ரொம்ப முக்கியமான பிரச்சினை!

இந்தியில் போலவே ஃப்ரெஞ்சு மொழியிலும் எல்லாப் பெயர்ச்சொற்க ளுக்கும் ஆண்பால் பெண்பால் உண்டு. உதாரணமாக, வீடு என்பது பெண்பால் (La Maison). ஆனால் பென்சில் என்பது ஆண்பால் (Le Crayon). இப்படி ஓர் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன், “ஐயா, கம்ப்யூட்டர் (ஃப்ரெஞ்சில் ordinateur) என்ன பால்?” என்று கேட்டான். “கம்ப்யூட்டர் என்ன பாலாக இருக்கவேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்” என்று அந்த ஆசிரியர் அதையே ஒரு பயிற்சியாக மாணவர்களுக்கு வழங்கிவிட்டார். அந்த வகுப்பில் இருபாலாரும் இருந்தார்கள். பெண்களையும் ஆண்களையும் தனித்தனிக் குழுக்களாகப் பிரித்த ஆசிரியர், “கணினி என்ன பாலாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒவ்வொரு குழுவும் நான்கு காரணங்கள் தரவேண்டும்” என்றும் சொன்னார்.

‘கம்ப்யூட்டர், பெண்பால் பெயர்ச்சொல்லாகத்தான் (La ordinateur) இருக்க வேண்டும்’ என்று ஆண்கள் குழு தீர்மானித்தது. ஏனென்றால் பெண்களைப் போலவே, கம்ப்யூட்டர்கள் உள்ளன:

அ. அவற்றின் உள்தர்க்கத்தைப் படைத்தவனைத் தவிர வேறு ஒருவரும் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆ. பிற கம்ப்யூட்டர்களோடு அவை உறவாடுகின்ற மொழி மற்றவர் களுக்குப் புரியாதது, வித்தியாசமானது.

இ. மிகச் சிறிய தவறுகளையும் பின்னால் மீள்பார்வைக்கென நீண்டகால ஞாபகத்தில் குறித்து வைத்துக்கொள்கின்றன.

ஈ. ஒன்றை வாங்கிவிட்டால் பிறகு அதற்கான பொருள்களுக்கு (accessories) காலம் முழுவதும் நிறையச் செலவு செய்யவேண்டியிருக்கிறது.

இதற்கு மாறாக, பெண்கள் குழு, கம்ப்யூட்டர் என்பது ஆண்பாலாகத்தான் (Le ordinateur) இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது. காரணங்கள்:

அ. ஏதாவது வேலை செய்ய வைக்க வேண்டுமானால் அவற்றை ‘ஆன்’ செய்ய வேண்டும் – அதாவது தாஜா செய்ய வேண்டும்.

ஆ. அவற்றிடம் ஏராளமான தகவல் இருந்தாலும் தாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாதவை.

இ. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் அவற்றை வாங்குகிறோம், ஆனால் அவைகளே பெரும்பாலும் பிரச்சினைகளாக மாறிவிடுகின்றன.

ஈ. ஒன்றை வாங்கியபிறகுதான், சற்றுப் பொறுத்திருந்தால் இன்னும் நல்லதாக மற்றொன்று கிடைத்திருக்குமே என்று தோன்றுகிறது.

ஃப்ரெஞ்சுக்காரர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. நம் இந்திக்காரர்கள் என்றால் எளிதில் தீர்மானித்துவிடுவார்கள். கட்டுப்படுத்து பவை, ஆள்பவை எல்லாம் ஆண்கள்; கட்டுப் படுத்தப்படுபவை, ஆளப்படுபவை எல்லாம் பெண்கள். அவ்வளவுதான்!


ஓசையிலே வரும் நாசம்!

ஓசையிலே வரும் நாசம்!

(இக்கட்டுரை, Noise Pollution – ஒலிச் சூழல் சீர்கேடு  என்ற துறை பற்றியது. ஒருவேளை தமிழில் இது பற்றி வெளிவந்த முதல் அறிவியல் கட்டுரை இதுவாகவே இருந்திருக்கலாம். இது 1986 டிசம்பர் ‘இனி’ இதழில் (ஆசிரியர் எஸ்.வி. ராஜதுரை) வெளியானது. தமிழ்நாட்டின் இரைச்சலைப் பொறுத்தமட்டில், ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்த அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு பெரிய வேறுபாட்டை நான் காணவில்லை.)

தமிழனின் செவிப்பறை ஏதேனும் ஓர் உலோகத் தகட்டில் செய்யப்பட்டிருக்கிறதோ என்னமோ? ஏனெனில் அன்றாட வாழ்வில் இத்தனை இரைச்சல்களுக்கு ஈடுகொடுப்பவன் தமிழனைத் தவிர உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. எத்தனை சப்தங்கள்! காதணி விழாவிலிருந்து திருமண நிகழ்ச்சி வரை, கோயில் திருவிழாக்களிலிருந்து அரசியல் கூட்டங்கள் வரை, ஒலிபெருக்கி, ஒலிபெருக்கி, பெருக்கி, பெருக்கி… போதாதற்குப் பேருந்துகளில், ஆட்டோ ரிக்‌ஷாக்களில் டேப் ரிகார்டர் இசை. உணவு விடுதிகளில் வானொலி இரைச்சல் (இப்போது சிடி இரைச்சல் என்று மாற்றிக்கொள்ளலாம்). அண்டைவீடுகளில் ஸ்டீரியோ ஓசை. கண்காட்சிகளில் விளம்பரக் கூச்சல்கள்…

இந்த இரைச்சல்கள் நமது உடலையும் மனத்தையும் எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இவை வெறும் நியூசன்ஸ் மட்டுமல்ல. நம் மனத்தையும் உடலையும் கடுமையாக பாதிப்பவை. ஆயுளைக் குறைப்பவை. இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது உடனடித் தேவையாகும்.

ஒலியலைகள் பற்றி…

ஒலி அலைகளாகப் பரவுகிறது. காற்று மூலம்தான் என்றில்லை. எந்த ஊடகமாக இருந்தாலும் பரவும். வெற்றிடத்தில் மட்டும்தான் ஒலி பரவ முடியாது. உண்மையில், நம் நாட்டுப் படைவீரர்களிடமிருந்துதான் அமெரிக்கர்கள், தூரத்தில் வருகின்ற ஒரு குதிரைப்படையின் ஓசையைத் தரையில் காதுகொடுத்துக் கேட்டுக் கண்டுபிடிக்கும் முறையை அறிந்தனர். தரை, கம்பம், மரம், இரும்பு, காற்று, தண்ணீர் – எதுவாக இருந்தாலும் ஒலியைக் கடத்தும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை, காதுகளுக்கு ஒலி பெரும்பாலும் காற்றுமூலம்தான் வந்து சேர்கிறது.

சாதாரணமாக ஒலி, ஒரு நொடிக்கு 344 மீ. அல்லது மணிக்கு 760 மைல் வேகத்தில் பரவுகிறது. ஒலியின் இந்த வேகத்தை ஒரு மாக் என்கிறார்கள். இந்த ஒரு மாக் வேகத்திற்கும் அதிகமாக, இன்னும் அதிக வேகத்தில் செல்லும் விமானங்கள்தான் சூபர்சானிக் ஜெட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன. சுமார் 600 மைல் முதல் 800 மைல் (960 கி.மீ. முதல் 1280 கி.மீ.) வரையுள்ள வேகம் ஒலிச்சுவர் (சவுண்ட் பாரியர்) எனப்படுகிறது. சாதாரண விமானங்கள் ஒலிச்சுவரைக் கடந்தால் அவை வேகமான காற்று மூலக்கூறுகளால் மோதப்பட்டு நொறுங்கிப்போகும். ஒலிச்சுவரைத் தாண்டிச் செல்லத் தனி அமைப்புகள் விமானங்களில் உள்ளன.

ஒலி பரவும்போது, ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்துதான் பரவுகிறது. ஒரு அதிர்வு, ஒரு சைக்கிள் எனப்படுகிறது. ஒலி காற்றின் மூலமாகச் செல்கிறதானால், ஒரு நொடிக்குக் காற்றின் அணுக்கள் எத்தனை முறை அதிர்கின்றனவோ, அந்த எண், அதிர்வெண் எனப்படும். அதிர்வெண்ணை ஒரு நொடிக்கு 256 அதிர்வுகள்  (256 சைக்கிள்/நொடி) என்பதுபோலக் குறிப்பிடுவர்.

பழுதற்ற ஒரு மனிதக் காதினால் அதிகபட்சம் ஒரு நொடிக்கு 20000 அதிர்வுகளைக் கேட்கமுடியும். அதற்குமேல் முடியாது. அதற்குமேல் அதிர்வெண் கொண்ட ஒலி அல்ட்ராசானிக் எனப்படுகிறது. குறைந்த பட்சமாக மனிதக்காது நொடிக்கு 15 அதிர்வுகளைக் கேட்கலாம். அதற்குக் கீழ் குறைந்தாலும் கேட்க இயலாது. இது இன்ஃப்ரா சானிக் ஒலி எனப்படுகிறது. இவ்விரண்டையும் கேளா ஒலிகள் எனலாம்.

அதிர்வெண்ணைத் தவிர, உரப்பு அல்லது ஓசையின் வலிமை (இண்டென்சிடி அல்லது லவுட்னஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர்) என்பதும் முக்கியமானது. ஒலி அலைகள் எவ்வளவு அழுத்தத்துடன் செவிப் பறையைத் தாக்குகின்றன என்பதைப் பொறுத்தது இது. ரொம்பத் தொலைவிலுள்ள ஒலிகள் சரிவரக் கேட்பதில்லை. கிட்டத்திலிருந்து வரும் ஒலிகள் அதிக உரப்புடன் கேட்கின்றன. உண்மையில் நம் காதுகளைத் தாக்கும் ஒலியின் சக்தி என்பது மிகக் குறைவுதான். மிக உரத்த சத்தம் என்று நாம் நினைப்பதன் சக்தி 0.01 வாட் தான் இருக்கும். இதுவே காதைச்  செவிடாக்கிவிடும். (ஒப்பீட்டுக்கு-நாம் 40 அல்லது 60 வாட் பல்பினை வெளிச்சத்துக்குப் பயன்படுத்துகிறோம்.) காற்றில் வரும்போது ஒலியலைகள் காற்று அணுக்களால் தங்கள் சக்தியை இழந்துவிடுகின்றன. ஒளி அப்படி இழப்பதில்லை.

ஒலியின் உரப்பு அல்லது வலிமை என்பது டெசிபெல் என்ற வீதத்தால் அளக்கப்படுகிறது. ஒரு டெசிபெல் என்பது ஒரு சதுரசென்டிமீட்டர் பரப்பின் மேல் 0.000204 டன் அழுத்தம் ஏற்படுவதற்குச் சமம். டெசிபெல் என்பது மடக்கை வீதத்தில் (லாகரித்மிக் ஸ்கேல்) உள்ள ஓர் அளவு. டெசி என்றால் பத்தில் ஒரு பங்கு. பெல் என்பதுதான் முக்கிய அளவு, ஆனால் மிகப் பெரிய அளவு! ஒரு பெல் என்பது 10 டெசிபெல், ஆனால் இரண்டு டெசிபெல் என்பது 20 டெசிபெல் அல்ல – 100 டெசிபெல் (பத்தின் இரு மடங்கு). இதேபோல் இரண்டு ஒலிக்கருவிகளிலிருந்து வரும் ஒலிகள் அப்படியே கூடுவதில்லை. சற்றேதான் கூடும். உதாரணமாக ஒரு கருவியிலிருந்து 60 டெசிபெல் ஓசையும், மற்றொன்றிலிருந்தும் 60 டெசிபெல் ஓசையும் வந்தால் நமக்கு 120 டெசிபெல் ஓசை கேட்காது, 63 டெசிபெல் அளவுதான் கேட்கும். ஒலியை அளக்க சவுண்ட் லெவல்  மீட்டர்கள் உள்ளன. ஒரு சிறு காமிராபோல் கழுத்தில் இவற்றை மாட்டிக் கொண்டு சென்று ஓரிடத்திலுள்ள ஓசையின் உரப்பை அளக்கமுடியும்.

ஒலிச்சூழல் சீர்கேடு

ஒலியின் உரப்பளவு (சத்த அளவு) ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிடுமானால் அதை ஒலிச்சூழல் சீர்கேடு எனலாம். எந்த வயதுள்ளவரானாலும், ஒருவருடைய கேட்கும் திறன் ஒலிச்சூழல் சீர்கேட்டினால் பாதிக்கப்படுகிறது.

காது ஓர் அற்புதமான நுண்ணுணர்ச்சி வாய்ந்த சாதனம். மிக பலவீனமான சக்தி கொண்ட ஒலியைக்கூட கிரகித்து அந்த ஒலியலைகளை உயிர்மின் துடிப்புகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. அதனால்தான் ஒலியை உணர்வது சாத்தியமாகிறது. ஒரு நல்ல காது, சுமார் 75 ஆண்டுகளுக்காவது கேட்கும் சக்தியை நன்றாக வைத்திருக்க முடியும். ஆனால் பல ஆண்டுகளாக எந்திர ஓசைகள், கும்பல் ஓசைகள், ஒலிபெருக்கி ஓசைகள் போன்றவற்றைக் கேட்கும் காதுகள், மிக விரைவாகக் கேட்கும் தன்மையை இழந்துவிடுகின்றன.

ஒலி குறித்து ஆராய்ச்சி செய்த ஓர் அமெரிக்க ஆய்வாளர்-டாக்டர் ரோஸன் என்பவர் சொன்னார்: “ஆப்பிரிக்க ஆதிவாசிகளான மாபான்களிடையே நான் சோதனை செய்தபோது வியந்தேன். அவர்கள் ஆடுமாடு கத்துவது போன்ற இயற்கை ஒலிகளைத் தவிர செயற்கை ஒலிகள் எதற்கும் பழக்கப்படாதவர்கள். ஓர் எண்பது வயதான ஆதிவாசி, ஒரு இருபத்தைந்து வயது அமெரிக்க வாலிபனுக்கு இணையான கேட்கும் சக்தியைப் பெற்றிருக்கிறான்”.

உரத்த ஒலிக்கு ஆட்பட்டாலும், காதுகள் தாமாகவே கேட்கும் சக்திக்கு மீளக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கின்றன. எனினும் சிலசமயங்களில் மிக உரப்பான ஒலிகளை நீண்டநேரம் கேட்கும்போது காதுகள் தங்கள் நிலைஇயல்புக்கு மீள முடிவதில்லை. நீண்ட நேரம் என்பது நமது பஸ்கள், லாரிகளிலுள்ள மின் ஹாரன் ஒலிகளின் உரப்புக்கு சுமார் மூன்று நிமிட நேரம்தான். மூன்றுநிமிட ஒலியே ஒருவனைச் செவிடாக்கிவிடக் கூடும். காதின் நத்தை எலும்பை பாதிக்கக்கூடும். துப்பாக்கி, பீரங்கி அல்லது வெடிகுண்டு  ஓசைகள், செவிப்பறையையே கிழியச் செய்யலாம். தீபாவளி சமயத்தில் கேட்கும் பட்டாசு ஓசைகள் நமக்குப் பழக்கமானவை. இவைகளும் செவிப்பறையை மிகவும் பாதிக்கக்கூடியவை. அதிலும் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர்.

இயந்திர ஓசைகளும், வாகன ஓசைகளும்தான் காதைக் கெடுக்கக் கூடியவை என்பதல்ல. எந்த இசையுமே – அது நல்ல சாஸ்திரீய சங்கீதமாக இருந்தாலும் கூட – ஒரப்பு அளவுக்குமேல் சென்றால் காதைக்  கெடுக்கத்தான் செய்யும். சிலர், ஜாஸ் போன்ற நவீன இசைகள்தான் காதைக் கெடுக்கும், சாஸ்திரீய சங்கீதம் கெடுக்காது என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை பொய். எந்த இசையானாலும் நமக்குத் தேவையான ஒலி அளவில்தான் கேட்கவேண்டுமே தவிர, ஸ்பீக்கர் மூலம் கேட்டால் காது ‘போய்விடும்’. குறிப்பாக ‘பாஸ்’ சத்தம் மிக ஆபத்தானது.

ஒலிச்சூழல் சீர்கேடும் மனநலமும்

காது செவிடாவதை விடவும் ஒலிச்சூழல் சீர்கேட்டின் மிக மோசமான விளைவு, நமது மனநிலை பாதிக்கப்படுவதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைக் குழுவிலுள்ள டாக்டர் ஆலன் பெல் கூறுகிறார்: “நமக்குத் தொல்லை கொடுக்கும் எந்தச் சந்தடியையும் ஓசை எனலாம். கார்களின் ஓசை அவற்றை ஓட்டுபவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் பாதையோரம் வசிப்பவர்களுக்கு அது நரகம். தொல்லையைத் தருவதற்கு ஓசையின் உரப்பு மட்டுமே காரணமும் அல்ல. நமக்குத் தேவையற்ற எந்த ஓசையும் நமது தனிமையை பாதித்து, நமது மனநிலையைக் கெடுக்கலாம். தொடர்ந்து மனநிலையை பாதித்து ஒருவனைப் பைத்தியமாகவும் ஆக்கலாம்”. ஓசைகளால் தொல்லைப் படுத்தப்பட்டு, மனநிலை பாதித்ததால், கொலைகளைச் செய்தவர்களும் நிறைய உண்டு.

ஓசைகள், நமது செயல்பாடுகளில் குறுக்கிட்டு, நரம்புகளையும் உணர்ச்சிக ளையும் நடத்தையையும் மிக எளிதாக பாதிக்கின்றன. நாம் இவற்றை அறியாமலே இருக்கிறோம். நமது செய்தித் தொடர்புமுறையில் குறுக்கீடு, நமது தூக்கத்தில் குறுக்கீடு, பயத்தைத் தூண்டுவது ஆகியவை எந்தச் செய்தித் தொடர்பையும் பாழ்படுத்தக்கூடும். தொலைபேசியில் இவ்விதக் குறுக்கீடுகள் தொடர்புகொள்வதைப் பாழ்படுத்துவதை நாம் அறிவோம். இரண்டாம் உலகப் போரின்போது இந்த உத்திதான் கையாளப்பட்டது. எதிரிகளின் செய்தித் தொடர்பைத் துண்டிப்பதைவிட, மனிதக்குரலின் அதிர்வெண்ணிலேயே அர்த்தமற்ற ஓசைகளை உண்டாக்கிச் செய்திகளைக் குழப்புவது மிக எளிது. இதற்கு மாஸ்கிங் என்று பெயர்.

நமது தூக்கத்தில் மிக முக்கியமான பகுதி ஆர்இஎம் (REM) எனப்படுவ தாகும். தூங்கும்போது கண்விழிகள் மிக வேகமாக அசைவதால் இப் பெயர் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) வந்தது. இந்த ரெம் தூக்கம், மிகச் சிறிய ஓசைகளாலும் பாதிக்கப்படும். தூக்கம் பாதித்தால், நல்ல மனைநிலை கொண்டவர்களுக்கே எரிச்சல் உண்டாகிறது. பலருக்கும், மனநிலை கட்டுப்பாடின்மை ஏற்படும். விழித்துக் கொண்டே கனவு காணுதல், கற்பனைக் காட்சிகள், கட்டுப்பாடற்ற நடத்தை, தற்காலிகமான மனநோய்கள் ஆகியவை ஏற்படலாம். போலீசும் இராணுவமும் ஒருவனைக் குற்றம் செய்ததாக ஒப்புக் கொள்ளச்செய்ய மிக எளிய வழியாக ஓசையையும் இரைச்சலையும் பயன்படுத்துகிறார்கள். தூக்கமின்றிச் செய்து, மணிக்கணக்காக ஒரேவித ஓசைக்கு ஆட்படுத்தும் போது, குற்றம் புரியாதவனும்கூட, மனத்தளர்ச்சியினால் வேறுவழியின்றிக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்படும். ஓசை, மனிதனின் அச்ச உணர்ச்சியைத் தொடுகிறது. பெரிய ஓசைகளைக் கேட்கக் குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களே பலரும் பயப்படுவதைக் காணலாம்.

ஓசை, தொல்லைப்படுத்துகிறது, பயப்படுத்துகிறது, நம் வேலைசெய்யும் திறனைக் குறைக்கிறது, தூக்கத்தின் இருண்ட மூலைகளிலும் குறுக்கிட்டு பயம் உண்டாக்குகிறது, பேச்சில் குறுக்கிடுகிறது, இசையைக் கேட்க விடாமல் தடுக்கிறது, நமது இரகசியத்தை-தனிமையைக் குலைக்கிறது. அப்படியும் நாம் ஒலிபெருக்கிகள் வைத்து, நம்மையும் தொல்லைப் படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் தொல்லைக்குள்ளாக்குவதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.

டாக்டர் மாகெரி என்பவர், இத்தாலியில் பல்கலைக்கழக பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். மிகச் சிறந்த மாணவர்கள் எண்பதுபேரைத் தேர்ந்தெடுத்து ஒரு தொழிற்சாலையின் சந்தடி மிக்க சூழலில் வினாக்களுக்கு விடையளிக்கச் செய்தார். எக்ஸ்ட்ராவெர்ட்டான மாணவர்களைவிட இண்ட்ராவெர்ட் மாணவர்கள் சந்தடியைப் பொருட்படுத்தாமல் விடையளித்தனர். ஆனால் அவர்கள் செய்யும் தவறுகள், ஒலியின் உரப்புக்கேற்ப அதிகமாகிக் கொண்டே சென்றன.

ஒலிச்சூழலும் உடல்நலமும்

டாக்டர் பிராட்பெண்ட் என்பவர் செய்த சோதனைகளின்படி, ஒலியின் அதிர்வெண் மிகுதியாக மிகுதியாக வேலையில் தவறு செய்தல் அதிகமாகிறது. வேலைத்திறன் குறைகிறது. டாக்டர் ஜான்சன் என்பவர் லக்சம்பெர்கில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பலவேறு ஒலிச் சூழல்களில் பணிபுரிய வைத்து ஆராய்ந்தார். ஒலி அதிகமான சூழல்களில் பணிபுரிபவர்கள் கொடுமை நிறைந்தவர்களாகவும், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகவும், நம்பத் தகாதவர்களாகவும் பீதியுணர்வு கொண்டவர்களாகவும் மாறுகின்றனர் என்று அவர் கண்டறிந்தார்.

ஸ்வீடனைச் சேர்ந்த டாக்டர் பெர்ட்டில் யொஹான்சன், கருவில் வளரும் குழந்தைகள் எவ்வாறு ஒலியினால் பாதிப்படைகின்றன என்பதை ஆராய்ந்தார். சுமார் 110 டெசிபெல் ஓசையைத் தாயின் வயிற்றிலுள்ள கருவுக்குச் செலுத்தினால் அது சிசுவுக்கு சுமார் 50 டெசிபெல் அளவில் கேட்கும். இம்மாதிரி கர்ப்ப கால ஓசைகளுக்கு ஆட்பட்ட குழந்தைகள் பின்னால் நரம்புக் கோளாறுகள் கொண்டவர்கள் ஆகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதே டாக்டர், முயல்கள், எலிகளை வைத்து ஓசைநிறைந்த சூழலில் அவற்றை ஆராய்ந்தார். ஏறத்தாழ 120 டெசிபெல் ஓசை அளவை எட்டும்போது அவற்றின் இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவு ஏற்படுவதையும், ஏறத்தாழ 150 டெசிபெல் ஓசை அளவை எட்டும்போது அவை இறந்துவிடுவதையும் கண்டார். இவை இறப்பதற்கு முன், உடலில் துடிப்புகள், பக்கவாதம், தோல் கழலைகள் முதலியன ஏற்பட்டன. இந்தக் கண்டுபிடிப்பு  மிக முக்கியமானது. நாற்பது வயதுக்குமேல் ஆனவர்கள் அதிக ஒலியளவால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவு ஏற்படவும், இரத்தக் குழாய்கள் சுருங்கி இரத்தம் பாய்வது தடுக்கப்படவும், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதை இச்சோதனைகள் நிரூபித்தன. 150 டெசிபெல் ஓசையில் மனிதரை வைத்துச் சோதனை நிகழ்த்தமுடியாது. 110 டெசிபெல் ஓசையே மனிதனின் காதுக்குப் பெரிய வலியை உண்டாக்கும்.

ஃபிரான்சில், 1966இல் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனை, மனிதர்கள் நீண்ட நேரத்திற்கு (10 முதல் 15 நிமிடங்கள்) மிக அதிக ஒலியளவில் வாழ நேரிடும்போது நிறக்குருடாகி விடுகிறார்கள் என்பதை நிரூபித்தது. 15 நிமிட உரத்த ஓசை, ஒரு மணிநேரத்திற்கு நிறக்குருட்டினை ஏற்படுத்தியது.

சுருங்கச் சொன்னால், அதிக ஒலியளவு கொண்ட ஒலிச்சூழல் சீர்கேடானது,  மனிதனின் செவிக்கும், உடலுக்கும், மனத்திற்கும் தீங்கு ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் மனநோயை உண்டாக்குகிறது. சிலசமயங்களில் சாவு மனப்பான்மையையும் தற்கொலை மனப்பான்மையையும் உண்டாக்குகிறது. அதிக ஒலி, இரத்தக்குழாய்களில் கொழுப்பையும் அடைப்பையும் மிகுதிப் படுத்தும். மிக அதிக உரப்பு, மரணத்தையும் ஏற்படுத்தும்.

அடிப்படைத் தேவைகளை நாடியே நேரம் முழுவதையும் இழந்து போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கு, ஒலிச்சூழல் சீர்கேட்டினால் வேறு இத்தனை கேடுகள் வந்து சேர வேண்டுமா?

மார்கழியும் அய்யப்பன் சீசனும் அடுத்தடுத்து வரப்போகின்றன. எல்லா பக்திக்கும் மேலானது, பிறரை நிம்மதியாக வாழவிடுவது என்பதை எந்த பக்தர்களும் உணரப்போவதில்லை. அரசியல்வாதிகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு நம் செவிப்பறைகளைக் கிழித்து, உடல்-மனநலத்தைத் தொடர்ந்து கெடுத்து வருகிறார்கள்.


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9

 

கிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை செய்து கொல்கிறேன்.

காக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்?

Siragu-panchadhandhira-kadhaigal9-1

சிரஞ்சீவி: ஒரு தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம் செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில் உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:

நித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய்? ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய்? உங்கள் சாதிக்கு நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம் இருக்கிறதே, தெரியாதா?

பார்ப்பனன்: யாகத்திற்குரிய விலங்கை நீ நாய் என்று சொல்கிறாயே? உனக்குக் கண் பொட்டையா?

திருடன்1: சரி சரி, எனக்கு என்ன வந்தது? நீ சுகமாய்ப் போ.

பிராமணன் கொஞ்சதூரம் நடந்து சென்றான். அப்போது இரண்டாவது திருடன் அவனிடம் வந்தான்.

திருடன்2: உனக்கு என்னதான் கன்றுக்குட்டியின்மீது ஆசையிருந்தாலும், அது செத்தபிறகு அதைத் தோள்மேல் தூக்கிக்கொண்டு செல்கிறாயே, அது சரிதானா? செத்த மிருகங்களைத் தொட்டால் சாந்திராயணம், பஞ்சகவ்யம் ஆகிய சடங்குகளைச் செய்யாமல் தீட்டுப் போகாதே. அப்படியிருக்க, நீ செத்த பிராணியைத் தோள்மேல் ஏன் தூக்கிக்கொண்டு போகிறாய்?

பிராமணன் அவனையும் வைதுவிட்டு மறுபடியும் செல்லத் தொடங்கி னான். கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் வந்தான்.

திருடன்3: ஐயா பிராமணரே, கழுதையைத் தீண்டுகிறவன் சசேல ஸ்நானம் (முழு உடைகளுடனும் குளிப்பது) செய்யவேண்டுமென்று சொல்லியிருக் கிறது. அப்படியிருக்கும்போது நீர் ஏன் கழுதையைத் தூக்கிக் கொண்டு போகிறீர்?

பிராமணன் (தனக்குள்): ஒரே பிராணியைப் பார்த்தவர்களில் ஒருவன் நாய் என்கிறான், மற்றவன் செத்த கன்றுக்குட்டி என்கிறான், இன்னொருவன் கழுதை என்கிறான். அதனால் இந்த ஆடு ஏதோ பூதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் இதை விட்டுவிட்டுப் போவதே மேல்.

Siragu-panchadhandhira-kadhaigal9-2

இப்படி, பிராமணன் அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டுப் பக்கத்திலிருந்த குளத்தில் நீராடிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். பிறகு அந்த வஞ்சகர்கள் மூவரும் அதைக் கொன்று சாப்பிட்டார்கள். அதுபோலவே நானும் பகைவர்களை வஞ்சித்து நம் காரியத்தை முடிப்பேன். நான் என்ன சொல்லுகிறேனோ அதை மட்டும் நீ செய்.

மேகவர்ணன்: உங்கள் உபாயத்தைச் சொல்லுங்கள்.

சிரஞ்சீவி: நான் பகைவர்கள் பக்கம் இருப்பதாக என்னை நீ நிந்தனை செய்து ஏதாவது ரத்தத்தைக் கொஞ்சம் என்மீது பூசி, என்னை ஆலமரத்தின் கீழ் எறிந்துவிட்டு நீ பிற காகங்களோடு மலைப்பக்கம் போய்விடு. அப்போது, கோட்டான்கள், தங்கள் பகைவர்களாகிய உங்களுக்கு நான் விரோதி என்று நினைப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கு நம்பிக்க வருமாறு நடித்து அவர்கள் பலவீனத்தை அறிந்து அவர்களை நாசம் செய்வேன்.

மேகவர்ணன் அதை ஏற்றுக்கொண்டு நடிக்கலாயிற்று.

மேகவர்ணன்: நீ ஏன் எங்களுக்கு துரோகம் நினைத்தாய். உன் உயிர்மீது கூட உனக்கு மதிப்பில்லை.

அமைச்சன்1: அமைச்சர்களை நம்பித்தான் அரசர்கள் பலவித காரியங் களையும் செய்யவேண்டியுள்ளது. அப்படியிருக்கும்போது உன்னைப் போல துரோகம் செய்தால் என்ன கதியாகும்?

இப்படி அது கத்த ஆரம்பித்ததும், அவற்றின் ரகசியம் மற்ற யாருக்கும் தெரியாததனால், மற்றப் பறவைகள் வந்து கிழட்டு மந்திரியைத் தாக்க ஆரம்பித்தன.

மேகவர்ணன்: நீங்கள் இவனைத் தண்டிக்க வேண்டாம். இவன் பகையாளிக்கு நன்மை செய்கின்ற துஷ்டனாக இருப்பதால் இவனை நானே தண்டிப்பேன்.

இப்படிக் கூறிவிட்டு, அது எழும்பி எழும்பிக் குதித்து, தன் அலகினால் அந்தக் கிழட்டுக் காகத்தைப் போலியாகக் கொத்தி, தங்கள் சங்கேதப்படி, அதை ஆலமரத்தின்கீழ் எறிந்துவிட்டுச் சென்றது. பொழுதுபோனவுடன் கோட்டான்களின் அரசன் அந்த இடத்திற்குத் தன்கூட்டத்துடன் வந்து பார்த்தது. அங்குக் காகங்கள் எதுவும் இல்லை.

கோட்டான்களின் அரசன் அரிமர்த்தனன்: காகங்கள் எல்லாம் எவ்வழிப் போயின? உங்களில் யாருக்கேனும் அது தெரிந்திருந்தால் அவர்கள் தப்பிக்கும் முன்பாகவே அவர்களைக் கொல்லுவோம்.

இப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போது கிழட்டுக்காகமாகிய சிரஞ்சீவி முனகிக் கத்தலாயிற்று. பல கோட்டான்கள் அதனிடம் சென்று அதைக் கொத்தத் தொடங்கின.

சிரஞ்சீவி: நான் மேகவர்ணனின் மந்திரி. என் பெயர் சிரஞ்சீவி. கொடியவனான எங்கள் அரசன் இப்படிப்பட்ட நிலைக்கு நான் வருமாறு செய்தான். ஆகவே நான் உங்களைச் சரணடைகிறேன்.

இதைக் கோட்டான்கள் கேட்டு கோட்டான்களின் அரசனாகிய அரிமர்த்தன னுக்குக் கூறின.

அரிமர்த்தனன்: ஏ சிரஞ்சீவி, உனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

சிரஞ்சீவி மிகப் பணிவாக அதனிடம் சொல்லியது:

முன்னர் நீங்கள் காகங்களை அடித்தீர்கள் என்று கோபமாக அந்தக் கொடியவன் மேகவர்ணன் உங்களுடன் போர்செய்ய எழுந்தான். அப்போது நான், அவனிடம், “அரசே இது உங்களுக்குத் தக்கதன்று. வலியவனுடன் எளியவன் போர்செய்தால் விளக்கை அவிக்க விட்டில் அதில் போய் விழுவது போல் ஆகும். ஆகவே அவர்களுடன் சமாதானமாகப் போய், அவர்கள் கேட்பதைக் கொடுத்து, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வத்தை எப்போதும் ஈட்டிக்கொள்ளலாம், உயிர் போனால் வருமா?” இப்படி நான் கூறியதும், “நீ என்ன பகைவர் பக்கமாகப் பேசுகிறாய்” என்று வைது, என்னைக் குத்திக் கிழித்துவிட்டுப் போய்விட்டான். இப்போது எனக்கு உங்களுடைய திருவடிகளே துணை. எனக்கு இந்தக் காயங்கள் குணமானால், காகங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு உங்களுக்குத் துணையாக இருப்பேன்.

கோட்டான்களின் அரசனுக்கு குருதிக்கண்ணன், கொடுங்கண்ணன், கொள்ளிக்கண்ணன், குரூரநாசன், பிரகாரநாசன் என்று ஐந்து மந்திரிகள். அவர்களைப் பார்த்து, அரிமர்த்தனன், “பகைவர் மந்திரியாகிய இவன் இப்போது நம் கைவசம் ஆனான். இவனை என்ன செய்யலாம்” என்று கேட்டது.

குருதிக்கண்ணன் (மந்திரி1): காலமாறுபாட்டினால் இவன் தனது அரசனுக்கு எதிரியாகத் தோற்றமளித்தான். ஆகவே இவனை நம்மிடத்தில் வைத்துக் கொண்டு, பகைவனோடு சமாதானம் செய்யவேண்டும். சாமபேத தான தண்டம் ஆகிய நான்கு உபாயங்களிலும் சாம உபாயமே சிறந்தது. ஆகவே சமாதானத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

கொடுங்கண்ணன் (மந்திரி2): காகங்கள் நமக்கு இயல்பான பகைவர்கள். ஆகவே இவர்களுடன் சமாதானம் தக்கதன்று. தண்ட உபாயமே சிறந்தது. ஆனால் இவனைக் கொல்ல வேண்டியதில்லை. சிலசமயங்களில் பகைவனும் நல்லதைச் சொல்கிறான். ஒரு திருடன் ஒருவனைப் பிழைக்க வைத்ததும், ஒரு ராட்சதன் இரண்டு பசுக்களைப் பிழைப்பித்ததும் தங்களுக்குத் தெரியாததா?

அரசன்: அது எப்படி?

Siragu-panchadhandhira-kadhaigal9-3

கொடுங்கண்ணன்: ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இரண்டு பசுக்களை நன்றாக வளர்த்துவந்தான். ஒருநாள் ஒரு திருடன் அவற்றைத் திருடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு கயிறுகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வழியில் ஓர் அரக்கனைப் பார்த்து பயந்தான். அவன் “நீ யார்” என்று கேட்க, “நான் ஒரு திருடன். ஒரு பிராமணன் வைத்திருக்கும் இரண்டு பசுக்களைக் கவர எண்ணிப் புறப்பட்டேன்” என்றான். அரக்கன், “அப்படியானால் சரி, நானும் வருகிறேன். நீ பசுக்களைக் கொண்டு செல். எனக்கு அந்தப் பார்ப்பனன் உணவாவான். வழியைக் காட்டு” என்றான்.

இருவரும் சென்றபோது அந்தப் பார்ப்பனன் உறங்கிக்கொண்டிருந்தான். அரக்கன் அவனைத் தின்னப் போகும்போது, திருடன், “நான் பசுக்கள் இரண்டையும் பிடித்துக் கொண்ட பிறகு நீ அவனைத் தின்னு” என்றான். அதற்கு அரக்கன், “பசுக்கள் கூச்சலிடுமாதலால் பார்ப்பனன் விழித்துக் கொண்டால் காரியம் கெட்டுப்போகும். ஆகவே நான் முதலில் அவனைச் சாப்பிடுகிறேன். நீ பிறகு அச்சமில்லாமல் பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்லலாம்” என்றான். ஆனால் திருடன் ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு பேர்க்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப் பார்ப்பனன் விழித்துக் கொண்டான். அவன் தன் இஷ்ட தேவதையை தியானம் செய்து அரக்கனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு மட்டுமின்றி, கையில் தடி எடுத்துக்கொண்டுவந்து திருடனையும் விரட்டினான். ஆகவே மாற்றானும் எப்போதாவது ஒருசமயம் நமக்கு இதம் சொல்லக்கூடும் என்கிறேன்.

இப்போது அரிமர்த்தனன் மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, “உன் மனத்தில் உள்ளதைச் சொல்” என்றான்.

கொள்ளிக்கண்ணன்: அரசே, சாமமும் பேதமும் எனக்கு உடன்பாடு அல்ல. சமாதானத்தினால் பகைவனுக்குச் செருக்கு உண்டாகும். பேதம் செய்வதை அறிந்துகொண்டாலோ, அவன் ஒருவேளை மோசமும் செய்யக்கூடும். தானமே இப்போது உரியது. விவேகமுள்ளவன், கொடையால் பகைவனை வசம் பண்ணி அதை மேன்மேலும் பெருகச் செய்தால் பகைவன் நம் கைவசமாவான். மேலும் இவன் அவர்களோடு விரோதம் கொண்டு நம்மிடத்தில் வந்ததால் அவர்களுடைய குறைகளை நமக்குத் தெரிவிப்பான். எனவே இவனைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாத்தால் இவன் நமது இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவிக்க முடியாது. அவ்வாறன்றி, ஒருவருக்கொருவர் இரகசியங்களை வெளியிட்டால், அவர்கள் வயிற்றிலிருந்த பாம்பும், புற்றிலிருந்த பாம்பும் நாசம் அடைந்தாற் போலக் கெடுவார்கள்.

அரசன்: அது எப்படி?

கொள்ளிக்கண்ணன்: விஷ்ணுவர்மன் என்று ஒரு மன்னனுக்கு வயிற்றில் ஒரு சிறுபாம்பு குடிபுகுந்ததால் அவனுக்கு வயிற்றில் நோயுண்டாயிற்று. அவன் நாளுக்குநாள் உடல் மெலிந்து வெவ்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யலானான். அம்மாதிரி ஒரு கோயிலுக்கு அவன் சென்று வருந்திக் கொண்டிருக்கும் சமயம், அந்த ஊரின் அரசனின் இரண்டு பெண்கள் அரசனோடு கோயிலுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருத்தி விஷ்ணுவர்மனைப் பார்த்து “உனக்கு வெற்றி உண்டாகுக” என்றாள். மற்றொருத்தி, “நீ நல்ல உணவை உண்பாயாக” என்றாள். இரண்டாவது மகளின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், “இவளை இந்த நோயாளிக்கே கட்டி வைத்துவிடுங்கள், இவளும் நல்ல உணவையே சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டான். அவனது அமைச்சர்கள், இரண்டாவது மகளை விஷ்ணுவர்மனுக்கு அந்தக் கோயிலில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

அவள் தன் கணவனை வழிபட்டுப் பணிவிடை செய்துவந்தாள். மற்றொரு தேசத்திற்கு அவள் கணவனோடு சென்றுகொண்டிருக்கும்போது, சமையலுக் கெனச் சரக்குகள் வாங்கிவர, வேலைக்காரனை அழைத்துக்கொண்டு அவள் சென்றாள். நோயாளி உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே பக்கத்தில் புற்றிலிருந்த ஒரு பாம்பு, அவன் வயிற்றிலிருந்த பாம்புடன் உரையாடலாயிற்று. இதற்குள் அவன் மனைவி வந்து ஒரு மரத்தின் மறைவில் நின்று அவற்றின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தாள். புற்றுப்பாம்பு, வயிற்றுப் பாம்பை நோக்கி, “அட துஷ்டனே! இந்த அழகான ராஜகுமாரனை ஏன் வருத்துகிறாய்?” என்றது. வயிற்றுப்பாம்பு, புற்றுப்பாம்பை நோக்கி, “ஆகாரம் நிறைந்த குடத்தில் நான் வசிக்கிறேன், என்னை நீ ஏன் வைகிறாய்?” என்றது. புற்றுப்பாம்பு, “அவன் கடுகு தின்றால் நீ இறந்து போவாயே” என்றது. வயிற்றுப் பாம்பு, “உன்னையும்தான், யாராவது வெந்நீர் ஊற்றினால் கொன்றுவிடக்கூடும்” என்றது. இரண்டின் இரகசியங்களையும் அறிந்துகொண்ட ராஜகுமாரி, அவ்விதமே செய்து இரண்டையுமே கொன்றாள். அதனால் விஷ்ணுவர்மன் சுகமடைந்து, தன் னைவியோடு தன் ராஜ்யத்திற்கு வந்து அரசு செய்துகொண்டிருந்தான். ஆகவே பரஸ்பரம் இரகசியங்களைக் காப்பாற்றாமல் போனால், இழப்பு ஏற்படும்.

இதைக் கேட்ட கோட்டான்களின் அரசன், நான்காவது அமைச்சனாகிய குரூரநாசனைப் பார்த்து உன் கருத்தென்ன என்று கேட்டது.

அமைச்சன்4: இம் மூவர் கூறியதும் சரியில்லை. சாம தான பேதம் என்னும் மூன்றும் வலிமையற்றவர்கள் செய்பவை. வலிமையுள்ளவர்கள் தண்ட உபாயத்தையே கையாள வேண்டும். அதைவிட்டு மற்ற மூன்று உபாயங்களையும் செய்தால் பகைவன் நம்மைக் கேவலமாக எண்ணிவிடுவான். அப்படி வீரம் இல்லாவிட்டால் தெய்வத்தால் என்ன நேரிடுகிறதோ அதை அனுபவிக்க வேண்டும். உலகத்தில் யாவரும் விரும்புகின்ற லட்சுமி, மன ஊக்கத்துடன் தண்டத்தினால் எதிரிகளை வெல்லுகிறவர்களிடமே வருகிறாள். ஆகவே பகைவனைக் கொல்வதே சிறந்தது.

அரசன் ஐந்தாவது அமைச்சனை நோக்கி “உன் கருத்தென்ன” என்று வினவியது.

பிரகாரநாசன்: அரசே, பழங்காலத்தில் விபீஷணன் எப்படி இராமனை வந்து அடைந்தானோ அதுபோல இப்போது இவன் நம்மிடம் வந்திருக்கிறான். அவனை வைத்து இராமன் இராவணனை வென்றதுபோல, இவனை வைத்து நாம் காகங்களை அழிக்க வேண்டும். சரணமடைந்தவனைக் கொல்லுதல் சரியல்ல. அவ்வாறு கொல்கிறவன் ரௌரவம் எனப்படும் நரகத்தை அடைவான் என்று சொல்கிறார்கள். மேலும் தன்னைச் சரணடைந்த புறாவுக்காக சிபிச் சக்ரவர்த்தி தன் உடலின் மாமிசத்தையே வேடனுக்கு அளித்ததாக மகாபாரதத்தில் சொல்லியிருக்கிறது. மேலும் சரணடைந்த வேடன் ஒருவனைக் காப்பதற்காகப் புறாக்கள் தங்கள் உயிரையே கொடுத்தன.

அரிமர்த்தனன்- அது எப்படி, சொல்வாயாக.

(தொடரும்) 


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8

 

siragu-panjathandhira-kadhaigal1

இரண்டாவது அமைச்சன்: அவன் சொன்னதில் சிறிதும் நன்மை இல்லை. பெரிய துன்பங்கள் நேர்கின்றபோது பகைவருடன் சமாதானம் செய்யக் கூடாது. நெருப்பினால் காய்ச்சிய நீர் அந்த நெருப்பை அவிக்காதா? நம்மைக் கோட்டான்கள் வருத்துகின்றன என்று அவர்களோடு நாம் சமாதானமாகப் போனாலும் அவர்கள் நம்மைக் கொல்லுவார்கள். ஆதலால் மனோபலத்தோடு எதிரிகளைக் கொல்லவேண்டும். வீரத்தினால் உயர்ந்திருப்பவனே உயிருள்ளவன். மற்றவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்கள்.

அரசன் (மூன்றாம் அமைச்சனைப் பார்த்து): உன் கருத்து என்ன, சொல்.

மூன்றாம் அமைச்சன்: அரசனே, கேள். பகைவன் தன்னை விட வலிமை உடையவனாக இருந்தால், பொறுத்துக்கொண்டு போகவும் தேவையில்லை, அவனோடு சண்டையிடவும் தேவையில்லை. வேறொரு இடத்திற்குச் சென்று விடுவதே நல்லது. “இந்தச் சமயத்தில் சண்டை செய்யலாகாது” என்று எவன் தன் இடத்தைவிட்டு அந்தச் சமயத்துக்குத் துறந்து போய்விடுகிறானோ அவன் பாண்டவர்களைப் போல வெற்றியடைகிறான். எவன் செருக்குடன் போர் செய்கிறானோ அவன் குலம் அழிந்துபோகிறது.

அரசன் (நான்காம் அமைச்சனைப் பார்த்து): உன் ஆலோசனை என்ன?

நான்காம் அமைச்சன்: தன் இடத்தைவிட்டு ஒருவன் செல்லுதல் தகுதியானது அல்ல. முதலை தன் இடத்தில் (நீரில்) இருக்கும்போது மலை போன்ற யானையையும் இழுக்கமுடிகின்றது. அதுவே தன் இடத்தை விட்டுப் பெயர்ந்து சென்றால் அதை நாய்களும் இழுத்துக்கொண்டு போகின்றன. ஆகையால் தன் இடத்தில் இருந்தவாறே, நட்புள்ளவர்களின் துணையைக் கொண்டு பகைவர்களைக் கெடுக்கவேண்டும். பகைவருக்கு பயந்து தன் இடத்தைவிட்டுச் சென்றவன் திரும்பவும் அந்த இடத்துக்கு வரமுடிவதில்லை. பல்லைப் பிடுங்கிய பாம்பும், மதமில்லாத யானையும், இடம்பெயர்ந்த அரசமரமும் யாவராலும் அவமானமடையும். தன் இடத்தில் வலிமையோடு இருந்தால் ஒருவன் தக்க பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு நூறுபேருடன் சண்டையிடலாம். அதில் வெற்றிபெற்றால் செல்வத்தை அடையலாம். தோற்றால் சுவர்க்கம் கிடைக்கும். ஆகவே எதைச் செய்வதானாலும் இங்கிருந்து செய்வதே நல்லது.

அரசன் (ஐந்தாம் அமைச்சனிடம்): உன் அபிப்பிராயம் எப்படி?

ஐந்தாம் அமைச்சன்: என் அபிப்பிராயமும் இதுவே, அரசே! தங்கள் சார்பை விட்டுவிட்டால் சாமர்த்தியம் உள்ளவர்களும் வீரம் குறைந்துபோகிறார்கள். ஆகவே நம் இடத்திலிருந்தே நாம் உதவியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தன் இடத்தைவிட்டவனுக்கு யாரும் உதவி செய்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தக்க உதவிதான் வேண்டும். நெருப்பு சிறிதாக இருந்தாலும் சருகு முதலியவற்றின் உதவி இருக்கும்போது காற்று அதற்கு உதவி அதைப் பெரிதாக்குகிறது. அதே நெருப்பு உதவியின்றி விளக்காக இருக்கும்போது காற்று அதை அணைத்துவிடுகிறது. ஆகவே சார்பு அல்லது நட்பு இல்லாமல் எந்தக் காரியமும் ஆவதில்லை. எனவே தக்கவரை நாட வேண்டும். இதுவே என் கருத்து.

இறுதியாக மேகவர்ணன் என்னும் அக் காகஅரசன், தன் தந்தையின் வயது முதிர்ந்த மந்திரியாகிய சிரஞ்சீவியிடம் ஆலோசனை கேட்டது.

சிரஞ்சீவி: எல்லா அமைச்சர்களும் நூற் கருத்துகளையே கூறினார்கள். ஆகவே அனைத்தும் சரியானவையே. எனினும், பகைவன் பலசாலியாக இருந்தால் அவனுக்கு விசுவாசமாக நடப்பதுபோல் காட்டி, அவனைக் கெடுக்க வேண்டும். அல்லது எல்லா விஷயங்களிலும் தனக்கும் தன் பகைவனுக்கும் உள்ள தராதரங்களை ஒப்பிட்டு அறிந்து எது செய்ய வேண்டுமோ அதைச் செய்யவேண்டும். அரசன் தனக்குப் பயனுள்ளவற்றை ஒரு நாழிகை விசாரிக்காமல் இருந்தாலும் அவனுக்குக் கேடுவரும். விவசாயியின் பாதுகாப்பு இல்லாவிட்டால் பயிர் அழிகிறது அல்லவா? ஆகவே ஆள்பவன், எல்லா அமைச்சர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டு எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மேகவர்ணன்: சரி, காகங்களுக்கும் கோட்டான்களுக்கும் பகைமை எப்படி உண்டாயிற்று, சொல்லுங்கள்.

(கோட்டான்களுக்கும் காகங்களுக்கும் பகை ஏற்பட்ட கதை)

சிரஞ்சீவி: ஒருநாள் மயில் முதலிய பறவைகள் எல்லாம் காட்டில் கூடின. “நமக்கெல்லாம் கருடன் அரசனாக இருந்தும், நம்மைக் கொல்கின்ற வேடர்களிடமிருந்து அவன் நம்மைக் காப்பதில்லை. இப்படிப்பட்டவன் நமக்கு அரசனாக இருந்து பயன் என்ன? அரசனே வேண்டாம் என்றால், தலைவன் இல்லாமல் கப்பல் கரைகாணாமல் போவதுபோல நிலை கெட்டுப் போவோம். ஆகையால் எல்லாப் பறவைகளுக்கும் அரசனாகக் கோட்டானை நியமிக்க வேண்டும்” என்று நிச்சயித்தன.

அரசப் பட்டாபிஷேகத்துக்குரிய பொருள்களைச் சேகரித்து, பல வாத்தியங்களை முழக்கி, கோட்டானைச் சிங்காசனத்தில் அமரவைக்க வேண்டும் என்றிருக்கும்போது, அச்சமயத்தில் ஒரு காகம் வந்தது. மற்ற பறவைகளை அது பார்த்து, “இதென்ன காரியம், இப்படிச் செய்தீர்களே!” என்று அது கூச்சலிட்டது.

மனிதர்களில் நாவிதனும், விலங்குகளில் நரியும், மாதர்களில் பணிப் பெண்ணும், பறவைகளில் காகமும் சாமர்த்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இந்தச் செய்தியைக் காகத்திடமும் சொல்லி அதன் உடன்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்று பறவைகள் நினைத்து, “எங்களுக்கு அரசன் இல்லாமையால் இந்தக் கூகையை அரசனாக்கியிருக்கிறோம். இதற்கு நீயும் உடன்படு” என்றன.

ஆனால் காகம் குலுக்கென்று சிரித்து, தலையை அசைத்துச் சொல்லியது.

“இது முழுவதும் கெட்ட காரியம். அழகும் வல்லமையும் உடைய மயில் முதலிய அநேகம் பறவைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது பகல் குருடனாகிய இந்தக் கோட்டான்தான் உங்களைக் காப்பவனோ? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளலாமா? இதற்கு நான் உடன்பட மாட்டேன். கருட ராஜன் இருக்கும்போது பயங்கர சுபாவமும், வலிமையின்மையும் உள்ள இவனை அரசனாக்கி என்ன பயன்? பராக்கிரமும் குணமும் உள்ள அரசன் ஒருவன் இருந்தாலே போதுமானது. பல பேர் தலைமைப் பதவியில் இருந்தால் நமக்குத் துன்பம்தான். கருடனை வழிபட்டு எல்லா வரங்களும் பெற்று மனிதர்கள் பறவைகளிடம் மதிப்பு வைத்திருக்கிறார்கள். வலியவர்களின் பெயரால் எளியவர்களுக்குக் காரியம் ஆகிறது. முன்னொருகால் முயல் சந்திரனின் பிம்பத்தைக் காட்டி சுகமடைந்தது உங்களுக்குத் தெரியாததா?”

பறவைகள்: முயல் எப்படி சுகம் அடைந்தது? சொல்லவேண்டும்.

(முயலும் யானைகளும் கதை)

Siragu-panchadhandhira-kadhaigal3

காகம்: ஒரு காட்டில் சதுரதந்தன் என்னும் யானை பிற யானைகளுக்குத் தலைமை தாங்கிவந்தது. அங்கே மழை பெய்யாததால் குளம் குட்டை கசங்கள் யாவும் வற்றிப்போயின. மற்ற யானைகள், “சுவாமி, நாங்கள் தண்ணீர் இன்மையால் செத்தாற்போல் ஆயினோம். தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்றால் எல்லாரும் நலமாக இருக்கலாம்” என்றன. அப்போது ஒரு முதிர்ந்த யானை, “இங்கிருந்து ஐந்து நாள் நடைப்பயணத் தொலைவில் பாதாளகங்கை என்ற நதி இருக்கிறது. அங்கே போனால் எல்லார்க்கும் மிகவும் நீர் கிடைக்கும்” என்றது. அப்படியே எல்லா யானைகளும் அங்கு சென்றன. நல்ல தெளிந்த நீரைக் கண்டதும், அவை ஆரவாரத்தோடு ஓடிச் சென்று நீரில் பாய்ந்தன. அப்போது அங்கே வசித்துக் கொண்டிருந்த முயல்களில் சில யானைகளின் காலின்கீழ் அகப்பட்டு இறந்தன. பல முயல்களுக்குக் கால்கள் ஒடிந்தன. சில மிதிபட்டுக் கூழாயின. சிலவற்றின் குடல்கள் சரிந்தன. இப்படியொரு எதிர்பாராத் துன்பம் நேரிட்ட உடனே சில முயல்கள் ஒன்றுகூடி, “இந்த யானைக் கூட்டம் இன்று வந்து நம்மில் பலரை அழித்துவிட்டது. இதனால் நமக்குப் பெரிய சங்கடம் நேரிட்டு விட்டது. அதனால் இதற்கு ஏதாவது உபாயம் செய்ய வேண்டும்” என்றன.

சில முயல்கள்: இந்த இடத்தைவிட்டு நாம் போய்விடலாம்.

வேறு சில முயல்கள்: நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் போவது சரியில்லை. ஏதாவது தந்திரம் செய்து யானைகளை விரட்ட வேண்டும்.

அப்போது ஒரு முயல்: யானைகள் பயப்படும்படி நான் ஒரு உபாயம் செய்து அவற்றை விரட்டுகிறேன்.

தன் ஆலோசனைப்படி, அது யானைகள் வரும் வழியில் ஓர் உயர்ந்த மேட்டில் உட்கார்ந்திருந்தது.

(யானைகள் வந்தபோது, சதுரதந்தனைப் பார்த்து)

முயல்: அட துஷ்ட யானையே, நீ உன் இடத்தைவிட்டு இந்த மடுவில் வந்து பலவகைப்பட்ட விளையாட்டுகளை விளையாடுகிறாய். நான் உங்கள் எல்லாரையும் மரணமடையச் செய்வேன்.

யானை (ஆச்சரியப்பட்டு): நீ யார்?

முயல்: நான் நிலவில் இருக்கும் முயலாகிய விஜய ராஜனுடைய தூதன். சந்திரனுடைய கட்டளைப்படிதான் இங்கே வந்தேன்.

(இதைக் கேட்டு ஏமாந்த யானை): சந்திரனுடைய கட்டளை என்ன?

முயல்: நீ இங்கே வந்து நாணமில்லாமல் நீரில் குதித்துவிளையாடி எங்கள் இனத்தில் பலபேரைக் கொன்றுவிட்டாய். அதனால் விஜய ராஜன் கோபமாக இருக்கிறான். இந்த ஒருமுறை இதைப் பொறுத்துக் கொண்டான். இனிமேல் நீ இங்கே வரலாகாது. நீ இதற்கு பதிலளித்தால் எங்கள் தலைவனிடம் சொல்வேன்.

யானை: அவன் இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டுபோ.

முயல்: நீ தனியாக என்னோடு வா, எங்கள் அரசனைக் காண்பிக்கிறேன். இரண்டும் சென்றன. அருகிலுள்ள மடுவிற்குச் சென்று,

முயல்: சந்திரன் இந்தத் தண்ணீருக்குள் வந்திருக்கிறான். அவனை வணங்கிச் சொல்.

யானை பயந்து, நீரில் காணப்பட்ட சந்திரனின் பிம்பத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டது. அது முதலாக முயல்கள் எந்தத் தொல்லையும் இன்றிச் சுகமாக அங்கே இருந்தன. அப்படியே, பெரியவர்களை அடுத்திருந்தால் மலைபோல் வரும் துன்பங்களும் பனிபோல் நீங்கிவிடும். கொல்லையில் மரத்தைச் சார்ந்திருக்கும் கொடி, உழவன் உழுபடைக்கு அஞ்சுவதில்லை. மாறாக துஷ்டர்களின் உறவு கணப்போது இருப்பினும் கெடுதியே வரும். முன்பு ஒரு முயலும் ஆந்தையும் சண்டையிட்டு இரண்டும் இறந்த செய்தி அறியீரோ?

பறவைகள் காகத்தைப் பார்த்து: அது எப்படி?

காகம் சொல்லலாயிற்று. (முயலும் குருவியும் வழக்கிட்ட கதை)

Siragu-panchadhandhira-kadhaigal5

சில காலம் முன்னால் நான் ஒரு முதிய மரப் பொந்தில் குடியிருந்தேன். அப்போது கபிஞ்சலன் என்னும் குருவியும் அங்கே வசித்தது. நாங்கள் நண்பர்களாக, மாலைப்போதுகளில் அளவளாவி, சுகமாக இருந்தோம். ஒருநாள் அது வேறொரு பறவையோடு இரைக்குச் சென்றது. மாலையாகியும் அது வராததால், நான் “ஐயோ, அவன் வலையில் பட்டானோ? யாராவது கொன்றார்களோ? தெரியவில்லை. எப்போதும் வேறொரு இடத்திலும் அவன் தங்கமாட்டானே” என்று விசனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாம் நாள், அவன் இருந்த பொந்தில் ஒரு முயல் வந்து குடிபுகுந்தது. நான் பலவிதமாகத் தடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இப்படியிருக்க, கபிஞ்சலன் சிலநாள் கழித்து எப்படியோ திரும்பிவந்தது. தன் இடத்துக்கு அது வந்து பார்த்தபோது முயல் இருந்ததைக் கண்டு,

குருவி: அட முயலே! என் இடத்தை நீ ஆக்கிரமித்தது நல்லதல்ல. இது என் வீடு. உடனே புறப்பட்டுப் போய் விடு.

முயல்: அட பேதையே! இது உன் வீடு அல்ல, என் வீடுதான். வீணாக ஏன் கத்துகிறாய்? வாவி கிணறு குளம் கோயில் சத்திரம் காலியிடம் போன்ற சொத்துகள், அவற்றை விட்டு நீங்கிப் போய்விட்டவனிடம் இருக்காது. அதை யார் அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கே அது சொந்தமாகி விடுகிறது. இப்படித்தான் மனிதர்களும் நடந்துகொள்கிறார்கள். பறவைகளிலும் எது வலியதோ அது பிறவற்றின் இடத்தைக் கைக்கொள்ளுகிறது. எனவே இது என் வீடே!

கபிஞ்சலன்: நான் தர்மத்தைப் பற்றிப் பேச, நீ வழக்கத்தைப் பற்றிப் பேசுகிறாய். அதனால் நல்லறிவுள்ளவர்களிடம் சென்று நாம் இதுபற்றி வழக்குத் தீர்த்துக்கொள்ளலாம்.

இப்படி இவர்கள் விவாதம் செய்துகொண்டு போகும்போது, நானும் அவர்களைத் தொடர்ந்து போனேன். அங்கே கூர்ம்பல்லன் என்னும் பூனை ஒன்று இருந்தது. “இவர்கள் வழக்குத் தீர்ப்புக்குப் போகிறார்கள். இவர்களை மோசம் செய்ய வேண்டும்” என்று அது நிச்சயம் செய்துகொண்டது. அதனால் ஆற்றங்கரையில் உட்கார்ந்து சூரியனைப் பார்ப்பதுபோல் பாவனை செய்துகொண்டு, அங்கிருந்த பிராணிகளிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டிருந்தது:

இந்த நிலையற்ற உலகில் ஏற்படுகின்ற இன்பம் கணப்போதில் அழிந்து கனவுபோல் பொய்யாகப் போய்விடுகிறது. அதனால் நமக்கு தருமத்தைவிட வேறு கதி இல்லை. அறத்தைவிட்டு நாள்களைக் கழிப்பவன் மரப்பாவை போன்றவன். அவன் மூச்சுவிடுகின்ற பிணத்திற்கு ஒப்பாவான். தயிரில் சாரமாக நெய்யும், எள்ளில் சாரமாக எண்ணெயும் இருப்பதுபோல எல்லாவற்றிலும் சாரமாக தருமம் இருக்கிறது. இதைத் துறந்து வெறும் சோற்றைத் தின்றுகொண்டு மக்கள் காலம் கழிக்கிறார்களே என்று நான் மிகவும் துயரப்படுகிறேன். சுருக்கமாகச் சொல்லுகிறேன்: ஓ மக்களே! பிறருக்கு உதவி செய்வதற்கு ஒத்த புண்ணியமும், பிறரை வருத்துவதற்கு ஒத்த பாவமும் வேறில்லை. மேலும் தனக்குத் துன்பம் தருவது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்பதை உணர்ந்து யாருக்கும் கஷ்டம் நேரிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

இப்படி அதன் வாசகத்தைக் கேட்டு முயல், “இவன் நமக்கு நல்ல தீர்ப்புச் சொல்லுவான் வா” என்று கபிஞ்சலனை அழைத்தது. “இவன் நமக்கு இயற்கையில் பகைவன் ஆகவே சற்று தொலைவிலேயே இருப்போம்” என்று எண்ணி, குருவி சொல்கிறது:

தவமுனிவனே, நீ அறம் உணர்ந்தவன் ஆகையால், எங்கள் இருவர் வழக்கைக் கேட்டு, தர்மத்தின்படி நியாயம் சொல்லி, பொய்சொல்கிறவனை தண்டிக்க வேண்டும்.

Siragu-panchadhandhira-kadhaigal4

இதைக் கேட்ட பூனை, காதில் கையை வைத்துக் கொண்டு:

எனக்கு வயதாகிவிட்டது, அதனால் தூரத்துச் சொல் கேளாது. அருகில் வந்து உங்கள் கதையைச் சொன்னால் இம்மைக்கும் மறுமைக்கும் நலம் தருவதாகிய நடுநிலையோடு நான் வழக்குத் தீர்ப்பேன். பேராசையினாலும், கோபத்தாலும் தீர்ப்புச் சொல்பவன் நரகத்திற்குத்தான் போவான். ஆகையால் நீங்கள் என் காதருகே வந்து வழக்கைத் தெரிவியுங்கள். அவை பூனையின் பசப்பு வார்த்தையில் நம்பிக்கை வைத்து அருகில் வந்தவுடனே, அந்தப்பூனை இரண்டையும் இரண்டு கைகளால் ஒருமிக்கச் சேர்த்துப் பிடித்துத் தின்றுவிட்டது. ஆகையால் தீயவர்களைச் சேர்ந்தால் இப்படிப்பட்ட தீங்கே நேரிடும்.

இப்படிக் காகம் சொன்னவற்றைக் கேட்ட பறவைகள் எல்லாம்:

இப்போது சேகரித்த பொருள்களை அப்படியப்படியே வைத்துச் செல்வோம். வேறொரு பறவையை அரசனாக்குவது பற்றி மீண்டும் கூடி யோசிப்போம் என்று தங்கள் தங்கள் இடத்திற்குப் போயின. அப்போது சிங்காதனத்தின் அருகே தன் மனைவியோடு உட்கார்ந்திருந்த கோட்டான்:

பெண்ணே, மங்கல நீராட்டு ஆகியும் இப்போது ஏன் அரசனாக அபிஷேகம் செய்யாதிருக்கிறார்கள்?

பெட்டை: உன் ராஜ்யாபிஷேகத்துக்குக் காகம் இடையூறு செய்துவிட்டது. அதனால் பறவைகள் எல்லாம் தங்கள் இடத்துக்குப் போய்விட்டன. காகம் மாத்திரமே இருக்கிறது.

கோட்டான்: அடே துஷ்டனே, நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? நீ என் காரியத்தை ஏன் கெடுத்தாய்? இதனால் இன்று முதல் உன் குலத்துக்கும் என் குலத்துக்கும் தீராப்பகை உண்டாகிவிட்டது. வாளினால் வெட்டினாலும் அம்பினால் எய்தாலும் அந்தக் காயம் ஆறிவிடும். சொல்லினால் ஏற்பட்ட காயம் ஆறாது.

என்று சொல்லியவாறே கோட்டான் தன் இடத்துக்குப் பெட்டையுடன் சென்றது. காகமும், பயந்தவாறே தன் மனத்திற்குள்:

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஒப்ப, நான் என் பேச்சினால் வீண்பகை சம்பாதித்துக் கொண்டேன். சாமர்த்தியசாலி, சபையில் பிறரை நிந்திக்க மாட்டான். எதையும் யோசித்துச் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமையினால் நானும் சங்கடத்தில் அகப்பட்டேன்!

என்று பச்சாத்தாபப் பட்டவாறு தன் இடத்திற்குப் போயிற்று. அது முதற்கொண்டு கோட்டான்களுக்கும் நமக்கும் தலைமுறை தலைமுறையாகப் பகை இருந்து வருகிறது என்று கிழமந்திரி கூறியது.

மேகவர்ணன்: ஐயா! அப்படியானால், நாம் இப்போது என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

(தொடரும்)     


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7

 

siragu-panjathandhira-kadhaigal1

இரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா? ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.

காகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.

இரண்யகன்: உன் பேச்சு விவேகம் மிக்கதாக இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நீ சொல்கிறபடியே நாம் நட்புக் கொள்ளலாம். நாம் இருவரும் ஒருமனதாக இருக்கவேண்டும். உபகாரம் செய்பவன் நண்பன் என்றும் அபகாரம் செய்பவன் பகைவன் என்றும் அறிந்து களங்கமில்லாமல் நடக்கவேண்டும்.

இப்படி எலியும் காகமும் நட்புப் பூண்டன. அதுமுதலாக தங்கள் நட்பைப் போற்றி, ஒருவருக்கொருவர் உணவும் கொடுத்துக்கொண்டு நல் வார்த்தைகள் பேசிவந்தன. ஒருநாள்

லகுபதனன், எலியைப் பார்த்து: நண்பனே, இப்போது இங்கே எனக்கு இரை அகப்படவில்லை. வேறொரு இடத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

இரண்யகன்: சரி, எங்கே செல்லப்போகிறாய்?

லகுபதனன்: தண்டகாரண்யத்தில் கர்ப்பூரகௌரம் என்று ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே மந்தரன் என்ற ஆமை எனக்கு நண்பனாக இருக்கிறான். அங்கு சென்றால் அவன் தினமும் விதவிதமான மீன்களைப் பிடித்து எனக்கு உணவு தருவான். ஆகவே அங்குச் செல்ல இருக்கிறேன்.

இரண்யகன்: அப்படியானால் அங்கே என்னையும் கொண்டு செல்.

லகுபதனன்: நீ ஏன் அவ்விதம் விரும்புகிறாய்?

இரண்யகன்: நான் அங்கே சென்றதும் சொல்கிறேனே.

லகுபதனன் இரண்யகனையும் எடுத்துக்கொண்டு தண்டகாரண்யம் சென்றது. அவைகளை மந்தரன் வரவேற்றது.

லகுபதனன், மந்தரனிடம்: இந்த இரண்யகன் மிகவும் பரோபகாரி. சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் தலைமையிலான கூட்டத்தை வலையிலிருந்து விடுவித்தான். இவனது நல்ல பண்பைக் கண்டு நானும் இவனோடு நட்புக் கொண்டேன்.

Siragu-panchathandhiram7-1

இதைக் கேட்டு ஆமை மகிழ்ச்சியடைந்தது. பிறகு எலியிடம்,

ஆமை: நண்பனே, நீ இந்த மனித சஞ்சாரமற்ற காட்டுக்கு ஏன் வந்தாய்?

இரண்யகன்: நான் முன்பு இருந்த இடம் ஒரு சிற்றூர்ப் புறம் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு வயதான சன்யாசி இருந்தான். அவன் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை ஒரு கப்பரையில் போட்டு உறியில் தொங்கவிட்டு வைத்திருப்பான். நான் அதைச் சாப்பிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தேன். அப்போது அங்கே ஒரு இளைய சன்யாசி வந்தான். அச்சமயத்தில் மூத்த சன்யாசி, என்னை விரட்டுவதற்காகத் தடியால் பூமியில் தட்டிக் கொண்டிருந்தான். இளைய சன்யாசி அதைப் பார்த்து “நீ என்ன செய்கிறாய்” என்று கேட்டான்.

மூத்த சன்யாசி: இந்த எலி என் பாத்திரத்திலிருக்கும் உணவை தினந்தோறும் தின்னுகிறது. அதை ஓட்டுகிறேன்.

இளைய சன்யாசி: கொஞ்சம் பலமுள்ள இந்த எலி இவ்வளவு உயரமுள்ள உறி வரைக்கும் எப்படி எகிறிக் குதிக்கிறது? இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.

மூத்த சன்யாசி: அது என்ன காரணம்?

இளைய சன்யாசி: ஒருவேளை இங்கே இந்த எலி சேமித்துவைத்த பொருள்கள் ஏதாவது இருக்கலாம். உலகில் பணமுள்ளவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையும் சாதிக்கிறார்கள். பதவிகளை அடைவதற்கும் அது உதவுகிறது. அதனால் தானே பணமுள்ளவர்களை மற்றவர்களும் கூனிக்குறுகி வழிபட்டு நாடிச் செல்கிறார்கள்.

இவ்வாறு கூறி, அந்த சன்யாசி, பூமியை அங்கே தோண்டி, நான் சேமித்து வைத்திருந்த பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டான். அவனுக்குத் தேவையற்றவற்றை வீசிவிட்டான். அன்றுமுதலாக நான் இளைத்துப் போனேன். எனக்கு இரையும் மிகுதியாகக் கிடைக்காததால் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தேன். இதைப் பார்த்து,

இளைய சன்யாசி: இப்போது இந்த எலியின் நடையைப் பார்! முன்பிருந்த மதம் போய்விட்டது! அதனால்தான் பணமில்லாதவர்களைப் பிறர் அற்பமாக நினைக்கிறார்கள்.

இதைக் கேட்ட நான், “இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை. இதை வேறொருவருக்கும் சொல்லவும் கூடாது. பொருள் இழப்பு, குடும்ப விஷயங்கள், தானம், அவமானம், ஆயுள், செல்வம் முதலியவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது தவறு. தன் விதி சரியில்லாத சமயத்தில் வீரமும் முயற்சியும் வீணாகவே செய்கின்றன. பணமில்லாதவனுக்கு வனவாசத்தைக் காட்டிலும் நல்லது எதுவுமில்லை. எந்த இடத்தில் நாம் பணக்காரர்களாக இருந்தோமோ அந்த இடத்திலேயே ஏழையாக வாழ்வது தகுதியல்ல. ஆகவே அந்த சன்யாசி வீசி எறிந்த பொருள்களையாவது எடுத்துக் கொள்ளலாம்” என்று முயலும்போது அவன் என்னைத் தடியால் அடித்தான். அதனால் மிகவும் துக்கப்பட்டு உன் நண்பனுடன் கூடச் சேர்ந்து இங்கே வந்துவிட்டேன்.

இதைக் கேட்ட மந்தரன் என்னும் ஆமை சொல்லிற்று.

நண்பனே, நீ இதனால் அதைரியப்பட வேண்டாம். இருக்குமிடத்தை விட்டு வந்தோம் என்ற கவலையும் வேண்டாம். சாதுக்கள் எங்கே போனாலும் மரியாதை பெறுகிறார்கள். சிங்கம் வேறொரு காட்டுக்குப் போனாலும் புல்லைத் தின்பதில்லை. உற்சாகமுள்ளவன், தைரியசாலி, சந்தோஷம் உள்ளவன், வீரன், களங்கமில்லாதவன் ஆகியவர்களை லட்சுமி தானாகவே நாடி வருகிறாள். நீ உன் பொருளை இழந்தாலும் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறாய். ஆகையால் உனக்கு இருக்கும் சுகம், பணத்தாசையால் மயங்கிக் கிடப்பவர்களுக்கு இல்லை.

கெட்டவனுடைய அபிமானம், மேகத்தினுடைய நிழல், புல்லின் இளமை, பெண்ணின் இளமை, செல்வம் ஆகியவை வெகுநாட்களுக்கு நிலைப்பதில்லை. ஆகவே இவற்றை இழந்துவிட்டாலும், அழுது கொண்டிருப்பதால் பயனில்லை.

கர்ப்பத்தில் குழந்தையை வைக்கும் ஆண்டவன், அதற்கான பாலைத் தாய் மார்பில் அமைத்துவைக்கிறான். அப்படிப்பட்டவன், ஆயுள் உள்ளவரை நம்மைக் காப்பாற்ற மாட்டானா? நீ நல்ல விவேகம் உள்ளவன். உனக்கு இவை யாவும் தெரிந்தே இருக்கும். இனிமேல் நாம் அனைவரும் நட்புடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

லகுபதனன்: மந்தரா, நீ எல்லா நற்குணங்களும் வாய்ந்தவன். நல்ல குணமுள்ளவர்கள், பிறருக்கு வரும் ஆபத்தைத் தாங்களே நிவர்த்திக்கிறார்கள் என்பதால் உன்னை நாடி வந்தோம்.

இவ்வாறு கூறிய காகம், நீண்ட பெரிய மரத்தின் மேல் உட்கார்ந்து தன் சுபாவப்படி இங்கும் அங்கும் பார்த்தவாறு இருந்தது. அப்போது அங்கு ஒரு கலைமான் ஓடிவந்து மரத்தடியில் நின்றது.

எலி: ஏன் இப்படி ஓடிவருகிறாய்?

மான்: வேடர் பயத்தினால் இங்கிருக்கலாம் என்று ஓடிவந்தேன். என் பெயர் சித்திராங்கன்.

ஆமை: பயப்பட வேண்டாம். இது உன் வீடு. நாங்கள் உன் சேவகர்கள் என்று எண்ணிக் கொண்டு சுகமாக இரு.

இதனால் மானும் இம்மூன்றுடனும் நட்புக் கொண்டது. நான்கும் சுகமாக இருந்து கொண்டிருந்தன.

ஒருநாள், புல்மேயச் சென்ற மான் இரவாகியும் திரும்பிவரவில்லை. அதைக் கண்டு பிற பிராணிகள் மூன்றும் கவலையடைந்தன. மறுநாள் விடியற்காலை காக்கை பறந்து சென்று சுற்றிப் பார்க்கும்போது, மான் ஒரு வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டது.

காகம், மானிடம்: நண்பனே, உனக்கு இந்த அவஸ்தை எவ்வாறு நேரிட்டது?

மான்: இப்போது இதைக் கேட்டுப் பயனில்லை. நீ போய் இரண்யகனை அழைத்து வா. வேடன் வருவதற்குள் அவன் வந்து கட்டுகளை அறுத்துவிட்டால்தான் நான் தப்ப முடியும்.

காகம் விரைந்து சென்று, இரண்யகனை அழைத்துவந்தது. ஆமையும் மெதுவாக அந்த இடத்திற்கு வரலாயிற்று.

இரண்யகன்: நீ தான் மிகவும் சாமர்த்தியசாலி ஆயிற்றே, எவ்விதம் வலையில் மாட்டிக்கொண்டாய்?

மான்: இப்போது என்னைச் சீக்கிரம் விடுவி. முன்பே குட்டியாக இருந்தபோது நான் வலையில் மாட்டிக் கொண்டு ஒருமுறை துன்பமடைந்தேன். அந்த பயத்தினால் இப்போதும் சிக்கிக் கொண்டேன்.

அப்போது அங்கே வந்த ஆமை: நண்பனே, இப்போது காலதாமதம் செய்யலாகாது. வேடன் வந்தால் சித்திராங்கனைப் பிடித்துக் கொள்வான் என்ற கவலையாய் இருக்கிறது. மனத்தில் இருப்பதை அறிகின்ற நண்பனும், மனோகரமான பெண்ணும், பிறர் துக்கம் அறிந்து உதவும் செல்வந்தனும் கிடைப்பது அருமை.

இப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேடன் தொலைவில் வந்து கொண்டிருப்பதை லகுபதனன் கண்டது. “வேடன் வந்து விட்டான். இப்போது பெரிய சங்கடம் நேரிட்டுவிட்டதே” என்றது. அதைக் கேட்ட இரண்யகன், வெகுவேகமாக மானின் வலையை அறுத்து அதை விடுவித்தது. காகம், எலி, மான் ஆகிய மூன்றும் வேகமாக ஓட்டம் பிடித்தன. ஆனால் ஆமை மட்டும் தன் வழக்கமான மந்த நடையில் சென்றவாறு இருந்தது.

வேடன்: பெரிய பிராணியைப் பிடிக்க முடியவில்லை. ஆமையாவது கிடைத்ததே, சரி.

ஆமையைப் பிடித்துத் தன் வில்லில் கட்டிக்கொண்டு வேடன் நடந்தான். இதைக் கண்ட பிற மூன்று பிராணிகளும் அவன் பின்னால் போகத் தொடங்கின.

இரண்யகன்: ஒரு சங்கடம் நிவர்த்தி ஆவதற்குள் மற்றொன்று வந்து நேரிட்டு விட்டது. வேடன் தொலைவில் செல்வதற்கு முன் மந்தரனை விடத்தக்க உபாயத்தைச் செய்யவேண்டும்.

மற்ற இரண்டும்: என்ன செய்யலாம், சொல்.

siragu-panja-thandhiram-story6-3

இரண்யகன்: அதோ பக்கத்தில் ஓர் எரிக்கரை இருக்கிறது. சித்திராங்கன் ஏரிக்கரையில் செத்தவனைப் போல் சென்று கிடக்கட்டும். அவன் மேல் காகம் உட்கார்ந்து கொத்துவதுபோல் நடிக்கட்டும். அப்போது வேடன் மான் இறந்துவிட்டதென்று நம்பி, மந்தரனை பூமியில் வைத்துவிட்டு மானுக்கு அருகில் செல்வான். அதற்குள் ஆமையின் கட்டை நான் விடுவித்து விடுவேன். ஆமை நீரில் இறங்கி ஒளிந்துகொள்ளட்டும்.

இதைக் கேட்ட எல்லாப் பிராணிகளும் அவ்விதமே செய்தன. மந்தரனை விடுவித்தன. வாய்த் தவிடும் போய், அடுப்பும் நெருப்பும் இழந்த பெண் போல அந்த வேடன் வெட்கி வருத்தமடைந்தான்.

“கைக்கு வராத பெரிய லாபத்தை நாடி, கையில் இருந்த சிறிய லாபத்தையும் இழந்துவிட்டேனே. அதிக ஆசை அதிக நஷ்டம். கிடைத்தது மட்டும் போதும் என்று நினைப்பவனே மகாபுருஷன்”

இவ்வாறு எண்ணிக்கொண்டு வேடன் வீட்டுக்குச் சென்றான். காகம், ஆமை, எலி, மான் என்ற நான்கும் மகிழ்ச்சியுடன் தங்கள் இடங்களில் முன்போல வாழ்ந்திருந்தன.

இரண்டாம் பகுதி முற்றிற்று.

மூன்றாம் தந்திரம்

சந்தி விக்கிரகம் அல்லது அடுத்துக் கெடுத்தல்.

சோமசர்மா தன் மாணவர்களாகிய அரசகுமாரர்களிடம் சொல்கிறான்:

“முன்னே பகைவர்களாக இருந்தவர்கள் இப்போது நம்மிடம் வந்து விசுவாசம் காட்டினால் அதில் நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பினால், காகம் எப்படி கோட்டான்களின் குகையைக் கொளுத்தி நாசம் செய்ததோ அப்படி ஆகிவிடும்”.

அரசகுமாரர்கள்: அது எப்படி? அந்தக் கதையைச் சொல்லுங்கள்.

சோமசர்மா: தென்தேசத்தில் மயிலை என்றொரு நகரம். அதன் அருகில் ஒரு பெரிய ஆலமரத்தில் மேகவர்ணன் என்று ஒரு காக அரசன் தன் கூட்டங்களோடு வாழ்ந்து வந்தது. அப்போது மலைக்குகை ஒன்றிலிருந்து அங்கே உருமர்த்தனன் என்னும் கோட்டான்களின் அரசன், தன் கூட்டத்தோடு இரவு நேரத்தில் அங்கே வந்தது. இரவில் காகங்களுக்குக் கண் தெரியாது ஆகையால், அகப்பட்ட காகங்களை எல்லாம் கொன்றுவிட்டு நாள்தோறும் அது போய்க்கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டுச் செல்வதைவிட வேறு வழியில்லை என்று காகங்களுக்கு ஆகியது. அப்போது மேகவர்ணன், தன் மந்திரிகளாகிய ஐந்து காகங்களை அழைத்துக் கூறலாயிற்று:

“நம் பகைவர்களாகிய கோட்டான்கள் இரவுதோறும் வந்து நம் கூட்டத்தினரைக் கொல்கிறார்கள். நமக்கோ இரவில் கண்தெரிவதில்லை. மேலும் அவர்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை. அறிந்தாலாவது, பகலில் அவர்களுக்குக் கண் தெரியாமல் இருக்கும்போது நாம் அங்குச் சென்று அவர்களைக் கொல்லலாம். பகைவர்களை அசட்டை செய்தால் அது நோய் போல் பற்றிப் பெருகி நமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும். ஆகவே தக்கதொரு உபாயத்தை நீங்கள் சொல்லவேண்டும்.

Siragu-panchathandhiram7-2

மந்திரிகள், அரசன் கேட்பதற்கு முன்பே தக்க உபாயத்தைச் சொல்ல வேண்டும். இல்லாவிடில் கேட்டபிறகாவது சொல்லவேண்டும். அப்படியும் செய்யாமல் சும்மா இருந்து இச்சகம் பேசுபவன் அரசனுக்கு எதிரியே ஆவான் என்று தங்களுக்குள் அமைச்சுக் காகங்கள் பேசிக்கொண்டன. என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கின. அப்போது அவற்றில் முதல் அமைச்சனாகிய உத்தமஜீவி என்பது காக அரசனை நோக்கிச் சொல்லத் தொடங்கியது:

“மகாராஜா, வலியவர்களுடன் பகை கொள்ளலாகாது. சமாதானமே தகுந்தது. ஆனால் அப்படியே இருக்கத் தேவையில்லை. பகைவர்களை வணங்கிக் காலம் பார்த்து மோசம் செய்பவர்கள் சுகம் அடைகிறார்கள். ஆற்றில் நீர் பெருகிவரும்போது வணங்குகின்ற செடி நாசம் அடையாமல் பிறகு நிமிர்கிறது. நெருக்கடியான காலத்தில் துஷ்டர்களுடன் சமாதானம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால், பிறகு எல்லாச் செல்வத்தையும் சம்பாதிக்கலாம்.

மேலும் தனக்குப் பலபேர் பகைவர்கள் இருந்தால், அவர்களில் ஒருவனோடு உறவு கொண்டு எல்லாரையும் கெடுக்க வேண்டும். நிலம், நட்பு, பொருள் ஆகியவை தன்னிடமும் பகைவனிடமும் எவ்வளவு உள்ளன என்று ஆராய்ந்து, இயலுமானால், பின்பு அவனை எதிர்க்க வேண்டும். வெற்றியும் தோல்வியும் ஒரேபுறம் இருப்பதில்லை. ஆகவே மாற்றானுடைய பலத்தையும் பலமின்மையையும் பார்த்துக் கொண்டே இருந்து காலம்பார்த்துக் காரியம் ஆற்றவேண்டும் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு அது கூறியதும் அரசன், இரண்டாம் அமைச்சனிடம் “உன் கருத்து என்ன, சொல்” என்று கேட்டது.

(தொடரும்) 


மனம் திறந்த கடிதம்

பிரதமர் மோடி அவர்களுக்கு,
ஜனநாயகம் என்றாலே மக்களின் ஆட்சி என்றுதான் பொருள். மக்களுக்கு மதிப்புக் கொடுங்கள். இதுமாதிரிப் போராட்டத்தை ஒரு இருபது முப்பதுபேர் கையிலெடுத்திருந்தால், நக்சலைட், பயங்கரவாதி என்று பெயர் வைத்துச் சுட்டுத் தள்ளியிருப்பீர்கள். ஒரு சிலராவது ஏதாவது சிறிய அடிதடியில் ஈடுபட்டிருந்தாலும் காவலர்களை வைத்து குண்டர்கள் என்று அடித்து நொறுக்கியிருப்பீர்கள். ஆனால் பாவம், லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு அமைதியாக மழையிலும் பனியிலும் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமும் இல்லை.
120 கோடி மக்களை பாதிக்கும் பெரிய அறிவிப்புகளை எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் வெளியிட்ட உங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென ஒரு நிரந்தரச் சட்டம் ஓரிரு நாட்களில் கொண்டுவருவது முடியாததா என்ன? பெரும் பெரும் அறிவிப்புகளை எல்லாம் திடீரென்று வெளியிட்டுவிட்டு பிறகு முகம் காட்டாமல் ஓடிப்போய்விடுவதில் நீங்கள் சமர்த்தர் என்பதும், உங்கள் சொந்தப் பாராளுமன்றத்தையே சந்திக்கும் திராணியில்லாதவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அதையே செய்தீர்கள். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பொறுப்பைத் தள்ளிவிட்டு நீங்கள் விலகிக் கொண்டீர்கள். அவரும் பாவம், தன் கட்சிக்கும் தனக்கும் ஒரு அரசியல் ‘லாபம்’ கிடைக்கும் என்று ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டுப் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் திணறிப்போனார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை மதிப்பதாக நீங்கள் சொல்வது திரும்பத் திரும்பச் சொல்வது உண்மையானால் உடனே எங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென நிரந்தரச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள். பவானி ஆறு, காவிரி ஆறு, உள்ளிட்ட மற்ற ‘டிமாண்ட்’களை நாங்கள் சில நாட்களுக்குள் வாங்கிக் கொள்கிறோம். தமிழர்களைப் பாரபட்சமாக நடத்தியே பழக்கப்பட்ட உங்களுக்கு இது கடினம்தான். மேலும் “தமிழகத்தில் நம் கட்சி காலூன்றமுடியாது, நாம் ஏன் இவர்களுக்கு எதுவும் செய்யவேண்டும்” என்ற உங்கள் குறுகிய கண்ணோட்டமும் இருக்கவே செய்கிறது. அதற்கும் அப்பால் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்துப்போகாத உங்கள் காவிக் கலாச்சாரமும் இருக்கவே செய்கிறது.
இருந்தாலும், உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான். முதலில் விலங்குநல வாரியத்தின் விதிகளில் திருத்தம் கொண்டுவாருங்கள். காட்சிப் பட்டியலிலிருந்து காளைகளை நீக்குங்கள். (இவையெல்லாம் உங்கள் அரசாங்க இலாகாக்கள் தானே?) அந்த வாரியம் உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டின்மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கிவிடுங்கள். (உச்சநீதி மன்றத்தின்மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை ஊரறிந்த ஒன்று அல்லவா!) பீட்டா அமைப்பைத் தடைசெய்வதில் பிரச்சினை ஒன்றுமில்லை. அது உலகமுழுவதும் செய்திருக்கும் அட்டூழியங்கள் எங்களுக்கே தெரியும்போது உங்களுக்குத் தெரியாதா என்ன? அதைக் காரணம் காட்டியே அந்த என்ஜிஓ அமைப்பைத் தடைசெய்யலாம். அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஒரு நிரந்தரச் சட்டத்தை வழங்கிவிடுங்கள். இதற்கெல்லாம் அதிகபட்சம் உங்களுக்கு மூன்று நாள் தேவைப்படலாம். எப்படியும் பத்துநாள் கழித்துக் கூடப்போகும் பாராளுமன்றத்தை உடனே கூட்டுங்கள். இவற்றை எல்லாம் செய்தால் நிச்சயம் உலகமுழுவதிலும் உள்ள தமிழர்கள் அமைப்புகள் மத்தியிலும் அந்தந்த நாடுகள் இடையிலும் உங்கள் மதிப்பு ஜனநாயகக் காவலர் என்பதாக உயரும். மதிப்பு என்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள கோட்டுப் போட்டுக் கொள்வதில் இல்லை, பாருங்கள்!


அவரவர் இடம் அவரவர்க்கு

2017 பொங்கலுக்குப் பிந்திய வாரம் தமிழ்நாட்டு, இந்திய மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாரம். உலகம் எத்தனை எத்தனையோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் தன்னெழுச்சியாக, எந்தக் கட்சியின் பின்புலமும் இன்றி, எந்தப் பெரிய கோடீஸ்வரர்களின் ஆதரவும் இன்றி ஓர் இனத்து இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக, பண்பாட்டுக்காகத் திரண்டெழுந்த இந்த நிகழ்வு, அதிலும் மிகப் பொறுப்பாக அறவழியில், மிக அமைதியான முறையில் நடைபெற்று வருவது உலகத்துக்கே ஒரு முன்மாதிரி. உண்மையில் தமிழக இளைஞர்கள் உலகத்துக்கே முன்மாதிரியாகப் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருப்பதுபோல இப் போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் குறிப்பாக தமிழகத்தில் சினிமாத் துறையும் அரசியலும் பின்னிப் பிணைந்து விரவிக் கிடப்பதால் ஒரு சில கருத்துகளைக் கூற முனைகிறேன்.
படத்தில் அம்மனாக நடித்துவிட்டுத் தனக்கு எல்லா சக்திகளும் ஆற்றலும் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் நடிகையைப் போல இன்று தமிழகத் திரை நட்சத்திரங்கள் நடந்துகொள்கின்றனர். இதற்கு முன்மாதிரியாக, இது போன்ற ஒரு மாயையை உருவாக்கியவர் மறைந்த எம்.ஜி.ஆர். இன்றுவரை சூப்பர் சூப்பர் ஸ்டார்களெல்லாம் மிகக் கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டம் அவர்களுக்குத் தங்கள் நிலையை உணர்த்தியிருந்தால் மிக நல்லது. அவர்களும் ஒரு தனியார் கம்பெனி அலுவலர் போன்றவர்கள்தான், தங்கள் நடிப்பு தங்கள் பிழைப்புக்கானது, அதற்குமேல் ஒன்றுமில்லை என்பதை அவர்கள் உணர்வது நல்லது. இது தெரியாமல் ஊடகங்களில் ஆட்டமாக ஆடி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடிக நடிகையர்களையும் பார்க்கிறோம்.
இதேபோல்தான் தமிழக அரசியல்வியாதிகளும்-சாரி, அரசியல்வாதிகளும். சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குச் சொத்துச் சேர்த்துக்கொள்வதையும், கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதையும் தவிர வேறு எதையும் தமிழக மக்களுக்காக என உருப்படியாகச் செய்யவில்லை. இதில் மற்ற மாநிலத்திலும் அப்படித்தானே இருக்கிறார்கள் என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசத் தேவையில்லை. இனிமேலாவது ஒரு தூய்மையான அரசியலுக்கு நம் அரசியல்வாதிகளும், முக்கியமாக அதிகாரிகளும் துணை செய்தால் நல்லது.
போராட்டத்தில் மாணவர்கள் மிக எச்சரிக்கையாகவே அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தவிர்த்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. மக்களின் போராட்டத்தைத் தாங்கள்தான் உருவாக்கி விட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்திப் பின்னால் வாக்குப் பொறுக்க வழிவகை செய்துகொள்வார்கள் இவர்கள்.
எப்படியோ, தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி.
மத்திய அரசும் இந்தப் போராட்டத்தினால் தமிழக மக்கள் சக்தியை உணர்ந்து இனிமேலாவது தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்காமல் பொறுப்பாக நடந்துகொண்டால் நல்லது. தமிழகம் முன்னேறினால் அதுவும் இந்திய மக்களின் முன்னேற்றம்தானே என்பதைக் குறுகிய கட்சிக் கண்ணோட்டமின்றிப் புரிந்துகொள்வது எல்லாக் கட்சிகளுக்கும் பயனளிக்கும்.


அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்

இன்று தமிழர் திருநாள். இனிவரும் தமிழ் ஆண்டிலேனும் மகிழ்ச்சி பொங்கி, நேர்மை தழைக்க, அனைவர் வாழ்க்கையும் சிறக்க, குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியுற நாம் அனைவரும் இந்தப் பொங்கல் திருநாளில் வாழ்த்துவோம்.


ஆனந்தவிகடன் விருது

இன்று ஆனந்தவிகடன் இதழில், இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு என்ற எனது மொழிபெயர்ப்பு நூலுக்காக எனக்கு இவ்வாண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அளிக்கப்படுவதாகச் செய்தியைப் படித்தேன். மேற்கொண்டு செய்தி சில நாட்களில் தெரியவரலாம். -க. பூரணச்சந்திரன்


ஜல்லிக்கட்டுப் பிரச்சினை

வழக்கமாகத் தமிழகத்தில் நடந்துவந்த ஜல்லிக்கட்டு இப்போது ஒரு பிரச்சினையாகிவிட்டது. ஓர் இன மக்களின் பண்பாட்டு வழக்காற்றிற்கு இடம் தராமல் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் அடம் பிடிக்கின்றன. உண்மையில் ஜல்லிக்கட்டு, உச்சநீதி மன்றத்தினால் முன்வைக்கப் படுவதுபோல, பிராணிகளுக்குத் தீங்கிழைப்பது அல்ல என்பதைப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது The Wonder that was India என்ற நூலில் எடுத்துரைத்திருக்கிறார். அவருடைய சொற்களை அப்படியே இங்கு தருகிறேன்.
One form of animal contest confined to the Dravidian South was the bullfight, of which we have a vivid description in an early Tamil poem. This sport did not closely resemble the Spanish bullfight, where the scales are heavily weighted against the bull, for here the bull appears to have had the advantage….they (the Tamils) made no attempt to kill the bull, and it was not previously irritated, but the bullfight was evidently a sport of great danger (i.e. for men, not for the bull), for the poem gives a gory description of a victorious bull, his horns hung with the entrails of his unsuccessful opponents….(A.L. Basham, The Wonder that was India, 3rd edition, Picador, p.211)
இவ்வாறு கூறி, பழங்காலத்தில் அது (முல்லைநிலத்தில்) ஒருவகை சுயம்வரம் போல இருந்தது என்றும், பழங்கால வளச் சடங்குகளுடன் தொடர்புடையது என்றும் சொல்லிச் செல்கிறார்.
இப்படிப்பட்ட பண்பாட்டுப் பெருமையுடைய ஒரு நிகழ்வை ஏன் இந்திய அரசாங்கமும், உச்ச நீதி மன்றமும் மறுக்கின்றன என்று புரியவில்லை. உச்சநீதி மன்றம் சென்ற ஆண்டு பிராணி வதைச் சட்டத்தின் அடிப்படையிலேயே இதை எதிர்த்தது. அவ்வாறு இல்லை என்பதை பேராசிரியர் பாஷமே விளக்கியிருக்கிறார். இதை யாராவது உச்சநீதி மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.