பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6

(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை)

கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:

“கண்டகி ஆற்றின் கரையில் இருக்கும் சித்திரவனத்தில் என் நண்பனாகிய எலி அரசன் இரண்யகன் என்பவன் இருக்கிறான். அவன் நமது வலையை அறுப்பான், அங்கே செல்லுங்கள்.”

இதைக் கேட்டுப் புறாக்கூட்டம் பறந்துசென்று எலி அரசன் வளையருகில் இறங்கியது. தனக்கு எவ்வழியிலும் ஆபத்து நேரிடலாம் என்று வளைக்கு நூறு வழிகள் செய்து வைத்திருக்கும் எலியரசன், புறாக்கள் இறங்கிய ஒலியைக் கேட்டு பயந்து உள்ளேயே இருந்தது.

சித்திரக்கிரீவன் (புறா அரசன்): இரண்யகா, நண்பா! எங்களோடு ஏன் பேசவில்லை?

தன் நண்பன் குரலைக் கேட்ட எலியரசன் வளையிலிருந்து வெளிவந்தது.

siragu-panja-thandhiram-story6-1

இரண்யகன்: நான் மிகவும் புண்ணியம் செய்தவன். ஆகவே சித்திரக்கிரீவன் ஆகிய என் நண்பன் என் வீட்டுக்கு வந்தான். இவ்வுலகத்தில் மனம் ஒத்த நண்பர்களோடு பழகுவதைவிட வேறு ஆனந்தம் ஏது?

பறவைகளின் துன்பத்தை அது நோக்கியது.

இரண்யகன்: நண்பா, நீ எல்லாரைக் காட்டிலும் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே, உனக்கு இப்படிப்பட்ட சோதனை எப்படி ஏற்பட்டது?

சித்திரக்கிரீவன்: எந்தக் காலத்தில் எது நடக்குமோ அது நடக்கும். விதி வலியது. அதற்கு முன் எந்த உபாயம் வெல்லும்? கடல் பெருகி மேலிட்டு வந்தால் அதற்குக் கரை ஏது?

எலியரசன்: ஆம், உண்மைதான். நூறு நாழிகை வழித் தொலைவில் இருக்கும் பொருள்களையும் ஆராய்ந்து அறிந்து செல்கின்ற நீயே இன்று வேடனின் வலைக்குள் சிக்கிக் கொண்டாய், பார்! சந்திரன், சூரியன் ஆகியோர்க்கும் ராகு கேது ஆகியவற்றால் கிரகணம் ஏற்படுகிறது. யானையும், பறவையும், பாம்பும் மனிதனுக்குக் கட்டுப்படுகின்றன. புத்திசாலிகளாக உள்ளவர்களுக்கும் வறுமை ஏற்படுகிறது. இவை யாவும் தெய்வச் செயல்களே.

இவ்வாறு கூறியபடி, சித்திரக்கிரீவனின் வலைக் கயிற்றை எலி அறுக்கத் தொடங்கிற்று.

புறா அரசன்: நண்பனே, முதலில் என் பரிவாரத்தின் கயிறுகளை அறு. பிறகு கடைசியாக என் கயிற்றை அறுக்கலாம்.

இரண்யகன்: முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுதான் தன் பரிவாரங்களைக் காப்பாற்ற வேண்டும். அறம் பொருள் இன்பம் ஆகிய இவைகளுக்கும் ஆதாரம் உயிர். ஆகவே முக்கிய சாதனமாகிய உயிரைக் காப்பாற்றினால் எல்லாவற்றையும் காப்பாற்றினாற் போல் ஆகும்.

சித்திரக்கிரீவன்: நீ சொல்வது சரிதான். ஆனால் இப்படிப்பட்ட வேதனைகளில் இருந்தெல்லாம் காப்பாற்றுவதற்காகத் தானே என்னை இவர்கள் அரசனாக நினைக்கிறார்கள்? ஆகவே என் உயிரைக் காப்பாற்றுவதற்கு முன் இவர்களைப் பிழைக்க வைப்பாயாக.

எலி அரசன்: நீ பரம சாது. அடுத்தவர்களை ஆதரிப்பவனாக இருக்கிறாய். எஜமானனிடம் விசுவாசமாக இருக்கின்ற சேவகனும், சேவகனிடம் அன்பாய் இருக்கின்ற எஜமானனும் சுகம் அடைவார்கள்.

இவ்வாறு கூறி, எலி அரசன், எல்லாப் புறாக்களின் கயிறுகளையும் பல்லினால் கடித்து அறுத்து, கடைசியாக சித்திரக்கிரீவனது கட்டையும் விடுவித்தது. பிறகு ஒன்றுக்கொன்று உபசார வார்த்தைகள் பேசிக் கொண்டன. சித்திரக்கிரீவன் நன்றி சொல்லித் தன் இடத்திற்குச் சென்றது.

லகுபதனன் ஆகிய காகம் இவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்தது. பிறகு அது எலி அரசனைப் பார்த்துச் சொல்லியது.

siragu-panja-thandhiram-story6-4

“நீ மிகவும் பாக்கியம் செய்தவன். நானும் உன் நட்பை விரும்புகிறேன். நீ அன்பு கூர்ந்து என் நண்பனாக வேண்டும்.”

இரண்யகன்: நீ யார்?

லகுபதனன்: நான் ஒரு காகம். என் பெயர் லகுபதனன்.

இரண்யகன்: உனக்கும் எனக்கும் வெகு தூரம். நான் உனக்கு இரை. நீ என்னைத் தின்கிறவன். ஆகவே உனக்கும் எனக்கும் நட்பு எவ்விதம் ஏற்படும்? அது ஆபத்துக்கே காரணமாகும். நரியின் நட்பினால் ஒரு மான் வலையில் அகப்பட்டது போல் எனக்கு உன்னால் தீமைதான் ஏற்படும்.

லகுபதனன்-அது எப்படி? மான் எப்படி வலையில் சிக்கியது?

(மான் நரியிடம் நட்புக் கொண்ட கதை)siragu-panja-thandhiram-story6-5

எலி அரசன்: மகத தேசத்தில் சண்பகவனம் ஒன்றில், மானும் காகமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்தன. அப்படி இருந்தபோது, அந்த மான் புல் முதலானவற்றை மேய்ந்து நன்கு கொழுத்திருப்பதை ஒரு நரி கண்டது. “இவனை நேரில் கொல்வது அசாத்தியம். ஆகவே வஞ்சனையினால் இவனைக் கொல்ல வேண்டும்” என்று நிச்சயித்துக் கொண்டது. மானிடம் சென்று, அது “நண்பா! சுகமா?” என்று விசாரித்தது.

மான்: நீ யார்?

நரி: என் பெயர் குத்திரபுத்தி. இந்தக் காட்டில் நான் எந்த நண்பனும் இன்றித் தன்னந்தனியாக ஒரு பாவியாகத் திரிந்துகொண்டிருந்தேன். இன்று உன்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று. உனக்குத் தேவையான வேலைகளைச் செய்துகொண்டு உன்னிடத்தில் நட்பாக இருப்பதற்கு விரும்புகிறேன்.

மான்: அப்படியானால் நல்லது. வா.

இரண்டும் சேர்ந்து மரம் ஒன்றின்கீழ்ச் சென்றன.

அந்த மரத்தில் மானின் நண்பனாகிய சுபுத்தி என்னும் காகம் வசித்து வந்தது. அது இரண்டையும் பார்த்தது.

காகம் (மானிடம்): நண்பனே, உன் அருகில் இருப்பவன் யார்?

மான்: இந்த நரி, என்னுடன் நட்பாய் இருக்க விரும்புகிறான்.

காகம்: நண்பனே, திடீரென்று நெருங்கிவந்து நட்புப் பாராட்டுபவனை நம்பலாகாது. ஒருவன் குலமும் நடத்தையும் தெரியாமல் அவனுக்கு இடம் கொடுத்தால் ஒரு பூனைக்கு இடம் கொடுத்து, கழுகு இறந்தாற்போல நேரிடும்.

மான் – கழுகு எப்படி இறந்தது?

(பூனையால் கழுகு இறந்த கதை)

siragu-panja-thandhiram-story6-2

காகம்: பாகீரதி ஆற்றங்கரையில் திரிகூடமலையில் ஒரு பழைய மரத்தின் பொந்தில் சரற்கவன் என்னும் கழுகு வசித்து வந்தது. அதற்கு வயதாகி விட்டது. நகமும் கண்ணும் போய்விட்டன. மற்றப் பறவைகள் அதன்மேல் ஆதரவு காட்டி, தங்கள் உணவில் கொஞ்சம் கொஞ்சம் அதற்குக் கொடுத்து அதைக் காப்பாற்றி வந்தன. அப்போது நெடுஞ்செவியன் என்னும் பூனை பறவைகளின் குஞ்சுகளைத் தின்ன வேண்டி அந்த மரத்தின்கீழ் வந்தது. அதைப் பறவைக் குஞ்சுகள் பார்த்துக் கூச்சலிட்டன. கண்தெரியாத கழுகு, “ஏன் கூச்சலிடுகிறீர்கள்? இங்கே வந்தது யார்?” என்றது. பூனை, ‘இந்தக் கழுகிடமிருந்து நாம் சண்டையிட்டுத் தப்ப இயலாது. தந்திரத்தினால்தான் தப்ப வேண்டும்’ என்று அதன் அருகில் சென்றது.

பூனை: ஆற்றல் மிகுந்தவனே, உனக்கு என் வந்தனம்.

கழுகு: நீ யார்?

பூனை: நான் நெடுஞ்செவியன் என்னும் பூனை.

கழுகு: இந்த இடத்தை விட்டு உடனே ஓடிப்போ. இல்லாவிட்டால் செத்துப்போவாய். கொன்றுவிடுவேன்.

பூனை: நான் சொல்வதைக் கேள். இன வேறுபாட்டினால் ஒருவரை ஒருவர் அழிப்பது சரியல்ல. அவனவன் நடத்தையைப் பார்த்தே எது செய்யத் தக்கதோ அதைச் செய்ய வேண்டும்.

கழுகு: நீ ஏன் வந்தாய், சொல்.

பூனை: நான் இந்த ஆற்றங்கரையில் நித்திய ஸ்நானம் செய்து, சாந்திராயணம் முதலான விரதங்களை அனுசரித்துக் கொண்டிருக்கிறேன். நீ மிகவும் தர்மவான் என்று பறவைகள் சொல்லக் கேள்விப்பட்டேன். முதிர்ந்த அறிஞனிடத்தில் தர்மத்தைக் கேட்கவேண்டும் என்று சாஸ்திரம் இருக்கிறது. அதனால் நான் உன்னிடத்தில் வந்தேன். நீயோ, தர்மத்தைவிட்டு என்னைக் கொல்லப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட ஆசாரத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. பகைவனும் தன் வீட்டுக்கு வந்தால் நல்லவர்கள் அவர்களை ஆதரிப்பார்கள். மரமும் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கிறது அல்லவா?

விருந்தாளி, ஒரு வீட்டுக்கு வந்து முகம் வாடிச் சென்றால், அவனது பாவம் வீட்டுக்காரனுக்கு வருகிறது. வீட்டுக்காரனின் புண்ணியம் விருந்தாளியைச் சேர்கிறது. ஆகவே நல்லவர்கள் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுகிறார்கள். நிலவு எல்லார் வீட்டிலும் பிரகாசிக்கிறது அல்லவா?

கழுகு: பூனைஇனம் இறைச்சியைத் தின்கின்ற இனம். இங்கே பறவைகளைக் கொலைசெய்ய வந்திருக்கிறாய் என்று நான் அப்படிக் கூறினேன். நீ பிராமணப் பூனை என்பது எனக்குத் தெரியாது.

நெடுஞ்செவியன் அதைக் கேட்டு ‘சிவ சிவ’ என்று தரையைத் தொட்டுக் காதின் மேல் கையை வைத்துப் பொத்திக்கொண்டது.

பூனை: நான் தர்ம சாஸ்திரங்களைக் கேட்டு வைராக்கியம் அடைந்து பொல்லாத செயல்களை விட்டுவிட்டேன். அநேக சாஸ்திரங்களில் கொலையைப் போன்ற ஒரு பாதகம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. ஆகவே கனிகிழங்குகளைச் சாப்பிட்டுவருகிறேன். அப்படிப்பட்ட நான் பாதகம் எப்படிப் பண்ணுவேன்?

இவ்வாறு கூறி, கழுகுக்கு நம்பிக்கை வரச்செய்து, பூனை அதன் வீட்டில் இருந்தது. தினந்தோறும் ஒவ்வொரு பறவைக் குஞ்சாகப் பிடித்து தின்று கொண்டிருக்கத் தலைப்பட்டது. அப்போது குஞ்சுகளை இழந்த பறவைகள், மனக்கிலேசம் கொண்டு, தங்கள் குஞ்சுகள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று தினமும் சோதிக்கத் தொடங்கின. இதை அறிந்த பூனை அந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட்டது.

பறவைகள், கழுகின் பொந்தின் அருகில் வந்து பார்க்கும்போது, அங்குக் குஞ்சுகளுடைய எலும்புகளும் சிறகுகளும் விழுந்துகிடப்பதைக் கண்டன. ‘இந்தத் துரோகிக் கழுகுதான் நம் பறவைக் குஞ்சுகளைக் கொன்றது’ என்று நினைத்து கழுகை அவை கொன்றுவிட்டன.

ஆகவே ஒருவன் குணம் தெரியாமல் அவனுக்கு இடம் கொடுக்கலாகாது.

(மான் நரியிடம் நட்புக் கொண்ட கதை தொடர்கிறது)

siragu-panja-thandhiram-story6-3

இப்படி மான் கூறியதும், நரி, அதனிடம் சொல்லியது: நட்புக் கொள்வதற்கு முன்னாலேயே ஒருவனது பண்பு எப்படித் தெரியவரும்? ஆகவே என்னை நண்பனாக ஏற்றுக்கொள்.

மான் அதைக் கேட்டு, காகத்தைப் பார்த்து, “நீ எப்படி எனக்கு நண்பனாக இருக்கிறாயோ, அப்படியே இவனும் இருந்துபோகட்டும். நீ அதற்குத் தடை சொல்லாதே” என்று உரைத்தது.

இப்படியே மூன்றும் தங்கள் தங்கள் வழக்கப்படி இரைதேடித் தின்று அந்த மரத்தின் அடியில் ஒன்று சேர்ந்து வசித்தன. ஒருநாள்

நரி, (மானைப் பார்த்து): இந்தக் காட்டில் மிகப் பசுமையான இடம் ஒன்று இருக்கிறது. உனக்கு அதைக் காட்டுகிறேன், வா.

இவ்வாறு கூறிக் காட்டுக்கு அருகிலுள்ள ஒரு கொல்லையை மானுக்குக் காட்டியது நரி. அதைக் கண்டு மானும் தினம் தினம் அங்குச் சென்று பயிர் களை மேய்ந்து புசித்தவாறு இருந்தது. இதை ஒரு நாள் கண்ட கொல்லைக்குச் சொந்தக்காரன், மானைப் பிடிக்க வலைவிரித்தான். மானும் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. ‘இப்போது யார் என்னைக் காப்பாற்று வார்கள்? நண்பர்கள்தான் உதவ வேண்டும்’ என்று நினைத்தவாறு இருந்தது.

அப்போது நரி அங்கு வந்தது. தன் எண்ணப்படியே நடந்ததுகண்டு மகிழ்ச்சியடைந்தது.

மான்: நண்பா! ஏன் சும்மா இருக்கிறாய்? என்னை விடுவித்துவிடு. சங்கட காலத்தில் நண்பர்கள்தான் உடையிழந்தவன் கைபோல் அவனுக்கு உதவுகிறார்கள்.

நரி: நீ சொல்வது மெய்தான். ஆனால், இன்றைக்கு எனக்கு விரதம். ஆகவே இந்தத் தோல்வலையை இன்று என் பல்லினால் கடிக்க மாட்டேன். நாளைக்கு நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். நண்பனுக்காக உயிரும் கொடுப்பவன் அல்லவா நான்?

இவ்வாறு சொல்லிவிட்டு, அருகில் ஓரிடத்தில் சென்று ஒளிந்து கொண்டது. மான் இரவு நேரம் ஆகியும் வராததைக் கண்டு வருந்திய காகம் தேடிக் கொண்டு அங்கே வந்தது.

மான் (காகத்திடம்): நண்பா, உன் பேச்சைக் கேட்காமல் போனதால்எனக்கு வந்த பலன் இது.

காகம்: உன் கூட்டாளியாகிய நரி எங்கே போனான்?

மான்: என் இறைச்சியைத் தின்பதற்காக இங்கேதான் எங்கேயாவது ஒளிந்துகொண்டிருப்பான்.

காகம்: இந்தக் காலத்தில் எல்லாரும் தங்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்றுதான் பணிவாக நடந்துகொள்வது போல நடிக்கிறார்கள். நல்லது சொல்கின்ற நண்பன் பேச்சைக் கேளாதவனுக்கு விபத்து விரைந்து வருகிறது. மேலும் அவன் தன் பகைவனுக்கே மகிழ்ச்சியை அளிக்கிறான்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது கொல்லைக்கார விவசாயி ஒரு தடியை எடுத்துக்கொண்டு தொலைவில் வருவதைக் காகம் பார்த்தது.

காகம்: நண்பனே, நான் சொல்வதை இப்போதேனும் கேள். இப்போது மூச்சை அடக்கிக் கொண்டு செத்தவனைப் போலக் கிட. விவசாயி உன்னைப் பார்த்துச் செத்துப்போய்விட்டாய் என்று எண்ணி, வலையை அவிழ்த்துவைக்கப் போவான். அப்போது நான் கத்துகிறேன். நீ உடனே விரைவாக ஓட்டம்பிடி.

இவ்வாறு கூறிவிட்டு, காகம் பொய்யாக, மானின் கண்ணைக் குத்தியவாறு இருந்தது. கொல்லைக்காரன், மான் செத்துப்போயிற்று என்று கருதி, வலையை அவிழ்த்து ஓரிடத்தில் ஒன்றாகக் கட்டிவைக்கச் சென்றான். காகம் அதைப் பார்த்துக் கத்த, மான் விரைந்து ஓட்டம் பிடித்தது. அதைக்கொல்ல நினைத்துக் குடியானவன் தன் தடியை அதன்மேல் வீசி எறிந்தான். அது மறைந்திருந்த நரியின்மீது பட்டு அது இறந்தது.

இக்காலத்தில் புண்ணியமோ, பாவமோ மிகுதியாகிவிட்டால், அதன் பலன் உடனே கிடைத்துவிடுகிறது. மானுக்கு நரியின் நட்புப் போல, எனக்கும் உன் சிநேகிதம் உதவாது.

(சித்திரக்கிரீவன் கதை தொடர்கிறது)

இதைக் கேட்ட காகம், எலி அரசனிடம்: “உன்னைத் தின்று என் பசியாறுமா? நீ உயிருடன் இருந்தால்தான் சித்திரக்கிரீவனைப் போல எனக்கும் நன்மை கிடைக்கும்” என்றது.

  (தொடரும்)

இலக்கியம்