போன்றவற்றை விற்பதற்கும் பெண் ணின் கவர்ச்சி தேவைப்படுகிறது.

இம்மாதிரி ஆடம்பரப் பொருள்களும், அவற்றை ஒட்டிய செயற்கையான கொஞ்சல்க ளும், சேட்டைகளும் முனகல்களும் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது போலவும், இல்லாவிட்டால் வாழ்க்கை சாரமற்றது என்பதுபோல வும் ஒரு கருத்து பார்ப்பவர் மனத்தில் தோற்றுவிக்கப்படுகிறது. நமது வாழ்க்கையைத் தலைகீழாக்கி, வாழ்க்கைக்காகப் பொருள்கள் என்பது போய், வணிகப் பொருள்களுக் காகவே வாழ்க்கை என்பதுபோன்ற ஒரு பிரமையை இவை உண்டாக்குகின்றன.

பெண்கள் வெகுஜனச் சாதனங்களால் முற்றிலும் தவறான பயன்பாட்டுக்கு உட்பட் டுள்ளனர். விளம்பரங்களில் வரும் பெண்கள் கவர்ச்சியுடனும் அழகுடனுமே இருப்பர். அநேக விளம்பரங்கள் திரைப்பட நடிகர் நடிகையரை இதற்காகவே பயன்படுததுகின் றன. இவ்வாறு காட்டப்படுவதன் அர்த்தம், பெண்கள் உடல் அழகினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறார்கள் என்றும், கவர்ச்சி மட்டுமே ஆண்கள் உலகில் பெண்களுக்கு மதிப்பினைப் பெற்றுத் தரும் என்றும் வலியுறுத்துவதற்கே ஆகும். பெண் நுகர்ச்சிப் பொருளாக மட்டுமே படைக்கப்பட்டவள் என்னும் கருத்து இதன்மூலம் நிலைப்படுத்தப் படுகிறது. மீறிச் சென்றால், பெண்கள் குடும்பத்திற்கு உட்பட்ட அளவில் மட்டுமே காட்டப்படுவர், அப்போதும் கவர்ச்சியாகவே. சான்றாக இடுப்புவலிக்குத் தடவும் கிரீமுக்கு விளம்பரத்தில் வரும் மனைவி எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறாள் பாருங்கள்.

பெண்கள் விளம்பரங்களில் விஞ்ஞானிகளாகவோ, ஆசிரியர்களாகவோ, சமூகப் பணியாளர்களாகவோ, நல்ல தாய்மார்களாகவோ கூட வெகுஜனச் சாதனங்களில் காட்டப்படுவதில்லை. அதிக பட்சம் சோப்புக்கும் கிரீமுக்கும் குழந்தை உணவுக்கும் டாக்டர் வேஷம்போட்டுக்கொண்டு கவர்ச்சிப் பெண்கள் வருவார்கள். சமூகத்தில் உண்மையில் பெண்கள் இயங்கக்கூடிய துறைகளைக் காட்டினால் அவர்கள் கவர்ச்சி யை வியாபாரமாக்க முடியாது என்பது காரணம்.

அழகு சாதனப் பொருளாயினும், வீட்டு உபயோகப் பொருளாயினும் (ரீகல் சொட்டு நீலம் முதல் வாஷிங் மெஷின் வரை) பெண்கள் நுகர்வோராக மட்டுமே விளம்பரங் களில் இடம்பெறுவர். இது சமூகத்தில் பெண்கள் நுகர்வோராக மட்டுமே உள்ளனர், (அதாவது செலவு வைப்பவர்களாக மட்டுமே உள்ளனர்), ஆக்குவோராக படைப்பவர் களாக இல்லை என்ற இன்னொரு காலங்காலமான மாயையை நிலைப்படுத்துகிறது. உண்மையில் பார்த்தால், சமூகத்தில் ஆண்கள் உழைப்பைப் போலப் பன்மடங்கு செய் தும், அவர்களைக் காட்டிலும் குறைந்த கூலி பெற்று, அல்லது கூலி பெறாது, சுரண்ட லுக்கு உட்படுத்தப்படுபவர் பெண்களே ஆவர்.
1930ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆங்கிலஇலக்கியத் திறனாய்வாளர் எஃப். ஆர். லீவிஸ், “விளம்பரங்கள் மலிவான, எந்திரரீதியிலான உணர்ச்சித் தூண்டல்களை உருவாக்கி, மிக எளிய முயற்சியால் கிடைக்கும் உடனடி இன்பங்களை மட்டுமே நாடவைக் கின்றன” என்று சாடினார்.

விளம்பரங்கள் மோசமான உணர்ச்சித்தூண்டல்களையும் தரம் தாழ்ந்த மொழியையும் உருவாக்குகின்றன. மக்களுடைய உணர்ச்சித் தேவைகளைச் சுரண்டிப் பிழைக்கின்றன.
பேராசையையும் போலித்தனமான வாழ்க்கையையும் மேல்நாட்டு வாழ்க்கையைப் பார்த்து காப்பி அடிப்பதையும் உருவாக்குகின்றன.
மென்மையான உணர்வுகளைக் கொன்றுவிடுகின்றன.
விமரிசன பூர்வமாக வாழ்க்கையை நோக்கவிடாமல் செய்கின்றன
என்பது லீவிசின் கருத்து. அவர்கூறிய இக்கருத்துகள், விளம்பரங்களுக்கு மட்டுமின்றி, பொதுவாக வெகுஜனச் சாதனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
———————-
“விளம்பரங்களின் வடிவம், உள்ளார்ந்த கட்டளைகள், து£ண்டுதல்களை நம்பியிருக்கி றது. இவை நம் சிந்தனையைக் கட்டுப்படுத்தி, ஒரே பாணிக்கு மாற்றிவிடுகின்றன. ளிம்பரங்களில் காணும் பொருள்களைக் கொண்ட போலியான ஒரு உலகில் மனிதனை வாழவைத்து, நிஜவாழ்க்கையை வெறுப்புடன் நோக்கச் செய்கின்றன. ஆடம்பரமான, பணக்காரத்தனமான வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகளைத் தங்கள் காட்சிப்படிமங்கள் மூலம் உருவாக்குகின்றன. இதனால் போலியை நிஜமாகவும், நிஜத்தைப் போலியாகவும் நம்பவைக்கின்றன.”
-மார்ஷல் மெக்லு£ஹன், தொடர்பு மொழியாக விளம்பரம் என்ற நு£லில்.
———————————–


முரண்பாடு

உலகில் வாழ்வதற்குப் பலவித வழிகள் உள்ளன. ஒருவனேகூட அந்தந்த சமயத்திற்கு ஏற்றாற்போல
வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பழமொழிகள் இந்த முரண்பட்ட தன்மையை நன்கு பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்குச் சில ஆங்கிலப் பழமொழிகளைச் சுட்டிக்காட்டலாம்.

‘காத்திருப்பவர்களுக்குத்தான் நல்லவை யாவும் கிடைக்கின்றன’ என்பது ஒரு பழமொழி. All good things come to those who wait. இதேபோல் நிதானத்தை வலியுறுத்தி slow and steady wins the race என்ற பழமொழியும் இருக்கிறது. ஆனால் பாருங்கள், Time and tide wait for none என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. காத்திருப்பதா, உடனே செயலில் இறங்குவதா?

Wise men think alike என்று ஒரு பழமொழி. Fools seldom differ என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. ஆகமொத்தம், விவேகிகளோ, முட்டாள்களோ எல்லாரும் ஒரே மாதிரி யாகத்தான் சிந்திக்கிறார்கள் போலும்!

Do it well or not at all என்று ஒரு பழமொழி சொல்கிறது. எதையும் நன்றாகத்தான் செய்ய வேண்டும். இல்லையெனில் வேண்டாம். ஆனால் Half a loaf is better than none என்றும் ஒரு பழமொழி சொல்கிறதே?

சந்தேகம்தான் ஞானத்தின் தொடக்கம் என்பது ஒரு பழமொழி. Doubt is the beginning of wisdom. ஆனால் Faith will move mountains என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது, சந்தேகத்தையா, விசுவாசத்தையா?

இப்படிப்பட்ட பழமொழிகள் வாழ்க்கையின் முரண்பட்ட தன்மையை நாம் புரிந்து கொள்வதற்கு முதன்மையாகத் துணைசெய்கின்றன.


வேலை

ஒருவன் தனது வேலை பயங்கரமாக முக்கியமானது என்று நம்புவது அவனுக்கு நரம்பு மண்டலம் பிரேக்டவுன் ஆவதற்கான அறிகுறி. -பெர்ட்ரண்ட் ரஸல் (1872-1970)


பணிவு வேண்டாம்!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டா மேயர் (1898-ஃ978) ஒரு புகழ் பெற்ற பெண்மணி, ஆசிரியராக இருந்து தலைவராக உயர்ந்தவர். அவரைப் பார்க்க ஒருசமயம் ஒரு அமெரிக்க அரசியல் நிபுணர் வந்தார். மிகுந்த போலிப்பணிவு காட்டி நடந்துகொண்டார். அப்போது அவரைப் பார்த்துச் சொன்னார் கோல்டா மேயர்: “இவ்வளவு பணிவு வேண்டாம், இன்னும் அவ்வளவுக்கு நீங்கள் உயரவில்லை.”


காப்பியும் குவளையும்

பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்று கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அதற்குப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் மாணவர்களுக்குக் காப்பி கொடுக்குமாறு பணியாளர்களுக்குக் கூறினார். அவர் ஏற்பாட்டின்படி, ஒரு பெரிய குழாய்வைத்த டிரம்மில் காப்பி கொண்டுவரப்பட்டது. குவளைகள்தான் வெவ்வேறு மாதிரிகளில் இருந்தன. போர்சிலைன், பிளாஸ்டிக், கண்ணாடி, பளிங்கு, காகிதம் இப்படிப் பலவேறு பொருள்களால் செய்யப்பட்டவை. சில அழகாக இருந்தன, சில அலங்காரம் எதுவுமின்றி.
“நீங்களே காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர்.
இப்போது எல்லார் கையிலும் குவளைகளில் காப்பி இருந்தது. பேராசிரியர் சொன்னார்:
“பார்த்தீர்களா! அழகாக இருந்த விலை உயர்ந்த கப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். பிளெயினான, மலிவான குவளைகளை விட்டுவிட்டீர்கள். அவரவர்க்குத் தேவையான மிகச் சிறந்தததை எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் அங்கேதான் ஒரு சிறிய பிரச்சினை.
காப்பி எல்லாருக்கும் ஒன்றுதான், ஒரே தரத்தில், ஒரே சுவையில்தான் இருக்கிறது. குவளைகளால் காப்பியின் தரம் மாறிவிடப் போவதில்லை.
நீங்கள் எல்லாரும் விரும்பியது காப்பிதானே! குவளை இல்லையே! குடித்ததும் அதை வைத்துவிடப்போகிறீர்கள் அல்லது குப்பைக்கூடையில் போடப் போகிறீர்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக எல்லாரும் அழகான, நல்ல, விலைஉயர்ந்த குவளையையே தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைதான் காப்பி. உங்கள் வேலை, பணம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து இவையெல்லாம் குவளைகள். வாழ்க்கையை வைத்திருக்கக்கூடிய பாத்திரங்கள் அவை. அவை நாம் வாழும் வாழ்க்கையை வரையறுக்கவோ, நமது வாழ்க்கையின் தரத்தினை மாற்றவோ போவதில்லை. சில சமயங்களில் குவளையிலேயே கவனத்தைச் செலுத்தி காப்பியின் சுவையை மறந்துபோய்விடுகிறார்கள் சிலர். அதுபோல ஆகிப்போய்விடலாகாது.”


ஒரு அயல்நாட்டுக்கதை

இது ஒரு அயல்நாட்டுக்கதை.
ஒரு பையன் ஒரு கடைக்குச் சென்றான். அங்கு தொலைபேசி வசதி இருந்தது. தொலைபேசியின் சில எண்களைத் தட்டிப் பேச ஆரம்பித்தான். பேசுபவன் சிறு பையன் ஆனதால் கடைக்காரர் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கலானார்.
பையன்: அம்மா, உங்கள் தோட்டத்தில் புல்லை வெட்டி சீர்ப்படுத்தும் வேலையை எனக்குத் தருகிறீர்களா?
பெண் (அடுத்த முனையிலிருந்து): தம்பி, என்னிடம் அதற்கு ஆள் இருக்கிறது.
பையன்: அம்மா, இப்போது நீங்கள் அந்த ஆளுக்குத் தரும் கூலியைவிடக் குறைத்துக் கொடுங்கள். பாதி கொடுத்தாலும் போதும்.
பெண்: இப்போது வேலை செய்யும் பையனே நன்றாகச் செய்கிறான்.
பையன்: (விடாமுயற்சியோடு) உங்கள் தோட்டத்தின் நடைபாதை, பக்கத்திலுள்ள இடங்கள் எல்லாவற்றையும் நான் சுத்தம் செய்வேன் அம்மா. மற்றவீடுகளைவிட உங்கள் வீடு பார்க்க சுத்தமாக அழகாக இருக்கும்.
பெண்: இல்லைப்பா, வேண்டாம்.
பையன் தொலைபேசி ரிசீவரை வைத்தான். கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக வந்தான். அவர் சொன்னார்: தம்பி, உன் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நான் வேண்டுமானால் உனக்கு வேலை தருகிறேன்.
பையன்: வேண்டாம் சார்.
கடைக்காரர்: ஆனால் வேலை வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தாயே.
பையன்: இல்லை சார், என் வேலை எப்படி இருக்கிறது என்று செக் பண்ணிப் பார்த்தேன். நான் பேசிக்கொண்டிருந்தேனே, அந்தப் பெண்மணிக்குத் தோட்டவேலை செய்யும் பையன் நான்தான்.


ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 1

ஆதிக்கக் கலாச்சாரம்

(இந்த நீண்ட கட்டுரை, இருபத்தைந்து ஆண்டுகளுக்க முன்பு 1990இல் எழுதப்பட்டது. திருச்சி செயின்ட் பால்’ஸ் செமினரி (புனித சின்னப்பர் குருத்துவக் கல்லு£ரி) நடத்துகின்ற அன்னம் இறையியல் சிற்றேடாக (ஏடு 3, சிற்றேடு 3)ஆக வெளிவந்தது.

(ஏட்டிலுள்ள குறிப்பு: தமிழ் இறையியல் மன்றம், தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவை, பண்பாடு-மக்கள் தொடர்பகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அன்னம் சிற்றேட்டினைத் தயாரிக்கின்றன. தொடர்பு முகவரி: மேலாளர், புதிய வைகறை, பெஸ்கி கல்லு£ரி, திண்டுக்கல்)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கருத்துகள் இன்றும்கூட சற்றும் மாறவில்லை, தமிழக நிலைமை அன்றிருந்ததைவிட மிகமோசமாகத்தான் மாறியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதனால் பயன் கருதியே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நீளம் கருதி மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்படுகிறது.

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 1

ஃ உலகில் மிகவும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அதேசமயம் உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது.

ஃ மத்திய அமைச்சர் முப்தி முகமத் சையத்தின் ஒருநாள் செலவு ரூ.7180.நமது மத்திய அமைச்சர்கள் 19 பேருக்கு ஓர் ஆண்டிற்கான செலவு ரூ.1.10 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றைய மதிப்புக்கு இதை நீங்கள் நு£றால் பெருக்கிக்கொள்ளலாம்.) (இந்தியன் எக்ஸ்பிரஸ் 10-02-90)

ஃ நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் (ரூ.17 அப்போது) குறைவான வருமானம் பெறுபவர்கள் உலகில் 110 கோடி. இதில் 31.5 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். (உலக வங்கி அறிக்கை 16-07-90, இந்து இதழ்)

ஃ லண்டனில் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் நமது நாட்டைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் 11ஆம் இடம் பெற்றுள் ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3200 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்). பட்டியலில் உள்ள இதரப் பெரும் பணக்காரர்களில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். (இந்து நாளிதழ், 09-04-90).

ஃ 1989ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இநிதயாவின் அந்நியக்கடன் ரூ, 69681 கோடி. (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 04-04-90).

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும் (இன்றும் ஒலிக்கின்ற பிரபல திரைப்படப் பாடல்).

இந்தியாவின் பொருளாதார நிலையில் மக்களிடையே எவ்வளவு கடும ஏற்றத் தாழ்வுகள் என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் ஓரளவு காட்டும். சமமமான பொருளாதார வாய்ப்புகள் அற்ற ஒரு நாட்டில் மக்கள் சம அந்தஸ்தோடு எப்படி வாழ முடியும்?

வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக ஒருபக்கம் தனிமனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற மேலோட்டமான போதனை நடக்கிறது. அதேசயம் நமது தலைவர்களின் ஊழலும் ஒழுக்கக்கேடும் சந்தி சிரிக்கிறது. இதில் கட்சி வேறுபாடுகள் இல்லை. ராஜீவ் காந்தியின் ஊழல்களை விளம்பரப் படுத்தி ஆட்சிக்கு வந்த ஜனதா தளத்தில் தேவிலால் சௌதாலாக்கள் இல்லையா? குடிக்க வேண்டாம் என்று ஒரு பக்கம் தமிழக அரசு விளம்பரம் செய்து கொண்டே தமிழ்நாட்டில் பாக்கெட் சாராயம் விற்பனை ஆகிறது
(மீண்டும் இந்தக் கட்டுரை 1990இல் எழுதப்பட்டது என்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்).

கள்ளக்கடத்தல் மன்னர்களின், கள்ளச் சந்தைக் காரர்களின், சாராய வியாபாரிகளின் சட்டைப் பைக்குள் நம் அரசியல் தலைவர்கள். ஆட்டோ சங்கர் முதலிய கொலைகாரர்களின் பாக்கெட்டுகளுக்குள் நம் அரசாங்க அதிகாரிகள். ஆனால் இந்த அரசாங்கம் தனிமனிதனைப் பார்த்து போதனை செய்கிறது, “வன்முறை கூடாது, நல்லவனாக வாழ்” என்று.

கண்ணகி சிலையின் கீழ் ஆபாச போஸ்டர்கள். விபசாரம் நடக்கிறது. விளம்பரத் திற்காக பம்பாயிலிருந்து விலைமாதர்களை விடுதலை செய்து அழைத்து வருகிறது தமிழக அரசு. விபசாரத்தையே ஒழித்துவிட்டால் நல்லதுதான். ஆனால் ரெட்லைட் பகுதி பம்பாயில் மட்டும்தான் இருக்கிறதா? இங்கே தமிழகத்தில் சேலம் போன்ற சிறு நகரங்களிலும் நாறுகிறதே அதைப்பற்றிக் கவலை இல்லையா? இதுதான் இன்றைய கலாச்சாரம். கோளாறு எங்கே இருக்கிறது?

அமைப்புக் கூறுகள்
சமூகம் பல கட்டுமானங்களால் ஆகியது. பொருளாதாரம், சமுதாயம், சாதி, அரசியல், கலாச்சாரம் (இதில் மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஆகிய யாவும் அடங்கும்) ஆகிய தளங்களைக் கொண்டது. இவற்றில் பொருளாதாரக் கட்டுமானம்தான் அடிப்படை என்றார் கார்ல் மார்க்ஸ். பிற யாவும் அதன் மேல் அமைந்தவை. ஆகவே அவற்றை மேற்கட்டுமானங்கள் என்றார். பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானமே பிற யாவற்றையும் பாதிக்கிறது என்பது அவரது கருத்து.

பொருளாதாரமே இறுதியில் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயித்தாலும், சமுதாய அரசியல் கலாச்சார மேற்கட்டுமானங்களும் ஓரளவு சுயநிர்ணயத்தோடு இயங்கி மனிதனின் வாழ்நிலையை பாதிக்கின்றன. மேலும், பொருளாதாரம் மட்டும்தான் சமுதாய, அரசியல், கலாச்சார நிலைகளை பாதிக்கிறது என்றில்லை. கலாச்சாரமும் கீழ்நோக்கி இயங்கி, பொருளாதார அமைப்பை பாதிக்கிறது. இப்போதுளள ஏற்றத் தாழ்வான சமூகத்தை மாற்றி சமத்துவ இந்தியாவை உருவாக்க வெறும் பொருளாதாரப் புரட்சி, அரசியல் புரட்சி நடந்துவிட்டால் போதாது. அடிப்படையில் அது ஒரு கலாச்சாரப் புரட்சியாகவும் அமையவேண்டும். பொருளாதார, அரசியல் மாற்றங்களை உள்வாங்கி ஏற்றுக்கொள்ள கலாச்சார மாற்றம் தேவை.
நமது வாழ்நிலையை ஓரளவு பாதித்துள்ள கலாச்சாரம், அடிக்கட்டுமானமாக இருக்கும் பொருளாதார அமைப்பையும் நியாயப்படுத்தி வருகிறது. எனவே கலாச்சாரம் பற்றிய ஆய்வு இன்று மிகவும் தேவையான ஒன்று.

மதம், கல்வி ஆகிய கலாச்சாரக் கூறுகள் பற்றி அன்னம் ஏடுகளில் ஏற்கெனவே கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த ஏடு பொதுவாக ஆதிக்கக் கலாச்சாரம் பற்றி நோக்குகிறது. கலாச்சாரம் என்னும்போது முக்கியமாகக் கலை இலக்கியங்களும் அவற்றோடு தொடர்புடைய வெகுஜனச் சாதனங்களும் எடுத்துக்கொள்ளப் படுகின் றன.

கலாச்சாரம்
கலாச்சாரம் என்ற சொல் பலருககுப் பலவிதமான அர்த்தங்களைத் தரக்கூடும். இசை, நாட்டியம், இலக்கியம், ஒவியம் போன்ற நுண்கலைகள் சம்பந்தப்பட்டதுதான் கலாச் சாரம் என்று நினைப்பவர்கள் இருககிறார்கள். இச்சொல்லுக்குச் சமமாக பண்பாடு என்ற து£யதமிழ்ச் சொல்லும் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாக வழக்கில் இருக்கிறது. மனம் பண்படுவது அல்லது ஒழுக்க சம்பந்தமானதுதான் பண்பாடு என்பவர்கள் உண்டு. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இந்த அர்த்தங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை உள்ளடக்கிய, இன்னும் பரந்த அர்த்தத்தில் இந்தச் சொல் இன்று மானிடவியல், சமூகவியல் ஆகிய அறிவுத் துறைகளில் ஆளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சமயம், கலை, பிற வாழ்நெறிகள் ஆகிய அனைத்தும் கலாச்சாரம் என்பதில் அடங்கும். இவ்வாறு பார்க்கும்போது, கலாச்சாரம் என்பது வெறும் கலை, ஆச்சாரம் மட்டும் அன்று, ஒரு சமூகத்தின் அக, புற விஷயங்கள் அனைத்தையும் குறித்து நிற்பதாக அமைந்திருக்கிறது.

கலாச்சாரம் என்ற சொல்லோடு எத்தனையோ அடைமொழிகள் சேர்த்து, பலவேறு விஷயங்கள் குறிக்கப்படுகின்றன. வெகுஜனக் கலாச்சாரம், கும்பல் கலாச்சாரம், பிரபல கலாச்சாரம், மேல்மட்டக் கலாச்சாரம், ஆதிக்கக் கலாச்சாரம், மாற்றுக் கலாச்சாரம் எனப்பல. டாமினன்ட் கல்ச்சர் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்குச் சமூகவியல் அகராதிகள் பெரும்பான்மையோரால் கைக்கொள்ளப்பட்டு வரும் கலாச்சாரம் என்றே அர்த்தம் சொல்கின்றன. எந்த ஒரு சமூகத்திலும், இன, மத, சாதி, பால் வேறுபாடுகளைக் கடந்து, பெரும்பான்மையான மக்கள் ஒரேவிதமான சிந்தனைப்போக்கு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களது சிந்தனை செயல்களை நாம் ஆதிக்கக் கலாச்சாரப் போக்கு கள் என்று சொல்லலாம். இதற்கு எதிரான போக்கு, ஒரு சிறுபான்மையோரால் ஆதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் சிந்தனை, செயல், போக்குகள் மாற்றுக் கலாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆளும் கலாச்சாரம் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இருவித அர்த்தங்கள் உண்டு. ஒன்று மேலே கூறியதுபோலப், பெரும்பான்மையோரால் கடைப் பிடிக்கப்படும் கலாச்சாரம். மற்றொன்று, இந்தக் கலாச்சாரக் கூறுகள், ஆதிக்க சக்திக ளால், பிற யாவர்மீதும், அவர்கள் சிந்தனைப் போக்கின்மீதும், குறிப்பாக உருவாகும் இளஞ்சிறார்மீதும் கட்டுப்பாடு செலுத்துமாறு, கலாச்சாரக் கருவிகள்மூலமாகத் திணிக் கப்படுகின்றன. அதேசமயம் அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களும், வளரும் பருவத்தினரும் தங்கள் மேல் இவை திணிக்கப்பட்டதாக உணரா வண்ணம், அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் மனத்தின் மேல் ஆதிக்கம் செலுத் துமாறு கவர்ச்சியாக அவை தரப்படுகின்றன. இந்த அர்த்தத்தில் நம் மனத்தின்மீது, கட்டுப்பாடு/ஆளுகை செலுத்தக்கூடிய கலாச்சாரம் என்றும் பொருள்படுகிறது. இந்த இரண்டு அர்த்தங்களும் ஒருங்கு செல்லக்கூடியவை என்றாலும, இரண்டாவதாகக் கூறப்படும் அர்த்தமே முக்கியமானது.

தமிழ்க் கலாச்சாரம்
பொதுவாக இந்திய ஆதிக்கக் கலாச்சாரம் என்று பார்ப்பதற்கு முன்னர் தமிழ்க் கலாச் சாரம் என்பதன் சாரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். தேசியக் கவிஞரான நாமக்கல் கவிஞர், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார். நம் தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிக்கக் கலாச்சாரம் எதையெதைத் தமிழ் மக்களுக்கான விதிகளாக வகுத்துள்ளது? இவற்றின் அறிகுறிகள் என்ன?
******************************************************************************************«
சென்னை நகரில் சராசரியாக தினம் ஒருவர் தன்னைத் தீயிட்டுத் தற்கொலை செய்துகொள்வதாகச் சென்னைக் காவல்துறை, பொதுமருத்துவமனைப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தற்கொலைகள் அரசியல் தலைவர்களுக்காக நிகழ்ததப்படும்போது, பத்திரிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களைப் பற்றி வார்த்தைத் தோரணங்கள் கட்டுகின்றன, கண்டிப்பதேயில்லை. -சுட்டி, ஏப்ரல் 1990
“””””””””””””””””””””””””””””””””””””””
பெண் குழந்தைகளைப் பிறந்தவுடனே கொன்றுவிடுவார்கள் என்றார் ஒரு எண்பது வயதுப் பெண்மணி. கடந்த ஆறு அல்லது ஏழு வருடங்களில் எனக்குத் தெரிந்து இந்தக் கிராமத்தில் மட்டும் (உசிலம்பட்டி அருகே) குறைந்தது 150 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. சாதி வேறுபாடில்லாது, பொருளாதாரப் பற்றாக்குறையே பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது தெரிகிறது.
-தி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா 04-03-90
“”””””””””””””””””””””””””””””””””””””””””
உலகில் எந்த ஒரு மூலையில் பிறக்கும் எவனொருவன் மீதும் மத/வர்க்க முத்திரைகள் மட்டுமே பதிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் பிறக்கின்ற ஒருவன் இவை தவிர சாதி முத்திரையும் தரித்துக்கொண்டுதான் இம்மண்ணில் கால்தரிக்க வேண்டியிருக்கி றது. நந்தனார் நெருப்பில் எரித்துக் கொண்டுதான் தம் சாதித் தகுதிகளை உயர்த்திக் கொள்ளமுடிந்தது. இப்படி முக்தியடைந்து அடியார்கள் ஆனபின்பும் உயர்சாதி அடி யார்களுக்குச் சமமாய் மதிக்கப்பட்டதில்லை.
-அ. மார்க்ஸ், சாதியும் வர்க்கமும், முன்னுரை, 17-05-88
**************************************************************************************************
மேற்கண்ட மூன்று மேற்கோள்களும தமிழ்ச் சமூகத்தின் மூன்று அடிப்படை அம்சங்க ளான (பரந்த அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைகளுமான) வீரம், பெண் பற்றிய நோக்கு, சாதியம் இவற்றைக் காட்டுகின்றன. நம் கலாச்சாரத்தை உருவாக்கும் இன்னொரு விஷயம் பணம்.

தமிழ்க்கலாச்சாரம்-அன்றும் இன்றும்
சங்க இலக்கியங்கள் தொடங்கித் தமிழ்க்கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்தால், அது தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகளை அறிய உதவும்.

அகம் (உள்ளுலகம்-பெண்ணுக்கு), புறம் (வெளியுலகம்-ஆணுக்கு), கற்பு (பெண் ணுக்கு), வீரம் (ஆணுக்கு), நடுவீடு (நம்மவர்க்கு), புறவீடு/திண்ணை (பிறருக்கு) ஆகிய கலாச்சாரக் கூறுகள் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தமிழ்ச் சமுதாயத்தில் காணப் படுகின்றன. இக்கூறுகள் வெளிப்படும் வடிவங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான். உதாரணமாக, சங்க காலப் பெண்கள் வீட்டிற்குள் இருந்து வீட்டுவேலைகளான சமையல் முதலியவற்றைச் செய்துவந்தார்கள். இன்று பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் படித்து வெளியே சென்று வேலைசெய்து வந்தாலும், சமையல் முதலிய வீட்டுவேலைகளைச் செய்கிறார்கள். பெண்ணாக உருவகிக்கப்பட்ட நாட்டையும் தங்கள் பெண்களையும் பிறர் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகப் போரிட்டனர் சங்ககால ஆண்கள். தங்கள் வீட்டுப் பெண்கள்மீது பிறர் கை பட்டுவிடக்கூடாது என்று பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஆண்களை இன்றும் காண்கிறோம். யாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரே விஷயம் காதல்-வீரம் (அடிதடி, சண்டை).

இன்றைய தமிழனின் தனித்த கலாச்சார குணங்களில் முக்கியமானவை மூன்று. ஒன்று, நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழாமல் போனால் சரி என்ற சுயநல மனப்பான்மை. ஐயோ, நம்மால் முடியுமா என்று பீதி கொண்டு மயங்கும் தாழ்வு மனப்பான்மை. நமக்கேன் வம்பு என்ற போர்க்குணம் இன்மை. இந்த மூன்றையும் தொகுத்துச் சொன்னால், எப்படியும் பிழைக்கும் தத்துவம்ட என்று சொல்லலாம். இந்த மூன்று குணங்களும் பிற இனத்தவர், மொழியி னரிடையே இருந்தாலும் தமிழரிடையேதான மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

சுயநலம்
எப்படியாவது அதிக வருமானம் பெறவேண்டும், தான் மட்டும் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கமே சுயநலத்தை வளர்க்கிறது. அரசாங்க அதிகாரியாக இருப் பவன் லஞ்சம் வாங்குகிறான். ஏழைகளோ லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் அச்சாகும் லாட்டரிச் சீட்டுகளில் 70 சதவீதம் தமிழ் நாட்டில் விற்பனையாகின்றன. லட்சாதிபதி ஆகிவிட வேண்டும் என்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். லாட்டரிச்சீட்டு எத்தனை லட்சம் பேரை ஏமாற்றியிருக்கிறது என்பது ஒரு சோகக்கதை. உழைப்பில் தமிழனுக்கு நம்பிக்கை போய்விட்டது. குறுக்கு வழியே சிறந்த வழி இங்கே. அதில் கேவலம் கொள்ளும் மனப்பான்மை மறைந்து, பணம் எல்லாவற் றையும் சரிப்படுத்திவிடுகிறது. பதவிக்காக, பிழைப்புக்காக, தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக் கள் மந்திரிகள் மட்டுமல்ல, கலெக்டர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். எப்படியாவது பிழைத்தாக வேண்டும் என்பதன் தீவிரத்தன்மை நக்கிப் பிழைக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பதும் விமரிசனம் செய்வ தும்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. தட்டிக்கேட்டால் நாம் பாதிக்கப்படுவோம் என்பதற்காக அநீதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் சுயநலம் தமிழரிடம் அதிகம் உண்டு.
சென்னைக்கருகே பட்டப்பகலில் தாதர் எக்ஸ்பிரஸில் பலபேர் முன்னிலையில் மூன்று மாணவிகள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்த்தாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை அண்ணாசாலையில் பணப்பறிப்பும் நகைப்பறிப்பும் நிகழ்ந்ததாகவும் நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. நான், எனது என்ற சுயநல மனப்பான்மை, எவன் எப்படிப் போனால் என்ன என்ற தலையிடாக் கொள்கையை உருவாக்கிவிட்டது. இந்தப் பண்பைத் தமிழ்த் திரைப்படங்கள் உருவாக்கி வளர்த்து வருகின்றன. கதாநாயகனுக்கும் வில்லன் கூட்டத்தினர்க்கும் சண்டை நடைபெறும்போது சுற்றி சுமார் ஐம்பதுபேராவது நிற்பார்கள். ஆனால் தலையிட மாட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தாழ்வு மனப்பான்மை
“இதை என்னால் சமாளிக்க முடியுமா?” என்ற கோழைத்தனம் தாழ்வு மனப்பான்மை யால் ஏற்படுகிறது. தோல்வியை அல்லது இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தற் கொலை செய்துகொள்ளும் கோழைத்தனம் தமிழரிடையே அதிகம் காணப்படுகிறது. தற்கொலை ஓர் உளநோய். வாழ்க்கைச் சிக்கலை எதிர்த்து நிற்கும் திறமையின்மையின் வெளிப்பாடு. இதனைப் பாமரத் தமிழ் மக்கள் போதிய அளவு உணரவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் இந்த பலவீனத்தைப் பெருக்கி வருகின்றன. தற்கொலை, அரசியல் சார்பு பெறுகின்றபோது தியாகங்களாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவில் சென்னை நகரில்தான் மிகுதியான தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகள் மிகுதியாக உள்ள மாநிலம் தமிழர வாழும் புதுவை மாநிலம் என்று அசைட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. இந்திரா காந்தி அம்மையார் கொலைசெய்யப்பட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே. ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என். டி. ராமாராவ், மத்திய அரசின் நடவடிக்கையால் முதலமைச்சர் பதவியை இழந்தபோது அதற்காகத் தற்கொலை செய்துகொண்டவர் ஒரு தமிழர் என்றால் வியப்பாக இல்லையா?

தாழ்வு மனப்பான்மை தன்னம்பிக்கையின்மையை உருவாக்கியிருக்கிறது. இதனால் தமிழனுக்குத் தாய்மொழிமேல் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த மொழியையும் படிக்கத் தயாராக இருக்கிறான் தமிழன். தமிழ் உச்சரிப்பிலும் எழுத்துக்கூட்டலிலும் பிழைகள் இருந்தால் கண்டுகொள்ளாத தமிழன், ஆங்கில உச்சரிப்பில், எழுதுவதில் தவறு காணப்பட்டால் அதைக் குறையாகக் காண்கிறான். இது தமிழனின் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
தன்னைத் தாழ்வாக நினைப்பதனால்தான் கட்சித்தலைவரை, அபிமான நடிகரை, கடவுளாக வழிபடும் அளவுக்குத் தாழ்ந்துபோகிறான்.
*************************************
பகல் பதினொரு மணியளவில் சுமார் பத்துப் பன்னிரண்டு அடி உயரமுள்ள கமலஹாசன் கட் அவுட்டுக்கு உச்சியில் சாரம் கட்டி ஏறி பால் அபிஷேகம் செய்தார் கள் அவரின் ரசிகர்கள். -நக்கீரன் இதழில் பிரபஞ்சன்
**********************************
தலைமை வழிபாட்டுக்கு மூல ஊற்று தாழ்வு மனப்பான்மை. தன்னைப் பற்றியும் தன் ஆற்றலைப் பற்றியும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய திறமை குறைவானது என்ற தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பிறரைச் சார்ந்து வாழும் நிலைக்கு ஆளாகிறான். சார்புணர்ச்சியே அவனைத் தலைமை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில்தான் இரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. நடிகர் ரஜனிகாந்த் பெயரில் 13 பத்திரிகைகள் வெளிவருவதாகவும், உலகிலேயே ஒரு நடிகருக்காக இவ்வளவு பத்திரிகைகள் வெளி வருவது தமிழில் மட்டும்தான் என்றும் தெரியவருகிறது.

தனக்காக ஒரு தலைவன் இருக்கிறான் என்ற எண்ணம் தொண்டனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. தலைவனோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கிறான். இதற்குப் பணம் கொடுத்தும் நடிகர்கள் வளர்க்கிறார்கள். இந்த ஒன்றிணைப்பு மூலம் தலைவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்கப் பழக்கப்படுத்தப்படுகிறான். தன் சொந்தக் குழந்தையை சற்றும் கவனிக்காதவன், தன் தலைவனுக்குக் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கி மகிழ்கிறான். தலைவன் மனைவியைப் பிரிந்திருந்தால் இவன், தன் சொந்த மனைவியை கவனிக்கத் தெரியாதவன், உண்ணாவிரதம் இருக்கிறான்.

போர்க்குணம் இன்மை
தமிழர்களின் குணங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது பொறுமை. எதிரியிடம் போராடுவதைவிட அவரிடம் இணங்கிப் போகின்ற இந்தப் போர்க்குணம் இன்மை எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அண்டை மாநிலத்தவர் தமிழர்களை ஏமாற்றுவதற்கும் இது பயன்படுகிறது. தமிழ்நாட்டை ஆரியச் சார்பும், தெலுங்குச் சார்பும் கொண்ட மன்னர்கள் ஆண்டபோதும், மகாராட்டிரர்கள் ஆண்டபோதும், ஐரோப்பியர்கள் வருகை தநத்போதும் பொதுமக்களின் இயக்கங்கள் தமிழகத்தில் எழா தது குறிப்பிடத்தக்கது. கங்கைகொண்ட, கடாரம் கொண்ட இனம் தமிழினம் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறோம். தமிழரைப் பற்றி அறிஞர் கார்ல் மார்க்ஸ் எழுதும்போது, அயல் ஆதிக்கத்திற்கு (ஆங்கிலேயருக்கு) ஏதுவாக, எளிதாக அடிபணிந்த நாடுகளுள் தமிழநாடு முன்னிலை வகிக்கிறது என்கிறார்.

1311இல் தில்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் தமிழ்நாட்டின்மீது படையெடுத்த போது திருச்சிக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்களையும் தங்கள் கால்நடைகளையும் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டனர். வீரமற்ற கோழைகளாக வாழ்ந்திருக்கிறோம்.

இன்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாத நிலையிலேயே தமிழர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமேயானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப்போர் தொடங்கியிருக்கும் என்று முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஏ. பி. வேங்கடேசுவரன் கூறியிருக்கிறார்.

தமிழரின் தனித்த கலாச்சார குணங்களாகப் பார்த்தவை ஓரளவு பரந்த அளவில் இந்தியாவின் கலாச்சாரக் குணங்களாகக் கொள்ளக்கூடியவையே என்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை. பழையகால தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படை மதிப்புகள் அனைத்தையும் இன்றைய யதார்த்தத்தோடு தொடர்புபடுத்திக் காணமுடியும்.

நிலவுடைமைக் காலத்துக் கருத்துககூறுகளான ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள்-குறிப்பாகச் சாதி தொடர்பானவை-இன்றைய முதலாளித்துவ யதார்த்தத்துடனும் இணைந்துள்ளன. பழைய ஆதிக்கச் சமூக மதிப்புகள் நி£யயமாக இன்றைய சமூகத்தில் மறைந்து போயிருக்க வேண்டும். புதிய மதிப்புகள் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் மக்கள் தொடர்புச் சாதனங்களும் கல்வியும் மதமும் கோயில்களும் சாதியும் பழைய ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள் மறைந்துவிடாமல் கட்டிக்காத்து வருவதால் புதியவை உருவாக முடியவில்லை.

பத்திரிகைகள், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய தொடர்புச் சாதனங்கள் அரசியல், பொருளாதார பலம் கொண்டோர் கையில் உள்ளன. இவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தும் ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைத் தன்னுள் கொண்டவையே. இந்தத் தொடர்புச் சாதனங்களை நுகர்வோர் தாங்களாகவே விரும்பி ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுகிறது. விளம்பரங்களை எடுத்துக் கொண்டால், அவை எல்லோராலும், குறிப்பாகச் சிறார்களாலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் நுகர்வுப் பண்டங்களை அறிமுகப்படுத்துவதோடு ஆதிக்கக் கலாச்சார மதிப்புகளையும் சேர்த்துக் கொ(கெ)டுக்கின்றன. (தொடரும்)


பக்தியும் வன்முறையும்

பக்தியும் வன்முறையும்

மதம் என்பதே வன்முறையை உள்ளடக்கியது என்ற அனுபவத்தைப் பல காலமாகக் கண்டு வருகிறோம். இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இது மிக உச்சமான ஒரு நிலையை அடைந்தது, இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. ஆனாலும் இன்றுவரை மதங்கள் மனிதனின் நன்மைக்காக ஏற்பட்டவையே என்று அதனால் பயன்பெறுவோர் சாதித்து வருகிறார்கள்.

இங்கே நாம் மதத்தின் வன்முறையைப் பற்றிப் பேசவரவில்லை. எந்த மதத்திலும் சான்றோர்கள், பக்திமான்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் வன்முறைக்கு விதிவிலக்காக இல்லை. பக்தி ஆழ்ந்த அன்பு ணர்ச்சி, இறைவன்மீது கொண்ட காதல் என்று நோக்கப்படுகிறது. ஆனால் எந்த அன்பிலும் வன்முறை இருக்கவே செய்கிறது என்று உளவியல் சொல்லுகிறது. அவ்வாறானால் பக்தி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியுமா? பிறரைத் துன்புறுத்துதல், தன்னையே துன்புறுத்திக் கொள்ளுதல் (இரண்டுமே வன்முறைதான்) என்ற இரண்டையுமே பக்தியில் காண்கிறோம். இன்றும் நாக்கில் வேலைக்குத்திக் கொண்டும், முதுகில் அலகு குத்திக்கொண்டும் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்பவர் களைக் காண்கிறோம் அல்லவா?
சாதாரணமாக, விரதம் இருப்பதே ஒரு எல்லையைத் தாண்டும்போது சுய வதைத்துக் கொள்ளல் ஆகிவிடுகிறது. ஒருவேளை உணவை உண்ணாமல் இருக்கும்போது அது விரதமாகிறது. ‘சஷ்டி விரதம் இருக்கிறேன்’ என்று சொல்லி, இரண்டுநாள் முழுவதும் பட்டினி கிடக்கும்போது அதுவே சுய வதைத்தல் ஆகிறது. காந்தியடிகள் இவ்வாறு தம்மைத் தாமே சுயவதை செய்துகொண்டுதான் எல்லாரையும் தமது வழிக்குக் கொண்டு வரமுடிந்தது.

தமிழிலுள்ள பெரியபுராணத்தை எடுத்துக்கொள்வோம். அதில் அறுபத்து மூன்று நாயன்மாருடைய வரலாறு சொல்லப்படுகிறது. இந்த நாயன்மார் கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தித் தங்களை வதைப்பதையோ பிறரை வதைப்பதையோ செய்திருக்கிறார்கள். சமணர்களுடன் சண்டையில் ஈடுபடு கிறார் ஒருவர், தற்கொலை செய்துகொள்ள முனைகிறார் மற்றொருவர், தந்தையின் காலை வெட்டுகிறார் ஒருவர், மனைவியின் கையை வெட்டுகிறார் இன்னொருவர், ஒருவர் அரசியின் மூக்கை அரிகிறார், மற்றவர் வேறொருவரின் நாக்கை அறுக்கிறார், தன் கழுத்தை ஒருவர் அறுத்துக்கொள்கிறார், உறவினர்களை ஒருவர் கொலைசெய்கிறார், முழங் கையையே சந்தனமாக அரைக்கிறார் ஒருவர், தன்தலையில் தீயிட்டுக் கொள்கிறார் ஒருவர், சொந்தமகனையே கறிசமைக்கிறார் மற்றொருவர். இவையெல்லாம் வன்முறையல்லாமல் வேறு என்ன?
கண்ணப்பரின் கதையை நோக்குவோம். இறைவனின் (லிங்கவுருதான், முழுமனித உருகூட அல்ல) கண்களில் இரத்தம் பெருக்கெடுக்கிறது. கண்ணப்பர் போன்ற ஒரு வேடுவருக்கு எத்தனையோ பச்சிலைகள், மூலிகைகள் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தன் கண்ணையே வகிர்ந்து இறைவனின் கண்ணில் அப்பிவிடுகிறார். உடனே அதில் இரத்தம் நின்றுவிடுகிறது. ஆனால் மற்றொன்றில் இரத்தம் பெருக் கெடுக்கிறது. அடையாளத்திற்கெனத் தன் காலை இறைவனின் உச்சிமீது வைத்து, மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்து இறைவன் கண்ணில் வைக்கிறார்.

இக்கதை பல சுவையான தலைகீழ் மாற்றங்களைச் செய்கிறது, அது நமக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சான்றாக, கண்ணைத் தாமரைக்கு ஒப்பிடு வார்கள். தாமரையை இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள். கண்ணப்பரோ கண் ணையே தாமரையாக அர்ப்பணிக்கிறார். இறைவனுக்கு மாமிச உணவு ஆகுமா? (இப்போதும் இதற்காகத்தான் வடநாட்டில் பெரிய சண்டைகளை எழுப்புகிறார்கள்). ஆனால் கண்ணப்பரோ தான் கொண்டுவந்த எந்தெந்த (மாட்டுக்கறியை விட்டு விடுவோம்) மாமிசங்களையோ இறைவனுக்குப் படைக்கிறார். தான் வாயில் நிரப்பிவந்த நீரையே இறைவனுக்கு அபிஷேக மாகச் செய்கிறார். இதையெல்லாம்விட, சாதாரணமாக நாம் என்ன செய்வோம்? இறைவனின் பாதங்களில் நம் தலையை வைத்து வணங்கு வோம். கண்ணப்பர், தன் பாதத்தை இறைவன் தலைமீது வைக்கிறார். ஒரு வேடுவரின் பக்திக்கு அந்தக்காலப் பனுவல் ஒன்று இத்தகைய மரியாதையை அளித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வன்முறை வன்முறை தான். கண்ணப்பர் செய்துகொள்ளும் சுயவதை-இரு கண்களையும் இழத்தல் -மிகப் பெரியது. (உடனே அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார் என்று சமாதானம் சொல்லிவிட வேண்டாம். அப்படிச் செத்துப் போனால் அதுவும் சுயவதைதான்.) இந்த மாதிரி சுயவதையோ பிறர்வதை யோ எல்லாவற்றிற்கும் இறைவன் “சோதனைகளே” காரணமாக அமைகின் றன என்பதுதான் மிகப் பெரிய வேடிக்கை.
சிறுத்தொண்டரின் பிறர்வதையும் சுயவதையும் இதைவிடப் பெரியவை. இறைவன் காபாலிக வடிவத்தில் வருகிறானாம். சிறுத்தொண்டரிடம் ‘எனக்கு உன் பிள்ளைக்கறிதான் வேண்டும்’ என்கிறானாம். பிள்ளையைக் கொல்வது பிறவதை. அதை நேரில் செய்து, பிறகு பிள்ளையின் உடலைச் சமையல் செய்து கறியாகப் படைப்பதைப் போன்ற பெரிய மனவேதனை பெற்றோருக்கு வேறு ஏதேனும் இருக்கமுடியுமா? இதைவிடச் சுய வேதனை வேறு என்ன இருக்க இயலும்? (பிறகு இறைவன் உணவுண்ண அமரும்போது பிள்ளையைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்கிறானாம், பிள்ளை உயிரோடு ஓடிவருகிறானாம் – இவை உண்மையெனவே வைத்துக் கொண்டாலும், அதற்கு முன்பு பிள்ளையைக் கொன்றதும், கறிசமைத்ததும், படைத்ததும் நிஜமான மனவேதனை அளிக்கும் செயல்களே அல்லவா?) பக்தியின் காரணமாக விளையும் பிறர்வேதனைக்கும் சுயவேதனைக்கும் (வன்முறைக்குப்) பெரிய உதாரணங்கள் இவை.

பிறமதத்தினரைத் துன்புறுத்துவது எல்லா மதங்களிலுமே காணப்படும் வன்முறை. தங்கள் மதத்தினைரையும் கூட தீவிர மதவாதிகள் வதைக்கவே செய்கிறார்கள். இருநாளுக்கு முன்புகூட காதலனை நாடிச் சென்ற ஒரு பெண்ணைக் கல்லால் அடித்தே தாலிபன் தீவிரவாதிகள் கொன்றிருக் கிறார்கள். மாணிக்க வாசகரின் கதையில், இலங்கையிலிருந்து பௌத் தர்கள் அவருடன் வாதிட வருகிறார்கள். மூவாயிரம் பேர். அவர்களுடைய வாதத்தில் உண்மையில்லை என்றால் ‘அவர்கள் ஊமையாகப் போகட்டும்’ என்று சரஸ்வதியிடம் வேண்டுகிறார் மாணிக்கவாசகர். அவ்வாறே அவர் கள் ஊமையாகிப் போகிறார்கள். உடல்சார்ந்த பிறர்மீதான, தன்மீதான வன்முறைகள் ஒருபுறம் இருக்க, மற்றவர்கள் தங்கள் கருத்தைச் சொல்ல விடாமலே ஊமையாக்கிவிடுவது எவ்வளவு பெரிய வன்முறை? இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இதைத்தான் சொல்ல முடியும்.

திருஞான சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் மூன்று போட்டிகளில் ஈடுபட்டார் என்பது பிரசித்தம். திருஞான சம்பந்தர் என்ன சொன்னாரோ தெரியாது, சமணர்கள், போட்டியில் நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் சாவோம் என்கின்றனர். அவ்விதமே அவர்கள் தோற்றுப்போய் கழுவேறினர். இது வரலாறா, புராணக்கதை மட்டுமா என்பது நமக்குத் தெரியாது. இப்படிச் சொல்வதற்குக் காரணம், சமணப் பிரதிகள் எதிலும் இக்கழுவேறிய கதை காணப்படவில்லை. வெற்றிபெற்றவர்கள் மட்டும்தான் இதை எழுதி வைத்தி ருக்கிறார்கள். பொய்யாகத் தங்கள் பெருமையைக் கொண்டாடும் விஷயமாகவும் இருக்கலாம் அல்லவா?

பெண்நாயன்மார்களும் பக்திமான்களும் இதற்கு விதிவிலக்கில்லை. அவர்களும் சுயவதையில் ஈடுபடவே செய்கிறார்கள். காரைக்காலம்மையார், தன் உடல் சதையை எல்லாம் நீக்கிவிட்டு எலும்புக்கூடாகிறார். ஒளவையார், இளமை வேண்டாம், முதுமையே வேண்டும் என வேண்டிக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.
இதெல்லாவற்றையும் விடப் பெரிய நகைச்சுவை இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தான் செய்தவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், சைவத்தையே விட்டு விடுவேன் என்று இறைவனையே பிளாக்மெயில் செய்கிறார்!
கன்னடநாட்டில், வீரசைவர்கள் சுவேதாம்பர (வெள்ளை உடை அணிந்த) ஜைனர்களைத் தேடித்தேடி தலையை வெட்டினார்கள் என்று பெருமிதத் தோடு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஜைனர்களின் ஐந்து கோயில்களை சிவன் கோயில்களாக மாற்றினார்கள் என்றும் சொல்கின்றன. இந்தவேலை நம் நாட்டில் மிகவும் பிரசித்தமானது. வென்ற மதத்தினர்கள் (இஸ்லாமியர் கிறித்துவர் உட்பட) எல்லாரும் தோற்ற மதத்தினர் கோயில்களைத் தங்கள் கோயில்களாக மாற்றியிருக்கிறார்கள், கொள்ளையடித்திருக்கிறார்கள். இவற்றை வேண்டுமானால் நாம் பக்திமான்கள் செயல் அல்ல, மத தீவிர வாதிகள் செயல்கள் என்று சொல்லிவிடலாம்.
வேடிக்கை என்னவெனில், பசுக்கள்மீதும் பிற விலங்குகள் மீதும் காட்டும் அகிம்சையைக் கூட சகமனிதர்கள் மீதும் தங்கள்மீதும் மதவாதிகளும் பக்திமான்களும் காட்டுவதில்லை என்றால், மதத்தினால் பயன்தான் என்ன? அது (யானைக்குப் பிடிப்பதுபோன்ற) “மதம்”தான். அதனால்தான் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று வேண்டினாரோ வள்ளலார்?