சாகித்திய அகாதெமி விருது

தமிழ் மொழிக்கென வழங்கப்படுகின்ற, 2016ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்: பொறுப்புமிக்க மனிதர்கள் (Serious Men)

ஆசிரியர்: மனு ஜோசப்


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13

இவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. அது தன் இடத்திற்குச் சென்று பார்த்தபோது வேறொரு முதலை அங்கு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் “நம் நண்பனாகிய குரங்கிடமே உபாயம் கேட்கலாம்” என்று திரும்பிவந்தது. “நண்பனே நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டது. முதலையைக் கடிந்து கொண்ட குரங்கு, “உனக்கு புத்தி சொல்வதே வீண். மூடனுக்கு உபதேசித்தால் வீடு உடையவனையும் வீடு இழக்கச் செய்வான்” என்றது.

முதலை: அது எப்படி?

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-1

குரங்கு: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்யலானது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழையில் ஒரு குரங்கு பற்கள் கிட்டி, குளிரால் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தது. குருவிகள் அதைக் கண்டு இரக்கம் கொண்டன.

குருவி: உனக்குக் கைகால்கள் இருந்தும் குளிர்காற்று முதலிய துக்கத்தை நீ அனுபவிக்கக் காரணம் என்ன? நீ ஏன் வீடுகட்டிக் கொள்ளவில்லை?

துஷ்டக் குரங்கு: ஊசிமூஞ்சி மூடா! வல்லவர்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாயா நீ? எனக்கு வீடு கட்டுகிற சக்தி இல்லை; ஆனால் அதைப் பிரித்தெறிகின்ற சாமர்த்தியம் உண்டு.
என்று கூறி, தூக்கணாங்குருவிகளின் கூட்டைப் பிய்த்தெறிந்தது. ஆகவே உன்னைப் போன்றவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது” என்றது குரங்கு.

முதலை: நண்பனே, நான் குற்றவாளி என்பதும் மூடன் என்பதும் மெய்யே, ஆனால் பழைய சிநேகிதன் என்ற முறையில் உன்னை உதவி கேட்கிறேன்.

குரங்கு: நீ உன் இடத்திற்கே திரும்பப் போ. உன் பகைவனோடு போர் செய். இறந்தால் சொர்க்கம் அடைவாய். வென்றால் உன் வீடு உனக்குத் திரும்பக் கிடைக்கும். முன்பு ஒரு புத்திசாலி, உத்தமனுக்குக் கும்பிடும், சூரனுக்கு பேதமும், காரியக்காரனுக்கு தானமும், ஈடானவனுக்கு தண்டமும் செய்து தன் காரியத்தில் வெற்றி அடைந்தது. அதுபோல நடந்துகொள்ள வேண்டும்.

முதலை: அது எப்படி, சொல்வாயாக.

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-2

குரங்கு: இம்மலையின்மேல் சதுரன் என்னும் நரி இருந்தது. அதற்கு ஒரு நாள் பசி. அங்கங்கே திரிந்துவந்தபோது ஒரு செத்துப்போன யானையின் உடலைக் கண்டது. அதன் தோலைக் கிழித்து இறைச்சியைத் தின்னும் வலிமை அதற்கு இல்லை. எனவே அங்கே உட்கார்ந்திருந்தது. அங்கே ஒரு சிங்கம் வந்தது. நரி அதற்கு வணக்கம் கூறியது. “நீ யார்?” எனக் கேட்டது சிங்கம்.

நரி: நான் உங்கள் அடிமை. நீங்கள் அடித்த யானையைக் காவல்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

சிங்கம்: இது நான் கொன்றதல்ல. வேறு யார் கொன்றார்களோ, அன்றி இது தானாகவே இறந்ததோ தெரியாது. ஆகவே நான் இதைச் சாப்பிட மாட்டேன். உனக்கு வேண்டுமானால் சாப்பிடு.

நரி: சுவாமி, நீங்கள் உண்மையே சொன்னீர்கள். பெரியோர்கள் தங்கள் ஆண்மையினால் சம்பாதிக்கிறார்கள்.
சிங்கம் அதைக் கேட்டுவிட்டுப் போய்விட்டது. அப்போது அங்கே ஒரு புலி வந்தது.

நரி: புலி மாமா, நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இந்த யானையைக் கொன்ற சிங்கம் பக்கத்திலே எங்கேயோ இருக்கிறது. “ஏதாவது புலி வந்தால் தெரிவி” என்று எனக்குச் சொல்லிச் சென்றது. “நான் முன்பு ஒரு யானையை அடித்து விட்டுக் குளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு புலி வந்து எச்சில் செய்துவிட்டது. அது முதலாகப் புலியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை” என்று அது சொன்னது.

புலி: நரி மருமகனே, எனக்கு உயிர்ப்பிச்சை கொடு. நான் இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடுகிறேன்.
இவ்வாறு புலி சென்றுவிட்டது. அடுத்தபடி ஒரு குரங்கு வந்தது.

நரி: வானரனே, நீ நெடுநாளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறாய். உனக்குப் பசியாக இருப்பது முகத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. எனக்குச் சிங்கம் இந்த யானை இறைச்சியைக் கொடுத்தது. நீயும் கொஞ்சம் இதில் தின்று விட்டுச் சிங்கம் வருவதற்கு முன்னால் ஓடிப்போய்விடு.
குரங்கு அதைக் கேட்டு யானையைக் கிழிக்கத் தொடங்கியது. தேவையான அளவுக்கு இறைச்சி கிடைக்குமளவு கிழித்தது.

நரி: சிங்கம் அண்மையில் வந்துவிட்டது. நீ ஓடிப்போய்விடுவதே உத்தமம்.
இதைக் கேட்டுக் குரங்கு ஓடிப்போயிற்று. பிறகு யானை இறைச்சியை அது தின்றுகொண்டிருந்தபோது, மற்றொரு நரி அங்கே வர, அதைப் போரிட்டுத் துரத்தியது. இவ்வாறு ஆளுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவேண்டும். நீ சென்று அந்த முதலையைத் துரத்திவிட்டுச் சுகமாக இரு. வேறொரு இடத்திலும் சுகமெல்லாம் கிடைக்கும் ஆயினும், தனக்கு அங்கே நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால், சித்திராங்கன் போல் தீங்குகளை அனுபவிக்க வேண்டிவரும்.

முதலை: சித்திராங்கனுக்குத் தீங்கு எப்படி நேரிட்டது?

குரங்கு: ஒரு நகரத்தில் சித்திராங்கதன் என்று ஒரு நாய் இருந்தது. அங்கு பஞ்சம் ஏற்பட்டதால், அது வேறொரு நகரத்துக்குப் போயிற்று. அங்கே ஒரு வீட்டுக்காரி அதற்குச் சோறு போட்டு ஆதரித்தாள். அதனால் வெகுநாட்கள் வரை அந்த வீட்டிலேயே இருந்துவந்தது. பின் ஒருநாள் அது சகஜமாகத் தெருவுக்கு வந்தபோது அந்த ஊரின் மற்றைய நாய்கள் அதன்மேல் விழுந்து கடித்துக் குதறிவிட்டன. அதனால் “என்ன பஞ்சம் வந்தாலும், சுய தேசத்தைவிட்டு ஒருவனும் செல்லலாகாது” என்று கூறிக்கொண்டு மீண்டும் தன் இடத்திற்கே வந்தது. அப்போது அதன் உறவான ஒரு நாய் “சித்திராங்கா, நீ சென்ற ஊர் எப்படி இருந்தது?” என்று கேட்டது.

சித்திராங்கன்: ஊர் செழிப்பாகவே இருக்கிறது. பெண்களும் கருணை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நம் ஜாதியிடையில் ஒற்றுமை இல்லை. அதனால் திரும்பிவிட்டேன்.
ஆகவேதான் தன் இருப்பிடத்தில் ஒருவன் இருப்பதைப் போலச் சுகம் வேறொன்றும் இல்லை” என்று முடித்தது குரங்கு.
இதைக் கேட்ட முதலை, தன் இடத்திற்குச் சென்று அங்கிருந்த முதலையுடன் போரிட்டு அதைத் துரத்திவிட்டு சுகமாக வாழ்ந்திருந்தது. வீரத்தினால் பாக்கியம் வழிதேடி வந்து அடைகிறது.

(இத்துடன் இந்தப் பகுதி முடிவடைகிறது.)

ஐந்தாம் பகுதி

அசம்பிரேட்சிய காரியத்துவம் அல்லது ஆராயது செய்தல்.
அரசன் மகன்களை நோக்கி சோமசர்மா கூறுகிறான்.

சோமசர்மா: உலகில் தீய செயல்களைப் பலபேர் செய்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டாலும், அறிவுடையவர்கள் அவற்றில் ஈடுபடலாகாது. அப்படியிருந்தும், வெள்ளரிவன் என்னும் மயிர்வினைஞன் ஒருவன் மணிபத்திரன் என்பவன் செய்த செயலைக் கண்டு தானும் ஆராயாமல் அவ்வாறே செய்து தனக்குத் தீங்கு தேடிக் கொண்டான்.

அரசகுமாரர்கள்: அது எவ்விதம் ஆசிரியரே, கூறுங்கள்.

ஆசிரியன்: தெற்குதேசத்தில் பைடணபுரி என்ற ஒரு நகரம் இருந்தது. அதில் மணிபத்திரன் என்ற ஒருவன் வாழ்ந்துவந்தான். நன்னெறியில் வாழ்ந்து வந்தாலும் அவனுக்கு வறுமை ஏற்பட்டது.

மணிபத்திரன் (தனக்குள்): சீச்சீ, தயை, அமைதி முதலாகிய குணங்கள் பொருளில்லாதவர்களிடம் இருந்தால் அவை விசித்திரமாகவே தோன்றுகின்றன. வறுமை உற்றவன், கணந்தோறும் துன்பமடைந்து, குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி என்று ஏங்குவதால் அறிவு மழுங்குகிறது. தானியம் முதலிய பொருள்கள் இல்லாத வீடு சுடுகாட்டைப் போன்றது. வறியவன், கல்வி முதலிய பல பண்புகளைப் பெற்றிருந்தாலும், அவனைச் சுற்றத்தினர் சேர்வதில்லை. ஆகவே “நானும் பட்டினி கிடந்து உயிர்துறப்பேன்” என்று முடிவுசெய்து, பசியோடிருந்து சற்றே உறங்கினான்.

அவன் தூக்கத்தில் குபேரன் அவன் கனவில் ஒரு துறவியைப்போலத் தோன்றினான். “உனது நல்லொழுக்கத்தினால் நான் உனக்குக் காட்சியளித்தேன். நாளைக்கும் இதே வடிவத்தில் உன் கண்முன் வருவேன். அப்போது என் தலையில் ஓங்கி நீ ஒரு தடியால் அடித்தால், நான் பொற் குவியலாக மாறிவிடுவேன்” என்றான்.

தான் கண்ட கனவு மெய்யோ பொய்யோ என்று யோசித்தவாறு மணிபத்திரன் மறுநாள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். அப்போது ஒரு நாவிதன் அவன் மனைவியின் நகங்களை வெட்டிக்கொண்டிருந்தான். அச்சமயம் கனவில் கண்ட அதே துறவி உருவம் அவன் கண்முன்னால் தோன்றியது. உடனே அவன் கையில் கிடைத்த தடி ஒன்றை எடுத்துத் துறவியின் தலைமேல் அடிக்க, அந்த இடத்தில் ஒரு பொற்குவியல் கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மயிர்வினைஞனை நோக்கி, “நான் உனக்குச் சிறிது பொன் தருகிறேன். நீ இங்கே கண்டதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கூறினான். “அப்படியே” என்று கூறி மயிர்வினைஞன் தன் இல்லத்துக்குச் சென்றான்.

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-3

அவன், தன் வீட்டுக்கு ஒரு துறவியை அழைத்துவந்து, தலையிலடித்தால் பொன் கிடைக்கும் என்ற முடிவோடு சென்றான். அதன்படி நகருக்கு வெளியே இருந்த துறவிகள் கூட்டத்திடையே சென்று ஒரு துறவியைக் கண்டு, “நீங்கள் நாளை என் வீட்டுக்கு எழுந்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அதற்கு அத்துறவி, “உன்னைப் போன்றவர்கள் பார்ப்பனர்களை அழைத்தல்லவா சடங்குகள் செய்வது வழக்கம்? அப்படியிருக்க எங்களை ஏன் அழைக்கிறாய்?” என்றான். “நீங்கள் அறச்செயல்கள் புரிந்து தவவலிமை உடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதால் உங்களை அழைத்தேன்” என்றான்.

அதன்படியே மறுநாள் காலை துறவி அவன் இருப்பிடத்திற்குச் செல்ல, அவன் ஒரு பெரிய தடியால் துறவியின் தலையிலடித்தான். துறவி இரத்தப் பெருக்கில் கீழே விழுந்தான். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிட, காவலாட்கள் அந்நாவிதனைக் கட்டி ஊர்த்தலைவனிடம் கொண்டு சென்றனர்.

ஊர்த்தலைவன்: நீ ஏன் இப்படிச் செய்தாய்?

நாவிதன்: மணிபத்திரன் தன்வீட்டில் இப்படிச் செய்ததனால் நானும் செய்தேன்.
ஊர்த்தலைவன் மணிபத்திரனை அழைத்து விசாரித்தபோது அவன் ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றான். அதனால் ஊர்த்தலைவன், “இவன் ஆராயமல் துறவியை அடித்துக் கொன்றதனால், இவனைக் கழுவேற்றுங்கள்” என்று ஆணையிட்டான். மேலும் “முன்னாளில் இப்படித்தான் ஒரு பார்ப்பனி, ஆராயமல் தான் செய்த காரியத்தால், ஒரு கீரிப்பிள்ளையைக் குறித்துத் துயரமடைந்தாள்” என்று கூறினான்.

மணிபத்திரன்: அது எவ்விதம் ஊர்த்தலைவரே?

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-3

ஊர்த்தலைவன்: உஜ்ஜயினியில் தேவநாமன் என்னும் பார்ப்பனன் ஒருவன் வாழ்ந்தான். அவன் இல்லறம் நடத்திவரும் நாளில் குழந்தை இல்லாக் குறையினால் அவனும் அவன் மனைவியும் ஒரு கீரியை வளர்ப்புப் பிள்ளையாக வளர்க்கலானார்கள். சில நாட்கள் கழித்து அவளும் கருவுற்று அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதை வளர்த்துவரும் காலத்தில், ஒரு நாள், பார்ப்பனி தன் கணவனைப் பார்த்து, “நான் தண்ணீர் கொண்டு வரப்போகிறேன். நீங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக் குடத்துடன் சென்றாள். அந்நேரம் பிராமணனைத் தேடி கருமம் செய்யச் சிலர் தேடிவரவே அவனும் சென்றான். தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நல்ல பாம்பு தொட்டிலின்மீது ஊர, கீரிப்பிள்ளை அதைக் கடித்துக் கொன்றது. தன் செயலைப் பார்ப்பனி கண்டு மெச்சுவாள் என்று கருதிக் கீரிப்பிள்ளை வாயிலுக்கு ஓடியது. தண்ணீர் எடுத்துவந்த பார்ப்பனி, வாயில் இரத்தத்தோடு இருந்த கீரியைக் கண்டு, அது தன் குழந்தையைத்தான் கொன்றுவிட்டது என்று எண்ணி நீர்க்குடத்தை அதன் தலைமேல் போட்டுக் கீரியைக் கொன்றுவிட்டாள். பின்னர் வீட்டுக்குள் சென்று குழந்தை உறங்குவதையும் பாம்பின் துண்டுகளையும் கண்டு, “ஐயோ, என் குழந்தையை நான் ஆராயாமல் கொன்றுவிட்டேனே” என்று வருந்தி அழுதாள். அப்போது திரும்பிவந்த பிராமணன், “குழந்தைதான் உறங்குகிறதே, நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான். “கொஞ்சம் பொருளுக்குப் பேராசைப்பட்டு நீங்கள் போனதால் இவ்விதம் ஆயிற்று. பேராசை பிடித்தவன் தலைமேல் சக்கரம் சுழன்றது போல் இது ஆனது” என்றாள்.

பிராமணன்: அது என்ன, தலைமேல் சக்கரம் சுழன்ற கதை?

 

பார்ப்பனி: அமராவதி நகரத்தில் நான்கு பிராமணர்கள் இருந்தனர். நல்ல வசதியான வாழ்க்கை வாய்த்தபோதும், அவர்களுக்கு மேலும் மேலும் பணத்தின்மீது பேராசை. ஆகவே பொருளைத் தேடி நாம் வேறு தேசம் போகலாம் என்று நால்வரும் புறப்பட்டனர். செல்லும் வழியில் க்ஷிப்ரா நதியின் கரையில் பைரவநந்தி என்ற யோகி ஒருவன் தவம் செய்தவாறிருந்தான். அவன் எல்லாச் சித்திகளும் வல்லவன். அதைக் கேள்விப்பட்ட பிராமணர்கள் அவனிடம் சென்று அவனுக்குத் தொண்டு செய்யலாயினர். அதைச் சிலநாள் கண்ட துறவி, “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று அவர்களை வினவினான். அவர்கள் “அடிகளே, எங்களுக்கு மிகவும் பணம் வேண்டும். அதனால் அதைத் தேடிப் புறப்பட்டோம். வழியில் உங்கள் பெருமையைக் கேள்விப்பட்டுத் தொண்டு செய்யலானோம். எங்கள் விருப்பத்தை அடைய நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்றனர். அவன் நான்கு திரிகளை இவர்களுக்கு அளித்தான். “நீங்கள் இத்திரிகளைத் தலையில் வைத்துக்கொண்டு இமயமலை செல்லும் வழியைத் தவறாமல் பின்பற்றிச் செல்லவேண்டும். எவனொருவன் திரி எங்கே விழுகிறதோ அங்கே அவனுக்குச் செல்வம் கிடைக்கும்” என்று கூறினான். அத்திரிகள் ஒவ்வொருவன் தலையிலும் ஒட்டிக் கொண்டன.

இமயமலை செல்லும் பாதையில் அவர்கள் சென்றுகொண்டே இருக்க, ஒருவனுடைய திரி கீழே விழுந்தது. அது விழுந்த இடத்தை அவன் நோக்க, அங்கு தாமிரம் (செம்பு) மிகுதியாகக் கிடப்பதைக் கண்டான். அதை அள்ள அள்ளக் குறையாமல் வருவதாயிற்று. உடனே அவன் தன் நண்பர்களை நோக்கி, “வாருங்கள், நமது காரியம் முடிவடைந்தது. இச் செம்பு உலோகத்தை நல்ல விலைக்கு விற்று நாம் தேவையான செல்வத்தை அடையலாம்” என்றான். இதைக் கேட்ட மற்ற மூவரும், “முட்டாளே, எவ்வளவு தாமிரத்தை எடுத்து எந்தக் காலத்தில் விற்றுப் பணம் சம்பாதிக்கப் போகிறாய்? நாங்கள் எங்கள் வழிப்படி செல்கிறோம்” என்று மேலே சென்றனர்.

அப்போது மற்றொருவனுடைய தலையிலிருந்த திரியும் விழுந்தது. அங்கே அவன் தொட்டபோது அள்ளஅள்ளக் குறையாமல் வெள்ளி உலோகம் கிடைப்பதாயிற்று. ஆகவே அவன் அங்கே தங்கித் தனக்கென வெள்ளியைச் சேகரிக்கலானான். மற்ற இருவரும் அவனையும் ஏளனம் செய்து, “இனிமேல் நிச்சயமாக நமக்குத் தங்கம் கிடைக்கும்” என்றவாறு மேலே சென்றனர். இன்னும் வெகுதொலைவு சென்றபிறகு, மூன்றாம் பிராமணன் தலையிலிருந்த திரி விழுந்தது. அங்கு அவன் கைவைத்த இடமெல்லாம் தங்கம் கிடைக்கவும், அவன் மிகவும் மகிழ்ந்து, “நாம் இங்கேயே தங்கிவிடலாம், இனிமேல் செல்லவேண்டாம்” என்றான். ஆனால் நான்காம் ஆள், “நான் மேலும் சென்றால் எனக்கு மாணிக்கங்கள் வைரங்களும் கிடைக்கும். நீ இருந்து கொள்” என்று கூறி மேலே சென்றான்.

ஆனால் அவனுக்கு வழிதவறிவிட்டது. மேலும் பசியும் தாகமும் வருத்தின. அவ்வாறு அவன் அலைந்துகொண்டிருக்கும்போது, தலையில் சக்கரம் சுற்றிக் கொண்ருக்க அதனால் இரத்தம் பெருகி உடல் எல்லாம் நனைய, வருந்திக் கொண்டிருந்த மனிதன் ஒருவனைக் கண்டான்.

(தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12

 

siragu-panjathandhira-kadhaigal

(முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது)

ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் அரசன்: எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது?

குயவன்: நான் சூளை இட்டுக்கொண்டிருந்தபோது, ஓர் ஓடு விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டது எசமான்!

அரசன்: எப்படியோ தவறு நிகழ்ந்து விட்டது. இது இரண்டாம் பேருக்குத் தெரிவதற்கு முன்னால் நீ ஓடிப்போ. பெரு வீரர்கள் எதிரில் உன் உயிர் சல்லிக்காசும் பெறாது.

குயவன்: சுவாமி, என் கைகால்களைக் கட்டி, என்னைப் போர்க்களத்தில் விட்டு என் திறமையை நீங்கள் காணுங்கள்.

அரசன்: நீ பிறந்த குலம் போர் இடும் அனுபவத்தில் வந்ததன்று. அப்படியாக, நீ நரிக்குட்டிபோல் வீணாக ஏன் துள்ளுகிறாய்? குலைக்கிற நாய் வேட்டை பிடிப்பதில்லை.

குயவன்: இந்த நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல்லுங்கள் அரசே!

அதற்கு அரசன்: ஒரு வனத்தில் ஒரு சிங்கம் தன் துணையோடு வசித்துவந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அது பல விலங்குகளைக் கொன்று தன் பெண் சிங்கத்திடம் கொடுத்தது. “இக்குட்டிகளுக்கு புத்தி தெரிகின்ற வரை இவர்களை நம்பித் தனியாக விடவேண்டாம்” என்று எச்சரித்தது. தினமும் தான் மட்டும் சென்று வேட்டையாடி வந்தது. ஒரு நாள் அதற்கு ஒன்றும் கிடைக்காமல் திரும்பும்போது வழியில் ஒரு அப்போதுதான் பிறந்திருந்த ஒரு நரிக்குட்டியைக் கண்டது. அடிக்காமல் பிடித்துக் கொண்டுவந்து, தன் பெட்டையிடம் கொடுத்தது. அது மிகவும் அழகாக இருந்ததால், பெண்சிங்கம் அதைக் கொல்லாமல் தன் பிள்ளைகளோடு அதையும் வைத்துக் காப்பாற்றலாயிற்று. வயதுவந்ததும் மூன்று குட்டிகளும் ஒன்றாக ஒருநாள் காட்டுக்குள் சென்றன. அங்கே ஒரு யானையைப் பார்த்ததும், அதைக் கொல்லவேண்டும் என்று சிங்கக்குட்டிகள் தயங்கிநிற்க, “இது நமக்கு ஆகாத வேலை” என்று சொல்லிவிட்டு நரிக்குட்டி தங்கள் இடத்திற்கு ஓடிப்போயிற்று. தாய்ச்சிங்கத்திடம் சிங்கக்குட்டிகள் அதன் செயலைக் கூறின.

நரிக்குட்டி: நான் இவர்களைவிட வீரத்தில் குறைந்தவனோ? இவர்கள் என்னைப் பழித்து ஏன் சிரிக்கிறார்கள்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? நான் இவர்களைவிட வீரத்தில் சிறந்தவன் என்று காட்டுவேன். கொட்டினால்தான் தேள், இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
அதைக் கேட்ட பெண்சிங்கம், அதைத் தனியே அழைத்துக் கொண்டு சென்று: நீ நரிக்குட்டி, உன் குலத்தில் யானையைக் கொல்லும் சக்தி கிடையாது. உனக்கு நான் பால் கொடுத்து வளர்த்ததால் இப்படிப்பட்ட வீரம் பேசுகிறாய். என் குட்டிகள் உன்னை இன்னான் என்று அறிந்துகொள்வதற்கு முன்பாக நீ ஓடிப்போய்விடு. இல்லாவிட்டால் இவர்கள் கையில் அகப்பட்டு இறந்து போவாய்.
அதைக் கேட்ட நரி ஓடிப்போயிற்று. அதுபோல நீ குயவன் குலத்தைச் சேர்ந்தவன் என்பது வெளிப்படும் முன்பாக ஓடிப்போய்விடுவது நல்லது” என்றான் அரசன். அதைக் கேட்ட குயவன் அங்கிருந்து ஓடிப் போய்விட்டான்” என்றது முதலை.
இதைக் கேட்டும் சுமுகன் ஆகிய குரங்கு அயரவில்லை.

குரங்கு: பெண்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. ஆகையால் உன் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

முதலை: எப்படி நீ இதைச் சொல்கிறாய்?

குரங்கு: ஒரு நகரத்தில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி எல்லாரோடும் கலகம் செய்து சண்டை போடுகிறவளாயிருந்தாள். அதனால் அவன் தன் ஊரை விட்டு வெளியேறிச் சென்றான். அப்போது அவன் மனைவி, “கணவரே, எனக்குத் தண்ணீர் தாகம் எடுக்கிறது. எங்கேயாவது சென்று கொண்டுவாருங்கள்” என்றாள். அவளைத் தனியே விட்டு அவன் நீர் கொண்டுவரச் சென்றான். திரும்பி வந்து பார்க்கும்போது அவள் இறந்துகிடந்தாள். அதைக் கண்டு அவன் அழுது புலம்பும்போது, “உன் வயதில் பாதியை அவளுக்குக் கொடுத்தால் அவள் பிழைத்து எழுந்திருப்பாள்” என்று ஓர் அசரீரி வாக்கு கேட்டது. அதைக் கேட்ட பார்ப்பனனும் மூன்று முறை, “என் பாதிவயதை இவளுக்குக் கொடுத்தேன்” என்று மந்திரம் போல் உச்சரித்தான். அவள் பிழைத்தெழுந்தாள். பிறகு இருவரும் ஒரு நகரத்துக்குச் சென்றனர். அப்போது பார்ப்பனன் செலவு வாங்கக் கடைக்குச் சென்றான். அச்சமயத்தில் பக்கத்தில் ஒரு முடவன் மிகச் சிறப்பாகப் பாட்டுப் பாடுவதைப் பார்ப்பனி கேட்டாள். அவனிடம் சென்று “உன் இசையில் நான் மயங்கிவிட்டேன்; என்னை ஏற்றுக் கொள்” என்று வேண்டினாள். அவனும் ஏற்றுக்கொண்டான். பிறகு பார்ப்பனியின் பரிந்துரையின் பேரில் அவனும் பார்ப்பனன் வீட்டிலேயே வாழ்ந்து வரலானான். “நீங்கள் இல்லாத போது இவன் எனக்குத் துணையாக இருக்கட்டும்” என்று மனைவி கூறியதை அவன் நம்பினான். எங்கு சென்றாலும் அப்பெண் அந்த முடவனைத் தன் முதுகில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். அவள் கணவனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. ஒருசமயம் அவர்கள் காட்டுவழியில் செல்லும்போது அப்பெண், தன் கணவனை ஒரு கிணற்றில் உருட்டிவிட்டு, முடவனை ஒரு பெட்டியில் வைத்துத் தலைமீது தூக்கிச் சென்றாள். அடுத்த நகரம் வந்தது. அங்கு அவள் பெட்டியைச் சுமந்து செல்வதைக் கண்ட அரசன், அவளிடம் “இது என்ன?” என்று கேட்டான். “இவர் என் கணவர். இவர் நடக்க முடியாமல் இருப்பதால் இப்படித் தலையில் சுமந்து செல்கிறேன்” என்றாள் அவள். ‘மிகக் கற்புடைய பெண்மணி இவள்’ என்று மகிழ்ச்சியடைந்த அரசன், அவளைத் தன் உடன்பிறப்பு என்றே எண்ணி ஒரு வீட்டை அளித்து வாழ வைத்தான். இது இப்படியிருக்க, கிணற்றிற்கு நீர் பருக வந்த ஒருவன் பிராமணனைக் காப்பாற்றினான். அவன் வெளியே வந்து தன் மனைவியையும் முடவனையும் தேடிக் காணாமல் திகைத்து, தேடியவாறே நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டுவிட்ட அவன் மனைவி, அரசனிடம் சென்று, “இவன் என் கணவனுக்கு விரோதி. என் கணவன் காலை வெட்டியவன் இவன்தான்” என்று கூறினாள். அரசன் அதைக் கேட்டு பிராமணனைக் காவலில் வைக்க முனைந்தான். அப்போது அப்பார்ப்பனன், “ஓ அரச சிகாமணியே! நீங்கள் மிகவும் தர்ம குணம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள். ஆகவே நான் சொல்வதை தயவு கூர்ந்து கேளுங்கள்” என்று தன் குறைகளை எல்லாம் சொன்னான். அதைக் கேட்ட அரசன் ஒரு பஞ்சாயத்தை நியமித்து விசாரிக்குமாறு சொல்ல, அவர்களும் அடுத்த ஊர்களுக்கெல்லாம் சென்று விசாரித்துவந்து பார்ப்பனன் குற்றமற்றவன், அந்தப் பெண்தான் கெட்டவள் என்று தெரிவித்தனர். அதைக் கேட்ட அரசன் பார்ப்பனனை விடுவித்து அவன் மனைவியை தண்டித்தான். அதுபோலப் பெண்கள்தான் எங்கும் அனர்த்தங்களுக்கு மூலமாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் பேச்சுக்குக் காதுகொடுக்கலாகாது” என்று குரங்கு கூறியது.

மேலும் அவ்வாறு காதுகொடுத்து, நந்தனன் என்னும் அரசனும் வரருசி என்ற அவன் அமைச்சனும் சபை நடுவில் ஏளனம் அடைந்தார்கள் என்றது.

முதலை: அது எவ்விதம்?

குரங்கு: ஒரு காலத்தில் நந்தனன் என்ற நல்லரசன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவனிடம் ஊடல் கொண்ட அவன் மனைவி, அவன் என்ன சமாதானம் கூறியும் கேட்காமல், “நீ வாயில் கடிவாளம் போட்டுக்கொண்டு உன் முதுகின்மேல் என்னைக் குதிரைபோலச் சுமந்து செல்லவேண்டும். மேலும் குதிரைபோலக் கனைக்கவும் வேண்டும். அப்போதுதான் உனக்கு நான் செவி கொடுப்பேன்” என்று கூறினாள். அவளும் ஏதோ அன்பால் கேட்கிறாள் என்று கருதி அப்படியே அரசன் செய்தான். அதை அமைச்சனின் மனைவி கேள்விப்பட்டாள். அவளும் தன் கணவனிடம் பேசாமல் முறுக்காக இருந்தாள். “நீ ஏன் பேசாமலிருக்கிறாய்” என்று அமைச்சன் தன் மனைவியைக் கேட்டான். “நீ தலையை மொட்டை அடித்துக் கொண்டு என்னை வலமாகச் சுற்றிவந்து காலில் விழுந்தால்தான் நான் உன்னிடம் பேசுவேன்” என்று அவள் சொன்னாள். அவனும் வேறு வழியின்றி அப்படியே செய்தான்.

மறுநாள் அரச சபையில் அவனைக் கண்ட அரசன், “ஏன் இப்படி மொட்டை அடித்துக் கொண்டு வந்திருக்கிறாய்” என்று கேட்டான். “நீங்கள் குதிரையைப் போல் கனைத்தபடியால் அடியேன் மழுங்க மொட்டை அடித்துக் கொள்ள நேர்ந்தது” என்று அமைச்சன் கூறினான். அதைக் கேட்ட சபையினர் விசாரித்து மிக எளிதாக நடந்தவற்றை அறிந்துகொண்டார்கள். ஆகவே பெண்களுடைய உசிதமற்ற வார்த்தைகளைக் கேட்டால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களோடு உரையாடுபவன், புலித்தோலைப் போர்த்திய கழுதையைப் போல் துன்பமடைவான்.

முதலை: அது எப்படி நேர்ந்தது?

pancha-thandhira-kadhaigal12-1

குரங்கு: ஓர் ஆற்றங்கரையில் ஓர் ஏழை வண்ணான் வாழ்ந்தான். அவ்வூரில் அக்கழுதைக்கு உரிய தீனி கிடைக்கவில்லை. அவன் தன் கழுதை தீனியின்றி நாளுக்கு நாள் இளைத்துவந்ததைப் பார்த்துக் கவலைப்பட்டான். ஒருநாள் காட்டுப்பக்கம் போகையில் ஒரு புலித்தோல் அவனுக்குக் கிடைத்தது. அதைக் கொண்டுவந்து தன் கழுதைமேல் நன்றாகப் போர்த்திக் கட்டிவிட்டான். அது புலித்தோலோடு ஊரார் பயிர்களுக்கிடையில் புகுந்து நன்றாக மேய்ந்துவந்தது. அதைப் புலி என்று நினைத்து ஊரார் பயந்திருந்தார்கள். ஓரிரவு அக்கழுதை இவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கோ தொலைவில் ஒரு பெண் கழுதையின் குரலைக் கேட்டு இதுவும் பெருங்கூச்சல் போட்டுக் கத்தலாயிற்று. அப்போது அதைக் கழுதை என்று அறிந்துகொண்ட கொல்லைக்காரன் நன்றாக அதை அடித்துத் துரத்தினான். ஆகவே பெண்களுடன் வீணாகப் பேசலாகாது. அப்படியிருக்கும்போது அவளுக்காக நீ என்னைக் கொல்வதற்கு எண்ணினாய். நம்பிக்கைக்குக் கேடு விளைவித்தல் உன் இனத்துக்கு இயல்பாக இருக்கிறது. அது சாதுக்களின் சேர்க்கையாலும் சரியாகாது. மேலும் உன்னைப் போன்ற துஷ்டர்களுக்கு உபதேசம் செய்தும் பயனில்லை.

அச்சமயத்தில் மற்றொரு முதலை அங்கே வந்து, “உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த உன் மனையாட்டி ஏதோ காரணத்தினால் இறந்துபோனாள்” என்று தெரிவித்தது. அதைக் கேட்ட

முதலை: நான் கொடியவன் ஆதலினால் இத்தகைய துயரம் நேர்ந்தது. நண்பனுக்கும் பொல்லாதவன் ஆனேன். பெண்டாட்டியும் இறந்துபோனாள். வீடும் காடாயிற்று. ஆகவே நண்பா, என் பிழையை மன்னித்துவிடு, நானும் இறக்கப் போகிறேன்.

குரங்கு: உன் மனைவியின் பேச்சைக் கேட்டு என்னைக் கொல்லவந்தாய். இப்போது அவள் சாவைக் கேட்டு மிகவும் துக்கப்படுகிறாய். துர்க்குணம் உடைய அவள் இறந்துபோனதை மறந்துவிடு. தன் கணவனைவிட்டு முன்பு ஒரு பெண், வேறொருவனை நாடியதால் அவளைப் பார்த்து நரியும் சிரித்தது.

முதலை: நரி யாரைப் பார்த்து சிரித்தது? அது என்ன கதை?

குரங்கு: ஒரு நகரத்தில் ஓர் அரசாங்க அலுவலன் இருந்தான். அவன் மனைவி அந்நிய ஆடவர்கள் மேல் ஆசை கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட ஒரு வாலிபன்: பெண்ணே, என் மனைவி இறந்துபோனதால் நான் மிகவும் துயரடைந்துள்ளேன். என் துக்கத்திற்குப் பரிகாரமாக நீ துணையிருந்தால் மிகவும் புண்ணியமுண்டு. உன்னைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.

பெண்: என் கிழக் கணவன் மிகவும் செல்வம் சேர்த்து வைத்திருக்கிறான், உன் ஆசை இப்படி இருக்குமானால், நீ அவன் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துவிடு. நாம் இருவரும் வேற்றூர் போய்விடலாம்.

வாலிபன்: மிகவும் நல்லது. அப்படியே செய்கிறேன்.
அவன் மறுநாள் நேரம் பார்த்து அந்த அலுவலன் வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டு அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். இரண்டு காதம் சென்ற பிறகு வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது.

அதைக் கண்ட வாலிபன்: இந்த ஆறு மிகவும் ஆழமாக இருக்கிறது. ஆகவே நான் முதலில் பொருள்களை எல்லாம் கொண்டுபோய் அக்கரையில் வைத்துவிட்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறேன்.
அவளிடமிருந்த பணத்தையெல்லாம் பெற்றுக் கொண்ட பிறகு,

வாலிபன்: உன் சுமையான பட்டுப்புடவையையும் கொடுத்தால் வைத்துவிட்டு வருகிறேன். அதற்குப் பிறகு உன்னைத் தூக்கிச் செல்லுதல் எளிதாக இருக்கும்.

அவளும் அதை நம்பித் தன் புடைவையையும் அவிழ்த்துக் கொடுத்தாள். அவன் அக்கரை சென்றதும் பணத்தையும் புடைவையையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போனான். அதைக் கண்ட பெண், “நான் செய்த காரியத்துக்குப் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. இதை என் கணவன் அறிந்தால் என்ன செய்வானோ” என்று நினைத்து ஏங்கியபடி, வெட்கத் தினால் ஆற்றில் சற்றே இறங்கி நீரில் அமர்ந்திருந்தாள். அப்போது அங்கே ஒரு நரி வந்தது. ஆற்றில் கரையருகே பெரிய ஒரு மீன் துள்ளிக் குதித்ததைக் கண்டு அது தன் வாயிலிருந்து மாமிசத்தைக் கரையில் போட்டுவிட்டு, மீனைப் பிடிக்கத் தாவியது. ஆனால் மீன் சடக்கென்று ஆழத்தில் போய்விட்டது. நரி மீண்டும் வந்து மாமிசத்தை எடுக்க முனைவதற்குள் ஒரு பருந்து திடீரென்று அதை எடுத்துக்கொண்டு பறந்து விட்டது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த

பெண்: மாமிசமும் போயிற்று மீனும் போயிற்று. இனி வானத்தைப் பார்த்து ஆவதென்ன?
என்று நரியைப் பார்த்துச் சிரித்தாள். இதைக் கேட்ட

நரி: நானாவது பரவாயில்லை. நீ உன் கணவனையும் விட்டு காதலனையும் விட்டு, செல்வத்தையும் புடவையையும் ஒன்றாக விட்டல்லவா உட்கார்ந்திருக்கிறாய்?

என்று அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் கணவனோ தன் செல்வம் போனதற்குச் சற்றே கவலைப் பட்டாலும், மனைவியைக் குறித்து, “கெட்டவள் விட்டுப் போனாள்” என்று மகிழ்ச்சியாகவே இருந்தான். ஆகவே நீயும் மகிழ்ச்சியாக வீடுபோய்ச் சேர்” என்றது குரங்கு.

(தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11

siragu-panjathandhira-kadhaigal1

 

நான்காவது யுக்தி
அர்த்தநாசம் அல்லது லப்தஹானி (அதாவது, பொருளின் அழிவு, பெற்ற பேறின் அழிவு)

சோமசர்மா, அரசகுமாரர்களுக்கு, நான்காவது தந்திர உபாயத்தைக் கற்பிக்க முனைந்தான். “துன்பம் வந்தபோது, அறிவு குறையாமல் இருப்பவன், குரங்கு முதலையிடமிருந்து விடுபட்டது போலப் பெரிய துன்பத்திலிருந்தும் மீளுவான்” என்று ஒரு கதையைச் சொல்லலானான்.
அரசகுமாரர்கள்: அது எப்படி ஐயா, சொல்லுங்கள்.

(குரங்கும் முதலையும் கதை)

 

pancha-thandhira-kadhaigal2

ஆசிரியன்: ஓர் ஆற்றங்கரையில் நாவல் மரத்தின்மேல் சுமுகன் என்னும் ஒரு குரங்கு வசித்து வந்தது. அப்போது ஒரு முதலை பசியோடு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. “நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். ஆகவே உன் பசியைப் போக்கச் சில கனிகளைத் தருகிறேன்” என்று நாவற் பழங்களைக் கொய்துபோட்டது குரங்கு. அது முதலாக தினந்தோறும் முதலை அந்த இடத்திற்கு வந்து சில கனிகளைச் சாப்பிடுவது வழக்கமாயிற்று. இரண்டும் பேசிக்கொண்டு அந்நியோன்யமாக இருந்தன. ஒருநாள், முதலை, சில நாவற் பழங்களைக் கொண்டு சென்று தன் மனையாளாகிய முதலையிடம் கொடுத்தது. அது மிக இனிப்பாக இருப்பதைக் கண்ட பெண்முதலை, தன் கணவனிடம், “இதனை நீ எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டது. “சுமுகன் என்ற குரங்கு என் நண்பன். அவன் தினந்தோறும் எனக்குச் சில கனிகள் அளிப்பது வழக்கம், இன்று தின்றதுபோக மிகுந்ததை உனக்குக் கொண்டுவந்தேன்” என்றது முதலை.

பெண்முதலை: இந்த இனிப்பான பழங்களைத் தின்பவன் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்! அதைக் கொண்டுவந்து எனக்குக் கொடு. அதனால் நான் மூப்போ சாவோ இல்லாமல் நீண்ட காலம் உனக்குத் துணையாக இருந்து சுகம் தருவேன்.

ஆண்முதலை: எனக்கு உயிர்க்கு உயிரான நண்பனாக அந்த சுமுகன் இருக்கிறான். அவனுக்கு நீ ஏன் தீங்கு நினைக்கிறாய்?

பெண்முதலை: என்னைவிட உன் நண்பன் உனக்கு முக்கியமா? நான் உனக்கு நெருக்கமானவள் என்றால் அவன் ஈரலைக் கொண்டுவந்து கொடு. இல்லாவிட்டால் நான் உயிரை விட்டுவிடுவேன்.

ஆண்முதலை: நெருக்கமான நண்பன் ஒரு சகோதரனைவிட முக்கியமானவன். ஆகவே அவனைக் குறித்து நீ அடம் பிடிக்காதே.

பெண்முதலை: நீ எப்போதும் எனக்குக் குறுக்கே பேசியதில்லை. இன்று மாத்திரம் வீணாக நீதான் அடம் பிடிக்கிறாய். ஆகவே நான் உயிரை விடுவதுதான் நல்லது.

ஆண்முதலை: நண்பனைக் கொல்லுவது எனக்குத் தகாது. ஆனால் நீயோ பிடித்ததை விடாமல் வம்பு செய்கிறாய். என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனது.
இவ்வாறு கூறிவிட்டு முதலை சுமுகன் இடத்திற்குச் சென்றது.

சுமுகன் (முதலையிடம்): நண்பா, நீ ஏன் இன்றைக்கு வருத்தமாக இருக்கிறாய்?

முதலை: உன் மதினி, அதுதான் என் மனைவி, என்னைப் பார்த்து, “துஷ்டனே, நன்றி கெட்டவனே, நீ மாத்திரம் உன் நண்பன் வீட்டுக்குச் சென்று அவனிடம் பழங்கள் வாங்கித் தின்கிறாய். அவனை ஒரு நாளாயினும் நம் வீட்டுக்கு அழைத்துவந்து விருந்திட வேண்டாமா?” இப்படிச் சொல்லி என் மனைவி கோபித்துக் கொண்டாள். அதனால் என் வீட்டுக்கு வா. உனக்காக என் மனைவி சிறப்பான விருந்து தயாரித்து வைத்திருக்கிறாள். ஆனால் உன்னை எப்படி அழைத்துப் போவது என்றுதான் கவலையோடு இருந்தேன்.

குரங்கு: நண்பா, நான் தண்ணீரில் இறங்கும் ஆள் அல்ல. உனக்குத் தான் அது தெரியுமே. ஆகவே என் மதினியை இங்கே அழைத்துக் கொண்டு வா.

முதலை: அது என் மனைவிக்கு விருப்பமல்ல. ஒன்று செய். நீ என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு வா. உனக்கு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்கிறேன்.
முதலை கூறியதில் நம்பிக்கை வைத்துக் குரங்கு முதலையின் முதுகின் மீது உட்கார்ந்து கொண்டது. முதலை நீரில் குதித்துக் குதித்துச் செல்லலாயிற்று.

குரங்கு: எனக்கு பயமாயிருக்கிறது நண்பா, மெதுவாகச் செல்.
‘இப்போது சுமுகன் நம் ஆதீனத்தில் இருக்கிறான். இனி இவனால் தப்பிச் செல்ல முடியாது. உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்ப முடியுமா? ஆகவே இனிமேல் நம் உண்மையான எண்ணத்தை இவனிடம் வெளியிடலாம்’ என்று முதலை நினைத்தது.

முதலை: நண்பா, நீ உனக்கு விருப்பமான கடவுளை தியானம் செய்துகொள். என் மனைவியின் பிடிவாதத்தினால் உன்னை நான் கொண்டுபோகிறேன்.

குரங்கு: நான் என்ன தவறு செய்தேன்?

pancha-thandhira-kadhaigal1

 

முதலை: நீ நேற்று எனக்குக் கொடுத்த பழங்களில் சிலவற்றை வீட்டுக்குக் கொண்டுசென்று என் மனைவிக்குக் கொடுத்தேன். அதை அவள் தின்ற பிறகு, “இத்தகைய பழங்களை தினந்தோறும் தின்றவனுடைய ஈரல் மிகவும் சுவையாகத்தான் இருக்கும். நீ அவன் ஈரலை எனக்குக் கொண்டுவந்து தரவேண்டும். இல்லாவிட்டால் நான் இறந்து போவேன்” என்றாள். அதற்காகவே நான் உன்னை இப்போது அவளிடம் கொண்டு செல்கிறேன்.

குரங்கு: நல்லது, நண்பனே! நட்பின் இலக்கணமே அடுத்தவனுக்கு உதவுவது தானே? ஆகவே உன் ஆவலை நான் நிச்சயம் பூர்த்தி செய்திருப்பேன். நீ இந்தச் செய்தியை முன்னாலேயே சொல்லியிருந்தால், நான் மரத்தின் மேல் ஒளித்து வைத்திருக்கின்ற ஈரலை உன்னிடம் எடுத்துக் கொடுத்திருப்பேன். இப்போது ஈரலற்ற என்னை அங்கே கொண்டுபோய் என்ன செய்யப்போகிறாய்?

முதலை: என் உயிருக்கு உயிரான நண்பனே! உன் ஈரல் உடலுக்கு வெளியே இருக்கிறது என்று தெரியாமல் போனது. ஆகவே நீ அதை எடுத்துக் கொண்டு வா.

இவ்விதம் கூறி, முதலை குரங்கைத் திரும்ப அழைத்துச் சென்று, மரத்தடியில் விட்டது. குரங்கு குதித்து மரத்தின்மீது ஏறிக்கொண்டது. ‘அப்பா, இன்றைக்கு எப்படியோ எமன் கையிலிருந்து விடுபட்டேன்’ என்று தனக்குள் நினைத்தவாறு இருந்தது.

முதலை: நண்பனே, ஈரலை விரைவாக எனக்குக் கொடு. உன் மதினிக்குக் கொடுத்துவிட்டு நான் வருகிறேன்.
இதைக் கேட்ட குரங்கு (சிரித்து): மூடா! துஷ்டா! ஈரல் எங்கேயாவது உடம்பை விட்டு வெளியில் இருக்குமா? நண்பனுக்குத் தீங்கு நினைத்த உன்னைப் பார்க்கவே என் கண் வெட்கப்படுகிறது. இங்கிருந்து போய்விடு. விசுவாசமற்ற உன்னை இனி நண்பன் என்று நான் கருதமாட்டேன்.
முதலை, பச்சாத்தாபப் பட்டு, ‘நான் இவனுக்கு வழியிலேயே உண்மையைக் கூறி இவனை இழந்துவிட்டேனே. இப்போது மறுபடியும் நம்பிக்கை வருமாறு பேசி இவனை அழைத்துச் செல்லவேண்டும்’ என்று நினைத்தது.

முதலை: நண்பா, நான் உன்னைச் சோதிக்க வேண்டியே அப்படிச் சொன்னேன். நீ சொன்னதை நம்பி அதற்காக உன்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு வரவில்லை. ஈரல் உடலுக்கு வெளியே இருக்காது என்பது சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியுமே? சும்மா, இதெல்லாம் நான் விளையாட்டுக்குச் செய்தது. ஆகவே என் வீட்டுக்கு பயமில்லாமல் வா.

குரங்கு: பசித்தவனின் விசுவாசத்தில் நம்பிக்கை வைக்கலாகாது. அதனால்தான் பிரியதத்தனுக்கு கங்காதத்தன் பயந்து மறுபடியும் காணவில்லை.

முதலை: கங்காதத்தன் ஏன் அஞ்சினான்?

குரங்கு: கங்காதத்தன் என்பது ஒரு பெரிய தவளை. அதற்கு அதன் இனத்தைச் சேர்ந்த தவளைகளே தொல்லை கொடுத்து வந்தன. அது பிரியதரிசனன் என்ற பாம்பை ஒருநாள் கண்டது. ‘நம்முடைய தாயாதிகள் வலியவர்களும் பலருமாக இருக்கிறார்கள். இந்தப் பாம்பை நமது வீட்டுக்குக் கொண்டுசென்று பங்காளிகளைக் கொல்லவேண்டும்’ என்று நிச்சயம் செய்தது. அதன்படியே அது பாம்பின் புற்றுக்கு அருகில் சென்று அதைக்கூவி அழைத்தது. பாம்பு புற்றுக்குள்ளிருந்தபடியே “நீ யார்?” எனக் கேட்டது. “நான் கங்காதத்தன் என்னும் தவளையரசன். உன்னைச் சரணம் அடைய வந்தேன்” என்றது தவளை. “நான் உன் பகைவன் ஆயிற்றே, நீ ஏன் இந்த விபரீத விளையாட்டில் ஈடுபடுகிறாய்?” என்றது பாம்பு.

 

pancha-thandhira-kadhaigal3

கங்காதத்தன்: என்னைப் பகைவர்கள் வருத்துகிறார்கள் என்று எண்ணி, உன்னிடம் வந்தேன். நீ எங்கள் வம்சத்திற்கு வைரி என்பது மெய்தான்.. ஆனால் வலிமையான பகைவர்களை வேறு பகைவர்களைக் கொண்டுதான் வெல்லவேண்டும் என்று நீதிநூல் இருக்கிறது. ஆகவே உங்களைச் சரணடைய வந்தேன்.

பாம்பு, வலிய வரும் சீதேவியை ஏன் உதைத்துத் தள்ள வேண்டும் என்று கருதி அந்தத் தவளையுடன் சென்றது. தன் வளைக்கு அழைத்துச் சென்ற தவளை, தனக்குக் கஷ்டம் கொடுத்துவந்த மற்றத் தவளைகளைக் காட்டியது. பாம்பும் சில நாட்கள் அவற்றையெல்லாம் வயிறார உண்டது. இப்படிச் சில நாள் சென்ற பிறகு, கங்காதத்தனை அந்தப் பாம்பு பார்த்து, “உன் பகைவர்களை எல்லாம் நான் கொன்றுவிட்டேன். இனிமேல் எனக்கு உணவு கொடு” என்று கேட்டது.

கங்காதத்தன்: நீ எனக்கு ஒரு நண்பன் எப்படி உதவ வேண்டுமோ அப்படி உதவினாய். இப்போது வா, உன் புற்றுக்கே போகலாம்.

பாம்பு: கங்காதத்தா, இப்போது அந்தப் புற்றில் வேறு ஏதாவது வந்து தங்கியிருக்கும். நான் அங்கே போய் என்ன செய்ய? நீயே உன் இனத்தவர்களிலிருந்து எனக்கு தினமும் ஓர் தவளையைக் கொடு. இல்லாவிட்டால் உடனே எல்லாரையும் கொன்றுவிடுவேன்.
இதைக் கேட்ட தவளை பயந்து பாம்பு கூறியவாறே செய்துவந்தது. கடைசியாக ஒருநாள் கங்காதத்தனின் மகனையும் கொன்று தின்றுவிட்டது பாம்பு. இதைப்பார்த்து கங்காதத்தன் ‘இனி என்ன செய்யலாம்’ என்று ஆராய்ந்துகொண்டிருந்தது.

பாம்பு: எனக்கு ஏதேனும் தின்னக் கொடு.

கங்காதத்தன்: நண்பா, நான் இருக்கும்போது நீ உணவுக்கு ஏன் கவலைப்படுகிறாய்? இப்போது என் மனைவியை அனுப்பி வேறு கிணறு ஏதேனும் ஒன்றிலிருந்து தவளைகளை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். அதுவரையில் நீ சும்மா இரு.

பாம்பு: அப்படியே செய்.
கங்காதத்தன் தன் மனைவியை வேறொரு கிணற்றுக்கு அனுப்பிவிட்டது. பிறகு பாம்பிடம் வந்து, “போனவளை நெடுநேரமாகக் காணவில்லை. ஆகவே நானே சென்று அழைத்து வருகிறேன்” என்று அதுவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டது. அதுவும் திரும்பி வராததால், பாம்பு, அங்கிருந்த பல்லி ஒன்றைப் பார்த்து, “உனக்கு இந்தத் தவளை மிகவும் பழக்கம் அல்லவா, நீ சென்று என்ன ஆயிற்று என்று பார்த்துவா” என்று அனுப்பியது. பல்லி அவ்வாறே சென்று கங்காதத்தனிடம் செய்தியைச் சொல்ல, அது, “பசித்தவன் விசுவாசத்தை நம்பலாகாது. நீ போய் அந்தப் பாம்பிடம், இனி கங்காதத்தன் வரமாட்டான் என்று சொல்” என்று கூறியது. அதுபோல, நான் மீண்டும் உன் வீட்டுக்கு வரமாட்டேன்” என்று முதலையிடம் குரங்கு கூறிமுடித்தது.

முதலை: நீ வராவிட்டால் எனக்கு நன்றிகெட்ட தன்மை ஏற்பட்டுவிடும். ஆதலால் நான் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடுவேன்.

குரங்கு: நரி, நீள்செவியனுக்கு நம்பிக்கை வருவித்து எப்படிக் கொன்றதோ, அதுபோல நீயும் என்னைக் கொல்லவே விரும்புகிறாய்.

முதலை: அது என்ன கதை?

சுமுகன்: ஒரு காட்டில் கேசரி என்கிற சிங்கம் இருந்தது. அதற்கு உடல் நலம் இல்லாமல் இருந்ததால் தனக்கு உற்ற நண்பனாகிய நரியைப் பார்த்து, “நண்பா, இன்று எனக்கு உடல்நலமில்லை. நீயே போய் எனக்கு ஏதேனும் இரையைக் கொண்டுவா” என்றது.
நரி காடுமுழுவதும் ஓடித்திரிந்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக அது நீள்செவியன் என்னும் கழுதையைக் கண்டது. அதனருகில் சென்று,

நரி: மாமா, பார்த்துப் பலநாள் ஆயிற்று. கும்பிடுகிறேன். நீ இப்போது மிகவும் இளைத்துப் போயிருக்கிறாய்.

கழுதை: மருமகனே, என்ன சொல்வேன்! எனக்குத் தலைவன் வண்ணான். அவன் மிகவும் இரக்கமற்ற கொடியவன். என்மேல் பெரிய சுமைகளை ஏற்றிக் கொல்வதை அன்றி வயிற்றுக்குப் புல்லோ செத்தையோ போடுவதில்லை. வெறும் புழுதியில் இருக்கும் அருகம் வேரைத் தின்று கொண்டிருக்கிறேன். அது உடம்புக்கு எப்படி சத்தினைக் கொடுக்கும்? என் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

நரி: அப்படியானால் என்னோடு நீ வா. ஆற்றங்கரையில் பச்சைப் புல் நிறைய இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன்.

நீள்செவியன்: அந்த இடம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அங்கே நான் ஒற்றையாக எப்படி இருப்பேன்?

நரி: அங்கே உன் இனத்துப் பெட்டைகளும் இருக்கின்றன. அதனால் நீ கவலைப்படத் தேவையில்லை.
இதைக் கேட்டு, கழுதை நரியின் பின்னே சென்றது. உடனே சிங்கம் பாய்ந்து வந்து அதைக் கொல்ல முயன்றது. அதைக் கண்ட நீள்செவியன் ஓடிப்போயிற்று. நரி மீண்டும் அதனிடம் சென்று, “நீ ஏன் ஓடி வந்துவிட்டாய். உன் இனத்துப் பெண் கழுதை ஒன்றுதான் உன்னைத் தழுவ வந்தது. நீ வீணாக பயந்து விட்டாய்” என்று கூறி மறுபடியும் அழைத்துவந்தது. சிங்கம் அதை உடனே அடித்துக் கொன்றுவிட்டு, நரியைக் காவல் வைத்துவிட்டு ‘நீராடி வருகிறேன்’ என்று போயிற்று. அதற்குள் நரி அதன் ஈரலையும் காதையும் தின்றுவிட்டது.

 

pancha-thandhira-kadhaigal4சிங்கம்: இதற்கு ஏன் ஈரலும் காதும் இல்லை?

நரி: உள்ளபடியே இதற்கு ஈரலும் காதும் இல்லை. இருந்தால் மறுபடியும் என்னை நம்பி வந்திருக்குமா?
சிங்கம் அதன் பேச்சை நம்பி, அதற்குரிய பாகத்தையும் கொடுத்துவிட்டுத் தானும் மிச்சத்தைத் தின்றது. இப்படித்தான் நீ என்னைக் கொல்ல விரும்புகிறாய்” என்று சுமுகன் என்னும் குரங்கு முதலையிடம் கூறியது. முதலை, “எவன் தனது நன்மையைப் புறக்கணித்து, உள்ளதைச் சொல்கிறானோ அவன் உதிட்டிரன் என்னும் குயவனைப் போன்று துன்பம் அடைவான்” என்றது.

குரங்கு: அது எப்படி?

முதலை: ஒரு குப்பத்தில் உதிட்டிரன் என்னும் குயவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பானைகளைச் சுடச் சுள்ளிகள் எடுக்கப் போகும்போது அவனுக்கு அவற்றின் கூரிய முளைகள் குத்திக் காயம் உண்டாயிற்று. பிறகு அது ஒரு நீண்ட வடுவாகவே நிலைத்துவிட்டது.
சிலநாட்கள் கழித்து அவன் வாழ்ந்த இடத்தில் பஞ்சம் வந்ததால், வேறொரு இடத்திற்குச் சென்று அங்கிருந்த அரசனிடம் வேலைக்கு அமர்ந்தான். அவனது நீண்ட வடுவைப் பார்த்த அரசன், ‘இவன் ஒரு வீரனாக இருப்பான் போலும்’ என்று எண்ணி அவனுக்கு ஒரு சேனைப் பிரிவுக்குத் தலைமைப் பதவி கொடுத்தான்.

(தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10

siragu-panjathandhira-kadhaigal1

 

அரிமர்த்தனனிடம் பிரகாரநாசன் என்னும் மந்திரி சொல்கிறது:

“ஒரு வனத்தில் ஒரு வேடன், கையில் புறாக்கூடும், கண்ணியும், தடி முதலிய வேட்டைக் கருவிகளும் எடுத்துக்கொண்டு அலைந்தான். அப்போது பெருமழையும் காற்றும் வந்து பிரளயம் போல வீசலாயின. வேடன் பயந்துபோய் ஒரு மரத்தடியில் நின்றான். “கடவுளே, இந்த வேளையில் என்னைக் காப்பாற்றக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று வேண்டினான். அந்தச் சமயத்தில், அந்த மரத்தின் மேல் வசிக்கும் ஒரு ஆண்புறா, தனது பெட்டை வரவில்லை என்று மிகவும் துக்கமாக இருந்தது. “இன்றைக்கு என் மனைவி வரவில்லையே, அவளை யாரேனும் பிடித்துக் கொண்டார்களோ தெரியவில்லையே. அவள் இல்லாத இந்த வீடு எனக்குச் சுடுகாட்டைப் போலத் தோன்றுகிறது. அவள் கற்பும் கணவன் இன்புறக்கூடிய செயலும் உள்ளவள். அப்படிப்பட்டவளை அடைந்த நான் பாக்கியவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வேடனின் புறாக்கூண்டிலிருந்த பெண் புறா, மிகவும் துக்கத்துடன்: “முன்பிறப்பில் தீவினை செய்தவர்களுக்குப் பலவகைப்பட்ட துன்பங்களும் சிறையும் நோயும் வந்து நேர்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எந்தச் சமயத்தில் எது நேருமோ அதை யாராலும் தடுக்க ஆவதில்லை” என்றது. பிறகு, மரத்தின் மேலிருந்த தன் கணவனை நோக்கி, “அன்புள்ளவரே, நமது வீட்டுக்கு வந்த விருந்தாளியாகிய இந்த வேடனுக்கு உதவி செய்வது நமது கடமை. குளிர் முதலியவற்றை நீக்கி விருந்தோம்ப வேண்டும். இவன் நம் மனைவியைப்பிடித்துவிட்டானே என்று துக்கம் கொள்ளாமல் இவனுக்கு உதவுங்கள்” என்றது. பெண்புறா கூறியதைக் கேட்ட

ஆண்புறா: வேடனே, உன் வரவு நல்வரவு ஆகுக. இந்த மரத்தடியை உன் வீடாக நினைத்துக் கொண்டு உனக்கு வேண்டியதைக் கேள்.

வேடன்: புறாவே, எனக்கு மிகவும் குளிர்கிறது. குளிரைப் போக்க உதவு.

இதைக் கேட்ட புறா, சருகுகளைத் திரட்டியது. ஏதோ ஒரு பறவையின் கூட்டிலிருந்து ஒரு சிறு நெருப்பைக் கொண்டுவந்தது. பிறகு சருகுகளின்மீது தீவைத்து,

“இந்த நெருப்பில் நீ குளிர் காய்வாயாக. நானோ ஒரு பறவை. அதனால் உன் பசியைத் தீர்ப்பதற்கேற்ற உணவு என்னிடம் இல்லை. என் மனைவியோ உன் கூட்டில் இருக்கிறாள். அநேக துன்பங்களுக்கு இடமான இந்த உடலை வைத்திருந்து பயன் என்ன? அதனால் என் இறைச்சியைத் தின்று மகிழ்ச்சி அடை”

என்று சொல்லியவாறே எரியும் தீயில் விழுந்துவிட்டது. இதைக் கண்ட வேடன் மிகவும் துயரமடைந்தான்.

 

pancha-thandhira-kadhai10-4

வேடன் (தனக்குள்): ஆ! ஆ! என் பொருட்டு இந்தப் புறா தன் உயிரை விட்டுவிட்டது. நானோ தீயவன். இம்மாதிரிப் பல பறவைகளைப் பிடித்துக் கொன்று அவற்றின் சதையினால் ஜீவிக்கிறேன். பரோபகாரம் இன்னதென்று தெரியாததனால், ஊனைத் தின்று ஊனைப் பெருக்குகின்ற பாவியானேன். எனக்கு நரகம்தான் காத்திருக்கிறது. இது முதலாக நான் நன்னடத்தை உடையவனாகப் பசி, தாகம், குளிர், வெயில் முதலானவற்றைப் பொறுத்துக் கொண்டு தவம் செய்வேன்.

என்று சொல்லி மிகுந்த பச்சாத்தாபத்துடன் தன் கூடு, தடி முதலிய பொருள்களை எல்லாம் எறிந்துவிட்டு, அந்தப் பெண் புறாவையும் விட்டுவிட்டான். தன் நாயகன் இறந்த பிறகு தனக்கு வாழ்வு இல்லை என்று அந்தப் பெண் புறாவும் தீயில் விழுந்து இறந்தது. அதைக் கண்ட வேடனும், “எனக்கு இந்த உடல் வேண்டாம்” என்று தீயில் விழுந்து இறந்தான்.

ஆகவே அபயம் அடைந்தவர்களைக் காப்பது நம் கடமை” என்றது.

அரிமர்த்தனன்: என் அபிப்பிராயமும் அதுவே. இவன் உண்மை பேசுவதாகவே தோன்றுகிறது. புத்திமானாகவும் இருக்கிறான். இதை அறியாமல் மேகவர்ணன் இவனை மானபங்கம் செய்தான். இவனைக் கொல்வது தவறு. நம்பிக்கை வைத்தவரைக் கொல்வதற்குப் பிராயச்சித்தமே கிடையாது. ஆகவே இவனை நம் துர்க்கத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

என்று உறுதி செய்துகொண்டு, சிரஞ்சீவியிடம் சொல்கிறது:

நீ என் கோட்டையில் வந்து இரு. நான் உன்னைப் பாதுகாப்பேன்.

சிரஞ்சீவி: நான் விஸ்தாரமாகச் சொல்ல விரும்பவில்லை. எப்படி நடந்துகொள்கிறேன் என்பதைத் தாங்கள் காணலாம்.

குரூரநாசன்: இந்த அரசனின் குற்றத்தினால் கோட்டான் குலம் முழுதும் அழியப் போகிறது. பிறர் செய்யக்கூடிய தீங்குகளை அரசனுக்கு அறிவிக்கவேண்டும். இதமாகச் சொல்லியும் அரசன் கேட்காவிட்டால் என்ன செய்வது?

கோட்டான்களின் அரசன் அதைக் கேட்காமல், சிரஞ்சீவியைத் தனது அரணுக்கு அழைத்துச் சென்றது.

சிரஞ்சீவி (தனக்குள்) நம்மைக் கொல்லவேண்டும் என்று ஆலோசனை சொன்னவன் மிகவும் கெட்டிக்காரன். மற்றவர்கள் எல்லாம் அரசனைப் போலவே மூடர்கள். இவன் ஒருவன் இல்லாவிட்டால் எல்லாரையும் கொல்லுவது நமக்கு அரியதல்ல.

என்று ஆலோசித்துக் கொண்டிருந்தது.

அரிமர்த்தனன்: இந்த சிரஞ்சீவிக்கு நமதுதுர்க்கத்தின் பகுதிகளை எல்லாம் காட்டு.

அப்போது, சிரஞ்சீவி (தனக்குள்): நாம் இந்த அரணுக்குள் இருந்தால், நமது எண்ணம் கைகூடி வராது. நம் வஞ்சனையையும் தெரிந்துகொள்வார்கள். ஆதலால் இந்தக் கோட்டையின் தலைவாசலில் தங்கியிருந்தே நமது எண்ணத்தை முடிக்க வேண்டும்.

இவ்வாறுநினைத்து, அரிமர்த்தனனிடம் சொல்கிறது:

சிரஞ்சீவி: மகாராஜா நான் காக்கை ஆதலினால் உங்களுடன் உள்ளே இருக்கத்தக்கவன் அல்ல. உங்கள் கடைவாயிலில் காத்திருந்து கபடமில்லாமல் உங்களைச் சேவித்துக் காலம் தள்ளுவேன். அன்புள்ள சேவகன் எங்கிருந்தாலும் கவலையில்லை.

என்று கூறி அரணுக்குள் வராமல் வாயிலில் இருந்தது.

குரூரநாசன்: அரசன், மந்திரிகள் ஆகிய நீங்கள் எல்லாரும் மூர்க்கர்களாக இருக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். முற்காலத்தில் நடந்த ஒரு கதையும் இருக்கிறது. “முதல் மூடன் நான், இரண்டாவது வேடன், மூன்றாவது அரசன், நான்காவது அமைச்சன்” என்று சொல்லிவிட்டு ஒரு பறவை பறந்து போயிற்று.

அமைச்சர்கள்: அது எப்படி?

குரூரநாசன்: ஒரு மலையின்மீது ஒரு பறவை இருந்தது. அது எச்சமிட்டால் பொன்னாக மாறிவிடும். ஒரு வேடன் இதைக் கண்டான். “நான் இளமையிலிருந்து பல காடுகளிலும் திரிந்துவருகிறேன். இப்படிப்பட்ட ஆச்சரியம் ஒன்றைக் கண்டதே இல்லை. எனவே இதை உயிருடன் பிடித்துச் செல்வோம்” என்று நினைத்தான். தன் வலையில் அதைப் பிடித்துக் கொண்டான். “இது நம்மிடத்தில் இருந்தால் பலரும் சந்தேகப்படுவார்கள் ஆதலால் அரசனுக்கே இந்தப் பறவையைக் கொடுத்து விடுவோம்” என்று அரசனிடம் கொண்டு சென்று அந்தப் பறவையின் விருத்தாந்தத்தைக் கூறினான். அதைக்கேட்ட அரசன், அதை ஒரு இரத்தினங்கள் இழைத்த கூட்டில் சிறை வைத்தான். அதைக் கண்ட ஓர் அமைச்சன், “இந்த வேடன் கூறுவதெல்லாம் உண்மையாக இருக்குமா? இதை ஏன் வாங்கினீர்கள்? விட்டுவிடுங்கள்” என்றான். அதைக் கேட்டு அரசன் பறவையை விடுதலை செய்தான். அப்போது பறவை, “முதலில் நான் மூடன், இரண்டாவது வேடன், மூன்றாவது அரசன், நான்காவது அமைச்சன்” என்று சொல்லியவாறு பறந்துபோய்விட்டது.

இதைக் கேட்டும் மற்றக் கோட்டான்கள் கேட்கவில்லை. ஆகவே குரூரநாசன், தன் உறவினர்களைப் பார்த்து, “நான் இனி வேறொரு மலைக்குச் செல்கிறேன். இனி இங்கிருந்தால் ஆபத்து. நரி, குகையைக் கூப்பிட்டு சுகம் அடைந்தாற் போல, வருவதற்குமுன் ஆலோசிப்பவன் இன்பம் அடைவான்” என்றது.

உறவினர்கள்: அது எப்படி?

pancha-thandhira-kadhai10-1குரூரநாசன்: ஒரு வனத்தில் கிரகிரன் என்ற சிங்கம் இருந்தது. ஒருநாள் நெடுநேரம் இரைதேடியும் அதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே பொழுது சாய்ந்த சமயத்தில், ஒரு பெரிய குகையைக் கண்டு, இதில் இரவு அடைவதற்கு ஏதேனும் ஒரு பிராணி வரும், அப்போது அதைப் பிடித்துத் தின்னலாம் என்று யோசித்து அதற்குள் சென்றது.

அக்குகையில் அவிபுச்சன் என்னும் நரி வசித்துவந்தது. அது திரும்பிய போது, குகைவாயில் அருகில் சிங்கத்தின் கால்சுவடுகளைக் கண்டது. சிங்கம் குகையில் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சோதித்துக் கொண்டு நாம் உள்ளே செல்லவேண்டும் என்று அது தீர்மானம் செய்தது. பிறகு சற்றுத் தொலைவிலேயே நின்றுகொண்டு, “குகையே, குகையே”, என்று பலமுறை கூவியது. பிறகு

அவிபுச்சன்: குகையே, ஏன் என்னோடு பேசாமல் இருக்கிறாய்? நாம்தான் தினந்தோறும் பேசி மகிழ்வது வழக்கமாயிற்றே. இன்றைக்கு ஏன் நீ பேசவில்லை? சீக்கிரம் சொல். இல்லாவிட்டால் நான் வேறொரு இடத்திற்குச் செல்கிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு மறுபடியும் குகையைக் கூப்பிட்டது.

சிங்கம் (தனக்குள்): இந்தக் குகை தினந்தோறும் நரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போலும். இன்று நம்மைப் பார்த்த பயத்தினால் பேசவில்லை. நாமே அதற்கு பதிலாகப் பேசலாம்.

இவ்வாறு நினைத்து, தான் இருப்பதை வெளிக்காட்டும் விதமான கர்ஜனைத் தொனியில், “யாரும் இல்லை, உள்ளே வா” என்றது.

நரி: அப்பா, நான் தப்பிப் பிழைத்தேன்

இவ்வாறு கூறி ஓட்டம்பிடித்தது. எனவே முன்னே யோசித்து எதையும் செய்வதே சிறந்தது என்று கூறி, குரூரநாசனும் அதன் உறவினர்களும் வேறிடத்திற்குச் சென்றுவிட்டன. இதைக் கண்ட

சிரஞ்சீவி: இப்போது இந்தக் கோட்டான் கூட்டத்தை எளிதில் கொன்று விடலாம். விவேகமில்லாத அமைச்சனை உடைய அரசன் விரைவில் அழிவான். விவேகமுள்ள அமைச்சனோ இங்கு ஒருவனும் இல்லை.

என்று நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பகலில் சுள்ளிகளைக் கொண்டு வந்து தினந்தோறும் போட்டுக்கொண்டே வந்தது. அவ்வாறு காகங்கள் இருக்கும் இடம் வரை போட்டுவிட்டு மேகவர்ணனிடம் வந்தது. அது “என்ன செய்தி?” என்று வினவிற்று.

சிரஞ்சீவி: நம் குலப் பகைவர்களை அடியோடு நாசம் செய்யத்தக்க உபாயம் செய்திருக்கிறேன். நான் போட்ட சுள்ளிகளை வைத்து வழியை எளிதில் கண்டுபிடிக்கலாம். மேலும் நீங்கள் அனைத்து காகங்களும் பகலில் கோட்டான்கள் பார்வையின்றி இருக்கும்போது அவற்றைக் கொல்லலாம்.

இதைக் கேட்ட காக அரசன், மிகுதியாகக் கொள்ளிகளைச் சேகரித்துக் கொண்டுவந்து பகல்நேரத்தில் கோட்டான்களின் துர்க்க வாசலில் போட்டது. அதில் எழுந்த புகையினால் மூச்சுத்திணறி, கோட்டான்கள் இரைச்சல் இட்டுக் கொண்டு வெளியே வந்தன. வாயில் சிறிதாகையால் அனைத்தும் போவதற்கு வழியும் இல்லை. அப்போது குரூரநாசனை நினைத்து, அவன் சொன்னதைக் கேட்டிருந்தால் நலமாக இருந்திருக்கலாம் என்று அழுதன. அதற்குள் நெருப்புச் சுவாலை அதிகரித்து, கோட்டான்கள் அனைத்தும் இறந்தன. மேகவர்ணன் தன் கூட்டத்தோடு மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரலாயிற்று.

மேகவர்ணன் (சிரஞ்சீவியைப் பார்த்து):  நீ எப்படி இதைச் சாதித்தாய்?

சிரஞ்சீவி: குரூரநாசன் என்றொரு அமைச்சனைத் தவிர மற்ற எவருக்கும் அங்கு புத்தியில்லை. அதனால் இது முடிந்தது. இப்படித்தான் பழைய காலத்தில் பகைவர்களை நாசம் செய்வதன்பொருட்டு, ஒரு பெரிய பாம்பு தவளைகளைத் தோளில் சுமந்து அவற்றைக் கொன்றது.

காக அரசன்: பாம்பு தவளைகளைச் சுமந்ததா? அது என்ன கதை?

 

pancha-thandhira-kadhai10-3சிரஞ்சீவி: ஒரு நாட்டில் மந்தவிஷன் என்னும் பாம்பு இருந்தது. ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காமல் மிகவும் பசித்தபடி ஓர் ஏரிக்கரை அருகில் வந்தது. அங்குத் தவளைகள் மிகுதியாக இருந்தன. ஏதேனும் கபடம் செய்து இவற்றைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து, கண்ணை விழித்தவாறு கரையிலேயே படுத்துக் கிடந்தது.

ஒரு தவளை: இரை தேடும் முயற்சியை விட்டு நீ ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?

பாம்பு: நான் அபாக்கியவான். எனக்கு எப்படி இரை கிடைக்கும்? இன்றைக்குப் பிரதோஷ காலத்தில் இரைதேடி அலைந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு தவளையைப் பிடித்தேன். அது அங்கிருந்த பிராமணன் ஒருவன் காலருகில் ஓடிப்போயிற்று. அது தெரியாமல் நான் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பிராமணனின் பிள்ளை நீந்திவர, அவன் காலைத் தவளை என்று நினைத்துப் பிடித்தேன். அவன் உடனே இறந்துபோனான். அவன் தகப்பன், மிகவும் துக்கத்துடன் என்னைப் பார்த்து,

“துஷ்டப் பாம்பே எந்தக் குற்றமும் செய்யாத என் பிள்ளையைக் கடித்துவிட்டாய். ஆகவே நீ தவளைகளுக்கு வாகனமாகத் திரிவாயாக”.

இப்படி அவன் சபித்ததனால், நான் உங்களுக்கெல்லாம் ஊழியம் செய்ய வந்தேன்.

இதைக் கேட்ட மண்டூகங்கள் (தவளைகள்) ஓடிப்போய்த் தங்கள் அரசனிடம் செய்தியைக் கூறின. பிறகு தவளை அரசன் உள்பட எல்லாத் தவளைகளும் பாம்பின்மீது வந்து அமர்ந்தன. பாம்பும் பலவிதமாக நகர்ந்து அவற்றிற்குத் தன் ஆட்டங்களைக் காட்டியது.

தவளைகள்: யானை குதிரை தேர்கள் போன்ற வாகனங்களைவிட இந்தப் பாம்பு வாகனம் மிக நன்றாக இருக்கிறது.

பிறகு அந்தப் பாம்பு இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தது. நான்காம் நாள் பழைய உற்சாகமின்றி மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியது.

தவளைகள்: ஏன் இன்றைக்கு மிகவும் மெதுவாக நடக்கிறாய்?

பாம்பு: நான் சாப்பிட்டுச் சில நாட்கள் ஆயிற்று. பசியினால் நடக்க இயலவில்லை.

தவளை அரசன்: அப்படியானால், மிகவும் சிறிய குட்டித் தவளைகளாகப் பிடித்து ஒவ்வொன்றாகதினந்தோறும் சாப்பிடு.

பாம்பு: எனக்கும் அந்த பிராமணன் அப்படித்தான் சாபம் கொடுத்தான்.

என்று கூறி, தினந்தோறும் ஒரு தவளை எனச் சாப்பிட்டுச் சில நாட்களில் எல்லாத் தவளைகளையும் தின்றதோடு தவளை அரசனையும் தின்றுவிட்டது. எந்தச் சமயத்தில் எது செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து பகைவர்களை வேரோடும் நாசம் செய்யவேண்டும்.

மேகவர்ணன்: தாமச குணம் உள்ளவர்கள், இடையூறு வரும் என்ற காரணத்தினால் எந்தவித முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. நடுத்தர குணமுடையவர்கள், முயற்சியில் ஈடுபட்டாலும், இடையில் கஷ்டங்கள் வரும்போது அதைக் கைவிட்டுவிடுகிறார்கள். ஆயிரம் இடையூறுகள் வந்தாலும் எடுத்த வேலையை முடிப்பவர்களே தலையானவர்கள் ஆவர். நீயும் அநேகவிதமாகக் கஷ்டப்பட்டு நல்ல சாதுரியத்தினால் அதிக எண்ணிக்கை உள்ள பகைவர்களைக் கொன்றாய். பகைவரிடையிலும் நெருப்பிலும் மிச்சம் வைத்தால் பின்னால் அழிவுநேரிடும். இதையறிந்து சிறப்பாகக் காரியத்தைச் செய்து முடித்தவன் நீ.

சிரஞ்சீவி: எல்லாம் உன் உதவியினாலும் ஆயிற்று. என் பேச்சை ஏற்றுக் கொண்டு நீ நடந்ததால் எல்லாம் நல்லபடி முடிந்தன.

இவ்வாறு காகக்கூட்டம் மேகவர்ணன் தலைமையில் சுகமாக வாழ்ந்தது. இவ்வாறு சோமசர்மா, காகங்கள்-கோட்டான்கள் கதையான சந்திவிக்கிரகம் என்பதை அரசகுமாரர்களுக்குச் சொல்லிமுடித்தான்.

(தொடரும்)


எது முந்தியது?

ஒரு மருத்துவர், பொறியியலாளர், அரசியல்வாதி மூவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் தொழில்களில் எது மூத்த தொழில் என்பதில் அவர்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தனது தொழில்தான் முற்பட்டது என்று நினைத்தார்.
மருத்துவர் சொன்னார்: “இறைவன் உலகைப் படைத்தபோது ஆறாம் நாள் ஆதாமின் எலும்பை எடுத்து அறுவைமருத்துவம் செய்து ஏவாளை உருவாக்கினார் . ஆகவே மருத்துவம்தான் உலகில் முதல் தொழில்”.
பொறியியலாளர் சொன்னார்: “ஆனால் அதற்கு முன்பே குழப்பத்திலிருந்து உலகத்தைக் கடவுள் உருவாக்கினார். ஆகவே பொறியியல்தான் உலகின் முதல் தொழில், மருத்துவத்திற்கும் முன்னால்”.
அரசியல்வாதி எழுந்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சற்று யோசியுங்கள்.  அந்தக் குழப்பத்தையெல்லாம் உருவாக்கியது யார் என்று நினைக்கிறீர்கள்?”


மனிதன்யார்?

மனிதன்யார்?

– எஸ். என். நாகராசன்

கண்ணிலே விண்ணைக் காண்பான்

விண்ணிற்குமோர் கண்ணை வைப்பான்

கண் திறந்து உலகு இருண்டதென்பான்

கண் மூடி பேரொளிப் பெற்றேனென்பான்.

அவனைக் கண்டேனென்பான்;

இல்லையில்லை என்னையே கண்டேன் என்பான்.

 

நஞ்சினில் அமுதத்தைக் காண்பான்

அமுதத்துள் நஞ்சினைக் காண்பான்

நேற்றினில் நாளையைக் காண்பான்

நாளையில் நேற்றைக் காண்பான்

தனையனில் தந்தையைக் காண்பான்

தாரத்துள் தாயைக் காண்பான்

அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்பான்;

தன் கையே தனக் கென்பான்

 

ஒன்றில் ஒன்றையே காண்பது விலங்கு

ஒன்றில் மற்றதைக் காண்பவனே மனிதன்

கனவும் கற்பனையுமின்றி ஒன்றில் மற்றதைக் காண்பதெங்கே?

கனவும் கற்பனைய்மின்றி நேற்றேது நாளையேது?

கனவும் கற்பனையுமின்றி காலமேது? பின் காலத்தைக் கடத்தலேது?

 

கனவும் கற்பனையுமின்றி கலையேது;

கலையின்றி இவனேது?

இவனின்றி கலை எங்கே?

 

என்னே இவன் கற்பனை?

ஆறுமுகத்தோனை படைத்தவனுமிவனே

ஆனைமுகத்தோனை படைத்தவனுமிவனே

தில்லையில் நிலையில்லா நித்திய நடராஜனைப் படைத்து

ஆனந்தம் நிலையற்றதெனக் கூறி

அதற்கு இரு பொருள் கொடுப்பவனுமிவனே

பொய்யறியா விலங்கு மெய்யறியுமோ?

பொய்யுறைக்கும் இவனுக்கன்றோ மெய்யுண்டு

மெய்யோ கற்பனை

பொய்யோ கற்பனையிலும் கற்பனை

பொய்யான ஆனைமுகத்தோன் மறைந்திட்டால்

மெய்யான E=MC2 மட்டும் மிஞ்சுமோ?

 

மிஞ்சுவது என்ன?

காணாத விலங்கும் வேண்டாத கடவுளுமின்றி வேறென்ன?

கனவும் கற்பனையும் காண்பவனும் இவனே

கனவிலும் கற்பனையிலும் தோன்றி விளைந்தவனும் இவனே.

இவனே மனிதன்!

 

 

 

 


ஜனநாயக அரசியல்

ஜனநாயக அரசியலில் சமூக வாழ்க்கையின் தனிப்பண்பே, மிகச்சிலரின் விருப்பங்களுக்குச் சிந்தனையற்ற பலரின் கீழ்ப்படிதலாகத்தான் இருக்கிறது. நமது வாழ்க்கையில்  நிகழும் பரிச்சயமற்ற அனுபவங்களின் திடீர்ப் படையெடுப்புதான் அரசியலின் பெரும்பரப்பினைப் புரிந்துகொள்ள நம்மில் பெரும்பாலோரைத் தூண்டுகிறது என்பதால்தான் மிகச்சிலரும்கூட அரசியல் துறையில் சிந்திக்கிறார்கள்.