கலைஞர்

முந்தாநாள் மாலை 6.10க்கு கலைஞர் காலமானார். 94 வயது. நேற்று அவரது அடக்கம் மெரீனாவில் அண்ணா சமாதிக்கு அருகில் நடந்தது. ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மாநிலத் தலைவர்களும் அதில் பங்கேற்றனர் என்பது மிகப் பெரிய விஷயம். அவரது சமநீதிக் கொள்கைக்குக் கிடைத்த மரியாதை அது.

கலைஞர்மீதும் திராவிடக் கட்சிகள் மீதும் எனக்கு ஏராளமான, கடுமையான விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் தமிழகத்திற்கு நன்மை செய்தவர்களில் முக்கியமானவர் கலைஞர் என்பதை எவரும் மறுக்க முடியாது. வாழ்க அவர் புகழ்.


விகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்

விகடன் இலக்கியத் தடம் இதழில் வெளியிட வேண்டி என்னைச் சில கேள்விகளுக்கு விடை கேட்டிருந்தனர். அவற்றை இங்கே வெளியிட்டிருக்கிறேன். இது ஆகஸ்டு மாதத் தடத்தில் வெளிவர இருக்கிறது.

1. கோட்பாடுகள்?–நம் சுயம் உள்பட சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அனைத்திற்கும் பின்னால் எங்கும் எப்போதும் உள்ளவை.

2. தமிழர்கள்?–வந்தார் எல்லாரையும் வாழவைத்துத் தன்னை அழித்துக் கொண்டவர்கள்.

3. சாதி?–ஆண்சாதி. (அதனால்தானே எனக்கு ஒரு ‘பெண்சாதி’ கிடைத்தார்?) வேறு சாதிகளின் இருப்பு, சமூகத்தின் அவலம்.

4. ஊர்?–சிறுபாணாற்றுப்படையிலேயே இடம் பெற்ற ஊர். ஏ.எல். முதலியார் முதல் ஏ.ஆர். ரகுமான் வரை சிறந்த ஆளுமைகளை அளித்த ஊர்.

5. மார்க்சியம்?–இன்று உலகத்தையே பாலைவனமாக்கி அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளையர்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், நமக்குத் தேவையான ஒரே கோட்பாடு.

6. விருதுகள்?–உண்மை மதிப்பைவிடப் பெரும்பாலும் சார்புநோக்கி அளிக்கப்படுபவை.

7. தமிழ் ஆய்வுகள்?–எங்கும் இருப்பதுபோல, இங்கும் வணிகமயம்.

8. என் பெருமிதம்?–வருகிறோம், போகிறோம். அதிகபட்சம் சில பத்தாண்டுகளுக்குள் மறக்கப் படுகிறோம்.

9. குடும்பம்?–பண்பாட்டுக்கும், தன்னம்பிக்கைக்கும் இருப்பிடம்.

10. என்னை எழுதத்தூண்டியவை?–பாலாறும் ஆர்க்காடும்.

11. வானமாமலை?–பலதுறை முன்னோடி. முதன்மையாக, நாட்டார் வழக்காற்று ஆய்வுகளுக்கு அடிப்படை அமைத்தவர்.

12. நான் யார்?–பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணுயிரி.
13. திணை?–ஒழுக்கம். பாலியல் அடிப்படையிலானது. தமிழுக்கே உரிய இலக்கியக் கோட்பாடு.

14. காதல்?–வயதுவந்தோர் நெருக்கம், பாலியல் உணர்வு, சேர்க்கையின் உயிரியல். அதற்கு மேல் வெறும் கட்டுக்கதைகள்.

15. மொழி?–ஒவ்வொரு தனிமனித சுயத்தையும் உருவாக்குவது, சிந்திக்க வைப்பது, கலாச்சாரத்தின் அடிப்படை.

16. இன்றைய இந்தியா?–பல்லாயிரம் இதழ்கள் கொண்ட ஒரு பண்பாட்டை ஒற்றை மதமாக, ஒருமொழிக்குக் குறுக்க நினைக்கும் சுயநலக்காரர்களின் இருப்பிடம்.

17. இன்றைய தமிழகம்?–நாளைய பாலைவனம்.

18. பரிந்துரைக்கும் நூல்–திருக்குறள். இதன்கண் இல்லாத எப்பொருளும் இல்லை.

19. பிடித்த சொல்?–எழுத்து. மனங்களை மாற்ற வல்ல ஆயுதம்.

20. குறைகள்?–யாரிடம் இல்லை? முடிந்தவரை திருத்திக் கொள்ளுங்கள், முடியாவிட்டால் நீங்களாக இருங்கள்.

21. இந்துமதம்?–சிந்துவெளிப் பண்பாடு, நாட்டார் வழிபாட்டு மரபுகள், சாதி அவலங்கள் உள்ளிட்டு இன்று வரை எப்படியோ நீடிக்கும் ஆயிரம் விழுதுகொண்ட ஆலமரம்.

22. பக்தி?–எனக்குப் பிடிக்காத ஒரு சொல். எவரிடமும் எதனிடமும் பக்தி தேவையில்லை.

23. ஆதிக்கக் கலாச்சாரம்?–எங்கிருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது, இன்று எங்கும் நிறைந்திருப்பது.

24. திராவிடம்–மொழிக்குடும்பம் என்றால் இச்சொல்லை ஒருவகையாக ஒப்புக் கொள்ளலாம். மற்றப் பயன்பாடுகள் ஏமாற்றுவேலைகள்.

25. அரசியல்/அரசாங்கம்?–அரசாங்கம் தவிர்க்கமுடியாத தீமை. அரசியல் அதில் பங்கு கொள்வதற்கான ஆயத்தம்.


human society-an organism

Many many sociologists have told many times that our human society is like an organism. But I think nobody including our renowned statesmen and leaders, multinational businessmen, and intellectuals have not understood the statement.
Our society is like an organism, no doubt, say just like a human being. Then it has head, neck, limbs, stomach etc. Let us have like this: our society’s head is the intelligentsia, our stomach and lower limbs are like the trade all over the world, and upper limbs are the working class etc. If a body’s organs, some of them grow more than others, it is a disease; not growth or development we can say. In the same manner, nowadays, the monetary actions all over the world are given prime importance. They grow at the expense of other functions and classes. No respect is given to the opinions of the people (function of head); the growth of the working class all over the world is stunted. (the arms have become lean). But the belly has gone too big. We are ready to eat whatever is served before us. If it goes on for some more years, then the human body (the society) may die altogether.
For a child’s body to grow, the environment is very important. But we have made our environment polluted and rotten. How shall we grow then? I think we are at the end of our days, and doomed to die in a few decades.


இதுக்கு எதுக்கு டைட்டில்?

காசு பொறுக்கி நாய்களெல்லாம் ஆட்சி பண்ணுதப்பா-இங்கே
பொம்பளைப் பொறுக்கி பேய்களெல்லாம் ஆய்வு செய்யுதப்பா.
கேள்விகேட்டா தேசத் துரோகி யின்னு சொல்லுதப்பா-அப்புறம்
தீவிரவாதி யின்னு சொல்லி சுட்டுத் தள்ளுதப்பா.


கல்வி-கேள்விகள். கேள்வி 11

(11) யாவற்றையும் மனப்பாடம் செய்து எழுதும் பரீட்சை முறை, மாணவர்களின் மேல் அதீத மன அழுத்தத்தைச் சுமத்துகிறது. இதை ஏன் நாம் மேலை நாடுகளில் இருப்பது போல மாற்றக்கூடாது?

இன்றைய கல்விமுறை, நீட் தேர்வு, இந்தப் போட்டித் தேர்வு, அந்தப் போட்டித் தேர்வு என்று குழந்தைகளை இடையறாது மனப்பாடம் செய்பவர்களாக ஆக்குகிறது. உண்மையில் பெரும்பாலான பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் மாணவர்கள் (குறிப்பாகப் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு) “இந்த இந்தக் கேள்விகள் மட்டுமே தேர்வில் வரும், இவற்றை மட்டுமே மனப்பாடம் செய்து எழுத்துப் பிசகாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று மட்டுமே கற்பிக்கப் படுகிறார்கள். அவர்கள் கற்கும் கொள்கைகள், செயல்முறைகள் எப்படி வந்தன என்றோ, அவற்றின் பயன் என்ன என்றோ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டால் பாராட்டப் படுகிறார்கள்.

ஆண்டுதோறும் இப்படி அதிக மதிப்பெண் வாங்கிப் பாராட்டுப் பெற்றவர்கள் எல்லாம் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்றும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் விசாரித்துப் பாருங்கள், உண்மை தெரியும்.

பாடச்சுமையை ஏற்றுவதாலும் சிறு குழந்தைகளைப் புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பதாலும் மனப்பாடத் திறனாலும் வாழ்க்கை வளர்வதில்லை, ஆளுமை சிதையவே செய்கிறது. நல்ல மொழித்திறன், சிந்தனையை உருவாக்கும் கல்வி, தினந்தோறும் ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சி, தக்க நேரத்தில் விளையாட்டு போன்ற அனைத்தும் தக்க விகிதத்தில் அமையும்போதுதான் சரியான கல்வி முறை என்று கூறமுடியும்.

ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பு, பணம் மிகுதியாகச் சேர்த்து வாழ்வது மட்டுமே சிறந்த வாழ்க்கை என்ற கற்பிதம் பரப்பப் பட்டு நம் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேற்கு நாடுகளிலிருந்து “365 நாட்களில் செல்வம் சேர்ப்பது எப்படி”, “பணக்காரனாவது எப்படி”, “பிறரை வெற்றி கொள்வது எப்படி” என்பது போன்ற மானிடப் பண்பை அழிக்கும் நூல்கள் இறக்குமதி ஆயின. அவை பெருகின. தொழிலில் வெற்றிபெறப் “பிறரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பது நடைமுறை ஆயிற்று. பிறரை மனிதர்களாக அன்றிக் கருவிகளாக நோக்கும் நோக்கு ஏற்பட்டது. இதனால் நமது கல்விமுறை அறவே கெட்டொழிந்தது.

எப்படியாவது மகன்/மகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் >> அதன் வாயிலாக எம்பிபிஎஸ், பிஇ என்று ஏதேனும் உயர்கல்வியைப் பெறவேண்டும் >> அதன் வாயிலாக நல்லதொரு வேலையைப் பெறவேண்டும் >> பிறகு நல்லதொரு வாழ்க்கைத் துணை, இல்லறம் >> பிறகு நல்லதொரு வீடு, செல்வம் கொழிக்கும் முதுமை வாழ்க்கை என்பதாக இலட்சியம் உருவாயிற்று. இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது தான் அதீத மன அழுத்தத்தைத் தருகின்ற மனப்பாடச் செயல்முறையை உருவாக்குகிறது.

அதற்காக மேற்கு நாடுகளைக் காப்பி அடிக்காதீர்கள். ஊழல் குறைவாக இருப்பதாலும், கல்வி அடிப்படை உரிமை என்ற சட்டத்திற்கு மதிப்பிருப்பதாலும், மக்கள் தொகை குறைவாகவும் வளம் அதிகமாகவும் இருப்பதாலும் அவர்கள் கொண்ட கல்விமுறை பயனளிக்கிறது. நமக்கு இவை எல்லாம் எதிர்மறைகள். அவர்களைப் போன்ற செல்வமும் வளமும் நமக்கிருக்குமாயின் நல்ல கல்வி முறையை, மனப்பாடமற்ற கல்வியை நம்மாலும் அளிக்கமுடியும். அவர்களால் ஏற்பட்ட வினைதான் மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் பொருள்களைப் போலப் “பயன்படுத்திக் கொள்ளுதல்” என்ற நோக்கு. அதனால் நமது வாழ்க்கை முறையே சிதைந்து போயிருக்கிறது.


கல்வி-கேள்விகள். கேள்வி 10

(10) இன்றையக் கல்வி நன்னெறியையோ, நடைமுறை வாழ்க்கையையோ கற்றுத் தராதது ஏன்?

1950, 60களில் உயர்நிலைப் பள்ளிப் பாடங்களில், குடிமைக்கல்வி, அறநெறிக் கல்வி ஆகிய இரண்டும் இடம்பெற்றிருந்தன. அவற்றுடன் கைத்தொழிற்கல்வி, ஓவியப் பாடமும் உண்டு. இவை யாவும் கல்வி என்பது வெறும் பாடத்தை மனப்பாடம் செய்வதல்ல என்பதைச் செயலளவில் உணர்த்தின. முக்கியமான இந்த நான்கு பாடங்களும் எப்போது உயர்நிலைப் பள்ளியில் காணாமல் போயின என்பது எனக்குத் தெரியவில்லை.

இன்று நம் வாழ்க்கை முறையே வணிகரீதியாக உள்ளது. நாமும் பிள்ளைகளை வணிகரீதியாக, பணத்தைத் திரட்டுவதில் வெற்றி பெற்றவர்கள் ஆக்கவே விரும்புகிறோம். அவர்கள் நல்ல மனிதர்களாக சமூகத்திற்கு ஒத்த முறையில் அறநெறியில் வாழவேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. குறைந்தபட்சம் தங்கள் அளவில் சீரான மனத்துடன், மனப் பிரச்சினைகள் இன்றிச் சிறார்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம்கூட நமக்கு இல்லை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்–பல கற்றும் கல்லார், அறிவிலாதார்” என்ற திருக்குறள்தான் ஞாபகம் வருகிறது.

இன்றையக் கல்வி நன்னெறியையோ, நடைமுறை வாழ்க்கையையோ கற்றுத் தராதது மிகப் பெரும் குறைதான். அதற்குத் தக நமது கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டும்.


கல்வி-கேள்விகள். கேள்வி 9

(9) மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? கல்வி முறையினால் இன்றைய மாணவர்கள் படைப்புத் திறன் குன்றியவர்களாகவும், குழந்தைகளின் விளையாட்டு, சிந்தனை, மனித உறவுகள் என எதற்குமே அவகாசம் தராத வகையில் பளுவான பாடத்திட்டம் அவசியமா?

மனிதனின் ஒருங்கிசைந்த ஆளுமை வளர்ச்சியை உருவாக்குவதே கல்வி. முழுமையான மனிதனை உருவாக்குவதே கல்வி. தனது பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்ல சமூக மனிதன் ஆகவும் கற்றுக் கொடுப்பது கல்வி. பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ வழிசெய்வது கல்வி. அது இல்லாமற் போனதால்தான் இன்று போட்டித் தேர்வுகளில் தோல்வியுறுபவர்கள் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம்.

மொழியைக் கருவியாக நோக்குகின்ற பார்வை இப்போது பெருகிவிட்டது. அதனால் மொழிப்பாடங்கள் பயனற்றவை என்ற நோக்கு ஏற்பட்டுவிட்டது. உண்மையில் மொழியின் வாயிலாகவே மனிதன் சிந்திக்கக் கற்றுக் கொள்கிறான், பண்பாட்டை உணர்கிறான், அறநெறி அவனை அறியாமல் அவன் உள்ளத்தில் குடிகொள்கிறது. எனவே சிறு வயதில் மொழிப்பாடம் மிகவும் அவசியம். அதற்குக் கூடுதலான இடம் தரப்பட வேண்டும்.

வேலை ஒன்றை அடைவது, பணம் சம்பாதிப்பது – இதற்கு மட்டுமே கல்வி என்று நமது நோக்கம் குறுகிப் போனதால், ஆளுமையை வளர்ப்பது கல்வி என்பதை மறந்தோம். ஆளுமை சரியான முறையில் வளர, சிறுவயதிலிருந்தே தக்க விளையாட்டு அவசியம். (போட்டிகள் முக்கியமற்றவை). போட்டித் தேர்வுகளும் தேவையற்றவையே. நல்ல கல்வி முறை மனப்பாடத்தை ஊக்குவிக்காது, சிந்தனைத் திறனையும் படைப்பூக்கத்தையும் தூண்டுவதாக மட்டுமே இருக்கும்.
இன்றைய பார்வையாதிக்கத் தொடர்புமுறை, குழந்தைகளை எப்போதும் கைப் பேசி, இண்டர்நெட், கணினி என்று அலைபவர்களாக, அவற்றின் முன் மணிக் கணக்காக உட்காருபவர்களாக ஆக்கிவிட்டன. இதனால் மனித உறவு குன்றிப் போகிறது, சிதைந்து போகிறது. வணிக நோக்கு மட்டுமே வளர்கிறது. இன்றைய வணிகமுறை வாழ்க்கையில், உலகமயமாக்கலில், வளரும் நாடுகள் பொருளாதார ரீதியாக நசுங்குகின்றன. தேவையற்ற பொருள்கள் திணிக்கப் படுகின்றன. நமது பண்பாட்டிற்கேற்ப நாம் வாழ்ந்து வந்த முறையும் அதற்கு நாம் பயன்படுத்திய தொழில், பண்பாட்டு முறைகளும் அதற்கேற்ப இருந்த கல்விமுறையும் மாறிப் போயுள்ளன.


கல்வி-கேள்விகள். கேள்வி 8

(8) இப்போதையப் பாடத்திட்டம் நமது மரபு சார்ந்த பெருமைகளைத் தெரியப்படுத்தாமல் அந்நிய வரலாறுகளை அதிகம் வெளிச்சம் போடுவது ஏன்?
நாம் இன்னும் அடிமைகளாக இருப்பதுதான் காரணம். வாஸ்கோட காமா வந்து இந்தியாவைக் “கண்டுபிடித்தார்” என்றுதானே கற்பிக்கிறோம்? அப்படியானால் அதற்கு முன்பு இந்தியா இல்லையா? மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிந்துசமவெளிக் காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவந்த நம் மக்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கல்வியும் பெருமையும் கலாச்சாரமும் என்ன ஆயிற்று? அஜந்தா எல்லோராக்களும் ராஜராஜன் கோயில்களும் நமது கட்டடக்
கலையை உலகிற்கு அறிவிக்க வில்லையா?

சுருக்கமாகச் சொன்னால், முதலில் வடநாட்டினர் ஆங்கிலேயரின் பெருமையைத் தலையில் சுமப்பவர்களாக ஆனார்கள். இதற்கு நல்ல உதாரணம் ராஜாராம் மோகன் ராய். தெற்கிலுள்ள நாம் வடநாட்டினரின் பெருமையையும் சேர்த்துச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டோம். ஆனால் சற்றே (இந்திய) மன்னர்களின் ஆட்சிப் படங்களைக் கூர்ந்து பாருங்கள். அசோகனின் பேரரசு, குப்தர் பேரரசு என்று எந்த வடநாட்டுப் பேரரசாவது தமிழ்நாட்டை உள்ளடக்கி இருக்கிறதா என்று? முதன்முதலில் தமிழ்நாட்டைத் தந்திரமாகக் கைப்பற்றியவரும் தென்னகம் என்ற கற்பனை ஒருமையின் பகுதியாக ஆக்கியவரும் தெலுங்கர்களே. பிறகு ஆங்கிலேயர்கள்.

1310ஆம் ஆண்டு மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழ்ந்ததிலிருந்து நாம் அடிமைப் பட்டுவிட்டோம். எழுநூறு ஆண்டுகள் அடிமை வாழ்வு நம்மை அடிமை மனப்பான்மையில் ஆழத் தள்ளிவிட்டது. இன்றும் உண்மையான ஜனநாயகம் நம்மிடையில் இல்லை, நிலப்பிரபுத்துவ மேன்மைகளே உள்ளன. வெகுமக்கள் அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள். கல்விதான் இவர்களை உண்மையில் அடிமைத் தளையிலிருந்து மீட்டிருக்க வேண்டும்.

நம்மை அடிமைகளாக்கிய கிளைவ் பிரபு இப்படிச் செய்தார், மெக்காலே பிரபு இன்னதைச் செய்தார் என்று வரலாறு எழுதும் நாம், அக்பர் தீன் இலாஹி உருவாக்கினார், ஔரங்கசீப் செருப்புத் தைத்தார் என்று முஸ்லிம்களையும் பாராட்டும் நாம், நமது சொந்த மன்னர்களையே கரிகாலன் கல்லணை கட்டினான் இராசராசன் தஞ்சையில் பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றெல்லாம் ஒருமையில் கேவலப்படுத்தி எழுதுகிறோம்.

நம் அரசியல் தலைவர்களை மலர் கிரீடம், வாள் தந்து போற்றுவதும், அரியணை ஏறிவிட்டார், கோட்டையைப் பிடித்துவிட்டார் என்பதும், நம் பணத்தில் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கும் நடிகர்கள் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், நீதிபதிகளையும் நீதி ‘அரசர்கள்’ என்பதும், மேடையில் ஏறிவிட்டால் எவனையும் இவனைப் போல உண்டா என்று புகழ்வதும் நம்மை அறியாமல் நமக்குள் குடி கொண்டுள்ள நிலவுடைமைக்கால அடிமை மனப்பான்மையைத்தான் காட்டுகின்றன.

உண்மையில் வரலாற்றுப்பாடம், படிநிலையில் அமைய வேண்டும். நமது வட்டார வரலாறு சிறுவயதிலும், தமிழக வரலாறு அடுத்த நிலையிலும், இந்திய வரலாறு அதற்கும் அடுத்த நிலையிலும், உலக வரலாறு, அந்நிய வரலாறுகள் இறுதி நிலையிலும் கற்பிக்கப்பட வேண்டும். (புவியியலும் அதுபோலத்தான். முதலில் நம் வட்டாரப் புவியியல், பிறகு தமிழகப் புவியியல், பிறகு அடுத்த மாநிலங்களின் புவியியல், இறுதியாக இந்திய, உலகப் புவியியல்.)

அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும்விட எந்த நூலும் உலக அறிவையும் நடத்தை முறையையும் புகட்டிவிடவில்லை. சங்க காலத்தில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையை அன்புகூர்ந்து அக்காலத்தில் பிறமொழிகளில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள், கல்வியில் நாம் எவ்வளவு உயர்வு பெற்றிருந்தோம் என்பது தெரியும். “உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்…” என்ற புறப்பாடலைப் படித்துப் பாருங்கள், எவ்விதப் பண்பாட்டில் நாம் வாழ்ந்தோம் என்பது தெரியும்.

நமது அடிமை மனப்பான்மையாலும் மூட நம்பிக்கையாலும் நமது பல்துறை நூல்களையும் தழலுக்கும் நீருக்கும் கொடுத்தோம். நமது பழங்காலப் பண்பாட்டையும் கலைகளையும் நோக்கும் எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்க, அடிமை நோக்குடன் பாடப்புத்தகங்களை உருவாக்குவது எதற்காக?


கல்வி-கேள்விகள். கேள்வி 7

(7) எல்லைகளற்ற கல்வி வெறும் பொருளீட்டும் கருவியாக, கடைச் சரக்காகக் குறுகிப் போனது எவ்விதம்?

“கல்வி கரையில, கற்பவர் நாள் சில”, “ஆர்ட் ஈஸ் லாங், லைஃப் ஈஸ் ஷார்ட்” என்று பல மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. அதன் எல்லையற்ற தன்மையே அது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் காட்டுகிறது. அதாவது இலக்கியக் கல்வி மட்டுமோ, வேதக் கல்வி மட்டுமோ, வணிகக் கல்வி மட்டுமோ கல்வி அல்ல. இன்று இப்படிக் குறுக்கி நோக்கும் பார்வை ஏற்பட்டுள்ளது. நன்கு விவசாயம் தெரிந்தவனின் பயிர்வளர்க்கும் கல்வியை (உண்மையில் அதுதான் நமக்கு உணவளிக்கிறது) எவரும் பாராட்டுவதில்லை, மாறாகப் படிக்காதவன் என்று ஏளனம் செய்கிறோம்.

அதாவது வெறும் எழுத்தறிவை, மனப்பாடத்தை மட்டுமே கல்வி என்று குறுக்கிவிட்டோம். ஒவ்வொரு தொழிலும் ஒரு துறைக் கல்விதான்.
சமையலைக் கலை என்று பாராட்டும் நாம் அக்கலையைக் கற்ற பெண்களைக் கற்றவர்களாக நோக்கியிருக்கிறோமா? அதற்கும் கேடரிங் டெக்னாலஜி படித்து தலையில் முழநீளம் தொப்பியை வைத்துக் கொண்டுவந்தால் வியப்பு ஏற்படும். கேட்ட தொகையைத் தருவோம். அதையே நம் ஊர் திருமணச் சமையல்காரர் வாசனையிலேயே அறிந்து “ஒரு பிடி உப்புப் போடு” என்று சொல்லும்போது அதைப் பாராட்டுவதில்லை. இந்தப் பார்வைதான் எல்லைகளற்ற கல்வியை வெறும் பொருளீட்டும் கருவியாக்கிவிட்டது. அர்த்தமின்றி நாலு எழுத்துகளைப் படித்துவிட்டு கோட்டும் சூட்டும் அணிந்து வருபவன் படித்தவன், அவனுக்கே உணவளிக்கும், தக்க பொருள்களை அளிக்கும் தொழிலாளி படிக்காதவன்.
அதிகார வர்க்கமும்- கலெக்டர், தாசில்தார், டிஐஜி… என வரும் அரசு அலுவலர்களும் வீணான பந்தா காட்டி, தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை மறந்து, இந்தப் பார்வையை ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டனர். தாசில்தார் பின்னால் போகும் ஒரு டவாலி காட்டும் பந்தா எவ்வளவு?

அடிப்படை எழுத்தறிவு யாவருக்கும் தேவைதான். அதுவே முழுத்தேவை அல்ல. ஓரளவு செய்தித்தாள் படிக்கும் அறிவு பெற்றதும் ஒரு பையன் “நான் பாத்திரம் செய்யும் கல்வியைக் கற்கிறேன்” என்றால் விடுவோமா? அதற்கு பதிலாக நீ பி.காம் படி, பி.எஸ்சி படி என்று வற்புறுத்துவோம். படித்துவிட்டு அவன் வேலையின்றித் திரிந்து சமூகத்துக்குப் பயனற்றவனாகவும் பிறகு எதிரியாகவும் கூட மாறலாம். மனநிலை சிதைந்து வாழ்க்கை கெடலாம். அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

கல்வி பரந்துபட்டது, தொழிற் கல்வியும் கல்விதான், எதைக் கற்றாலும், எத்தொழிலைச் செய்தாலும் வாழ்க்கையை நன்னெறியில் நடத்துவது ஒன்றே குறிக்கோள் என்பதை மறந்து விட்டோம். இளமையில் செருப்புத் தைத்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் என்றால் பாராட்டும் நாம், அந்தக் கதையைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரும் நாம், செருப்புச் செய்யும் தொழிலில் நம் பிள்ளைகளை இறக்கி விடுவோமா? அதற்கு சாதி, குலத்தொழில், தொழிலில் உயர்வுதாழ்வு நோக்குதல், என எத்தனையோ குறுக்கீடுகள். சக்கிலியன்தானே செருப்புத் தைக்கவேண்டும், நம் பையனா தைப்பது என்று சாதி பார்ப்போம்.
காந்தியின் அடிப்படைக் கல்வி, தாகூரின் கல்விமுறை, ராஜாஜியின் தொழிற் கல்வி எல்லாம் சிறந்தவையே. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு குலம்/சாதி என்று குலக்கல்வியாகச் சுருக்கிவிட்டதுதான் ராஜாஜிக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் கழிவுகளை அகற்ற, சுமக்க ஒரு சாதி, கடைத்தெருவுக்கு ஒரு சாதி என்று சாதிகளை வகுத்தமை நம்மை எல்லைக்குட்படுத்திவிட்டது.

இவற்றை எல்லாம் மீறி சாதிவேறுபாடு நோக்காத ஒரு சமூகம் அமையும்போது தான் கல்வியின் உண்மையான பெருமையும் தரமும் நமக்குத் தெரியும். வெறும் மந்திரங்களை ஒப்புவிப்பதோ, பிஏ பிஎஸ்சி பிஇ எம்பிபிஎஸ் என்று பட்டம் வாங்குவதோ மட்டும் கல்வியல்ல என்பது புரியும். உண்மையில் இன்றுள்ள மருத்துவர்களையே கேட்டுப்பாருங்கள், அவர்களது பாட்டிகளுக்குத் தெரிந்த கைவைத்தியம் எத்தனையோ நோய்களை எளிதாகக் குணமாக்கியிருக்கிறது என்று அவர்களே சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறுநோயை குணப்படுத்த அவர்களே ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்குவார்கள்.
அப்படியானால் எங்கிருக்கிறது கல்வி என்று மனத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். சாதி வேறுபாடு பார்க்காதீர்கள். நம் குழந்தைகளுக்கு எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அந்தக் கல்வியை அளிப்பது நமது கடமை. அதன் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஆளுமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் முழுமையை அவர்கள் அடைய வேண்டும்.


கல்வி-கேள்விகள். கேள்வி 6

(6) நம் சமுதாயத்தில் இன்று கல்விக்குத் தவறான வகையில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

ஆம். ஒருவகையில்.
கீழ்த்தட்டு மக்களுக்குத் தேர்ந்தெடுத்தல் (சாய்ஸ்) என்பது இல்லை. மிகக் கீழ்த்தட்டு மக்களுக்குப் படிப்பு என்பதைவிட சிறுவயதில் வேலைக்குச் செல்வதே (ஓட்டல்களில் மேசை துடைப்பது, தட்டுக்கழுவுவது, கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் டீ வாங்கி வருவது…, கிராமப் புறமாக இருந்தால் மாடுமேய்ப்பது, சுமை தூக்குவது…) முக்கியம். இந்த எண்ணிக்கையினர்தான் நமது சமூகத்தில் (ஏறத்தாழ 20 சதவீதம்) உள்ளனர். இவர்களைப் பற்றி நாம் (அரசு உள்பட) என்றும் கவலைப்பட்டதே இல்லை. அவர்கள் முடிந்தவரை, நாலாவதோ, ஐந்தாவதோ படித்துவிட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். (இங்கு கேட்கப்படும் கேள்விகள்கூட நடுத்தர வர்க்கத்தினர் பார்வையில் உள்ளனவே தவிர, கீழ்த்தட்டு மக்களின் பார்வையில் அறவே இல்லை.) இன்னும் சிறார்-உழைப்பு (சைல்ட் லேபர்) நம் நாட்டில் நீக்கப்படவில்லை.
பெரும்பாலும் அரசினர் பள்ளிகளில் படிக்கும் பிற கீழ்த்தட்டு மக்களுடைய குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது எந்தப் படிப்பை கல்வி நிர்வாகத்தினர் தருகின்றார்களோ (அது பி.ஏ. பொருளாதாரமோ, இலக்கியமோ, பி.எஸ்சி. தாவரவியலோ எதுவாயினும்) அதைப் படித்தாக வேண்டும். இதையெல்லாம் தாண்டி இலட்சிய நோக்குடன் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது மிகக் குறைந்த சிலரால்தான் முடியலாம்.
மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை சர்ச் பார்க் முதலிய எவ்விதப் பள்ளிகளிலும் படிக்கவைக்க முடியும். அவர்களுக்குக் கல்வி என்பது பொழுதுபோக்கு. தான் எதைப் படிக்கவேண்டும் என்பதைவிட அவர்களுக்கு அடுத்து தங்கள் வணிகத்தை அல்லது தொழிலை கவனித்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படைக் கல்வியும் ஆங்கிலப் பேச்சும் தோரணையும் இருந்தால் போதுமானது.
நடுத்தர மக்களுக்குத்தான் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால் வேலைகிடைக்கும் என்ற பெரிய கேள்வி முன்நிற்கிறது. அதற்குப் படிப்பு மட்டும் போதாது, ஆங்கிலப் பேச்சு நன்றாக வர வேண்டும், மேல்தட்டு மக்களுடைய தைரியமும் தோரணையும் வரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்காக எவ்வளவு செலவு செய்தாயினும் சிறந்த பள்ளி ஒன்றில் (வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகள் முதலியன) முதலிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“தவறான முக்கியத்துவம்” தருபவர்கள் இவர்கள்தான்!
சான்றாக, 2000ங்களின் தொடக்கத்தில் கணினிப்படிப்பு முடித்தவுடன் மிக அதிக ஊதியம் கிடைக்கிறது என்ற நினைப்பில் எல்லாரும் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்தார்கள். அதற்குத் தக, பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. சந்தர்ப்பவாத முதலாளிகளும் அரசியல்வாதிகளும் நிறையக் காசு பார்த்தார்கள். இப்போது கணினிப் பொறியியல் படித்தால் வேலை இல்லை என்றபோது அந்தக் கல்லூரிகள் மூடப்படுகின்றன. அதேபோல் ஒருசமயம் எம்.பி.ஏ. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்போது அது குறைந்துவிட்டது. இப்போது பி.காம் படிப்பு படித்தால் வாய்ப்பிருக்கிறது என்று எல்லாரும் அதன்பின் ஓடுகிறார்கள். ஆக, நடுத்தர வர்க்கத்தின் தவறான மனப்பாங்குதான் கல்வியின் அதீத முக்கியத்துவங்களையும் நிர்ணயிக்கிறது. ஆங்கிலவழிக் கல்விக்காகத் தாய்மொழி வழிக் கல்வியை அறவே ஒழித்தவர்களும் இவர்களே.
நடுத்தர வர்க்கத்தின் மனப்பான்மைதான் மாறவேண்டும். முதலில் எதைப் படித்தாலும் நாம் நமது சுய உழைப்பினாலும் தைரியத்தினாலும் முயற்சியாலும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற தைரியத்தைப் பிள்ளைகளுக்கு நமது நடுத்தர வர்க்கத்தினர் உருவாக்குவது இல்லை. இத்தனைக்கும் அயல்நாடுகளில் மனப்பாடமற்ற செயல்வழிக் கல்வி எவ்விதம் அளிக்கப் படுகிறது என்பதை அறிந்தவர்கள் அவர்கள்தான்.