3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்

3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்

மேற்கத்தியத் திறனாய்வு, கொள்கைசார்ந்த நூல்களில், நாம் வாழும் காலம் ‘கொள்கைகளின் காலம்’ என்றே குறிப்பிடப்படுகிறது. உலக வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவு பல்வேறு சிந்தனைகள், கொள்கைகள் தோன்றிப் பரவியுள்ளன. இன்றைய பல்வேறு கொள்கைகளின் அடிப்படைகள் ஒன்றாக இருப்பதை நோக்கிச் சிலர் ‘விமரிசனக் கொள்கை’ அல்லது சுருக்கமாகக் ‘கொள்கை’ என்று ஒருமையிலேயே குறிப்பிடவும் செய்கின்றனர். அவ்வாறானால், இன்றைய கொள்கைகளைக் கற்பதனால் நாம் அடையக்கூடிய பயன்கள்தான் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. இந்தப் பயன்களை ஒருவேளை பின்னால் வரும் இயல்கள் நன்றாகவே தெளிவுபடுத்த இயலும்.

கொள்கை என்பது நம்மையும், நாம் வாழும் உலகையும், பயனுள்ள புதிய வழிகளில் நாம் காண உதவுகிறது. பெற்றோர்களாகவும், ஆசிரியர்களாகவும் நாம் எப்படி நம் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கிறோம் என்பதன்மீதும் அது செல்வாக்குச் செலுத்துகிறது. நாம் எப்படித் தொலைக் காட்சியைப் பயன்படுத்துகிறோம் – எந்தச் செய்திகளை விரும்பிக் கேட்கி றோம், எந்தத் திரைப்படங்களைப் பார்க்கிறோம், எத்தகைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறோம் என்பனவற்றையும் அது பாதிக்கிறது. குடிமக்களாகவும், வாக்காளர்களாகவும், நுகர்வோராகவும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், சமூக, இன, மத, அரசியல், மொழி சார்ந்த விஷயங் களில் நாம் எத்தகைய கருத்துகளைக் கொண்டிருக்கிறோம், இவற்றுக்கு எதிரானவர்களிடம் எப்படி எதிர்வினை புரிகிறோம், நமது சொந்த உள்நோக்கங்கள், பயங்கள், ஆசைகள் போன்ற வற்றையே நாம் எப்படி உணர்ந்தறிந்து அவற்றோடு என்ன செய்கிறோம் என்பவற்றின் மீதான நமது பார்வைகளையெல்லாம் கொள்கை பற்றிய கல்வி பயனுள்ள வழிகளில் மாற்றுகிறது. மனித உற்பத்திப்பொருள்கள் (இலக்கியம் மட்டுமல்ல, திரைப் படம், இசை, பிற கலைகள், அறிவியல்கள், தொழில்களும் தொழில்நுட்பங் களும் என) எல்லாமே மனித அனுபவங்களிலிருந்து தோன்றியவை என்பது உண்மை. ஆகவே அவை மனித ஆசைகள், முரண்பாடுகள், போராட்டங்கள், சாத்தியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன என்பதும் உண்மை. ஓர் இனமாகவே நாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் விமரிசனம் செய்யவும் கொள்கை நன்கு உதவுகிறது. விமரிசனக்கொள்கை, இம்முயற்சிகளுக்குப் பயன்படும் மிகச்சிறந்த கருவிகளை அளிப்பதன்றி, மேற்சொன்னவாறு புதிய நோக்குகளில் அவற்றைப் பார்க்க உதவுவதன்றி, நாம் எவ்விதம் தர்க்கரீதியாக, படைப்புத் திறனோடு, ஆழ்நோக்குகளோடு சிந்திப்பதற்கும் உதவுகிறது. ஆகவே கொள்கை பற்றிய அறிவு இன்று இன்றியமையாதது.

இன்றைய கொள்கைகளுக்குள் நுழைவதற்கு முன்னால், இவற்றுக்குப் பின்னணியாக இருந்த, இவை தோன்றக் காரணமாக இருந்த பழைய கொள்கைகள் பற்றிய அறிமுகத்தோடு செல்வது எளிதாக இருக்கும்.

மேற்கத்திய அழகியல் கொள்கைகளின் நோக்கு இந்தியக் கலை இலக்கிய அழகியல் கொள்கைகளின் நோக்கிலிருந்து சிலவிதங்களில் மாறுபட் டது. சிலவிதங்களில் ஒன்றுபோலவும் இருக்கிறது. மேற்கத்திய நோக்கு, வாழ்க்கையைப் பார்த்து நகலெடுப்பதாகக் கலை அமையவேண்டும் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. இந்திய நோக்கு, வாழ்க்கையை மேம்படுத்த, இலட்சியப்படுத்த உதவுவதாகக் கலை இருக்கவேண்டும் என்பதிலிருந்து தோன்றுகிறது. மேற்கத்திய மரபின் வீனஸ், டேவிட் போன்ற சிலைகளையும், நம் கோயில்களில் காணப்படும் ஆண்-பெண் சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த வேறுபாட்டினை நாம் அறிந்துகொள்ள இயலும். மேற்கத்தியச் சிற்பங்கள், உள்ளதை அவ்வாறே படைத்தல், போலி செய்தல் என்பதிலிருந்து தோன்றுகின்றன. நமது சிலைகள், இலட்சியப்படுத்தப்பட்ட உருவங்கள். மெய்யாகவே அவை போன்ற ஆடவரையோ பெண்டிரையோ காண்பது கடினம். இலட்சியத்திற்கான குறியீடுகளாக அவை அமைகின்றன.

போலிசெய்தல், பிரதிநிதித்துவப்படுத்தல் அல்லது நகலெடுத்தலாகக் கலை
இக்கருத்தை உருவாக்கியவர் பிளேட்டோ. ஒப்பாகச் செய்தல் (mimesis) என்ற கருத்தை அவர் உருவாக்கினார். இச்சொல், போலிசெய்தல், பிரதி நிதித்துவம், உள்ளடக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ‘வடிவத் தோற் றங்களின் உலகம்’ என்ற ஒன்று சிந்தனையில் தனியாக இருப்பதாக அவர் கொள்கிறார். வடிவத்தோற்றங்களின் உலகம் என்பதுதான் உண்மையான இருப்பு. அதிலிருந்து தனிப்பட்ட பொருள்கள் உருவாகின்றன. அவற்றைப் பார்த்துக் கலைஞன் போலி செய்கிறான். ஆகவே கலை என்பது உண்மையி லிருந்து இருமுறை விலகியது என்பது அவர் கொள்கை. கலை உண்மையைப் பிரதிநிதித்துவம் செய்தால்தான், அறிவின் சார்பாக நின்றால்தான் நன்மை. இல்லை யெனில் உணர்ச்சிகளை எழுப்புகின்ற தனது ஆற்றலின் காரணமாகப் பகுத்தறிவைச் சீர்குலைத்து, தவறான திசையில் கலை மக்களைச் செல்லவைத்துவிடும், தீமை பயப்பதாகிவிடும் என்ற எண்ணம் பிளேட்டோவுக்கு இருந்தது. (அரிஸ்டாடில், போலி செய்யும் கலைகள், சாத்தியமான ஓர் உலகினைப் பற்றிய எண்ணத்தை முன்வைக்கின்றன என்று கூறி பிளேட்டோவை மறுத்தார்).

அறஉணர்வு வெளிப்பாடாகக் கலை
லியோ டால்ஸ்டாய் (1826-1910), ‘கலையின் பணி கலைஞனின் உணர்ச்சியை வாசகர் பெறுமாறு வெளிப்படுத்துவதாகும்’ என்கிறார். உயர்ந்த சமயக் கொள்கைகளுடனோ, ஒழுக்கவிதிகளுடனோ கலை ஒத்துச் செல்லவேண்டும். இம்மாதிரி அற உணர்வுகளை வெளிப்படுத்துவதனால் தான் கலை மதிப்புப் பெறுகிறது. வெறும் அழகு வெளிப்பாட்டினை நோக்க மாகக் கொண்டு இயற்றப்படும் கலைகள் பொழுது போக்கிற்கானவை, பயனற்றவை. இக்கொள்கையின் இன்னொரு வடிவத்தைக் காலிங்வுட், குரோசே போன்றோர் முன்வைத்தனர். கலைஞனுடைய உள்ளத்திலிருக்கும் ஒழுங்குபடுத்தப்படா உணர்வுகள் அவனால் குறித்தவடிவத்திற்குக் கொண்டு வரப்படுவதே கலை என்றனர். காலிங்வுட், கற்பனையின் வெளிப்பாடு கலை என்றார். இருவருமே கலைஞன் மனத்திலிருப்பது கலை, அதனை வெளியி டுவது அவன் வேலை என்பதில் ஒன்றுபட்டனர்.

டால்ஸ்டாய் போன்றோருடையது ஒரு பழமைவாத நோக்கு மட்டுமன்று, அருவக் கலைகளுக்குச் சற்றும் பொருந்தாத ஒன்றும் ஆகும். தமிழில் இக் கொள்கையை அப்படியே முன்வைத்தவர் டாக்டர் மு. வரதராசனார். (இலக்கியத்திறன், இலக்கிய மரபு போன்ற அவருடைய நூல்களைக் காண்க). அ.ச. ஞானசம்பந்தனும் (இலக்கியக் கலை) இக்கருத்தினரே. அறம் தான் கலையின் நோக்கம் என்று வரன்முறையாக எண்ணும் தமிழ் மனத் திற்கு இக்கொள்கை மிகவும் பிடித்திருந்ததில் வியப்பில்லை. அதனால் மு. வரதராசனார், அ.ச. ஞானசம்பந்தன் போன்றோர் எழுதிய இலக்கியக் கலை, இலக்கியத் திறன், இலக்கிய மரபு போன்ற நூல்கள் உடனடியாகப் பரவசத் தோடு ஏற்றுக் கொள்ளப் பட்டன.

மாத்யூ அர்னால்டுவுக்கு இலக்கியமே முதன்மையானது, மதத்திற்கு மாற்றாக அமையக்கூடியது, ஜான் ரஸ்கினும் கலையின் அறமுதன்மையை வலியுறுத்தினார்.
உணர்ச்சி வெளிப்பாட்டுக் கொள்கையின் இன்னொரு வடிவத்தை சூசன் லாங்கர் முன்வைக்கிறார். கலைப்படைப்புகள் உணர்ச்சிகளின் குறியீடுகள் என்பது அவர் கருத்து. சொல்லாடற் குறிகளைப் (பேசும்போது பயன்படுத்தும் குறிகளைப்) போலன்றி, ‘கலைகள் முன்னிலைப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவக் குறியீடுகள்’. உணர்ச்சிகளின் உள்ளடக்கத்தை அல்லது வெளிப்பாட்டை இவை உணர்த்தும் என்பது பொருந்தும், அவற்றின் அமைப்பை வெளியிடும் என்பது பொருந்துமா என்பது தெரியவில்லை.

இலக்கியத் தனித்தன்மை என்பது மானிடத் தனித்தன்மையிலிருந்து பெறப்படுவது, அதாவது மனித சாராம்சத்திலிருந்து எழுவது. இந்த மனித சாராம்சம் அல்லது தனித் தன்மை, சூழல் சாராதது. ஆனால் மாறவும் வளரவும் கூடியதுதான் (நாவலின் கதா பாத்திரங்களின் வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படுவதுபோல). ஆயினும் முற்றிலும் தலைகீழான மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியது அல்ல. அதனால், கதைகளில்-குறிப்பாகத் தமிழ்த் திரைப்படக் கதைகள் போன்றவற்றில்-ஒருவன் திடீரென இதயம் மாறி நல்லவனாகி விடுகிறான் என்றால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. ஆகவே நாம் பெரும்பாலும் மாறாத ஒரு காலாதீதத் தன்னிலையாகவே (transcendental subject) மனிதனைக் காண்கிறோம். ஆகவே மனித அனுபவங்களும், அவன் மொழியும் படைப்புகளும் மாறாத தன்மை கொண்டவை என்ற கருத்து நிலவுகிறது.

ஆகவே இலக்கியத்தின், கலைகளின் நோக்கம், மனிதவாழ்க்கையை மேம்படுத்துவது, மானிட நல்லற மதிப்புகளைப் பரப்புவது என்றாகிறது. ஆகவேதான் இந்தியாவில், ‘அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய புருஷார்த்தங்களை அடைய உதவுவதே கலை’ என்று சொல்லப்படுகிறது. ஆனால் மேற்கத்தியக் கொள்கைப்படி, இந்தப் புருஷார்த்தங்களை அடைவதற்கான பிரச்சாரமாக இலக்கியம் அமைந்துவிடக்கூடாது. கலையில் பிரச்சாரமே இருக்கலாகாது என்பது முதல், வெளிப்படையாக அது இருக்கக் கூடாது (மறைமுகமாக இருக்கலாம்) என்று சலுகை தருவது வரை வெவ் வேறு நிலைப்பாடுகள் இதில் உண்டு. “நம்மை மாற்றவேண்டும் என்ற திட்டம் கொண்ட இலக்கியத்தின்மீது நமக்கு அவநம்பிக்கை தான் ஏற்படுகிறது” என்றார் கீட்ஸ்.

வடிவ அமைப்பாகக் கலை
ஜெர்மன் தத்துவஞானி காண்ட்(1724-1804)டின் அழகியற் கொள்கையின் விளைவு வடிவவியல் என்பார்கள். தீர்ப்புக்கூறலின் மீதான விமரிசனம் என்ற தம்முடைய நூலில், ‘அறிவினை வழங்கவில்லை என்றாலும் இரசனையின் விளைவான மதிப்பீடுகள் பொதுமையானவை’ என்று சொல்கிறார் காண்ட். விருப்புவெறுப்பின்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியை உண்டாக்கும் புலன்சார் உணர்வுப்பொருள்களை நாம் அழகானவை, கலைமதிப்புடையவை என்று சொல்கிறோம். பிறவழிகளில் பெறஇயலாத ஒருவகை மகிழ்ச்சியை அளிப்பதனால் கலைப்பொருட்களைத் தன்னிச்சையான (பிறவற்றைச் சாராத) மதிப்புடையவை என்கிறோம். அழகியல் அனுபவத்தின் மூலப்பொருளை அளிப்பது கற்பனை. புரிந்து கொள்ளும் திறன் வாயிலாக நோக்கும்போது கற்பனை புதிய வடிவத்தை அளிப்பதனால் மகிழ்ச்சியைத் தருகிறது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிளைவ் பெல் (1881-1964) வண்ண ஓவியம் போன்ற கலைகளின் அடிப்படை “பொருட்படுத்தத்தக்க வடிவம்” (significant form) என்றார். இக்கருத்தினை அவர் சரிவர விளக்கவில்லை. பொருட்படுத்தக்கூடிய வடிவம் என்பது நல்ல கலைகளில் சிறப்பாகக் காணக்கூடிய வடிவம் எனலாம். ஆனால் நல்ல கலை என்பதை எப்படி அறிவது? பொருட்படுத்தக்கூடிய வடிவம் அதில் இருப்பதனால்தான். எனவே அவர்கூற்று வட்டத்தன்மை உடையதாகி குறையுடையதாகிவிடுகிறது.
வடிவவியல் சிறப்பான இடம்பெறுவது அருவக்கலைகளில்தான். இசை தான் கலைகளில் மிகவும் அருவமானது. இசையில் நாம் உள்ளடக்கத்தை நோக்குவதைவிட வடிவத்தை மிகுதியாக இரசிக்கிறோம்.

வரலாற்றுச் செயல்முறையாகக் கலை
ஹெகல் (1770-1831) மெய்யியல் அறிவினை அளிக்கின்ற ஒன்றாகக் கலையைக் காண்கிறார். கலைக்குப் புலன்சார்ந்த வடிவத்தினால் உண்மையை அளிக்கும் அல்லது தெய்விகத்தைப் புலப்படுத்தும் ஆற்றல் உண்டு. மானிட சுயபிரக்ஞை, சுயவெளிப்பாடு என்பதை நோக்கிய முன்னேற்றம் தான் மனித வரலாறு. இந்தச் செயல்முறையில் கலை ஓர் இன்றியமையாப் படி. ஆனால் கலையின் நோக்கம் பூர்த்தியானவுடனே கலைவரலாறு முடிந்துபோகிறது. இச்சமயத்தில், கலை மனித வரலாற்றின் இயங்கியலை வெளிப்படுத்து வதில்லை. அதைச் செய்வது தத்துவத்தின் பணி. உதாரணமாக, கிரேக்கக் கலை எல்லா விதத்திலும் முழுமையடைந்த ஒன்று. எனவே கிறித்துவ சகாப்தம் தொடங்கியபிறகு அது ஏற்கெனவே சொல்லப்பட்ட உண்மைகளையே மீண்டும் சொல்ல முடிந்தது என்கிறார் ஹெகல்.

ஹெகலின் கொள்கையிலிருந்து பிரிந்து, தன்னையே குறிக்கும் சுயநோக்குக் கொண்டது கலை, எனவே கலையின் வரலாற்று முன்னேற்றம் என்பது தன் சுயசாரத்தை வெளிப்படுத்துவது என்றார் டாண்டோ என்பார்.
கலை தன்னளவில் முழுமை பெற்றதா, அல்லது பிறவற்றைச் சார்ந்த வெளிப்பாடா என்பது பற்றி இன்னும் விரிவான கோட்பாடுகள் உண்டு. தன்னளவில் முழுமை பெற்றது கலை என்ற கொள்கையை நவீனத்துவம் கொண்டிருந்தது. பின்னணிச் சூழல்சார் நோக்கினை ஏற்றுக்கொண்டது பின் நவீனத்துவம். கலையின் சமூகத்தோற்றத்தை வலியுறுத்தியது மார்க்சியம். இவற்றையெல்லாம் பற்றிப் பின்னர் காணலாம்.

நல்ல இலக்கியம்
நல்ல இலக்கியம், காலங்கடந்த ஓர் முக்கியத்துவம் கொண்டது என்ற மனப்பான்மை நவீனத்துவக் காலத்திற்கு முன்பிருந்தே இருந்தது. தான் எழுதப்பட்ட காலத்தின் தடைகளையும் தனித்தன்மைகளையும் அது எவ் வாறோ கடந்துவிடுகிறது. மனித இயல்பின் மாறாத் தன்மைகளைப் பற்றி அது பேசுகிறது. ஆக இலக்கியம் என்பது, இடம்-காலம் கடந்தது. நாம் திருக்குறளுக்குச் சொல்வதுபோல, அது ஓரிடத்திற்கு, ஒரு காலத்திற்கு எழுதப்பட்டதல்ல. இத்தன்மையை எஸ்ரா பவுண்டு, News which stays News என்றார். (என்றைக்கும் புதுமையான செய்தியே இலக்கியம்).

காலத்தினாலும் இடத்தினாலும் மாறுவதில்லை என்பதால், இலக்கியத்தின் பொருள் அதன் சொற்களிலேயே அடங்கியிருக்கிறது. ஆகவே அதனைச் சூழலில், வரலாற்றில் வைத்துக் கற்கவேண்டிய அவசியமில்லை என்றாகிறது. சமூக-அரசியல் வரலாறானாலும், இலக்கிய வரலாறானாலும் எதுவும் தேவையில்லை. இலக்கியத்தை எழுத்தெண்ணிப் படிப்பதே போதும். இலக்கியத்தை நன்கு புரிந்துகொள்ள அதைப் பிற குறுக்கீடுகளிலிருந்து விலக்கிப் படிப்பதே நல்லது. டி.எஸ். எலியட்டுக்கும் பிற புதிய திறனாய்வாளர்களுக்கும் இலக்கியம் தன்னளவில் நிறைவுபெற்றது, தன்னிச்சையானது.

அழகியல் நோக்கு
இலக்கியப் பிரதி மாறாதது, காலத்தின் பாதிப்பு அற்றது என்று சொல்வதன் அர்த்தம், மனித இயல்பு மாறாதது என்று சொல்வதே ஆகும். தொல்காப்பிய, வேத, கிரேக்க, கன்பூசியஸ் காலமுதலாக ஒரே மாதிரியான உணர்வுகள், சம்பவங்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நவீனத்துவக் காலத்திற்கு முன்புவரை, புதுமை செய்தலைவிட இலக்கியத் தொடர்ச்சியே முக்கியம் என்று கருதப்பட்டது. நன்கு வெளிப் படுத்தப்படாவிட்டாலும், அடிக்கடி சிந்திக்கப்பட்ட ஒன்றே இலக்கியம் (what oft was thought, but never so well expressed) என்ற சிந்தனை இருந்தது.

இலக்கியத்தின் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கிணைந்து பிரிக்க இயலாததாகக் தோன்றவேண்டும், உருகியிணைந்திருக்க வேண்டும். இது உயிரிக்கொள்கை (ஆர்கானிக் தியரி) எனப்படும். ஒன்றிலிருந்து மற்றது இயல்பாக வளர்ச்சியுறவேண்டும். இலக்கிய வடிவம் என்பது இலக்கியப் பொருள் மீது செய்யப்படும் அலங்காரம் அல்ல. இதன் அடிப்படையில்தான் கோலரிட்ஜ், கற்பனை (இமாஜினேஷன்) என்றும் வெற்றுப்புனைவு (வெறுங்கற்பனை -ஃபேன்சி) என்றும் பிரித்தார்.

உயிரிக்கொள்கை, உண்டாக்கிய முக்கிய விளைவு, கலையில் உண்மை அல்லது நேர்மை இருக்கவேண்டும் என்பது. கலைஞன் தான் பெற்ற நேரிய அனுபவங்களை மட்டுமே படைக்கவேண்டும். கலைஞனின் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் நேர்த் தொடர்பு இருப்பதனால், அவன் உண்மையாக இருக்கும்போது மட்டுமே நேரிய கலை பிறக்கிறது. உண்மையாக இல்லாவிடில், கலை போலியானதாகிவிடுகிறது. கலைஞன் பிறரது அனுபவங்களையும் தானே பெறுவதற்கு ஒத்துணர்வு (எம்பதி) என்பது உதவுகிறது. கலைஞனின் படைப்பை அனுபவிப்பதற்கும் இத்தகைய ஒத்துணர்வு வாசகனுக்குத் தேவை. இதனை வடமொழியாளர் சஹ்ருதயத் தன்மை என்றார்கள்.

கலைஞன் அல்லது எழுத்தாளனின் நேர்மையைப் படைப்பிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். வெற்று அலங்காரச் சொற்களின்மை, பிறர் இதுவரைக் கையாண்டு தேய்ந்து போன உருவகங்கள், படிமங்கள், சொற்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது போன்ற தன்மைகளால் கலைஞனின் நேர்மையை அறியலாம். போலியான கலை அலங்கார வேடமிட்டுவருவது தவிர்க்க முடியாதது.

ஏற்கெனவே மிகுதியாகக் கையாண்டுவிட்ட படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்தும்போதும் கலைஞனின் தனித்தன்மை வெளிப்படுவதில்லை. கலை முற்றிலும் விளக்கக்கூடாது, வெளிப்படையாகவே எல்லா வற்றையும் சொல்லிவிடக்கூடாது. குறிப்பாக உணர்த்தும் திறன் கலைக்கு மிகவும் அவசியம். மேலும், கலை, அருவத் தன்மையை விலக்கவேண்டும். பருமையான வெளிப்பாடு தேவை. அருவத்தன்மை கொள்ளும்போது வெறும் கருத்துகளாகக் கலை மாறிவிடும். கருத்துகளுக்கு ஏற்ற பருமை யான வடிவம் (கான்கிரீட் ஃபார்ம்) பெறும்போதுதான் அது கலையாகிறது. அதாவது கலை செய்து காட்டுவது அவசியம், வெறுமனே சொல்லக்கூடாது.

விமரிசனத்தின் வேலை, கலைஞனுக்கும் வாசகனுக்கும் ஒரு பாலமாக இயங்குவதுதான். கலைஞனின் படைப்பை விளக்கியுரைப்பது விமரிசகனின் பணி. எல்லாக் கலைஞர்களும் ஒரே தரத்தவர்களாக இருக்கமுடியாது என்பதால் வரிசையறிந்து, அந்த வரிசையை வெளிப்படுத்துவதும்-அதாவது தரமதிப்பீடு செய்வதும் விமரிசகனின் பணி ஆகிறது.

மனிதமையவாதம்
இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளும், அவற்றோடிசைந்த விமரிசனச் செயல் முறையும், தாராள மனிதமையவாதம் (லிபரல் ஹ்யூமனிசம்) எனப்படுகின்றன. ஹ்யூமனிசம் என்பது மனிதநேயம் அல்லது கருணை காட்டுவது அல்ல. எல்லா நிகழ்வுகளிலும் மனிதனை முக்கியப்படுத்திக் காண்பதே ஹ்யூமனிசம் அல்லது மனிதமையவாதம். இன்று சுற்றுச் சூழலியலாளர் போன்றவர்கள் மனிதமையவாதத்தை ஏற்பதில்லை. காரணம், இயற்கையில் மனிதன்தான் முக்கியமானவன் என்றால், அவன் ‘இயற்கையின் பிறகூறுகளை, மலைகள் காடுகள் ஆறுகள் போன்றவற்றையும் தாவரங்கள் விலங்குகள் போன்ற எவற்றையும் சுரண்டலாம், எல்லாம் மனிதனுக்காகத்தானே’ என்றாகிவிடுகிறது. மேற்கத்தியக் கருத்துகள் பொது வாக மனிதமையவாதம் சார்ந்தவை. விவிலியம் போன்ற நூல்களிலேயே மனிதனுக்காகவே ஆண்டவர் எல்லாவற்றையும் படைத்தார் என்ற கருத்து காணப்படுகிறது. இதன் விளைவாக இயற்கையை இரண்டாம் தரமாகப் பார்க்கின்ற, சுரண்டும் நோக்கு உருப்பெறுகிறது. பொதுவாக இந்திய அற நோக்கும் சமயநோக்கும் மனிதமையப் பட்டவை அல்ல. சமணர்கள் போன்றோர் எந்தச் சிறு உயிரிக்கும் தீங்குசெய்யாதவாறு வாழவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்.

தமிழ் இலக்கிய உலகில், பிளேட்டோ, அரிஸ்டாடில் முதலானோர் கொள்கைகள் முதலாக, இன்றைய பின்நவீனத்துவம், பிற்காலனியம் ஈறாகப் பல மேற்கத்திய கொள்கைகள் தாக்கம் செலுத்தியுள்ளன. முறை யான தாக்கத்தை முதலில் ஏற்படுத்தியது மார்க்சியக் கொள்கையே ஆதலின் அதிலிருந்து நாம் நமது பார்வையைத் தொடங்கலாம்.

இலக்கியம்