விளைவுவாதமா, கடமைவாதமா?

விளைவுவாதமா, கடமைவாதமா?

அண்மையில் ஆந்திராவில் ஒரு குற்றத்திற்காகச் சில குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் கொலை செய்யப்பட்டனர். கொன்ற போலீஸ்காரர்களுக்குப் பெரிய பாராட்டு கிடைத்தது. பொதுமக்களுடன் சேர்ந்து, ஆந்திர அமைச்சர்கள் முதல் தமிழக அமைச்சர்கள் வரை இந்த என்கவுண்டர் கொலையைப் பாராட்டினர். ஆனால் ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இதை எதிர்த்தனர். இந்த நிகழ்ச்சி நமது மரபில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இந்தியச் சிந்தனை மரபில் நீதி-நியாயம் என்ற இரண்டு உள்ளன. உதாரணமாக, குற்றவாளிகளை போலீசார் தண்டிக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான், தகுந்த நீதி கிடைத்துவிட்டது என்று பலரும் அவர்களைப் பாராட்டுகின்றனர்.

ஆனால் கொல்லப்பட்டவர்களில் நிரபராதியும் இருந்திருக்கலாம், அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பின் அவர்கள் குடும்பம் என்ன ஆகும், மேலும் இத்தகைய தண்டனை குற்றங்கள் நிகழாமல் நிறுத்திவிடுமா, போலீஸ் நீதியைக் கையில் எடுக்கலாகுமா, குற்றவாளிகளின் பின்னணி வலுவானதாக இருந்தால் இப்படி நிகழுமா, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக செம்மரம் கடத்தியதாக இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது) என்கவுண்டர் நியாயம் ஆகுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவை நியாயத்தின் பாற்பட்டவை.

நீதியைவிட நியாயம் முக்கியமானது என்பது என் கருத்து. இதற்காக நாம் பழைய இதிகாசமான பாரதக் கதையை நோக்கலாம் என்று நினைக்கிறேன். மகாபாரதத்தில் பகவத்கீதை முக்கியமான பகுதி. அதில் நடக்கும் உரையாடல் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

கதையின்படி, பாண்டவர்கள் நேர்மைமிக்க அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களின் தலைவன் யுதிஷ்டிரன் (அர்ஜுனனின் அண்ணன், அரியணைக்கு சட்டபூர்வ வாரிசு) ஒருபுறம். மறுபுறம், பாண்டவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான கெளரவர்கள். அவர்கள் தவறான முறையில் பாண்டவர்களுக்குரிய அரசைக் கைப்பற்றியவர்கள். இந்த இதிகாசப் போரில், இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரசக் குடும்பங்கள் பல ஏதேனும் ஒரு பக்கத்தில் சேர்ந்துள்ளன. அவற்றின் ஆடவர்களில் நல்ல உடல்திடம் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலோர் படைகளின் இருபுறமும் உள்ளனர். பாண்டவர் களின் பக்கத்தில் உள்ள மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அர்ஜுனனின் தேர்ச்சாரதி கிருஷ்ணன். அவன் கடவுளின் அவதார வடிவமாக நோக்கப் படுகிறான்.
அர்ஜுனன்-கிருஷ்ணன் இடையில் நடக்கும் விவாதத்தின் வலிமை இதிகாசக் கதைக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அது அதிக அளவு ஒழுக்கம் சார்ந்த, அரசியல் சிந்தனைகளையும் தூண்டியுள்ளது. அதனால்தான் இங்கு அதை நோக்குகிறோம். விவாதத்தின் உணர்ச்சிகரமான இயல்பு சாதாரண மக்களையும் வசப்படுத்துகிறது. மேலும் மத, தத்துவ விசாரங்களை யும் ஈர்த்துள்ளது.

அர்ஜுனனும் கிருஷ்ணனும் இரு பக்கமும் உள்ள சேனைகளை நோக்குகிறார்கள். போரில் ஈடுபடுவது தனக்கு அவசியம்தானா என்ற தீர்க்கமான சந்தேகத்தினை அர்ஜுனன் வெளியிடுகிறான். தங்கள் தரப்பு நியாயமானது என்பதிலோ, இது செய்யவேண்டியதொரு நேர்மையான போர் என்பதிலோ, தனது பக்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதிலோ அவனுக்குச் சந்தேக மில்லை. ஆனால் போரில் மிகுந்த அளவு மரணம் நிகழும் என்பதை அவன் உணர்கிறான். தானே நிறைய எண்ணிக்கையிலான பேர்களைக் கொல்ல வேண்டி வரும் என்பதும் அவன் கவலை. மேலும் போரில் ஈடுபட்டு இறக்கப் போகின்ற பெரும்பாலானோர், (விசுவாசத்தினாலோ, நட்பினாலோ, வேறு காரணங்களாலோ) குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர உடன்பட்டு வந்தவர்கள் என்பதற்கு மேல் குறிப்பாகத் தீமை எதையும் செய்தவர்கள் அல்ல.

அர்ஜுனனின் கவலையில் ஒரு பகுதி நிகழப் போகின்ற படுகொலைகளால் ஏற்படப்போகும் பேரழிவிலிருந்து எழுகிறது. மற்றொரு பகுதி, அவனே செய்யப் போகின்ற கொலைகள் பற்றியதாக, தான் அன்பு செலுத்துகின்ற, தனக்கு நெருக்கமான பலரையும் கொல்லப் போவது பற்றியதாக இருப்பதால் ஏற்படுகிறது.

போரிடவும் கொலைசெய்யவும் தனக்கு விருப்பமில்லை என்று அர்ஜுனன் சொல்கிறான். கெளரவர்கள் பறித்துக் கொண்ட நாட்டை அவர்களே ஆளவிட்டுவிடலாம், போரின் தீமையைவிட இது குறைந்ததாகும் என்று சொல்கிறான். கிருஷ்ணன் இதற்கு எதிராகப் பேசுகிறான். அவனது எதிர்வினை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்வதன் முதன்மை பற்றியதாக அமைகிறது. இந்திய மத, ஒழுக்க, தத்துவ விவாதங்களில் திரும்பத் திரும்பப் பேசப் படுகின்ற பிரச்சினை இது. பாண்டவர்களின் கட்சி சார்ந்த ஆதரவாளன் என்ற நிலையிலிருந்து கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு (விசுவரூப தரிசனத்தின் வாயிலாக) மெதுவாக கிருஷ்ணன் மாறுகிறான். அதனால் கீதை இந்து இறையியல் சார்ந்த ஒரு பெரிய ஆவணமாக மாறிவிட்டிருக்கிறது.

என்ன வந்தாலும் சரி, அர்ஜுனன் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறான் கிருஷ்ணன். போரிடும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதில் என்ன விளைவு ஏற்பட்டாலும் சரிதான். ஒரு பெரும் வீரன், படைத் தலைவன் என்ற முறையில் அவனை அவன் தரப்பினர் சார்ந்திருக்கிறார்கள். எனவே அவன் தன் கடமையில் தளரக்கூடாது. கிருஷ்ணனின் கடமை சார்ந்த, ஆனால் விளைவு சாராத, தத்துவம் பல நூற்றாண்டு களாக ஆழமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது.

இந்த விஷயத்தில் கடமை என்பது அர்ஜுனன் ஒரு பெரிய வன்முறைப் போரில் ஈடுபடுவது. நியாயமாக அதை அஹிம்சை போதகரான காந்தி ஆதரிக்த்திருக்கக்கூடாது. ஆனால் அவரும்கூட “விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்” என்கின்ற கிருஷ்ணனின் வார்த்தைகளால் எழுச்சி கொண்டு கீதையை அடிக்கடி மேற்கோள் காட்டவும் செய்தார். இப்படிக் கிருஷ்ணனின் வாதங்களைப் பாராட்டுவது உலக முழுவதும் ஒரு நீடித்த நிகழ்வாக உள்ளது.
அர்ஜுனன் வாதங்கள் தவறா? ஒரு நேர்மையான, பயனை எதிர்பார்க்காத கடமையைச் செய்வது என்பது, தான் நேசிக்கும் மக்கள் உள்ளிட்ட பிறரைக் கொல்லக்கூடாது என்ற காரணத்தைவிட முக்கியமானதா? சண்டையிடாமல் மறுப்பது அர்ஜுனன் நோக்கிலிருந்து நிச்சயமாகச் சரியானது என்பது மட்டுமல்ல, கிருஷ்ணன் கவனம் செலுத்திய விஷயங்களைவிட அர்ஜுனன் போரிலிருந்து விலகுவதற்கு எதிரான வாதங்கள் பல இருந்தன.

குருட்சேத்திரப் போர் அன்றைய இந்திய மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது. எனவே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய பெரிய அளவு விவாதம் தேவை. என்ன வந்தாலும் கடமையைச் செய், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே போன்ற எளிய விடை போதாது. இந்த வகையில் ஒரு மதநூல் என்ற வகையில் கீதை கிருஷ்ணனின் சார்பாகவே பேசுகிறது. ஆனால் அர்ஜுனன் கவலை முக்கியமானது. அர்ஜுனனின் ஆழ்ந்த சந்தேகங்களுக்கு நியாயம் இருக்கிறது. மகாபாரதம் பெருமளவு ஒரு துன்பியலாகத்தான் முடிகிறது. ‘நேர்மையான’ காரணத்துக்காகச் சண்டை யிட்டாலும் வெற்றியைத் தொடர்ந்து கவலையும் துன்பமும்தான் விளைகின்றன.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுப் படைக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் ஓப்பன்ஹீமர், கிருஷ்ணனின் “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்” என்ற வாதத்தினால்தான் கவரப் பட்டதாகச் சொல்கிறார். அணுகுண்டின் விளைவுகளைப் பார்த்த பிறகு, அவர் வருத்தப்பட்டிருக்கிறார். நீதியைவிட நியாயம் முக்கியமானது.

நமது ஒழுக்க, அரசியல் சிந்தனைகளில் உலக மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது என்பது அர்ஜுனனது நம்பிக்கை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு, நடக்கப்போகின்ற விஷயங்களின் விளைவுகளை அறவே புறக்கணித்துவிட்டுத் தனது பயன்சாராத கடமையைச் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணனின் போதனை.

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் தரப்பு நீதியின் பாற்பட்டது. அர்ஜுனனின் வாதங்கள் நியாயத்தின் பாற்பட்டவை. அர்ஜுனனின் வாதங்கள் மனித உயிர்களின் முக்கியத்துவம் பற்றியவை. தான் செய்யும் செயலின் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்கிறான் அர்ஜுனன். என்ன நிகழ்ந்தாலும் தான் செய்யும் செயல்களின் விளைவு களைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஒருவன் தன் கடமையைச் செய்யவேண்டும் என்கிறான் கிருஷ்ணன். அர்ஜுனனின் வாதங்களை விளைவுவாதம் அல்லது பயன்நோக்கு வாதம் என்று சொல்லலாம். கிருஷ்ணனுடைய கடமைவாதம் எனலாம். விளைவுவாதமா, கடமைவாதமா என்பதில் பகவத்கீதையில் கடமைவாதம் ஜெயித்தாலும் விளைவுவாதமே முக்கியம் என்பதை அனுபவம் காட்டுகிறது.


ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்

ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்—ஒரு குறிப்பு

சுதந்திரம், விடுதலை, தற்சார்பு நிலை, மக்களாட்சி, குடியரசு

நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம் அல்லது பெற்றோம் என்றுதான் பெரும்பாலும் யாவரும் எழுதுகிறார்கள். சுதந்திரம் என்ற வடமொழி சார்ந்த, ஆனால் தமிழில் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூன்று சொற்கள் உள்ளன. லிபர்ட்டி, ஃப்ரீடம், இண்டிபெண்டென்ஸ் என்பன அவை.

தமிழில் விடுதலை என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் சுதந்திரம் என்பதிலிருந்து சற்றே வேறுபட்டது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்தது, விடுதலை அடைந்தது என்ற பயன்பாடுகளில் வேற்றுமை இல்லை.
ஆனால் ஒருவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார் என்று சொல்வது போல சிறையிலிருந்து சுதந்திரம் பெற்றார் என எவரும் எழுதுவதில்லை.
ஆங்கிலப் பயன்பாட்டில் “இந்தியா அட்டெய்ன்ட் லிபர்ட்டி” என்று பெரும்பாலும் எழுதுவதில்லை.
“இந்தியா அட்டெய்ன்ட் ஃப்ரீடம்” என்பதிலோ
“இந்தியா காட் இன்டிபென்டென்ஸ்” என்பதிலோ தவறில்லை. இதற்கு இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள அர்த்த எல்லைகள்தான் காரணம்.
லிபர்ட்டி என்பது தானே இயல்பாக சுதந்திரமாக இருக்கும் நிலை. அது ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதல்ல என்று கருதுகிறேன். ஐரோப்பியர் வருகைக்கு முன் இந்தியா உட்படப் பல நாடுகள் அப்படித்தான் தாங்களே சுதந்திரமாக இருந்தன. அவர்கள் வந்துதான் அடிமைப் படுத்தினார்கள். மேலும் தாங்களே அந்த நாடுகளைக் கண்டுபிடித்ததாகவும் பெருமையடித்துக் கொண்டார்கள்.

லிபர்ட்டி என்ற சொல்லின் பயன்பாட்டைப் பாருங்கள். “ஐ ஆம் அட் லிபர்ட்டி டு டூ சம்திங்”. அது ஒரு இடம். ஐ ஆம் அட் ஹோம் என்பது போல ஐ ஆம் அட் லிபர்ட்டி. “நான் ஏதோ ஒன்றைச் செய்யும் (செய்வதற்குச்) சுதந்திரத்துடன் இருக்கிறேன்”. லிபர்ட்டி, எதைச் செய்வதற்கு என்பதோடு தொடர்புடையது.
ஃப்ரீடம் என்பது வேறு ஏதோ ஒன்றிலிருந்து பெறுகின்ற விடுபாடு அல்லது விடுதலை. குடிப் பழக்கத்திலிருந்து ஒருவர் விடுதலை அடையலாம், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு விடுதலை அடையலாம். அது எதிலிருந்து—என்பதோடு தொடர்புடையது. ஆனால் அதை நாமேதான் சிரமப்பட்டு அடைய வேண்டும். “அட்டெய்ன்” என்ற சொல் (சிரமப்பட்டு அடைவது) அதற்கேற்றதாக உள்ளது.

லிபர்ட்டி என்ற சொல்லின் வேர் லிப்ரே என்ற ஃபிரெஞ்சுச் சொல். ஆனால் அதற்கும் கட்டற்ற நிலை, விடுபட்டநிலை என்றுதான் அர்த்தம். அர்த்தங்கள் ஒன்றாக இருந்தாலும் பயன்பாடுகள் இவற்றுக்கு வேறாக உள்ளன.
இன்டிபென்டன்ஸ் என்பது ‘டிபன்டன்ஸ்’-க்கு எதிர்ச்சொல். ‘டிபன்டன்ஸ்’ என்பது ஒன்றைச் சார்ந்திருக்கும் தன்மை. இன்டிபன்டென்ஸ் என்றால் அதைச் சாராத நிலை. சுயசார்புநிலை. நாம் இப்போது பல நாடுகளை நமது வர்த்தகத்திற்குச் சார்ந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் நமக்குச் சார்பற்ற நிலை இல்லை. “வி ஆர் நாட் இன்டிபென்டண்ட் இன் இகனாமிக் ஃபீல்ட். வி ஆர் டிபென்டன்ட் ஆன் அமெரிக்கா”. இண்டிபெண்ட்ன்ஸை அடைய வேண்டும், பெற முடியாது. அது ஒரு சாதனை (அச்சீவ்மெண்ட்).

மேலும் ஃப்ரீடம் பொதுநிலை, இண்டிபெண்டன்ஸ் தனிநிலை. உதாரணமாக, ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு, எழுத்துச் சுதந்திரம். ஆனால் இண்டிபெண்டன்ஸ் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் ஒரு தனிநபரது எழுத்து அல்லது பேச்சுப்பாணி, நடை.

இந்தியா ‘லிபர்ட்டி’ அடையவில்லை. அயல்நாட்டார் வருவதற்கு முன் இந்தியா என்பதும் இல்லை. தனித்தனி நாடுகள்தான் இருந்தன. அந்த நாடுகள் லிபர்ட்டி நிலையில் இருந்தன. அடிமைப்பட்ட இந்தியா, இங்கிலாந்திடமிருந்து ‘ஃப்ரீடம்’ பெற்றது, அதனால் ‘இன்டிபென்டன்ஸ்’ (தற்சார்பு) அடைந்தது என்பது வரலாறு.
லிபர்ட்டி இயல்பான இருப்புநிலை, ஃப்ரீடம் பிறரிடமிருந்து பெறுவது, இண்டிபெண்டன்ஸ் தான் எய்தவேண்டியது. ஆனால் மூன்றுமே தமிழில் சுதந்திரம்தான்.
இன்று நம்மிடம் இந்த மூன்றுமே இல்லை. நாம் விரும்புவதைச் செய்யுமாறு ‘சுதந்திரமாக’ இல்லை. “வீ ஆர் நாட் அட் லிபர்ட்டி”. சமூகத்திலிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல அடிமைத்தனங்களிலிருந்து நாம் விடுதலை பெறவில்லை.
சிந்திப்பதற்கும் செயல்படுவதற்குமான சுதந்திரமும் (ஃப்ரீடம்) இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் (ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன்) பறிக்கப்படுகிறது.

நாம் யாரையும் சாராத நிலையிலும் (இண்டிபெண்டன்ட் ஆகவும்) இல்லை.
இரண்டைப் பெற்றோம், மூன்றையும் இன்று இழந்து நிற்கிறோம் என்பது உண்மை.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாம் 1952இல் “ரிபப்ளிக்” நிலை அடைந்தோம். ரிபப்ளிக் என்பதற்கு மக்களாட்சி—அதாவது ஜனநாயகம், குடியரசு என்ற இரு அர்த்தங்கள் உள்ளன. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஆளுகின்ற தன்மை. அது பரந்துபட்ட பொருளுடையது. குடியரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களாட்சி நிறைவேற்றப் படுகின்ற தன்மை. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
உதாரணமாக அருந்ததி ராய் “ப்ரோகன் ரிபப்ளிக்” என்று ஒரு நூல் எழுதினார். அவர் மக்களாட்சி நொறுங்கியது என்கிறாரா, குடியரசு நொறுங்கியது என்கிறாரா?
குடியரசு நொறுங்கியது என்றால் இந்தியா குடியரசு நாடாக இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால் சுதந்திர நாடாக அது இருக்கலாம். உதாரணமாக பழங்கால அரசாட்சிகள் சுதந்திரமாகத்தான் இருந்தன, ஆனால் அவை குடியரசுகள் அல்ல.
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் நொறுங்கியது என்றால் மக்களை மக்களே ஆளும் தன்மை இல்லாமல் போய்விட்டது, அடிமைத்தனம் நிலவுகிறது என்று அர்த்தம். குடியரசு நொறுங்கியது என்றால் அதன் அடிப்படையான குடிமக்களாக இருக்கும் தன்மை (சிட்டிசன்ஷிப்) போய்விட்டது என்று பொருளாகும். இன்றைய இந்தியாவில் எது நொறுங்கியது, எது போய்விட்டது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.


From Rumi

What Is Poison ?
Rumi Replied With A Beautiful Answer : AnyThing Which Is More Than Our Necessity Is Poison. It May Be Power, Wealth, Hunger, Ego, Greed, Laziness, Love, Ambition, Hate, Or AnyThing.

What Is Fear ?
Non Acceptance Of Uncertainty. If We Accept That Uncertainty, It Becomes Adventure.

What Is Envy ?
Non Acceptance Of Good In Others. If We Accept That Good, It Becomes Inspiration.

What Is Anger ?
Non Acceptance Of Things Which Are Beyond Our Control. If We Accept, It Becomes Tolerance.

What Is Hatred ?
Non Acceptance Of Person As He Is. If We Accept A Person Unconditionally, It Becomes Love!


எண்ணுச் செய்யுள்

ஒன்று முதல் பத்துவரை

ஒன்றெனில் இவ்வண்டம், பிரபஞ்சம் உண்டு
இரண்டெனில் இருளும் அதில் உள்ள ஒளியும்
மூன்றெனில் மும்மலம் அது நீக்க வேண்டும்
நான்கெனில் நாற்புறம் சுற்றி நீ நோக்கு
ஐந்தெனில் ஐம்புலன் நாம் பெற்ற பேறு
ஆறெனில் நீர்மையும் நாம் போகும் வழியும்
ஏழெனில் எழுதலும் விழிப்புணர்வும் ஆகும்
எட்டெனில் எதையும் நினைத்தால் எட்டிடலாம்
ஒன்பதெனில் முழுமையும் புதுமையும் ஆகும்
பத்தெனில் உன்னை நீ பற்றிக் கொள்வாயே.

குறிப்பு:
1. அண்டம் = கோளவடிவம், பிரபஞ்சம் = நாம் வசிக்கும் இந்த அண்டப்பெருவெளி. சிலர் இதை மாயை என்பார்கள். அப்படியில்லை என்பதற்காகவே உண்டு என்ற சொல்.
2. முதலில் இருளை வைத்த காரணம், எங்கும் நீக்கமற நிறைந்தது இருள்தான். அதில் ஆங்காங்கு நட்சத்திரங்கள் முதலாக நாம் வைக்கும் விளக்குகள் வரை ஒளிப் புள்ளிகள் உள்ளன. ஓர் அறையில்கூட எங்கும் இருளே நிறைந்துள்ளது. விளக்கை ஏற்றினால் அந்த ஒளி இருளைச் சற்றே ஆங்காங்கு விலக்குகிறது.
3. மூன்று = மும்மலம், வழக்கமான ஆணவம், கன்மம், மாயைதான். ஆணவம் நீக்கப்பட வேண்டியது. யாருக்கும் ஆணவம் கூடாது. அது அழிவுக்கு வழி.
கன்மம், நல்லதோ, கெட்டதோ, நாம் செய்யும் செயலுக்குக் கிடைக்கும் பயன்.
மாயை என்பது திரிபுக் காட்சி–Illusion. ஒன்றை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளுதல்
4. நாற்புறமும் உற்றுநோக்க வேண்டும், அதனால் அறிவு வளரும் என்பது பொருள். நோக்குதல் என்றால் Observation. வெறுமனே பார்த்தல் அல்ல.
5. ஐம்புலனுக்கு அப்பால் ஒன்றுமில்லை. அனைத்து அறிவும் உணர்வும் அவற்றின் வழியே கிடைப்பது.
6. நீர்மை என்பது அன்பு, பரிவு, கருணை. ஆறு செல்வது போல நாம் நடக்கும் வழியுமாகும்.
7. ஏழு, எட்டு – அர்த்தம் தெளிவு.
8. ஒன்பது என்பது முழுமை. பழங்காலத்திலிருந்து ஒன்பதே முழுமை ‍பெற்ற நிலையாக, எண்ணாக இருந்தது. ஒன்பது = நவம், புதுமை என்பதும்.
9. பத்து = பற்று. பத்துப் பாத்திரம் என்பது போல. (மிச்சம் மீதிகள் பற்றிக் கொண்டுள்ள பாத்திரம்). யாரையும் ஒருவன் பற்ற வேண்டாம் (பற்றற்றானையும் கூட). உன்னை நீ பற்றிக் கொண்டால் போதும்.
இன்று பத்துவரை. இனி முடிந்தால் இச்செய்யுள் நூறுவரை செல்லும். அவ்வப்போது எழுதுவேன்.


கீழடி நமக்கு அளிப்பது என்ன?

தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிப்பவர்களுக்கு அவை பல காலத் தளங்களில் அமைந்தவை என்பது நன்கு தெரிந்த விஷயம். உதாரணமாக, புறநானூற்றில் கி.மு. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும், கி.பி. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும். தொல்காப்பியத்திலும் அ்வ்வாறே. கி.மு. 500 இல் எழுதப்பட்ட நூற்பாக்களும் உண்டு, கி.பி. 500இல் எழுதிச் சேர்க்கப்பட்ட நூற்பாக்களும் உண்டு. சங்க இலக்கியம் முழுவதும் ஏறத்தாழ அதிகபட்சமாக ஆயிரம் ஆண்டுகள் முதலாகக் குறைந்தபட்சம் ஐநூறு ஆண்டுகள் வரை காலவேறுபாட்டைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு. அதனால் சங்க இலக்கியங்களின் மேல் எல்லை ஏறத்தாழ குறைந்த அளவு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு (அதாவது இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்) என நிர்ணயிக்கலாம். அவற்றில் காணப்படும் நாகரிகமும் பண்பாடும் தமிழர்கள் வாழ்க்கையை இன்னும் குறைந்த அளவு ஓர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாகக் கொண்டு செல்லக்கூடியவை, அதாவது கி.மு. 1500 (இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) என்பதை தமிழர் நாகரிகத்தின் குறைந்தபட்ச எல்லையாகக் கொள்ளலாம் என்பது இன்றுள்ள ஆய்வாளர்கள் யாவருக்கும் தெரியும்.
அப்படியானால் கீழடி ஆய்வின் பயன் என்ன? அதன் காலம் ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கெனவே தமிழர் நாகரிகத்தின் பழமை பற்றி நமக்கிருக்கும் கருத்து மாறுபடப் போகிறதா? தமிழர் நாகரிகத்தின் காலத்தைப் பற்றிப் புதிதாக வெளிச்சம் கிடைக்கிறதா? இல்லை.
ஆனால் வரலாற்றுப் பெருமக்கள் இலக்கியங்களையும், இலக்கியத்திலிருந்து கிடைக்கும் தரவுகளையும் எல்லாம் இரண்டாம் நிலைத் தரவுகள் (செகண்டரி) என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு முதல்நிலைத் தரவுகள் என்பன கல்வெட்டுகள், கட்டட எச்சங்கள், ஆயுதங்கள், பானை ஓட்டு அல்லது கல்லில் பொறித்த எழுத்துகள், நடுகற்கள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் போன்ற தொல்லியல் பொருட்கள்தான். அந்த வகையில் கீழடி நமக்குத் தமிழர் நாகரிகத்துக்கான, சங்ககாலத்துக்குச் சற்று முந்திய காலப்பகுதிக்கான முதல்நிலைத் தரவுகளை அளிக்கிறது. அதுவும் மிகப் பெரிய ஒரு நகர நாகரிக அடிப்படையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. உண்மையில் இத்தகைய நகர அமைப்பை மொகஞ்ச தாரோவிலும் ஹரப்பாவிலும் கண்டுள்ளோம். ஆகவே அதன் தொடர்ச்சி இது என்பதையும் நாம் ஓரளவு உய்த்துணரலாம். கி.மு. 1500 அளவில் வந்த ஆரியர்களுக்கு நகர நாகரிகம், விவசாயம் எல்லாம் கிடையாது. ஆங்காங்கு மிகச் சிறிய குடிசைகளை அமைத்துக் கொண்டு மாடுமேய்த்து வந்தவர்கள் அவர்கள். எனவே தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதற்கான சான்றுகளையும் இது அளிக்கிறது.
ஆனால் ஏறத்தாழ இன்னும் ஆயிரம் ஆண்டு முற்பட்ட இதே போன்ற கட்டடக்கலை சார்பான அகழ்வாய்வுகள் கிடைத்தால் தமிழர் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை அறுதியிட்டே கூற முடியும். அதுதான் இன்று தேவையாக இருக்கிறது. ஒருவேளை மேலும் பல அகழ்வாய்வுகளைச் செய்தால் அப்படிப்பட்ட ஆதாரங்களும் கிடைக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்று காலக்கணிப்புக்கு போராடி வரும் நிலையில் நமது விளம்பரங்கள் மிக எளிதாகக் கருத்தேற்றம் செய்து வடநாட்டவரின் வீண் பெருமையைத் தூண்டி விடுகின்றன. உதாரணமாக இந்தியா முழுவதும் செல்கின்ற ஆயுர்வேதப் பொருள் (சோப்பு…) ஒன்றின் விளம்பரம், ஆயுர்வேதம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூசாமல் சொல்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் யார் வாழ்ந்தார்கள், ஆரியர்கள் அப்போது இந்தியாவில் புகவே இல்லையே, அப்படியானால் அந்தப் பழமையைத்தான் ஆயுர்வேதம் எடுத்துக் கொள்கிறதா போன்ற கேள்விகளுக்கு பதில்கிடையாது. யாரோ ஒரு சாமியார் (முனிவர்!) குழவியில் மருந்தை அரைப்பது போன்ற படத்தைப் போட்டு இது ஆயுர்வேதம், ஐந்தாயிரம், ஏன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லிவிட்டால் நம்புவதற்கு ஏராளமான கூகைகள் உள்ளன. மதத்தை எப்படியெல்லாம் திணிக்கிறார்கள்!


திருச்சி நாடகவிழா-முப்பதாண்டு நிறைவு

என்னுரை

சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்பு திருச்சியில் பாதல் சர்க்கார் நாடக விழா நடத்தப்பட்டது. பாதல் சர்க்கார் என்பவர் வங்கத்தில் மூன்றாம் நாடக அரங்கைக் கட்டமைத்த பெருமைக்குரிய, உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர், இயக்குநர். அவரிடம் முன்னமே 1981 வாக்கில் சென்னையில் நடை பெற்ற ஒரு பயிற்சி அரங்கில் திருச்சியிலிருந்து பேராசிரியர் ஆல்பர்ட், திரு. மனோகரன், திரு. கோவிந்தராஜன், திரு. சாமிநாதன் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள் பயிற்சி பெற்றிருந்தனர். பின்னர் பிறகொரு இந்திரஜித் உள்ளிட்ட பாதல் சர்க்கார் நாடகங்கள் சில திருச்சி நாடக அரங்கத்தில் அரங்கேற்றப் பட்டன. ஒருவகையில் இவற்றைக் கொண்டாடும் முகமாகவும், மேலும் தமிழ் நாடக அரங்கை முன்னே கொண்டு செல்லும் விதமாகவும் இந்த விழா 1989இல் நடத்தப்பட்டது. நாடகங்கள் பற்றிய கருத்தரங்குகளுடன், பாதல்சர்க்காரின் ஆறு நாடகங்கள் தமிழகத்தின் முதன்மையான நாடகக் குழுக்களால் அரங்கேற்றப்பட்டன.
இதன் நிகழ்வுகள் சரிவரப் பதிவுசெய்யப் படாமையால் கருத்தரங்க நூலாக இதனை வெளியிடும் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் ஒரு சில கட்டுரைகளையேனும் வெளியிட முடியும் என்று நம்புகிறேன்.
இவ்விழாவின் மூன்று நாட்களிலும் பங்கேற்று, இதனை மதிப்பிட்டுள்ள திரு. கோவைவாணன் (திரு. சு. துரை—கோவை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி, இப்போது ஓய்வு பெற்ற பேராசிரியர்) அவர்களின் கருத்துரையை இங்கே முன்வைக்கிறேன்.

Badal Sarkar Drama Workshop Invitation - Front

Badal Sarkar Drama Workshop Invitation - Back

 

கோவைவாணன் கருத்துரை 27-09-1989 

எல்லாக் கலைகளிலும் இரண்டுவிதமான போக்கு என்றும் இருந்து வருகிறது. ஒன்று மனிதனை வெறுமனே மகிழ்விப்பதையும், இருக்கும் சமுதாய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை நியாயப்டுத்துவதையும், வியாபாரத்தையும் நோக்க மாகக் கொண்டது. மனிதனைத் தற்போது உள்ள தளத்திலிருந்த அடுத்த தளத்திற்கு உந்திச் செல்வதாயும், சமூகத்தை உன்னதமான உயர்தளத்திற்கு எடுத்துச்செல்வதாயும் பெருமைகளையும் இலாபத்தையும் எதிர்பார்க்காததாயும் சிரமங்களும் தியாகங்களும் நிறைந்ததாயும் அமைந்திருப்பது இரண்டாம் வகைக் கலைகள். இது சிறுபான்மையோரால் சிறுபான்மையோர் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இவ்வகைக் கலைஞர்கள்தான் மனித மேன்மையையும் கலை யையும் காப்பாற்ற சிலுவை து£க்கியவர்கள்.
1989 செப்டம்பர் 22, 23, 24 மூன்று தினங்கள் திருச்சி து£ய வளனார் கல்லு£ரி யில் மேற்குறித்த இரண்டாம் வகை அற்புதம் நிகழ்ந்தது. இந்திய நாடக ஆசிரியர்களில் கவனத்திற்குரியவரான வங்காள நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் நாடக விழாதான் அது. சுமார் 350 பேர் கலந்துகொண்டார்கள் என்பது தமிழனின்மீது அவநம்பிக்கை கொண்டவர்களை யோசிக்கச் செய்தது.
இவ்விழா இரண்டு தன்மைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பொருத்தமே. ஒன்று, நாடகங்களை நிகழ்த்துவது. பின்னர் அது பற்றி விவாதிப்பது. இரண்டு, நாடகத்தளம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பது. பின்னர் அதை விவாதிப்பது. ஒருவழிப் பாதையாய் இல்லாமல் விவாதமும் நாடகமும் நிகழ்த்தப்பட்டு அது பற்றி விவாதிப்பதும் மிகச் சரியான நிகழ்முறை. அது இவ்விழாவில் சரியாகவே கையாளப்பட்டது. விவாதங்கள் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனைகள் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத் துவதாக அமைந்திருந்தது. விவாதங்களில் பங்கு கொண்டோரில் பரீட்சா ஞானி, அஸ்வ கோஷ், கோ. ராஜாராம், அம்ஷன் குமார், எம். டி. முத்துக்குமாரசாமி ஆகி யோர் குறிப்பிடத்தகுந்த கருத்துகளை முன்வைத்தனர். எஸ். ஆல்பர்ட், கோ. ராஜாராம், எம். டி. முத்துக்குமாரசாமி, வீ. அரசு, மு. ராமசாமி ஆகியோர் கட்டுரை வாசித்தனர். வீ. அரசு, எம். டி. எம். ஆகியோரின் கட்டுரைகள் கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாயின. இதுபோன்ற விமரிசனங்கள் உண்மையை நோக்கி, சரியான திசைவழியை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. சண்டைகள், உணர்ச்சிக் கொட்டல்கள், ஆவேசம், கட்சித் துதிபாடல் முதலியவற்றை விடுத்து விவாதங்கள் இன்னும் ஆரோகியமாக நடைபெறுவது தமழனுக்கு நலம் பயக்கும் என்பது கருத்தரங்க அனுபவமாயிருந்தது. ஆனாலும் சில கடுமையான விமரிசனங்களைக் கட்டுரையாளர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இது நிகழ்ந்தே தீரும். இதுபற்றிக் கட்டுரையாளர்களோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ வருத்தமோ கோபமோ கொள்ள வேண்டியதில்லை.
இவ்விழாவில் முக்கியமான பகுதி, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதுதான். பாதல் சர்க்காரின் ஆறு நாடகங்கள் ஆறு குழுக்களால் நிகழ்த்தப்பட்டன. ஆறு நாடகங்களை யும் தமிழாக்கம் செய்திருப்பவர் கோ. ராஜாராம்.
1. ஊர்வலம்
சென்னை பரீட்சா குழுவினர் இதை வட்டமான அரங்கில் நிகழ்த்தினர். வீட்டையும் தன்னையும் தன் பையனையும் தொலைத்துவிட்டு இவைகளைத் தேடி அலைபவனுக் குக் குறுக்கே நாளரு வரிசையும் பொழுதொரு கூட்டமுமாய் ஊர்வலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊர்வலங்கள் யாருக்காகவோ எதற்காகவோ நடத்தப்படு கின்றன. தனக்கான ஊர்வலம் எப்போது வரும் என்று காத்திருக்கிறான் எல்லாவற் றையும் தொலைத்துவிட்டுத் தேடுபவன். சொல்லப்பட்ட விஷயத்திலும் நிகழ்த்தப்பட்ட விதத்திலும் வெகுதீவிரத்தன்மையும் உண்மையும் வெளிப்பட்டன. பரீட்சா குழுவின் உழைப்புக்கு வெற்றியே கிட்டியது.
2. பிறகொரு இந்திரஜித்
சென்னை கூத்துப்பட்டறையினர் இதை மேடைநாடகமாக நிகழ்த்தினர். அமல், விமல், கமல் என்று சராசரி வாழ்க்கையின் முகமற்று உழன்று கொண்டிருக்கும் கூட்டத்தில் நிர்மல் சுயமுகத்தோடு இந்திரஜித்தாக வாழப் போராடித் தோற்றுப்போய் அமல், விமல், கமல், பிறகு ஒரு இந்திரஜித்தாக சராசரித்தனத்திற்கு வந்து சேர்வதுதான் கதை. இந்திரஜித் தன் சுயமுகத்தைக் காப்பாற்றிக்கொள்ள நிகழ்த்தும் போராட்டம் நம் ஒவ் வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. நாடகம் பிசிறு இல்லாமல் சுத்தமாகக் கலைவடிவம் ஆக்கப்பட்டிருந்தது.
3. இந்திய வரலாறு
ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் இந்தியா விடுதலை பெற்ற வரலாற்றையும் அதிகாரம் தரகர்கள் கையில் மாறியதையும் அரசியல், பொருளாதாரப் பார்வையில் மிகச் சரியாகவே நாடகம் சொல்கிறது. நாடக வடிவாக்கம் செய்வதில் கடினம் நிறையவே உள்ளது. இருபபினும் கடின முயற்சியில் நாடக உருவாக்கம் தந்திருந்தார்கள், மதுரை சுதேசிகள் குழுவினர். தொடர்ந்து நீளமான வசனங்கள், கூட்டமாகச் சேர்ந்து பல உரையாடல்கள் ஒலித்தமை நாடகத்தோடு நம்மை ஒட்டாமல் செய்துவிடுகிற அபாயம் ஏற்பட்டது. வசனங்கள், உடல் அசைவுகள் முதலியவை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட தாக இல்லாமல் போனதால் கலையாக்கத்தில் குறைபட்டுப் போனது. நிதானம் தேவை. ஒரே மூச்சில் நாடகத்தைக் கொட்டிவிட வேண்டும் என்பதுபோல் பட்டது. இருப்பினும் பரீட்சா ஞானி கூறியதுபோல், தன்னளவில் இது ஒரு வெற்றிப் படைப்பு தான்.
4. போமா
சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்களால், பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. கிராமத்தைச் சுரண்டிக் கொழுக்கும் நகரத்திற்கே மேலும் மேலும் அரசு கோடிகோடியாய்ச் செலவிடுவதையும் அதன் அபாயத்தையும் மனசில் பதட்டத்தையும் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் வெளிப்படுத்தியது இந்நாடகம். வட்டமான அரங்கில் நிகழ்ந்தது. காடு, மரம், கிராமம், விவசாய அழிப்பு என்பது மனிதன் தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் பிணக்குழி என்பதை எவ்வளவு அற்புதமாக உணர்த்திவிடுகிறது இந்நாடகம். பின்னணியில் கொடுக்கப்பட்ட மிருதங்க இசை இந்நாடகத்திற்கு மேலும் ஆழத்தையும் உணர்ச்சியையும் பரிமாணத்தையும் கூட்டியது.
5. மீதி சரித்திரம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியினரால் மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. சமகால மனிதனின் வாழ்க்கை யதார்த்தத்தை மேடையில் நிறுத்துகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கான சகல காரணங்களும் நம்மிடம் உண்டு. ஆனால் அதேசமயம் உயிரோடு வாழ்ந்தே தீரவேண்டிய உயர்காரணங்களும் கூடவே உண்டு. தற்கொலை செய்துகொண்ட ஒருவனிடம் “நீ ஏன் தற்கொலை செய்துகொண்டாய்?” என்று ஒருவன் கேட்பதும், அதற்கு அவன் நீ ஏன் இன்னும் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறாய்? என்று கேட்பதுமாக வாழ்வின் இருப்பு பற்றிய வினாத் தொடுக்கிறது இந்நாடகம். நிகழ்த்தப்பட்ட விதத்தில் இந்நாடகம் தோல்வி கண்டது. இந்நாடகத்தில் நடித்த நடிகர்கள் இத்தோல்விக்க இம்மி யளவும் காரணமாக மாட்டார்கள். ஒலிபெருக்கி ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட வில்லை என்று ஏற்பாட்டாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு நிம்மதி அடையமுடியாது. நீளமான, குறுகிய வசனங்களைக் கதாபாத்திரங்களிடம் பேசாமல், பார்வையாளர்களை நோக்கியே பேசிக்கொண்டிருப்பது பழைய சபா நாடகங்களில் பயன்படுத்தப்படும் தேய்ந்துபோன உத்தி. அதை இன்னும் பிடித்துத் தொங்கி நிகழ்வு களில் உயிரோட்டம் இல்லாமல் கேலிக்கூத்தாகப் போய்விட்ட அவலம் நிகழ்ந்தது. இதை சுயவிமரிசனத்தோடும் அடக்கத்தோடும் ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்த இந்நாடக இயக்குநர் அ. ராமசாமியின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இப்பள்ளியின் இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
6. ஸ்பார்ட்டகஸ்
மதுரை நிஜ நாடக இயக்கம் புல்வெளியில் வட்டமான அரங்கில் நிகழ்த்தியது. இந்த மூன்று நாள் நாடகத்தின் பெரிய சாதனை, கொடை இந்த நாடகம் எனலாம். உடல் மொழியை மிக ஆற்றலோடு பயன்படுத்திக் காண்போரைத் திகைக்கச் செய்துவிட்ட கலைத்தரமான படைப்பு. கி.மு. 71இல் ரோமப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த திராசிய கிளேடியேட்டர் ஸ்பார்ட்டகஸ் என்பவனைவைத்து உருவாக்கப்பட்ட நாடகம் இது. இன்னும் அடிமைகளாக இருந்துகொண்டிருக்கும் நமக்கும் இந்த அடிமைகளின் போராட்ட வரலாறு உத்வேகத்தை அளிக்கிறது. “இந்த மண்ணிலிருந்துதான் ஸ்பார்ட்ட கஸ் தோன்றினான். ஸ்பார்ட்டகஸ் அழிந்துவிட்டான். ஆனால் இந்த மண் இன்னும் இருக்கிறது” என்று நாடகமுடிவில் ஒலிக்கப்படுட்ம குரல்தான் எத்தனை அர்த்தமுள்ளது? இந்த நாடகத்திற்கு ஸ்பார்ட்டகஸ் கதாநாயகன் இல்லை. அடிமைகள் தான் கதாநாயகர்கள். ஸ்பார்ட்டகஸ் என்பது ஒரு கருத்தாக்கம், குறியீடு. ஒரு கருத்தியல் என்று கோ. ராஜாராம், அம்ஷன்குமார் ஆகியோர் சொன்ன கருத்துரைகள் மேலும் இந்த நாடகத்தை விளங்கிக்கொள்வதற்கு உதவியாய் இருந்தன. பார்த்தவர்க ளைப் பரவசப்படுத்திய ஸ்பார்ட்டகஸ் நாடகத்தின் இயக்குநர் மு. ராமசாமி நாடக முடிவில் கருத்துரை வழங்க வந்தபோது உணர்ச்சிவசப்பட்டதில் நியாயம் இருக்கிறது.
இந்த நாடகங்களில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்முறைக் கலைஞர்கள் அல்லர். மாணவர்கள், ஆசிரியர்கள். இன்னும் பலவேறு துறைகளில் பணியாற்றி வருபவர்கள். அலுவல் நேரம் போக தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் பயிற்சி செய்து இந்த நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை முக்கியமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் வேலை நேரத்தையும் வேலை நாட்களையும் வேலை பளுவையும் அரசாங்கங்கள் அதிகமாக்கிக்கொண்டே வருவதன் உள்நோக்கம் என்ன என்பதைத் தற்போது நாம் நன்றாக விளங்கிக் கொள்கிறோம். ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து திருச்சியை நோக்கி இதற்குப் புனித யாத்திரை செய்த நான், எங்கள் பங்குத் தந்தை குழந்தை ராஜன், நண்பர் லயம் சுப்பிரமணியம் ஆகிய மூவருக்கும் இந்த மூன்று நாள் கவனிப்பு ஓர் இனிய அனுபவம்.
இந்த நாடக விழாவில் படிக்கப்பட்ட கட்டுரைகள், நிகழ்த்தப்பட்ட விவாதங்கள், பாதல் சர்க்கார் நாடகங்களை நிகழ்த்திய நாடகக்குழுக்கள் பற்றிய செயல்பாடுகள், பாதல் சர்க்கார் நாடகங்கள் பற்றிய குறிப்புகள் அனைத்¬த்யும் தொகுத்து நு£லாகக் கொண்டுவர விழா ஏற்பாட்டாளர்கள் எண்ணியிருப்பதாக அறிகிறேன். அப்படி வெளிவருமானால் தமிழ்நாடகம் பற்றிய புதிய ஒளிகளை அது வழங்கும். தமிழ் மூளையில் நூற்றாண்டுக் கணக்கில் ஏறியுள்ள களிம்பைக் கொஞ்சம் கழுவும்.
திருச்சி நாடகச் சங்கமும் பண்பாடு மக்கள் தொடர்பகமும் இந்த விழாவை மிகவும் ஒழுங்கான வடிவத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையையும் தமிழ் மூளைக்குள் நாடக உணர்வைச் செழுமைப் படுத்தலை யும் செய்த இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களின் கடுமையான உழைப்பு மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் வெகுகாலம் நினைவுக்கும் உரியது. குறிப்பாக திரு. க. பூரணச்சந்திரன், திரு. எஸ். ஆல்பர்ட், தந்தை அகுஸ்தீன் முதலியோர் இந்நிகழ்ச்சி யின் சூத்திரதாரிகள்.
27-09-1989


கைவீசம்மா கைவீசு

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes)

குழந்தைப் பாடல்கள் நடக்கத் தொடங்கும் பருவம் முதலாக பள்ளிக்குச் செல்லும் பருவம் வரையில் பாடுவதற்கு உரியவை. மகிழ்ச்சியோடு பாடி துள்ளிக்குதித்து ஆடுவதற்கான பாடல்கள் இவை.

குழந்தைப் பாடல்கள் பழங்காலத்திலேயே தமிழில் இருந்தவைதான். எழுதப்பட்ட குழந்தைப் பாக்கள் அறநெறியை மையமாகக் கொண்டவை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை. வாய்மொழி மரபில் வந்த,

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடிவா

போன்ற குழந்தைப் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

குழந்தைப் பாடல்களில் நல்ல எதுகை மோனை அமைந்திருக்க வேண்டும். ஒரே மாதிரியான அசைகள் திரும்பத் திரும்ப வரவேண்டும். எளிய சொற்கள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

பாடற்பொருள் குழந்தைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். தர்க்கரீதியான பொருளே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். கருத்துகளைத் திணிக்கலாகாது. பொருளற்ற ஒலிகளும் ஒலித்தொடர்களும் சுவை கூட்டுவனவாக அமையும். எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம், அழ. வள்ளியப்பா போன்றோர் சிறந்த குழந்தைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இங்கே இரண்டு பழைய கால குழந்தைப் பாடல்களைத் தருகிறேன்.

சாஞ்சாடம்மா சாஞ்சாடு (சாய்ந்தாடம்மா என்பதன் கொச்சை)
சாயங் கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு.

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

‍பொம்மை வாங்கலாம் கைவீசு
தங்கைக்குத் தரலாம் கைவீசு

வேடிக்கை பார்க்கலாம் கைவீசு
வேண்டியது வாங்கலாம் கைவீசு

கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு


அறப்பளீசுர சதகம்

சதகம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. சதகம் என்றால் நூறு பாக்கள் கொண்ட இலக்கிய வகை என்று பொருள். சதக நூல்கள் நல்ல நீதிகளை எளிய நடையில் இனிமையாக எடுத்துரைப்பனவாக உள்ளன. தமிழில் பல சதக நூல்கள் உண்டு. அதில் அறப்பளீசுர சதகம் என்பதும் ஒன்று.
அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. நூற்பெயர் பாட்டுடைத் தலைவனால் வருவது. அறப்பளீசுவரர் கோயில் (சிவன் கோயில்) கொல்லி மலையில் உள்ளது. இதில் நூறு பாக்கள் இல்லை, 51 பாக்களே உள்ளன. சான்றுக்கு ஒரு பாவினைக் காணலாம். இது 14ஆம் பாட்டு.

வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும் கற்ற வழியிலே நிற்க வேண்டும்
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும் தேடி வளர்அறம் செய்ய
வேண்டும்
சீலமுடையோர்களைச் சேர வேண்டும் பிரிதல் செய்யாதிருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும் கொண்டு தியாகம் கொடுக்க
வேண்டும்
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும் நாட்டி நன்றாய் நடத்த வேண்டும்
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும் பண்ணினாலும் மிகு பக்தி
வேண்டும்
ஆலம் அமர் கண்டனே, பூதியணி முண்டனே, அனக எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

எனக்காகவே எழுதப்பட்டது போன்ற ஒரு பாடல் இது.

கோபமே பாவங்களுக்கெலாம் தாய் தந்தை கோபமே குடிகெடுக்கும்
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர் கொடுக்கும்
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே உறவு அறுக்கும்
கோபமே பழிசெயும் கோபமே பகையாளி கோபமே கருணை போக்கும்
கோபமே ஈனமாம் கோபமே எவரையும் கூடாமல் ஒருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீநரகு குழியினில் தள்ளிவிடுமால்
ஆபத்தெலாம் தவிர்த் தென்னை ஆட்கொண்டருளும் அண்ணலே அருமை
மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

அருமையான எளிய இந்த நூலைப் படித்துப் பயனடைவோம்.


ஆத்திசூடி

இன்றைய சிறார்கள் பழந்தமிழ் நீதிநூல்கள் சிலவற்றையேனும் படிப்பதும் மனப்பாடம் செய்வதும் அவசியம். ஆனால் அவை கிடைப்பதில்லை. புத்தகச் சந்தைகளில்கூட ஆங்கிலம் கற்கும், பேசும் நூல்கள் மண்டிக்கிடக்கின்றனவே ஒழிய தமிழ் அறநெறி நூல்களைக் காண முடிவதில்லை.
இந்தப் பதிவில் ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி நூலைப் படைக்கிறேன். ஆத்திச் சூடி அல்ல. ஆத்தி சூடிதான். ஆத்தி சூடி என்றால் ஆத்தியைச் சூடுபவன், அதாவது ஆத்தி மாலையைச் சூடுகின்ற சிவபெருமான். மொத்தம் நூற்றெட்டு அடிகளை உடையது இந்நூல். இதைக் கற்பதும் மனப்பாடம் செய்வதும் மிக எளிது.
ஆத்திசூடி–நூல்

அறஞ்செய விரும்பு 1
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கம் அது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல் 11
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
கண்டொன்று சொல்லேல்
ஙப்போல் வளை
சனிநீராடு
ஞயம்பட உரை
இடம்பட வீடு எடேல்
இணக்கமறிந்து இணங்கு
தந்தைதாய் பேண்
நன்றி மறவேல் 21
பருவத்தே பயிர்செய்
மண்பறித்து உண்ணேல்
இயல்பலாதன செயேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகலாதன செயேல்
இளமையிற் கல்
அறனை மறவேல்
அனந்தல் ஆடேல் 31
கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல் 41
கோதாட்டு ஒழி
சக்கர நெறிநில்
சான்றோர் இனத்திரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
சுளிக்கச் சொல்லேல்
சூது விரும்பேல்
செய்வன திருந்தச்செய்
சேரிடம் அறிந்துசேர்
சை எனத் திரியேல் 51
சொற் சோர்வு படேல்
சோம்பித் திரியேல்
தக்கோன் எனத்திரி
தானமது விரும்பு
திருமாலுக்கடிமை செய்
தீவினை அகற்று
துன்பத்திற்கிடங் கொடேல்
தூக்கி வினைசெய்
தெய்வம் இகழேல்
தேசத்தோடு ஒத்துவாழ் 61
தையல்சொல் கேளேல்
தொன்மை மறவேல்
தோற்பன தொடரேல்
நன்மை கடைப்பிடி
நாடு ஒப்பன செய்
நிலையில் பிரியேல்
நீர் விளையாடேல்
நுண்மை நுகரேல்
நூல் பல கல்
நெற்பயிர் விளை 71
நேர்பட ஒழுகு
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடங்கொடேல்
பழிப்பன பகரேல்
பாம்பொடு பழகேல்
பிழைபடச் சொல்லேல்
பீடு பெற நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூமி திருத்தி உண் 81
பெரியாரைத் துணைக் கொள்
பேதமை யகற்று
பையலோடு இணங்கேல்
பொருள்தனைப் போற்றிவாழ்
போர்த்தொழில் புரியேல்
மனம் தடுமாறேல்
மாற்றானுக்கு இடம்கொடேல்
மிகைபடச் சொல்லேல்
மீதூண் விரும்பேல்
முனைமுகத்து நில்லேல் 91
மூர்க்கரோ டிணங்கேல்
மெல்லிநல்லாள் தோள்சேர்
மேன்மக்கள் சொற்கேள்
மைவிழியார் மனையகல்
மொழிவது அற மொழி
மோகத்தை முனி
வல்லமை பேசேல்
வாது முற்கூறேல்
வித்தை விரும்பு
வீடுபெற நில் 101
உத்தமனாய் இரு
ஊருடன் கூடிவாழ்
வெட்டெனப் பேசேல்
வேண்டி வினைசெயேல்
வைகறைத் துயிலெழு
ஒன்னாரைத் தேறேல்
ஓரஞ்சொல்லேல் 108