தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்?

1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்?

நடராசன் அவர்களால் கீசக வதம் திரைப்படம் 1916ல் எடுக்கப் பட்டது, தமிழ்ப் புனைவுத் திரைப்படத்தின் தொடக்கம் அது, எனவே இந்த வருடம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டாகிறது,

கொண்டாடுவது என்பது சில புதிய விதைகளை விதைப்பது என்றே கருதுகிறோம்…

தமிழ்த் திரைப்படத் துறையில்
விதைக்க விரும்பும் மாற்றங்கள்……………

1.தமிழக அமைச்சரவையில் கலை, இலக்கியம் , நாடகம் ,சினிமாவெக்கென்று தனி அமைச்சரவை , பண்பாட்டு அமைச்சர்
என்று ஒருவர் உருவாக்கப் பட வேண்டும்,

2.தமிழக அரசின் கீழ் சினிமாவெக்கென்று சுயேட்சையாக, தன்னாட்சி அதிகாரத்துடன் சினிமா அகாடெமி சினிமா விற்பன்னர்களால் உருவாக்கப்பட வேண்டும்,திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இது இணைப்புப் பாலமாக விளங்க வேண்டும்.

3. அரசு விருதுகள், திரைப்பட விழாக்கள், சிறு திரைப்படங்களுக்கான மானியங்கள் இந்த சினிமா அகாடெமியின் கீழ் வர வேண்டும்.குறும்படங்கள், ஆவணப்படங்கள் , விளம்பரப்படங்கெளுக்கு விருதுகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

4.அரசு திரைப்பட விருதுகள் அந்தந்த வருடத்திலேயே வழங்கப் பட வேண்டும், நடுவர்கள் சினிமா அகாடெமியின் திரைப்பட வல்லுநர்களாக இருக்க வேண்டும்.

5. ஒவ்வொரு வருடமும் அரசால் திரைப்பட விழாக்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட வேண்டும்.

6.அனைத்து மாவட்டங்களிலும் பெரிய ஊர்களில் சிறிய திரையரங்குகள் கட்டப்பட வேண்டும்,,,சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கும், திரைப்படச் சங்கச் செயல்பாடுகளுக்கும் இவை பயன் படுத்தப் படவேண்டும்.

7.சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியம்,, வெறும் பணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், , புதிய வடிவம், மாற்றுச் சினிமாக்களுக்கு ஒதுக்கப் பட வேண்டும்.

8. தமிழகத்தில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியமாக மாற்றப் பட வேண்டும்,,

9. அகாடெமியின் கீழ் அரசு திரைப்பட ஆவணக் காப்பகம் உருவாக்கப் பட வேண்டும்,”சாமிக் கண்ணு வின்செண்ட்”ஆவணக் காப்பகத்தின் செயல் பாடுகள் சில…விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியகத்தில் உருவாக்கப் பட வேண்டியவை,,,,

அ. ஒரு கலை வடிவமாகவும் அதே நேரத்தில் ஒரு தொழிற்துறையாகவும்இருக்கும் சலனத் திரைப்படத்தின் வரலாறு மற்றும் வளர் நிலைகளைத்தொகுக்கும்.
ஆ. தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்களைவரிசைப்படியும் வகைப்பாட்டின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தும்.
இ. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தடயங்களைத் தேடிக் கண்டடைந்துஒழுங்கமைத்து,பாதுகாக்கும்.
ஈ. தமிழ்த் திரைப்படங்கள் மீதான ஆய்வுகளை ஒழுங்கமைத்து,ஊக்கப்படுத்தும் மற்றும் வழிகாட்டும்.
உ. தமிழ்த் திரைப்படங்களின்,இயக்குநர்கள், மற்றும் தொழிற்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒலி-ஒளி ஆவணங்களாக உருவாக்கி பாதுகாக்கும்.
ஊ. புகைப்படங்கள் திரைப்படத்தின் நெகட்டிவ்கள்,பிரிண்டுகள்,பாட்டுப்புத்தகங்கள், படத்தின் முழுக் கதைக்கான திரைக்கதை எழுத்துக்கள்,அழைப்பிதழ்கள்,சுவரொட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல்முறையில்தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
எ. சினிமா நூலகம் அமைத்து தமிழ் மற்றும் உலக திரைப்படம் தொடர்பான நூல்கள் அனைத்தும் சேர்க்கப்படும்.
ஏ. ஆராய்ச்சி மாணவர்கள் விரும்பும் படத்தைப் பார்ப்பதற்கு சிறியகாட்சிக்கூடம் கொண்டிருக்கும்.
ஒ.மக்கள் விரும்பும் படங்களைப் பார்ப்பதற்கு சிறிய திரைப்படங்கள் உருவாக்கப் படவேண்டும்.

10.பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆவண சேகரிப்பாளர்களின் சேகரிப்புகள் அவர்கள் பெயரிலேயே காட்சிப் படுத்தப் பட வேண்டும்,

11. திரைப்படக் கலை ,குறிப்பாக உயர் நிலைப்பள்ளிகளிலேயே கட்டாயப் பாடத் திட்டமாக கொண்டு வரப் பட வேண்டும்,

இவை யாவும் செயல் படுத்தப் படும் போதே உண்மையான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் தொடங்குகிறது எனலாம்.


RR Srinivasan,

OHO PRODUCTIONS
106/2 First floor,Kanaga durga complex,
Gangai Amman koil street,
Vadapalani,
Chennai – 600 026.Tamilnadu India.

PH-094440-65336 , 044-24839293

Mail: rr18srinivasan@yahoo.com
www.poovulagu.org
http://www.facebook.com/r.r.srinivasan


நல்ல செய்தி

அல்சூரில் தாக்கப்பட்ட திருவள்ளுவர் நூலகத்தைத் தமிழ் வளர்ச்சிக்கழகம் செம்மைப்படுத்த உதவப்போவதாக அறிந்து தமிழர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
நூலகம் என்பது அறிவுக் களஞ்சியம். அறிவில் என் அறிவு உன் அறிவு என்றெல்லாம் கிடையாது. எந்த மொழியின் சிறந்த நூல்கள் அழிந்தாலும் அது உலகத்திற்குப் பொதுவான பேரிழப்புதான். இந்த நூற்றாண்டில் நாம் ஆங்கிலத்திலிருந்து, பிரெஞ்சிலிருந்து, ஜெர்மனிலிருநது, சமஸ்கிருதத்திலிருந்து, இந்தியிலிருந்து, ஏன் கன்னனடம் மலையாளம் போன்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்ப்பு வாயிலாக எவ்வளவு அறிவைப் பெற்றுள்ளோம்! இன்றும் தமிழ் தலித் இலக்கியத்திற்கு மூலம் மராட்டியும் கன்னடமும் என்று பெருமைப்படுகிறோம். ஆனால் அங்கிருக்கும் சிலர் இப்படியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தருகிறது.


தமிழ் நூலகம் நாசமானது

தமிழ் ‘இந்து’ நாளிதழில் நேற்று படித்த செய்தி ஒன்று மிகுந்த மன வேதனையை உண்டாக்கியது. பெங்களூரில் மிகுதியாகத் தமிழர் வாழும் பகுதியான அல்சூரில் இருந்த நூலகம் ஒன்றைக் கன்னட வெறியர்கள் தாக்கி நூல்களை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்து அதை நாசப் படுத்தியுள்ளனர். அங்கிருந்த போலீசுக்காரர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறியர்கள் செயலை வேடிக்கை பார்த்தனர்.
ஒரு பெரும்பான்மைக் கலாச்சாரம், சிறுபான்மையினரின் அடையாளங்களை அழிப்பதில் நூலகங்களை நாசப்படுத்துவது மிக முக்கியமான ஒரு செயல். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்ட போதும் இதனைக் கண்டோம்.

நாம் இந்தியாவில் வாழவில்லை, சிலர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம், சிலர் கன்னடநாட்டில், சிலர் ஆந்திராவில், சிலர் மகாராஷ்டிராவில்…இப்படித்தான். இங்கு மொழிகளும் மாநிலங்களும்தான் இருக்கின்றனவே ஒழிய இந்தியா என்ற கற்பனை நாடு இல்லை. இம்மாதிரி இனவெறியர்தான் நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு, பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்கள்.

இந்தச் செய்தியைத் தேர்தல் சூட்டில் ஈடுபட்ட தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசியாவிலேயே இரண்டாவது சிறப்புப் பெற்ற அண்ணா நூலகத்தையே மூடிய, அறியாமையைப் போற்றுகின்ற ஆளும் கட்சியினர் இதைக் கேள்விகேட்க மாட்டார்கள் என்பது கன்னடர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நூல்கள் தெருவில் எறிந்து நாசப்படுத்தப்பட்டதைப் பார்த்த அங்கிருந்த தமிழர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதாராம். நாமும் அதைத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழன் என்ற இன உணர்வு மேம்படாமல் அவனுக்கு வாழ்க்கை இல்லை என்பதைத் தமிழர்களாக இருப்பவர்கள் உணர்ந்தால் போதுமானது.


தமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்

தமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்

[இக்கட்டுரை, சுந்தர ராமசாமி ஆசிரியராக இருந்து நடத்திய ‘காலச்சுவடு சிறப்பிதழில்’ (1991) வெளிவந்தது (பக்கங்கள் 64-74). இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியது. வெள்ளிவிழா வெளியீடாக மறுபிரசுரம்!
இக்கட்டுரைக்கு இன்றும் பொருத்தப்பாடு இருக்கிறது என்றே கருதுகிறேன்.]

கருத்துகள் நாளுக்கு நாள் மாறுகின்றன, வளர்கின்றன. அதனால் பலவித இயக்கங்கள் தோன்றுகின்றன. பிறகு அவற்றிற்கு எதிர்ப்பு இயக்கங்களும் எழுகின்றன. இவ்வாறு மாறிச் செல்கிறது வரலாறு. தமிழில் பல இயக்கங்கள், அவை உருவாவதற்கான புறச்சூழல்கள், காரணிகள் எவையுமே இன்றி வெறும் ஃபேஷனாக அறிமுகப்படுத்தப் படுகின்றன. அதனால் அவை வேர்பிடிக்காது மறைந்து போவதையோ, மிதந்து கொண்டிருப்பதையோ அடிக்கடி காண நேர்கிறது.

இப்போது தமிழில் ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிப் பேசுவது அறிவுஜீவிகளுடைய ஃபேஷன். அவர்களே கொஞ்சம் படைப்புத் திறனும் வாய்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டும் விட்டால், மாடர்னிசம், பிறகு போஸ்ட் மாடர்னிசம், நான்-லீனியர் எழுத்து என்று பேசுவது ஃபேஷன். (நானும் அறிவுஜீவியாக என்னைக் கருதிக் கொண் டிருப்பதால் இவர்கள் பேசுவதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் விமரிசனபூர்வமாகப் பேச உத்தேசம்).

ஸ்ட்ரக்சுரலிசம் (அல்லது நம்மவர் மொழிபெயர்ப்பில் அமைப்பியல்)1, அதன் பெயரே எடுத்துக்காட்டுவதுபோல, இதுவரை மூலங்கள் அல்லது மூலகங்கள் இவற்றிற்குக் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தத்தை அமைப்புகளுக்கு மாற்றி நோக்குவது. அதன் அடிப்படைகள் மூன்று:2

1. சசூரின் மொழி பற்றிய கோட்பாடுகள்
2. பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படும் அமைப்பாக்க உருவகங்கள்/ ஆகுபெயர்கள் இவற்றை அழுத்திக்காட்டும் லெவி ஸ்ட்ராஸ் போன்றோரின் மானிடவியல் கொள்கைகள்3
3. பிராஹா வட்டத்திலும, ரஷ்யாவிலும் செயல்பட்டுவந்த உருவவியல் வாதம் (ரஷ்யன் ஃபார்மலிசம்)4

மேற்கு நாடுகளில் ஸ்ட்ரக்சுரலிச போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச அலைகள் அடித்து ஓயும் நிலையில் தமிழில் இவை பற்றியும் இவற்றைப் பயன்படுத்தியும் சில கட்டுரைகள் வரத்தொடங்கியுள்ளன. இதுவரை தொடப்படாத, சில விலக்கப்பட்ட துறைகளில் ஸ்ட்ரக்சுரலிச ஆய்வு மேற்கில் பல நல்ல நூல்களைத் தந்திருக்கிறது. (சான்றுக்கு, ரோலான் பார்த்தின் ‘மிதாலஜி’, கிறிஸ்டபர் மெட்ஸின் ‘திரைப்படம்-கற்பனைக் குறிப்பான்’ என்பவை போல). அனுபவவாதம் அறவே தூக்கி எறியப்பட்டது. வாழ்க்கையைப் பிரதிபலித்தல், உண்மையாகக் காட்டுதல், பிரக்ஞைக் கோட்பாடு ஆகியவை தூக்கி மூலையில் வீசப்பட்டன. தன் நூலின்மேல் படைப்பாளிக்கிருந்த முழு பாத்தியதை ஒழித்துக் கட்டப்பட்டது.

பின்னமைப்பியல் வேடிக்கையான, பல தலைகீழான ஃபார்முலாக்களையும் தந்திருக்கிறது. “இலக்கியம் தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது”, “நூலினால் மக்கள் வாசிக்கப்படுகிறார்கள்”, “சிந்தனை சிந்திக்கிறது”, “பேச்சு பேசுகிறது”, “எழுத்து எழுதுகிறது”….இப்படியாக.

ஏற்கெனவே உருவவியல்வாதம் ஒரு விபரீத நிலையில்5 (புதுத் திறனாய்வு என்ற பெயரில்) பின்பற்றப்பட்டு வந்த மேற்கில், அமைப்பியல் ஒரு புதிய விடுதலை போலத் தோற்றமளித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் இப்படிப் பட்ட ஆய்வுகளே தோன்றாத தமிழில்?

ஒருவகையில் எல்லாக் கருத்துகளின் அடிப்படைகளும் எங்கும் எப்போதும் முன்பே இருந்திருக்கின்றன என்பதில் ஓரளவு உண்மையுண்டு. ஸ்ட்ரக்சர் அல்லது அமைப்பு என்பதன் அடிப்படையை மேலைத் தத்துவ மரபில், சில வித்தியாசங்கள் இருப்பினும், பிளேட்டோ குறிப்பிட்ட வடிவம் (Forma) என்பதற்குக் கொண்டுபோக முடியும். தமிழில் அமைப்பியலின் வேர்கள் இல்லாமல் இல்லை. தொல்காப்பியரே ஒரு அமைப்பியவாதிதான். பூக்களின் பெயர்களை நிலங்களுக்குச் சூட்டி, நிலங்களை ஐந்துவித அமைப்புக்குள் கொண்டுவந்து, அதே அமைப்புகளை மானிட உறவுகளுக்கும் பொருத்திப் பார்க்கும்போது (ஐந்திணை) அவர் முழு அமைப்பிய வாதியாகத் தான் செயல்படுகிறார். அகத்திணைகளைப் புறத்திணைகள் ஏழினோடும் பொருத்திக் காட்டுவதும் ஓர் அமைப்பியல் தன்மையே ஆகும். ஆனால் அமைப்பியலின் குறையையும் தொல்காப்பியரிடத்திலேயே காணமுடியும். மனிதன் தன் அமைப்புகளை இயற்கையின்மீது சுமத்தும்போது எச்சமின்றிச் சுமத்த முடிவதில்லை. (அதாவது புறனடைகள் இன்றி அமைப்பாக்கம் செய்ய-பொது அமைப்புகளை உருவாக்க-முடிவதில்லை.) ஐந்திணை அமைப்புப் பற்றிக் கூறிய கையோடு, தொல்காப்பியர் ‘திணைமயக்கம்’ என்ற குழப்பமான கருத்தாக்கத்தை வைத்து, தான் கூறிய அமைப்புகளைத் தானே அழிப்பதையும் காணமுடியும். இதே போல அமைப்பியல் செயல் பட்டதனால்தான் பின்னமைப்பியல் உருவாக வேண்டிய தேவை எழுந்தது.

ஸ்ட்ரக்சுரலிச-போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச ஆய்வுகள் இலக்கியத் துறையில் பெரும்பாலும் இயங்குவது இப்படித்தான். (பழைய முறைகளாக இருப்பின் “தொல்காப்பியர் இங்கே என்ன சொல்கிறார்?” என்ற கேள்வி எழும்.) மாறாக, அமைப்பியல் வாதங்களில், என்ன முன்யூகங்கள் காரணமாகத் தொல்காப்பியம் என்ற பனுவல்5 உருவாகியிருக்கிறது என்ற கேள்வி எழும். இப்படி யூகங்கள் செய்வது சுகமானதல்லவா? அடிவெட்டு விளக்கங்கள் அளிப்பதில் அமைப்புவாதிகள் கைதேர்ந்தவர்கள். ஓர் எதிரியைச் சாடுவ தென்றால் பழையமாதிரி (சான்றாக, வெங்கட் சாமிநாதனுக்கும் பிருமீளுக் கும் ஏற்பட்ட தகராறுகள் போல) இவர்கள் எதிரியின் புரிந்துகொள்ளலை, அறிவுத்திறனைச் சாடமாட்டார்கள். மாறாக, அவனது சமூக உளவியல் வளர்ப்புக் காரணிகள் சொல்லப்படும் (அவனது ‘மலங்கழிப்புப் பயிற்சி’ எப்படி அவனை வேறு ஆளாக மாற்றிவிட்டது என்கிற மாதிரி). இப்படி உளவியல்-பொருளாதார-சமூகவியல் விளக்கங்களைத் தந்துவிட்டால் மறுக்க வழி ஏது? சுருக்கமாகச் சொன்னால், “நீ வளர்ந்த அமைப்பு இப்படி, நீ இப்படித்தான் பேசுவாய்” என்ற வாதத்திற்கு எப்படி, யாரால் பதில்சொல்ல முடியும்?

இதேபோலத்தான் பின்னமைப்பு வாதத்தின் தோழியான போஸ்ட் மாடர்னி சம் இயங்குகிறது.5அ (தங்கள் ஆயத்திலிருந்து பிரிந்து தமிழ்ச்சூழலில் சோரம்போன தோழிகளாகிவிட்டார்கள் இருவரும்). ‘சரோஜாதேவி’ எழுதி னால் அது போர்னோகிராஃபி. நவீன இலக்கியவாதிகளான சிலர் எழுதினால் அது போர்னோகிராஃபி அல்ல, “சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைப்பது”. சரோஜாதேவி என்ற புனைபெயரில் எழுதிய ஆள் மட்டும் சமூக அமைப்புகளைக் கட்டிக்காக்கவா போர்னோ எழுதினான்? வெறும் பொருளாதார நிர்ப்பந்தத்துக்காக அவன் எழுதினான் என்று அமைப்பு வாதங்கள் சொல்லமுடியாது. அவனும் இந்த ஆதிக்கக் கட்டுமானங்களை உடைக்க, அவற்றின்மீதான வெறுப்பினால்தான் அப்படி எழுதினான் என்று வாதிக்க முடியும். மனந்திறந்த உரை என்பதை வெறுமனே சொல்லக்கூசும் (நாகரிக சமூக தளத்தைச் சேர்ந்தவர்கள் பார்வையில்) சொற்களை வெளிப்படுத்தல் என்று கொச்சையாகப் புரிந்து வைத்திருக்கும் நிதம்பச் சித்தர்கள்7 பாலிஷாக ‘நாங்கள் சமூகக் கட்டு மானத்தை உடைக்கச் செய்கிறோமாக்கும்’ என்று நியாயப்படுத்தியவாறே எழுதிவிட்டால் போஸ்ட் மாடர்ன் எழுத்து தமிழில் பிறந்ததாகிவிடுமா?8

இக்கொள்கைகள் யாவுமே கடைசி பட்சமாகப் பார்க்கும்போது உலகை விளக்குவது-மீடியேஷன்-பற்றிய பிரச்சினைகள்தானே? புதுப்புது விளக்கங்க ளும் தேவைதான். ஆனால் புரிந்துகொண்டு, செய்வன திருந்தச் செய்வது நல்லதல்லவா? அரைகுறை விளக்கங்களாலும் ஆய்வுகளாலும் அரை குறைச் செயல்பாடுகளாலும் எவ்விதப் பயனுமில்லை. தமிழிலக்கியப் படைப்பும் விமரிசனமும் (இரண்டிற்கும் பின்னமைப்பியலில் வேறுபாடில் லை) இந்நூற்றாண்டின் தொடக்கமுதலே இப்படிப்பட்ட அரைகுறைகளால் நிரம்பியிருப்பதுதான் தமிழின் இலக்கிய வரலாறாக ஆகியிருக்கிறது என்பது வேதனை. அமைப்புவாத பின்னமைப்புவாத மோகமும இப்போது மேற்கில் தணிந்து நவ-வரலாற்றுவாதமும் (நியோ-ஹிஸ்டாரிசிசம்) நவ-யதார்த்த வாதமும் (நியோ-ரியலிசம்) வேகம் பெற்று வருவதை இன்று காண முடிகிறது. தமிழிலோ, யதார்த்தப்பாணியிலான, அல்லது அமைப்புவாத பாஷையில் பொதுப்புத்திப் பார்வையிலான விமரிசனமும் படைப்புகளுமே சரிவர உருவாகவில்லை என்பதால் இவற்றின் தேவையை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழிலும் ஒரு பியர்ஸ், ஐ. ஏ. ரிச்சட்ஸ், எம்சன் போன்றோர் உருவாகியிருந்தால் இந்நேரம் ஒரு பார்த்தோ, தொடரோவோ உருவாகி விட்டிருப்பார்கள். ஃப்ராய்டே தெரியாத நிலையில் லக்கான்! மார்க்ஸ என்ன சொன்னார் என்று புரியாமலே அல்தூசர்! நீட்சே என்ன சொன்னார் என்று புரியாமலே ஃபூக்கோ! காண்ட் பற்றித் தெரியாமலே லியோடார்ட்! இது தமிழின் துரதிருஷ்டம் இல்லாமல் வேறென்ன?9

ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம் இவற்றின் பின்னாலுள்ள கோட்பாடுகளைச் சில அடிப்படைத் தேற்றங்களாகச் சுருக்கிப் பார்க்கலாம்.10

1. உலகம் பொருள்களால் ஆனதல்ல, உறவுகளால் ஆனது.
2. உண்மை என்பது உருவாக்கப்படுவது.
3. மானிட அறிவியல்களின் அடிப்படை இலக்கு, மனிதனை உருவமைப்ப தல்ல, மாறாகக் கரைத்தழிப்பது.
4. அர்த்தத்தைவிட மொழியே முந்தியது.
5. இலக்கியப் பிரதிகள் அணிகின்ற உடையே நம்பகத்தன்மை.

இக்கோட்பாடுகளைச் சற்றே ஆராய்வது நமக்குப் பயன்தரும்.

1. “உலகம் பொருள்களால் ஆனதல்ல – உறவுகளால் ஆனது”
இக்கூற்றில் ஓரளவுதான் உண்மை உண்டு. உறவுகள் என்றிருப்பதே அவற்றிற்குப் பின் பொருள்கள் இருக்கின்றன என்ற யதார்த்த நிலையை உட்கொண்டுள்ளது. இந்த அளவில் கூறினால் நமக்கு மறுப்பில்லை. ஆனால் அமைப்புவாதம் இதை ஒரு கோடிக்கு இழுத்துச் சென்று, “பொருள்களே இல்லை, உறவுகள் மட்டுமே இருக்கின்றன” என்று சொல் லும்போதுதான் பிரச்சினை எழுகிறது. உறவு என்பதே இந்தப் பொருளுக்கும் அந்தப் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் என்பதுதானே? உறவுகள்தான் அர்த்தத்தை மனிதனுக்கு அளிக்கின்றன என்பதிலும் நமக்குத் தடை யில்லை. ‘பாரி ஒரு வள்ளல்’ என்று சொல்வதன் அர்த்தம், மற்றவர் களைவிட அவன் அதிகமாகக் கொடுத்தான், மற்றவர்கள் அவனளவுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான். எனவே ஒருவரைப் பற்றி ஒன்றைச் சொல்லும்போது, நாம் மற்றவர்களைக் கருத்தில்கொண்டுதான் அல்லது விலக்கித்தான் பேசமுடியும். இந்த அளவில் உறவுகளே அர்த்தத்தைத் தருபவை. ஆனால் யதார்த்தத்தில் பாரியுமில்லை, மாரியுமில்லை, சேரனுமில்லை, சோழனுமில்லை என்பது பிரச்சினைக் குரியது. இவ்வாறு சொல்லுமிடங்களில், அமைப்புவாதமும் பிற இயற்கை அறிவியல்களைப் பின்பற்றி மனிதனைப் பொருளாக்கிவிடுகிறது (டிஹ்யூம னைஸ் செய்கிறது).

2. “உண்மை உருவாக்கப்படுவது”.
இந்த உட்கோளின் அடிப்படை, கற்பனைத்திறன் புறப் பொருள்களை அப்படியே படைக்க (உருவாக்க-constitute) வல்லது என்ற ரொமாண்டிக் பழந்தத்துவம்தான். இதை நன்கு ஆராய்ந்தால் இன்னொரு உட்கிடையும் இருக்கிறது. உருவாக்கப்பட்ட அறிவு என்பது உண்மையானதல்ல, அது புனைவாகும் (verum factum-verum fictum). உண்மையில் கவனிக்க வேண்டி யது, நாம் உலகின்மீது உருவாக்கும் வடிவங்கள்/அமைப்புகள் அதை வடிவமைப்பவை அல்ல, மாறாக கேள்விக்குள்ளாக்குபவை. நான் சில அமைப்புகளை உலகின்மீது பொருத்திப் பார்க்கிறேன் என்றால், இயற்கை வேறெந்த அமைப்பாக்கத்தையும் ஏற்றுககொள்ளாது என்று அர்த்தமல்ல. இதன் பயனுள்ள உட்கோள், நம் அமைப்பாக்கங்களைசத்துளள வகையில் நாம் பயன்படுத்திக்கொள்ள இடம் தருகின்ற வகையில் இயற்கை அமைகிறது என்பதே. இந்த வாதத்தையும் ஒரு கோடிக்குக் கொண்டுசென்று, அமைப்புகள்தான் இருக்கின்றன, பொருள்கள் இல்லை என்றோ, உலகம் பற்றிய நமது அறிவே புனையப்பட்டது, ஆகவே பொய்யானது, ஆகவே (டெரிடா கூறுவது போல) எப்போதுமே எல்லாம் முன்பே இருக்கின்றன என்றோ சொல்லிவிட முடியாது.

3. “மனிதனைக் கரைத்தழிப்பதே லட்சியம்”.
இதனை லெவி ஸ்டிராஸ் சொல்லுமிடம், சார்த்தரோடு அவருக்குள்ள முரண்பாட்டினை விளக்கும்போது, இருத்தலியல் சரியான மானிடத்துவம் என்பது தீவிர விடுதலையில்தான் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் போதுதான். மானிடக் கருத்தமைப்புகளுக்கும் அப்பாற்பட்ட சுயத்துவ எச்சம் (ரெஸிட்யூவம்) என்றைக்கும் எஞ்சியிருக்கும் என்பதையும் உட்கொண்டு தான் சொல்கிறது. இருத்தலியத்தோடு முரணி ஸ்ட்ரக்சுரலிசம் தோன்றும் போது, அதன் இருண்மையான, ஆதாரமான சுயம் (ஆதெண்டிக் செல்ஃப்) என்பதை விட்டுவிட்டு, சமூக சுயங்களின் புனைவுக்குணம் என்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய முற்படுகிறது. இவ்வாறு செய்யும்போது மனிதன் தனக்கு முன்னே இருந்து செயல்படுகின்ற அமைப்புகளின் ஓர் அங்கமாக மட்டுமே ஆகிவிடுகிறான். ஆகவே முன்பு கூறியதுபோல, டிஹ்யூமனைஸ் செய்யப்படுகிறான். ஆகவே மானிடவியலின் நோக்கம் மனிதனை உருவாக்குவதாக அல்லாமல் அவனைக் கரைத்தழிப்பது ஆகிவிடுகிறது. மானிடவியல், ஒரு சுப்பனையோ குப்பனையோ தனித் துவம் வாய்ந்த மனிதனாகக் காட்டாது. மாறாக, சுப்பன், குப்பன் இவர்க ளெல்லாம் கலாச்சாரத்தினால் உருவான, மனித குணம் அற்ற அமைப்பு களாகத்தான் காட்ட முடியும்.

மனிதனைக் கரைத்தழித்ததில் லெவி ஸ்டிராஸுக்கு (அதற்கு முன்னரே கார்ல் மார்க்ஸுக்கும்) மட்டுமல்ல, ஃப்ராய்டுக்கும் பங்குண்டு. ஏற்கெனவே வழக்கிலிருந்த பயன்வழி இன்பக் கொள்கையை ஃப்ராய்டு, ‘இன்பக் கொள்கை’ (ப்ளஷர் பிரின்சிபில்) என்று பெயரிட்டு, அதற்கு நனவிலி அந்தஸ்து கொடுத்ததன் வாயிலாக, விதிகளுக்குக் கட்டுப்பட்டதே மானிட இயல்பு என்ற கொள்கையை முன்வைத்தார். சமீபத்தில் போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச சிந்தனை பரவிய நிலையில் நவீன உளப்பகுப்பாய்வு வேடிக்கையான எல்லைகளைத் தொடுகிறது. மர்ரே ஷ்வார்ட்ஸ் பின்வருமாறு வாதிக்கிறார் (அல்லது சாடுகிறார்-ஏனெனில் இது தன்பக்கமே கோல் போடும் விஷயம்): “தர்க்க விவாதம் என்பதே நியாயப்படுத்தல் என்று கொள்வதானால், உளப் பகுப்பாய்வும் ஒரு தர்க்கரீதியான அறிவமைப்பு என்பதால், உளப்பகுப்பாய்வு என்பது மெய்ம்மை பற்றிய எவ்வித அறிவையும் தருவதன்று. மாறாக, பகுப்பாளர் நியாயப்படுத்துவதே ஆகும்.”

இந்த வாதத்தை விரிவுபடுத்தினால், உளப்பகுப்பாய்வுத் துறையில் நம்பிக்கை வைக்க எவ்விதக் காரணமும் இல்லை என்றாகும். ஆனால் இந்த முடிவுக்கு வராமல் தப்பித்துக் கொள்வது பின்னமைப்புவாதச் சிந்த னையின் இயல்பான குணம்.11

தன்னிலையைக் கரைத்தழிப்பதில் முடிவான நிலையைக் கொண்டுவந்தது டெரிடா. தூய அனுபவக்களம் என்பது உறவுகளின் மெல்லிய சவ்வாகி விடுகிறது. இவ்வுறவுகளோடு இணைந்துள்ள கருத்தாக்க முற்கோள் களையும் களைந்துவிட்டால பிறகு எஞ்சி நிற்பது ஒன்றுமில்லை. படிமம், கருத்தாக்கம், மொழி, பனுவல் போன்றவற்றால் விளையும் பலவித இலட்சியவாதங்கள் உண்டு. லோகாயதமான பொருள் என்பதை எதிர்ப்பதால் இவை அனைத்தும் பொதுத்தன்மை பெறுகின்றன. டெரிடாவுக்குக் ‘குறி’ என்பதே பிரக்ஞையின் அமைப்புதான். எனவே யதார்த்தத்துக்கும் குறிகளுக்கும் இடையில் தெளிவின் எல்லைக்கோடு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். எனவே இன்னொரு எல்லையாக, மனத்திற்கும் அது விளைவித்த குறிகளுக்கும் இடையில் எவ்வித தடுப்புக் கோடும் இல்லை என்ற முடிவுக்கும் வருகிறார். ஆகவே பிரக்ஞை பற்றிப் பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை, பனுவலைத் தவிர வேறெதுவும் இல்லை என்று எழுதுகிறார்.

இவற்றினால் நாம் காணக்கூடிய அடிப்படைக் கொள்கை இதுவே. பொருள்கள் என்பவை, மொழியினால் முன்வைக்கப்படுபவை. அதற்கு முன் அவற்றிற்கு எவ்வித இருப்பும் இல்லை. தமிழ்நாடு சாலைவழிகள் பற்றித் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் வரைபடத்திற்கும் லோகல் கம்பெனி ஒன்று வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் வரைபடத்திற்கும் வண்ணம், அளவு போன்ற பல பண்புகளிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் ‘தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை’ என்ற முடிவுக்கு வரும் பேரறிவாளர்கள் நிலையில்தான் அமைப்புவாதிகள், பின்னமைப்புவாதிகள் நிற்கிறார்கள்.12

4. “அர்த்தத்தைவிட மொழியே முந்தியது”.
சசூர் முதலாகத் தொடங்கி, மொழியின் விதிக்கட்டுப்பாடற்ற தன்மையை, தன்னிச்சையான தன்மையை அழுத்தமாகக் கூறியிருக்கின்றனர். மொழியின் குறிகளுக்கும் பொருள்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்பது நாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுதான். ‘பூனை’ என்று நாம் குறிக்கும் ஒரு பிராணியைக் ‘கானை’ என்று கூடப் பெயரிட்டு ஆதியிலிருந்து அழைத் திருக்க முடியும். ஆனால் இந்தத் தொடக்க நிலை உறவு மட்டுமே தன்னிச் சையானது. இதன்பின்னர், இம்மாதிரிப் பொருள்களும் மொழியும் தொடர்பு படுத்தப்பட்ட பின்னர், எழுகின்ற மொழியமைப்பு யதார்த்தமானது, ஒழுங் கானது. ஆனால் சசூர் முதலாகத் தொடங்கி, அமைப்புவாதிகளும் பின்னமைப்புவாதிகளும் ஒலி மட்டுமல்ல, அர்த்தமும் தன்னிச்சையானது என்றே வலியுறுததி வந்திருககிறார்கள்.

“மொழி என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட சாராம்சப் பொருள் அல்ல” என்று சசூர் வலியுறுத்துகிறார். (பதினேழாம் நூற்றாண்டில் பேக்கன் கூறிய) “புறவடிவத்தைவிடப் பொருளே நம் கவனத்திற்குரியது” என்பதைத் தலை கீழாக்கி, “வார்த்தைகளின் உலகமே பொருள்களின் உலகினைச் சிருஷ்டிக் கிறது” என்கிறார் லக்கான். இவ்விரண்டு கூற்றுகளையும் இணைத்தால் வடிவம் என்ற ஒன்று மட்டுமே இருக்கிறது என்ற தீவிர முடிவு கிடைக்கிறது. குறி என்ற கருத்தாக்கமும்கூட, நிலைத்த, உறுதியான, பொருள் சுட்டலுக்கே இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்த டெரிடா, ‘எழுதுதல்’ என்ற நடுநிலைச் சொல்லை உருவாக்குகிறார். சசூர் கூறிய ‘வித்தியாசங்கள்’ என்னும் கருத்து டெரிடாவிடம் இரட்டை மதிப்புப் பெறுகிறது. முதலில், இந்த வித்தியாசங்களின் விளையாட்டுகளே அர்த்தம் என்னும் மாயையைத் தோற்றுவிக்கின்றன என்பது; இரண்டாவது, ‘ஒத்திப்போடல்’ என்னும் அர்த்தத்தில் அச்சொல் உருவாக்க/உருவகிக்கப் படுகிறது. மொழியில் எப்போதும நிலைத்த அர்த்தங்களே இல்லாததால் அர்த்தம் என்பது தேவையான சூழலை வேண்டி ஒத்திப்போடப் படுகிறது; ஆனால் அவ்வாறான குறித்த சூழல் ஒருபோதும் முடிவாகக் கிட்டப்போவ தில்லை ஆதலால், அந்தக் குறிக்கான அர்த்தம் இன்னும் ஒரு சூழலை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். இப்படியே எல்லையற்று, தொடர்ச்சி யாக.

டெரிடா மட்டுமல்ல, அவரை தீவிரமாகப் பின்பற்றிய அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பால் டி மானும் கூட, பழைய அர்த்தங்களைத் தலைகீழாக்கல், உடைத்தல் என்பதை மட்டும் செய்யவில்லை. “எதுவுமே நிச்சயமில்லை, அர்த்தம் என்பது ஒத்திப்போடுதலே” என்று சொல்லும் இவர் போன்றவர்கள், தங்கள் எழுத்துகளை மட்டும் மற்றவர்கள் தீவிர அக்கறையோடு வாசிக்கவேண்டும் என்பதற்கான அறிவார்த்த ஆயத்தங்க ளோடு தர்க்கரீதியாகத்தான் வாதிடுகிறார்கள். அதாவது மற்றவர்கள் படைப்பில் அர்த்தம் இல்லை என்று நிலைநாட்டும் தங்கள் எழுத்தில் மட்டும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதாக, தங்கள் எழுத்தின்மேல் மற்றவர்கள் கவனம் கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இது, அவர்களுடைய கருத்தின் முரண்நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டும் விஷயம். மேலும் தகர்ப்பமைப்பு (டிகன்ஸ்ட்ரக்ஷன்)13 என்பது தகர்ப்பது மட்டும் அல்ல, மீண்டும் புனர்-அமைப்பதும் தான். ஏனெனில் தகர்ப்பது என்பது எப்போதுமே ஒரு கொள்கையாக நிலைபெற முடியாது. பழையதைத் தகர்த்த எச்சங்களிலேயே புதியவை உருவாகிவிடுகின்றன. எனவே முற்றாகத் தகர்ப்பது என்பது என்றும் இருக்க முடியாது. அதாவது இறுதி எச்சங்கள், அவற்றின் பொருள் சுட்டல்கள் இருந்தே தீரும். டெரிடாவும் பால் டி மானும் இதைச் சொல்லளவில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், செயலளவில் நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள், ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் தகர்ப்ப மைப்பின் நிலை. தகர்ப்பமைப்பின் மிக ஆரோக்கியமான பகுதி, அது இறுகிப்போகாமல் எப்போதுமே புதிய காற்றை உள்ளே விடுகிறது என்பது.

சுயம் என்பது கரைத்தழிக்கப்பட்டாலும், அனுபவம் என்பதும் பிளேட்டோ னிய வடிவங்களும் அர்த்தங்களும் அறவே இல்லை என்று சொல்லப் பட்டாலும், பனுவல் என்பதாவது எஞ்சவேண்டியதுதானே? டெரிடா, பால் டி மான் இவர்களிடம் உள்ள பெரும் ஆற்றல் இப்படி வாதிடக் கூடிய அவர்களது அறிவுப் புதுமைதான். பிறரது கருத்துகளுக்குப் பின்னால் எப்படியேனும் சென்று காலைவாரும் உத்தியைக் கடைப்பிடிக்கும் இவர்கள், அதனை மொழியின் மேலேற்றி, (நிச்சயம், நாம் கருதாத, தலைகீழான அர்த்தங்களையும் உருவாக்கும் ஆற்றல் மொழிக்கு உண்டு என்றாலும்14) அவ்வாறான விளையாட்டுகள் தவிர வேறொன்றுமே இல்லை என்கி றார்கள். “எதுவும் நிலைத்ததன்று, எதன்மேலும் சந்தேகம் கொள்” என்பதுதான் இதன் அடிப்படை.

ஆனால் தகர்ப்பது, தன்னையே கொல்லும் படை. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதையும் அந்த வாக்கின் வாய்மையை ஆராய்வதற்கே பயன்படுத்தும் விமரிசகனின் தர்க்கத்தையும் உடைக்கிறது அதே வாதம். பைரோ (Pyrrho) என்ற பழைய கிரேக்க அவநம்பிக்கைத் தத்துவவாதி16 “எப்பொருளுமே மரியாதைக்குரியது-அவமரியாதைக்குரியது என்று பாகுபடுத்த முடியாது. நீதியா, அநீதியா என்று ஒரு செயலைப் பற்றிய முடிவுக்கு வருவது இயலாதது” என்றார். எதுவுமே உண்மையில் இருப்பதில்லை. மரபும் பழக்கமுமே மனிதச் செயலை நிர்வகிக்கின்றன. எந்த ஒரு பொருளும் அல்லது செயலும் இதுதான்-அதுதான் என்றெல்லாம் வகைப்படுத்த/ பெயரிடப்பட முடியாதது என்பது அவர் கருத்து. எனவே நம் ஆராயும் கேள்வி, ‘இவ்வாறு கூறும் கூற்றே மரபு வழிப்பட்டதா இல்லையா’ என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்பதும் அவர் கருத்து.

அக்ரிப்பா என்னும் தத்துவவாதியின்16 ‘தடுமாற்ற நிலையின் ஐந்து வடிவங்கள்’ என்னும் கொள்கையும் கவனிக்கப்பட வேண்டியது. இதில் முதல்வகை, சார்பியல் பற்றிய வடிவம். இது அமைப்புவாதம்-பின்னமைப்பு வாதத்தின் வரலாற்றை விளக்கக்கூடியது. அதாவது அமைப்புகள் உள்ளன என்பதில் தொடங்கி எதுவுமே இல்லையோ என்ற அவநம்பிக்கைக்கு வந்திருக்கும் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியது. இது கூறுகிறது: “ஒரு பொருளை அதுவாகவே/அதைக் கொண்டே அறிதல் இயலாது. பிற பொருள்களோடு சம்பந்தப்படுத்தித்தான் அதை அறிய வேண்டும். எனவே எந்தப் பொருளையும் அறிவது என்பதே இயலாது.”

அக்ரிப்பா கூறும் இரண்டாவது வடிவம், டெரிடாவின் ‘எல்லையற்ற ஒத்திப் போடல்’ என்னும் கொள்கையை முன்நோக்குகிறது. அதன் பெயர், எல்லை யற்று விரிதலின் வகைமை. அது கூறுகிறது: “எப்பொருளைத் தேடுகி றோமோ அது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதை ஏற்க மறுக்கிறோம். ஏனெனில் தேடும்பொருளுக்குத் தரப்படும் நிரூபணமே, இன்னொரு பொருளைத் தேடுவதற்கான அடிப்படை விவாதக்களமாக ஆகிவிடுகிறது. இப்படியே எல்லையற்றுச் செல்கிறது.” அக்ரிப்பா, இதனைத் தர்க்க விவாதங்களுக்கான கொள்கையாக முன்வைத்தார். டெரிடாவோ, இதனை அர்த்த உறுதிப்பாடின்மைக்கான கொள்கையாக ஆக்குகிறார். மற்றபடி வித்தியாசம் இல்லை. முன்பே சொன்னது போல, இவ்வித பைரோத்தனக் கூற்றுகள் யாவும் பைரோத்தனமாகவே முடிவடையும். அதாவது அவை தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றன. இவ்வா றெல்லாம் கூறிய அவநம்பிக்கைவாதிகள், நல்ல, திருப்தியான, சமூகத்தோடு ஒத்த வாழ்க்கையையே நடத்தினார்கள் என்கிறார் டயோஜினிஸ். ஹ்யூம் போன்ற அவநம்பிக்கையாளரும்கூட, தம்மை அழுத்தும் அவநம்பிக்கைத் தளங்களிலிருந்து விடுபட வேண்டி, தம் நண்பர்களோடு பேக்கமன் (backgammon-ஒருவித சீட்டு விளையாட்டு) விளையாடி, தூல யதார்த்தம் பற்றிய தம் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஜான்சனும் இப்படி இருந்திருந்தால், ஏதேனும் விளக்குக் கம்பத்தை உதைத்துத் தம் இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருப்பார் போலும். டெரிடாவும் கூட, இன்னும் தம் புத்தகங்களின் முதல் பக்கங்களில் தம் பெயரைப் போட்டுக் கொள்கிறார், கடிதங்களில் கையெழுத்திடத்தானே செய்கிறார்?17 ‘க்ளா’ புத்தகம், ஆசிரியனின் அழிவைக் காட்டவில்லை, மாறாக டெரிடாவின் இருப்பை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுவரை முன்வைக்கப்பட்ட வாதங்கள், அமைப்பு-பின்னமைப்பு வாதங்க ளின் பின்னாலுளள அணுமைய-அப்ஜெக்டிவிச தத்துவத்தையும் (ஆகவே அதன் உடன்பிறப்பான, கலாச்சார/அமைப்புவழி சப்ஜெக்டிவிசத்தையும்) மறுப்பதற்குப் போதுமானவை.18 விடாப்பிடியாக, அர்த்தங்கள் என்பவை அகராதியில் இருக்கின்றன என்று தேடிய காலம் மலையேறிவிட்டது என்பதை எவரும் மறுக்கவில்லை. அதே சமயம், ‘செயல்படு அர்த்தம்’ (யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கான மரபு செயல்படும் செயல்பாட்டு முறை) இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. மெனோவுக்கும் சாக்ரடீஸுக்கும் நடந்த விவாதம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.19

மெனோ: சாக்ரடீஸ், ஒரு பொருளைப் பற்றி நீ எதுவுமே அறியாதபோது எப்படி அதைத் தேட முடியும்? உனக்குத் தெரியாத பொருள்களில் எவ்விதப் பொருளை நீ தேடும் பொருள் என்று கண்டுபிடிப்பாய்? அதைத் தேடிக் கண்டுபிடித்தாலும், நீ தேடிய பொருள் அதுதான் (நீ இதுவரை அறிந்துகொள்ளாதது அதுதான்) என எப்படி அறிவாய்?
சாக்ரடீஸ்: நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை அறிவேன். மெனோ, ஒரு விதண்டாவாதத்திற்கு என்னை இழுப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாய். ஒருவன் தான் அறிந்த ஒன்றையோ அறியாத ஒன்றையோ தேட முடியாது. அறிந்ததைத் தேடமுடியாது-ஏனெனில் அவன் ஏற்கெனவே அறிந்திருக்கிறான். அறியாததைத் தேட முடியாது-ஏனெனில் தான் எதைத் தேடுகிறோம் என்று அவனுக்குத் தெரியாது.

டெரிடா முதலியோர் எதுவுமே இல்லாததைத் தேடுபவர்கள். உண்மை இறுதிநிலையில் இருக்கிறது. அது யதார்த்தத்தின் நெசவினால் தீர்மானிக்கப் படுகிறது. ஆகவே ஐந்தாம் தேற்றமான “இலக்கியப் பிரதிகள் அணிகின்ற உடையே நம்பகத்தன்மை” என்பது மட்டும் எஞ்சுகிறது.

ஆகவே நாம் தொடங்கிய நிலைக்கே வருகிறோம். கருத்துகள் நாளுக்கு நாள் மாறுகின்றன. அவநம்பிக்கைவாதிகள், பைரோக்கள், அக்ரிப்பாக்கள், மெனோக்களின் சிந்தனைகள் இன்று மாற்றுநிலையில் அமைப்பு-பின்னமைப்புவாத வடிவத்தை அடைகின்றன. இது முற்றாகப் புதிய மொந்தையில் பழைய கள் என்று கூறுவதாகாது. ஏனென்றால் காலப்போக் கில், கள்ளின் தீர்மானமான வேதியியல் கூறுகளும் மாறுகின்றன. மொந்தையின் வடிவமும் மாறுகிறது. எனினும் ஐந்து வயதில் பார்த்த ஒருவனை ஐம்பது வயதிலும் அறிந்துகொள்ளும் ஒரு சில தீர்மானக் கூறுகள் போலச் சில மாறாதவை என்றும் ஏற்கிறோம். எனவே ஏதோ ஒன்றைப் புதிதாக அடைந்துவிட்ட மதவாதிகளின் உற்சாகம், அதனால் ஏற்படுகின்ற விபரீத வாதப் பிரதிவாதங்கள், அவற்றின் செயல்பாட்டில் எழும் தீவிரவாதம் இவற்றைத் தவிர்ப்பது நலம். இதுதான் தமிழ்ச் சூழலில் வலியுறுத்திக் கூறவேண்டிய விஷயம்.

நாளுக்குநாள் மாறும் ஃபேஷன்களுக்கு அடிமையாகக் கிடக்கும் தமிழில் எந்த ‘இஸம்’ வரும்போதும் விமரிசனப் பாங்குடன் அதற்கான முறையான வரலாற்றறிவோடு பார்க்கப்படுவதில்லை. தீவிர ஃபேஷன்-மோஸ்தர் காரர்கள் ஒன்றைப் புனிதமாக அறிமுகப்படுத்துவதும் ஆதரிப்பதும், முற்றிலும் மரபுவழிப்பட்ட ஒற்றைப் பரிமாணச் சிந்தனையாளர்கள் முற்றிலுமாக எதிர்ப்பதும்தான் இங்கே காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.20 அமைப்பியல் பின்னமைப்பியல் பற்றிய இன்றைய விவாதங் களிலும் இதையே காணமுடிகிறது.

அடுத்த நிலையில், இவற்றை முன்வைக்கும் ஃபேஷன்வாதிகள், சரியான செயல்முறைகளை உருவாக்குவதில்லை. ‘தியரி’யை முன்வைப்பதில் காட்டும் அக்கறையை ‘பிராக்டிஸில்’ இவர்கள் காட்டுவதில்லை. தமிழ்ச் சூழலிலும் செயல்முறை முனனாலும் தியரி பின்னாலும் வருவதே நலம்.21 அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அப்போது கொள்கையும் புரியும், செயல்முறையும் வளரும். இப்போது சிலரிடம் ஸ்ட்ரக்சுரலிச, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச அறிவு ஏகபோகமானதும், மற்ற பலர், நமக்கும் இதற்கும் ஒத்துவராது என்று அஞ்சி ஒதுங்கியதும்தான் மிச்சம். எந்த அதிகாரத் தளங்களை உடைக்க பின்னமைப்பியல் உதவும் என்கிறார்களோ, அதே அதிகாரத் தளங்களை இவர்களே வைத்திருக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள்.22

இன்னொன்றையும் பார்க்க வேண்டும். தமிழவனின் ‘ஸ்ட்ரக்சுரலிசம்’ நூலில் கொள்கைகளை முன்வைப்பதில் காணப்பட்ட அறிவுத் தீவிரம் அவரது செயல்முறைத் திறனாய்வில் இல்லை. அவை மேம்போக்காகவே அமைந்துவிடுவதால் கோட்பாட்டின் கட்டுறுதி, வன்மைமீதான நம்பிக்கை போய்விடுகிறது. பின்னமைப்பியலில் கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டு மானால், டெரிடாவின், பால் டி மானின் வாதக் கடுமை வேண்டும், ஆனால் அது அவர்களுடைய நிலைப்பாட்டுக்கு எதிராகவே கொண்டு அவர்களை நிறுத்தும். பாவம் பின்னமைப்பியல் விமரிசனம்!

இதேபோன்று, வாதங்கள் பல, பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு எதிராகவும் இருக்கின்றன. அவை இன்னொரு சமயம். கடைசியாகச் சொல்லவேண்டி யது-ஆர்ப்பாட்டம் வேண்டாம். அடக்கமே பலன் தருவது. தமிழுக்கு உண்மையாகப் பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் மிக அடக்கமாகவே எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள். மற்றவர்களின் தன்னிலையைக் கரைப் பதில் தீவிர அக்கறை காட்டும் இன்றைய ஆய்வாளர்கள், தங்கள் தன்னிலையை முதலில் கரைத்துக் கொள்வது நல்லது. நான் நான் நான் என்று தம்பட்டமடித்துக் கொண்டவர்கள் எவ்வித பாதிப்புமின்றிப் போனதைத்தான் இலக்கிய வரலாறு காட்டுகிறது.

குறிப்புகள்
1. அமைப்பியல் என்பதில் உள்ள ‘இயல்’, சாராம்சவாதக் குறிப்பினை உடையது, எனவே தவிர்க்கப்பட வேண்டியது என்பது ஆங்கிலப் பேராசிரியர் நோயல் ஜோசப் இருதயராஜின் கருத்து. காண்க: மேலும் இதழ், 7 மற்றும் 8இல் வெளிவந்துள்ள குறியியலின் தொடக்கங்கள்-ஒரு தொடக்கம் கட்டுரை யின் இரண்டாம் பிற்குறிப்பு (ப.65). ஆகவே அமைப்புவாதம் என்றே சொல்லவேண்டும். எனினும் அமைப்பியல் என்பதே புழக்கத்துக்கு வந்து விட்டதால் அதையும் பின்பற்றுகிறேன்.
2. ஏ. டி. நட்டால் என்பவர் எழுதிய A New Mimesis என்ற நூலின் முதல் அத்தியாயத்தில் அவர் முன்வைக்கும் கருத்து இது. இக்கட்டுரை இந்நூலின் தர்க்கப் போக்கினைப் பல இடங்களில் எடுத்துக்கொண்டுள்ளது.
3. அமைப்பியல்-பின்னமைப்பியல் இரண்டுமே மொழிமைய வாதங்கள். ஆகவே சொற்களை உருவாக்குவதிலும் கையாள்வதிலும் தீவிர கவனம் செலுத்துபவை. தமிழில் இவற்றை அறிமுகப்படுத்துவோரிடம் கவனக்குறைவுதான் இருக்கிறது. Metonymy என்பதை நேராக மொழிபெயர்த் தால் ஆகுபெயர் என்று சொல்வதே முறை. ஆங்கிலத்தில் Metonymyக்குள் Synechdoche அடங்குவதைப் போலவே தமிழிலும் ஆகுபெயருக்குள் சினை யாகு பெயரும் அடங்குவது குறிப்பிடத் தக்கது. எனினும் ஆகுபெயர் என்ற சொல்லையே அமைப்புகளினூடாகக் குறிப்பிடும்போதும் பயன்படுத்த முடியுமா என்பது ஆராயப்பட வேண்டியது. மேலும் இதழில் சமீபத்தில் எம். டி. முத்துக்குமாரசாமி தந்துள்ள மொழியாக்கம் ‘பதிலீடு’ என்பது. Metonymyக்கு ‘சினிமா ரசனை’ புத்தகத்தில் அம்ஷன் குமார் தந்துள்ள மொழியாக்கம் பிறிதுமொழிதல். இரண்டுமே கவனக் குறைவானவை. பதிலீடு என்பது substitutionஐக் குறித்து அதன்மூலமாக metaphor என்ற கருத்துக்கே இட்டுச் செல்லும். பிறிதுமொழிதல் Metonymy அல்ல. இதேபோல ‘எதிர்வு’ இதழில் Myth என்பதை மாயை என்று மொழி பெயர்த்ததும் கருத்துகளைத் தமிழில் உணர்த்துவதற்கு பாதகமாகவே முடியும்.
4. தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல், முதல் இரண்டை வலியுறுத்திச் சொன்னதுபோலப் பின்னதை எடுத்துச் சொல்லவில்லை. எம். டி. எம். இதைப் பற்றிக் குறிப்பிட்டதே கிடையாது. ஆனால் தமிழ்ச் சூழலில், அமைப்பியல் விமரிசனத்திற்கு முனபாக விமரிசகர்கள் பயிற்சி பெற வேண்டிய களம் இதுவே. ரஷ்யன் ஃபார்மலிசம். ரஷ்யன் மட்டுமல்ல, அமெரிக்க உருவவாதமும்-குறிப்பாகப் பொருள்மயக்கங்களை வலியுறுத்தும் எம்சனின் நடையியலும தமிழில் தேவை. எம்சனின் பொருள்மயக்க வகைகளில் சில தமிழின் சிலேடை, உள்ளுறை உவமை, இறைச்சி, குறிப்பு போன்றவற்றோடு ஒத்துவருபவை.
5. விபரீத நிலை என்று குறிப்பிடக் காரணம், ஒரே ஒரு கவிதையை எடுத்து, அதன் மற்றச் சூழல்களை விலக்கி, வார்த்தை வார்த்தையாக வாசிப்பதன் தீவிரத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதற்கே. விபரீத என்ற சொல்லின் எதிர்மறைப் பொருளில் அல்லாமல் நேர்ப்பொருளில் (விபரீத முரண் அணி என்பதில் போலக்) கொள்ளவேண்டும்.
5அ. பின்-தத்துவங்கள், பெண்ணியம் யாவுமே ஒருபால் உறவை ஆதரித் துப் பேசுகின்றன. ஆகவே இந்த உருவகத்திற்குக் காரணம் இருக்கிறது. அதுவும் குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் தலைவி-தோழி உறவு ஆராயப்பட வேண்டியது.
6. பனுவல் என்ற சொல்லைவிட யாப்பு, நெசவு போன்ற கருத்துகளோடு இணைந்த நூல் என்ற சொல்லே டெக்ஸ்ட் (டெக்ஸ்சர் என்பதோடும் தொடர்புடையது) என்பதற்குப் பொருத்தம். எனினும் நூல் என்பது தமிழில் மரபுவழி அர்த்தத்தையே குறிக்கும் என்பதால் பாடம், பிரதி போன்ற சொற்கள் அடுத்த நிலையில் ஏற்றவை.
7. நண்பர் நோயலுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது கிடைத்த பெயர். ‘பாம்பாட்டிச் சித்தர்கள்’ என்றுகூடச் சொல்லலாம்.
8. நான்லீனியர் எழுத்து (நேர் மொழிபெயர்ப்பு-நேரற்ற எழுத்து அல்லது கோணல் எழுத்து) என்று எழுதப்பட்டிருக்கின்றவற்றில் ‘கருநாடக முரசின்’ தோலும் பதமாக இல்லை, ‘பேன்சி பனியனின்’ நூலும் தரமாக இல்லை.
9. இக்கட்டுரையை எழுதிய பின்னர்தான் எஸ். வி. ராஜதுரை + வ. கீதாவின் ‘அல்தூசர் ஓர் அறிமுகம்’ என்ற நூல் பார்க்கக் கிடைத்தது. எனவே இக்கூற்று அதைக் கட்டுப்படுத்தாது.
10. ஏ. டி. நட்டால், ப.8.
11. ஏ. டி. நட்டாலின் உதாரணம், ப.23.
12. இதனைத்தான் Attenuation of Truth என்று பெரி ஆண்டர்சன் குறிப்பிடு கிறார். அ. மார்க்ஸ், ‘கல்குதிரை’ இதழில் தமிழ்ச்சூழல், மார்க்சியம், ஸ்ட்ரக்சுரலிசம் பற்றி எழுதிய கட்டுரையில் இதனை உண்மையின் முடக்கம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.
13. டிகன்ஸ்ட்ரக்ஷன் என்பது கட்டவிழ்ப்பு என்று மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது. கட்டியதை அவிழ்ப்பதல்ல டிகன்ஸ்ட்ரக்ஷன். ஏற்கெனவே உள்ள அர்த்தங்கள், கருத்தாக்கங்கள் போன்றவற்றைத் தகர்த்து, முற்றிலும் புதிய அர்த்த மதிப்புகளை அளிப்பதும் ஆகும். எனவே தகர்ப்பமைப்பு என்பதே சரியான மொழி பெயர்ப்பு. காண்க: நோயல் இருதயராஜின் கட்டுரை, இயக்கத்திலிருந்து ஆட்டத்திற்கு (மேலும இதழ்).
14. இதனை எடுத்துக்காட்டியவர் எம்சன். ஆகவே எம்சனிலிருந்தே ஸ்ட்ரக்சுரலிசம் தொடங்குகிறது என்ற கருத்தும் உண்டு.
15. ஏ. டி. நட்டால் எடுத்துக்காட்டுவது. பைரோ (கி.மு.365-275) அவநம்பிக்கைத் தத்துவத்தின் முன்னோடி. அவரது சீடர் டைமனின் நூல்களின் வாயிலாக அவர் கருத்துகள் வெளிவந்துள்ளன. பொருள்களைப் பற்றி எதுவும் அறிய இயலாது, எனவே மதிப்பிடக் கூடாது என்ற கருத்தைக் கூறியவர்.
16. இதுவும் நட்டால் தரும் சான்றே. அக்ரிப்பா, கி.பி. முதல்-இரண்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த ரோமானிய தத்துவஞானி. பின்-அவநம்பிக்கைவாதச் சிந்தனாவாதி. ‘பிரபஞ்சத்தினை அறிய இயலாமை பற்றிய ஐந்து அணிக் கூற்றுகளை’ அல்லது ‘தடுமாற்ற நிலையில் ஐந்து வடிவங்கள்’ என்பதனை முன்மொழிந்தவர். தர்க்கப் பகுத்தறிவின் எல்லை களைத் தொட்டுக்காட்டுகிறது இது.
17. நட்டால், பக்.36-37.
18. அப்ஜெக்டிவிசம் என்ற கொள்கையின்படி, தத்துவ அறிவு விமரிசன மதிப்பீடுகளைச் செய்ய இயலாதது. புறப்பொருள்கள், நிகழ்வுகள் பற்றி மதிப்பிடுதல் இயலாது என்பதனால், இதுவும் ஒருவகையான அகவயத்து வம் (சப்ஜெக்டிவிசம்) ஆகிவிடுகிறது. அறிவயில் நடுநிலையானது, சார்பற் றது என்பது அப்ஜெக்டிவிசத்தின் கருத்து.
19. நட்டால், ப.47. ஆகவே ஒரு சிறிதேனும் அறிந்ததையே மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பது சாக்ரடீஸ் கருத்து. அந்த அளவுக்குப் பொருளின் இருப்பை ஒப்புக் கொண்டாக வேண்டும்.
20. இந்த நிலைதான் பழைய மரபிலக்கியவாதிகளும் புதிய இலக்கியக் காரர்களும் இதுவரை தமிழில் இணையவே முடியாமலிருப்பதற்குக் காரணம். தமிழில் பழைய இலக்கியத்திற்கும் புத்திலக்கியத்திற்கும் உள்ள தொடர்ச்சி காணப்பட்டால்தான் சரியான திசையில் எதிர்கால வளர்ச்சி உண்டு.
21. இந்த நிலைக்கு முற்றிலுமாகத் தமிழ் அறிவுஜீவிகளைக் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு ‘தியரி’யே பெரும்பாலும் முதலில் கிடைக்கிறது. செயல்முறை விமரிசனப் படைப்புகள் கிடைப்பினும், தக்க பின்னணி இன்றிப் புரிந்துகொள்வதும் கடினம், மொழியாக்கம் செய்வதும் கடினம். வாசகர் அணுகுவதும் கடினம். ஆயினும் இதுதான் முதலில் செய்யப்பட வேண்டியது. (எதிர்வு இதழில் வெளிவந்த ஹெமிங்வே சிறுகதை பற்றிய ஆய்வுபோல மொழிபெயர்ப்புகளேனும் முதலில் தேவை.)
22. தமிழில் இப்போது போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிப் பேசி, எழுதி வரும் படைப்பாளி ஒருவர், சென்ற குற்றாலம் கவிதைப் பட்டறையில் ‘தமிழ்நாட்டில் தன்னோடு சேர்த்து மூன்று பேருக்குத்தான் ஸ்ட்ரக்சுரலிசம் தெரியும்’ என்று கூறி சந்தோஷப் பட்டுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இக்கூற்று பொறுப்பற்றது என்பது ஒருபுறம் இருக்க, நியாயமாக வருத்தப் பட வேண்டிய நிலை இது. இக்கூற்றில் உண்மைத் தெளிவிருக்குமானால் கூட, இது அறிவாதிக்கப் போக்கின் வெளிப்பாடுதான். பிறர்மீது அடிக்கும், அடிக்க உதவும் குண்டாந்தடிதான் இத்தகைய அறிவு.


சிறுகதைப் படைப்பாக்கப் பயிலரங்கம்

பேராசிரியர் க.பூரணச்சந்திரன் படைப்பிலக்கியம் – திறனாய்வு அறக்கட்டளை சார்பில் மார்ச் 11, 2016 ஆம் தேதி அன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி எம்.பி.ஏ. கருத்தரங்கில் சிறுகதைப் படைப்பாக்கப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரனும் எழுத்தாளர் திரு.இமையமும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திருமதி.விஜயராணி வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஹீபர் கல்லுரி முதல்வர் திரு.பால் தயாபரன் சிறப்புரை ஆற்றி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் திரு.சாம் கிதியோன் நன்றியுரை ஆற்றினார். இந்த பயிற்சியின் முழுக் காணொளியும் யூடியூப் இணையதளையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

https://youtu.be/umXmpREPp2A

https://youtu.be/jS8JiteDfYU

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????DSC07622-1